Friday 20 September 2024

நிலம் பார்க்க போகும் கப்பல் காரன்

  .

           கடந்த திங்கள்கிழமை (09-09-2024) மலேசியாவின் லிங்கியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். கொரியாவில் ஞாயிறு முதல் புதன் வரை தேங்க்ஸ் கிவிங்க் விடுமுறை. கப்பலில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து திங்கள்கிழமை மாலையில் ஒரு சிறு கூடுகை.



  சில எளிய உணவுகளும் மூன்று பாட்டில் வைன் மட்டும் வைத்திருந்தார் காப்டன் ஷின். குடிப்பிரியர்கள் மூணு பாட்டில் வைன் எந்த மூலக்கி ஆச்சி என வேதனை பட்டனர். பீர் வைக்கவில்லை எனும் ஏமாற்றம். என்னை போல் குடிக்காதவர்களுக்கு எந்த சிரமமும் இல்லை.

   எனக்கு செவ்வாய்க்கிழமை சிம் கார்டு கிடைத்தது. மாலையில் இருபதாம் தேதி மற்றும் இருபத்தி ஐந்தாம் தேதி கரைக்கு செல்ல படகு ஒருங்கு செய்திருப்பதை காப்டன் சொன்னார். இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டும் ஐம்பது சதவீத பணியாளர்கள் கப்பலில் இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.

   கப்பலிலிருந்து கரைக்கு செல்ல படகு அங்கிருந்து மலாக்கா செல்லும் போக்குவரத்து கம்பனி கணக்கில். கப்பலில் எப்போதுமே எதுவும் நடக்கலாம். கல் கோன் தேக்கா என ஹிந்ந்தியில் சொல்லாவர்கள் நாளைய தினத்தை கண்டது யார். அதனால் முதல் குழுவில் இருபதாம் தேதி கரைக்கு செல்ல பெயர் பதிந்து கொண்டேன். காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கரை மணிவரை. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு கரையில் தங்க அனுமதியில்லை. பிப்ரவரி இருபதியைந்தாம் தேதி கப்பலில் ஏறினேன். அதன் பின் இதுவரை நிலத்தில் கால் படவில்லை. இருநூற்றி எட்டு நாட்களுக்குபிறகு வரும் வெள்ளிக்கிழமை என் பாதம் நிலத்தில் பதியும் வாய்ப்பு பிரகாசமாகியது.

  கரை செல்வது வெள்ளிக்கிழமை கிடைத்தால் ஜிம்மா தொழ வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன் அதுபோல் வெள்ளிக்கிழமை ஷோர் லீவ் அமைந்தது. இங்கே கோலாலம்பூரில் சையதலி அண்ணன் இருக்கிறார். கடந்த ஜனவரியில் அவரது மகள் சாய்மா திருமணம் நடந்தபோது கலந்துகொள்ள இயலவில்லை. ஜூலையில் மகனின் திருமணம் அப்போது கப்பலில் இருந்தேன். 

  அங்கே அவர்கள் இல்லம் செல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன் மலாக்காவிலிருந்து கோலாலம்பூர் போக இரண்டு மணிநேர பேருந்து பயணம். போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் இன்னும் தாமதம் ஆகும். மதியம்  ஜும்மா தொழுகை. 

  ஆறு மணி நேரத்தில் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் நேற்று ஹமீமா மைனியிடம் போன் பண்ணி வீட்டுக்கு வரவில்லை என சொன்னேன். 2007 இல் கப்பல் மலேசியாவின் போர்ட் கெலாங்க் வந்தபோதும், 2013 இல் குடும்பத்தோடும் அவர்கள் இல்லம் சென்றுள்ளேன். இப்போது சந்தித்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டது.

   எனது பத்தாம் வகுப்பு கட்டுரையில் இறுதி தேர்வில் தோல்வியடைந்ததோடு அந்த தொடரை நிறுத்தியிருந்தேன். அதன் பின்பான என் வாழ்வின் மாற்றத்திற்கு சையதலி அண்ணனே காரணம். எனது பத்தாம் வகுப்பு இரண்டாம் பாகம் எழுதும்போது சையதலி அண்ணனை பற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுதவேண்டும்.

       இன்று மாலை இரவுணவுக்கு சென்றபோது எங்கள் விடுமுறை உறுதியான செய்திகிடைத்தது இம்மாத இறுதியில் நான்,பாட்டீல்,ரைமுண்டோ,ஜெர்ரி,இரண்டாம் இஞ்சினியர் அலெக்ஸ்,முதன்மை அதிகாரி ஹோ ஆகியோரின் மாற்று பணியாளர்களுக்கான பெயர்கள் வந்தது. தேதி குறிப்பிடாமல் இம்மாத இறுதியில் கப்பலிலிருந்து இறக்கவிட கோலாலம்பூர் அலுவலகம் உத்தேசித்துள்ளது.

  விடுமுறை செய்தி கப்பல் காரனுக்கு எப்போதுமே மிகுந்த உற்சாகத்தை தரும். பிலிப்பினோ மோட்டர்மேன் ஜெர்ரிக்கு ஒன்பதரை மாதங்கள் ஆகிறது. ரைமுண்டோ,நான்,பாட்டீல் ஒன்றாக கப்பல் ஏறினோம் வரும் இருபத்தி மூன்றாம் தேதி ஏழு மாத பணிஒப்பந்தம் முடியும்.

   கப்பலிலிருந்து விடுமுறைக்கு செல்லும் முன் கரைக்கு போய் வருவதும் நல்ல வாய்ப்பு. மலாக்கா வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளம். பள்ளிவாசல்,இந்து கோயில்,சர்ச் 1511  கட்டப்பட்ட கோட்டை,மலாக்கா ஆறு இப்படி பலதையும் பார்க்கவும் பின்னர் விரிவாக ஒரு கட்டுரையும் எழுதலாம்.

  நாஞ்சில் ஹமீது,

18 september 2024.

மேற்கில் உதித்த சூரியன்

 . 


            நீண்ட பயணம் கப்பல்காரனுக்கு ஒரு சமாதானத்தை தரும். பணியின் அழுத்தம் இல்லாமல் சாவகாசமாக சனிக்கிழமை அரை நாள் மற்றும் ஞாயிறு முழுநாள் ஓய்வு உறுதியாக கிடைக்கும் என்ற சந்தோஷம்தான்.

       தொழுகைக்காக எப்போதும் திசை பார்ப்பது வழக்கம். அல்லாஹ் அக்பர் என கைகட்டி நிற்கும்போது மெக்காவை நோக்கி நிற்கவேண்டும். திசை தெரியவில்லை எனில் எப்படி நின்றாலும் தவறில்லை.பயணத்தில் முடிந்தவரை திசைய கணிக்க முயற்சிக்கலாம். இல்லையெனில் தவறொன்றும் இல்லை. 

 கப்பலில்  திசையும்,நேரமும் கணிப்பது மிக எளிது. இங்கே பணியிலிருக்கும் நேவிகேஷன் ஆபிசர் இருவர் இஸ்லாமியர். நகரும் கப்பலின் வேகத்தையும்,கடக்கும் தூரத்தையும் கணக்கிட்டு அந்த நாளில் எந்த நாட்டில் இருக்கிறோம் என்பதை கணித்து தினமும்  தொழுகை நேரத்தை அனுப்புகிறார் பங்களாதேஷ் மூன்றாம் அதிகாரி ஆஷிக்.

   மெக்கா திசையை கணிக்க நான் சூரியனையும் கப்பல் செல்லும் திசையையும் பார்ப்பேன். கடந்த மாதம்  ஒன்பதாம் தேதிக்குபின் கப்பல் கடிகாரம் மாறவேஇல்லை. சிங்கப்பூர்,சைனா,மலேசியா ஒரே டைம் சோனில் இருக்கிறது. GMT +8 hrs.

      இப்போது கப்பல் மேற்கு நோக்கி பயணிக்கிறது. மெக்கா இருக்கும் திசை கப்பலின் போர்ட் சைட் பார்வேடை நோக்கி. port bow என்போம்.  சனிக்கிழமை அதிகாலை தொழுகையை port bow திசையில் தொழுது முடித்தேன். ஆனால் மேற்கில் வானம் வெளுக்க துவங்கியது. கப்பல் மேற்கு நோக்கி பயணிப்பதால் சூரிய உதயம் கிழக்கு என்றால் கப்பலின் ஆப்ட் எனப்படும் பின்புறம் (starboard quatar). 



   நேர் எதிர் திசையில் சூரிய உதயம் என்னை காலையிலேயே குழப்பிவிட்டது. கப்பல் வேகமாக சென்று சேர வேண்டும் அப்படியெனில் தவறுதலாக எதிர் திசையில் திருப்பினால் இலக்கை சென்றடைய இன்னும் தாமதமாகும். எதற்காக கப்பலை திருப்பினார்கள்.ஒன்றும் புரியாமாலே ஏழரை மணிக்கு அடுமனை சென்றேன். “கப்பல் லிங்கி செல்கிறது ஆப்ரிக்கா கேன்சல்” என்றார் ரைமுண்டோ. இங்கிருந்து  சைன்-ஆப் எளிதாக கிடைக்கும் என்றார். அவரவர் கவலை அவரவர்க்கு.

  சோம்ராஜ் நேற்றிரவு   காப்டனுக்கு போன் வந்தது இரவு பத்து மணிக்கு கப்பலை திருப்பிவிட்டார்கள் என்றான். இரு ஜெனரேட்டர்கள் நிறுத்தப்பட்டு கப்பலின் வேகம் குறைக்கப்பட்டு வீல் ஹௌஸ் வாட்ச் கீப்பிங்கில் இருந்தது.

    காலை கூட்டத்துக்குப்பின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து மின்னஞ்சலை திறந்தேன். ஆப்ரிக்கா செல்வது ரத்து செய்யப்பட்டு கப்பலை மலேசியாவின் லிங்கியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்த அறிவுத்தபட்டிருந்தது.அடுத்த ஆர்டர் கிடைத்ததும் சொல்கிறோம் என்றிருந்தது.   முதன்மை இஞ்சினியர் ஆல் வெரி ஹாப்பி என சிரித்துக்கொண்டே சொன்னார்.இங்கு இதே நிறுவனத்துக்கு சொந்தமான மேலும் மூன்று எல்என்ஜி கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

     கப்பல் மிக மெதுவாக நகர்ந்து நேற்று காலை பத்து மணிக்கு லிங்கியை  அடைந்தது. உள்ளூர் பைலட் வந்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிட்டு சென்றார். நான் முன்பு(2022) பணிபுரிந்த சிங்கப்பூர் எனர்ஜி கப்பல் மிக அருகில் நிற்கிறது. இங்கே பணிபுரிவர்களில் பெரும்பாலனவர்கள் இங்கே நிற்கும் வேறு கப்பல்களில் பணிபுரிந்தவர்கள். அந்த கப்பல்களில் சிங்கப்பூர் எனர்ஜி இரண்டு ஆண்டுகளாகவும், மெர்ச்சன்ட் ஒன்றரை ஆண்டுகளாகவும்,ஹாங்காங் எனெர்ஜி ஓராண்டாகவும் இங்கே நிற்கிறது. 

 சிங்கப்பூர் எனர்ஜியில் safe manning முறையில் கடந்த ஆறுமாதமாக பதினான்கு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மற்ற இரு கப்பல்களும் முழு பணியாளர்களும் இருந்தாலும் எப்போது வேண்டுமாலும் விலை போகும் நிலையில் உள்ளது.

   நீண்ட நாட்களுக்குபின் கப்பலின் கடிகாரம் வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணிநேரம் முன்னே சென்றது. சனிக்கிழமை மீண்டும் ஒரு மணிநேரம் பின்னோக்கி சென்றது.


    இங்கே அனைவருக்கும் மலேசிய சிம் கார்ட் கிடைத்தது. விலை ரொம்ப அதிகம் ஏஜென்ட் இருபத்தி டாலர் வீதம் அடித்து விட்டான். கரையில் பத்து ரிங்கிட் மதிப்புள்ள சிம் இது. 



  எல்லோருக்கும் கரைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பிப்ரவரி இருபத்தி ஐந்தாம் தேதி கப்பல் ஏறியபின் இதுவரை கால் நிலத்தில் படவே இல்லை. வரும் வெள்ளிக்கிழமை முதல் குழு வெளியே செல்ல வாய்ப்பு உள்ளது. 

   


இங்கிருந்து பணியாளர் மாற்றம் மிக எளிது. ரைமுண்டோ காப்டனிடம் என்னை அனுப்புங்கள் என கேட்டார். காப்டன் விடுமுறை விண்ணபத்தை எழுதி வாங்கி அனுப்பி வைத்தார், நேற்றும் இன்றும் மலேசிய அலுவலகம் விடுமுறை நாளை விடுமுறைக்கான செய்தி வருமென காத்திருக்கிறார்.

  நானும் இம்மாத இறுதியில் ஊர் வந்துவிடுவேன். அடுத்த திங்கள்கிழமை பணி ஒப்பந்தம் முடிகிறது.

  நாஞ்சில் ஹமீது,

17 sep-2024.

புன்டா ஐரோப்பா

  


        கப்பல் புறப்பட்டு  சிங்கப்பூர்,மலாக்கா நீரிணை முடியும்வரை வாட்ச் கீப்பிங்கில் இருக்கும் பின்னர் முழு வேகத்தில் நைஜீரியாவை நோக்கி செல்ல துவங்கும்.

     தீடிரென கப்பல் பரபப்பும்,வேகமும் கொள்ள தொடங்கியிருந்தது. கப்பல் புறப்பட்ட இரவிலேயே சோம்ராஜ் சொன்னான். “நேரே போனி எங்கயும் நிக்காது,அக்டோபர் மூணாம் தேதி போக சொல்றாங்க,ஆனா முடியாது நாலாம் தேதி தான் போய் சேர முடியும், நீ இனி கவலையில்லாமல் இரு அடுத்த ஒரு மாதம் யாருக்கும் சைன்- ஆப் இல்லை” என்றான்.

  மறுநாள் காலை மீட்டிங்கில் இரண்டாம் இஞ்சினியரிடம் கேட்டேன் போனி போய் சேர போதுமான எண்ணெய் இருக்கிறதா என. போய்விடலாம் ஆனால் அதன் பின் மிக குறைந்த கையிருப்புதான் இருக்கும். கம்பனியும்,முதன்மை இஞ்சினியரும் முடிவு செய்வார்கள் என்றார். 




   அதிகாலையே கப்பல் சிங்கையை கடந்தது. போசனும் தலேர்,கார்லோ புகைபோக்கியில் வண்ண சாயம் பூசுதலை துவங்கியிருந்தனர்.மாலையில் மூன்று ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு கப்பல் முழுவேகத்தை பிடித்தது. பதிமூன்று புள்ளி எட்டு நாட் வேகம். மூன்று ஜெனரேட்டர் இயங்கும்போது ஒரு நாளின் எண்ணெய் செலவு நூறு டன்கள். (ஒரு லட்சம் லிட்டர்) மாலையில் இரண்டாம் அதிகாரி விகாசிடம் கேட்டேன். “கப்பல் வந்தே பாரத் மாதிரி போகுதா இல்லை ஸ்டாப்பிங் உண்டா”? 

“நோ பாய் சீதா போனி புல் ஸ்பீட்” என்றார்.

  மீண்டும் உணவு மேஜையில் பணியாளர் மாற்றம் எங்கே நிகழும் எனும் ஊகம்  ஆரம்பம் ஆனது. உணவுபொருட்கள் இப்போது வாங்க தேவியில்லை. சிங்கப்பூரில் நிறைத்து விட்டோம். வழியில் வாங்கினாலும் நைஜீரியாவில் காலி பண்ணி விடுவார்கள் என ரைமுண்டோ சொன்னார்.

   “போனியில் க்ரூ சேஞ் இல்லை” காப்டன் சொன்னதாக அதையும் ரைமுண்டோவே சொல்லிவிட்டு அடுமனைக்குள் வெங்காயம் நறுக்க நகர்ந்தார். அக்டோபர் நான்காம் தேதி போனி லோடிங், டிஸ்சார்ஜிங் கொரியா இல்லை சைனா எனில் நவம்பர் முதல் வாரம் சிங்கப்பூரில் க்ரூ சேஞ் ஆகும் என தலேர் சொன்னதும். கம்பனி மெசேஜ் அனுப்பினா போனில இறங்கத்தான் வேண்டும் காப்டன் ஒன்னும் செய்ய முடியாது என சோம்ராஜ்.

 ரிட்டேன்ல சாப்பாடு காலியாகிவிடும் கேப்டவுனில் நிறுத்தி சாப்பாடு எடுத்தே ஆகணும் என போசன் சொன்னார்.  ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. சரக்கை எங்கே இறக்குவது என.

    ஆப்ரிக்காவில் இப்போது இறங்குவது கொஞ்சம் கலக்கமாக தான் இருந்தது எனக்கு.மேற்கு ஆப்ரிக்காவில் மங்கி பாக்ஸ் பரவுகிறது அது குறித்து கடந்த மாத கூட்டத்தில்  எங்கள் நிறுவனம் அனுப்பிய பாதுகாப்பு முறைகள் விரிவாக விவாதிகபட்டது. இந்தியாவிலும் மங்கி பாக்ஸ் ஓரிரு கேஸ்கள் இருப்பதாக செய்திகள் சொன்னது. ஆப்ரிக்காவில் இறங்கி விமானத்தில் பயணித்து இந்தியா வரும்போது சில சோதனைகள் தனிமைபடுத்தல் என வரலாம்.

   அடுத்தநாள் காலையில் முதன்மை இஞ்சினியர் புன்டா ஐரோப்பா போகும் வாய்ப்புள்ளது டிஸ்சார்ஜ் இந்தியா என்றார்.தகவல்கள் ஏதும் உறுதியாகவில்லை. கப்பல் சைனாவில் சரக்கை இறக்கிய பின் அடுத்த சில நாட்கள் புன்டா ஐரோப்பா குறித்து சிலமுறை சொன்னபோது. ஸார் இந்த வார்த்தையை அடிக்கடி சொல்லாதீங்க என்றேன். “ஷாகுல் நீ தமிளா” என்றார் மலேசியாவின் இரண்டாம் இஞ்சினியர் அலெக்ஸ். பிலிப்பினோ பேசும் தக்காலாவ் மொழியில் புன்டா என்றால் ‘கோயிங்’ என அர்த்தமாகும் என ஜோ சொன்னான். 

   மதியத்திற்கு மேல் காப்டன் மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். கப்பல்  புன்டா ஐரோப்பா துறைமுகம் செல்ல அறிவுறுத்தபட்டது முழு வேகத்தில். சரக்கு இறக்குவது மும்பை அருகில் டபஹோல் என்னும் துறைமுகத்தில். இஞ்சின் பிட்டர் பாட்டீலின் கிராமத்திற்கு மிக அருகில் அது இருப்பதாக சொன்னான். மோட்டார் மேன் அஸ்பக் வீட்டிலிருந்து நூற்றியம்பது மைல். “அஸ்பக் அப்ப நானும் வீட்டுக்கு போவேன்” பிளைட் டிக்கட்டே வேண்டாம் என்றான்.

  ஒரு கணக்கு போட்டு பார்த்தோம் நவம்பர் முதல் வாரத்தில் இந்தியா போய் சேரலாம். மாலையில் உணவு கூடத்துக்கு வந்த இரண்டாம் அதிகாரி ஹபீசி பின் “அக்டோபர் ட்வெல்வ் ப்ரம் கேப்டவுன் வி மே கோ ஹோம்” என்றார்.

   கப்பலின் சரக்கு நிறைத்தபின் சரக்கு தொட்டிகளை ஆய்வு செய்ய டெக்னீசியன்கள் ஆறு பேர் கப்பலுக்கு வரும் செய்தி வந்தது. புன்டா ஐரோப்பாவில் சரக்கு நிறைத்துவிட்டு வரும்போது அவர்கள் நமீபியாவில் கப்பலில் ஏறி மொரிசியசில் இறங்குவது அல்லது மொரிசியசில் ஏறி இந்தியாவில் இறங்குவது. 

 அதனால் ரைமுண்டோ உற்சாகமானார். “வீட்டுக்கு போணும் போதும் ஆறு மாசம் தாண்டியாச்சி இந்த செகண்ட் குக் கிறுக்கன் அவனுக்க கூட இன்னும் மாறடிக்க முடியாது”.

  திரும்பி வருகையில் சில நிறுத்தங்கள் இருப்பதால்  பணியாளர் மாற்றம் வாய்ப்பு பிரகாசமாகிவிட்டது. இருந்தாலும் கப்பலின் எண்ணெய் கையிருப்பு பேச்சுகள் அவ்வபோது நடந்தது. கப்பல் புறப்படுகையில் டீசல் கையிருப்பு மொத்தம் 2634 metric ton. குறைந்தபட்சம் இருபத்தி மூன்று பயணத்தில் நாளொன்றுக்கு நூறு டன்கள் வீதம் போக மீதமிருப்பது 334 டன்கள். பயணத்தில் கடும் காற்று ,புயலை எதிர்கொண்டால் இன்னும் தாமதமாகும். இவ்வளவு குறைந்த கையிருப்புடன் எந்த முதன்மை இஞ்சினியரும் ஒத்துகொள்ள மாட்டார்கள்.

   பயண முடிவில் கையிருப்பு எண்ணெய் எவ்வளவு என தகவலை அனுப்பினார்கள். 

 சரக்கு இறக்கும் கொங்கன் எல்என்ஜி KLL டெர்மினல் கப்பலின் விபரங்கள் மற்றும் சான்றிதழ்களை கேட்டு அனுப்பினார்கள். அலையன்ஸ் பயண பாதையில் முழு வேகத்தில் அனைத்து கப்பல்களையும் முந்திகொண்டிருந்தது.

புன்டா ஐரோப்பா(punta euorapa)  துறைமுகம் எங்கே இருக்கிறது. மேற்கு ஆப்ரிக்காவின் இக்குவாடர் கினியா (Equatrial Guinea ) எனும் நாட்டில் இருக்கிறது. இது நைஜீரியாவிற்கு கீழே காமரூன் எனும் நாட்டை ஒட்டிய ஒரு சிறு நாடு. 28051 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாட்டை 1471 இல் பெர்னாண்டோ பூ எனும் போர்சிகீசியர் பாதம் பதித்து கண்டுள்ளார். 

  இப்போது மொத்த மக்கள் தொகை ஏழு முதல் எட்டு லட்சம் இருக்கலாம். அதிக மழை பெய்யும் அடர்காடுகள் நிறைந்துள்ள  விவசாயத்தை நம்பி இருந்த ஏழை நாடு. இந்நாட்டின் மொத்த பரப்பில் அறுபத்தியைந்து சதவீதம் காடுகளால் சூழ்ந்திருக்கிறது.பின்னர் காடுகளை அளித்து விவசாயம் துவங்கியுள்ளது. கோகோ,காப்பி,சீனி கிழங்கு போன்றவை முக்கிய விவசாய பொருட்கள். 

  1990 க்குப்பின் இங்கே எண்ணெய் கிணறுகளை தோண்டி எண்ணெய் எடுக்கிறார்கள். இப்போ மக்கள் வளமா வாழ்கிறார்களா என அங்கு பார்த்தால் தெரியும். 

      டெர்மினல் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது . எல்என்ஜி அலையன்ஸ் வெல்கம் டு புன்டா இரோப்பா என. 

   நாஞ்சில் ஹமீது,

  12 sep 2024.

Thursday 19 September 2024

Efective Immedietly

  


       நைஜீரியாவின் போனியில்(bonny) சரக்கு நிறைத்து ஜூலை பதினேழாம்    தேதி புறப்பட்டு சைனாவில் ஆகஸ்ட் 23 சரக்கை இறக்கியபின் இருபத்தி நான்காம் தேதி மாலை முதல் மிக மெதுவாக நகர்ந்து சிங்கையிலிருந்து நூற்றிஎழுபது மைலுக்கு முன் முப்பத்தி ஒன்றாம் தேதி வாக்கில் கடலில் கப்பலை நிறுத்தினோம்.

     புதிய சரக்கு நிறைக்கும் ஆர்டர் ஏதும் வரவில்லை பேசிக்கொண்டிருக்கிறோம் என கப்பல் நிறுவனம் சொன்னது. செப்டம்பர் நான்காம் தேதி டீசல்,மற்றும் உணவு,உதிரி பாகங்கள் நிறைக்க சிங்கை சென்று திரும்பி வந்துகொண்டிருந்தோம்.

    சிங்கையிலிருந்து புறப்பட்ட மறுநாள் ஓய்வாக இருந்தது. இயந்திர அறை மற்றும் நேவிகேசன் அதிகாரி மற்றும் வாட்ச் கீப்பெர்ஸ்க்கு எட்டு மணிநேர பணியிலிருந்து விலக வழியே இல்லை.

  வெள்ளிக்கிழமை வாசித்தும்,தூங்கியும் ஓய்வு கழிந்தது. சனிக்கிழமை காலையில் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. அரை நாள் பணி, ட்ரில்ல்ஸ் என முடிந்தது.விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளரின் விஸ்வரூபம் நாவல் வாசித்துக்கொண்டிருந்தேன். அதிலுள்ள மூன்றாம் தர பாலியல் பகடியிலிருந்து ஒரு இடைவேளை தேவைபட்டது. 

 அதனால் ஞாயிறு காலை ஏழுமணிக்கே அமர்ந்து குமரித்துறைவி நாவல் வாசிக்க ஆரம்பித்தேன். அதே நாளில் இரு நண்பர்களின் மகள்களுக்கு கல்யாணம். நானும் திருமண வீட்டில் இருந்த உணர்வை தந்தது.



   கப்பல் எங்கே எப்போது செல்லும் என எந்த தகவலும் இல்லை. உணவு மேஜையில் எப்போதும் கப்பல் எங்காவது செல்வது பற்றிய வதந்திகள் பெருகிகொண்டே இருந்தது.

 காலையில் உணவுக்கூடம்  செல்லும்போது அடுமனையில் மீன் அல்லது இறைச்சியை கழுக்விகொண்டிருக்கும் ரைமுண்டோ ஆரம்பிப்பார். “ஆப்ரிக்கா ஜானைக்கா சான்ஸ் ஹை” என்பார். பத்து மணி தேநீர் இடைவேளையில் சோம்ராஜ் “ஓனர் க்க போன் வந்தது. கொஞ்சம் காத்திருக்க சொல்லியிருக்கிறார்” என. ஜெய் வருவான். “கப்பல் விற்பனை ஆகிவிட்டது அனைவரும் ஒன்றாக ஊருக்கு போக வேண்டி இருக்கலாம்”. 

போசன் “அவ்வளவு சீக்கிரம் நடக்காது,விற்பனைக்கு நாள் ஆகலாம்”. 

“நான் கப்பலுக்கு வந்த மறு நாள்ல்ல இருந்து இத கேக்கேன்,கப்பல் வித்துரும்,கப்பல் வித்துரும் என” சோம்ராஜ்.

  இந்த கப்பலை கடந்த ஏப்ரல் மாதமே விற்பனைக்கு போட்டு விட்டார்கள். நாங்கள் இந்தியாவின் குஜராத் துறைமுகம் சென்றபோது மூன்று வெவ்வேறு நிறுவனங்கள் கப்பலை நேரில் வந்து பார்த்து சென்றார்கள். உயர் பதவி வகிக்கும் காப்டன்,சீப் இஞ்சினியர், சுர்வேயர்கள். ஒரு நிறுவனம் கப்பலின் புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களை வாங்கி பார்த்தது.

 நான்காம் தேதி சிங்கையில் நிற்கும்போது கப்பல் நிறுவன ஆய்வாளர் ஒருவர் வந்தார். அதுவும் விற்ப்பனைக்கு சாத்தியம் என பரப்பி விட்டார்கள். பணி ஒப்பந்தம் முடிந்து இருவரும்,முடியும் தருவாயில் நான்குபேரும் இருக்கிறோம்.கடந்த முறை சிங்கையில் ஊருக்கு போகிறீர்களா என காப்டன்  கேட்ட போது இம்மாத இறுதியில் பணி ஒப்பந்தம் முடிந்து செல்கிறோம் என ஐந்துபேர் சொன்னாதால். காப்டன் பணியாளர் மாற்றத்தை ஒத்தி வைத்தார்.

    

     ஏதாவது துறைமுகம் சென்றால்தான் பணியாளர் மாற்றம் சாத்தியம். எனக்கும் இம்மாத இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஊருக்கு சென்றால் என் எண்ணப்படி எல்லாம் நிறைவேறும். சரக்கு நிறைக்க அரபு வளைகுடா நாடுகள்,அமெரிக்கா அல்லது ஆப்ரிக்கா தான் செல்ல வேண்டும் இல்லையனில் ஆஸ்திரலியா.

  உணவு மேஜையிலும்,இடை வேளைகளிலும் ஆளாளுக்கு வாயில் வந்ததை சொல்லி  நேரம் போய்க்கொண்டிருந்தது. ஞாயிறு ஓய்வு நாளும் முடிந்து திங்கள்கிழமை முதல் டெக்கில் பெரிய பணிகளை தொடங்கினார்கள். உயரமான புகைபோக்கியின் மேலிருந்து கீழ் வரை பெயிண்ட் அடித்தல். கயிறுகளில் நீள பலகையை கட்டி அதில் ஒருவரை அமர வைத்து மேலிருந்து கீழே இறக்குவோம். அந்தரத்தில் தொங்கிகொண்டிருப்பவருக்கு  துருவை சுத்த படுத்த கருவிகளை போசன் கயிறு மூலம் இறக்குவார். துருவை களைந்தபின்,பிரேமர் அடித்து காய ஒரு நாள். 

   பின்னர் அதே முறையில் பெயின்ட் அடிப்பது. காலை முதல் இரு மணி நேரத்தில் ஒருவர் என முறை வைத்து அப்பணியை செய்வார்கள். நல்ல வெயிலும் கப்பல் ஓடாததால் காற்றும் இல்லாமல் இருந்தது. 

      கப்பல் நீண்ட நாள் நிற்கும் என்பதால் இது மாதிரியான பெரிய பணிகள் துவங்கியது. இயந்திர அறையிலும் பாய்லர் நிறுத்தப்பட்டு அதிலுள்ள ஒழுகல்கள் சரி செய்ய துவங்கி இருந்தனர். 

  கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது பத்தாம் தேதி மாலை இரவுணவின் போது முதன்மை அதிகாரி “நிம்மதியா சாப்பிட கூட இல்ல” என்றார். 

“ஏன்”

 “ஆங்கர் எடுக்க சொல்லி கேப்டன் கூப்பிட்டாரு, போனி போகிறோம்” என சொன்னார்.

    பாட்டீலிடம்  சொன்னபோது நம்பவேயில்லை. ஆங்கர் பார்ட்டியான தலேர் உடனடியாக அறைக்கு சென்றான். நான் அறைக்கு சென்று ரேடியோவை உயிர்பித்து அஸ்தமனம் பார்க்க பாட்டீலுடன் அமர்ந்தேன். அதற்குமுன் கட்டுபாட்டு அறையின் எங்கள் கணினியின் மெயில் பாக்சை திறந்து பார்த்தேன். காப்டன் புதிய மெயில் எதையும் அனுப்பியிருக்கவில்லை.ரேடியோவில் விகாஸ் கப்பல் போனி போகிறது என்றான். போசன் தலேர் கமிங் என அழைத்துக்கொண்டிருந்தார். கப்பலின் நங்கூரம் மெதுவாக உருவப்பட்டது. 

   நானும் பாட்டீலும் பேசிக்கொண்டிருந்தோம்  இங்கிருந்து பதினெட்டு நாள் பயணம் தென்ஆப்ரிக்காவுக்கு  அங்கே உணவுப்பொருள் மற்றும் டீசல் நிரப்ப நிறுத்தும்போது பணியாளர் மாற்றம் நம்மை இறக்கிவிட வாய்ப்பு அதிகம். கேப்டவுனில் கட்டுமையான ஆட்டம் இருக்கும் உயிரை பணயம் வைத்து இறங்கும் விளையாட்டில் நான் இல்லை நான் அங்கே இறங்க மாட்டேன். காப்டனிடம் எழுதி கொடுத்து என மறுப்பை தெரிவிப்பேன் என்றேன்.

நங்கூரம் உருவிவிட்டு தலேர் வந்தான். உறுதியான தகவல்  கப்பல் போனி போகிறது என.

  அறைக்கு வரும் முன் கட்டுப்பாட்டு  அறைக்கு சென்று மின்னஞ்சலை பார்த்தேன்.

 Dear capt shin,

 Good day,

 Efective immedietly – please proceed to bonny nigeria, Arrive At 03 oct  0001lt.

Please advise vessels best ETA bonny ,Nigeria.

 என இருந்தது. கப்பல் தனது இருபத்திமூன்று முதல் இருபத்தியைந்து நாள் பயணத்தை தொடங்கியிருந்தது.

  நாஞ்சில் ஹமீது,

11-sep-2024.

சிங்கப்பூரில்

      

                  நான்காம் தேதி காலை சிங்கப்பூரில் பங்கர் நிரப்பும் உத்தரவு  கிடைத்தது. பைலட் மதியம் பன்னிரெண்டு மணிக்கு. ஆயிரைத்து ஐநூறு டன் டீசலும், உணவுப்பொருட்கள்,உதிரி பாகங்கள்,அன்றாட தேவைக்கான இன்னபிற பொருட்கள் என கப்பலுக்கு வரவேண்டியவற்றின் அட்டவணை வந்தது.

   கப்பலிலில் உள்ள கழிவு எண்ணெய் நூறு டன்,கழிவு இரும்புகள்,பிளாஸ்டிக்,பேப்பர் குப்பைகள் அனைத்தும் கொடுப்பதற்கான ஒப்புதலும் வந்தது. கழிவுகளை ஊரில் கொடுத்தால் பணம் கிடைக்கும். இங்கே கழிவுகளையும் கொடுத்து பணமும் கொடுத்தால்தான்  பெற்றுசசெல்வார்கள்.

   ஜெனெரெட்டரின் ஹெட் பன்னிரெண்டை சிங்கையில் பழுது பார்க்கவும் கொடுக்கவேண்டும். அதற்கான தயாரிப்புகளை சில நாட்களாக செய்தோம்.

 சிங்கையிலிருந்து நூற்றிஎழுபது மைல் தொலைவில் நின்றுகொண்டிருந்ததால் இரண்டாம் தேதி அதிகாலை கப்பல் புறப்பட்டது சிங்கை நோக்கி.


கரைக்கு கொடுக்க வேண்டிய கழிவுகள் 


      வேண்டிய தயாரிப்புகளை செய்தபின் மூன்றாம் தேதி மதியம் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இயந்திர அறை manned ஆக்கப்பட்டு வாட்ச் கீப்பிங்கில் இருந்தது.

      நான்காம் தேதி மதியம் ஒரு மணிக்கு பைலட் சிங்கையில் பத்திரமாக கப்பலை நங்கூரம் பாய்ச்சியபின் இறங்கிசென்றார். காலை முதல் ஓய்வில் இருந்தேன் மதிய உணவுக்குப்பின் ரேடியோவை ஆன் செய்து வைத்தேன்.பங்கர் பார்ஜ் வரும் தகவல் வந்தது. உடை மாற்றி டெக்கில் இறங்கி சென்றேன்.அதற்கு முன்னரே அருகணைந்த சிறு படகிலிருந்து  இரு இருநூறு லிட்டர் பீப்பாய் ஹைட்ராலிக் எண்ணை மற்றும் இருபது லிட்டர் அளவில் பதினைந்து பக்கெட் கம்ப்றேசர் ஆயிலை இஞ்சின் பணியாளர்கள் கிரேன் மூலம் டெக்கில் இறக்கி வைத்திருந்தனர்.

   இரண்டாம் அதிகாரி லூப் ஆயில் பார்ஜ் வந்துள்ளதாக இரண்டாம் இஞ்சினியரை அழைத்தார். “லூப் ஆயில் நமக்கு கிடையாது” என பதிலளித்தார்.

  சிறிது நேரத்திற்குப்பின் இரண்டாம் அதிகாரி இருபத்தி ஆறாயிரம் லிட்டர் லூப் ஆயில் எல்என்ஜி அலையன்சுக்கு வந்துள்ளாதாக உறுதியாக சொன்னார்.



  அதற்குள் டீசல் வந்த கப்பலை போர்ட் சைடில் கட்ட முதன்மை அதிகாரி ஹோ தலைமையில் போசன்,தலேர்,கார்லோ சென்றனர். லூப் ஆயில் பார்ஜை ஸ்டார் போர்ட் சைடில் கட்ட சொன்னார்கள். முதன்மை அதிகாரி டீசல் பார்ஜை கட்டியபின் வருகிறோம் என்றார். உணவுபொருட்கள்,உதிரி பாகங்கள் ஏற்றிய படகு டீசல் பார்ஜிக்கு பின்னால்  எங்கள் கப்பலுடன் அருகணைந்தது. கப்பலில் பக்க வாட்டு (sunk  and bit) கொக்கியில் அவர்களே கயிறுகளை கட்டி நிறுத்தியிருந்தனர்.

      அந்த படகிலிருந்து பொருட்களை கிரேன் மூலம் மேலே தூக்க துவங்கியிருந்தோம். டீசல் பார்ஜ் ஸீ பிரிலியன்ஸ் கட்டியபின் அதே குழு லூப் ஆயில் பார்ஜை ஸ்டார்போர்ட் சைடில் கட்டினார்கள். பாட்டீல்,ஜோ,ஜூனியர் இஞ்சினியர் டீசல் பார்ஜின் குழாயை கப்பலின் குழாயுடன் பொருத்தினர். டீசல் பார்ஜ் வழங்கிய ஆவணங்களுடன் மூன்றாம் இஞ்சினியர் ஸ்டீவ் முதன்மை இஞ்சியரை சந்தித்து கையொப்பம் வாங்கினார்.

       போசன் சோம்ராஜிடம் சொல்லி லூப் ஆயில் குழாயை கிரேன் மூலம் தூக்கி கொண்டிருந்தார். நான் போசனுடன் உணவுப்பொருட்களை மேலேற்றி கொண்டிருந்தோம்.அடுமனை பணியாளர்கள் பொருட்களை குளிரூட்டியில் வைக்க தயாராயினர்.

    இரண்டாம் இஞ்சினியர் போசனிடம் லூப் ஆயில் நம்முடையது இல்லை கிரேட் மாறி வந்துள்ளது. நாம் அவற்றை எடுக்க இயலாது என்றார். கிரேன் மூலம் தூக்கிய நான்கு அங்குல ரப்பர் குழாய் ஆகாயத்தில் நடனமாடி கொண்டிருக்க அப்படியே நிறுத்தி வைத்தான் சோம்ராஜ்.

அந்தரத்தில் குழாய் 


   டீசலுக்கான ஆவணங்கள் எல்லாம் முத்திரை பதித்து  ஒப்புதலுக்குப்பின். இரண்டாம் இஞ்சினியர் பாட்டீலிடம் டீசலை  கப்பலுக்கு தரச்சொல்லி  சொல்ல சொன்னார்.

 டீசல் பார்ஜ் பம்பை இயக்கிய இரண்டு நிமிடம் பதினேழாவது வினாடியில் பணியில் இருந்த ஜெய் டீசல் குழாயில் ஒழுகல் என ரேடியோவில் அலறினான். பாட்டீல் உடனடியாக பார்ஜிடம் சொல்லி டீசல் பம்பிங்  நிறுத்தப்பட்டது.

    கப்பலின் டீசல் குழாயில் சிறு ஓட்டை. நானும் பாட்டீலும் உடனடியாக விரைந்து சென்று களத்தில் குதித்தோம். ஒரு மணிநேரத்தில் தற்காலிகமாக ஓட்டையை அடைத்து ஒழுகாதவாறு இரும்பு கிளாம்பை போட்டு இறுக்கினோம்.





   அடுத்த ஐந்து நிமிடத்தில் டீசல் கப்பலுக்குள் மெதுவாக வரத்தொடங்கி அதன் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டப்பட்டது. போசன் இரண்டாம் இஞ்சியரிடம் இன்னும் எவ்வளவு நேரம் லூப் ஆயில் குழாய் அந்தரத்தில் நிற்பது எனக்கேட்டார். 


“வெயிட் கம்பனியுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் அவர். உணவுப் பொருட்களில் பால்,பழச்சாறு,அரிசி,கோதுமை,மைதா,பிரட்,பன்,கேக், காய்கறிகள்,பழங்கள்,ஆடு,கோழி,பண்ணி,மாட்டிறைச்சி வகைகள் அதற்கான குளிரூட்டிகளில் போய்க்கொண்டிருந்தது.  புதிதாய் வந்த வாழைப்பழங்கள் ஆளுக்கு இரண்டு சாப்பிட்டோம்.

    கெட்சப்,சமையல் எண்ணெய்,உப்பு,சீனி,புளி,வினிகர்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பிஸ்கட்,காபித்தூள்,தேயிலை,சீரியல்ஸ்,பயறு,பருப்பு,பொடித்த இட்லி மாவு,டின்னில் அடைத்த மீன்,இறைச்சி,தக்காளி,மில்க் மெய்ட்,தேங்காய் பால்,பிரெஞ்சு டிரெஸ்ஸிங்,தௌசண்ட் ஐலன்ட்,மயோனைஸ் போன்றவை உலர் அறையில் வைத்தோம்.

   லூப் ஆயில் நிறைக்க கம்பனி உறுதியளித்தது. ஆகாயத்திலிருந்து குழாய் இறக்கி பொருத்தபட்டது.நான்காம் இஞ்சினியர் தும்பாக் அதன் பொறுப்பு. இரண்டாம் இஞ்சினியர் வழிகாட்ட ஜூனியர் உதவிக்கு சென்றான். 

       உணவுக்கூடம் வந்து ஒரு துண்டு மாட்டிறைச்சியும் தண்ணீரும் குடித்து சென்றேன்.உதிரி பாகங்களும்,உணவுப்பொருட்களும் கப்பலில் எற்றியபின் காலியான படகில் இரும்பு கழிவுகளையும்,ஜெனரேட்டர் ஹெட் பன்னிரண்டு இறக்கும் பணி தொடங்கியது. 

    கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியபோது மணியை பார்த்தேன். ஆறு நாற்பது தலேரிடம் தொழுதுவிட்டு வருகிறேன் என சொல்லி சென்றேன். டீசலும்,லூப் ஆயிலும் சீராக கப்பலுக்குள் வந்துகொண்டிருந்தது.

     அஸர் தொழுதபின் காத்திருந்து மக்ரிப் தொழுதுவிட்டு மீண்டும் சென்றேன். போசன் இரவுணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். “களிச்சா” என கேட்டார். பணி முடிந்து குளித்தபின் சாப்பிடுகிறேன் என்றேன்.

  ஜெனரேட்டர் ஹெட் மெதுவாக சென்று கொண்டிருந்தது. லூப் ஆயில் முடிந்து பார்ஜ் கட்டவிழ்த்து விடபட்ட்டது. கழிவு எண்ணெய் வாங்கும் படகை அழைக்க சொல்லி மூன்றாம் அதிகாரி விகாசிடம் காப்டன் சொன்னார். 

  விகாஸ் ஏஜெண்டை தொடர்புகொண்டபின் நள்ளிரவு அல்லது அதிகாலை கழிவு எண்ணெய் பார்ஜ் வரும் என சொன்னான். பிளாஸ்டிக் கழிவுகள்,எஞ்சிய உபயோகிக்க முடியாத சமையல் எண்ணெய்,இயந்தியர அறையில் துடைத்த எண்ணைத்துணிகள்,பேப்பர் குப்பைகள் போன்ற அனைத்து கழிவுகளும் வலைப்பையில் நிறைத்து கிரேன் மூலம் இறக்கியபோது படகு நிரம்பியது. இரும்பு கழிவுகளை வைத்திருந்த ஆறு தகர பீப்பாய்கள் வைக்க இடமில்லை. காலாவதியான மருந்து,மாத்திரைகள் பன்னிரெண்டு அட்டை பெட்டிகளில் அடைத்து வைத்திருந்ததை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டுமென முதன்மை அதிகாரி சொன்னாதால். தலேர் கயிறு மூலம் கட்டி இறக்கினான்.



    ஒன்பது மணிக்குமேல் நீராடி புலாவும்,கடலை கறியும் சாப்பிட்டேன். பத்து லட்சம் காலடிகள் எனும் சிறுகதை வாசித்துவிட்டு பதினோரு மணிக்கு கீழே சென்றேன். கழிவு எண்ணெய் பார்ஜ் கட்டப்பட்டு கப்பலிலிருந்து பம்பை இயக்கி எண்ணை சென்று கொண்டிருந்தது. தும்பாக் இயந்திர அறைக்கு சென்றிருந்தார். ஸ்டீவன் அங்கே அமர்ந்திருந்தார். இரண்டாம் இஞ்சினியர் வருகைக்காக கையில் கறுப்பு டீயுடன் காத்திருந்தேன். “ஷாகுல் அதிகாலை இது முடியும் தருவாயில் உன் உதவி தேவை. தும்பாக் போனில் அழைப்பான் இப்போது போய் தூங்கு, நானும் போகிறேன் அதிகாலை மூன்றரைக்கு வந்தேன்” என்றார்.

   அறைக்கு வந்து வாட்ஸ்அப்பில் நேரம் போக்கிவிட்டு பன்னிரெண்டு மணிக்கு மேல் தூங்க சென்றேன். அதிகாலை கனவிலென மணிஅடித்தது. முதல் அழைப்பிலேயே கண் திறக்காமல் போனை எடுத்தேன். தும்பாக் “வேக் அப் கால்” என்றான். அடுத்த ஐந்து நிமிடத்தில் கீழே இருந்தேன்.மணி ஐந்தை நெருங்கியிருந்தது. ஆறு மணிக்கு மேல் ஆகும் என சொல்லிவிட்டு இயந்திர அறைக்கு சென்றான்.

   சோம்ராஜ் பணியிலிருந்தான். “ஷாகுல் ஜி டீ குடிச்சியா” எனக்கேட்டான்.

“முடிந்துவிட்டது என அவசரமாக வந்துவிட்டேன்” என்றேன். நான் பார்த்துக்கொள்கிறேன் நீ போய்விட்டு வா என சோம்ராஜ் சொன்னதும் மீண்டும் அறைக்கு வந்து பல் தேய்த்து,கால் கழுவி அதிகாலை தொழுகைக்குப்பின் டீயுடன் சென்றேன். அடுமனை பணியாளர் வந்திருந்தனர்.

    ஏழு மணி வரை கழிவு எண்ணெய் போய்க்கொண்டே இருந்தது. சோம்ராஜ் “ஷாகுல் ஜி நாஸ்டா கர்க்கே ஆவோ,டைம் லகேகா”என்றான். போசன் உணவுக்கூடத்தில் இருந்தார்.கண்கள் வீங்கி களைத்திருந்தன.இரு முட்டையில் ஆம்ப்லேட்டும்,சீரியலும் சாப்பிட்டுவிட்டு சென்றபோது தொண்ணூறு டன் கழிவு எண்ணெய் கொடுத்த ஆவணம் முதன்மை இஞ்சினியரிடம்  ஒப்பிட்டு முத்திரை பதித்து கயிறு கட்டி பக்கட் மூலம் பார்ஜில் இறக்கினார். 

  பிரையன்,மத் உடன் இணைந்து குழாயை அவிழ்த்து கயிறு மூலம் இறக்கினோம். நூற்றியிருபது கிலோவுக்கு மேல் இருந்த பார்ஜ் பணியாளர் குடிக்க சாப்ட் ட்ரிங்க்ஸ் வேண்டுமென கேட்டார். இரண்டு லிட்டர் ஆரஞ்சு பழச்சாறு பாக்கெட்டுகளை கயிறு கட்டி பக்கெட்டில் இறக்கினேன். “ஜஸாக்கல்லா கைரன், அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார். “

வலைக்கும் ஸலாம்”.

   ஒன்பது மணிக்கு மேல் அறைக்கு சென்று வாசித்துக்கொண்டிருந்தேன். பதினோரு மணிக்கு தூக்கம் அழுத்தவே தூங்கி விட்டேன்.

 பன்னிரெண்டரைக்கு விழிப்பு தட்டியபோது முகம் கழுவி உணவுண்ண சென்றேன். நங்கூரத்தை எடுத்துக்கொண்டு கப்பல் மீண்டும் வந்த இடத்திற்கே செல்வதாக தலேர் சொன்னான்.

  நாஞ்சில் ஹமீது,

05-sep-2024.

Thursday 12 September 2024

காத்திருக்கும் நாட்கள்.

     

 கப்பல் சைனாவின் shenzhen இல் சரக்கை இறக்கியபின். புதிதாக சரக்கு ஏற்ற உத்தரவு ஏதும் வரவில்லை. கடைசியாக சரக்கு தந்த நிறுவனம் நைஜீரியாவில் ஏற்பட்ட சிறு விபத்து மற்றும் நடுக்கடலில் கப்பல் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த கப்பல் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக சைனாவில் கப்பலுக்கு வந்த மேனேஜர் சொன்னார்.

  இல்லையெனில் இப்போது மீண்டும் நைஜீரியாவை நோக்கி ஒரு நீண்ட பயணம் போயிருக்கும்.

   கப்பலில் இப்போது காஸ் இல்லாததால் இஞ்சின் டீசலில் இயக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு ஒரு ஜெனரேட்டருக்கு இருபத்திஐயாயிரம் லிட்டர் டீசல் தேவை. அதனால் கப்பல் முதலாளி ஒரு ஜெனரேட்டரை மட்டும் இயக்கி மெதுவாக சிங்கப்பூர் நோக்கி சென்று முப்பதாம் தேதி ஆயிரத்தி ஐநூறு டன்(ஒரு டன்=ஆயிரம் லிட்டர், படிப்பவர்கள் மண்டையை குடைய வேண்டாம் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் லிட்டர்.) டீசலை நிரப்ப சொன்னார்.இப்போது கப்பலில் ஜெனரேட்டர் ஓடும் செலவு கப்பல் முதலாளியினுடையது.சரக்கு ஏற்ற,இறக்க செல்லும்போது செலவாகும் எரிபொருள் சரக்கு நிறுவனத்தில் கணக்கில் சேரும்.  

   சைனாவில்(24 august) இருந்து கப்பல் புறப்பட்ட நான்கு தினங்களுக்குப்பின் செப்டெம்பர் நான்காம் தேதி தான் டீசல் தரும் சிறு கப்பல் வருகிறது. அதனால் கப்பலை எங்காவது நிறுத்தி வைத்துவிட்டு நான்காம் தேதி செல்லமாறு புது உத்தரவு வந்தது.

   சிங்கையிலிருந்து நூற்றி எழுபது மைல் தொலைவில் கொள்ளைகாரர்கள் இல்லாத இடமாக பார்த்து மலேசியா அருகில் கடந்த வியாழன் இரவு கப்பலை நிறுத்தினோம். ஒரு ஜெனரேட்டர் இயங்கிக் கொண்டிருந்தது.  நேற்று காலை முதல் கப்பல் நகர தொடங்கியது.

  நான் ரைமுண்டோ,இஞ்சின் பிட்டர் பாட்டில், முதன்மை அதிகாரி ஹோ,இரண்டாம் அதிகாரி ஹபீசி மற்றும் மோட்டார் மேன் ஜெர்ரிக்கு செப்டம்பரில் இறுதியில் பணி ஒப்பந்தம் முடிகிறது. காப்டன் அனைவரிடமும் கேட்டார் ஐந்தாம் தேதி சிங்கையிலிருந்து ஊருக்கு செல்கீறீர்களா?என  ரைமுண்டோ வை தவிர மற்றவர்கள் ஒப்பந்த காலம் முடிந்தபின் செல்கிறோம் என சொன்னதால் காப்டன் அப்படியே குலாலம்பூர்  அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்தார்.

   பழைய மெனுபடி நேற்று காலை போகா நேற்று காலை ஆனால் ரைமுண்டோ வடா செய்திருந்தார். நம்மூரில் சாயாவுடன் கடிக்கும்  போண்டாவை வட நாட்டுகாரர்கள் வடா என்பார்கள். ஒரு பன்னுக்கு நடுவில் இந்த வடா வைத்தால் வடா பாவ். அவர்களின் காலை நேர நாஸ்தா முடிந்தது.

   மதியமும் அயில மீனை வகுந்து மசாவை திணித்து ஓவனில் வைத்து வேகவைத்திருந்தார். நேற்று மதியம் சிறு குவளையில் ஒரு கரண்டி சாதமும் தயிரும்,பருப்பு குழம்பும்,காயும் போட்டு சாப்பிட்டேன்.இரவில் பெரிய குவளையில் சுடுநீர் ஊற்றி ஒரு கரண்டி சாதத்துடன் உப்பு போட்டு,வெங்காயம்,தக்காளியுடன் உப்பும் எலுமிச்சை சாறும் கலந்து சாப்பிட்டேன். மதியமுள்ள இரண்டு அயில மீனும்.  ஞாயிறு பிரியாணி  தந்த கோளாறு.

  எதிரில் அமர்ந்திருந்த போசன் ஜாவித் இக்கா கேட்டார். “வயிறு பிரஸ்னம் ஆணோ” என 

“ஒந்தும் பிரஸ்னம் இல்லா இந்நல பிரியாணி இத்திரி கூடிப்போய்”

  

   நாளை மதியம் ஒரு மணிக்கு கப்பல் நங்கூரம் பாய்ச்சியபின் டீசல் நிறைப்பதும்,உணவு பொருட்கள்,உதிரி பாகங்கள் ஏற்றுதல்,பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்கள் அனைத்தையும் இறக்க வேண்டும்.

   இயந்திர அறையில் சேகரமாகும் கழிவு எண்ணைகளை எரிப்பதற்கு இந்த கப்பலில் இன்சிநிரேட்டார் இல்லை. அவை இயந்திர அறையில் உள்ள கழிவு தொட்டிகளில் நிரம்பிவிட்டது. அதையும் பெற்று செல்ல சிறு கப்பல் ஒன்று மாலையில் வரும்.

  நாளை மாலை முதல் வியாழன் காலை வரை அனைவருக்கும் கடும் பணி உண்டு. டெக்கிலும் இஞ்சினிலும் மதியத்திற்கு மேல் இன்று ஓய்வு விட்டார்கள். நாளை கிரேனை இயக்க வேண்டியிருப்பதால் இன்று சோதனை செய்யும்போது ஹைட்ராலிக் ஆயில் ஒழுகியதை கண்டு போசன் காஸ் இஞ்சினியரை அழைத்தார் அவர் என்னை அழைத்தார். ஆயில் ஹோஸ் பொருந்தும் கனெக்ஷன் ஒன்று துருவேறி ஓட்டை. அது பொருந்தியிருந்த போல்ட்டுகள் கழரவில்லை. பதினொன்றரை மணிக்கு மீட்டிங் இருந்தது.

  காஸ் இஞ்சினியர்  “பிட்டர் சாப் கானேக்கே பாத் சல்தேஹே,பிர் சுட்டி கரேகா” என்றார். எனக்கு தெரியும் இது சீக்கிரம் முடியாது என. உணவுக்குப்பின் ஓய்வேடுக்காமலே பணியை துவங்கினோம் ஓட்டையான கனெக்ஷன் புதிது கிடைக்கவில்லை. அதையே பிரேசிங் செய்து மாட்டி கிரனை இயக்கினோம். ஒழுகல் இல்லை என உறுதியானது. தலேர் சிங் “இந்த பிரேசிங் எத்தன மாசம் தாங்கும்”. “ஒன்னும் ஆகாது சில்வர் பிரேசிங்” என்றேன். மூன்றரைக்கு பணி முடிந்து வந்தேன். 

  எங்கள் நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட் நாளை கப்பலுக்கு வருகிறார். வருடத்தில் சில கப்பல்களுக்கு அவர் விஜயம் செய்ய வேண்டும். வேறு ஆய்வுகள் ஏதும் இல்லை.

  இங்கிருந்து மீண்டும் புறப்பட்டு கடந்த வாரம் நின்ற இடத்தில் போய் கப்பலை(drifiting) நிறுத்திவைத்திருப்போம். அடுத்த சரக்கு நிறைக்கும் உத்தரவு வரும் வரை ஒரு காத்திருப்பு.

   இன்று நல்ல வெயிலில் கிரேனின் மேலே அமர்ந்து பணி செய்ததால் நல்ல களைப்பு.நான்கு மணிமுதல் ஐந்துவரை தூங்கிவிட்டேன்.எழுந்து நீராடி தொழுகைக்குப்பின் உணவுக்கூடம் சென்றேன்.

இன்று இரவுணவில் போசனும்,சோம்ராஜும் கேட்ட பூரி செய்திருந்தார் ரைமுண்டோ.இரண்டு பூரி சாப்பிட்டேன்.

 ஏழு மணிக்கு மக்ரிப் நேரம். நாள் முடிந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவரின் நாவல் ஒன்று வாசிக்க தொடங்க வேண்டும்.

  நாளை மதியம் சிங்கையில் நங்கூரம் பாய்ச்சியபின் சென்றால் போதும். அதிகாலை வரை தொடர் பணியிருக்கும்.

  நாஞ்சில் ஹமீது,

03 sep 2024.

sunitashahul@gmail.com

ஞாயிற்றுக்கிழமை

 

        வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் இப்போது அதிகமாகிவிட்டது. ஞாயிறுகளில் ஹாப்பி சண்டே என சிலர் அனுப்புவார்கள். கப்பல் காரன் நாட்குறிப்புகளை வாசிக்காத எளியோர்.

     கப்பல் காரனுக்கு எல்லா நாளும் மண்டேதான். அடுமனை பணியாளர்களுக்கும், நேவிகேசன் அதிகாரிகளுக்கும் கப்பலில் கால் வைத்த நாள் முதல் கீழிறங்கும் நாள் வரை ஒரு நாளும் ஓய்வு என்பதே கிடையாது. 

   இயந்திர அறையில் பணிபுரியும் இன்ஜினியர்களும்,மோட்டர்மேன் வைப்பர் போன்றோருக்கும் வாட்ச் கீப்பிங் இல்லாத கப்பலாக இருந்தால் ஞாயிறுகளில் அரைநாள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உண்டு.(வாய்ப்புதான் உறுதியாக சொல்ல இயலாது)

  UMS (un maanned ship)வகை கப்பல்களில் இயந்திர பணியாளர்கள் அனைவரும் காலை எட்டு மணி முதல் ஐந்துவரை பணி செய்வார்கள். மதியம் பன்னிரெண்டு முதல் ஒரு மணி வரை உணவு இடைவேளை. டூட்டி இஞ்சினியர் டூட்டி மோட்டார்மேன் இரவு ஒன்பது முதல் பத்து வரை இயந்திர அறைக்கு சென்று இயந்திரங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு வருவார்கள்.லாக் புக்கில் எழுதி பிரிட்ஜில் சொல்லிவிட்டு அறைக்கு செல்ல வேண்டும்.

    ஐந்து மணிக்கு மேல் மறுநாள் காலை எட்டு மணிவரை ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அன்றைய டூட்டி இன்ஜினியரின் அறையில் அலாரம் ஒலிக்கும் பத்து நிமிடத்திற்குள் போய் அலாரத்தை அணைத்துவிட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும். (அலாரத்தை அணைப்பதில் தமாதமானால் என்ஜினியர்ஸ் அலராம் குடியிருப்பு முழுவதும் பேரோசையை எழுப்பி அனைவரின் தூக்கத்தையும் கலைத்துவிடும்.)

  பெரிய பிரச்சனையாக இருந்தால் நள்ளிரவில் தூங்குபவர்களை எழுப்பாமல் மாற்று ஏற்பாடு செய்ய முடிந்தால் துரிதமாக செய்துவிட்டு தற்காலிகமாக தள்ளிபோட்டு விடாலாம். மறுநாள் காலையில் அதை செய்துகொள்ள முடியும்.

   வேறு வழியே இல்லாமல் உடனே செய்தாக வேண்டியிருந்தால் அனைவரையும் எழுப்பவேண்டியதுதான். எலெக்ட்ரிக்கல் ஆபிசர் மற்றும் பிட்டருக்கு வாட்ச் கீப்பிங் கிடையாது. ஆனால் இருபத்திநான்கு மணி நேரம் கொண்ட ஒரு நாளில் இவர்களை எப்போது வேண்டுமென்றாலும் அவசர பணிக்காக அழைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

கப்பலில் செல்பவர்கள் பெரும் குடிகாரர்கள் எனும் அறியா மக்கள் மத்தியில் ஒரு பேச்சு உண்டு. அப்படி குடித்து செத்தாரை போல் கப்பல்காரர்கள் மயங்கி விழுந்துவிட முடியாது. நள்ளிரவில் ஒலிக்கும் போனை எடுத்து பேசிவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் மூளையை முழுமையாய் செலுத்தி பணி செய்ய வேண்டிய ஒரு அதிசய பிறவி தான் கப்பல்காரன். 

   தற்போது பெரும்பாலும் UMS வகை கப்பல்களே கட்டப்படுகிறது. ஞாயிறுகளில் மதியம் பிரியாணிக்குமேல் ஓய்வு கிடைக்கும். துறைமுகம் இல்லாமல் இருந்து அவசர பணிகள் ஏதும் வந்துவிடாமல் இருந்தால் கப்பலில் உள்ள இயந்திர பணியாளர்களுக்கும் டெக்கிலுள்ள பணியாளர்களுக்கு மட்டும் ஹாப்பி ஆப் சண்டே கிடைக்கும்.

  சமையல் காரனுக்கும்,நேவிகேசன் அதிகாரிக்கும் வீட்டிற்கு போனபின்தான் ஹாப்பி சண்டே.

   நான் தற்போது பணி புரியும் சில கப்பல்களில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் ஓய்வும்,ஞாயிறுகளில் காலை பத்து மணிக்கு மேல் ஓய்வும் கிடைக்கிறது. துறைமுகம் இல்லாத நாட்களில்.அதுவும் அப்போது இருக்கும் மூத்த அதிகாரிகளை பொறுத்து

 நான் கடந்த ஆண்டு முதல் காஸ் பிட்டராக ஆனபின் டெக்கில் காலையில் ஒரு ரவுண்ட்ஸ் மட்டும் போய் வர வேண்டும். இந்த கப்பலில் காஸ் இஞ்சினியர் ஒருவரும் என்னுடன் இருக்கிறார். 

ஞாயிறுகளில் நான் வரத்தேவையே இல்லை. நேற்று நாள் முழுவதும் குடியிருப்பை விட்டு வெளியே வரவேயில்லை. சனிக்கிழமை இரவு பன்னிரெண்டுமணி வரை வாசித்துவிட்டு தூங்க சென்றேன். காலை ஆறரைக்கு எழுந்து பஜர் தொழுகைக்குப்பின் அமர்ந்து கொஞ்சம் வாசித்தேன்.

எட்டு மணிக்கு முன்பாக தலையில் எண்ணெய் தேய்த்து அடுமனை சென்று கருப்பட்டி கலந்த சுக்கு காப்பி போட்டு குடித்துவிட்டு வந்தேன்.

பின்னர் குளியல். உடற்பயிற்சி,தியானம். பத்து மணிக்கு சுன்னத்தான இரண்டு ரக்காத் லுகா தொழுதுவிட்டு கீழே சென்றேன். போசனும், அஸ்பாக் பாயும் உணவு கூடத்தில் இருந்தனர். போசன் மசாலா சாயா போட்டிருந்தார் குடித்துவிட்டு அறைக்கு வந்து ஒரு மணிநேரம் மீண்டும் வாசிப்பு. 

  பன்னிரெண்டுக்கு முன்பாகவே சென்று மட்டன் பிரியாணி சாப்பிட்டேன். ஒரு கால் கரண்டி கூடிவிட்டது. முன்பு ஒரு முறை சுப்பு சாப் கேட்டார் “ஹோட்டல் பிரியாணிக்கும,கப்பல் பிரியாணிக்கும் என்ன வித்தியாசம்” என அவரே பதிலும் சொன்னார். “ஹோட்டல் பிரியாணியில் இறைச்சியை தேட வேண்டும்,கப்பல் பிரியாணியில் சோற்றை தேட வேண்டும்”என. அப்படி நேற்று நான் இரண்டு அவித்த முட்டையுடன் சாப்பிட்ட பிரியாணியில் கால் கரண்டி ஆட்டிறைச்சி கூடிவிட்டது.

   பன்னிரெண்டரை முதல் மூன்றரை மணி வரை வாசித்தேன்.இடையில் லுகர் தொழுகைக்கு மட்டும் பிரேக். பின்னர் ஒரு குட்டி தூக்கம் நான்கே முக்காலுக்கு விழிப்பு. நான்கு மணிக்கு யோகா கற்று கொள்ள வருகிறேன் என்று சொன்ன அஸ்பாக் பாயை வரவேண்டாம் என சொல்லியிருந்தேன்.

உடல் குளித்து அஸர் தொழுதபின் ஆறு மணிவரை மீண்டும் வாசிப்பு. உணவுக்கூடம் சென்று ஒரு பால் கலந்த கருப்பட்டி காப்பி மட்டும் குடித்து வந்தேன். இங்கே மக்ரிப் தொழுகைக்கான நேரம் ஏழு மணி தாண்டியபின். மீண்டும் அமர்ந்து 478 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை வாசித்து முடிக்கையில் மணி பத்தை நெருங்கிவிட்டது. ஒரே நாளில் முந்நூறு பக்கங்களுக்கு மேல் வாசித்தது என் வாழ் நாள் சாதனை. நாவலில் கேலியும்,பகடியும் மட்டும் இருந்ததால் அவ்வப்போது கொஞ்சம் சிரித்தது மட்டுமே மிச்சம். சில கதைகள் வாசித்த பின் தொடர்ந்து சில நாட்கள் நம் நினைவிலேயே நிற்கும். அப்படி எதுவும் கிடைக்காத மூத்த எழுத்தாளர் ஒருவரின் நாவல் அது.

   இஷா தொழுகைக்குப்பின் அமர்ந்து கப்பலில் உணவு எனும் ஒரு கட்டுரையை எழுதி முடிக்கையில் பன்னிரெண்டை தாண்டி இருந்தது. இரவு ஒரு மணிக்கு தூங்கியிருப்பேன். 

   கப்பல் காரனுக்கு இப்படி ஞாயிறுகள் கிடைப்பதே இல்லை. நேற்று ஹாப்பி சண்டே தான்.

நாஞ்சில் ஹமீது,

02 september 2024.

  

Wednesday 11 September 2024

கப்பலில் உணவு.

 

கப்பலில் உணவு குறித்து சில பதிவுகள் விரிவாக எழுதியுள்ளேன்.அதில் மிக முக்கியமானது கடந்த ஆண்டு எழுதிய ஷோர் லீவ் எனும் கட்டுரைகள். நான் இப்போது ஞாயிறுகளில் காலை ஒரு கருப்பட்டி சுக்கு காப்பி போட்டு குடித்தால் மதியம் பிரியாணிக்குப்பின் உணவுண்பதில்லை. மற்ற தினங்களில் மதியம் பெரும்பாலும் சாதம் சாப்பிடுவதில்லை மீன் அல்லது இறைச்சியுடன் சாலட் மட்டும். இரவுணவு சூப்,இரு சப்பாத்தி.ஆனாலும் வயிறு தள்ளி எடை கூடியிருக்கிறது.நான்கு கிலோ கூடி அறுபத்தி ஏழாக இருக்கிறது.


    இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டு இந்த நிறுவனத்தில் சேர்ந்தது முதல் கார் ஏற்றும் கப்பல்களில் பத்து ஆண்டுகள் வேலை செய்தேன். 2010 ஆம் ஆண்டில் பணியிலிருக்கும் போது ஆந்திராவின் ராஜுவின் மனைவி ஹைமா மகளுடன் கப்பலுக்கு வந்திருந்தாள். அந்த கப்பலில் இருந்தவர் கேரளாவின் கிருஷ்ணா. நன்றாக சமைப்பார். ஹைமா கேட்டாள் “நீங்கெல்லாம் எப்டியாக்கும் இந்த சாப்பாட திங்குதியோ”?என. அவள் கப்பலுக்கு வந்து ஒரு மாதத்தில் சொன்னாள். ஊறுகாய் குப்பி மட்டும் இல்லையென்றால் நான் பட்டினிதான் இருக்க வேண்டுமென.

  அப்போது அங்கே எல்,பி.ஜி கப்பல்களிலிருந்து பணிக்கு வருபவர்கள் எல்.பி.ஜி கப்பல்களில் சாப்பாடு பிரமாதம் என்றார்கள். நான் 2016 இல் எல்பிஜி கப்பலுக்கு பணிக்கு வந்தேன். முதல் கப்பலிலேயே தெரிந்தது இங்குள்ள சாப்பாடு எப்படி என.

  கப்பலில் சாப்பாடு சமையல்காரர் மற்றும் காப்டனை சார்ந்தது.சில திறமையான சமையல்காரர்கள் கூட மோசமாக சமைப்பார்கள். சில நேரங்களில் உணவு பொருட்கள் தட்டுப்பாடும் ஒரு காரணம். காப்டன் ஆக வருபவர்களுக்கும் கேட்டரிங் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும் என நான் நினைப்பதுண்டு.


   இப்போதெல்லாம் பெரும்பாலும் நான்கைந்து நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் கப்பலில் இருக்கிறார்கள். அனைவரையும் சமையற்காரர் திருப்தி படுத்த முடியாது என்பது உண்மையும் கூட.

  கப்பலில் மொத்தமிருக்கும் இருபது முதல் இருபத்தியைந்து பேரில் ஐந்து நாட்டவர் இருந்தால் சமையல்காரனுக்கு சிரமம்தான்.ஒரு சமையல்காரரர் உதவிக்கு ஒரு மெஸ்மேன் மட்டுமே. அனைவருக்கும் மூன்று வேளையும் சமைப்பது சமையல்காரர். மெஸ்மேன் வெங்காயம்,பூண்டு உரித்து,சாலட் நறுக்குவதோடு சரி. மெஸ்மேனுக்கு வேறு நிறைய பணிகள் உண்டு.

  இப்போது நான் இருக்கும் கப்பல் எல்.என்.ஜி வகையை சார்ந்தது இங்கே முதன்மை சமையர்காரர்.இரண்டாம் சமையல்காரர் ஒரு மெஸ்மேனும் உண்டு. காப்டனும்,முதன்மை இஞ்சினியரும் கொரியர்கள். கப்பல் கொரிய நாட்டுக்கு சொந்தமான நிறுவனம். அதனால் அவர்கள் உத்தரவு அது.

   இங்கு மொத்தமுள்ள 29 பணியாளர்களில் மலேசியா,பங்களாதேஷ்,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ்,இலங்கை,இந்தியர்கள் என அதிகாரிகளும்,பணியாளர்களும் உள்ளோம். பிலிப்பைன்ஸ் நாட்டவர் எண்ணிக்கையில் அதிகம் பத்துபேர் அதில் இரண்டாம் சமையல்காரனும்,மெஸ்மேனும் அடக்கம். கொரியர்களுக்கும், பிலிப்பினோ களுக்கும் இரண்டாம் சமையல்காரர் சமைப்பார்.அதையே மலேசிய,இந்தோனேசியர்களும் விரும்பி உண்பார்கள். 

  இந்தியர்கள் மொத்தம் எட்டுபேர். தலைமை சமையற்காரருக்கு மிக குறைவான வேலை.ஆனால் இங்கே கடந்த ஆறு மாதமாக ஒரே விதமாக சமைக்கிறார். சமையல்காரர் கோவாவின் ரைமுண்டோ இருபத்தியைந்து ஆண்டு அனுபவமுள்ளவர்.

   திங்கள் காலை போகா – அவல் தாளித்து மஞ்சளும் கடலையும் சேர்த்தது. மதியம். சாதம்-பருப்பு-கூட்டு –பொரித்த மீன், சாலட்.இரவு சூப் சப்பாத்தி-கூட்டு-கோழி குழம்பு.

செவ்வாய் காலை ஊத்தப்பம்- சட்னி.மதியம் சாதம்-பருப்பு-கூட்டு-பொரித்த மீன் சாலட் . இரவு சூப் சப்பாத்தி-கூட்டு-கோழி குழம்பு வடிவம் மாறியது.

புதன் காலை-உள்ளி வடை.மதியம் சாதம்-பருப்பு-கூட்டு-மாட்டிறைச்சி குழம்பு சாலட். இரவு சூப் சப்பாத்தி-கூட்டு-கோழிக்கறி.

 வியாழன் காலை சீஸ் பிரட்- மதியம் சாதம்-பருப்பு-கூட்டு-பொரித்த மீன் சாலட் . இரவு சூப்,சப்பாத்தி-கூட்டு-கோழி குழம்பு வடிவம் மாறியது.

வெள்ளி காலை-உப்புமா மதியம் சாதம்-பருப்பு-கூட்டு-ஆட்டிறைச்சி சாலட் . இரவு சூப் சப்பாத்தி-கூட்டு-கோழி குழம்பு வடிவம் மாறியது.

சனி காலை-இட்டலி சாம்பார் மதியம்- சாதம்-பருப்பு-கூட்டு-பொரித்த மீன் சாலட்.இரவு சூப் பீப் ஸ்டேக்,சிக்கன் ஸ்டேக்,ப்ரோக்கொலி,கார்லிக் பிரட்.

ஞாயிறு காலை- நூடுல்ஸ், மதியம் சிக்கன் பிரியாணி இரவில் பிட்ஸா அல்லது பர்கர் ஐஸ் கிரீம்.

 பிலிப்பினோ விதவிதமாக சமைக்கிறான். பெரும்பாலும் அதில் பன்றி கறியும்,மாட்டிறைச்சியும் இருப்பதால் இந்தியர்கள் தொடுவதில்லை.கணவாய்,இறால் இருக்கும் நாட்களில் நானும்,போசனும் எடுத்துக்கொள்வோம்.

ஆறு மாதமாக மாறாத ஒரே மாதிரியான உணவு. உணவு மேஜையில் எப்போதும் ஒரே புலப்பம். நான் ஒரு முறை சொல்லி இரவுணவில் ஆலு பரோட்டா செய்தார். போசன் பூரி செய்ய சொன்னபோது எல்லோருக்கும் சேர்த்து செய்வது இயலாது என்றார். சோம்ராஜ் தோசை வேண்டுமென கேட்டான் வாய்ப்பே இல்லையென மறுத்துவிட்டார் ரைமுண்டோ. இந்த கப்பலில் ரைமுண்டோ எட்டு பேருக்கு மட்டும் சமைத்தால் போதும்.

 நான் ஜூன் மாதம் ஒருநாள் ரசம் வைத்து கேட்டேன். புதிதாய் கொத்துமல்லி தளையும்,தக்காளியும் வரட்டும் என்றார். ஜூலை ஐந்தாம் தேதி புதிதாய் பொருட்கள் வந்து தீர்ந்தபின்பும் ரசம் வரவில்லை. மீண்டும் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் உணவுப்பொருட்கள் நிறைத்தபோது மீண்டும் நினைவூட்டியபோது ஒரு முறை ரசம் வந்தது நல்ல சுவையும் கூட. “இது ஆந்திரா ரசம்” என்றார். மூத்த அதிகாரிகள் யாரும் இந்தியராக இல்லாததும் எங்களுக்கு ஒரு குறை.கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவுணவில் சப்ப்பாத்தியுடன்,சிக்கன் தந்தூரியும்,உருளைக்கிழங்கு-காலி பிளவரும் செயதிருந்தார். “ரெண்டும் ட்ரையா இருக்கு சப்பாத்தி கூட எப்டி சாப்டது” என சோம்ராஜ் கேட்டான். போசன் “எல்லாரும் சேர்ந்து எழுதி தந்தா நான் முதன்மை அதிகாரியிடம் கொடுக்கிறேன்” என்றார்.

    இன்னுமொருமுறை அவரிடம் சொல்வோம். ஆறு மாதமாக சாப்பாடு ஒரே மாதிரி இருக்கிறது என சொன்னேன். “செரி அன்பாய் சொல்லி பார்ப்போம்” என்றார் போசன். காலையில் அவர் ரைமுண்டோவிடம் சொல்லிவிட்டு என்னிடமும் சொல்ல சொன்னார். “ஒரே மாதிரி சாப்பாடு இருக்கு,எல்லாருக்கும் மெனு மனப்பாடம் ஆயிட்டு கொஞ்சம் சபல் பண்ணுங்க” என்றேன். ‘யார் சொன்னது,யார் சொன்னது”எனக்கேட்டார்.எல்லாரும் சேர்ந்து சொன்னது என சொன்னேன்.

 புதன்கிழமை காலை உள்ளி வடைக்கு பதிலாக பிரஞ்ச டோஸ்ட், மதியம் மீன் குழம்பும் செய்தார். வியாழன் காலை ஓட்-மீல் மதியம் லாம்ப் புதிய சுவையில் செய்தார்.

வெள்ளிக்கிழமை காலை மெது வடை-சாம்பார் மதியம் மாட்டு வால் ரோஸ்ட் செய்தார்.புதனும்,சனியும், மாலையில் பிறந்த நாள் பார்ட்டி சிறப்பு உணவுகள் இருந்தது.உணவின் வகைகளும் சுவையும் மாறியிருந்தது.

 சோம்ராஜ் சொன்னான் எல்லாம் “எல்லாம் தெரியும் இருந்தாலும் குழு மடி அவனுக்கு” என.


  நாஞ்சில் ஹமீது.

01 septemper 2024.

sunitashahul@gmil.com.

கலைந்த சிங்கை உறசாகம். கப்பல் சைனாவின் துறைமுகத்தில்

    கரையணையும்போது ஆய்வாளர் ஒருவர் வருகிறார் எனும் தகவலை எங்கள் நிறுவனம் உறுதி செய்தது. மூன்று மாதத்திற்கு முன்பு இதே போல் ஒரு ஆய்வை முடித்திருந்தது. அந்த சான்றிதழ் ஆறு மாதம் செல்லுபடியாகும். (vetting inspection) இவ்வாறு கப்பல் நிறுவனமே மூன்றாவது நபரால் ஆய்வு செய்து கப்பல் சரக்கு ஏற்ற தகுதியாக இருக்கிறது என  சான்றளித்தால் தான் சரக்கு நிறுவனங்கள் கப்பலை வாடைகைக்கு எடுக்கும்.

  மேலும் சீன துறைமுக அதிகாரிகள் இங்கு வரும் கப்பல்களை ஆய்வு செய்வது கொஞ்சம் கடுமையாக இருக்கும் அதையும் ஏதிர்பார்த்தே கப்பலில் பணிகள் நடந்துகொண்டிருந்தது.

    டெக்கில் உள்ள பராமரிப்பு பணிகளில் வெற்றிட தொட்டிகளின் காற்று வெளியேறும் மூடிகளின் கவர்களை சரி செய்ய இயலாமல் சிலவற்றை புதிதாய் செய்து மாட்டினேன். காஸ் மோட்டார் அறை,கம்ப்ரசர் அறைகளில் பணியேதும் இல்லை. முதன்மை அதிகாரி ஹோ கூலாக இருந்தார். 

துறைமுகம் செல்வதற்கு இரு தினங்கள் முன்பு சில தொட்டிகளில் பராமரிப்பு செய்த போது சரி செய்யவே முடியாமல் போன ஒன்றரை அடி வட்ட வடிவ இரும்பு மூடிகளை கொண்டு வந்தனர். இரு தினங்களில் அதையும் புதிதாய் செய்து கொடுத்தேன்.

    துறைமுகம் வந்த நாள் காலை முதலே பணி அதிகரித்துவிட்டது. எட்டு மணிக்கு டெக்கில் சென்று சரக்கு கொடுக்கும் குழாய்களில் ஒன்றில் ரிடியுசர் பொருத்த வேண்டியதாயிற்று. கடும் வெப்பம் வியர்வையில் நனைந்த ஆடைகளை மாற்ற ஒன்பதரைக்கு வந்து அறைக்கு வந்தேன். தலேர் சிங் சாயா போட்டார். அதை கையில் வாங்கியதும் மைக்கில் ஸ்டேஷன் செல்லும் அறிவிப்பு வந்தது.

      பதினொரு மணிக்கு கரையணைய தொடங்கி முன்பும் பின்பும் எட்டு வீதம் பதினாறு கயிறுகளால் கப்பலை கட்டிவைத்தோம்.சரக்கு இறக்குவதற்கான ஆயத்தங்கள் துவங்கியது. கிடைத்த சிறு இடைவேளையில் நான் வந்து உணவுண்டு சென்றேன்.

 மாலையில் முதன்மை இஞ்சினியர் ஊருக்கு செல்வதற்காக வந்தவரை கண்டு கைகுலுக்கி விடையளித்தபோது. கப்பலின் மேனேஜர் வருவதாக சொன்னார். அவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வந்தாக வேண்டிய கட்டாயம். மூன்று மாதங்களுக்கு முன் கப்பல் இந்தியாவில் இருந்தபோது வந்து சென்றிருந்தார். இப்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வருவது கப்பலில் ஒரு ஆச்சரியத்தை தந்தபோதும் நைஜீரியாவின் விபத்து,நடுக்கடலில் கப்பல் ப்ரேக் டவுன் போன்றவற்றை விசாரிக்க வருகிறார் என நினைத்தோம். 

  ஆய்வாளர் வந்த சிறிது நேரத்தில் கோலாலம்பூர் அலுவலகத்தில் இருந்து மேலாளர் ஹர்ஷ் மார்வாவும் வந்தார்.

   டெர்மினலின் குழாய்களை சரக்கு தொட்டி வரை மெதுவாக குளிரவைத்து  சரக்கு கொடுக்க துவங்கி அது முழுமையடையும் போது இரவு எட்டு மணிக்கு மேலாகியது.என் பணி அத்துடன் முடிந்தது. அறைக்கு வந்து குளித்து எட்டரை மணிக்கு சுடு கஞ்சியும் பொரித்த மீனும் உண்டேன்.இரவு பன்னிரெண்டரைக்கு மேல் படுத்தேன். 

  அதிகாலை ஆறரை மணிக்கி காஸ் இன்ஜினியர் அருண் அழைத்தார். சரக்கு தொட்டிகள் முடியும் தருவாயை எட்டியிருந்தது.சரக்கு நிறுவனம் இங்கே முழு எல்.என்.ஜி. திரவத்தையும் வழித்து கொடுக்க உத்தரவிட்டிருந்தது. அதனால் சரக்கு நிறுவனம் அடுத்து கப்பலை சரக்கு நிறைக்க துறைமுகம் அனுப்பவில்லை என உறுதியானது. கப்பல் ஓட வேண்டும் என்றால் செல்ல வேண்டிய  துறைமுகத்தின் தூரத்தை கணக்கிட்டு வேண்டிய திரவத்தை வைக்க சொல்வார்கள்.ஆய்வாளர் ஆய்வை முடித்து இரவிலேயே சென்றுவிட்டதாக இரவு பணியில் இருந்த பிரையன் சொன்னான்.

 ஸ்பெரே பம்ப்களை இயக்கி சரக்கு தொட்டிகளின் அடி மட்டத்திலிருந்து  அனைத்தையும் டெர்மினலுக்கு கொடுக்க தொடங்கினோம். எட்டு மணிக்கு அடுமனை வந்தபோது. ரைமுண்டோ கேட்டார் “நியூஸ் கிடச்சதா” என. என்ன என கேட்டேன். சிங்கபூரிலிருந்து ஆறு பேர் ஊருக்கு செல்கிறோம் பெயர்கள் வந்துள்ளது என்றார்.

   எனக்கு இன்றோடு ஆறு மாதம் முடிகிறது ஏழு மாத பணி ஒப்பந்தம்.சுனிதா கடந்த வாரம் கேட்டாள் வீடு வேலை முக்கியமான கட்டத்துக்கு வந்துட்டு இனி ஒரு ஆள் எப்பவும் சைட்ல நிக்கணும் நீங்கோ எப்ப வாறியோ என. வீடு கட்ட பணமும் நிறைய வேண்டும். ஊருக்கு போய்விட்டால் வருமானம் நின்றுவிடும். அதனால் நான் கிடைக்கும் நாட்கள் வரை கப்பலில் இருப்பது என்ற முடிவில் இருந்தேன்.

    பெயர்கள் வந்துவிட்டால் வீட்டுக்கு போக வேண்டியது தான் என ரைமுண்டோ விடம் சொன்னேன்.அது ஒரு தீடீர் செய்தியாக இருந்தது. ஆகஸ்ட் முப்பதாம் தேதி கப்பல் சிங்கையை அடையும். சோம்ராஜ் என்னிடம் சொன்னான். “உனக்கு தெரியும்லா பைசா வேணுமுன்னு, ரெண்டு மாசம் கூட இருக்க வேண்டி லெட்டர் குடுத்துருக்க வேண்டியது தானே, ரீலிவர் ரெடி இனி ஒன்னும் செய்ய முடியாது.வீட்டு வேல நடக்கத பாக்கவும் ஒரு ஆளு வேணுமுல்லா எல்லாம் நல்லதுக்குதான்” என்றான்.

 காலை உணவுண்டு கப்பல் மேனஜர் நடத்திய மீட்டிங்கில் கலந்துகொண்டு பணிக்கு சென்றேன். சரக்கு கொடுப்பது முழுமையாக முடிந்து திரவ குழாய்களை கழற்றினர். வாயு குழாயை ஒரு மணிக்கு கழற்ற வருவதாக சீனர்கள் சொல்லி சென்றனர். இருபது நிமிடங்கள் இருந்தது ஒரு மணிக்கு. 

அறைக்கு சென்று ஈரமான உடைகளை மாற்றிவிட்டு  உணவுக்கூடம் வந்து. கொஞ்சம் சாலடும்,மட்டன் கறியும்,ஒரு சிறு கரண்டி பாசுமதி சாதமும் எடுத்து விட்டு அமர்ந்தேன். ரேடியோவில் அழைத்தார்கள் உடனே வா என.

 அதற்குள் சீனர்கள் குழாயை கழற்ற வந்துவிட்டிருந்தனர். இரண்டு மணிக்கு பைலட் வருவது உறுதியாகிஇருந்தது. சாலடை மட்டும் வாயில் திணித்து விட்டு ஓடினேன். வாயு குழாயை கழட்டி முடியும்போது இரண்டு மணிக்கு இருபது நிமிடங்கள் இருந்தது. சாப்பிடலாமா,கப்பல் கரையை விட்டபின் குளித்து ஆடை மாற்றி சாப்பிடலாமா எனும் குழப்பத்திலேயே உணவுக்கூடம் வந்து அமர்ந்தேன். 

  அப்போதே  மைக்கில் அறிவித்தார்கள் ஸ்டேஷன் என எழுந்து சென்றேன். கயிறுகளை அவிழ்த்து கப்பல் கரையை விட்டு விலகியபோது மணி மூன்றை நெருங்கியிருந்தது. அறைக்கு வந்து குளித்து தொழுதுவிட்டு இரவுணவுக்கு செல்லலாம் என படுத்துவிட்டேன். தூக்கமே வரவில்லை ஐந்து மணிக்கு தூங்கி ஆறு மணிக்கு எழுந்தபோது அடுத்த தொழுகைக்கான நேரம் தாண்டியிருந்தது. 

   அறைக்கதவை எஞ்சின்பிட்டர் பாட்டில் தட்டிக்கொண்டிருந்தார். “ஏன் சாப்பிட வரவில்லை,மதியமும் நீ சாப்பிடவில்லை” எனக்கேட்டான். அதற்குள் ஊர் செல்லும் கவலையில் ஷாகுல் சாப்பிடாமல் இருக்கிறான் என பரப்பிவிட்டார்கள். இரண்டாம் அதிகாரி குடியிருப்பில் ஷாகுல்,ஷாகுல் என சப்தமாக அழைப்பதும் எனக்கு கேட்டது.

  சிங்கப்பூரில் விஷ்ணுபுர சகோதரி விஜி அழைத்துக்கொண்டே இருக்கிறாள். “இக்கா வீட்டுக்கு வா,வா” என.அவளிடம் வெள்ளிக்கிழமை சிங்கையில் இறங்குவது குறித்து சொல்லிவிட்டு இரு தினங்கள் வீட்டில் தங்க முடியுமா எனக்கேட்டு செய்தி அனுப்பினேன். வார இறுதி வீட்டில் தங்கிவிட்டு வெளியில் செல்லலாம் இக்கா வந்துவிடு என் மகள்களுக்கு உன்னை காண்பித்து கொடுக்கவேண்டும் என உற்சாகமாகி விட்டாள். சிங்கையில் இரு தினங்கள் தங்கி செல்வது என நானும் முடிவு செய்தேன்.

     உணவுகூடம் சென்றேன்  போசன்,தலேர்,சோம்ராஜ்,பாட்டில் அமர்ந்திருந்தனர். போசன் சொன்னார் “ சைன் ஆப் கேன்சல்” என.

  சோம்ராஜ் “ஷாகுல் ஜி முதல்ல சாப்பிடு இன்னும் ரெண்டு மாசம் கழிச்சி தான் நீ போவா” என்றான்.

   நாஞ்சில் ஹமீது,

23 aug 2024.

sunitashahul@gmail.com

Monday 2 September 2024

கரை சேர தத்தளித்த கப்பல்

 கடந்த ஜூன் பத்தொன்பதாம் தேதி காலை இந்தியாவின் குஜராத்தின் தகேஜ் துறைமுகத்திலிருந்து  ஆப்ரிக்காவின் நைஜீரியாவை நோக்கி செல்ல தகவல் வந்தபோது கப்பல் பணியாளர் அனைவரும் கொஞ்சம் ஆசுவாசம் ஆனோம்.

   துபாய்க்கும் இந்தியாவிற்கும் நாற்பது நாட்களில் நான்கு முறை போய்வந்ததால் ஏற்பட்ட சலிப்பு. நீண்ட பயணத்தில் கேப்டவுனில் நிறுத்தி மிகுந்த சிரமத்துடன் உணவுப்பொருட்களும் உதிரி பாகங்களும் ஏற்றிவிட்டு நைஜீரியாவின் போனி துறைமுகம் சென்று சேர்கையில் ஜூலை பதினைந்தாம் தேதி ஆகிவிட்டது.

  இங்கு சரக்கு நிறைக்கும் பணி துவங்கியது. நைஜீரியா எண்ணெய் வளம் மிக்க ஏழை நாடு. கப்பல் கரையணைந்த பின்பு குடியுரிமை,சுங்க அதிகாரிகள்   எங்கள் உணவு பொருட்களில் பெரும்பாலனவற்றை அவர்கள் கொண்டு வந்த பைகளில் அள்ளிசென்றனர். 

  அதன் பின் தான் கப்பலுக்கு சரக்கு நிறைக்க அனுமதி வழங்கப்பட்டது.அதன் பின் வந்த சுகாதார அதிகாரிகள் இன்னும் கொஞ்சம் பொருட்களை அள்ளி சென்றனர். மேலும் போதைப்பொருள் தடுப்பு (இங்கிருந்துதான் போதை பொருட்கள் கடத்தல் நடக்கிறது) துறை,மாசுக்கட்டுபாட்டு வாரியம் என பெயர் கேட்டிராத துறையை சார்ந்த அதிகாரிகள் வந்துகொண்டே இருந்தனர் நாள் முழுவதும். கப்பலின் காபி பாட்டில்கள்,எண்ணெய் புட்டிகள் பிஸ்கட்டுகள்,கெட்சப் என சில வகைகள் ஒன்று விடாமல் எடுத்து விட்டனர்.சிலர் இறைச்சிகளையும் பாலீத்தீன் பைகளில் கட்டி எடுத்துச்சென்றனர்.இறுதியாக கப்பலில் பணிக்கு வந்த கார்கோ சர்வேயர் “எனக்க பிள்ளையள்களுக்கு கொஞ்சம் சாதனம் வேணும்”என கேட்டு வாங்கி சென்றார்.

   இந்தியாவிலும் இப்படி நடக்கும் சுங்க அதிகாரி உடன் அழைத்து வரும் போலிஸ் காரர் ஒரு பையை வைத்திருப்பார். அதில் பொருட்களை நிறைத்து செல்வார்கள்.இங்கே கொஞ்சம் அதிகம்.

  சமையற்காரர் ரைமுண்டோவிடம் கேட்டேன். எவ்வளவு பொருட்கள் போயிருக்கும் எனகேட்டேன். “ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்கள்” என்றார். இதில் பெரும்பகுதியை  சரக்கு ஏற்றி,இறக்கும் நிறுவனத்தில் பெயரில் கணக்கு சொல்லிவிடுவார்கள். கப்பல் காரனுக்கு ஒரு நாள் உணவுக்கான தொகை ஒன்பதரை டாலர் மட்டுமே. தரையில் வாங்கியா பொருள் கப்பல் வந்து சேர்கையில் மும்மடங்கு விலை கொடுக்க வேண்டும்.அப்படி பார்கையில் ஒரு நாள் உணவுக்கான தொகை மிக குறைவுதான்.

    இந்திய துறைமுகத்தில் சரக்கு கொடுப்பதாக இருந்தது.சரக்கு நிறைத்து முடியும்போது கப்பல் கப்பலை சைனாவுக்கு கொண்டுபோக வேண்டும் எத்தனை நாள் ஆகும் என சரக்கை கையாளும் நிறுவனம் கேட்டது. பணியாளர் மாற்றம் மற்றும் கப்பலில் டெக்னிசியங்கள் நால்வர் நமிபியாவில் ஏறி போர்ட் லூயிஸில் இறங்க வேண்டும்,சீப் இஞ்சினியர் ஒருவர் கேப்டவுனில் ஏற வேண்டும். பின்னர் சிங்கப்பூரில் எட்டு மணிநேரம் நிறுத்தி உணவும் உதிரிபாகங்களும் ஏற்ற வேண்டும்.எல்லாம் கூட்டி கழித்து ஆகஸ்ட் மாதம் இருபத்திஒன்றாம் தேதி கப்பலை சைனாவில் கொண்டு சேர்ப்பேன் என்றார் கேப்டன்.

         இருபதாம் தேதி வந்தாக வேண்டும் என சரக்கு நிறுவனம் கட்டளையிட்டது.ஜூலை பதினாறாம் நள்ளிரவில் சரக்கு நிறைக்கும் பணி முடிந்து சரக்கு குழாய்கள் கப்பலிலிருந்து கழற்றபட்டது. கப்பலின் சரக்கு தொட்டியில் இருக்கும் திரவம் வாயுவாக மாறிக்கொண்டேயிருக்கும் அதை வைத்து தான் கப்பலின் இஞ்சின் இயக்கப்படும். அதன் பின்பும் எஞ்சிய வாயு எரிக்கப்படும். துறைமுகங்களில் அவ்வாறு எரிப்பதும், ஜெனரேட்டர் இயந்திரங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்துவதும் தடைசெய்யபட்டுள்ளது.

   அதனால் ஆவியாக மாறும் வாயுவை திருப்பி டெர்மினலுக்கே கொடுப்போம் அவர்கள் அதை தூரத்தில் எரிப்பார்கள். அவ்வாறு வாயு திரும்பி செல்லும் ஒரு குழாய் மட்டும் கப்பலுடன் பொருத்தபட்டிருந்தது. பதினேழாம் தேதி காலை ஏழு மணிக்கு கப்பல் புறப்படும் நேரம். அதிகாலை ஆறு மணிக்கு குழாயை அவிழ்க்க வருவதாக சொல்லி சென்றார்கள் டெர்மினல் பணியாளர்கள் அப்துல்லாவும்,சார்லசும்.

  நான் நள்ளிரவு அறைக்கு வந்து தூங்கிவிட்டேன். இருநாட்கள் தொடர் வேலையால் நல்ல களைப்பு. தேவைப்படும்போது அழைப்பதாக சொன்னார். ரேடியோவை அணைத்து விட்டு தூங்கினேன். காலை கண்விழித்தபோது மணி ஏழாகியிருந்தது. யாரும் அதுவரை அழைக்கவில்லை ஏன் கப்பல் புறப்படவில்லை என யோசித்தவாறே படுத்திருந்தேன். காஸ் இன்ஜினியர் போனில் அழைத்தார்.

    அதிகாலை ஐந்தரை மணிக்கு கப்பலின் இயந்திரத்தை இயக்கி சோதனை செய்யும்போது கப்பல் ஐந்து  மீட்டர் முன்னால் விலகி சென்றதில் (emergency shutdown system )ESD தானாகவே இயங்கி கப்பலுடன் பொருத்தியிருந்த குழாய் விடுவிக்கப்பட்டது. கரையிலிருந்து கப்பலுக்குள் வருவதற்கு பொருத்தியிருந்த தற்காலிக ஏணியும், கப்பலின் கைப்பிடி குழாய்களும் சேதமடைந்தது.

     துறை முகத்தில் சரக்கு ஏற்ற அல்லது இறக்க குழாய்கள் கப்பலுடன் இணைக்கபட்டிருக்கும். அப்போது ஏதாவது காரணத்தால் கப்பல் ஒரு மீட்டருக்குமேல் முன்னாலோ பின்னாலோ சென்றால் இந்த ESD தானியங்கி (haydralic system)முறையில் வால்வுகள் அடைக்கப்பட்டு குழாய்கள் விலகிவிடும். அவ்வாறு இல்லையெனில் குழாய்கள் உடைந்து  மைனஸ் 159 பாகையில் திரவம் கொட்டி தீ பற்றிகொள்ளுதல்,தவிர்க்கமுடியாத உயிர்சேதம்,பொருட்சேதம் ஏற்படும்.

   இங்கு கப்பல் விலகி சென்றபோது ESD மிக சரியாக வேலைசெய்தது. கப்பல் கரையிலிருந்து விடுபட்டது.அதனால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது. ESD  முறையில் குழாய் விலகி சென்றாலும் வால்வுகள் மூடிய டெர்மினல் குழாயின் ஒரு சிறு பகுதி மட்டும் கப்பலுடன் இருக்கும்.

   காலையில் நான் ஏன் கப்பல் இன்னும் புறப்படவில்லை என யோசித்துக்கொண்டே டெக்கில் வரும்போது. கப்பலின் சிறு சேதங்களையும் டெர்மினலின் குழாய் ஆகாயத்தில் இருப்பதையும் கண்டபோது ESD இயங்கியிருப்பது புரிந்தது.

    டெர்மினல் பணியாளர்கள்,அதிகாரிகள் என அடுத்த இருமணி நேரம் விபத்து குறித்து விசாரணை. பின்னர் கப்பலுடன் ஒட்டியிருந்த சிறு குழாயை டெர்மினல் குழாயுடன் இணைக்கும் ஆயத்தங்கள் தொடங்கின. இரு பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து ஆறு மணி நேரம் பணி செய்து இணைத்தனர். மழை நிற்காமல் தூறிக்கொண்டேஇருந்தது. பின்னர் குழாய் முழுமையாக விடுவிக்கப்பட்டு. கப்பல் மாலை ஐந்து மணிக்கு மேல் புறப்பட்ட்டது.

  கப்பலில் நடக்கும் பயிற்சிகளின் போது ESD எப்படி இயக்குவது. அது எப்படி வேலை செய்யும் என விளக்குவார்கள்.இதுவரை கண்டதில்லை. இப்போது அனுபவமாகியது. சிஸ்டம்ஸ் சரியாக வேலை செய்வதும் உறுதியாகியது எனக்கொரு நல்ல அனுபவம்தான்.

   காலையில் புறப்படவேண்டிய கப்பல் பத்து மணிநேரம் தாமதமானது. மீண்டும் சரக்கு நிறுவனம் காப்டனிடம் எதற்கும் கப்பலை எங்கேயும் நிறுத்தக்கூடாது ஆகஸ்ட் இருபதாம் கப்பலை சைனாவில் கொண்டு சேர்த்தால்தான் சரக்கு இறக்க முடியும். இல்லையெனில் கார்கோவை வாங்க மாட்டார்கள் என அழுத்தம் கொடுத்தது.

 நான் இரண்டாம் இஞ்சினியரிடம் சொன்னேன். “கப்பலுக்கு ஸ்பீட கூட்ட ஒரு ஐடியா இருக்கு”

“ஷாகுல் பிளீஸ் சொல்லு” என்றார்.

 “இந்த போர்த் இஞ்சினியர் தும்பாக்க நைட் டூட்டி பாக்க சொல்லணும், ஜிம்ல உள்ள திரட்மில்ல கப்பலுக்க பொறத்த போட்டு,இவன் அதுல நின்னு கப்பல தள்ளட்டு” என்றேன். சிரித்துவிட்டார்.

   காப்டன் 13.4knots வேகத்தில் வந்தால் இருபதாம் தேதி மாலையிலும் 12.8knots வேகத்தில் வந்தால் 21தேதியும் வர முடியும் என்றார். கப்பல் புறப்பட்ட சில நாட்கள் எதிர்க்காற்றும், அலையும் சேர்ந்து கப்பலின் வேகத்தை குறைத்தது. பின்னர் நீரோட்டமும்,காற்றும் கப்பலின் போக்குக்கு சாதகமாக அமைந்து  கப்பலின் வேகம் பதினான்கு நாட்களை தாண்டியது.

“இப்டி போனா பத்தொன்பதாம் தேதியே போய் சேந்துரும்” என்றான் இரண்டாம் அதிகாரி ஹபிசி பின்.

   பதினொன்றாவது நாள் யாரும் எதிர்பாராத ஆச்சரியம் காத்திருந்தது. நள்ளிரவு கப்பல் பயங்கரமாக சில நிமிடங்கள் ஆடியது. பொருட்கள் அங்குமிங்கும் உருண்டோடி சப்தம் எழுப்பி அடங்கியது. கப்பல் இயந்திரம் நின்றுவிட்டால் தான் இப்படியாகும். சில நிமிடங்களில் ஆட்டம் நின்றதால் சிறுநீர் கழித்துவிட்டு தூங்கிவிட்டேன் கடிகாரம் அப்போது அதிகாலை இரண்டு மணி என காட்டியது.

         காலை உணவுகூடத்தில் போசன் “கப்பல் போனது போல தெரியல,நிக்கது மாதிரி இருக்கு”என்றார்.

  காலை கூட்டத்தில் கப்பலின் புரோப்பல்லரை இயக்கும் இரு மோட்டாரில் ஒன்று இயங்கவில்லை. அதனால் கப்பலின் ஆர்.பி,எம். நார்பத்தியைந்துக்கு மேல் இயங்க மறுக்கிறது.எனவே கப்பலின் வேகம் இப்போது 8 knots  ஆக குறைந்து விட்டது. நாள்ளிரவு சரியாக கப்பல் ஒரு மணிக்கு தானாகவே நின்றுவிட்டது.காலை ஆறு மணிவரை முயற்சித்தும் ஒன்றும் எங்களுக்கு புரியவில்லை என்றார் இரண்டாம் இஞ்சினியர்.

(இந்த கப்பலில் இஞ்சின் இல்லை. ஜெனரேட்டர்கள் மட்டுமே நான்கு உள்ளது. அதில் மூன்று கப்பலின் இஞ்சின் அளவுக்கே பெரியது. ஒவ்வொன்றும் 11,860 kw திறன் கொண்டது.ஜெனரேட்டரிலிருந்து வரும் சக்தியால் இரு மோட்டார்கள் இயக்கப்பட்டு, அவை புரோப்பல்லரை சுழற்றி தண்ணீரை தள்ளி கப்பலை நகர்த்தும்)

  இரவில் ஐந்து இன்ஜினியர்களும்,எலக்ட்ரிக்கல் இஞ்சினியரும் இணைந்து பணிசெய்து விட்டு காலையில் தூங்க போயிருக்கும் தகவலை சொன்னார்.மேலும் “கம்பனிக்கு மெசேஜ் அனுப்பியிருக்கோம் அவர்கள் இஞ்சின் தயாரிப்பளர்களை தொடர்புகொண்டு வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி சரி செய்ய முயலவேண்டும்” என்றார்.

   பின்பு இரு தினங்கள் கப்பலை நிறுத்தி தயாரிப்பு நிறுவனம் கேட்ட அளவுகளை வழங்கினார்கள். சிங்கப்பூரில் டெக்னிசியன்கள் இருவர் வந்து சரிசெய்வதாக முடிவானது. சிங்கபூருக்கு பத்தாம் தேதிக்கு பதிலாக பதினைந்தாம் போகும் என முடிவானது.

 ஆனாலும் எழுபது வயதான கொரிய முதன்மை இஞ்சினியர், இந்தோனேசியாவின் எலக்ட்ரிகல் இஞ்சினியர் சுஸ்வாண்டோவுடன் இணைந்து பிரச்சனையை தேடிக்கொண்டிருந்தார். இறுதியாக கண்வெர்டரிலுள்ள ஒரு டயோட் பழுதாகியிருப்பதை சுஸ்வாண்டோ கண்டார். 

   அது சரி செய்யபட்டதும்  கப்பல் பழைய வேகம் பிடித்தது. பதிமூன்று நாட் வேகத்துக்கு மேல் சென்றது.சைனாவின் வடபகுதியில் உள்ள டியாஜின் துறைமுகம் ரத்தாகி. தென்பகுதியில் ஹாங்காங் அருகிலுள்ள சென்ஷேன் துறைமுகம் செல்ல உத்தரவு வந்தது. 

  சிங்கபூரில் கப்பலை நிறுத்தாமல் வேகத்தை குறைத்து உணவுபொருட்களும் கொஞ்சம் உதிரி பாகங்களும் ஏற்றினோம். புதிதாய் முதன்மை இஞ்சினியர் வந்தார். காப்டன் ஓராண்டுக்குப்பின் இறங்கி சென்றார். அவருக்கு பதிலாக வேறு காப்டன் கடந்த மாதம் நைஜீரியாவில் வந்தார். டெக்நீசியன்கள் வருவதும் ரத்தாகியது.

 பயண நாட்கள் குறைந்தால்  பதினட்டாம் தேதியே சென்ஷேன் துறைமுகத்திற்கு நூறு மைல்கள் அருகில் வந்துவிட்டோம். இருபத்தி இரண்டாம் தேதி கரையணைந்தால் போதும் என சரக்கு நிறுவனம் சொன்னதால் நான்கு நாட்கள் இங்கேயே வட்டமடித்து கொண்டிருந்தோம். கடைசியாக 22 ஆம் தேதி காலை பைலட் கப்பலுக்கு வந்தார் மதியம் இரண்டு மணிக்கு பத்திரமாக கப்பலை கட்டினோம்.

    நாஞ்சில் ஹமீது.

           22-aug-2024 

   sunitashahul@gmail.com