இருபத்தோரு ஆண்டுகளாக கப்பலில் பணிபுரிகிறேன். கப்பலை ஓட்டுவதுதான் எங்களின் வேலை.கப்பல் நிற்கக்கூடாது எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும். குறிப்பிட்ட நேரத்தில் துறைமுகம் சேர்ந்திருக்க வேண்டும்.
சரக்கு ஏற்றுதல் அல்லது இறக்குதல் முடிந்தபின் கட்டபட்டிருக்கும் கப்பல் உடனடியாக புறப்பட வேண்டும். கால தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் கட்டணம் டாலர்களில் கண்டிப்பாக செலுத்தவேண்டும். கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் இடத்திற்கும் கட்டணம் உண்டு. கப்பலை துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வரும் பைலட் (வழிகாட்டி) கப்பலுக்குள் வந்தபின் இஞ்சினில் கோளாறாகி தாமதித்தால், அப்போது கப்பலை கட்டியிழுத்து வெளியே கொண்டு செல்ல அணைந்த்திருக்கும் டக் போட், மூரிங் கேங் ஆகியோருக்கும் அதிக தொகை கொடுக்க வேண்டும்.
கப்பலின் முதலாளிக்கு தினசரி வாடகையாக பணம் கொடுப்பது, சார்ட்டர், அதாவது சரக்கை கையாளும் நிறுவனம். கப்பலின் இயந்திரங்களின் கோளாறினால் ஏற்படும் தாமதத்திற்கு சார்ட்டர் பொறுப்பேற்க மாட்டார். அது கப்பல் முதலாளி தலையில் விழும்.
இயந்திர கோளாறுக்கு காரணம் காட்டி இஞ்சினியர்,காப்டன் வேலையிழக்க நேரிடும்.
எங்களின் வேலை இயந்திரங்களுடன். ட்ரபுள் சூட்டிங் (troubleshootting) அதாவது diagnosing டாக்டர் நோயை கண்டுபிடிப்பது போல இயந்திரத்தின் பிரச்சனையை கண்டுபிடிக்க தெரிந்தவர் நல்ல இஞ்சினியர். இயந்திரத்தின் மொழியான, சூடு,அதிர்வு, சப்தம் ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கும் அனுபவம் உள்ள இஞ்சினியர்கள் இருந்தால் கப்பல் நிற்காமல் ஓடும்.
இயந்திரங்களுக்கு அரசியல் கிடையாது,லஞ்சம் கேட்காது, மதுப்பழக்கம்இல்லை, ரூம் போட்டு ஒரு பெண்ணையும் கூட்டி தா என கேட்கவே கேட்காது.
இந்த கப்பல் தொழில் சிறப்பாக நடக்க வேண்டுமெனில் கரையில் கப்பலை கரையணைய வைத்தல், குடியுரிமை சோதனை, சுங்கம், பைலட் அரேஞ்மெண்ட் என சிக்கலான நிறைய பணிகளை துறைமுகத்தில் செய்யவேண்டியிருக்கிறது.
அந்த ஷிப்பிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை செய்யும் அமுதன் தான் அஸ்தினாபுரம் கதையின் நாயகன்.
ஒவ்வொரு முறையும் கப்பல்களை கரையனைய வைத்து சரக்கு நிறைத்து அல்லது சரக்கு இறக்கி பாதுகாப்பாக கப்பலை வெளியே அனுப்பும்முன் அமுதன் சந்திக்கும் சிக்கல்கள், தலைமை அலுவலகம் தரும் அழுத்தம், சகஅதிகாரிகள், ஊழியர்களின் ஒத்துழையாமை, அவர்களுக்குள் இருக்கும் அரசியல், துறைமுக அதிகாரிகள், காவலர்கள், வாகன ஓட்டிகள், சரக்கு ஏற்றும் இறக்கும் தொழிலாளர்கள், போட்டி நிறுவனங்கள் என எந்த நிமிடத்திலும் நினைத்தே பார்க்க முடியாத பிரச்சனைகள் எழக்கூடும்.
![]() |
| நூல் ஆசிரியர் ஜோ டி குரூஸ் |
இவை அனைத்தையும் தனது அனுபவம், தொலைநோக்குடன் கூடிய பார்வை, அதிகாரிகளுடன் பணிவாக பேசுதல் என மிக திறமையாக செய்கிறார் அமுதன்.
துறைமுக தலைமை பொறுப்புக்கு வரும் அதிகாரிகள் அதற்குரிய அறிவும், தொலைநோக்கு பார்வையும் இல்லாததால் உள்ளூர் துறைமுகங்களுக்கு வரவேண்டிய வருமானம் வெளிநாட்டிற்கு செல்வதை (சிங்கப்பூர் துறைமுகம்) அத்தியாயம் இருபத்தி ஆறில் விரிவாக விவரிக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். அரபிக்கடலில் குஜராத் முதல் வங்காள விரிகுடா கல்கத்தா வரை மிக நீண்ட கடற்கரையை கொண்ட இந்தியா கப்பல் தொழில் ஜொலித்து, பல ஆயிரம் கோடிகள் அந்நிய செலவாணியை ஈர்க்க தவறியதை சொல்வதும் நேர்த்தி.
தான் செய்யும் பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்வதால் அமுதனுக்கு ஓய்வு நாளிலும் பணி செய்ய நேர்கிறது. நள்ளிரவு, அதிகாலை என எந்த நேரத்திலும் துறைமுகத்தில் ஏற்படும் விபத்து, அலுவலக்கத்தில் நடக்கும் குளறுபடி என அமுதனை போனில் அழைக்கிறார்கள். பிறரால் சரி செய்யமுடியாத எல்லா சிக்கல்களையும் தனது விவேக புத்தியால் தீர்த்து கப்பல்களை உரிய நேரத்தில் அவரால் அனுப்பிவைக்க முடிகிறது.
ஆமந்துறை கடற்கரை கிராமத்தில் பிறந்த அமுதன் சென்னையில் முனைவர் ஆய்வில் இருக்கும்போது வழிகாட்டியால் பல ஆண்டு இழுத்தடிக்கப்பட்டு, அவரின் வீட்டு வேலை, அவரின் கீப்புக்கும் பணிவிடை செய்தும் பலனில்லாமல் ஆய்வை முடிக்காமலே வெளியேறுகிறார்.
கட்டிய மனைவியை பிரிகிறார், பெற்ற தாயால், உடன்பிறந்த சகோதரனால் வஞ்சிக்கபடும் அமுதன். தாய் எஸ்கலின், இப்படியும் ஒரு தாய் இருப்பாளா? என அதிர்ச்சியடைய வைக்கிறது. கணவன் அமுதன் அருகில் இருக்கும்போதே, மனைவி புனிதாவிடம் தாலியை கழற்றி வாங்கும் காட்சி.
வாழ்வை துவங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் பிரச்சனையை சந்திக்கிறார். கொஞ்சம் நிம்மதி முதல் திருமண பிரச்சனைக்களுக்கிடையில் இரண்டாவதாக திருமணம் செய்யும் தாய், தந்தையை இழந்த ஆனந்தி மற்றும் அவரது குழந்தைகள் எழிலன், அமலா மட்டுமே.
பெற்ற தாய், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என கூடவே இருக்கும் மனிதர்களின் குரோதம், கசப்பு, தந்திரம், சூழ்ச்சியை அமுதனின் மனக்குமுறல்களாக கொட்டபட்டுள்ளது.
பெரும்பாலானோர் அறியாத கப்பல் தொழிலின் ஒரு பக்கமான ஏஜென்சியின் பங்கு என்ன என்பதை மிக விரிவாக சொல்கிறது. ஒரு துறைமுகம் எப்படி இருக்க வேண்டும். அதில் இன்னன்ன வசதிகள் இருந்தால், அதிகாரிகள் எப்படி இருந்தால் துறைமுகமும் கப்பல் தொழிலும் சிறக்கும் என்பதை துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது.
என்னை போன்ற கப்பலில் வேலை செய்பவர்களுக்கு பணியில் இணைந்துவிட்டால் கப்பல் நின்றாலும், ஓடினாலும் சம்பளம் உண்டு. ஆனால் கப்பல்களில் சரக்கை, நிறைத்து உரிய இடத்தில் சரியான நேரத்தில் இறக்கினால் மட்டுமே கப்பல் முதலாளிகளுக்கும் அது சார்ந்து வாழும் பல கோடி பேருக்கும் வருமானம்.
கடல் வாணிபம் லாபத்தை கொட்டி கொடுப்பது மட்டுமல்ல, மிககுறைந்த செலவில் பொருட்களை கொண்டு செல்ல முடிவதும் நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே. அதில் சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம் போன்றவை வெற்றிபெற்ற நாடுகள். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிய நாடு இந்தியா என்பதும் இந்த நாவலை வாசித்ததில் புரிந்தது.
விறுவிறுப்பான நடையில் கப்பல் போக்குவரத்தின் ஒரு பக்கத்தை வாசகர் புரியும் மொழியில் சொல்லியிருகிறார். அவர் அந்த துறையில்தான் பணிபுரிகிறார் அந்த அனுபவத்தாலேயே மிக விரிவாக இதில் சொல்ல முடிந்திருக்கிறது.
நான் பிறந்த கிராமமான மணவாளகுறிச்சி நாவலில் இருமுறை வருவதும் மகிழ்ச்சியை தந்தது.
நான் பணிபுரியும் கப்பல் துறையில் நான் அறியாத மறுபக்கத்தை அஸ்தினாபுரம் நாவல் அனுபவமாக தந்தது.
நன்றியும், வாழ்த்துகளும் ஜோ.டி.குருஸ் ஸார்.
நாஞ்சில் ஹமீது.
(கப்பல் காரன்)

















































