Sunday, 27 April 2025

9. தைவானில் 2


என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 2025.



 டெக்கில் ரௌண்ட்சில் இருந்த காப்டன் ஆசுதோஷ் கவுல் பணியிலிருந்த  காஸ் இஞ்சினியர் சதாசிவ்விடம் பிசியா என கேட்டுவிட்டு தோளில் கை போட்டு “இப்படியே ரெண்டு கேள்வி கேட்டுறேன்  

கம்பிரசர் ரூம் ஸ்டார் போர்டு சைடில் சேப்டி செக் லிஸ்ட் எப்ப அப்டட் செய்தாய் எனக்கேட்டவர். தேதி தப்பாக இருக்கிறது சரி பண்ணிக்கோ” என திருத்தியுள்ளார்.

  பன்னிரண்டு மணிக்குமேல் ஓய்வுக்கு வந்து மதிய உணவுக்குபின் தொழுகை முடித்து உறங்க போனேன். நான்கு மணிக்கு பணியிலிருந்த  மூன்றாம் அதிகாரி ராகுல் போனில் அழைத்து. “ஷாகுல் ஜி மேனிபோல்ட் கார்க்கோ லீக்,குயிக்லி கம் டு டெக்” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான். மூன்றரை மணிக்குதான் கார்க்கோ கொடுக்கும் பணி துவங்கியிருக்கிறது.

   ஆடை மாற்றி டெக்கில் சென்றபோது கார்கோ நிருத்தபட்டிருந்தது. கப்பலில் குழாயுடன் டெர்மினலின் குழாயை பொருத்துவார்கள். அதை டெர்மினல் பணியாளர்களே செய்வார்கள். அதில் ஏதாவது பிரச்னை என்றால் நாங்கள் தொடவே கூடாது.டெர்மினல் குழாயில் ஒழுகல்.

  கார்கோ லீக் என டெக் வாட்ச்மேன் சொன்னவுடன் தேவையே இல்லாமல் என்னை அழைத்துவிட்டான் ராகுல். எனது ஓய்வு நேரம் பன்னிரெண்டு  முதல் ஆறு வரை. எமர்ஜென்சி என்றால் என்னை எப்போது வேண்டுமாலும் அழைக்கலாம் தான். இப்போது தேவையே இல்லாத அழைப்பு.டெர்மினல் பணியாளர்கள் வந்து சரிசெய்து கார்கோ முடியும் வரை அங்கிருக்க வேண்டியதாயிற்று. 

முதன்மை அதிகாரி ஒவ்வொரு பம்ப்பாக இயக்கி சீராக வேகத்தை கூட்டினார். எல்லாம் சரியாக போக தொடங்கியது.

  இங்கே கம்ப்ரசரில் வால்வுகளை மாற்ற சிங்கையிலிருந்து டெக்னீசியன் ஒருவர் வருகிறார். அவர் வந்ததும் அவர் செய்யும் பணிக்கு உடனிருக்க வேண்டும். இன்று நீண்ட நாளாக இருக்கும். கிடைக்கும் கொஞ்ச நேர ஓய்வையும் எடுத்துக்கொண்டனர்.

 சமையல்காரர் காப்டன் ஆசுதோஷ் கவுலுக்கு கொடுப்பதற்காக புதிதாய் சாப்பத்திகள் செய்ய தொடங்கினார். “ரெண்டு மாசமா கொரியன்,சைனிஸ் கப்பல்லேயே சுத்திட்டு இருக்கதுனால சப்பாத்திய பாக்கவேயில்லன்னு சொன்னாரு” என்றார். காப்டன் ஆசுதோஷ் கவுல் கப்பலை விட்டு சென்றதை நான் பார்க்கவேயில்லை.

  ஐந்துமணி வாக்கில்  சிங்கை டெக்னீசியன் வந்தார். முதன்மை இஞ்சினியர் என்னை அறிமுகபடுத்தி “உங்களுக்கு வேண்டியது அனைத்தையும் ஷாகுல் தருவார்” எனச்சொன்னார். 


 காஸ் இஞ்சினியர் உரிய வால்வுகளை மூட சொல்லிவிட்டு பணியை தொடங்க சொன்னார்.இரு கம்பிரசர்களில் வால்வுகளை மாற்றினார். புகைப்படங்கள் எடுத்து முதன்மை இஞ்சினியரிடம் ஒப்புதல் பெற்று உரிய ஆவணங்களில் முத்திரையும் கையெழுத்தும் பெற்றார் சிங்கை டெக்னீசியன் அஹமத். அவர் கப்பலிலேயே நன்றாக சாப்பிட்டுவிட்டு  சைனாவில் உள்ள எங்கள் நிறுவன வேறொரு கப்பலுக்கு செல்வாதாக சொல்லி விடைபெற்றார்.

 இரவில் பணி முடித்து ஒன்பது மணிக்கு உறங்க சென்ற காஸ் இஞ்சினியர் இரவு பன்னிரெண்டு மணிக்கு வந்து என்னை விடுவித்தார். குளித்து தொழுதுவிட்டு ஒரு மணிக்கு மேல் தூங்கி அதிகாலை ஐந்து மணிக்கு அழைப்பான் மணிஅடித்ததும் எழுந்தேன்.

  குளித்து பஜர் தொழுகைக்குப்பின் சதாசிவ்வை  காலை ஆறு மணிக்கு முன்பாகவே விடுவித்தேன். கார்கோ இறக்கும் பணி சீராக போய்க்கொண்டிருந்தது. இன்று கார்கோ நிறுவனம் அனுப்பும் ஒரு ஆய்வாளர் சிங்கையிலிருந்து வர வேண்டியுள்ளது. மிக குறைந்த ரிமார்க்ஸ்களுடன் பாஸ் ஆகியே வேண்டும்.

  கொரியமுகம் கொண்ட வயதான ஆய்வாளர் விமான நிலையத்தில் இரங்கி எட்டு மணிக்கு நேராக கப்பலுக்கு வந்தார். சிங்கப்பூர் முஸ்லிம் என அவரது பாஸ்போர்ட் சொன்னது. உணவுகூடத்தில் மேஸ்மேன் “பிரேக் பாஸ்ட் என்ன வேண்டும்” எனக்கேட்டதும்.

“நத்திங் ஒன்லி மசாலா சாயா,லஞ்ச் இங்கே சாப்பிடுவேன்” என்றவர் உடனே காப்டன்,முதன்மை இஞ்சினியர்,முதன்மை அதிகாரியுடன் ஒப்பனிங் மீட்டிங் முடித்து ஆவணங்கள் சோதனையை தொடங்கினார். பத்து மணிக்கு டெக்கில் வந்தார்.கார்கோ டாங்க்ஸ்,ஓடிக்கொண்டிருக்கும் கார்கோ பம்ப்களின் பிரஷர் கேஜ்,பலாஸ்ட் தொட்டிகளின் ஏர்வென்ட்,மேனிபோல்ட் பிரஷர்கேஜ்,டெம்ப்பரேச்சர் கேஜ்,பூஸ்டர் பம்ப்,மோட்டார் அறை,கம்பிரசர் அறை,எமெர்ஜென்சி ஜெனரேட்டர்,எமர்ஜென்சி பயர் பம்ப்,லைப் போட் என அனைத்தையும் சோதித்தார். மிக அனுபவம் வாய்ந்த காப்டன் அவர் சீன கம்பனிக்காக பணிபுரிகிறார்.கையில் ஒரு செக் லிஸ்ட் வந்திருந்தார். 

  மதிய உணவுக்குப்பின்(மிகக்குறைவாக உண்டார்) பதினைந்து நிமிட ஓய்வுக்குப்பின் இயந்திர அறையில் ஆய்வு,ஸ்டீயரிங் பிளாட்,பாய்லர்,பயர் பம்ப்,பின்னர் பிரிட்ஜில் லாக் புக்ஸ்,பெர்மிட் டு வொர்க் மற்றும் நேவிகேஷன் ஆவணங்கள் சரிபார்த்தார்.

  மாலை நான்கு ஆய்வை முடித்து குளோசிங் மீட்டிங்.கம்பிரசர் அறை மற்றும் மேனிபோல்ட்டில் உள்ள எமர்ஜென்சி சட்டவுன் ‘O’ ஓபன்  ‘C’ குளோஸ் எழுதியிருக்கவில்லை,பூஸ்டர் பம்ப் பிரஷர்கேஜ் பூஜ்யம் காட்டவில்லை. ஆவணங்களில் இரு இடங்களில் எழுதியது தவறு என ரிமார்க்ஸ்  எழுதினார். எமர்ஜென்சி சட் டவுன் சிஸ்டத்தில் ஓபன்,குளோஸ் என எழுதி படம் பிடித்து காட்டியதை ஒத்துக்கொள்ளவில்லை. பூஸ்டர் பம்பின் பிரஷர் கேஜ் உடனே சரி செய்யப்பட்டது.

   ஆய்வாளர் மூன்று ரிமார்க்ஸ் பதிவு செய்த சான்றிதழை முத்திரை பதித்து கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு ஐந்துமணிக்கு கிளம்பினார். இரவே விமானம் அவருக்கு. 

மாலை மூன்று மணிக்கே கத்தாரில் நிறைத்த நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன் புரொப்பேன் திரவத்தை கொடுக்கும் பணி முடிந்தது. டெர்மினல் ஊழியர்கள் குழாய்களை கழற்றினர். டெர்மினல் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு சான்றாக சர்வேயர் முன் கார்கோ மாஸ்டர் மற்றும் கப்பலின் காப்டன் ஒத்துக்கொண்ட ஆவணங்கள் கையெழுத்தானது.

  கப்பல் ஆறு மணிக்கு புறப்பட பைலட் வரும் நேரம் உறுதியானது. நான் ஐந்து மணிக்கே ஓய்வுக்கு சென்றுவிட்டேன் ஆறு மணிநேர வேலை ஆறு மணிநேர சுழற்சி இம்முறை சரியாக அமையவில்லை இரு ஆய்வாளர்கள் ,கம்பிரசர் டெக்னீசியன் வந்ததால் இரு தினமும் பதிமூன்று மணிநேரத்துக்கு பணி செய்ததால் தூக்கம் குழம்பி போய் கிடந்தது. 

  கடுமையான கடல் சீற்றம் காரணமாக  மாலை ஆறு மணி பைலட் ரத்தானது. மறுநாள் திங்கள்கிழமை மைலியோவ் துறைமுகம் மூடப்படிருந்து . மறு உத்தரவு வரும் வரை.

  மறுநாள் மதியம் கொஞ்சமாக பேரலைகள் அடங்கியதும் மதியம் பன்னிரெண்டு மணிக்கு  பைலட் கப்பலுக்கு வந்தார். கயிறுகள் அவிழ்க்கப்பட்டு டக் போட் உதவியுடன் கப்பலை பத்திரமாக வெளியேற்றி கடலில் விட்டபின் பைலட் இறங்கி சென்றார். 

காலியான கப்பல் பதினைந்து டிகிரிக்கு மேல் ரோலிங்கில் பயணத்தை தொடர்ந்தது. ஒரு நாள் பயணத்திற்குப்பின் ஹாங்காங்கில் கப்பலை நிறுத்தி எண்ணெய் நிரப்பியபின் ஆஸ்திரேலியாவின் டாம்பியர் துறைமுகம் நோக்கி பயணிக்க வேண்டும் என உறுதியானது.

  பிப்ரவரி மாதம் பதினெட்டாம் தேதி கப்பல் தைவான் சென்று சேர்ந்தது முதல் 24   ஆம் தேதி அங்கிருந்து புறப்படும் வரை உள்ள பதிவு இது.

நாஞ்சில் ஹமீது,

27-april- 2025.

sunitashahul@gmail.com

இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறோம் .

Saturday, 26 April 2025

9. தைவானில் .




என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 2025.

   கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்த முடியாதபடி கடல் கொந்தளிப்பும் அலைகளும் எழுந்ததால்  கப்பல் வட்டமடித்து கொண்டே இருந்தது. இரு தினங்களுக்குப்பின் மார்ச் இருபத்தி ஒன்றாம் தேதி  ஏழு மணிக்கு பைலட் வந்தார் எட்டுமணிக்கு கப்பல் கரையணைந்தது.பிரேக் வாட்டர் எனப்படும் தடுப்புசுவர்கள் இருப்பதால் கடலை தடுக்கப்பட்டு துறைஅணைந்த   கப்பல்கள் கடலலைகளால் அலைக்கழிக்க படுவதிலிருந்து தடுக்க பட்டிருந்தது.முன்பும் பின்பும் எட்டு கயிறுகள் வீதம் கட்டி நிறுத்தப்பட்டது.

தைவானின் மைலியோவ் துறைமுகத்தில் எல்பிஜி மற்றும் எண்ணை கப்பல்கள் வந்து செல்லதக்க உயர்தரத்தில் மிகப்பெரிய டெர்மினல் இது. இலங்கை அளவுக்கேயான சிறிய தீவு பொருளாதார வளர்ச்சியில் குதிரைவேகம் என்பதை எல்பிஜி இறக்குமதியில் உணர்ந்துகொண்டேன். அருகிலிருக்கும் சைனாவால் சிறு அச்சுறுத்தல் எப்போதும் இருக்கிறது.


    தடுப்பணையை தாண்டி வந்த அலைகளால் கப்பல் கொஞ்சம் ஆடத்தான் செய்தது. காப்டன் உசாரானார். இந்தோனேசியாவின் தன்சுங்க் செக்காவ் அனுபவம் மேலும் அவரை அச்சுறுத்திதயால் முன்பும்,பின்பும் மேலும் ஒரு அதிகப்படியான கயிறுகளை ஸ்டோரிலிருந்து எடுத்து வைக்கச் சொன்னார்.


நான் கட்டுபாட்டு அறைக்குள் வந்தபோது முதன்மை அதிகாரியிடம் விவாதித்துகொண்டிருந்தார். “கேப்டன் சாப்  இந்தோனேசியா போல இல்ல,சின்ன ஸ்வேல் தான்,ரோப் கட் ஆக வாய்ப்பே இல்ல” என்றேன்.

“நீ அப்ப இருந்தியா”

“அங்க தானே ஜாயின்
 பண்ணினேன்”
ஒரு பதட்டத்திலேயே இருந்தவர் சரக்கு இறக்கும் பணிக்காக ஆவணங்களுடன் வந்த டெர்மினல் அதிகாரிகளுடன் பிசியாகி  போனார் நெடுநேரத்துக்கு.

 காலை எட்டே முக்காலுக்கு எங்கள் நிறுவன ஆடிட்டர் காப்டன் ஆசுதோஷ் கவுல் கப்பலுக்குள் வந்தார்.
 “ஷாகுல் நமஸ்காரம், அலையன்சில் இருந்து இறங்கி, நேரா இங்க வந்துட்டிடா”

“குட்மார்னிங்,மூணு மாசம் வீட்டுல இருந்தேன்.நீங்க நல்லா இருக்கியளா”?

“நீ இப்ப கார்கோ ஆப்ரேசன்
 இன்சார்ஜ், உனட்ட நிறைய கேள்வி இருக்கு தயாரா இருந்துக்கோ” என சொல்லி விட்டு குடியிருப்புக்குள் நுழைந்தார். காப்டன் ஆசுதோஷ் கவுலுடன் 2018ஆம் ஆண்டு எனெர்ஜி ஒர்பஸ் எனும் கப்பலில் பணியில் இருந்தேன்.நான் பணிபுரிந்த மிகசிறந்த காப்டங்களில் காப்டன் ஆசுதோஷ் கவுல்ஒருவர். 

தற்போது ஓராண்டாக ஆடிட்டர் ஆக இருக்கிறார்.கடந்த ஆண்டு எல் என் ஜி அலையன்சில் ஆய்வுக்கு வந்திருந்தார். பின்னர் இப்போது சந்திக்கிறேன். இந்த கப்பலின் ஆடிட்டிங் ஆய்வு முன்பே முடிந்துவிட்டது.டிசம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆய்வில் இந்த கப்பல் அதிக ரிமார்க்குகளை பெற்றது. அதன் பின் கத்தாரில் ஆறு ரிமார்க்குகள். எனவே எங்கள் நிறுவனம் இன்னொமொரு ஆய்வுக்கு கம்பனி காப்டன் ஆசுதோஷ் கவுலை அனுப்பியது.

 கப்பல் துறைமுகத்தில் இருக்கும் இரு தினங்களும் எங்களுடன் இருந்து ஆய்வு செய்வதாக இருந்தது.அவர் மூன்று தினங்களுக்கு முன்பே வந்து விடுதியறையில் தங்கியிருந்தார். கப்பல் கரையணையாததால் அவரால் வர இயலவில்லை. “எனக்கு இவினிங் எழு மணிக்கு பிளைட் ஹச் எம் எஸ் டைமண்ட் க்கு போணும் நாலு மணிவர தான் இருப்பேன் யாரெல்லாம் கிட்ப்பீங்களோ,இன்டர்வியூ பண்ணிட்டு போயிருவேன்” என்றார்.

      ஆவணங்கள் சரிபார்க்கபட்டு எல் பி ஜி சாம்பிள் எடுத்துசென்றார்கள். கப்பல் துறையில் அணைந்தவுடனே குழாய்களை இணைக்கும் குழு வந்தது. சாம்பிள் ரிசல்ட் வந்தபின்தான் சரக்கு இறக்கும் பணி துவங்கும்.பதினோரு மணிக்கு மேல் டீ குடிப்பதற்காக மெஸ் ரூமுக்கு வந்தேன். அடுமனையில் காப்டன் ஆசுதோஷ் கவுல் நேர்காணலை துவங்கியிருந்தார். அடுமனை தீ பிடித்தால் எப்படி அணைப்பீர்கள் எனக்கேட்டு விளக்கி கொண்டிருந்தார்.
அடுமனை தீ அணைப்பான் 



 கேள்விகள் முடிந்தபின் முந்தைய நாள் இரவுணவில் மீதமிருந்த சப்பாத்திகளை பார்த்து “இத யாரவது எடுத்து வெச்சிருக்காங்களா, நாலு மணிக்கு போவேன் பிளீஸ் பேக் அண்ட் கிவ் டு மீ என” கேட்டார். என் காதில் அவர்கள் பேசுவது கேட்டுகொண்டே இருந்தது.

  வேறு வேறு கப்பல்களில் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ஆய்வுக்கு செல்வதால் இந்திய உணவு சாத்தியமே இல்லை அவருக்கு. தொடர் பயணம் கப்பல்கள் தாமதமானல் விடுதியறைகளில் தங்கி அங்கே கிடைப்பவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும். சைவ உணவு காரர்களுக்கு அது மிக கடினம். இங்கே இந்திய பணியாளர்கள் மற்றும் இந்திய சமையல்காரர். முன்னரே மெஸ்மேனிடம் சொல்லியிருந்தேன் “மசாலா சாயா விரும்பி குடிப்பார் போட்டு கொடு” என.


நான் டீ குடித்து எழுந்ததும் “மெஸ் மேன் டானிசிடம் அடுத்தது  இவன்தான் மாட்டுனா பாரு” என சொல்லிவிட்டு.

 “ஷாகுல் எங்க போறா உட்காரு” என்றார்.

முதல் கேள்வி “வெயர் யூ பைண்ட் யுவர் ஜாப் ரெஸ்பான்ஸபிளிட்டி”.

“இன் கம்ப்யூட்டர்  டாக் மேப்” 

“யூ ஆர் இன்சார்ஜ் ஆப் கார்கோ ஆபரேசன்” 

“எஸ் சார்”

 “கார்கோ லீக் என்ன செய்வா”?

“இன்பார்ம் கண்ட்ரோல் ரூம் ஸ்டாப் கார்கோ”

“வெரி குட்,மிசினரி பிராப்ளம் என்ன செய்வா’?

“இம்மிடியேட்லி இன்பார்ம் சீப் இஞ்சினியர்”

என் கைவிரலை பார்த்தவர் “அரே பாபா கைல என்ன பட்டு ரத்த காயம்”

“சுத்தியல் அடிச்சிட்டு” 

“டேக் கேர் யுவர் செல்ப்”

சிரித்தேன். அவருக்கும் தெரியும் பிட்டராக பணி புரிந்தால் சிறு காயங்களை தவிர்க்கவே இயலாது. கப்பலில் பிட்டரால் மட்டுமே செய்ய முடியும் பணிகள் நிறையவே உண்டு அதை எந்த இஞ்சினியர்,அதிகாரிகளாலும் செய்யவே இயலாது. பிட்டரால் முடியாததை வெளியில் இருந்து ஆள் வந்துதான் செய்ய வேண்டும். பிட்டர் கப்பலில் ஒரு ஸ்பெஷல் கேட்டகிரி.

  “கார்கோ காஸ் சுவாசித்தால் என்ன ஆவும்”

“நுரையீரல் பாதிக்கும்”

“சரி தலை சுற்றி,மயக்கம் வரும், வேறென்ன” எனக்கேட்டார்.

“சார் கேன்சர் வரும்” எனசொல்லி அவர் அடுத்த என்ன சொல்ல போகிறார் என எதிர்பார்க்கும் முன்

“அத என்ன சொல்றது,அதுக்கு ஒரு வார்த்தை இருக்கு”

 “தெரியாது” என்றேன் .

“கார்சினோஜெனிக்(CARCINOGENIC),சொல்லு பாப்போம்”

“கா சி ஜோ னக்..” என் வாயில் அது வரவே இல்லை முதல் முறையாக கேட்கிறேன்.

“கார்சினோஜெனிக், திரும்ப சொல்லு” என மூன்று முறை சொல்ல வைத்தார்.

“கேஸ் மீட்டர்ல என்னென்ன கேஸ்,செக் பண்ணுவா” 

“காப்டன்  சாப் ஆக்சிஜன்,கார்பன் டை ஆக்சைடு,ஹைட்ரோ ஹார்பன் .......”

“ஆர் யூ சுயர்”

“முழித்தேன்”

(அதன் விடை = HC – ஹைட்ரோகார்பன், CO-கார்பன் மோனாக்சைடு, O2 –ஆக்ஸிஜன்,H2S-ஹைட்ரோஜன் சல்பைடு.)

“நான் கப்பலுக்கு வரும்போது பாத்தேன் காங்வேயில் இண்டர்நேசனல் ஷோர் கப்ளிங் இருந்தது, அது எதுக்கு”?

“கப்பலோட பயர் பம்ப் பெயில் ஆயிட்டுன்னா ஷோர் ல இருந்து தண்ணி வாங்கி பயர் பைட்டிங் செய்ய”

 “அத எங்க மாட்டுவா”?

“ஜெட்டில”

“ராங்,அத நம்ம பயர் லைனில் மாட்டணும்,இங்க பாரு ஒவ்வொரு நாட்டுலயும் ஒரு சிஸ்டம், மியாக்கி,சுயாக்கி எப்டி வேணும்ன்னாலும் இருக்கலாம், அதனால தான் இண்டர்நேசனல் ஷோர் கப்ளிங், அது ஸ்டாண்டர்ட்,அத நீ ஜெட்டியிலா மட்டுவா”?

“யூ யோ கப்பல்ல நான்  கப்பல்ல இருந்து கீழ போய் அவங்க பயர் லைனில் மாட்டினேன் ஸார்”

 “கார்கோ கண்ட்ரோல் ரூமில் அலராம் சிஸ்டம் இருக்கு அத எப்டி செக் பண்ணுவா”

“கார்கோ டாங்க்ல இருந்து ப்ரோப்பேன் நிறச்சி,மோட்டார் ரூம்,கம்ப்ரசர் ரூமில் உள்ள காஸ் சாம்ப்ளிங் பாயிண்ட்ல குடுப்பேன்” 

 “இல்ல ஷாகுல் ஐயாம் நாட் சாட்டிஸ்பைடு வித் யுவர் ஆன்சர்,நீ இந்த வேலக்கி வந்துட்டா, இம்ப்ரூவ் யுவர் ஸெல்ப், டோன்ட் சே தட் காஸ் இஞ்சினியர் டூ ஆர் சீப் ஆபிசர் டூ, இன்ஸ்பெக்டர் வந்து கேக்க கேள்விகளுக்கு பதில் சொல்லாம நிறைய கப்பல்கள் ரிஜக்ட் ஆகுது.

 கார்கோ சார்ட்டெர்க்கு உன் பாதுகாப்பு,உனது உயிர் எதுவும் முக்கியம் இல்லை,இன்னைக்கு இந்த போர்ட்ல ஒரு நாள் கப்பல் நிக்கதுக்கு மில்லியன் கணக்குல டாலர் கொடுக்க வேண்டியிருக்கு. டிலே ஆக ஒவ்வொரு நிமிசத்துக்கும் மணி,மணி,மணி. அவனுக்கு பணம் தான் முக்கியம். 

உன் குடும்பத்துக்கு சோறு போடுவது நீ தான், உன் உயிர் ரொம்ப முக்கியம் அவங்களுக்கு, பீ ஸ்மார்ட்,டோன்ட் வொர்க் லைக் டாங்கி”

என்னுடனான கேள்வி நேரம் முடிந்தது. டைரியில் எழுதிவிட்டு பாக்கெட்டில் போட்டார்.

 முன்பே அவருடன் பணிபுரிந்துள்ளதாலும், தொடர்பில் இருப்பதாலும் ஒரு நட்பான விசாரிப்பு.

“உனக்கு ரெண்டும் பாய்ஸ் இல்லா,என்ன செய்றாங்க,குடும்பம் எப்டி இருக்கு,இங்க வந்து எத்தனை மாசம் ஆச்சு” என கேட்டுக்கொண்டார். 

“ஸார் ஐ யாம் கெட்டிங் கால்ஸ் ப்ரம் அதர் கம்பனி” என்றேன். 

“நல்ல சம்பளம் கிடைச்சா போயிட்டே இரு. நானும் அப்படிதான் நீண்ட நாளா ஒரே கம்பனில இருக்கேன்னு சென்றிமென்ட் பாக்காதே,இம்ப்ரூவ் யுவர் செல்ப், இங்க கேஸ் செஞ்ஜ் பண்ணிருக்கீங்க, டிட்ன்ட் ஆஸ்க் தட். யூ ஹவ் டு டூ அலோன்”.

 “ஓகே ஸார் உங்க டி பி ல இருக்கது ராமேஸ்வரம் கோவிலா”

 “கைசா பத்தா ரே தும்கோ”

“நீங்க மிந்தி கன்னியாகுமரி வந்தப்போ மார்த்தாண்டம்,பார்வதிபுரம் பாலம் வேலை நடந்து கொண்டிருந்தது. இப்ப வாங்க திரும்பியும்” என்றேன்.

“சரி பாதுகாப்பா வேலை செய்யுங்க ஆல் தி பெஸ்ட்” என சொல்லி விடைபெற்றார்.

இயந்திர அறையில் இஞ்சின் பிட்டர் ராஜேஸ்,மூன்றாம் இஞ்சினியர்,இரண்டாம் இஞ்சினியர் ஆகியோரிடமும் நேர்காணல் நடத்தினார். கொஞ்சம் ஆவணங்களையும் சோதனையிட்டு டெக்கில் ஒரு ரவுண்ட் போய் வந்தார்.
மேலும் ...
 நாஞ்சில் ஹமீது.
 sunitashahul@gmail.com

Thursday, 24 April 2025

ஈஸ்டர்

   




    சைனாவின் பின்சாவ் துறைமுகத்திலிருந்து மார்ச் மாதம் இருபத்திமூன்றாம்  தேதி புறப்பட்டோம். கொரியாவில் ஒரு நாள் கப்பலை நிறுத்தி எண்ணெய் நிரப்பியபின் தொடங்கிய பயணம் இருபதாம் தேதி பனாமாவின் பால்போவா கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். இருபத்தி ஏழு நாட்களுக்குப்பின்.கப்பலின் இஞ்சின் நில்லாமல் தொடர்ந்து நெடுநாட்களுக்கு ஓடும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  ஈஸ்டர் தினமான ஞாயிறு தவிர்க்கவே முடியாத பணிநாள். மறுநாள் திங்கள்கிழமை பனாமா கால்வாயை கடந்தோம். எனவே இன்று இருபத்திஇரண்டாம் தேதி செவ்வாய்கிழமை ஈஸ்டர் கொண்டாத்ததை முடிவு செய்திருந்தனர்.பனாமா கால்வாய் கடக்கும் தினத்தில் அனைவரும் நீண்ட நேரம் பணியில் இருந்ததால் இன்று அனைவருக்கும் ஓய்வு அவசியப்பட்டது.

 கால்வாயை கடந்த அன்று மாலை எட்டுமணிக்கு தான் இரவுணவுக்கு சென்றேன். காப்டனின் மனைவி அப்போதே அலங்காரங்களை தொடங்கியிருந்தார்.வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறையப்பட்ட ஏசு மகான் ஞாயிறன்று உயிர்தெழுந்தார். அதையே உலகம் முழுவதும் ஈஸ்டர் தினமாக கொண்டாடுகிறார்கள். மோட்டர்மேன் லீமேன் மலைக்குள் புதைகப்பட்ட ஏசு கல்லை பெயர்த்து வெளியேறியதை விளக்கும் அலங்காரத்தை நான்கு நாட்களாக பணிக்குப்பின் இரவு ஒரு மணிவரை ஓய்வு நேரத்தில் செய்துமுடித்தார்.

   “தாயி வெரி டயர்ட் ஐ கான்ட் ஹெல்ப் யூ” என சொல்லிவிட்டு அறைக்கு சென்று விட்டேன். (மராத்தியில் தாயி என்றால் சகோதரி) பத்து மணிக்கு தூங்கி அதிகாலை நான்குக்கே விழித்துகொண்டேன். தொழுகையும்,பயிற்சிகளும் முடித்து அடுமனையில் சுக்கு காப்பி போட்டு குடித்தபின்.

 சமையல்காரர் “ஷாகுல் உன் உதவி வேண்டும் மதியம் பார்ட்டி” என்றார்.கம்ப்ரசர் அறைக்கு சென்று ரீடிங் எடுத்துவந்து லாக் புக் எழுதியபின். அடுமனையில் ஐக்கியமானேன்.காப்டனின் மனைவி மூன்றாம் அதிகாரி ஸ்ரீயுடன் இணைந்து உணவு மேஜையில் அலங்காரம் செய்யத்தொடங்கினார். இரு தினங்கள் கடும் பணியாக இருந்ததால் பணியாளர்கள் அனைவரும் ஓய்வில் இருந்தனர். காஸ் இஞ்சினியர், முதன்மை அதிகாரியுடன் சரக்கு தொட்டிகளில் சிறிதாக சரக்கை மாற்றும் வேலையை செய்ய தொடங்கினர்.இஞ்சின் ரூம் டீம் பதினோரு மணிவரை பணியில் இருந்தார்கள்.

  ராகுல் செய்து வைத்திருந்த கேக்கை முயல் வடிவில் வெட்ட சொன்னார் துருவி. காப்டன் அனைவருக்கும் சாக்லேட்களை தட்டில் அடுக்கினார். பீப் ரோஸ்ட்,பிட்ஸா,சால்மன் பிஷ்,இறால்,சிக்கன் டிக்கா,சிக்கன் லெமன் பிளேவர்ட்,சில்லி சிக்கன்,மட்டன் கறி,பன்றி இறைச்சியில் மூன்று வகை,மக்ரோனி பாஸ்தா,கார்லிக் ரைஸ்,பிஷ் கட்லெட்,பாயில்ட் சனா,காராமல் புட்டிங்,வெஜ் கட்லெட்,ஆனியன் புஜியா,சிஸர் சாலட் இன்னும் என்ன பெயர் என எனக்கு தெரியாத உணவுகள் பல வைத்திருந்தார். அவை எல்லாம் அவரது கண்டு பிடிப்புகளே.

  சிக்கன் சாசேஜ்களை வட்டமாக நறுக்கி வெங்காயமும்,மசாலா தூள்களும் சேர்த்து வதக்கியது, ப்ரோக்கலி,காரட் அவித்து உப்பும்,மிளகும் தூவியது, மசக்கிய உருளைக்கிழங்குடன் சோளம் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி,கலக்கிய முட்டையில் அந்த உருண்டையை முக்கி மைதா மாவில் உருட்டி எண்ணையில் பொரித்தது,கோழிஇறைச்சியின் துண்டுகளை மைதாவில் முக்கி ஐஸ்வாட்டரில் முக்கி அதை முட்டையில் முக்கி,பொடித்த பிரட் தூளில் புரட்டி எண்ணையில் புரட்டியது  இதே போல் இன்னும் எட்டு வகையானவைகளை செய்தார்.அவரது மராத்தி உணவுகளாக இருக்கலாம். புழுங்கல் அரிசியில் ஆப்பம் செய்யும் எண்ணம் இருந்தது சுனிதாவிடம் கேட்டு வைத்திருந்தேன். “அடுப்பு கிடக்காது நான் பிசியா இருப்பேன் இல்லா,இன்னொரு நாள் செய்”என ராகுல் சொலிவிட்டார்.

   குடி பிரியர்களுக்கு கொண்டாட்டமான நாள். இரு குப்பி ஷாம்பியன் மற்றும் தாராளமாக பீர் வழங்கப்பட்டது. குடிக்காதவர்களுக்கு கோக் நான் கோக்,பெப்சியும்  குடிப்பதில்லை. 

   ஓய்வாக இருந்ததால் டெக்கில் கிரிக்கெட்  விளையாடினார்கள். பதினொன்றரை மணிக்கு நான் அறைக்கு வந்து குளித்து சட்டைகளை இஸ்த்ரி செய்து தயாராக இருந்தேன். 

  ஒரு மணிக்கு அனைவரும் மெஸ் ரூமில் கூடுமாறு மைக்கில் அறிவித்தார்கள். காப்டன் அனைவருக்கும் சாக்லேட் வழங்கி ஈஸ்டர் வாழ்த்துக்களை கூறினார். மெஸ் ரூமை அலங்கரித்த மேடம்,லீமன் அவர்களுக்கு உதவிய எத்திராஜ்,போசனுக்கும். காலைமுதல் சிறப்பு உணவுகளை செய்த அடுமனை பணியாளர் இருவருக்கும் நன்றி கூறினார். 


IRON MAN 


 அவரே ஷாம்பியனை உடைத்து தனது மனைவிக்கும்,குடிப்பவர்களுக்கும் கொடுத்தார். முதன்மை இஞ்சினியர் வேண்டா வெறுப்பாக கொஞ்சம் வாங்கிகொண்டார். அவர் கடந்த ஆண்டு ஐரோப்பாவில் நடந்த 3.8km நீச்சல்,180km சைக்கிள்,42.2kmஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு முதாலவதாக வந்து அயன் மேன் (IRONMAN –COPENHAGEN) சாம்பியன். கப்பலில் தினமும் பத்து கிலோமீட்டர் க்கு டெக்கில் ஓடுவார். உணவில் மிக கவனமாக இருப்பார்.அவர்,நான் மற்றும் இர்ஷாத் மட்டுமே குடிக்காதவர்கள். ராஜேசின் சிறியதந்தை ஞாயிறன்று மும்பையில் இறந்துபோனதால் அவரும் குடிக்காமல் சைவமாக இருக்கிறார்.



காப்டனின் மனைவி  துருவி  துணியில் காரட்,முயல் பொம்மை,காகிதத்தில் குடில்கள் என அனைத்தும்   கப்பலில் பல நாட்களாக செய்திருந்தார். கடின உழைப்பில் தயார் செய்தவற்றை மேஜையில் பார்த்து,பார்த்து அடுக்கினார். “எப்டி இருக்கு,எப்டி இருக்கு” என கேட்பார். அலங்காரம் நிறைவு செய்து அவரும் ஆடை மாற்றி வந்தார். ரம்ஸான் பண்டிகையில் முகத்தில் பவுடர்,உதட்டு சாயம் பூசி வெண்ணிற ஆடையில் வந்தவரை “தாயி அளகா இருக்கீங்க” என்றேன். “அப்ப நேத்து நான் எப்டி இருந்தேன், மோர் பீயுட்டிபுல் என சொல்லுங்க ஷாகுல் ஜி” என்றார். 

  அது நினைவில் இருந்ததால் சைகையால் லுக்ஸ் குட் என மட்டும் சொல்லி விலகி கொண்டேன். காப்டன் நினைவுறுத்தினார் இன்று அனைவரும் உங்கள் பீங்கான் தட்டுகளில் சாப்பிட்டபின் நீங்களே கழுவி வைத்து விடுங்கள்.பேப்பர் பிளேட் மற்றும் பிளாஸ்டிக் கரண்டி உபயோகிப்பதை தவிர்ப்போம் என கடந்த மீட்டிங்கில் சொல்லியிருந்தார்.



 நான் கொஞ்சம் டைகர் இறால்கள், இரு துண்டு ப்ரௌனி,கொஞ்சம் பீப்,பாஸ்தா,காராமல் புட்டிங் சாப்பிட்டேன்.இன்றைக்கான கேம் தயாரானது.குலுக்கி எடுக்கும் துண்டு சீட்டில் வருவதை படமாக வரைதல். இரு அணியாக பிரிந்து,ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒருவர் வரைய மற்றவர்கள் அதை சரியாக சொல்ல வேண்டும் இரு நிமிடத்திற்குள்.

  லிக்குட் என்பதை தண்ணீர்,ஆவி   வரைந்து விளக்கிவிட்டார் இரண்டாம் இஞ்சினியர் . மெயில்மேன் எனக்கு வந்தது இரண்டு நிமிடத்துக்கு ஐந்து வினாடி இருக்கும்போது ராகுல் மிஸ்திரி போஸ்ட்மேன் எனச்சொன்னார் அதை எனக்கு தந்த காப்டனின் மனைவி துருவி ஒத்துக்கொள்ளவில்லை. அதிகாலையே எழுந்திருத்தால் தூக்கம் அழுத்தியது. எலுமிச்சை கலந்த சர்பத் ஒரு கப் கலக்கி குடித்துவிட்டு அறைக்கு சென்று தொழுதுவிட்டு தூங்கி விட்டேன். 

  மாலை மக்ரிப் தொழுகைக்கு முன் தான் எழுந்தேன். கம்பிரசர்கள் ஓடிக்கொண்டிருந்ததால் எட்டுமணிக்கு கீழே சென்றேன்.இரண்டாம் அதிகாரி மேலேறி வந்துகொன்ட்டிருந்தார். பன்னிரெண்டு முதல் நான்குவரை அவருக்கு பணி அதனால் நான் அவரை பார்க்கவேயில்லை.  “நாலு இருவதுக்கு தான் நான் மேல போனேன்,அதுக்கு பொறவு நான் வந்து எல்லாரையும் பாதுகத்துருக்கு,அப்பப்ப இப்டி கெட்டூகெதர் வேணும்” என்றார். மனமகிழ் அறையில் ஒரு குழு அமர்ந்து நன்னாத்தான் ஆடுறே ஒத்துக்கோ பாடலை ஹிந்தியில் ஓடவிட்டு பீர் குடித்துகொண்டிருந்தார்கள்.

   நான் ரவுண்ட்ஸ்க்கு சென்றேன்.காஸ் பிளாண்டில் சிறு ஒழுகல் அதை கண்டுபிக்க எனக்கு நெடுநேரமாகி விட்டது. ஒன்பது மணிக்கு மேல் கட்டுபாட்டு அறைக்கு வந்து லாக் புக்கில் எழுதிவிட்டு மாசாஜ் செயரில் அமருவதற்கு சென்றேன். பத்துமணிக்கு வழக்கமாக சீட்டு விளையாடும் குழு ஆட்டத்தை துவங்கியிருந்தது. காப்டனின் மனைவி,முதன்மை அதிகாரி காப்டன்,ஜூனியர் இஞ்சினியர்,மூன்றாம் அதிகாரி,சமையல்காரர்,பத்தி சாப் ,காஸ் இஞ்சினியர் என காப்டன் தாமதமாக வந்து இரண்டாம் ஆட்டத்தில் இணைந்தார்.



 கப்பலில் காப்டனின் மனைவி துருவி வந்தபின் அனைத்து பிறந்தநாட்களும் கேக் வெட்டி கொண்டட்டம் தான். விஷு,தமிழ் புத்தாண்டு,பைசாகி,அம்பேத்கர் ஜெயந்தி,அனுமன் ஜெயந்தி அனைத்திற்கும் அறிவிப்பு பலகையில் வாழ்த்து செய்தியை ஒட்டிவிடுகிறார். 



   பண்டிகைகள் எங்களுக்கு இப்போதுதான் தெரியவருகிறது.

அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.

நாஞ்சில் ஹமீது,

22-april -2025.

Saturday, 19 April 2025

8. மலாக்கா கொள்ளையர்கள்

 

என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 2025.

     

    கப்பலில் சரக்கு ஏற்ற போகும் துறைமுகம் எது என தெரிந்தபின். சரக்கு இறக்கும் துறைமுகம் எது என கப்பல்காரர்கள் மத்தியில் தினமும் ஒரு விவாதம் நடக்கும்.

   “தேக்கோ கத்தார் ல லோட் பண்ணுனா,ஜப்பான் தான் போவும்,இங்க உள்ள கார்கோ,நல்ல கார்கோ” என்பார் எத்திராஜ்.

  “இந்தோனேசியா கூட போலாம்” என்பார் சமையல்காரர் ராகுல் மிஸ்திரி.

   “ஏன் இந்தியா போக கூடாது, சென்னை, ஹல்தியா போகலாம்”என்றேன்.

 “ஐஞ்சி பைசா எங்க கூட கடக்கிதோ அங்க கார்கோவ குடுப்பான்” என்பார் ராஜேஷ்.

    சரக்கை கையாளும் நிறுவனம் எங்கு தேவையும் காசு அதிகமாக கிடைக்கிறதோ  அங்கே தான் விற்பனை செய்வார். அதிக பணம் கொடுக்க தயாராக இருப்பவர்களை தேடிக்கொண்டும் இருப்பார்கள்.

  நான்கைந்து  நாடுகளின் பெயர்களை சொல்லி எத்தனை நாள் ஆகும்,எவ்வளவு எரி எண்ணெய் செலவாகும் என்பன போன்ற கணக்குகளை சரக்கை கையாளும் நிறுவனம் கேட்கும்.

   பின்னர்தான் உறுதியாகும் சரக்கு இறக்க எங்கே செல்கிறோம் என.கத்தாரிலிருந்து புறப்பட்ட மறுநாள் தான் தைவானின் மைலியோவ் செல்லும் தகவல் உறுதியானது. அரபிக்கடலில் பயணித்து குளச்சல்,எனது கிராமமான  மனவாளக்குறிச்சி,முட்டம் வழியாக இந்திய பெருங்கடலில் பயணம்.

   கத்தாருக்கு போகும்போதும் இதே வழியாக சென்றோம் பதினைந்து நாளில் திரும்பி செல்கிறோம் அதே பயணப்பாதையில்.வீட்டிலிருந்து நூறு மைல்தொலைவில் சென்றுகொண்டிருந்தோம். முட்டம் அருகில் வரும்போது பிரிட்ஜில் சென்று ரேடாரில் பார்த்தேன். மிக அருகில்தான் வீடு இருக்கிறது எனும் எண்ணம். 

  துறைமுகத்தில் இருந்த இரு நாளும் பன்னிரெண்டு முதல் பதினைந்து மணிநேரம் வேலை. எனவே துறைமுகம் விட்டதும் ஓய்வுக்கு சென்றேன். மறுநாள் காலை பணிக்கு சென்றபோதும் முழு நாளும் ஓய்வெடுத்துக்கொள்ள சொன்னார் முதன்மை அதிகாரி.

   தைவானில் சரக்கு இறக்கியபின் ஆஸ்திரேலியா செல்வதற்கு சரக்கு நிறுவனம் சில தகவல்களை கேட்டது. ஆஸ்திரேலியா துறைமுகத்தில் அனைத்து பாதுகாப்பு முறைமைகளும், கப்பலின் இயந்திரங்களும் நூறு சதமானம் சரியாக இருக்க வேண்டும். மிக கண்டிப்பான அதிகாரிகள் அவர்கள். அதற்காக சில அளவுகள் எடுத்தல், எல்லாம் சரியாக இருக்கிறதா என நாங்கள் சோதிக்க தொடங்கினோம். குப்பை தொட்டிகளின் மூடிகள் இடைவெளியின்றி இருப்பது,ஈக்கள் மொய்க்காமல் சுத்தமாக இருப்பது  கட்டாயம். 

Garbage bins

Garbage area 


  எங்களிடம் இருந்த பெரிய குப்பைதொட்டிகளின் சிலவற்றில் மூடிகள் சரியாக இல்லை. சிலதை சரிசெய்தும்,புதிதாக சில மூடிகள் செய்யவும் உத்தரவு தந்தார் முதன்மை அதிகாரி. 




  நான்கு மில்லி மீட்டர் தடினமனுள்ள  இரும்பு பிளேட்டில் மூடிகளை செய்தேன். இயந்திர அறையில் காஸ் மூலம் வெட்டி,மெல்லிய பட்டையில் அதை சுற்றி வெல்டிங்கால் ஒட்டியபோது  இடைவெளியில்லாத மூடிகள் தயாரானது.

  இந்தியாவிற்கு அருகில் வந்து சிங்கப்பூர் மலேசியாவை தாண்டுவது வரை கடும் வெப்பமாக இருந்து. குப்பைதொட்டிகளின் மூடியை இயந்திர அறையில் செய்ததால் மூன்று தினங்கள் கடும் வெப்பத்திலிருந்து தப்பினேன்.

  சிங்கபூர் தாண்டி மலாக்கா நீரிணையில் செல்லும்போது காப்டன் அனைவருக்கும் பைரைசி(piracy watch) வாட்ச் வைத்திருந்தார். இங்கே இப்போதும் கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்து திருடி செல்லும் சம்பவங்கள் நடக்கிறது. நான் இருப்பது vlgc(very large gas carrier) வகையை சார்ந்தது  கடல் மட்டத்திலிருந்து பன்னிரெண்டு மீட்டர் உயரத்தில் இருக்கும் இதில் ஏறுவது மிக கடினம். 

இந்த வகை கப்பலில் வந்தபிறகு வருடத்தில் பலமுறை இந்த மலாக்கா நீரிணையை கடக்கிறோம் ஆனால் இதில் கொள்ளையர்கள் வருவதற்கான  வாய்ப்பு குறைவு என்பதால் கேப்டன்கள் பைரைசி வாட்ச் வைப்பதில்லை.

  இம்முறை அனைவருக்கும் வாட்ச் வைத்திருந்தார். அனைத்து அதிகாரிகளுக்கும் பிரிட்ஜில் வாட்ச். இஞ்சினியர்கள் இயந்திர அறையில், மீதமிருந்த அடுமனை பணியாளர்,இஞ்சின் பிட்டர்,மோட்டார் மேன் ஆகியோருக்கு கப்பலின் பின் புறம்,போசன்,ஒ எஸ்சுக்கு கப்பலின் முன்பக்கம் என  காவல் காக்கும் வேலை.

  எனக்கு நள்ளிரவு பன்னிரெண்டு மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை இரவில் தூங்காமலே பன்னிரெண்டு மணிக்கு டெக்கில் சென்று காவலில் இருந்த லீமேனை விடுவித்தேன். டார்ச் லைட்,விசிலை கையில் தந்தார். கப்பலில் எந்த கதவுகளையும்  திறக்கக்கூடாது. பிரிட்ஜ் வழியாக சென்று, அதே வழியில் வரவேண்டும். பார்வேடில் இருந்த போசனை ஒ எஸ் இர்ஷாத் விடுவித்தார்.

 தண்ணீர் பாட்டில் பிளாஸ்கில் கறுப்பு டீயுடன் சென்றேன்.கப்பலின் பின்புறம் சிறு படகுகள் ஏதாவது வருகிறதா என பார்க்க வேண்டும், பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை ரேடியோவில் எல்லாம் சரியாக இருக்கிறது என சொல்ல வேண்டும். முழு நிலவு நாள் கடும் குளிரோ,வெப்பமோ,மழையோ இல்லை. மூன்றரை மணிக்கே நாம் கொள்ளையர்கள் நடமாடும் இடத்தை தாண்டி விட்டோம் இதோடு பைரைசி வாட்ச் முடிந்தது. 

   காவல் காக்கும் நாளுக்கு முன் நடந்த விவாத கூட்டத்தில் கொழும்புவின் ராஜிதா சொன்னார். “புல் மூன் டே என்ஜாய் அன்ட் டோன்ட் மிஸ் தி தீய்ஸ்”  புத்த மதத்தை சார்ந்தவர்களுக்கு ஒவ்வொரு முழுநிலவு நாளும் மிக முக்கியம். எல்லா மாதமும் முழுநிலவு நாளில் இலங்கையில் அரசு விடுமுறை .

  நான்கு மணிக்கு வரவேண்டிய மோட்டார்மேனை அழைக்க வேண்டாம் என்றார்  முதன்மை அதிகாரி. காப்டன் முழு இரவும் பணியிலிருந்து கள்ளன் வருவதை பார்த்துக்கொண்டிருந்தார்.

   “எனக்கு எதுக்கு நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு டூட்டி போட்டீங்க” என முதன்மை அதிகாரியிடம் கேட்டேன். “ஷாகுல் ஜி ஆளு பாத்து போட்டுருக்கேன். ராத்திரி ரெண்டு மணி கிரிடிக்கல் ஆன நேரம் அதாவது கள்ளன் வரக்கூடிய, அப்பதான் அலெர்ட் ஆ இருக்கணும், அந்நேரம் நானும் பிரிட்ஜில் இருப்பேன்,நாளைக்கி காலத்தே நீ வராண்டாம்,மத்தியானம் ஒரு மணிக்கி வந்தா போரும்” என்றார்.

  அதிகாலை அறைக்கு வந்து காலை பஜர் தொழுகைக்கான நேரம் வரை வரை காத்திருந்து தொழுதுவிட்டு அறையை முழுமையாக இருட்டாக்கிவிட்டு தூங்கினேன். பதினோன்றரை  மணிவரை நல்லுறக்கம். 

 குளித்து மதிய உணவுக்குப்பின் சென்றேன். கம்ப்ரசர் அறையில் அலாரம் சோதனை செய்ய காஸ் இஞ்சினியரும்,பத்தி சாபம் சென்றார்கள் நான் சரக்கு கட்டுபாட்டு அறையில் இருந்தேன்.அன்றைய நாள் எளிதாக முடிந்தது.

   பதினைந்து நாள் பயணம் செய்து தைவானுக்கு மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி மாலை வந்தோம். துறைமுகத்தில் கப்பல் அணைவது பற்றி தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் கடுமையான கடல்சீற்றம் பேரலைகளும். கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தஇயலாத நிலை எனவே இஞ்சினை நிறுத்தாமல் கப்பல் வட்டம்டித்துக்கொண்டே இருந்தது. 

   இருபத்தி ஒன்றாம் தேதி கப்பல் கரையணையும் தகவல் உறுதியானது.இரு தினங்களுக்கு மேல் (அறுபது மணிநேரம் ) கப்பலை நிறுத்தாமல் சுற்றிகொண்டே இருந்ததால் நூறு டன்களுக்கு மேல் எரிஎண்ணெய் செலவானது.

   மைலியாவ் வந்தபோது நங்கூரம் பாய்ச்சாமல் கப்பலை நிறுத்தினார்.கப்பல் கடுமையாக ஆடத்தொடங்கியது.காப்டன் அரை மணிநேரத்திலேயே இஞ்சினை இயக்க சொல்லி கப்பல் வட்டமடிக்க தொடங்கியது. 

 டெர்மினலில் பீயுட்டேன் -41.5 (மைனஸ் நாற்பத்தி ஒன்று புள்ளி ஐந்து)  வெப்பம் இருக்கவேண்டும் எனக்கேட்டார்கள். அந்த வெப்பநிலையை கொண்டு வர இயலவில்லை.மைனஸ் நாற்பத்தி  ஒரு டிகிரி தான் எங்களால் கொண்டு வர இயலவில்லை.

  

     இந்த கட்டுரை எழுதிய இன்று எங்கள் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில் கடந்த மார்ச் மாதம் மலாக்கா நீரிணையில் 6 கப்பல்களில் கொள்ளையர்கள்  புகுந்து ஒரு கப்பலில் வெல்டிங் மெசின்,ஜெனரேட்டர் உதிரி பாகங்கள் என திருடி சென்றுள்ளனர் என எச்சரித்துள்ளது . 

 இது நடந்த நாளில் அதிகாலை இரண்டு மணிக்கும் நான்கு நாற்பதுக்கு முன்னும் தான் கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்துள்ளனர்.

Wednesday, 16 April 2025

7 கத்தாரில்

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 2025

  


     கப்பல் காரன் டைரி இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியாயிற்று இருந்தும் புது தகவல்கள் இருக்கின்றன  என வாசகர்கள் சொல்கிறார்கள்.  இந்த கப்பலில் வந்தபின் அன்றாட நாட்குறிப்புகள் இனியும் தேவையில்லை என எண்ணினேன். நண்பர் கணேஷ் இல்லை ஷாகுல்  தினசரி நாட்குறிப்புகள் போலல்லாமல் வாரம் ஒரு முறையாவது  தொகுத்து எழுதுமாறு வேண்டினார். 

   என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகளின் கடைசி பதிவு மார்ச் ஒன்றாம் தேதி எழுதியிருக்கிறேன். கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ரமலான் நோன்பு பதிவுகள்,இதுல் பிதர் மற்றும் இதயம் போன்ற பதிவுகளை எழுதியிருக்கிறேன்.

  கப்பல் காரன் டைரி யாருக்காக என எழுதிய பதிவின் தொடர்ச்சிகளை இனி தொடர்ந்து எழுதுவேன். எழுதுவதை உடனுக்குடன் வலையேற்ற நண்பர் கணேஷ் உதவி செய்கிறார். அது எனக்கு பெரும் உற்சாகத்தையும்,தொடர்ந்து எழுதவும் தூண்டுகிறது.

   இரண்டரை மாதங்களுக்கு முந்தைய பதிவை எப்படி எழுதுகிறேன். சில குறிப்புகள் வைத்திருக்கிறேன். அதை பார்த்ததும் என்னால் எளிதாக அந்த நாளுக்குள்  சென்றுவிட முடிகிறது.

  ஒன்பது ஆண்டுகளுக்கு முன் எழுத துவங்கியபோது முதலில் எழுதிய தொடர் ஈராக் போர்முனை அனுபவங்கள். ஈராக்கிலிருந்து வந்து பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் அந்த அனுபவங்களை எந்த குறிப்புக்களும் இன்றி எழுதினேன். என்னால் அந்த நாட்களில் சென்று விவரிக்க முடியும் என்பதை நானே அப்போதுதான் அறிந்தேன்.


 

 என் எஸ் பிரண்டியர் நாட் குறிப்புகளின் தொடர்ச்சி.... 

  இந்த பதிவை எழுதும் முன் லண்டனிலிருந்து நண்பர் கண்ணன் அழைத்திருந்தார். கடைசி பதிவில் சரக்கு கையாளும் முறையை கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தேன். பொது வாசகர்களுக்கு அது புரியாதே எனும் எண்ணமிருந்தது.

  நண்பர் கண்ணன்  “உலகமே ஜீரோ எமிஷன் பத்தி பேசுறாங்க,நீங்க முன்னூறு டன்களுக்கு மேல் (proppene C3) எல்பிஜி திரவத்தை அனாயசமாக காற்றில் கலக்கவிடுகிறீர்கள்.கப்பல் துறையில் உங்களுக்கு வேறு வழியே இல்லை”என்றார். அவர் ஆயில் அண்ட் காஸ் துறையில் பணி புரிவதாக சொன்னார். அந்த கட்டுரை தேவைதான் என்றும் குறிபிட்டார். கத்தார் எல் என் ஜி துறைமுகத்தில் பணிபுரியும் கணேச மூர்த்திக்கும் இன்னும் இந்த துறை சார்ந்து பணியில் இருப்பபவர்களுக்கும்  மிக தெளிவாக புரியும்படி உள்ள கட்டுரை தான் அது.


   இன்றும் எங்கள் கப்பலில் நடந்த பயிற்சிவகுப்பில் காற்று மாசு,மற்றும் கடல் மாசடைவதை குறைக்கும் பொருட்டு கப்பல்காரர்கள் செய்ய வேண்டியது. தினமும் எவ்வளவு ஏரி எண்ணெய் உபயோக்கிறோம் எனும் கணக்கை எங்கள் நிறுவனத்துக்கும் சம்பத்தப்பட்ட துறைக்கும் அனுப்புவதை விவாதித்தோம்.

 கப்பலில் இனி வரும் பார்ட்டிகளில் பேப்பர் தட்டுகள்,பிளாஸ்டிக் கரண்டிகள் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்து கைதுடைக்கும் மென்தாள் உபயோகத்தையும் குறைக்கும்படிவேண்டினார் காப்டன். நான் இந்த கப்பலில் வந்து மூன்று மாதங்கள் ஆகிறது அதிகபட்சமாக பத்து டிஷு பேப்பர்கள் தான் உபயோக படுத்தியிருப்பேன். வெள்ளை துண்டுகள் வைத்திருக்கிறேன்  கை,வாய் துடைக்கவும் சாப்பிடும் தட்டு,குவளை,கரண்டிகளை அதைக்கொண்டே துடைத்துகொள்கிறேன்.


    கத்தாரின்  மைசஜீத் துறைமுகம் அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்ற எங்களை மார்ச் ஒன்றாம் தேதி அதிகாலை துறைமுகம் வருமாறு அழைத்தது மைசஜீத் போர்ட் கண்ட்ரோல். ஒன்பதரை மணிக்கு நங்கூரம் உருவப்பட்டு கப்பல் நகர தொடங்கியது. இயந்திர அப்போது முதல் விழித்துகொண்டது.பதினொன்றே முக்காலுக்கு பைலட் வந்தார். நல்ல தூக்கதிலிருந்த என்னை அதிகாலை இரண்டே முக்காலுக்கு அழைத்தார்கள். “ஷாகுல் கம் டு மேனிபோல்ட்” 

முகம் கழுவி பல்தேய்த்து மூன்று மணிக்கு சென்றேன்.கப்பலை முன்பும் பின்பும் எட்டு கயிறுகள் வீதம் பத்திரமாக கட்டி வைத்திருந்தார்கள்.பதினாறு பாகைக்கும் குறைவாக வெப்பம் இருந்தது. குல்லாய்,ஜாக்கெட் அணிந்து சென்றேன். அதிக குளிரில்லைதான். துறைமுக ஊழியர்கள் சரக்கு நிறைக்கும் குழாயை பொருத்தியபின்  அனைத்து சோதனை செய்யபட்டது. குழாய்கள் இணையும் இடத்தில் ஒழுகல் இருக்கிறதா எமர்ஜென்சி வால்வுவுகள் தானியங்கி முறையில்  முப்பது வினாடிகளுக்குள் மூடுகிறதா என்பன (ESD =Emergency shut down) ஆவணங்கள் பரிமாறப்பட்டு,பாதுகாப்பு விதிமுறைகள் விவாதித்தபின் கப்பலுக்கு சரக்கு நிறைக்கும் பணி துவங்கியது.

முதலில் மெதுவாக தொடங்கி மணிக்கு 1200 மெட்ரிக் டன் வேகத்தில் கப்பலுக்கு ப்ரோப்பேன் திரவம் சிராக வந்துகொண்டிருந்தது.சரக்கு தொட்டிகளின் முழு கொள்ளளவில் தொண்ணூறு சதம் மட்டுமே நிரப்புவது பாதுகாப்பானது. சரக்கு தொட்டி காலியாக இருப்பதால் திரவத்தை உள்ளே போட்டதும் அது ஆவியாகும். அதனால் சரக்கு தொட்டியின் அழுத்தம் வேகமாக அதிகரிக்கும். எனவே கம்ப்ரசர்களை இயக்கி அதில் உள்ள வாயுவை எடுத்து குளிர்வித்து திரவமாக மாற்றி மீண்டும் தொட்டிக்குள் அனுப்புவோம். மூன்று கம்ப்ரசர்களை இயக்கி சரக்கு தொட்டிகளின் இயக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தோம். 

 எல்லாம் சரியாக இருக்கிறது என உறுதியானதும்  ஐந்தரை மணிக்கு மேல் அறைக்கு சென்று குளித்து அதிகாலை தொழுகை முடித்து டெக்கில் வந்து காஸ் இஞ்சினியரை ஓய்வுக்கு போக சொன்னேன். இரவு பன்னிரெண்டு முதல் காலை ஆறு வரையும்,மதியம் பனிரெண்டு முதல் மாலை ஆறு வரை அவருக்கு பணி.

  எனக்கு காலை ஆறு முதல் பன்னிரண்டு,பின் மாலை ஆறு முதல் பன்னிரெண்டு வரை பணி என முறை வைத்து இருவரில் ஒருவர் எப்போதும் சரக்கு கட்டுப்பட்டு அறை,டெக் அல்லது காஸ் பிளாண்டில் இருக்கவேண்டும். ரேடியோவில் அழைத்தால் உடனடியாக அதை ஏற்கும்நிலையில். 

 சரக்கு தொட்டிகளின் அழுத்தத்தை கண்காணிப்பது தேவைபட்டால் இன்னுமொரு,கம்ப்ரசரை இயக்கவேண்டும். சீரான வேகத்தில் திரவம் வந்துகொண்டே இருக்கும். ஓடிகொண்டிருக்கும் கம்ப்ரசர்களின் வெப்ப, அழுத்த மானிகளை (parameters) கண்காணிப்பதோடு. அதை குறித்துகொள்ள வேண்டும் . கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினி திரையில் தெரியும் ப்ரோப்பேன் திரவத்தின் வெப்பம் மற்றும் மோட்டார் ஓடும் ஆம்பியர் போன்றவற்றை ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கும் லாக் புக்கில் எழுத வேண்டும். டெக்கில் பணியில் இருப்பவர்கள் கப்பலை கட்டியிருக்கும் கயிறுகளை இறுக்கவும்,தளர்த்தவும் செல்லும்போது காங்வே  எனப்படும் கப்பலின் நுழைவு வாயிலில் சில நிமிடங்கள் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். முக்கியமாக காஸ் பிளாண்டில் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை கண்காணித்தல் தான் முக்கிய பணி. உடலுழைப்பு பெரிதும் இல்லையெனினும் ஆறு மணி நேரம் முறை வைத்து பணி செய்கையில் துறைமுகத்தில் இருக்கும் தினங்களில் சரியான தூக்கம் அமையாது.

  சரக்கு தொட்டிகளில் சரக்கு நிறைக்கும் வேகம்,அளவுக்கு தகுந்தவாறு பலாஸ்ட் தொட்டிகளில் இருக்கும் கடல் நீரை கணக்கிட்டு சரியான முறையில் வெளியேற்ற வேண்டும். (பலாஸ்ட் நீரை வெளியேற்றும் முறை பற்றி விரிவாக தனிக்கட்டுரையில்  எழுத வேண்டும் )டெர்மினலுடன் கப்பல் அதிகாரிகள் தொடர்பிலேயே இருப்பார்கள். ஒவ்வொரு மணிநேரமும் எவ்வவளவு சரக்கு கப்பலுக்கு வந்திருக்கிறது. எவ்வளவு டெர்மினல் தந்துள்ளார்கள் என்பதை கப்பலும்,டெர்மினலும் சரிபார்த்து ஆவணபடுத்தி கொள்வார்கள்.

          Cargo control room 



  மூன்று டெக் அதிகாரிகள் நான்கு மணிநேர பணியும் எட்டுமணிநேர ஓய்வும் என முறை வைத்து இருபத்தி நான்கு மணிநேரமும் பணியில் இருப்பார்கள். டெக் பணியாளர்கள் இருவர் வீதம் நான்கு மணிநேரம் பணி எட்டு மணிநேர ஓய்வு எனும் சுழற்சியில்  இருப்பார்கள். துறைமுகத்தில் இருக்கும்போது கப்பலுக்கு வரும் உதிரி பாகங்கள்,உணவுபொருட்களை கப்பலுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஓவர் டைம் செய்வார்கள்.

 கப்பலை ஆய்வுக்கு தயார் நிலையில் வைத்திருந்தோம் ஆய்வாளர் இரண்டாம் நாள் தான் வருவதாக தகவல் வந்தது. ஆய்வாளர் இரண்டாம் தேதி காலை பத்து மணிக்கு வந்தார்.முழுநாளும் பிரிட்ஜ்,இயந்திர அறை,டெக்,கார்கோ பிளாண்ட்,என முழுமையாக ஆய்வு செய்து ஆவணங்களையும் சரிபார்த்தார்.

  இரவு ஒன்பது மணிக்குதான் ஆய்வை நிறைவு செய்து படகில் இறங்கி சென்றார். ஆறு ரிமார்க்ஸ் தந்தார்.அவற்றை மூன்று மாதத்திற்குள் சரி செய்திருக்க வேண்டும்.

 

 எங்களிடம் நான்கு சரக்கு தொட்டிகள் (cargo tanks) இருப்பதாக சொன்னேன்    (C3)ப்ரோப்பேன்  திரவத்தை Tank 1-8771 ,tank 2 -12498,tank3-  11230,tank4- 14049  மெட்ரிக் டன்கள் வீதம் சரக்கு நிறைக்கும் பணி இரவு பத்து மணிக்கு முடிந்தது.

  பின்னர் டெர்மினலும்,கப்பலும் இணைந்து மொத்தம் எவ்வளவு திரவம் வந்துள்ளது என்பதை ஊறுதி செய்து இருதரப்பும் ஒத்துகண்ட பின் ஆவணங்களில் கையொப்பமிட்டு பரிமாறிகொண்ட பின்.சரக்கு ஏற்றும் பணி முழுமையடையும் .

 அதன் பின்னரே  கப்பலில் இணைக்கப்பட்டுள்ள டெர்மினல் குழாய்கள் விடுவிக்கபடும். பதினோரு மணிக்கு குழாய்கள்விடுக்கபட்டது. மொத்தம் நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன் ப்ரோப்பேன் திரவம் இருந்தது கப்பலில்..

 டூல்ஸ்களை எனது வொர்க்ஷாப்பில் வைத்து விட்டால்.எனக்கு பணி முடிந்து விடும். பதினோரு நாற்பதுக்கு பைலட் வந்தார். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு கப்பல் புறப்பட்டது. திங்கள்கிழமை முழு நாளும் எனக்கு ஓய்வாக இருந்தது. 

   கப்பலில் ஏற்றிய ப்ரோப்பேன் திரவத்தை தைவானின் மைலியோவ் (mailiao)துறைமுகத்தில் கொடுக்க சொல்லி உத்தரவு வந்தது. கப்பல் தைவானை நோக்கி பயணிக்க தொடங்கியது.

 நாஞ்சில் ஹமீது,

13 -4-2025.

sunitashahul@gmail.com

Sunday, 13 April 2025

ரமலானுக்கு பின்



புனித ரமலானில் ஒரு மாதம் நோன்பிருந்தபின்  உடல் ஆரோக்கியம் மேம்படுவதை உணர முடியும். நிலத்தை விட்டு தூரமாக கடலில் பயணிப்பதால் காற்று மாசு அறவே  இல்லை. இங்கிருக்கும் மனித முகங்கள் தவிர விரிந்த பெரும் கடல்பரப்பும் மேகங்கள் சூழ்ந்த வானமும். டி.வி, யூ டூப்  பார்ப்பதில்லை. எனவே வேறு காட்சிகளே இல்லை. அதனால் பிற எண்ணங்களும் இல்லை. மனதிற்கினிய நண்பர்களுடன் போனில் உரையாடலும்,வாசிப்பும் மட்டுமே.

நோன்பு காலத்தில் நிறுத்திவைத்திருந்த எளிய முறை உடற்பயிற்சி, ஆசனம், காயகல்ப பயிற்சிகளை இதுல் பிதர் பெருநாள் முடிந்த மறுநாளே துவங்கினேன்.

ரமலான் துவங்கும்முன் என்னுடன் இணைந்து பயிற்சிகளை செய்து கொண்டிருந்த ராஜேஷ் வரவில்லை. பயணப்பாதை மிக கடுமையாக இருந்தது. குளிர் வேறு.

 

ரமலானில் சூரியன் மறைந்தபின் எளிய உணவுகளையே உட்கொண்டேன். வாய்ப்பு கிடைத்த நாட்களில் நானே கஞ்சி வைத்து குடித்தேன். கஞ்சி குடித்த  நாட்களில் வயிறு இன்னும் சுகமாக இருந்தது. அதிகாலை நோன்பு வைக்க வெள்ளை சாதமும, பருப்பு குழம்பு, சாலடும். சில நாட்கள் மீன் கிடைக்கும். இருவேளை உணவு வயிற்றுக்கும் உடல் உள் உறுப்புகளுக்கும் ஓய்வை அளித்த நாட்கள்.


நோன்புக் கஞ்சி


பகலில் உண்ணாமல் இருத்தால் உடல் எடையற்று இலகுவாக இருந்ததை உணர்ந்தேன். சுனிதாவிடம் சொன்னேன். “நோம்பு முடிஞ்ச பொறவு மத்தியான சாப்பாட உட்டுரலாம்னு நினக்கேன், பாடி ரொம்ப லேசா இருக்கு”.

அவள் “டெக்ல நல்ல காத்தடிக்கும் போவ வேண்டிய டெசிநனேசன மட்டும் கண்ணால பாத்தாபோரும் காத்து போவ வேண்டிய இடத்துக்கு கொண்டு உட்டுரும்” என்றாள்.


கப்பலில் உண்ணும் நேரம் மிக நல்லது. காலை உணவு ஏழு முப்பதுக்கு. எட்டு மணிக்கு பணி துவங்கும். பத்து மணிக்குதேநீர் இடைவேளை பன்னிரெண்டு மணிக்கு மணிஅடித்து மதிய உணவு தருவார்கள். இரவுணவு மாலை ஆறு மணிக்கு. துறைமுகம் மற்றும் அவசர பணிகள் இல்லாத நாட்கள் தவிர இந்நேரம் தவறுவதே இல்லை.

  

காலை உணவாக பால் கலந்து சீரியல்ஸ் உடன் இரண்டு முட்டை, மதியம்(பச்சை காய்கறி) சாலட், பெரும்பாலும் மீன் அல்லது கோழியிறைச்சி  தவிர்த்து மட்டன், பீப் இருந்தால் மட்டும் கொஞ்சம் சாதமும் பருப்பு குழம்பும். இரவுணவாக ஒரு சப்பாத்தி அல்லது இரண்டு.

 

ஆறரை மணிக்கு இரவுணவு முடிந்தால் தேவைப்பட்டால் ஒரு சுலைமானி (கட்டன் சாயா). மறுநாள் காலை வரை எதுவும் உண்பதில்லை. மிட் நைட் மீல், நூடுல்ஸ் அறவே கிடையாது. “ஆறு மணிக்கே தின்னா ராத்திரி பசிக்காதா” என நண்பர்கள் கேட்பதுண்டு. ஞாயிறுகளில் மதியம் பிரியாணி போடுவார்கள். ஓய்வாக இருந்தால் காலை உணவு உண்பதில்லை. இரவிலும் தேவைப்பட்டால் மட்டுமே உண்பேன்.

 

 நோன்புக்கு பின் ஒன்று உறுதியாகியது. பழக்கத்தால்தான் மூவேளை உண்கிறோம். மணி பார்த்து சாப்பிடுவதுதான் பழக்கம். பசித்துதான் சாப்பிட வேண்டும். காலையில் உண்டபின் பத்து மணி தேநீர் இடைவேளையில் மெஸ் மென் போடும் சாயா குடிக்கவில்லை. மதியம் சாலட் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டேன். உடல் சோர்வேயில்லை.  மாலை ஆறு மணிக்கு இரவுணவு.

 

உபவாசம் என்னும் உயர் மருந்து இயற்கை மருத்துவர் பாலாசுப்பிரமணியம் எழுதிய புத்தகம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்தேன். ஒவ்வொரு முறை நாம் உணவுண்ணும் போதும் அதை ஜீரணம் செய்ய அதிகப்படியான சக்தி உடலிலிருந்து செலவளிக்கப்படுகிறது. குறைவாக உண்பதும், இரவுணவை தவிர்ப்பதும் உபவாசம் என சொல்லியிருந்தார். நல்ல பிரியாணி அல்லது சத்யா உண்டபின் சோர்வும் தூக்கமும் வருவது அதனால் தான்.

 

நேற்று முன்தினம் மதியம் கொரியா கிம்ஞ்சி  வைத்திருந்தார்கள். அதனால் சிறு குவளையில் கொஞ்சம் சாதமும், பொரித்த இரு மீன் துண்டுகளும், மீன் குழம்பும் சாப்பிட்டேன்.

 

இன்று காலை ஊற வைத்த பாதாம் நான்கு, மூன்று பேரீட்சை, மூன்று முந்திரி, இரண்டு அவித்த முட்டை மட்டும். இயந்திர அறையில் லேத் மிஷினில் முழுநாளும் பணி. காலை பத்து மணிக்கு ஒரு கட்டன் காப்பி சீனி கலந்து குடித்தேன். பின் பசியே இல்லை. மதியம் சாலடும், பப்பாளி பழத்துண்டுகள் மட்டும் இரண்டு. மூன்று மணி தேனீர் இடைவேளையில் தண்ணீர் மட்டும் குடித்தேன். இரவுணவுக்கு இரு கோதுமை பரோட்டாவும், பீப் கறியும். இன்று இரவு சுலைமானியும் குடிக்கவில்லை.

 

ரமலானுக்கு பின் எடை ஒன்று அல்லது ஒன்றரை கிலோ தான் குறைந்திருக்கும். கடந்த முப்பது ஆண்டுகளாக அறுபதுக்கும் அறுபத்தி நான்கு கிலோவுக்கும் இடையில் இருக்கிறேன். எதற்கும் மாத்திரை உண்பதே இல்லை. 

இரு தினங்களுக்கு முன் சுனிதா “உச்சக்கி  என்ன சாப்ட்டியோ” எனக்கேட்டபோது,

“சால்ட் பழம்” என்றேன்.

“சோறு தீத்தியே கிடையாதோ? இனி தேவாங்குதான் திரியாரு இவுரு, பொறந்த ஆறு மாசத்திலே சோறு தின்னதாக்கும், இங்க வேற என்ன புட் உண்டு, சோறு தான் பெலம், உச்சக்கி கொஞ்சமா சோறு தின்ன வேண்டியது தானே” என்றாள்.

 

எனது சமையல்காரர் ராகுல் மிஸ்திரி மதியம் உண்பதில்லை. அவர் என்னிடம் கொஞ்ச நாள்ல பழகிவிடும் நேரம் பார்த்து நாம் உண்ண தேவையில்லை என்றார்.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


 நாஞ்சில் ஹமீது,

09 april 2025 

 sunitashahul@gmailcom

Saturday, 12 April 2025

என் இதயம் - 3

என் என் ஜி அலையன்சில் பணியில் இணைவதற்காக மும்பை லண்டன் வழியாக ஜிப்ரேல்டர் வரை சென்று விடுதியில் காத்திருந்தோம். ஜிப்ரேல்டர் வழியாக நைஜீரியா செல்லும் கப்பலில் வேகத்தை குறைத்து ஓடும் கப்பலிலேயே எங்களை ஏற்றிவிடுவதாக திட்டம்.வேண்டிய உணவுப்பொருட்களையும் கப்பலில் அனுப்ப தயாராக இருந்தனர்.
மாலை ஆறு மணிக்கு நாங்கள் காத்திருந்தோம்.

கப்பலிலிருந்து நான் விடுவிக்கவேண்டிய தினேஷ் குறுஞ்செய்தி அனுப்பினார். கடும் காற்று காரணமாக ஜிப்ரேல்டர் துறைமுகம் மூடப்பட்டுள்ளது; கரையிலிருந்து படகு எதுவும் கடலுக்குள் வரஇயலாது; எனவே கப்பல் நைஜீரியாவை நோக்கிய பயணத்தை தொடர்கிறது என.

மூன்று தினங்கள் ஜிப்ரேல்டர் நகரை முழுமையாக சுற்றி பார்த்துவிட்டு லண்டன்–மும்பை வழியாக வீடு வந்து சேர்ந்தேன். மூன்று வாரங்களுக்குப்பின் தென்ஆப்ரிக்காவின் கேப் டவுனில் பின்னர் பணியில் இணைந்தேன். ஊருக்கு திரும்பி வந்ததில் அஜிதனின் திருமணத்தில் கலந்துகொள்ள முடிந்தது.
 
இம்முறை ஏழு மாதம் கப்பலில் பணி செய்தேன். என் இதயம் எனக்கு ஒன்றையும் சொல்லவில்லை. யோகபயிற்சிகள், ஆசனம், தியானம், ஐவேளை தொழுகையையும் மிக எளிதாக நிறைவேற்றினேன். அக்டோபர் ஒன்றாம் தேதி மலேசியாவில் இறங்கி வீட்டுக்கு வந்தேன். வீடு கட்டும் பணி கான்க்ரீட் முடிந்து இருந்தது. வீட்டை கட்டிப்பார் எனும் சொல்லுக்கு அர்த்தம் புரிந்த நாட்கள். மிகக்குறைவான தூக்கம். கால் மூட்டுக்களிலும், உடலிலும் மிக மெல்லிய வலி இருந்துகொண்டே இருந்தது. எனினும் நான்கு மணிநேரத்திற்கு தூக்கமில்லாத நாட்கள்.

நவம்பர் மாதம் வேறொரு நிறுவனம் அவசரமாக அழைத்தது. நவம்பர் பதினாறாம் தேதி கொச்சியில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றேன். இங்கே இசிஜி சோதனைக்கு முன் நானே சொல்லிவிட்டேன். “என் இசிஜி அப்நார்மலாக இருக்கும்” என.

கொஞ்சம் அதிமாகவே சோதனை செய்தார்கள். “குழப்பம் ஒந்தும் இல்லா” என்றவர் இசிஜி காகிதத்தை கையில் வைத்து உடனிருந்த நேழ்ஸ் சேச்சியிடம் கொடுத்து “ஒந்து நோக்கு” என்றார். “ஒரு பிர்ஷனுமும் இல்லா” என்றபோதும் டாக்டரிடம் காமித்து உறுதி செய்தபின் டிரட்மில்லில் ஓட விட்டு சோதனை செய்தார்கள். எல்லாம் நார்மல் நான் கப்பல் பணிக்கு ‘பிட்’ ஆக இருக்கிறேன் என சோதனை அறிக்கைகள் சொன்னது.

ஆனால் அந்த நிறுவனத்தில் பணியில் இணைய முடியாமல் போனது. வீடு பணி முடிந்து கிரகப்பிரேவசம் முடிந்த மூன்றாவது நாள் பாண்டியில் ஒரு வகுப்பு, மறுநாள் சென்னை பலாஜியில் மருத்துவ சோதனை. நாகர்கோவில்-பாண்டிக்கு குளிர்சாதன தூங்கும் வசதி கொண்ட பேருந்தில் சென்றதால் கொஞ்சம் தூங்கினேன். பாண்டியில் வகுப்பு முடிந்த அன்று மாலையே புறப்பட்டு சென்னையில் தாம்பரம் பார்வதிநகரில் வசிக்கும் நண்பர் அசோக் வீட்டில் இரவு தங்கிவிட்டு. காலையுணவாக சகோதரி சுஜாதா தந்த புட்டும் பயறும் உண்டுவிட்டு டி நகர் புறப்பட்டேன். அசோக் வீட்டில் நன்றாக தூங்கினேன்.

காலை எட்டு நாற்பதுக்கு பாலாஜி மெடிக்கல் சென்டரில் இறங்கியபோது எனக்கு முன்பே எட்டு பேர் காத்திருந்தனர் மருத்துவமனை திறப்பதற்காக. அன்று இரவே வீட்டுக்கு செல்ல ரயிலில் டிக்கட் முன்பதிவு செய்திருந்தேன். அடுத்த சில நாட்களில் எனது பயணம் இருப்பதாக என் நிறுவனம் சொல்லியிருந்தது. மதிய உணவிற்கு சகோதரி அமுதாவின் இல்லம் வருவதாக அழைத்து சொன்னேன்.

ஒன்பது மணிக்கு சோதனைகள் தொடங்கியது. எனது டிரட்மில் டெஸ்ட் மட்டும் நடக்கவில்லை. சோதனை முடித்த பெரும்பாலானோர் மருத்துவரை சந்திக்க காத்திருந்தோம். மணி பன்னிரெண்டை தாண்டியும் மருத்துவர் வரவில்லை. சகோதரி அமுதாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் வர தாமதமாகும் நீங்கள் சாப்பிடுங்கள் என.

உங்கள் வேலை முடிந்து வாருங்கள் காத்திருக்கிறோம் என பதிலளித்தார். வழக்கமாக வரும் மருத்துவர் வராததால் பாலாஜியின் வேறு கிளையிலுள்ள மருத்துவர் சைதாபேட்டை டிராபிக்கில் சிக்கி டி நகர் வந்து சேர தாமதமாகி விட்டது.

நான்காவது ஆளாக மருத்துவரை சந்திக்க என்னை அழைத்தார்கள். பள்ளி மாணவியை போலிருந்த இளம்பெண் மருத்துவர் என்னிடம், “உங்க இசிஜி அப்நார்மல்” என்றதும் இம்முறை பதட்டமே இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் பாலாஜி சென்னை, தூத்துக்குடியில் செய்த மருத்துவ அறிக்கை, இதய நிபுணரை பார்த்த டெஸ்ட் ரிப்போட் அனைத்தையும் காண்பித்தேன். டிரட்மில் டெஸ்ட் செய்யுமாறு கோரினேன்.

காத்திருக்க சொன்னார். இசிஜி பேப்பர்களை கொண்டு வரச்சொல்லி பார்த்தார். யாருக்கோ போனில் பேசிவிட்டு, ஆறுமாதம் தாண்டி விட்டது நீங்கள் இதய மருத்துவரை பார்த்து என்றதும்...

ஒன்றரை மாதங்களுக்கு முன் கொச்சியில் செய்த மருத்துவ சோதனையில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை உங்கள் பாலாஜியில் செய்யும் சோதனை மட்டுமே இசிஜி பிரச்னையாக உள்ளது என்றேன்.

“அந்த ரிப்போட் இப்ப இருக்கா?”

மருத்துவரின் கையில் கொடுத்தேன். அதை போனில் புகைப்படம் எடுத்துவிட்டு மீதி சோதனைகளை முடித்து வெளியில் காத்திருக்க சொன்னார்.  பத்து நிமிடத்தில் டிரட்மில் சோதனைக்கு அழைத்தார்கள். பதினைந்து நிமிடம் ஓடினேன். என் இதயம் நன்றாக இருக்கிறது என கருவிகள் சொன்னது.

“ரிபோர்ட் ரெடிஆனதும் போன் பண்ணுவோம்,வந்து வாங்கிகுங்க” என்றார். மாம்பலத்திலிருந்து ரயிலில் எக்மோர் சென்று சகோதரி அமுதாவின் வீட்டிற்கு செல்லும்போது மணி இரண்டை தாண்டி விட்டது. மிக சரியாக அவர் வீட்டு வாயிலில் மணியை அழுத்தினேன். புன்னகையுடன் பாலாஜி சாரும், அமுதா அக்காவும் வரவேற்றார்கள். அமர்ந்ததும் ஒரு குவளை நீர் அருந்த தந்தார்கள் “ஷாகுல் எல்லாம் ரெடி அஞ்சி நிமிஷம் வட மட்டும் சூடா சுட்டுட்றேன், சாப்பிடலாம்” என்றார்.

தொழுகை நேரம் என்றேன் ஒரு அறையை தந்தார்கள். ஒளு செய்து வேட்டிக்கு மாறிக்கொண்டேன். என் வீட்டை போன்று உணரும்படி செய்தனர் பாலாஜியும்,அமுதா அக்காவும் தொழுகை முடிந்ததும். தலை வாழை இலையில் வெள்ளை சாதம், பருப்பு குழம்பு, சாம்பார், ரசம், தயிர், உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் துவரன், அப்பளம், வடை எண்ணெய் சட்டியிலிருந்து நேராக இலைக்கு வந்தது. ஆவி பறக்க சாப்பிடும்போதே கேட்டேன் “அக்கா இன்னும் ஏதாவது இருந்தா சொல்லுங்க வயித்துல இடம் விடனுமுல்லா”

“ஷாகுல் பாயசம் உண்டு” மகிழ்ச்சியில் நன்றாக உணவுண்ட நாள் அது.வாழைப்பழம் தந்தார்கள். சாப்பிட முடியாது என்றதும் “பேக்ல வெச்சிகுங்க ராத்திரி ட்ரைன்ல போவும்போது சாப்பிடலாம்”. பதினாறாவது மாடியில் இருந்து தெரிந்த சென்னையை கொஞ்ச நேரம் பார்த்தேன்.

மாலை தொழுகையை முடித்துவிட்டு சென்னை புத்தக காட்சிக்கு செல்லும் திட்டம் இருந்ததால் டி நகர் சென்று எனது மருத்துவ அறிக்கையையும் வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்தோம். அமுதா அக்கா கூகிள்அக்கா சொல்லும் வழியை சொல்ல, சொல்ல பாலாஜி ஸார் காரோட்டினார். ஐந்து மணியை தாண்டி மிக தாமதமாக என் மருத்துவ அறிக்கையை தந்தார்கள் பாலாஜியில்.
 

சென்னை புத்தக கண்காட்சியில்



நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் புத்தக கண்காட்சிக்கு சென்றோம். இரவு எக்மோரிலிருந்து புறப்படும் அனந்தபுரியில் டிக்கட் முன்பதிவு செய்திருந்தேன். மிக சரியாகத்தான் ஒய் எம் சி ஏ புத்தக கண்காட்சியில் இருந்து புறப்பட்டோம். கார் நகரவே முடியாத அளவு டிராபிக். பாலாஜி நிதானமும்,பதட்டமுமாக காரோட்டினார். பத்து நிமிடங்கள் இருக்கும்போது குறுக்கு பாதையில் சென்றால் ரயிலை பிடித்து விடலாம் “ஷாகுல் பைய கைல ரெடியா வெச்சிகுங்க கார நிப்பட்டினதும் இறங்கி ஓடிருங்க” என்றார்.

நாங்கள் வந்த வழியில் மிக சரியாக சிக்னல் விழுந்தது. இருநூற்றி நாற்பது வினாடிகள் கழிந்து பச்சை விளக்கு எரிந்ததும் ஜேம்ஸ்பாண்ட் ஓட்டும் கார் போல கார் பறந்தது. எக்மோர் சென்று சேரும்போது ரயிலுக்கு ஒரு நிமிடம் இருந்தது. பைகளுடன் ஆறாவது பிளாட்பாரத்தில் நிற்கும் அனந்தபுரியை நோக்கி படிகளில் தாவியேறி, குதித்து இறங்கிகொண்டிருக்கும்போது ரயில் ஊளையிட்டது. விரைந்தோடி ரயிலை நெருங்கும்முன் ரயில் நகர தொடங்கியிருந்தது. ஏறிக்கொண்டேன்.

பத்து பெட்டிகள் தாண்டி எனது இருக்கையில் அமர்ந்தபின் அமுதா அக்காவிற்கு அழைத்தேன். என்னை அழைத்துசெல்ல காத்திருப்பதாக சொன்னார். நாளை காலை நாகர்கோவிலில் இருப்பேன் என்றேன்.

நாஞ்சில் ஹமீது,
08-april-2025 .
sunitashahul@gmail.com

Friday, 11 April 2025

என் இதயம் - 2

மருத்துவர் மாரிராஜிக்கு எனது இ சி ஜி யை அனுப்பி கொடுத்தேன். “ஷாகுல் ஜி கப்பலுக்கு போயிட்டு வாங்க, அப்புறமா நாமோ ஒரு டெஸ்ட் பண்ணி பாத்துகிடுவோம்” என்றார்.

2023 மே மாதம் ஏழாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு மும்பையில் இரு தினங்கள் தனிமைப்படுத்தல், அங்கிருந்து பனாமாவுக்கு பயணித்து அங்கே ஐந்து தினங்கள் விடுதியறையில் தனிமைப்படுத்தல். கோவிட் எச்சரிக்கைதான்.

கப்பலில் இருக்கும்போது சுனிதா ஒரு நாள் கேட்டாள் “என்ன சாப்ட்டியோ சாறே”. அன்று சனிக்கிழமை மாலை இரவுணவாக பீப் ஸ்டேக் உண்டிருந்ததை சொன்னேன். “பீப் எல்லாம் தின்னா ஒன்னும் பிரச்னையில்லையா”

“நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றேன்.

ஐந்தரை மாத பணிக்குப்பின் சூயஸ் கால்வாயில் இறங்கி பிரமிட் சுத்தி பார்த்துவிட்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வீடு வந்து சேர்ந்தேன். அம்மாத இறுதியில் மருத்துவ தோழி மகேஸ்வரி இல்லம் வந்திருந்தார். அவருடைய ஜூனியர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள. டாக்டர் மகேஸ்வரி எனது இ சி ஜி யை பார்த்துவிட்டு “கை விரல்களை குவித்து மடக்கி இதயம் துடிப்பதை விளக்கினார்.

 “உங்களுக்கு ஒரே ஒரு பீட் கொஞ்சம் குறைவா அடிக்கிது. ரொம்ப ரெயர் கேஸ். ஒண்ணுமில்ல உங்க இதயத்துக்கு” எனச் சொன்னார். சுனிதா என் முகத்தை பார்த்தாள். ஒண்ணுமில்ல என் ஷாகுலுக்கு எனும் நிம்மதி முகத்தில் தெரிந்தது.

2024 ஜனவரி மாதம் அழைத்து பிப்ரவரி முதல் வாரத்தில் எல் என் ஜி அலையன்ஸ் கப்பலுக்கு பணியில் இணைய வேண்டி கோரியது என் நிறுவனம். மருத்துவ பரிசோதனைக்கு செய்து அறிக்கையை உடனே தர வேண்டினார் அலுவலக உதவியாளர். ஜனவரி இருபதாம் தேதி அதிகாலை வடசெரியிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் சென்றேன். காலையில் அவித்த கருப்பட்டியும், துருவிய தேங்காயும் மிகக் கொஞ்சமாக எட்டுமணி வாக்கில் ஓடும் பஸ்ஸிலேயே சாப்பிட்டேன். 

இங்கே அருகில் வசிக்கும் மூத்த சகோதரி ஒருவர் இலக்கிய வாசகியும் கூட. வீட்டிற்கு வாங்க என எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் மாலையில் உங்கள் இல்லம் வரலாமா? வீட்டில் இருப்பீர்களா என. கண்டிப்பாக வாருங்கள் வீட்டில்தான் இருப்பேன் என முகவரியும் தந்தார்கள்.

ஒன்பது மணிக்கு பாலாஜி மெடிக்கல் சென்று சேர்ந்துவிட்டேன். அன்று சனிக்கிழமை ஆதலால் மதியம் வரைதான் மருத்துவமனை இருக்கும் சீக்கிரமே வரச்சொல்லியிருந்தார்கள்.

அனைத்து சோதனைகளும் முடித்து மருத்துவரை சந்திக்க காத்திருந்தேன். என் பின்னால் வந்தவர்கள் சோதனைகள் முடித்து திரும்பி செல்வதை கண்டு உதவியாளரிடம் கேட்டேன். காத்திருக்க சொன்னார்கள். இங்கும் கண்ணாடி அணிந்த இளம்பெண் மருத்துவர். “ஸார் உங்க இ சி ஜி அப்நார்மல்னு இருக்கு. நீங்க கார்டியாலஜிஸ்ட்ட பார்த்து ஒப்பினியன் வாங்கி வரணும்” என்றார்.

“மே மாசம் உங்க சென்னை பாலாஜில மெடிக்கல் பண்ணுனேன், அப்பவும் இதே மாதிரி வந்தது கார்டியாலஜிஸ்ட்ட பாத்தேன், டெஸ்ட்ல எல்லாம் நார்மல்” என்றேன்.

“அந்த ரிபோர்ட்ஸ் இருக்கா”

சிம்ஸ் மருத்துவமனை அறிக்கையை கொண்டு போயிருந்தேன். பையிலிருந்து அதை எடுத்து கொடுத்தேன். அவர்களது தலைமை மருத்துவர் பாலாஜிக்கு அதை அனுப்பிக்கொடுத்துவிட்டு பதிலுக்காக காத்திருக்க சொன்னார்.

ஒரு மணிநேரம் கழித்து என்னை அழைத்து “இந்த டெஸ்ட் செய்து ஆறு மாதம் தாண்டிவிட்டது, நீங்க கார்டியாலஜிஸ்ட்ட பாத்து பிட் சர்டிபிகட் வாங்கி வாருங்கள்” எனச்சொல்லி தூத்துக்குடி எ வி எம் மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து எனக்கு டோக்கன் போடச் சொன்னார். மணி மதியம் ஒன்றாகியிருந்தது.

 “அப்பாயிண்ட்மெண்ட் முடிந்து விட்டது, வேறு டாக்டர் இரண்டரை மணிக்கு மேல் வருவார்” என சொன்னதால் என்னை விரைந்து மருத்துவமனை போக சொன்னார்கள். மூன்று மணிக்கு முன் திரும்பி வரவும் அறிவுறுத்தினார் மருத்துவர் மீனா.

அங்கே ஜவுளிக்கடை நடத்தும் நண்பரை அழைத்து உதவி கேட்டேன். கடை ஊழியர் சுரேசை பைக்கில் அனுப்பி வைத்தார். எ வி எம் மருத்துவமனையின் வரேவேற்பறையில் பணம் கட்டியபின் மருத்துவரின் அறைக்குமுன் சென்று அங்கிருந்த உதவியாளர் பெண்ணிடம் விபரம் சொன்னேன்.

“உங்க முன்னால ரெண்டு டோக்கன் இருக்கு மூணாவதா நீங்க போலாம் டாக்டர் ரெண்டு மணிக்கு மேல வருவார்” என்றாள். சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்றேன். இல்லை காத்திருங்கள் என சொல்லிவிட்டார். எனக்கு நல்ல பசி. மருந்தகம் சென்று பிளேட் வாங்கி கழிப்பறையில் மார்பின் முடிகளை சவரம் செய்ய சொன்னாள்.

மருத்துவரின் அறைமுன்பு காத்திருந்தேன். அங்கே செய்ய வேண்டிய சோதனைகளுக்கான பணம் குறைவாக இருந்ததால் சுனிதாவை அழைத்து சொன்னேன். “ஓ அதே பிரச்சனையா இப்பவும் , செரியா பாருங்க” என சொல்லிவிட்டு என் கணக்கில் பணத்தை அனுப்பினாள்.

மருத்துவரிடம் கடந்த முறை சோதனை செய்த அறிக்கைகளை காண்பித்தேன். கப்பலில் என்ன வேலை எவ்வளவு வருடங்களாக பணிபுரிகிறீர்கள் என கேட்டபின் முதலில் டிரட்மில் டெஸ்ட்டுக்கு அனுப்பினார். அதன்பின் “ஒரு எக்கோ எடுத்து பாத்துருவோம்” என்றார். அதற்கும் பணத்தை கட்டி ரசீதை கொடுத்தேன். எக்கோ டெஸ்டில் எனது இதயம் லப்டப் என துடிப்பதை கணினியில் பார்த்தேன்.

எல்லாம் நார்மல் என்றார் டாக்டர். “என்ன செய்யட்டும் டாக்டர் ஒவ்வொரு முறையும் இப்படி ஆகிறதே”

“ஒன்னும் செய்ய முடியாது, நீங்க வேலைக்கு போகும் முன் மெடிக்கல் டெஸ்ட் பண்ண உங்க கம்பனி சொல்லுது, இ சி ஜி அப்நார்மல் வருது, அதுனால நீங்க ஒவ்வொரு முறையும் இத செய்து ஆகணும்” என்றார்.

மெடிக்கல் சென்டர் என்னை அழைத்து “என்ன ஆச்சு? டாக்டர் போயிட்டாங்க. நீங்க கார்டியாலஜிஸ்ட்ட ரிப்போட்ட திங்ககிழம கொண்டு வாங்க” எனச் சொன்னாள்.

எனது சோதனை எல்லாம் முடிந்து பிட் சர்டிபிகேட் வாங்கும்போது மணி ஐந்தை தாண்டியிருந்தது. நண்பரின் ஜவுளி நிறுவனம் அருகில்தான் இருந்தது. நண்பர் நெடுநேரம் காத்திருந்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் போய்விட்டார். நான் அவரது கடைக்கு சென்று எனது மருத்துவ அறிக்கையை திங்கள்கிழமை பாலாஜி மெடிக்கல் சென்டரில் கொடுக்க சொன்னேன்.

மருத்துவர் மீனா என் நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலை எனக்கும் பார்வர்ட் செய்திருந்தார். ஷாகுலின் இ சி ஜி அப்நார்மலாக இருப்பதால் கார்டியாலஜிஸ்ட்டிடம் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து பிட் சர்டிபிகேட் கிடைத்தபின்தான் அவரது மருத்துவ அறிக்கை தயாராகும் என எழுதியிருந்தது. அதற்கு உடனே கார்டியாலஜிஸ்ட்ட பிட் தந்துவிட்டார் என பதில் அனுப்பினேன்.

காலையில் வீட்டுக்கு வரச்சொன்ன சகோதரியை அழைத்து பேருந்து ஏறப்போகிறேன் என்றேன். ரெண்டுங்கெட்டான் நேரம். எனது பசிக்கு சாப்பிடும் உகந்த வேளை அல்ல அது. மாலை ஐந்து மணியை தாண்டியிருந்தது. இரண்டு கப் சுண்டலும் ஒரு சுக்கு காப்பியும் சாப்பிட்டபின் பேருந்தில் ஏறிக்கொண்டேன்.

சகோதரி சொன்ன இடத்துக்கு அருகில் இறங்கியதும் கல்லூரி படிக்கும் அவரது மகன் வந்து இல்லம் அழைத்து சென்றான். புதிதாய் கட்டிய பெரிய வீடு. முதல் முறையாக அவரது இல்லத்தில் பாதம் பதித்தேன். மகிழ்ச்சியுடன் வரவேற்று அமர சொல்லி குடிக்க தண்ணீர் தந்தார்கள். அங்கிருந்த வயதான இரு பெண்கள் தனது அம்மாவும், கணவரின் அம்மாவும் என அறிமுகப்படுத்தினார்.

“ஷாகுல் சாப்பிடுங்க தோசை ஊத்தி தாறேன்” என அன்பாய் கேட்டார். எனக்கும் நல்ல பசி. மக்ரிப் தொழுகைக்கான நேரம் கடந்திருந்தது. நான் தொழு வேண்டும் என்றேன். ஒளு செய்ய அறையை காண்பித்து சுத்தமான பாய் ஒன்றும் தந்தார்கள்.

தொழுகை முடித்து வந்தேன். வயதான பெண்கள் இருவரும் உள்ளறைக்கு போயிருந்தனர். சகோதரி சுண்டலும் சாயாவும் தந்தார். தோசை சாப்பிடும் முன் இது தேவையில்லையே என எண்ணினேன். எதுவும் சொல்லவில்லை. நீண்ட நேரமாக தோசை அவரது தோசை கல்லிலேயே ஒட்டி பிடித்துவிட்டது போல. பசியில் எதிர்பார்த்து காத்திருந்த நான் இனி தோசை கிடைக்காது எனும் எண்ணம் வந்ததும், “அக்கா நான் இறங்கட்டா” என கேட்டேன். சரி போயிட்டு வாங்க என்றார். பேருந்து நிலையம் வந்து ஆப்பமும் முட்டை கறியும் உண்டுவிட்டு நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினேன். மனதில் அவர்களது தோசை கல்லில் இருந்து ஏன் தோசை இளகவேயில்லை? எனும் எண்ணம் மட்டும் நாகர்கோவில் தொடர்ந்து வந்தது.

சுனிதாவின் சொற்கள் நினைவில் வந்தது “யாரு கூப்ட்டாலும் உடனே அங்க ஆஜர் ஆயிரணும்”.

நாஞ்சில் ஹமீது,

31-March-2025.

Thursday, 10 April 2025

என் இதயம் - 1

கப்பல்காரர்களுக்கு பணியில் இணையும்முன் மருத்துவ பரிசோதனை கட்டாயம். இரத்தம், சிறுநீர் சோதனைக்கு எடுப்பார்கள். எக்ஸ் ரே, இ சி ஜி, கண்பார்வை மட்டுமில்லாது நிறக்குருடு (colour blindness), காது கேட்கும் திறன், சிறுநீரகத்தில் கல் இருப்பதை அறியும் அல்ட்ரா சோனிக் சோதனை ஆகியவையும் உண்டு. 


நாற்பதை தாண்டியபின் டிரட்மில் (treadmill) டெஸ்ட் கட்டாயம். நான்கு ஸ்டேஜ் கொண்ட டிரட்மில்லில் ஓடவிட்டு சோதனை செய்வார்கள். இதயம் எப்படி இருக்கிறது என்பதை அறிய. 


2023ம் ஆண்டு பணியில் இணையும்முன் மருத்துவ பரிசோதனைக்கு என் நிறுவனம் சொன்னபோது சென்னை செல்லும் வேலை இருந்ததால், அங்கே செய்துகொள்கிறேன் என்றேன்.

ஏப்ரல் மாத இறுதியில் அட்டப்பாடி மலை பிரேதசத்தில் ஒரு சிறுகதை பயிற்சி பட்டறை வகுப்பு ஒன்றை ஸீரோ டிகிரி பப்ளிகேஷன் நடத்தியது. அதில் கலந்துகொண்டு சேலம் வரை காரில் வந்து அங்கிருந்து பேருந்தில் சென்னைக்கு சென்றேன்.

நண்பர் அசோக் வீட்டில் குளியலும், காலை உணவும் உண்டபின் டி நகர் பாலாஜி மெடிக்கல் சென்டருக்கு சென்றேன். அனைத்து பரிசோதனைகளும் முடிந்தபின் மருத்துவரை சந்தித்தபோது எனது இ சி ஜி அப்நார்மல் ஆக இருப்பதால் ஒரு இதய மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று அங்கேயே டிரட்மில் சோதனையும் செய்து அவர்கள் மருந்து ஏதாவது பரிந்துரைத்தால் மருத்துவரின் கையொப்பமிட்ட கடிதத்துடன் முத்திரையும் பதித்து வாங்கி வாருங்கள் அதன் பின்புதான் உங்கள் மருத்துவ சான்றிதழ் கிடைக்கும் என்றார் இளவயது பெண் மருத்துவர்.

சுனிதாவை அழைக்கவேயில்லை. என்ன ஆயிற்று என் இதயத்திற்கு என கொஞ்சம் அமைதியை இழந்தேன். அன்று மே ஒன்றாம் தேதி. பொது விடுமுறை நாள். விஷ்ணுபுரம் வட்டத்தை சார்ந்த நண்பர் மருத்துவர் மாரிராஜை அழைத்தேன். “ஷாகுல் இப்ப எங்க இருக்கீங்க” என கேட்டவர், ஐந்து நிமிடத்தில் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் மூத்த இதய நிபுணர் Dr.ஜி என் பிரசாத் அவர்களிடம் நேரம் வாங்கி தந்தார்.

டி நகரிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் மருத்துவமனை போய் சேர்ந்தேன். பாலாஜி மெடிக்கல் தந்த கடிதத்தை கொடுத்தேன். சாப்பிடீர்களா என கேட்டவர், டிரட்மில் சோதனை செய்ய சாப்பிட்டு இரண்டு மணிநேரத்துக்கு பின் உரிய துணையுடன் வரவும் என சொன்னார். நண்பர் கே பி வினோத்தை அழைத்தேன். விஷயம் எதும் சொல்லாமல் வடபழனி வர இயலுமா எனக்கேட்டேன்.

கேபி வினோத் - 4 சீசன்ஸ் இயக்குநர்


அலுவலக மீட்டிங்கில் இருந்தார். தோழி கவிதாவை அழைத்தேன். அவர் அழைப்பை எடுக்கவில்லை. மருத்துவமனை ஊழியரிடம் பேசினேன். மருத்துவரிடம் பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு வந்து இங்கே பதிவு செய்துவிட்டு காத்திருங்கள் என்றார்.

காத்திருந்த நேரம் கடினமானது. கப்பலுக்கு செல்லும்போது, ஒரு ஸ்ட்ரிப் பராசிட்டாமால், ஜண்டு பாம், காயத்திருமேனி தைலம், அஞ்சால் அலுப்பு மருந்து போன்றவை கொண்டு செல்வேன். அரிதாக மாத்திரை முழுங்கியிருக்கிறேன்.

கடந்த எட்டு ஆண்டுகளாக பாராசிட்டமால் மற்றும் ஜண்டு பாம் கொண்டு வருவதில்லை. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கோவிட் காலத்துக்குபின் ஆண்டி பயாடிக் மற்றும் கபசுரகுடிநீர் பொடியை சுமந்து கொண்டிருக்கிறேன். அதுவும் பிறருக்கு உதவும் பொருட்டுதான். திடீரென இதயத்திற்கு என்ன ஆயிருக்கும் என தோன்றும்போதே, ஒண்ணுமில்ல நீ நல்லா இருக்கா எனும் மறு எண்ணம்.

வடபழனியின் சிம்ஸ் மருத்துவமனை மிகப்பெரியதாக இருந்தது. இதய நோயாளிகள் நிறையபேர் பரிசோதனைக்காக காத்திருந்ததை கண்டேன். இரண்டு மணிநேரத்திற்கு பின் ஊழியர் ஒருவர் தனியறையில் மார்பின் மயிர்களை சவரம் செய்து களைந்தார்.

அங்கேயே மார்பு, மார்புக்கு கீழே, முதுகு என பன்னிரெண்டு இடங்களில் பசை கலந்த பட்டன் ஒன்றை ஒட்டியபின் அதனுடன் இணைந்த வயர் டிரட்மில் மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்டபின் சோதனை தொடங்கியது.

முதலில் வேக நடை. கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரிக்கும். நான்காவது ஸ்டேஜில் மலைமேல் ஏறுவதுபோல் கடினமானது. எப்போதும் நடைபயிற்சி, மருந்துவாழ்மலையில் ஏறுதல் என நான் இருப்பதால், இந்த சோதனை எனக்கு எளிதாக இருந்தது. இதயத்தில் ஒரு பிரச்னையும் இல்லை என்றால் மட்டுமே நான் பணிக்கு செல்ல முடியும். என் இதயத்திற்கு ஒன்றும் இல்லைதான். ஆனாலும் என்ன ஆயிற்று எனும் சிறு பதட்டம் ஆழ் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

டிரட்மில் சோதனை செய்த பெண்ணிடம் கேட்டேன் “இந்த வயர நெஞ்சில பொருத்தத்துலே, பயந்துருவாங்களே”

“ஆமா ஸார் அப்டி இந்த டெஸ்ட் பண்ணாம போறவங்க நிறையப்பேர் உண்டு” என்றாள்.

சோதனை முடிந்து மருத்துவரை சந்திக்க காத்திருந்தேன். “ஷாகுல் ஹமீது” என்று காதில் சப்தமாக கேட்டது. “ஸார், நீங்களா” என கேட்டுவிட்டு மருத்துவரின் அறைக்குள் போக சொன்னாள்.

டிரட்மில் சோதனையில் வந்த இ சி ஜி நகல் இளம் மருத்துவர் ஒருவர் கையில் இருந்தது. மூத்த மருத்துவர் பிரசாத் அவரிடம் “ஸீ திஸ் இ சி ஜி” எனச்சொல்ல அவர் அந்த கிராப் காகிதங்களால் புரட்டிக்கொண்டே இருந்தார். அதன் ஒரு பக்கத்தை சுட்டி காட்டி மூத்தவர் இளையவரிடம் மருத்துவ மொழியில் விளக்கம் கொடுத்தார்.

நான் மூத்தவரிடம் “டாக்டர் எதாவது பிரச்சனையா” எனக்கேட்டேன். “நத்திங், உங்க டாக்டர் அதைச்சொல்லுவாங்க” என்றார். எனக்கு மருந்துகள் ஏதும் தரவில்லை.

கப்பலில் பணிபுரிய தகுதியுடன் இருக்கிறார் என்ற சான்றிதழ் அவரது கையொப்பமிட்டு, முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து டி நகர் சென்று பாலாஜி மெடிக்கல் சென்டரில் அறிக்கையை கொடுத்தேன்.

மருத்துவர் “ஆல் ரைட் ரிப்போர்ட் வாங்கிகிடுங்க” என்றார்.

“ஹார்ட் டாக்டர் உங்களிடம் கேட்க சொன்னார் என்ன பிரச்னை என” கேட்டேன்.

“ஒண்ணுமில்ல” என சொல்லி சிறிய பற்கள் தெரிய சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்தேன்.

நான் கப்பல் கொண்டு செல்வதற்காக மருத்துவ அறிக்கையை என் கையில் தந்தார்கள். அதை மின்னஞ்சலில் என கப்பல் நிறுவனத்துக்கும் அனுப்புவார்கள். 






சகோதரி புவனாவின் கணவர் பாலா மதிய உணவுக்கு என்னை அழைத்திருந்தார். நாள் முழுவதும் மருத்தவமனையில் கழிந்தது. காலையிலேயே நண்பர் அசோக்கிடம் சொல்லிவிட்டு வந்திருந்தேன் இரவுணவுக்கு அனைவரும் ஒன்றாய் வெளியே செல்லலாம் என.

மாலையில் மிக தாமதமாக பாலாவை அழைத்தேன். கிண்டி ரயில் நிலையம் வந்தார். “வீட்டுக்கு வருகிறேன், ஆனால் பார்த்துவிட்டு உடனே தாம்பரம் செல்ல வேண்டும்” என்றேன்.

“நீங்க வறீங்கன்னு புவனா ரொம்ப எதிர்பார்த்து இருக்கா, வந்துட்டு உடனே போனா அவ ஏமாந்து போய்விடுவாள்” என்றார். அசோக்கை அழைத்து “டின்னர் நாளைக்கி வெச்சிகிடலாம்” என்றேன்.

சுனிதாவை அழைத்து விபரம் சொன்னேன். “எப்பவும் சின்ன புள்ள கிடையாது, மெடிக்கல் போறதுக்கு மின்ன நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு போணும்,  ராத்திரி எல்லாம் உறங்காம போனா, கொஞ்சமாவது தன்ன பேணிக்கிடாண்டாமா” எனச் சொன்னாள் 



மேலும் ...

நாஞ்சில் ஹமீது,

30 -03-2025.

Friday, 4 April 2025

இந்த வாரம் இரு வெள்ளிக்கிழமைகள்

 



இன்று எங்களுக்கு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வியாழக்கிழமை, நாளை நான்காம் தேதி வெள்ளிக்கிழமை நாளை மறுநாளும் நான்காம் தேதியாகவே இருக்கும். இவ்வாரம் இரு வெள்ளிக்கிழமைகள்.

முன்பு காணாமல்போன செவ்வாய்க்கிழமை என சன்னிஜாய் நாட்குறிப்பில் எழுதியிருந்தேன். அப்போது அமெரிக்காவிலிருந்து பனாமா கால்வாய் தாண்டி ஆசியாவுக்கு போய்க்கொண்டிருந்தோம்.

மார்ச் மாதம் சைனாவின் இரு துறைமுகங்களில் சரக்கை இறக்கியபின் ஒரு நாள் பயணித்து கொரியாவின் இன்சொனுக்கு அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்று கப்பலுக்கு எண்ணெய் நிரப்பினோம். எண்ணெய் தரவேண்டிய கப்பல் எங்கள் கப்பலில் ஒரு செல்ல முத்தம் தந்ததால், முழுநாளும் அங்கு நின்று எங்கள் கப்பலை சோதனைசெய்து கப்பல் பயணிக்க தயாராக இருக்கிறது என உறுதியானபின் இருபத்தி ஐந்தாம் தேதி மதியம் கப்பல் புறப்பட்டது பனாமாவை நோக்கி.

இருபத்தி மூன்று நாட்கள் வட பசிபிக் கடலில் பயணித்தால்தான் பனாமாவை அடையமுடியும். கப்பல் ஜப்பானை தாண்டியபின் எங்கள் பயணப்பாதையில் புயல் ஒன்று மையம் கொள்வதால் ஏழு மீட்டர் அலையும் கடுமையான கடல் கொந்தளிப்பும் இருக்கும் என எச்சரிக்கை வந்தது.

காப்டனும் நேவிகேசன் அதிகாரிகளும் கப்பலின் பயணப்பாதையில் சிறு மாற்றம் செய்தபோது கப்பல் சென்று சேர்வதில் இன்னும் இரண்டு நாள் தாமதமானது. அதாவது இருபத்தி ஐந்து நாள் நடுக்கடலில் இடைநில்லா பயணம். பன்னிரெண்டு நாட்களுக்குப்பின் ஹவாய் தீவு கொஞ்சம் தூரத்தில் தெரியும். உத்தேசமாக எட்டாயிரம் மைல்களுக்கு மேல்.

சைனாவில் இருக்கையில் கப்பலின் கடிகாரம் GMT+8 ஆக இருந்தது. தைவானிலிருந்து, ஆஸ்திரேலியாவிற்கும் அங்கிருந்து சைனாவுக்கும் என பயணித்த ஒரு மாதத்திற்கு மேல் கடிகார மாற்றமில்லாமல் இருந்தது. கொரியாவிற்கு வரும்போது ஒருமணிநேரம் முன்னகர்ந்து GMT+9 ஆக மாறியது.

பசிபிக் கடலில் பயணிக்க தொடங்கியபின் இரு தினங்களுக்கு ஒருமுறை கப்பலின் கடிகாரம் ஒரு மணிநேரம் வீதம் முன்னகர்த்தி கொண்டே செல்ல வேண்டும். பனாமாவின் கடிகாரம் GMT-5 ஆகும்.

சைனாவுக்குப்பின் இதுவரை கடிகாரத்தை நான்கு மணிநேரம் முன்னகர்த்தி இப்போது GMT+12 ஆக இருக்கிறது. நாளை இரவு அதாவது ஏப்ரல் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு மணிநேரம் முன்னகர்த்தி ஒரு நாள் பின்னால் நகர்த்தபடும்போது கப்பலின் கடிகாரம் GMT-11 ஆகிவிடும்.

அதாவது இந்த பயணத்தில் நூற்றி எண்பது டிகிரியில் சர்வதேச தேதி கோடு இருக்கிறது. அதை தாண்டும்போது மீண்டும் ஒரு நாள் அதிகமாகி விடுகிறது. இந்த வாரத்தில் இரு வெள்ளிக்கிழமைகள். முப்பது நாட்கள் கொண்ட ஏப்ரல் மாதம் எங்களுக்கு மட்டும் முப்பத்தியொரு நாட்களாக இருக்கும்.

எல்லா மாதமும் முப்பது நாட்களுக்கு கணக்கிட்டுத்தான் சம்பளம் தருகிறார்கள். எனவே அதிலும் பலனில்லை. பழைய முறைப்படி வார சம்பளம் வழங்குவதாக இருந்தால் இந்த வாரத்தில் ஒருநாள் சம்பளம் அதிகமாக கிடைக்கும்.

சரியாக கணக்கிட்டால் நாங்கள் சைனாவிலிருந்து பனாமா செல்வது வரை பதினோரு மணிநேரத்தை முன்னகர்த்தி ஒரு நாளை பின்னகர்த்துகிறோம். பதிமூன்று மணிநேரம் மட்டுமே இந்த பயணத்தில் கிடைக்கிறது. கடிகாரம் முன்னோக்கி நகர்த்தும் நாட்களில் ஒரு நாளில் எங்களுக்கு இருபத்தி மூன்று மணிநேரம் மட்டுமே கிடைக்கிறது.

அவ்வாறு இருபத்தி நான்கு மணிநேரம் கொண்ட ஒரு நாளை பின்னோக்கி நகர்த்தி பதிமூன்று மணிநேரத்தை அதிகமாக பெற்றாலும் கணக்கில் ஒரு நாள் அதிகமாக வந்ததாக ஆகிவிடுகிறது. இப்படி கப்பல்காரனுக்கு மட்டுமே கிடைக்கும் அதிசய சுவாரசியங்கள் நிறைய. 

 






அதிலும் அதிசயம் ஏப்ரலில் நான்காம் தேதி கப்பலின் முதன்மை அதிகாரி ஆசிஸ் சௌத்ரிக்கு பிறந்த நாள். நான்காம் தேதியை பின்னோக்கி நகர்த்தி இன்னுமொரு நாள் நான்காம் தேதியாக ஆக்குவதால் இரு வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல இரு பிறந்தநாள் கூட. 



 

உமேஷின் பிறந்த நாள்


மூன்றாம் தேதியான இன்று மோட்டார் மேன் உமேசுக்கு பிறந்தநாள். கேக் வெட்டி கொண்டாடினோம். அவர் சிறு பார்ட்டி கொடுத்தார். முதன்மை அதிகாரி அதிக சம்பளம் வாங்குபவர். டெக் டிப்பாட்மெண்டின் ஹச் ஒ டி. இரு நாள் பார்ட்டியும் (இன்றுதான் நானூறு டாலர்கள் சம்பளம் அதிகரித்த செய்தி வந்தது) ஒரு நாள் விடுமுறையும் கோரினோம்.

அரை நாள் விடுமுறையும் பார்டியும் தருவதாக சொன்னார். இரண்டாவது பிறந்தநாளில் பீர் மட்டும் தருகிறேன் என போசனிடம் சொல்ல அவரும் குஷியாய் தேங்க்யூ ஸார் என்றார். 



 


அவ்வாறு எங்களுக்கு இவ்வாரம் இரு வெள்ளிக்கிழமைகள்.

நாஞ்சில் ஹமீது,

04-04-2025.