Sunday 30 July 2023

புத்தரிடம் ...

    


     வியட்னாமின் வாங்க் தாவ்(vung tau) துறைமுகத்தில் சவூதியில் ஏற்றிய சரக்குளை இறக்க சனிக்கிழமை வந்தோம்.

    சனி காலை எட்டுமணிக்கு அறிவிப்பு பலகையில் கரைக்கு செல்பவர்கள் (ashore leave) பெயரை பதிவு செய்ய சொல்லி எழுதப்பட்டிருந்தது.முதல் ஆளாக என் பெயரை எழுதினேன்.

   2019 ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பாவின் நெதர்லாந்து நாட்டின் தனுசன் நகரில் வெளியே சென்றிருந்தேன். அதன் பின் நோய்தொற்று காலம் கப்பல் காரர்களை கப்பலிலிருந்து கீழே இறங்குவதை தடுத்திருந்தது. 2021 ஆகஸ்டில் ஊருக்கு செல்லும்முன் துருக்கியின் அதான நகரிலும்,கடந்த டிசம்பரில் சிங்கப்பூரிலும் ஒருநாள் வீதம் தங்கும் வாய்ப்பு மட்டுமே கிட்டியது.

  இந்த எல்.பி.ஜி கப்பல்களில் நிலத்தில் இறங்கும் வாய்ப்பு மிகக்குறைவு.என்னைபோல காஸ் பிட்டராக பணியில் இணைந்தால் துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போதும் வெளியே செல்வதை நினைத்தே பார்க்க முடியாது.

   சனிக்கிழமை காலை வாங்க் தாவ் அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்ற நாங்கள் எட்டுமணிக்கு நங்கூரம் உருவப்பட்டு ஒன்பது மணிக்கு பைலட் ஏறும் போது வாங்க் தாவ் ஊரில் பேருந்துகள் ஊர்ந்து செல்வதை பார்க்க முடிந்தது.செவ்வண்ணத்தில் மும்பையின் பெஸ்ட் பஸ்ஸை நினைவு படுத்தியது.



   கடல் முடிவில் நூற்றிஎண்பது டிகிரியில் வளைந்த மலை அடி வாரத்தில் ஊர் துவங்குவதை கண்டபோது வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்குமா என மனம் ஏங்கியது.

   காலை எட்டுக்கு தொடங்கிய பணி நீண்டுகொண்டே சென்றது எனக்கு. இரவு எட்டரை மணிக்கு சரக்கு கொடுப்பது தொடங்கி சீராக போக தொடங்கியதும். என்னுடன் பணிபுரியும் இஞ்சினியரை ஓய்வுக்கு போய்விட்டு இரவு இரண்டு மணிக்கு வந்து என்னை விடுவிக்க சொன்னேன்.

  இரண்டாவது கிரேட் பியூட்டேன் திரவம் இரவு ஒன்பதைரை மணிக்கு கொடுக்க தொடங்கினோம்.சரக்கு குழாய்கள் வழியாக ப்ரோப்பேன்,பியூட்டேன் இரண்டும் சீராக செல்வது உறுதியானபின்  கட்டுப்பாட்டு அறைக்குள் வந்தமர்ந்தேன்.

  அதிசயமாக வியட்நாமின் கார்கோ இஞ்சினியர் மிங்க் தெளிவாக ஆங்கிலம் பேசினான். நான்கரை ஆண்டுகள் கெமிக்கல் இஞ்சினியரிங் படித்த இருபத்தி ஏழு வயதான இளைஞன். 

  கட்டுப்பாட்டு அறையில் என்னுடன் அமர்ந்திருந்த டாக்காவின் ரஹீம் உல்லா அவனது தெளிவான ஆங்கிலம் குறித்து கேட்டபோது. கடந்த இருபது ஆண்டுகளாக கல்லூரியில் பயிலும் பட்டதாரிகள் அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள் எனும் தகவலை சொன்னான்.

   ஹனோய் நகரம்,ஹோ சி மின்,வியட்நாம் போர்,இந்தியா,மகாத்மா காந்தி என உரையாடல் நீண்டுகொண்டே சென்றது.இங்கே வெளியே செல்வதற்கான தகவல்களை கேட்டறிந்தேன்.நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் உணவுக்கூடம் சென்றமர்ந்து இரண்டு கோதுமை பிரட்டில்  வெண்ணையும்,தேனும் தடவி கடிக்கும்போது  மிங்க் வந்தார்.தனது மொபைலில் படுத்த நிலையில் இருந்த புத்தரின் சிலையை காட்டிஅருகில் பத்து கிலோமீட்டர் தூரத்தில்,மலை மேல் இருக்கும் புத்த மடாலயம் இது என சொல்லி விட்டு மேலும் சில  படங்களை கட்டினான்.

தங்க நிறத்தில் கன்னத்தில் கைவைத்து தாங்கி படுத்த நிலையில் இருந்த புத்தரின் சிலையை காட்டி “புத்தர் தூங்கவில்லை தியானம் செய்கிறார், உங்களுக்கு தியானம் தெரியுமா” என கேட்டான் மிங்க்.

  எனக்குள் உற்சாகம் தொற்றிகொண்டது புத்தரனை பர்ர்துவிட முடியுமா? உடனே அந்த புத்த மடாலயம் குறித்த விபரங்களை குறித்துக்கொண்டு.வியட்னாமிஸ் மொழியிலும் எழுதி வாங்கிகொண்டேன்.காஸ் இஞ்சினியர் இரண்டு மணிக்கு முன்பாகவே வந்து என்னை விடுவித்தார். பதினேழு மணிநேரம் நீண்ட பணிநாளாக இருந்தது.நீராடி இரண்டரை மணிக்கு தூங்கி ஆறே காலுக்கு விழித்து ஏழு மணிக்கு முன்பாகவே காஸ் இஞ்சினியரை விடுவித்துவிட்டு.மதியம் வெளியே செல்லும் விபரத்தை சொன்னேன்.சனிக்கிழமை மதியமே வெளியே செல்வதற்கான அனுமதி சீட்டு வந்திருந்தது ஆனால் அன்று யாரும் செல்லவில்லை.

   முதன்மை இஞ்சினியர் தலைமையில் ஐவர் குழு ஞாயிறு காலை ஒன்பதரை மணிக்கு வெளியே சென்றது.என் மனம் முழுவதும் அந்த மலையில் ஏறி புத்தரை கண்டுவிடவேண்டும் எனும் எண்ணமே இருந்தது.காஸ் இன்ஜினியர் காலை பதினோரு மணிக்கே வந்து என்னை விடுவித்தார். “லேட் ஆனா பரவாயில்ல மெதுவா வாங்க” என்றார். ‘ஐந்துமணிக்கு வந்துவிடுவேன்” எனச்சொன்னேன்

 சமையல்காரர் என்னுடன் வருவதாக சொன்னார்.உணவுண்டு அவரை அழைத்தபோது டாக்காவின் ரஹீம் உல்லா பணி முடிந்து பன்னிரெண்டரைக்கு எங்களுடன் இணைவதாக கூறினார்..

   அறைக்கு வந்து லுகர் தொழுது காத்திருந்தபோது பெருமழை கொட்ட தொடங்கியது.போசன் குடையை எடுத்துகொள் என்றார்.மழை குறைந்தபின் கப்பலிலிருந்து கீழிறங்கும்போது மணி ஒன்றை தாண்டியிருந்தது. துறைமுக வாயிலில் நாங்கள் அழைத்திருந்த கார் காத்திருந்தது. டைரியை காண்பித்தேன் ‘thi vai’ முதலில் செல்ல வேண்டும் என .

டெர்மினலில், நிலத்தில் பாதம் பதித்த மகிழ்ச்சி 

 சமையற்காரர் ஷாப்பிங் மால்,மற்றும் மசாஜ் செல்ல வேண்டும் என்றார்.ஓட்டுனர் உடனிருந்து அழைத்து செல்கிறேன் ஆளுக்கு இருபது டாலர் வீதம் கேட்டார்.

 பதினைந்துக்கு பேசினேன் மசியவேயில்லை.சமையற்காரர் இருபது டாலர் தருகிறேன் ஆறு மணிநேரம் எங்களுடனிருந்து அழைத்து சென்று திரும்பி வரவேண்டுமென ஒப்புக்கொண்டு காரில் ஏறிகொண்டோம்.சாலையில் கார் நுழைந்ததும் வரிசையாக தொழிற்சாலைகள் இருந்தன. கொரிய நிறுவனங்கள் இங்கே பெருமளவில் முதலீடு செய்துள்ளது.



 பதினைந்து நிமிடங்களில் LINH SON BUU THIEN TU புத்த மடாலயத்தை அடைத்தோம்.தொழிற்சாலைகள் இருந்த இடத்தை தாண்டியபின் ஊர் முழுக்க சிறிதும்,பெரிதுமாக புத்த கோயில்களால் நிரம்பி இருந்தது.





வாயிலில் இறங்கியபின் எவ்வளவு நேரம் என கேட்ட ஓட்டுனரிடம் நாற்பது நிமிடங்கள் என்றேன். 


   பெருங்கூட்டம் இல்லை பெரிய பீடம் ஒன்றில் வெண்ணிற கல்லில் நின்றுகொண்டிருக்கும் புத்தர் சிலை,அதன் கீழே சிறு பீடங்களில் மேலும் இரு சிறு சிலைகள் அதை சுற்றிலும் இன்னும் சிறு பீடமமைத்து அமர்ந்த நிலையிலுள்ள சிறு புத்தர் சிலைகளால் நிறைந்திருந்தது.பெரிய சிலை முன்னால் காலணிகளை கழற்றிவிட்டு வஜ்ராசனத்தில் அமர்ந்து நெற்றியை நிலத்தில் பதித்து ஆண்களும் பெண்களும் வழிபடுகின்றனர்.



      மலையின் படிகள் துவங்குமிடத்தில் வலப்புறமிருந்த கல்பாறைகளில் மேலும் புத்தர் சிலைகள். குளம் போல நீர்நிலை அமைத்து அதன் நடுவில் புத்தர் சிலையும் நீரை சுற்றிலும் தாமரை செடிகள் வைத்திருந்தனர்.ஒரு தாமரை மொட்டு மலர தயாராகி இருந்தது. இடப்புறம் இருந்த முதல் கோயில் பூட்டபட்டிருந்தது. 

       



             படிகளில் ஏறத்தொடங்கியதும் புத்தரின் இருப்பை உணர்ந்தேன்.ஐம்பது படிகளுக்குள்ளாகவே ரஹீம் உல்லாவும்,சமையற்காரரும் “ரொம்ப உசரம் போல இருக்கே”எனசொல்லி நின்றுவிட்டனர். நான் நிற்கவேயில்லை மேலும் ஏற தொடங்கினேன். செங்குத்தான பாறைகளை வெட்டி அதையே படிகளாக்கி சிமெண்ட் குழைத்து பதித்துள்ளனர்.மேலே ஏறுவது சற்று கடினம்தான். வளைந்து,நெளிந்து செங்குத்தாக மேலேறும் படிகளில் கீழே இறங்கி கொண்டிருந்தவர்களில் பெரும்பாலும் இளம் வயதினர். பெண்களே அதிகம் அனைத்து பெண்களும் கணுக்கால்வரை மறைத்து உடையணிந்திருந்தனர்.



 500 படிகள் என எழுதியிருந்த பாறை அருகில் நின்று கீழே பார்த்தேன் என்னுடன் வந்த இருவரையும் காணவில்லை.நான் நிற்காமல் ஏறிக்கொண்டே இருந்தேன். பொன்னிறத்தில் தொப்பையுடன் அதிர்ஷ்ட புத்தர் சிரித்துக்கொண்டே அழைத்தார் பக்கவாட்டில் இருந்த அவரையும் பத்து படிகள் ஏறி பார்த்தேன். இந்த ஊர் செட்டியாரோ என தோன்றியது.படிகளின் இருபுறமும் உயர்ந்த மரங்கள் அடர்ந்து நிற்பதால் ஒரு காட்டினுள் செல்வதை போல இருந்தது.ஆயிரம் படிகளை எட்டியபோது மேலிருந்து கீழே இறங்கிகொண்டிருந்த ஒரு பெண் “ஹலோ” என்றாள். பதில் சொன்னபோது. “முதல் முறையாக வருகிறாயா” எனக்கேட்டாள்.



   “ஆம்,இந்தியாவிலிருந்து வருகிறேன்” என்றேன். வட்ட முகம் பற்கள் தெரிய சிரித்துவிட்டு “நானும் முதல் முறையாக வருகிறேன் என்று சொன்ன அவளிடம்  “இன்னும் எத்தனை படிகள்” எனக்கேட்டேன். “அதிகமில்லை இன்னும்  முன்னூற்றி நாற்பது படிகள் தான்,நீ வந்துவிட்டாய்” என்றாள்.




   மொத்தம் ஆயிரத்தி முன்னூற்றி நாற்பது படிகள் என மேலே ஏறிய பின் தான் தெரிந்தது.வியட்நாம் மொழியில் எழுதிய கல்வெட்டும்,ஆர்ச்சும் வரவேற்கிறது.அருகில் ஒரு பத்தடி உயரமுள்ள பீடம் இருந்தது.வியட்நாமிய குரு ஒருவரின் மூன்றடி உயரத்தில் பதிக்கபட்டிருந்தது.மலர் வைத்து,பத்தி கொளுத்தி வழிபட்டுக்கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர்.மழை பெய்து படிகள் முழுவதும் ஈரமாக இருந்தது.உடல் வியர்த்து சட்டையின் மேற்பகுதி நனைந்திருந்தது எனக்கு.

மேலிருந்து பார்க்கையில் மலை முடிவில் பச்சையாய் காட்சி தரும் மரங்கள் தொடர்ந்து கட்டிடங்கள் என ஊர் அழகாய் காட்சியளிக்கிறது.தொலைவில் கடலும்,துறைமுகமும் தெரிகிறது. என் எஸ் பிரண்டியர் (எனது கப்பல்) கண்ணுக்கு தெரிகிறதா என தேடினேன்.




   மேலும் முப்பது படிகள் ஏறிய போது கோயிலை அடைந்தேன். தரைத்தளமும்,ஒரு மாடியறையும் இருந்தது. ஐம்பது பேருக்குமேல் அமரும் தியான கூடம் மேலே பார்த்தபோது நாற்பத்தி எட்டு மலர்ந்த தாமரை மலர்களை செதுக்கி பதித்திருந்தனர் கூரையின் அடிப்பாகத்தில்.  முன்னால் மின்னும் மஞ்சள் நிறத்தில்  அமர்ந்த நிலையிலுள்ள ஒரு புத்தர் சிலையும்,அதன் கீழே அமர்ந்த நிலையில் புத்தரின் வேறு,வேறு முக பாவனையில் ஏழு சிலைகளும்,அதன் பின்னால் நின்றுகொண்டிருக்கும் மூன்று சிலையும் இருந்தது, வெண்கல வேலைபாடுகளுடன் வேறு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் படங்களும் மிகநேர்த்தியாக  செய்து சுவர்களை அலங்கரித்தது.

  அங்கிருந்த உண்டியலில் என்னிடமிருந்த வியட்நாம் டோம் (இங்குள்ள பணம்)ஒன்றை போட்டுவிட்டு ஆலயத்தை சுற்றி வந்தபின்.தரையில் அமர்ந்து தியானித்தேன்.அங்கு ஒலிக்கும் மெல்லிய மணியோசை எண்ணங்களை விலக்கி அமைதியில் உறைய செய்தது.கண்விழித்தபோது அருகில் சமையற்காரர் விழிமூடி அமர்ந்திருந்தார்.

  துறவிகளுக்கான தங்குமிடமும் உணவுகூடமும் இருந்தது.உணவுகூடத்தில் சென்று பேந்த,பேந்த விழித்தபோது அங்கு சேவை செய்யும் பெண் ஒருத்தி நல்ல ஆங்கிலத்தில் வேண்டியதை சாப்பிடுங்கள் என்றார்.தண்ணீர் மட்டும் கேட்டோம்.நாற்காலியில் அமர்ந்து நீரருந்தும் போது ரஹீம் உல்லாவிடம் அந்த பெண்மணி “இது துறவிகளுக்கான மேஜை,வேறு இடத்தில் அமருமாறு பணிவாய்” சொன்னாள்.

   மீண்டும் எங்களிடம் சாப்பிட,நூடுல்ஸ் அரிசி சாதம் தரவா எனக்கேட்டாள்.தரையிலிருந்து படியேறி வரும் அனைவருக்கும் அங்கே சுய சேவை முறையில் உணவுண்ண முடியும் என்பதை கண்டேன். அங்கு சேவை செய்யும் பெண்மணி எங்களை இந்தியர்கள் என அடையாளம் கண்டுகொண்டாள்.இந்தியாவின் புத்த கயா மற்றும் பல்வேறு புத்த மடாலயங்களில் சேவை செய்துள்ளதை சொன்னார். புத்தர் பிறந்த ஊரிலிருந்து வந்தவர்கள் என்பதால் இயல்பாய் கொஞ்சம் அதிக கவனிப்பு எங்களுக்கு எனபது தெரிந்தது. 

   நூறு ஆண்டுகள் பழைமையான இந்த மடாலயம் சீரான கால இடைவெளியில் புதுபிக்கபட்டு,பராமரிக்கபட்டு வந்துள்ளது.இதன் தற்போதைய தோற்றம் நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.

 கடல் மட்டத்திலிருந்து எழுநூறு மீட்டர் உயரத்திலிருக்கும் இதில் ஏறுவதற்கு நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் மட்டுமே முடியும்.மூன்று கிலோமீட்டர் தொலைவு தான் என்றாலும் செங்குத்தாக ஏற வேண்டியிருக்கறது.

  நீரருந்திவிட்டு வெளியே வந்தபோது தியான அறையில் இருந்த சமையற்காரரை காணவில்லை.சிறிது நேரம் தேடினோம்.எங்களை காணாததால் கீழே போயிருப்பார் என ரஹீம் உல்லா சொன்னார்.

  படிகளில் இறங்குவதும் எளிதல்ல கவனமாக இறங்கவேண்டும்.மேலே ஏறும்போதே கவனித்தேன் சிலர் ஒவ்வொரு மூன்று அடிகளுக்கு ஒருமுறை படியில் அமர்ந்து நெற்றியை தரையில் வைத்து வணங்கிவிட்டு மேலேறுகின்றனர்.

 ஒரு பெண் இருகால் மூட்டுகளிலும் கடினமான பஞ்சால் ஆனா பேட்களை கட்டி ஒவ்வொரு படியிலும் அமர்ந்து நெற்றியை தரையில் பதித்து வணங்கிக்கொண்டு மேலேறிக்கொண்டிருந்தவள் ஆயிரம் படிகளை தொட்டிருந்தாள் கணவன் துணையாக பின்னால் சென்றுகொண்டிருந்தான்.அவளை கடக்கையில் என்ன வேண்டுதலோ இறைவா நிறைவேற்றி கொடு என என் மனமும் இயல்பாய் சொல்லிகொண்டது.

   சிறுமி ஒருத்தி என்னிடம் எதோ கேட்டாள். பணம் கேட்கிறாள் என புரிந்துகொண்ட நான் 10000 டோம் நோட்டு ஒன்றை கொடுத்தேன். பாப்பாவின் முகம் மாறிப்போனது.அவள் பணம் கேட்டகவில்லை என்றபோது எனக்கும் சங்கடமாகி போனது. சிறுமியை சைகையை சரியாக புரிந்துகொண்டு தண்ணீர் பாட்டிலை கொடுத்தேன். இல்லை என்றாள்.புத்தரை காண மேலேறிசெல்லும் ஒருவர் ஒருவழியாக எனக்கு புரிய வைத்தார் அவளது கையில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டுமென.

    கீழே வந்தபோது சமையற்காரரை காணவில்லை. நாங்கள் வந்த காரோட்டியும் காரும் அங்கில்லை.ரஹீம் உல்லா படிகளில் இறங்கும்போதே சொன்னார் ஒரே நாளில் இப்படி உடலை வருத்தக்கூடாது காய்ச்சல் வரும் என.இங்கிருந்து விரைவாக சென்றுவிட வேண்டுமென எண்ணினார். நான் அடிக்கடிமலைகளில் ஏறுபவன்.நடை பயிற்சியும்,ஆசனங்களும் உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்வதால் களைப்பே இல்லை எனக்கு.

சிறுமி மீண்டும் என்னை துரத்தி வந்து மொபைலில் என்னுடன் படம் எடுக்க வேண்டுமென்றாள் அமர்ந்து சில படங்களுக்கு போஸ் கொடுத்தேன்.வீட்டில் போய் புத்தரின் அருகில் வைத்து கொள்வளாக இருக்கும். வாயிலின் முன் நாற்காலியில் புத்தரை நோக்கி அமர்ந்திருந்தோம்.பைக்கில் வந்த ஒருவர். “உங்கள் நண்பன் மசாஜ் செய்ய போய்விட்டான் என்னுடன் வாருங்கள் நான் உங்களை அழைத்து செல்கிறேன்” என்றார்.பைக்கில் ஏறி சிறிது தூரம் சென்றதும் எங்கள் கார் வந்தது அதில் ஏறிக்கொண்டோம்.

 மசாஜ் நிலையத்தில் கப்பலிலிருந்து காலையில் வந்த ஐவர் குழு அமர்ந்திருந்தது.சமையர்காரர் மேலே மசாஜ் அறையில் இருப்பதாக சொன்னார். வேறு கப்பலிலிருந்து வந்த சிலர் கண்கள் சிவக்க குடிதிருந்ததை கண்டேன். நிறைய கப்பல்களில் இப்போது ஜீரோ ஆல்ககால் பாலிசி பின்பற்றுகிறார்கள். தரையில் இறக்கியதும் மதுக்கடையை தேடும் கப்பல் காரர்களே அதிகம். சிலருக்கு பெண்.

  ரஹீம் உல்லாவிற்கு சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.பைக் காரர் எங்களை அருகிலிருத்த மாலில் இறக்கிவிட்டார்.அவருக்கு அங்கிருந்த பொருட்கள் ஏதும்  பிடிக்கவில்லை.நான் வெளியே வந்து சாலையில் சிறிது நேரம் நடந்தேன்.தோலுரித்த வாத்துகள் கண்ணாடி பெட்டிகளுக்குள் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.நான் நின்று வேடிக்கை பார்ப்பதை பார்த்து கடைக்கார பெண்மணி சிரித்தார். படம் எடுத்துக்கொண்டேன்.

 சமையற்காரரை காரோட்டி காரில் ழைத்து வந்தார்.அவருக்கு பிரஷர் குக்கர் மற்றும் வேறு சில பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.காரோட்டியின் உதவியுடன் பாஜாரில் அலைந்து பொருட்கள் வாங்கியபின்.கப்பலுக்கு வந்து காஸ் இஞ்சியரை இரவு ஏழு மணிக்கு விடுவித்தேன்.காரில் திரும்பி வருகையில் மசாஜ் செய்ததால் ரொம்ப ரிலாக்ஸ் ஆக இருப்பதாக சொன்னார்.

   மலைமேல் புத்தரின் அருகமர்ந்திருந்த போது அகத்தில்  நான் அடைந்த அமைதியை விளக்கினாலும் புரிந்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை.ரஹீம் உல்லா இனி வெளியே செல்ல வாய்ப்பு கிடைத்தால் உன்னுடன் மட்டும் வர மாட்டேன் என்றார். இருவருக்கும் மலையேறியது மிக கடுமையாக இருந்தது.

நாஞ்சில் ஹமீது,

25 july 2023.

sunitashahul@gmail.com






4 comments:

  1. உள்ளக் கிளர்ச்சி ஊட்டுகிற மலை ஏற்றமும் புத்தர் தரிசனமும், இது போன்ற செயல்கள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எனக்குத் தமிழ்நாட்டு கோயம்புத்தூர் ஓதி மலை ஏறிய இணையுணர்வு உள்ளூறியது. மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்.

    ReplyDelete
  3. Inspite of hectic work in the ship,taking time & writing your experience is really commendable

    ReplyDelete