Sunday 16 July 2023

வீட்டுக்கு அருகில் பயணம்.

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 8


        கப்பல் ஜப்பானிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூரை அடையும் முன்பே கேஸ் பிளாண்ட்டில் பெரிய பணியை திட்டமிட்டு செய்ய தொடங்கினோம். அதாவது வாயுவை,திரவமாக்கும் கூலர்களை(cargo condenser) சுத்தம் செய்வது. 

 நான்கு கம்ப்ரசர் கொண்ட கேஸ் பிளாண்ட் இங்கே இருக்கிறது.ஒவ்வொரு கம்ப்ரசருக்கும் தனித்தனி கூலர்கள். மூன்றை சுத்தம் செய்து முடித்திருந்தோம்.ஜப்பானிய பயிற்சி இன்ஜினியர்கள் எங்களுடன் இருந்தது பேருதவியாக இருந்தது.

      சிங்கப்பூரைவிட்டபின்  நான்காவது கூலரையும் சுத்தம் செய்தோம்.எதற்கு இந்த கூலர்கள்?. கப்பலின் சரக்கு தொட்டிகளில் நிறைத்து வைத்திருக்கும் ப்ரோபேன் மைனஸ் நாற்பது டிகிரியில் திரவநிலையில் இருக்கும்.வெப்பநிலை மாறும்போது போது திரவம் ஆவியாகும். ஆவியாகும்போது சரக்கு தொட்டியின் அழுத்தம் அதிகரிக்கும். இங்கே சரக்கு தொட்டியின் அழுத்தம் 22Kpa (கிலோ பாஸ்கல்)வரை செல்லும் வகையில் அமைத்துள்ளோம்.

  22kpa அழுத்தத்தை தொடும்முன்  கம்ப்ரசர்களை இயக்கி சரக்குதொட்டியின் மேற்பாகத்திலுள்ள வாயுவை எடுத்து அழுத்தி,சுருக்கும் போது எழுபது டிகிரி வரை செல்லும் அவ்வாறு அழுத்திய உயர் வெப்ப நிலையிலுள்ள  வாயு இந்த கூலருக்குள் சென்று வெளிவரும்போது குளிர்சியடைந்து திரவமாக மாறும்.அந்த திரவம் சார்லஸ் விதிப்படி எக்ஸ்பான்சன் வால்வ் வழியாக வெளியேறும் போது மேலும் குளிர்ச்சியடைந்து மைனஸ் 22 பாகை அல்லது அதற்கும் குறைவான வெப்பத்தில் மீண்டும் சரக்கு தொட்டிக்குள் திரவமாக செல்லும் அதனால் சரக்கு தொட்டியின் வெப்பமும்,அழுத்தமும் குறையும்.

Diagram


  தண்ணீரின் வெப்பம் பூஜ்யத்துக்கு செல்லும் போது பனிக்கட்டியாகும். அதே தண்ணீர் நூறு டிகிரியில் ஆவியாக மாறும்.அந்த ஆவியை குளிர வைத்தால் நீர்.கடல் நீர்,ஆவியாகி மேலே சென்று மேகமாக மாறி,மேகம் குளிரும்போது மழையாக பொழிவது போல.

Cargo condenser





  கூலர்களின் இரு பக்கமும் உள்ள கவர்களை திறந்து பதினெட்டு மில்லி மீட்டர் விட்டமும்,மூன்று மீட்டர் நீளமும் உள்ள  நூற்றி அறுபது குழாய்களை  ஒவ்வொன்றாக நீண்ட கம்பியின் முன் பகுதியில் இணைக்கப்பட்ட பிரஸ் மூலம் உள் செலுத்தி வெளியே எடுத்தோம்.இந்த குழாய்களுக்குள் கடல் நீர் ஓடி வெளி வருவதால் அழுக்கும்,சில கடல் சங்குகளும் அடைத்து கொண்டிருந்தது.

  ஒரு கூலரை சுத்தம் செய்ய முழுமையாக ஒரு நாள் ஆனது. கப்பல் சிங்கப்பூரை விட்ட மறுநாள் சரக்கை கையாளும் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் சவூதிஅரேபியாவின் யான்பு துறைமுகத்துக்கு சரக்கு நிறைக்க வேண்டும் என இருந்தது.

  அந்த செய்தியால் கப்பலில் ஒருவித பதற்றம் தொற்றிகொண்டது.யான்பு செல்வதற்கு  ஆபத்தான சோமாலிய கடல்கொள்ளையர்கள் நடமாடும் பகுதியை தாண்ட வேண்டுமென்பதே காரணம். வழக்கமாக இலங்கையின் காலேவில் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியுடன் கப்பலில் ஏறிக்கொள்வார்கள்.பாதுகாப்பு வீரர்கள் வருவது பற்றி எந்த செய்தியும் இல்லாதது பணியாளர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.கப்பலில் மொத்தமுள்ள இருபத்தி ஒன்பது அறைகளில் இரண்டு மட்டுமே காலியாக உள்ளது. 

பயண பாதையின் வெப்பமும் அதிகரிக்க தொடங்கியது வளைகுடாவில் இப்போது கோடையின் உச்சம் அதை நினைத்தும் உடல் எரியதொடங்கியது. இயந்திர அறையின் வெப்பம்  நாற்பதை தாண்டியது.

  டெக்கில் முப்பத்தி ஐந்து டிகிரியை தொட்டது.ப்ரிட்ஜில் சென்று மூன்றாம் அதிகாரி ரஹீம் உல்லாவை பார்த்து கேட்டேன்.  வீரர்கள் எப்போது வருகிறார்கள் என. “ஷாகுல் பாய், HRA (HIGH RISK AREA)க்கு சற்று முன் இரு இலங்கை வீரர்கள் வருகிறார்கள் என மின்னஞ்சல் வந்துள்ளதை சொன்னார்.கப்பலை சுற்றிலும் முள் வேலி அமைக்கும் பணியை டெக் பணியாளர்கள் காலையில் தொடங்கி மாலைக்குள் முடித்தனர்.

கப்பல் இலங்கை தாண்டி என் வீட்டிலிருந்து நாற்பது மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தது. வீட்டிற்கு அழைத்திருந்தேன். “நான் இப்ப கன்னியாமரி கிட்டயாக்கும் பெயிட்டிருக்கேன்”என்றேன் .

“வாப்பா இறங்கி வீட்டுக்கு வந்துட்டு போங்கோ” என்றான் இளைய மகன் சல்மான். சுனிதா “மொதல்லே சொல்லியிருந்தா வந்து ஒரு டா டா காட்டிருப்பமே” என சொல்லிச்சிரித்தாள்.

வீரர்கள் கப்பலுக்குள் 


ஆயுதப்பெட்டி

கப்பல் லட்ச்தீவை நெருங்கியபோது பாதுகாப்பு வீரர்கள் ஆயுதங்களுடன் கப்பலில் ஏறிக்கொண்டனர்.கடலில் அலைகள் எழுந்துகொண்டே இருந்தது.வீரர்கள் வந்த சிறு கப்பல் மிக சிரமப்பட்டு அருகணைந்தது. அலைகளில் சிக்கி தவித்த கப்பலிலிருந்து சாமர்த்தியமாக கயிறு ஏணியில் தாவி,காங்க்வே படிக்கட்டுகள் வழியாக மேலேறி கப்பலில் மேல்தளத்திற்கு வந்தனர்.

  துப்பாகிகள்,குண்டுகள்,குண்டு துளைக்காக கவச உடை மற்றும் தொப்பி அடங்கிய பையை முதன்மை அதிகாரி தலைமையில் போசன்,ஓஎஸ்,காடேட்,சென் குப்தா ஆகியோர் கயிறு கட்டி மேலே எடுத்தனர்.இரவில் கப்பலில் ஆட்டம் கூட தொடங்கியது.

    காலையில் எழுந்தபோது லேசான தலைவலி இருந்தது. போசன் யாதவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். “ஞாயிறு இரவுணவில் ஏதோ கோளாறு போல” என.

 “கப்பல் ரோல்லிங் ஆகுது இல்லா அதுனால இருக்கும்” என்றார்.எனக்கு எப்போதும் ரோல்லிங்கினால் தொந்தரவு ஏற்பட்டதே இல்லை.ஆனாலும் இப்போதைய தலைவலிக்கு அது காரணமாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டேன். இரவில் சரியாக தூங்கவில்லை என பலரும் காலையில் சொன்னார்கள்.

  மாலையில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடந்தது.கொள்ளைக்காரர்கள் கப்பலுக்குள் வந்துவிட்டால் அவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது எனும் பயிற்சியை நடத்தினார்கள்.முன்பே அனைத்து கதவுகளும் உட்புறமாக அடைக்கப்பட்டது. குண்டு துளைக்காத கதவுகளும் உட்புறமிருந்து பூட்டபட்டிருந்தது.

 அவசரகால மணி எழுப்பப்பட்டது உடனே அனைவரும் பாய்ந்தோடி அப்பர் டெக் எனப்படும் குடியிருப்பின் தரைப்பகுதியில் நின்றுகொண்டோம். “ஹெட் கவுண்ட்” என்றார் முதன்மை இஞ்சினியர் “ஒன்,டூ,த்ரீ .........ட்வென்டி போர்” என்றதும். காப்டனுக்கு ரேடியோவில் சொன்னார் “ட்வென்டி போர் பெர்சன்ஸ் மஸ்டர்ட்” என. 

“பைவ் ஆன் பிரிட்ஜ் ஆல் கவுண்டட்” என்றதும் இரண்டாவது அவசரகால மணி ஒலித்தது அனைவரும் ஓடி சிட்டாடெல் அறைக்குள்,புகுந்து கொண்டோம்.பாதுகாப்பு வீரர்கள் மற்றும் காப்டன் உட்பட பிரிட்ஜ் டீம் இறுதியாக சிட்டாடெல் அறைக்குள் வந்ததும் இங்கிருந்த இரு தடிமனான குண்டு துளைக்காத கதவுகளும் உட்புறமிருந்து பூட்டப்பட்டது. சிட்டாடெல் அறையில் தேவையான தண்ணீர் பாட்டில்கள்,பிஸ்கட்டுகள்,போர்வைகள் வைக்கப்பட்டிருந்தது.

  யுக்தி இதுதான் கொள்ளையர்கள் கப்பலுக்குள் ஏறிவிட்டால் காப்டன் ரகசிய மணியை அழுத்திவிட்டு இறுதியாக சிட்டாடெல்லுக்குள் வரவேண்டும். அந்த மணி அருகிலுள்ள கடற்படை மையத்திற்கு தகவல் அனுப்பும் அனைவரும் பாதுகாப்பாக ஒளிந்திருந்தால். ஹெலிகாப்டரில் வரும் கடற்படை கடத்தல்காரர்களிடம் துப்பாக்கியால் சண்டையிட்டு கப்பலை மீட்க ஒரு வாய்ப்பு. 

 இவை எல்லாவற்றையும் மீறி கடத்தல்கார கொள்ளையர்களிடம் நாங்கள் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் என கப்பல் காரன் டைரியில் (2020 ஆண்டில் )விரிவாக எழுதியுள்ளேன்.

  ஒத்திகை முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் பிரிட்ஜின் வெளியில் நின்று தங்களிடமிருந்து நான்கு துப்பாக்கிகளையும் இயக்கி சோதித்தனர்.குண்டுகள் கடலில் விழுந்து மூழ்கின.

  இரவில் கப்பலின் ஆட்டம் அதிகரிக்க தொடங்கியது.கடுமையான கடல் சீற்றம் இருக்கும் என வானிலை அறிக்கை முன்பே எங்களுக்கு வந்திருந்தது.நாற்காலிகள் மற்றும் கட்டி வைக்காத அனைத்து பொருட்களும் இறுக்கமாக கட்டிவைக்கப்பட்டது. அலைகளில் ரோல்லிங்குடன்,பிச்சிங்கும் சேர்ந்து கட்டிலில் படுக்கவே இயலவில்லை. தூங்காத இரவு நீண்டுகொண்டே சென்று மிக தாமதமாக விடிந்தது.

நாஞ்சில் ஹமீது.

26-june-2023.

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment