Thursday, 30 April 2026

விடுமுறை நாட்கள்

 


    அதிகாலை குளியலுக்குப்பின் ஆறரை மணிக்கு பிரிட்ஜில் அழைத்தேன். “காப்டன்” என பதில் வந்தது, “காஸ் பிட்டர், வாட் டைம் ஸ்டேஷன்” எனக்கேட்டேன். ஏழு மணி என பதிலளித்தார்.

 நேற்றிரவே இரண்டாம் அதிகாரி சொல்லியிருந்தார் காலை ஏழு மணிக்கு பைலட் என.காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவதால் போனில் அழைப்பான் வைப்பதே இல்லை.ஆறரை மணிக்கு தயார் ஆனால் போதும். இரவுகளில் பத்துமணிக்கே தூங்க சென்று விடுவேன். அதிகாலை ஐந்துக்கு முன்பே விழிப்பு தானாவே வந்துவிடும். இந்த ரமலானுக்கு பின் இரவுணவு சாப்பிடுவதில்லை நாற்பது நாட்கள் ஆகிவிட்டது. டீ,காபியும் இல்லை.இரவு ஏழு மணிக்கு முன்பாக ஊற வைத்த ஐந்து பாதாம்பருப்பு, ஒரு கப் பால். இரவில் வயிறும்,உடலும் லேசாக இருக்கிறது கனமே இல்லை அதனாலேயே நல்லுறக்கம்.காலை ஏழேகால் மணிக்கு காலை உணவுக்கு செல்வேன்.

  இன்று காலை ஆறு நாற்பதுக்கே ஸ்டேஷன் என ஒலிபெருக்கியில் அறிவித்தார் காலை பணியில் இருந்த மலேசிய மூன்றாம் அதிகாரி சபரி. ஆடை மாற்றி டெக்கில் செல்லும்போது குட்மார்னிங் என முகம் பார்த்து புன்னைகைத்து வயதான பைலட்டை தொடர்ந்து ஒரு இளம் பைலட்டும் பிரிட்ஜை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.கேடட் பிலிப்பைன்சின் ரிஜி அழைத்து சென்றுகொண்டிருந்தார்.

  ரிஜி இம்மாதம் நான்காம் தேதி கொரியாவில் பணியில் இணைந்தான். இருபத்திநான்கு வயதான ரிஜி பணியில் இணைந்த இருதினங்களில் அவனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இளம் தந்தையான அவனுக்கு வாழ்த்து சொல்லி நலம் விசாரித்தபோது இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றான். முப்பது வயதான அவனது கேள்ல் பிரண்ட் அவளது பொற்றோருடன் இருப்பதாக சொன்னான். 

 பெரிய ப்ளே பாயாக இருந்திருப்பான் போல. தேநீர் இடைவேளைகளில் ஆந்திராவின் இருபத்தைந்து வயதான ஓஎஸ் பிரதீப்புக்கு பெண்களுடன் உறவுகொள்வது எப்படி என வகுப்பெடுக்கிறான்.

  பிலிப்பைன்ஸ் பணியாளர்கள் இரண்டு அல்லது மூன்று வங்கி கணக்குகளில் பணம் அனுப்புவார்கள். திருமணதிற்கு முன் ஒரு குழந்தை பிறந்திருக்கும் அவனது பதினேழு வயதில் அந்த குழந்தையின் தாய் பிரிந்து சென்றிருப்பாள். வேறு கல்யாணம் செய்திருப்பான் ஆனாலும் ஒரு கேள்ல் பிரன்ட் நிச்சயம் இருப்பாள்.

  கேரளாவின் வயதான பத்திசாப் அலெக்ஸாண்டர் சொல்வார். “எந்தா ஒரு லைப் இவ மார”என்று. முன்பு என்னுடன் பணிபுரிந்த சாங் என்பவனின் மனைவி பழைய காதலுடன் சென்றுவிட்டாள். அவனது வீட்டில் உடன் பிறந்தவர்கள் தாய் உட்பட பதினாறு பேர். குடும்பத்திற்கும் பதினாறு வயதில் கல்லூரி படிக்கும் மகளுக்கும் சாங் பணம் அனுப்புவார்.

  வாங் தாவ் துறைமுகம் கடலிலிருந்து பதினேழு மைல் தொலைவில் இருக்கிறது. கடலில் இணையும் ஆற்றில் மிகப்பெரிய கப்பல்கள் வர முடியும். இங்கிருந்து ஹோசிமின் சிட்டி வரை இந்த ஆறு கொஞ்சம் சிறிதாக நீள்கிறது. இங்கே இறக்கப்படும் சரக்கு பெட்டகங்களை ஏற்றி சிறு கப்பல்கள் ஹோசிமின் சிட்டி வரை பயணிக்கிறது என கணிக்கிறேன். தேடிப்பார்த்து உறுதி செய்யவேண்டும்.

  நிறைய சிறிய கப்பல்கள் ஆற்றில் சென்றுகொண்டே இருக்கிறது. ஏழு மணிக்கு நான்கு டக் போட்கள் கப்பலுடன் கட்டப்பட்டு கரையிலிருந்து இழுந்து பின்னோக்கி நகர்ந்து ஆறு கிளை பிரியும் இடத்தில் பாதுகாப்பாக திருப்பி பயணிக்க தொடங்குகையில் எட்டு மணியாகியது.காலை உணவுக்குப்பின் முதன்மை அதிகாரி தினேஷ் “அண்ணா இஎஸ்டி கவர் எல்லாம் போட்டு செக்யூர் பண்ணிருங்க,ரெஸ்ட்க்கு போங்க, நாளைக்கு மே டே ஹொலிடே” என்றார். 

  காஸ் இஞ்சினியர் அருண் “பாலாஸ்ட் சிஸ்டத்தை பிளஸ் பண்ணிருங்க” என்றார். இங்கே கிட்டதட்ட எண்பதாயிரம் மெட்ரிக் டன் திரவத்தை இறக்கினோம். கப்பலின் சமநிலைக்காக பாலஸ்ட்தொட்டிகளில் நீர் நிறைப்போம். ஆற்றுநீர் சகதி கலந்து இருந்ததால் காஸ் இஞ்சினியரும்,முதன்மை அதிகாரியும் இரவு முழுவதும் தூங்கவேஇல்லை . பலாஸ்ட் பம்ப் தந்த பிரச்சினையால்.

  இன்று காலை பத்தரை மணிக்கே எனது பணிகள் முடிந்துவிட்டது. காஸ் இஞ்சினியரும்,முதன்மை அதிகாரியும் கார்கோ கட்டுப்பாட்டு அறையிலிருந்தனர். “எங்கண்ணே போறீங்க செயர்ல உட்காருங்க” என்றார். பதினொன்றே கால் வரை அவர்களுடன் பேசிகொண்டிருந்தேன். சரக்கு நிறைக்க வந்த வழியில் பயணம் ஆஸ்திரேலியாவை நோக்கி. பதினொன்றாம் தேதி போய்சேர்வோம்.

Engine control room.


 இந்தவாரம் துவங்கிய வேகத்திலேயே முடிந்துவிட்டது.நாளை மே டே விடுமுறை நாள். சனிக்கிழமை அரைநாள் மட்டுமே பணி மாலையில் ட்ரில்ல்ஸ் இருக்கும்.பயணத்தில் இருப்பதால் இந்த வார ஞாயிறு விடுமுறை உறுதி.

நாஞ்சில் ஹமீது,

30 april 2026.

sunitashahul@gmail.com 

Wednesday, 29 April 2026

வாங் தாவ்.

 


புத்தரிடம்

 வியட்நாமின் வாங் தாவ் துறைமுகப்பிற்கு நேற்று காலை வந்தோம். ஆஸ்திரேலியாவில் ஏற்றிய சரக்கை இங்கே கொடுக்கவேண்டும். மொத்தம் பத்து நாள் பயணதூரம். ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட மூன்றாவது நாள் முதலே நல்ல வெயில்.பயணத்தில் அதிகபட்சமாக முப்பது டிகிரிவரை போனது.

    கார்கோ டிபார்ட்மெண்ட்டில் இருக்கும் எனக்கு சரக்கு இறக்கும் குழாய்களை (மேனிபோல்ட்)தயார் செய்ய வேண்டியிருந்ததால் நான்கைந்து நாட்களாக தலைக்கு மேலே தகிக்கும் சூரியனின் கீழ் தான் வேலை.உதவிக்கு இருதினங்கள் மாலுமி அஜேந்தரும்,ஒரு நாள் காஸ் இஞ்சினியர் அருணும் வந்தார்கள். 

  செவ்வாய்கிழமை இங்கு வந்து சேர்வதாக இருந்தது. திங்கள்கிழமை காலையில் வரமுடியுமா என முகவர் மின்னஞ்சல் செய்திருந்தார்.கப்பலின் வேகத்தை கொஞ்சம் கூட்டி அவர்கள் சொன்ன நேரத்தில் சென்று சேரும் சாத்தியம் இருந்தது.வழியில் கடும் காற்றே,புயலோ அடித்தால் தாமதமாகிவிடும் வாய்ப்பும் உண்டு. அன்று நள்ளிரவே சமாதானமாக செவ்வாய் காலையில் வந்தால் போதும் என மீண்டும் செய்தி வந்ததால் இரவே கப்பலின் வேகம் குறைக்கபட்டது.

  துறைமுகம் எட்டும் முன் செய்ய வேண்டிய பாதுகாப்பு சோதனைகள் சில நாற்பத்தி எட்டு மணிநேரத்துக்கு முன் செய்து ஆவணபடுத்தவேண்டும். அது ஞாயிறு ஓய்வை எதிர்பார்த்திருந்ததை இல்லாமல் ஆக்கியது. காலை எட்டுமணிக்கே துவங்குவோம் என காஸ் இஞ்சினியரிடம் முன்பே சொல்லியிருந்தேன்.

  ஞாயிறு காலை கார்கோ காட்டுப்பாட்டு அறைக்கு சென்றபோது முதன்மை அதிகாரி(மலேசியாவை சார்ந்த முதன்மை அதிகாரி தினேஷ்வரன் முன்பு என்னுடன் காடேட் ஆக இருந்தவர்.பத்து ஆண்டுகளில் உயர்பதவிக்கு வந்துவிட்டார்) காஸ் இஞ்சினியர் யாரும் வரவில்லை. 

 இயந்திர கட்டுப்பாட்டு அறையிலும் அலாரம் வரும் எனவே இஞ்சினியர் ஒருவர் இயந்திர அறையில் இருக்கவேண்டும். இயந்திர அறையில் ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு கூடிப்பிரிவார்கள். ஓய்வு எடுப்பதற்கு கூடி விவாதிக்கும் கப்பல் இதுவே. நானும்,காஸ் இஞ்சினியரும் ஞாயிறு கூட்டத்திற்கு செல்வதில்லை. இந்தவாரம் முதல் எங்களிருவரையும் வந்தே ஆகவேண்டுமென கொரிய முதன்மை இஞ்சினியர் உத்தரவிட்டார்.

ஞாயிறு மதியம் பன்னிரெண்டரை வரை கார்கோ டீம் பணி செய்தோம். டெக் மற்றும் இஞ்சின் ஓய்வில் இருந்தார்கள். திங்கள்கிழமை கப்பல் கரை சேர்வதற்கான அனைத்தும் தயார் நிலையில் இருந்ததால் எனக்கு பணியேதும் இல்லை. அன்றிரவே கப்பல் வாங் தாவ் அருகில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தவிருந்ததால் டெக் மற்றும் இஞ்சின் பணியாளர்களுக்கு இரவில் பணி இருந்தது.

 நங்கூரம் பாய்ச்சி நிறுத்தும் இடத்தில் மீன் பிடி படகுகள் நிறையவே இருக்கும். வாய்ப்பு பார்த்து கப்பலுக்குள் புகுந்துவிடும் கொள்ளையர்கள் உண்டு என முகவர் எச்சரித்திருந்தார்.

  எனவே இரவு பத்துமணிக்கு நங்கூரம் பாய்ச்சி (“இப்ப நடக்க போர் சூழல்ல எவ்ளோ கஷ்டப்பட்டு உங்களுக்கு காஸ் கொண்டு வாறோம்,ஏம்பிலே எங்க கப்பலுக்கு களவாண வாறியோ” என ஐடியா மணி இருந்திருந்தால் கேட்டிருப்பார்) நிறுத்தியபின் டெக்கில் இருவர் வீதம் முறைவைத்து காவல் காத்தனர். கதவுகள் அனைத்தும் உட்புறமாக அடைக்கப்பட்டு இயந்திர அறையும் தயாராக இருந்தது.

  செவ்வாய்க்கிழமை காலை பத்து மணிக்கு பைலட் வரும்நேரம். ஒன்பதுமணிக்கே நங்கூரம் உருவப்பட்டு கப்பல் துறைமுகம் நோக்கி நகர தொடங்கியது. கடைசி கட்ட தயாரிப்புகளை காலை எட்டு மணிக்கே துவங்கியிருந்தோம். முதன்மை அதிகாரி நங்கூரம் மேலெழுந்தபின் வந்து சரக்கு இறக்கும் குழாய்களை குளிர்விக்க தொடங்கினோம்.

 எல்என்ஜி(மீத்தேன்) சரக்கு தொட்டிகளில் (-160 ) டிகிரியில் இருக்கும்.சாதாரண வெப்ப நிலையில் இருக்கும் குழாய்களை ஸ்ப்ரே பம்ப்பை இயக்கி மெதுவாக குளிர்வித்து கார்கோவின் வெப்பநிலைக்கு கொண்டு வருவோம். பதினொன்றரை மணிக்கு கப்பல் கட்டும் பணிக்காக அழைத்தார்கள். அதற்குமுன் உணவுண்டு அனைவரும் தயாராய் இருந்தோம். மூன்று மணிக்கு கப்பல் கட்டப்பட்டது. மதியம் மூன்று மணிவரை இங்கே ஹை டைட் என சொல்லப்படும் நீர்மட்டம் உயர்ந்திருக்கும் அப்போது கப்பல் உள்ளே வந்துவிடவேண்டும். அதன் பின் நீர்மட்டம் குறைய தொடங்கிவிடுகிறது.

   டெர்மினலின் சரக்கு குழாய்களை பொருத்தியபின் அதையும் குளிர்விக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும். நான்கு தொட்டிகளிலுள்ள திரவத்தை இரு குழாய்கள் மூலம் ஏழு பம்புகள் உபயோகித்து உந்தி தள்ள தொடங்கினோம். முழு விசையான 9800 டன்னை எட்ட இரவு எட்டரை மணியானது. டெர்மினல் குழாய்களை குளிர்விக்கும் இடைவெளியில் அறைக்கு வந்து தொழுதுவிட்டு சென்றேன்.

 இரவில் எனக்கு பணியில்லை கார்கோ தீரும் தருவாயில் அழைப்பார்கள். வழக்கமாக பன்னிரெண்டு முதல் பாதினாங்கு மணிநேரமாகும். இங்கே இரு குழாய்கள் மட்டுமே பொருத்தியதால் இருபதுமணி நேரம் ஆகுமென கணக்கிடபட்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கே கரைக்கு சென்று ஊர் சுற்றிவர எட்டு பேர் குழு ஒன்று கப்பலிலிருந்து வெளியேறியது வாங் தாவ் நகருக்கு. இம்முறை ஷோர் பாஸ் வாங்கும்போதே கார்கோ டிப்பார்ட்மெண்ட்டின் கீ வொர்கேர்ஸ் ஆன முதன்மை அதிகாரி,காஸ் இஞ்சினியர் மற்றும் எனக்கு அனுமதிமறுக்கப்பட்டது. 

 கப்பலின் இரு இஞ்சின் காடேட்,ஒரு டெக் காடேட்க்கும் காப்டன் அனுமதி வழங்கவில்லை கூடவே இரண்டாம் இன்ஜினியருக்கும்.காலை எட்டுமுதல் இரவு எட்டுக்கு மேல் பணியில் இருந்ததால் நல்ல களைப்பு அறைக்கு வந்து நீராடி தொழுதபின் கொஞ்சம் வாசித்துவிட்டு பத்தரை மணிக்கு மேல் நல்ல துயில். காலை தாமதமாக விழித்து சமாதானமாக எட்டு மணிக்கு காலை உணவுக்கு சென்றபோது டெர்மினலின் கார்கோ சர்வேயர் உணவு மேஜையில் அமர்ந்து மொபைலை நோண்டிக்கொண்டிருந்தார். “கார்கோ எப்ப முடியும்” எனக்கேட்டேன். மதியம் இரண்டுமணி என்றார் இன்னும் சமாதானமாக காலை உணவுண்டு ஓய்வில் இருந்தேன். கரைக்கு செல்லும் இரண்டாம் குழு பன்னிரெண்டு மணிக்கு புறப்பட்டது. 

 காஸ் இஞ்சினியர் ஒன்றரை மணிக்கு அழைத்தார். சாகுல் ஸாப் பிளீஸ் கம் டூ மேனிபோல்ட்” என. சரக்கு பம்புகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு மூன்று மணிக்கு மேல் சரக்கு கொடுப்பது முடிவடைந்தது. குழாய்களில் மீதமிருக்கும் திரவத்தை பாதுகாப்பாக கப்பலின் சரக்கு தொட்டிக்கு அனுப்பியபின் (நைட்ரஜன் வாயுவை குழாயில் செலுத்தி திரவத்தை அழுத்தி தொட்டிக்குள் அனுப்புவோம். இருமுறை அதை செய்வார்கள்.) டெர்மினலின் குழாயில் திரவம் இல்லை என உறுதியானபின் குழாயை கழட்டி எடுத்தபோது மணி ஐந்தாகியிருந்தது.பணி முடிந்தது. நேற்றை விட இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாக இருந்தது முகில்கள் சூழ்ந்து இருந்ததால்.

   கரைக்கு செல்லும் மூன்றாவது குழு உற்சாகமாக வெளியேறிக்கொண்டிருந்தது. நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கப்பல் துறைமுகம் விட்டு வெளியேறுவது நாளை காலை ஏழு மணிக்கு. இரவு முழுவதும் கப்பலை கட்டிவைத்திருப்பார்கள்.வழக்கமாக கார்கோ ஆப்ரேஷன் முடிந்தபின் வெகுவிரைவில் கப்பலை வெளியேற்றிவிடுவார்கள். கராணம் ஒவ்வொரு நொடிக்கும் கோடிகளில் பணம். நீர்மட்டம் உயர்வதுவரை காத்திருக்க வேண்டியிருப்பதால் கப்பல் கட்டி வைக்கப்பட்டுள்ளது.



  நாளை காலை வரை எனக்கு பணியேதும் இல்லை. ஆனாலும் வாங் தாவ் ஊரில் சுற்றும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.இந்த துறைமுகத்தில் முன்னரே பெயர் கொடுத்து ஷோர்-பாஸ் வாங்கி கொள்ளவேண்டும். முகவருக்கு அனுப்பிய பெயர் பட்டியலில் என் பெயர் இல்லை. வழக்கமாக ஷோர்-பாஸ் அனைவருக்கும் இலவசமாக கொடுப்பார்கள். விரும்புபவர்கள் வெளியே செல்லலாம். இங்கே ஐந்து டாலர் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

 மாலையில் பணி முடிந்தபின் முதன்மை அதிகாரி வெளியே செல்லும் எண்ணத்துடன் முகவரிடம் ஷோர்-பாஸ் வாங்கிதருமாறு கேட்டார். இன்று இங்கே விடுமுறை நாளாம் அதனால் ஷோர்-பாஸ் க்கு ஐம்பது டாலர் அதிக கட்டணம் செலுத்தவேண்டியதை சொன்னார்.அவரும் வெளியே செல்லும் திட்டத்தை கைவிட்டார்.

 இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தபோது இதனருகில் உள்ள ஜெட்டியில் தான் கப்பலை கட்டியிருந்தோம் அப்போது ஒரு முழு பகலும் வெளியே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.ஆயிரம் அடி உயரத்திலிருக்கும் புத்தர் கோவிலுக்கு சென்ற பேரனுபவத்தை கட்டுரையாக்கியிருந்தேன்.

புத்தரிடம்

 பணி முடிந்தபின் கப்பலிலிருந்து வெளியேறி கப்பலை முழுமையாக பார்த்தேன்.வாயிலை கடந்து காலனி மற்றும் காலுறையை உருவிவிட்டு நிலத்தில் பாதம் பதித்தேன். அங்கிருந்த காவலாளி விரைந்தோடி என்னருகில் “வந்து என்ன செய்கிறாய்” எனக்கேட்டார்.அப்போதே டெர்மினலின் குழாய் பொருத்தும் பணியாளர்கள் இருவர் வாயிலுக்கு வந்ததால் கப்பலிலிருந்து மூன்று மாதத்திற்குப்பின் நிலத்தில் கால் வைத்துள்ளேன் உடனே திரும்பி சென்றுவிடுவேன் என அவர்கள் மூலம் வாயில் காவலருக்கு புரியவைத்தேன்.

  குழாய் பணியாளர் வந்த சைக்கிளை வாங்கி கப்பல் வரை உற்சாகமாக மிதித்தேன்.ஜெட்டியில் உள்ள அவரது கட்டுபட்டுபாட்டு அறைக்கு அழைத்து சென்றார். ஐந்தரைக்கு அறைக்குள் வந்தபோது செந்திறத்தில் கதிரவன் முகில்களுக்குள் செல்ல தயாராகியிருந்தது.



நாஞ்சில் ஹமீது,

29 april 2026.

sunitashahul@gmail.com

Sunday, 26 April 2026

கடும் வெப்பமும் – குளிரும்

    


இப்போதெல்லாம் போனில் பேசும்போது சுனிதா “இங்க பயங்கர சூடு” என்பாள். நான் ஜனவரி பதினைந்தாம் தேதி ஹூஸ்டனில் வந்திறங்கியபோது மிதமான காலநிலை இருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து விமானம் ஏறும்போது குளிருக்கான ஜாக்கெட்டை பயணப்பையில் வைத்து லக்கேஜில் போட்டுருந்தேன்.



  ஹூஸ்டனில் மூன்று வாரங்கள் இருந்தேன். அப்போது இங்கே பனிப்புயல் வீசி மைனஸ் இரண்டு டிகிரி வரை சென்றது. விடுதியறையில் வெப்பக்காற்றை இயக்கவேண்டியிருந்தது. டாலஸ் சென்றபோது இதமான குளிர். 

 பிப்ரவரி முதல் வாரம் கப்பலில் ஏறி சரக்கு இறக்க பிரான்ஸ் சென்றோம் அங்கும் நல்ல குளிராக இருந்தது. அங்கிருந்து மார்ச் மாதம் முதல் வாரம் நைஜீரியாவின் போனி துறைமுகம் வந்தபோது அங்கும் இதமான குளிர். அங்கிருந்து கீழே இறங்கி பூமத்தியரேகையை தாண்டும்போது நான்கைந்து நாட்கள் வெப்பம் உயர்ந்தது. அறையின் வெப்பம் இருபத்தியாறு டிகிரியும் வெளியில் முப்பத்தியைந்து வரை இருந்தது. ரமலான் மாதம் முழுவதும் அதிக சிரமமில்லை.

   கீழே இறங்கி தென்னாபிரிக்காவை சுற்றி கொரியாவை நோக்கிய பயணத்தில் வெப்பம் கொஞ்சம் உயர்ந்தது. இந்த மாத முதல் வாரத்தில் கொரியா சென்றபோது வெப்பம் பத்து டிகிரியாக இருந்தது. எனக்கு அது நல்ல குளிர். அறையின் வெப்பம் பதினைந்து டிகிரியாக சென்றுவிட்டது. வெப்ப ஆடைகளை அணிந்து இரு கம்பளி போர்வைகளால் போர்த்திக்கொண்டேன். காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் குளித்து குளிரை விரட்டினேன்.



  காலையில் ஆய்வுக்கு வந்த இரு இளம் கொரிய பெண்களிடம் நல்ல குளிர் என்றபோது “நல்ல கிளைமேட் இதமாக இருக்கிறது” என கண்கள் விரிய சொன்னார்கள். முகத்தில் மாஸ்க் போட்டிருந்ததால் சிரிக்கும்போது உதடு பிரிந்து தெரிந்த சிறிய வெண்பற்களை பார்க்க முடியவில்லை.

  கொரியாவில் இருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவின் கிளாஸ்டோன் சென்றோம் பூமத்தியரேகையை ஒட்டிய பன்னிரண்டு நாள் பயணத்தில் பத்து நாட்களும் கடும் வெப்பம். நல்ல வேளையாக இந்த கப்பலின் நன்னீர் தேக்க தொட்டிகள் இயந்திர அறையின் அதிக சூடு இல்லாத இடத்தில் இருப்பதால் அறையின் குழாயை திறந்தால் நீர் அதிக சூடு இல்லை.வழக்கமாக நல்ல சூடான பிரதேசங்களில் பயணிக்கையில் காலையில் குளித்தபின் இரு வாளிகளில் நீரை பிடித்து வைத்து மாலையில் குழாயை திறந்தால் வரும் சூடான நீருடன் கலந்து வெப்பமில்லாத நீரில் தான் குளிப்பேன். 

 கப்பலில் பணியில் இணைந்தவுடன் அறையில் குறைந்தது இரு பக்கெட்டுகளை தேடி எடுத்து வைத்துக்கொள்வேன்.ஆளுக்கு ஒரு கம்பளி போர்வை தருவார்கள் நான் மெஸ் மேனிடம் கேட்டு மேலும் ஒரு கம்பளியை வாங்கி துவைத்து மடித்து வைத்துக்கொள்வேன். எல்லா கப்பல்களிலும் வெப்பக்காற்று இயங்கும் என உத்தரவாதம் சொல்ல முடியாது. வெளியில் வெப்பம் பத்து டிகிரியாகும் போது அறையின் வெப்பம் பதினாறு டிகிரியாகிவிடும். வெப்ப ஆடைகளை அணிந்து இரு போர்வைக்குள் நுழைந்து உடலின் வெப்பம் வெளியேறாமல் போர்த்திக்கொண்டால் மட்டுமே தூக்கம் சாத்தியமாகும்.

   பத்து நாள் பயணத்தில் ஒரு கடுங்குளிரான பகுதியிலிருந்து கடும் வெப்பமான பகுதிக்கு சென்று சேர்ந்துவிடுவோம். இப்போதும் ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட மூன்று தினங்களுக்குபின் கடும் வெப்பம் தொடங்கியது. வியட்நாமை நோக்கி பயணிக்கிறோம் அங்கேயும் இதே வெப்பநிலை இருக்கும். துறைமுகம் நெருங்கிவிட்டதால் கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் தான் வேலை. முகத்தை மறைக்கும் வெள்ளை துணி சுற்றி கறுப்பு கண்ணாடி அணிந்து பணிசெய்கிறேன்..

  கோடையில் அரபு வளைகுடாவை பொசுக்கும் வெப்பம் இல்லை தண்ணீர் குடித்து தாக்குபிடிக்கும் வெப்பம் தான். இங்கிருந்து மீண்டும் இதே பாதையில் ஆஸ்திரேலியா நோக்கிய பயணம் உறுதியாகிவிட்டது. அங்கு சரக்கு நிறைத்தபின் ஆசியாவின் சீனா அல்லது கொரியாவுக்குதான் பயணம் இருக்கும் மே மாதம் வரை போர் நடக்கும் பகுதிக்கு செல்ல போவதில்லை என்பது ஆறுதலான விஷயம்.

  கப்பல்கள் தாக்கப்படும் செய்திகளை கேட்கும் நண்பர்கள் கவலையுடன் விசாரித்து கொண்டே இருக்கிறார்கள்.

 நாஞ்சில் ஹமீது,

26 april 2026.

sunitashahul@gmail.com

Wednesday, 22 April 2026

கப்பல் காரன் ஓட்டு யாருக்கு.

 



   இன்று அதிகாலையே கப்பல்காரன் டைரியின் வாசகரும்,நண்பருமான சேலம் பிரகாஷ். “அண்ணா உங்களுக்கு ஓட்டு போடமுடியுமா? கப்பலில் இருப்பதால் எதெல்லாம் இழக்கிறீர்கள்”என கேட்டார்.

 எனது வாப்பா காங்கிரஸ்காரர் பள்ளியில் படிக்கும்போது தேர்தல் சமயத்தில் ஆட்டோவிலும் ,ஜீப்பிலும் மைக்கில் சொல்லும் பிரச்சாரத்தை கேட்டுள்ளேன் சுவாரசியாமாக இருக்கும்.சுவர் விளம்பரங்களை படிப்பேன்.(சூரியன் உதிக்காது,கறந்தபால் மடிபுகாது,காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்பன) சிறுவனாக இருந்தபோது. எனது கிராமத்திற்கு தலைவர் எம் ஜி ஆர் ,ஜெயலலிதா,வை கோ ஆகியோர் வந்துள்ளனர் மிக அருகில் பார்த்திருக்கிறேன்.

குளச்சல் எனது சட்டமன்ற தொகுதி ஆ.பாலையா அவர்கள் ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நேர்மையான காங்கிரஸ்காரர் அவர். காங்கிரசின் கோட்டையாக குமரிமாவட்டம் இருந்த காலம் அது. 

  பதினெட்டு வயது பூர்த்தியாகி முதல் முறை ஒட்டு போட்டது சின்னவிளை பள்ளியில். மணவாளக்குறிச்சியில் தான் ஓட்டு எனக்கு. அது பாராளுமன்ற தேர்தல் மறைந்த வாஜபேயி பிரதமரானார்.பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை உறுப்பினராகி,இணையமைச்சராவகவும் இருந்தார்.

  மும்பையில் பணிசெய்தபோது ஊருக்கு வந்து ஓட்டு போட்டுவிட்டு திரும்பி செல்ல ரயிலுக்கு கையில் பணமில்லாததால் வரவில்லை. 2005ஆம் ஆண்டு கப்பல் பணியில் சேர்ந்தபின் பெரும்பாலும் எல்லா தேர்தலின் போதும் கப்பலிலேயே இருக்கிறேன்.

   கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சட்டமன்ற,பாராளுமன்ற தேர்தலின்போது மட்டுமே வாக்களித்த நினைவு இருக்கிறது.கடந்தமுறை ஊராட்சிமன்ற தேர்தல் நடந்தபோது ஊரில் இருந்ததால் மணவாளக்குறிச்சி சென்று பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தேன்.நான் வாக்களித்தவர் வெற்றிபெற்றார்.



இப்போது நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை உள்ளது. ஸ்காட் பள்ளி வாக்குசாவடி மையம். கடந்த சிறப்பு வாக்களர் பட்டியல் திருத்தம்செய்தபோதும் எனது வாக்குரிமையை தக்க வைத்துக்கொண்டேன்.

   கப்பல்காரர்களுக்கு ஓட்டு மட்டுமில்லை பெரும்பாலான பண்டிகைகள்,குடும்பத்தில் நிகழும் அனைத்து விசேஷங்களும் போட்டவாக மட்டுமே கிடைக்கும். ஒருமுறை கப்பலில் விடுமுறை விண்ணபித்த ஒருவரிடம் காரணம் கேட்டார் காப்டன். அண்ணனின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என பதில் சொல்ல. உனது திருமணம் இல்லையே என சொல்லி சிரித்துவிட்டு கப்பல் நிறுவனத்துக்கு விடுமுறை விண்ணபத்தை அனுப்பிவைத்தார்.

  கடந்த பத்து ஆண்டுகளாக எரிவாயு ஏற்றும் டாங்கர் கப்பல்களில் பணிபுரிகிறேன். சோமாலிய கப்பல் கடத்தல்காரர்களிடம் துப்பாக்கி சண்டையில் தப்பித்து நாங்கள் கொண்டுவரும் காஸ் தான் உங்கள் வீடுகளில் அடுப்பெரிகிறது.

தற்போது நடக்கும் போரினால் நிலைமை இன்னும் மோசம். கப்பல்கள் தாக்கபடுவது கவலையை தருகிறது. உலக பொருளாதாரதிற்கு முதுகெலும்பாக இருக்கும் கப்பல் கார்களின் உயிருக்கு ஆபத்தான நேரமிது. இன்றும் இரு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.ஹோர்முஸ் மூடியே இருப்பதால் ஏராளமான கப்பல்கள் சிக்கியுள்ளது அதில் பணிபுரியும் பணியாளர் நிலைமை இன்னும் மோசம். உணவும் தண்ணீரும் பற்றாகுறை இருக்கிறது. அந்த கப்பல்களை வெளியே செல்ல அனுமதித்துவிட்டு சண்டை போடுங்கள் என போர் செய்யும் தலைவர்களை வேண்டுகிறேன்.

  இன்றும் மாலுமிகள் சார்பாக பாரத பிரதமருக்கு கடிதம் எழுத சொல்லி எங்கள் சங்கம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்த நிலைமையில் ஊருக்கு சென்று ஓட்டு போடுவதை கப்பல்காரர்கள் எண்ணவே இயலாது.

 ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே கப்பல் மாலுமிகளுக்கு இணையவழி தபால் ஓட்டு செலுத்த சில முயற்சிகள் நடக்கிறது. அப்படி அது நடந்தால் தமிழ்நாட்டில் சில ஆயிரம் ஓட்டுகளும் இந்தியாவில சில லட்சம் ஓட்டுகளும் பதிவாக வாய்ப்பு உள்ளது.

 கப்பல்களில் இப்போது இணையம் மேம்பட்டுள்ளதால் கீழ்த்தரமான தேர்தல் பிராச்சாரங்களை ஊடகங்கள் மூலம் அறியும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் தமிழகத்தில் நடந்த தேர்தல் திருவிழாவை காணக்கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம்தான்.

 நாஞ்சில் ஹமீது,

21 april 2026

Tuesday, 7 April 2026

தொடரும் போர் பதட்டம் ....

   


   மார்ச் மாதம் ஆறாம் தேதி நைஜீரியாவின் போனி துறைமுகப்பில் கரையணைந்து அறுபத்தி இரண்டாயிரம் மெட்ரிக் டன் (LNG) மீத்தேனை நிரப்பினோம். கப்பல் நைஜீரியா செல்லும் முன்பே அந்த சரக்கை சீனாவுக்கு கொண்டு செல்ல தகவல் வந்தது. மறு நாளே சீனா இல்லை கொரியாவின் இன்சொன் செல்ல வேண்டும் என்றார்கள்.

  மத்திய கிழக்கில் போர் தொடங்கியிருந்த நேரம். எண்ணெய் மற்றும் LPG,LNG கப்பல்களுக்கு அதிக வாடகையில் சவாரி கிடைத்த நேரம். உலகெங்கும் எரிஎண்ணெய்,திரவ வாயுக்கள் தேவைக்கு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் டாங்கர் கப்பல்களுக்கு கிராக்கி அதிகமாயிற்று.



உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடான கத்தாரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சவுதியின் ரஸ்த நூறா எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் குண்டுவீச்சில் நாசாமனது. ஹோர்மூஸ் கால்வாயை ஈரான் மூடியதால் குவைத்,ஈராக்,சவூதி போன்ற நாடுகளிலிருந்து எண்ணையை உலகுக்கு விநியோகிப்பதில் தடை ஏற்பட்டது. இஸ்ரேல்,அமெரிக்க முதலாளிகளுக்கு சொந்தமான கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்டன. அங்கு பெரும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

ஹோர் முஸ் 


 கப்பல் போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. கத்தாரின் கத்தார் ஏர்வேஸ் உலகின் நூறுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விமான சேவை வழங்குகிறது. தோகாவிலிருந்து இந்தியாவின் தில்லி,மும்பை,சென்னை,ஹைதராபாத்,பெங்களூர்,கோவா,கொச்சி,திருவனந்தபுரத்திற்கு தினமும் விமான சேவை அளிக்கும் ஒரு பெரிய நிறுவனம்.அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய,தென்ன்னமரிக்க நகரங்களையும் இணைப்பார்கள். அதுபோலவே துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ்,அபுதாபியிலிருந்து இயங்கும் எதிகாட் நிறுவனமும் உலகின் அதிக நகரங்களுக்கு விமான சேவை வழங்குபவை. எல்லாம் அடியோடு முடங்கி உலக வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. 

  உலகின் அதிகாரத்திலிருக்கும் தலைவர்கள் மாறி,மாறி குண்டுகளை வீசுவதால் பெரும் அழிவுகள் மட்டுமே மிச்சமாகும். உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து போர் செய்யும் நாடுகளை பேச்சு வார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவராமல் ஏன் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

   சூழல் அறிந்த நண்பர்கள் என்னிடம் கேட்டு கொண்டே இருக்கிறார்கள் 

“ஷாகுல் எங்க இருக்கா,கப்பல் இப்ப எங்க பெயிட்டு இருக்கு என”

 நைஜீரியாவில் சரக்கு நிறைத்து புறப்படும் முன் குஜராத்தின் தகேஜ் துறைமுகத்திற்கு செல்லுமாறு பணித்தார்கள். பதினெட்டு நாள் பயணம் உறுதியானது. ஆபத்தில்லாத பாதையில் செல்லலாம். சில தினங்களில் மீண்டும் கொரியா செல்லுங்கள் என்றார்கள். திரவ வாயுவின் விலை உயர்வால். யார் அதிக விலைக்கு சரக்கை வாங்க வாங்குவார்களோ அவர்களுக்கு விற்கும் பொருட்டு எங்களின் சரக்கு இறக்கும் துறைமுகம் உறுதியாகவில்லை.



 இரண்டாம் அதிகாரி அர்ஜுன் “இப்ப எல்லாம் வில கூடி,கூடுதல் பைசா கிட்டுந்த இடத்து கார்கோ கொடுக்கும், டிஸ்சார்ஜ் போர்ட் இதுவர உறபில்லா,இந்தியாயிக்கும் போவாம்” என்றார். இருபதாம் தேதிக்கு பின்னர் இலங்கையை நெருங்கும்போது இந்தியா இல்லை என்பது உறுதியானது. 

 சைனாவா,கொரியாவா எனபது தெரியாமலே பயணம் தொடர்ந்தது. நீண்ட பயணத்தில் ரமலான் விடுமுறை,ஞாயிறுகள் விடுமுறையாக கழிந்தது. கார்கோ டிபார்ட்மெண்ட்டில் இருப்பதால் வார நாட்களிலும் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் நாட்களை கடத்துவது எனக்கு கடினமாகிவிட்டது.

  இந்தோனேசியாவை சுற்றிகொண்டு மேலே சென்றபோது கொரியாவின் பீயோன்டெக் துறைமுகப்பில் சரக்கை இறக்குவது உறுதியாகியது. இருபத்தி ஆறு நாட்களுக்குப்பின் ஏப்ரல் இரண்டாம் தேதி கொரியாவின் யோசூ துறைமுகம் அருகில் கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். கப்பலின் கடிகாரம் எட்டு மணிநேரம் முன்னே நகர்ந்து கொரிய கடிகாரத்துடன் இணைந்து கொண்டது.

  பழங்கள்,பச்சை காய்கறிகள் முற்றிலும் ஒழிந்து உணவுபொருட்கள் பெரும்பாலும் தீர்ந்துபோயிருந்தது.கப்பலுக்கு தேவையான எரிஎண்ணெய் முன்னூற்றியைம்பது டன்,உணவு பொருட்கள்,உதிரி பாகங்கள் என நிறைத்தோம். இரு கொரிய ஆய்வாளர்கள் கப்பலுக்கு வந்திருந்தனர். சில சோதனைகளை முடித்து சான்றிதழ் பெற வேண்டும். காஸ் டிப்பார்ட்மெண்ட் ஆய்வு ஆதலால் ஆய்வாளருடன் இரவு முழுவதும் எனக்கு பணிஇருந்தது.

  நான்காம் தேதி மாலை ஆறு மணிக்கு கப்பல் கொரியாவில் கரையணைந்து சரக்கு இறக்கும் பணியை துவங்கினோம்.மதியம் மூன்று மணி தொடங்கி நள்ளிரவு பன்னிரெண்டு மணிவரை எனக்கு வேலை. ஐந்தாம் தேதி மதியமே அறுபதாயிரம் மெட்ரிக் டன் திரவ வாயுவை கொடுத்து முடித்தோம். கொரியாவிடம் எரிவாயு தட்டுபாடு இல்லை ஆனாலும் அதிக விலைகொடுத்து வாங்கி சேமிப்பில் வைக்கிறார்கள் என உள்வட்டார தகவல்கள் கிடைத்தது.

 இருபத்திஎட்டு நாட்கள் நீண்ட பயணம் முடிவுக்கு வந்தது. உலகின் ஒரு பகுதியில் கப்பல் போக்குவரத்து முடங்கி போயிள்ளது. ஹோர்முஸ் கால்வாயை கடக்க முடியாமல் எழுநூறுக்கும் அதிகமான கப்பல்கள் சிக்கியுள்ளது. காப்பீடு நிறுவனங்கள் கப்பல் தாக்கபட்டால் பணம் தராது அதுவே காரணம். அதிக பிரீமிய தொகை செலுத்தி கப்பலை ஆபத்தான பகுதியில் நகர்த்த கப்பல் நிறுவனங்கள் தயாராக இல்லை. முப்பது நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில்,குடிநீர் போக மற்ற தேவைகளுக்கு நீர் இல்லை. கக்கூஸில் கடல் நீரை ஊற்றி சமாளிக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் போர் தொடர்ந்தால் அந்த பணியாளர்களின் உணவும் கேள்விக்குறிதான்.

   ஐந்தாம் தேதி மாலை நான்கு மணிக்கு முன்பாகவே கப்பல் கயிறுகளை அவிழ்த்துவிட்டு புறப்பட்டது ஆஸ்திரேலியாவின் கிளாஸ்ட்சன் துறைமுகம் நோக்கி. நாங்கள் நைஜீரியாவிலிருந்து புறப்பட்ட போதே அடுத்து சரக்கு நிறைப்பது கிளாஸ்ட்சன் என உறுதியாகியிருந்தது. பன்னிரெண்டு நாள் பயணம். அங்கு ஏற்றும் சரக்கை மீண்டும் கொரியா அல்லது வியத்நாமில் கொடுக்கவேண்டியிருக்கும். நண்பர்களே அடுத்த ஒரு மாதத்துக்கான எனது பயண பாதை போர் ஆபத்தில்லாத பகுதியில்தான் என இப்போதே உறுதியாகியுள்ளது.

  நாஞ்சில் ஹமீது,

07 april 2026.

sunitashahul@gmail.com

Friday, 20 March 2026

ரமலான்- இந்திய பெருங்கடலில்



நோன்பு பெருநாள் 2021

நோன்பு பெருநாள் 2024

நோன்பு பெருநாள் 2025

ரமலான் நோன்பு 29 முடிந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால் பெருநாள் வெள்ளிக்கிழமை என அறிவிக்கப்பட்டது. கேரளாவிலும் இன்று ரமலான் (ஈதுல் பித்ர்) கொண்டாடபடுகிறது.இம்முறையும் அனைத்து நோன்புகளும் இருக்கும் பாக்கியம் கிடைத்தது. வரும் ஆண்டுகளிலும் இதே ஆரோக்கியத்தை இறைவன் தந்தருள் புரிவானாக.



   மூன்றாம் அதிகாரி தேஜஸ் தினந்தோறும் சூரிய உதய,அஸ்தமன நேரத்தை கணக்கிட்டு தந்தார். இப்தார் மற்றும் சகர் நேரங்களை கணக்கிட பேருதவியாக இருந்தது.


  மத்திய கிழக்கு நாடுகளில் குவைத்,கத்தார்,பஹ்ரைன்,சவூதி அரேபியாவில் நேற்று ரமலான் நோன்பு முப்பது நிறைவடைந்தது.போர் சூழல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் பெருநாள் சிறப்புதொழுகைக்கு மைதானங்களில் அனுமதி இல்லை ஜிம்மா தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்களில் மட்டுமே பெருநாள் தொழுகை என அறிவிகபட்டது. அதிகாலை ஈதுல் பித்ர் தொழுகையும் அங்கே விரைவாக முடித்துள்ளனர்.தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும்,இந்தியா,மலேசியா,புருனே நாடுகளில் நாளை ஈதுல் பித்ர் கொண்டாடப்படும்.

 கப்பலில் நான்,இந்தோனிசிய மூன்றாம்இஞ்சினியர்,மலேசிய காஸ் இஞ்சினியர் நோன்பு வைத்திருந்தோம்.எனக்கும் இன்று ரமலான். காலை குளித்து புத்தாடை அணிந்து அறையிலேயே இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதேன்.

  இன்று முழுநாளும் ஓய்வு அறிவிக்கப்பட்டது. கல்கத்தாவின் சமையல்காரர் சந்தீப் மண்டேல்,பிரியாணியும்  சேமியா பாயாசம் வைத்திருந்தார்.

   கப்பல்துறையில் இருப்பவர்களுக்கு  எந்த பண்டிகையும் இல்லை என்றே சொல்லலாம். அதிசயமாக நிலத்திலும் சிலருக்கு பண்டிகைகள் கிடைக்காமல் ஆகிவிடுகிறது. அரபு தேசம் ஒன்றில் பணிபுரியும் என் உறவினர் ஒருவர் பணிசெய்யும் இடத்தில் பெருநாள் தொழுகைக்கு பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை வருத்ததுடன் சொன்னார்.

 எனது இளைய சகோதரன் கத்தார் ஆயில் ரிக்கில் பணிபுரிகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் போர் காரணமாக திரும்பிசெல்ல முடியாமல் இருந்தார். இன்று காலை சரியாக பதினோரு மணிக்கு அவருக்கு கத்தார் செல்ல கொச்சியிலிருந்து பயண சீட்டு வந்ததால். நேற்றிரவே வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

  2022ஆம்  ஆண்டு சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலில் இருந்தபோது இந்தோனேசிய,மலேசிய அதிகாரிகள் நிறையபேர் இருந்தோம். காப்டன் இமாமாக நின்று கொத்பாவும்,தொழுகையும் நடத்தினார். கப்பலில் கிடைத்த ஒரே ஒருநாள் பெருநாள் தொழுகை அது. வழக்கமாக கப்பலில் நான் மட்டுமே இஸ்லாமியனாக இருப்பேன் பெருநாள் கடந்து போவதே தெரியாது. பணி நாளாக இருக்கும். இன்று ஓய்வு ஆதலால் பணிக்கு செல்ல வேண்டாம்.

 கடந்த ஆண்டு இருந்த கப்பலில் காப்டனின் மனைவி இருந்தார் பெருநாளன்று அவரே அதிக சிரத்தையுடன் சிறப்பு உணவுகள் தயாரித்து உணவுகூடத்தை பலநாள் உழைப்பில் அலங்கரித்து  பெருங்கொண்டட்டமாக மாற்றினார். அப்போதே அவரிடம் சொன்னேன். “இருபது வருட கப்பல் வாழ்வில் இந்த பெருநாள் என்றும் நினைவில் நிற்கும் நாளாக மாத்தீட்டீங்க”என. இன்று காப்டனின் மனைவி துருவி பெருநாள் வாழ்த்து அனுப்பியிருந்தார். கடந்த ஆண்டின் பெருநாள் உங்களால்தான் மறக்கமுடியாத நாளாக அமைந்தது என குறிப்பிட்டிருந்தார்.

  சுனிதாவும் மகன்களும்,உறவுகளும் இன்று காலை பள்ளிவாசலில் பெருநாள் தொழுதுவிட்டு புகைப்படங்களை அனுப்பிருந்தனர். டெக்னாலஜி உச்சத்தில் இருப்பதால் விடியோ காலில் பேசவும் உலகெங்கும் இருக்கும் உறவுகள், நண்பர்களின் வாழ்த்தும் எளிதாக கிடைக்கிறது.அதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கிறது.

  சென்னையில் வாழும் இளையவள் கிருத்திகா தன் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் இஸ்லாமியர்களுடன் பேச வைத்தார். ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

இனிமேல் இரு வேளை உணவை மட்டுமே எடுத்து கொள்வதாக இருக்கிறேன்.பழக்கத்தால் மட்டுமே மூவேளை உண்கிறோம்.அதனால் தான் கழிவுகள் அதிகமாக உடலில் சேர்கிறது.கழிவுகள் அகன்று விட்டால் நோயே இல்லை.

கப்பல் காரனின் ரம்ஜான் என முந்தைய பதிவுகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

2021 ஆம் ஆண்டில் பதினந்து வருட பெருநாள் அனுபவங்கள் உள்ளன. இந்த பதிவின் துவக்கத்தில் அந்த சுட்டி உள்ளது.

  நாஞ்சில் ஹமீது,

20 march 2026.

sunitashahul@gmail.com

Sunday, 15 March 2026

பாதை மாறும் பயணம் விலையேறும் எண்ணெய்

 


போர் பதட்டம் அச்சுறுத்தல் இருப்பதால் நண்பர்கள் பலரும் தொடர்ந்து விசாரித்துகொண்டே இருக்கின்றனர். இத்தனை மனிதர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் அவர்களின் அன்பு மகிழ்ச்சியையும் தந்தது.

    ஹோர்முஸ் வளைகுடாவில் தொடர்ந்து கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதில் சில இந்திய மாலுமிகளும் இறந்தனர். பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டியில் ஏற்றிய சரக்கை பிரான்ஸில் 22 ஆம் தேதி இறக்கியபின் அங்கிருந்து பன்னிரெண்டு நாள் பயணத்துக்குப்பின் நைஜீரியாவின் போனி துறைமுகத்தை அடைந்தோம்.

  அங்கே சரக்கு நிறைக்கும்முன் சைனாவுக்கு செல்ல உத்தரவு வந்தது மறுநாளே இல்லை கொரியா செல்லுங்கள் என்றார்கள். போனியில் ஒருலட்சத்து  நாற்பத்திஓராயிரம் மெட்ரிக் டன் எல்என்ஜி நிறைத்து முடித்தபோது இந்தியாவின் குஜராத்துக்கு செல்ல பணித்தார்கள்.

  கப்பல்களின் பயண பாதை போர் காரணமாக மூடப்பட்டுள்ளதால் குறிப்பாக எண்ணெய்,காஸ் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் உலக சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

 விலையேற்றம் நாளுக்கு நாள் மாறுகிறது. மீண்டும் எங்கள் கப்பலை கொரியாவின் இன்சொன் போக சொல்லியிருக்கிறார்கள். நைஜீரியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா,இலங்கை,சிங்கை வழியாக செல்வதால் கப்பலின் பயண பாதையில் எங்கும் போர் பதட்டம் இப்பொது இல்லை.

  கப்பலில் பணி ஒப்பந்தம் முடிந்து ஊருக்கு செல்பவர்கள் உண்டு.அதற்காக கப்பலை தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் அருகில் ஒருமணிநேரம் நிறுத்தி பணியாளர் மாற்றம் செய்ய விடுத்த கோரிக்கையை சரக்கை கையாளும் நிறுவனம் மறுத்தது.எங்கும் நில்லாமல் முழுவேகத்தில் இந்தியாவிற்கு செல்லுமாறு. ஆனால் இப்போது பயண பாதை மாறிக்கொண்டே இருக்கிறது.

 எனினும் சரக்கை இறக்குவது கொரியாவா?என்பதில் எந்த உறுதியும் இல்லை.யார் அதிக பணம் தருகிறார்களோ அவருக்கு இந்த எரிவாயு விற்கப்படும். எனவே பயண பாதை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் நிச்சயாமாக போர் நடக்கும் பகுதிக்கு கப்பல் இப்போது செல்லாது என்பதில் நிம்மதி.



ரமலான் நோன்பு இன்றோடு இருபத்தியைந்து நாட்கள் நிறைவடைகிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கிறது ரமலான் நம்மை விட்டு விலகி செல்ல.

நாஞ்சில் ஹமீது,

15 march 2026.

sunitashahul@gmail.com

Saturday, 14 March 2026

வெடித்து சிதறும் கப்பல்கள் - கடிதம் டெய்சி

 


சரியான நேரத்தில் நல்ல ஒரு பதிவு. விலையுயர்ந்த கார்களை பாண்டிச்சேரியில் பதிவு செய்தால் ஏதோ வரி குறையும் என்று அங்கு செய்வதுபோல கப்பல்களுக்கும். பதிவு செய்வதில் இருக்கும் கட்டாயமான வழிமுறைகள் என்பது அதன் பாதுகாப்பிற்காகத்தான் இல்லையா? ஆனால் அந்த நச்சுப்பிடித்த வேலையை ஏன் செய்துகொண்டு என்று பனாமா போன்ற நாடுகளில் பதிவு செய்து சட்டம் இயற்றுபவர்களை, பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்துபவர்களை எல்லாம் முட்டாள்கள் ஆக்கி கப்பல் சொந்தக்காரர்கள் மிகப்பெரும் புத்திசாலிகளாகிவிடுகிறார்கள். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்திற்கு நெறி கட்டுவது போல இந்த பாதிப்புகள். குரூட் ஆயிலில் இருந்து பிளாஸ்டிக் வருகிறதாம் அதனால் அதுவும் கிடைக்காதாம். இப்படிஒன்று, பெட்ரோல் போட வந்த கூட்டத்தை போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தும் அளவிற்கு போய்விட்டது. எங்கு என்னப் பெரிய நிகழ்வுகள் நடந்தாலும் பாதிக்கப்டுவது என்னவோ நம்மைப்போன்றவர்கள்தான். நேற்று சந்தையில் காய்கறிகள் கொள்ளை மலிவு. அதன் ரகசியம் இப்போதுதான் தெரிகிறது.

டெய்சி, திருச்சி 



Friday, 13 March 2026

வெடித்து சிதறும் கப்பல்கள்.


 


   நேற்று நாகேர்கோவில் வடசேரியிலுள்ள குறுகிய சந்தில் இருக்கும் உணவக்கதில் வழக்கமாக சாப்பிடும் ரசவடை கேட்ட ஐயப்பன் தாத்தாவுக்கு “சண்ட நடக்குல்லா,இன்னேலேயிருந்து ரசவட கிடயாது ஒய், இன்னும் ரெண்டுநாள் களிச்சா ஓட்டலுக்கே வராதயும்,கிருஷ்ணன் கோவிலிலேயே படுத்துகிடும்” என பதில் கிடைத்தது.

   “எங்கயோ தூரத்துல ரெண்டு நாடு அடி வெக்கதுக்கு நாப்பது வரியமா நான் தின்ன ரசவட கிடக்க மாட்டேங்கு” என தாத்தா சொன்னாதாக நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.உலகமயமாக்கலில் ஒவ்வொரு நாடும் பிற நாடுகளை சார்ந்து இருக்கிறோம் என பலருக்கு புரியவில்லை.  ஹோட்டல்கள் மூடப்பட்டதால் கோயம்பேடு சந்தையில்  டன் கணக்கில் காய்கறிகள் குப்பையில் கொட்டபட்டதாக செய்தியில் கண்டேன்.

   பதினான்கு நாட்களாக நடக்கும் அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருவது இப்போது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.ஹார்மோஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக அடைத்து விட்டதால் கச்சா எண்ணெய்,எரிவாயு சப்ளை உலகை பாதித்துள்ளது.



  இதனால் எழுநூறுக்கும் மேற்ப்பட்ட கப்பல்கள் நகரமுடியாமல் சிக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான அமீரகத்தின் ஜபல்அலி துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

  நாமக்கல்லில் ஏற்றுமதியான நான்கு லட்சம் கோடி முட்டைகள் நடுக்கடலில் குஞ்சுபொரிக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பாஸ்மதி அரிசி டன்கணக்கில் தேங்கியுள்ளது.இன்னும் காய்கறி உணவு பொருட்கள் என மொத்த ஏற்றுமதியும் ஆட்டம் கண்டுள்ளது.



  அமெரிக்காவுக்கு சொந்தமான இரு கப்பல்கள் தாக்கப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டது இந்தியர் ஒருவர் பலி எனும் செய்தியை எளிதாக கடந்து செல்கிறோம்.

  நாளுக்குநாள் கழுத்தை நெரிக்கும் சட்டங்களினால் கப்பல் பணி மிக கடினமாதாக மாறிக்கொண்டிக்கும் வேளையில். கடலில் கப்பல்கள் தாக்கப்பட்டு மாலுமிகள் கொல்லப்படுவது கொடுமையின் உச்சம்.

  அமெரிக்கா,இஸ்ரேல் முதலாளிகளின் கப்பல்களை ஈரான் தாக்குகிறது.ஈரானின் கப்பல்களை எதிரிகள் ஏவுகனை வீசுகிறார்கள்.கப்பல் முதலாளி எங்கோ குளிரூட்டப்பட்ட அறையில் செல்போனுடன் அமர்ந்திருப்பார். ஆனால் அந்த கப்பலில் பணிபுரிபவர்கள் பிலிப்பினோ,இந்திய மற்றும் வேறு நாட்டை சார்ந்த மாலுமிகள்.

  கப்பல் முதலாளிக்கு இதில் எந்த நட்டமும் இல்லை. முழுகப்பலுக்கான காப்பீடும் கிடைக்கும். சரக்கு நிறுவனத்துக்கு மொத்த தொகையும் இன்சூரன்ஸ் கிடைத்துவிடும். வயிற்று பிழைப்புக்காக வேலை செய்ய சென்ற மாலுமியின் உயிரிழப்பு அந்த குடும்பத்தின் வாழ்வாதார இழப்பு.

  

  எல்லா துறையைபோலவே கப்பல் துறையிலும் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெரும் முதலாளிகள் பணம் பண்ணுகிறார்கள். செய்திகளில் பார்த்திருப்பீர்கள் பனமா நாட்டு கப்பல் கன்னியாகுமரி அருகே மூழ்கியது அல்லது தரை தட்டியது என.

  உண்மையில் அது பனமா நாட்டு கப்பல் அல்ல. அதன் முதலாளி வேறு நாட்டை சார்ந்தவராக இருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த கப்பல்களில் பெரும்பாலானவை பனமா நாட்டு கப்பல்தான். ஆனால் பனாமாவுக்கு சொந்தமானது அல்ல.

  மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதுபோல் கப்பல்களை பதிவு செய்வது கட்டாயம். அமெரிக்கா,சிங்கப்பூர்,ஜப்பானில் பதிவு செய்தால் கடுமையான சட்டதிட்டங்களை செயல்படுத்தவேண்டும் செலவு அதிகம்.அதனால் பெருமபாலான ஜப்பானிய மற்றும் வேறு நாட்டு முதலாளிகள் பனாமா,லைபீரியா,மார்ஷல் போன்ற நாடுகளில் கப்பல்களை பதிவு செய்து கொள்வார்கள். அந்த விலாசத்தில் பத்துக்கு பத்து ஒரு அறைமட்டுமே இருக்கும். கப்பலை ஜப்பான் அலுவலகத்திலிருந்து இயக்குவார்கள்.

 நான் தற்போது இருக்கும் LNG (இயற்கை எரிவாயு) பசிபிக் சக்சசும் பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் தென்கொரியாவிலுள்ள சினோகொர் நிறுவனம். முந்நூறுக்கும் மேற்பட்ட கப்பல்கள் அந்த நிறுவனத்திடம் இருக்கிறது.

 ஜப்பானின் NYK,MOL போன்ற நிறுவனங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் இருக்கிறது. குறைந்த செலவு,சிக்கலில்லாத நடைமுறைகள் போன்ற காரணங்களால் இவ்வாறு பதிவு செய்து கொள்கிறார்கள்.

    கப்பல் மூழ்கினாலும்,கார்கோ மூழ்கினாலும் முதலாளிக்கு எந்த இழப்பும் இல்லை. இழப்பு அதில் வேலை செய்யும் பணியாளனின் குடும்பத்துக்கு மட்டுமே. அவனுக்கும் இனிசூரன்ஸ் இருக்குமே என நீங்கள் எண்ணுவது எனக்கு கேட்கிறது. ஆள் இல்லாமல் பணம் மட்டும் இருந்து என்ன செய்ய.

  மனிதன் அறிவியல்,விஞ்ஞானத்தின் உச்சம் தொட்டது சக மனித உயிரை கொல்வதற்கு தானா.

நாஞ்சில் ஹமீது,

13 march 2026.

sunitashahul@gmail.com.

Monday, 9 March 2026

ரமலான் நோன்பு- இறுதி பத்தில்

 லைலத்துல் ஃகத்ர் இரவு



  கப்பல் இப்போது HRA ஏரியாவை பத்திரமாக கடந்து இந்தியாவை நோக்கி பயணிக்கிறது. போனி துறைமுகம் விட்டபின் ஞாயிறன்று ஓய்வாக இருந்தது. இன்று திங்கள்கிழமை ஹோலி பண்டிகைக்கான விடுமுறை வேண்டி கொரிய முதன்மை இஞ்சினியரும்,மலேசிய முதன்மை அதிகாரி திவ்யனும் விடுத்த கோரிக்கையை காப்டன் ஷின் ஏற்றுகொண்டதால் இன்றும் விடுமுறையாக இருந்தது.

   இரு தினங்களாக குடியிருப்பை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை மாலையில் தான் உணர்ந்தேன் எனவே மாலை ஆறு மணிக்கு மேல் அறையை விட்டு வெளியே சென்று அரைமணி நேரம் நடைபயிற்சி செய்தேன்.எட்டுமணிக்கு சூரிய அஸ்தமன நேரமாக இருந்தது.

இம்மாதம் ராம நவமி,மாஹாவீர் ஜெயந்தி,ஈதுல் பித்ர் என மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வருவதாக இந்தோனேசிய இரண்டாம் இஞ்சினியர் மீட்டிங்கில் சொன்னார். இந்திய அதிகாரிகள் இருக்கும் கப்பல்களில் இது போல் விடுமுறைக்கு சாத்தியமேயில்லை. மலேசிய,இந்தோனேசியர்கள் எப்படி எல்லாம் விடுமுறையை எடுக்காலாம் என யோசிப்பவர்கள் எனவே இம்மாதம் குறைந்தது  மேலும் இரு விடுமுறை நாட்கள் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

   கப்பலின் கடிகாரம் கடந்த மாதம் பத்தொன்பதாம் தேதிக்கு பின் மாறவே இல்லை. பதினாறு நாட்களுக்குப்பின் நேற்று கப்பலின் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னே சென்றது.

ரமலான் நோன்பு துவங்கி பத்தொன்பது நாட்கள் நிறைவடைந்துவிட்டது. எனக்கு எப்போதும் ஏன் நாட்கள் வேகமாக நகருகின்றன என தெரியவில்லை.

    அதிகாலை நோன்பு வைக்க (அத்தாளம்) இரவுணவை எடுத்து வைத்துகொள்வேன். மதியமுள்ள  பச்சை காய்கறி சாலடும். நோன்பு திறக்கும் இப்தாருக்கு ஆப்பிள்,பேரிக்காய்,தர்பூசணி என மதியம் இருக்கும் பழம் வைத்துகொல்வேன். தலைமை சமையற்காரர் நோன்பு துவங்கும்போது ஒரு கிலோ பேரீத்தம் பழம் தந்தார். அறையில் நோன்பு திறந்து தண்ணீர் குடித்து பழம் சாப்பிட்டபின் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு மெஸ் ரூமுக்கு போய் உண்பேன்.



    இதுவரை நான்கு முறை கப்பலில் கஞ்சி வைத்தேன். பிரான்ஸிலும்,நைஜீரியாவின் போனி துறைமுகத்தில் இருந்தபோதும் மிகசரியாக பணியில் இருந்தேன் நோன்பு திறக்கும் வேளையில் பேரீத்தம்பழமும்,சிறு குப்பியில் நீரும் தயாராக கொண்டு சென்றதால் மேனிபோல்டில் நோன்பு திறந்த நாட்கள் அவை.

  நைஜீரிய துறைமுகத்தில் இருந்தபோது மட்டும் அதிக பணியால் ஒரு நாள் மட்டும் கடினமாக இருந்தது. கப்பலில் இந்தோனேசிய மூன்றாம் இஞ்சினியரும்,மலேசிய காஸ் இஞ்சினியரும் நோன்பு வைத்துள்ளனர்.அவர்களை நான் சந்திப்பதே இல்லை எப்போது சகர் மற்றும் இப்தாருக்கு வருகிறார்கள் என தெரியாது.  

 

 நைஜீரியாவை நோக்கி செல்லும்போது மூன்று தினங்கள் காலை எட்டே முக்காலுக்கு சூரிய உதயமாக இருந்தது. சமையற்காரர் காலை ஆறரை மணிக்கு காலை உணவு தயாராகிவிடும் என்றதால் அந்த மூன்று நாட்களும் ப்ரேக் பாஸ்ட் உண்டே நோன்பு வைத்தேன். அந்நாட்களில் அந்தி அணையும் நேரமும் எட்டரைக்கு மேல் இருந்தது.

 


 

       

 புனித ரமலானில் அல்லாஹ்வால் குர்ஆன் முழுமையாக இறக்கபட்டது. அந்த இரவைத்தான்  லைலத்துல் ஃகத்ர் இரவு சொல்லப்படுகிறது.   நபிகள் நாயகம் அவர்களிடம் ரமலானில் எந்த நாளில் லைலத்துல் ஃகத்ர் என சகாபாக்கள் கேட்டபோது கடைசி பத்தில் ஒற்றை படையான ஒரு நாளில் என குறிப்பிட்டார்கள். அதாவது ரமலானின் 21,23,25,27,மற்றும்29வது நாளின் இரவாக இருக்கலாம்.

லைலத்துல் ஃகத்ர் இரவு எண்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு சமம். அதாவது அன்றிரவு நின்று வணங்குவதால் ஆயிரம் இரவு வணங்கியதற்கு சமம். அன்று செய்யும் ஒரு ரூபாய் தானம் ஆயிரம் ரூபாய் தானம் செய்வதை போன்றது. அந்த மேன்மையான இரவை தவறவிடக்கூடாது என்பதால் ரமலான் நோன்பு இருபது முடிந்த அந்த இரவிலிருந்து ஒற்றைப்படையான இரவுகளை லைலத்துல் ஃகத்ர் ஆக எதிர்பார்த்து இருப்பதோடு அதிகப்படியான வணக்க வழிபாடுகளில் ஈடு பட்டு இறைவனிடம் நன்றி செலுத்தியும், பாவ மன்னிப்பும் கேட்க வேண்டும்.

  நாளை இருபதாம் நோன்பு முடிந்தபின்  ரமலானின் இருபத்தி ஒன்றாம் இரவு அது  லைலத்துல் ஃகத்ர் இரவாகவும் இருக்கலாம் எனவே நாளை இரவு முதல் அதிகமான வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் ஃகத்ர் இரவின் நன்மைகள் கிடைத்திட அனைவரும் முயற்சிக்கலாம். ஏக இறைவன் அனைத்தையும் அறிந்தவன்.

 

நாஞ்சில் ஹமீது,

09 march 2026.

sunitashahul@gmail.com

Sunday, 8 March 2026

ஹை ரிஸ்க் ஏரியா(HIGH RISK AREA)

 



  HRA  எனும் சொல்லை 2009 ஆம் ஆண்டு லியோ லீடர் எனும் கப்பலில் பணியில் இருந்தபோதுதான் முதன் முதலாக என் செவியில் விழுந்தது.

    HRA என்று சொல்லப்படும் இந்த ஹை ரிஸ்க் ஏரியா என்பது கடல் கொள்ளையர்களால் கப்பலை கடத்தி செல்லும் ஆபத்தான கடல் பகுதிகள். இவை சோமாலியாவுக்கும் ஓமான் நாட்டுக்கும் இடைப்பட்ட கல்ப் ஆப் எடேன்,மேற்கு ஆப்ரிக்காவின் நைஜீரிய,கானா,டோகோ மற்றும் உலகில் வேறு சில பகுதிகள் கடல் கொள்ளையர்களால் அச்சுறுத்தல் உள்ள பகுதியாகும்.

2009  மற்றும் 2010ஆண்டுகளில் கல்ப் ஆப் எடேன் பகுதியில் பாதுகாப்பு காண்வாயில் பயணித்தோம். அப்போதுஇந்திய,சீன,ஜப்பான் நாட்டு கடற்படை கப்பல்கள் இப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தந்து உதவின.  ஆபத்தான பகுதி துவங்கும் இடத்திலிருந்து காண்வாய் புறப்படும் நேரத்தை முதலிலேயே அறிவிப்பார்கள். அதில் இணைந்துகொள்ளும் கப்பல்களை அவர்கள் ஆபத்தான பகுதியை தாண்ட பாதுகாப்பு தருவார்கள்.

 காண்வாயின் முன்பும் பின்பும் இரு கடற்படை கப்பல்கள் ஆயுதங்களுடன் உடன் வரும். ஆபத்தான பகுதியாக கருதப்படும் இடத்தை கடக்க இருதினங்கள் ஆகும்.அனைத்து கப்பல்களும் சீரான ஒரே வேகத்தில் செல்வது அவசியம் (10 knots ).

 பாதுகாப்பான இடத்தை அடைந்ததும் கப்பல்கள் தங்களது பாதையில் உரிய வேகத்தில் பிரிந்து செல்லும். நான் பயணித்த இருமுறையும் பதினாறு கப்பல்கள் காண்வாயில் பயணித்தது. கப்பலில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு கப்பலை சுற்றி முள்வேலி கட்டப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தவாறு சென்றோம்.

  பணியாளர் அனைவருக்கும் மாலை ஆறு முதல் காலை ஆறுமணிவரை இரு மணிநேரம் வீதம் டெக்கில் கண்காணிப்பு பணியில் இருவர் வீதம் அமர்த்தப்பட்டோம்.

  அப்போது என்னுடன் பைரைசி வாட்சில் உடன் வந்த பிரபீஸ் கிருஷ்ணா “ஷாஹுலே அவ மாரெடுத்து நைட் விஷன் பைனாகுலரும், தோக்கும் காணும்,நம்மளு ஈ டார்ச் வெச்சிட்டு எந்தா செய்கயா, பேன் ரூம்மின்ற பிறகில் இருந்து ரிப்போர்ட் மாத்திரம்செய்தா மதி” என்றார்.அப்போது எங்களுக்கு இருதினங்கள் சம்பளம் அதிகமாக கிடைத்தது.

  2015 அதே HRA ஏரியாவில் சென்றபோது கடற்படை காண்வாய் இல்லை. கப்பலின் காப்டனுக்கு கப்பல் நிறுவன பாதுகாப்பு அதிகாரி கப்பலை முழுவேகத்தில் பயணிக்க சொன்னார். HRA அலவன்ஸ் சம்பளும் நிறுத்தப்பட்டிருந்தது.

  கப்பலை கடத்திசென்ற சம்பவங்கள் அப்போது நிறைய நடந்தது.கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்துவிட்டால் பணியாளர் அனைவரையும் ஒரு அறையில் அமர்த்திவிட்டு கப்பலை அவர்களது கட்டுப்பாட்டில் சோமாலியாவுக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் கப்பல் முதலாளியுடன் இருபது மில்லியன் டாலரில் பேரம் ஆரம்பமாகும். பேரம் முடியும் வரை கப்பல் பணியாளர்கள் அவர்கள் பிடியில் இருக்கவேண்டியதுதான். என்னுடன் பணிபுரிந்த ஒருவர் அவ்வாறு ஒன்பது மாதங்கள் கொள்ளையர்களின் பிடியில் இருந்ததை சொன்னார். இறுதியாக ஐந்து மில்லியன் டாலரில் பேரம் முடிவானதும். கப்பல் விடுவிக்கப்பட்டது.

  2016 முதல் சவூதி அரேபியா மற்றும் சூயஸ் கால்வாய்க்கு செல்லும்போது ஆயுதம் ஏந்திய பாதுகாலர்கள் எங்களுக்கு பாதுகாப்பாக கப்பலிலேயே பயணித்தார்கள். கப்பல் முதலாளிகள் அதிக பணம் செலவு செய்து அவர்களை நியமித்தார்கள். அந்த சேவையை வழங்கும் பாதுகாப்பு நிறுவனங்கள் துபாய்,இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளை மையமாக கொண்டு செயல்படுகிறது.

   பாதுகாப்புக்காக வரும் வீரர்கள் முன்னாள் ராணுவ,கடற்ப்படையில் பணிபுந்தவர்கள்.தற்போது நான் பணிபுரியும் எல்பிஜி,எல்என்ஜி கப்பல்கள் ஆறு மாதத்தில் நான்கு முறையாவது இந்த HRA ஏரியாவில் பயணிக்கவேண்டியுள்ளது.

     நான் இப்போது இருக்கும் எல்என்ஜி  பசுபிக் சக்சஸ் அமெரிக்காவில் நிறைத்த சரக்கை பிரான்சில் இறக்கினோம். உடனே அடுத்த அழைப்பு கார்கோ நிறைக்க நைஜீரியாவின் போனி துறைமுகத்துக்கு.

  மொத்தம் பன்னிரெண்டுநாள் பயணம். இறுதி இருதினங்கள் HRA வில் பயணிக்க வேண்டும். பிப்ரவரி இருபத்தி எட்டாம் தேதி சனிக்கிழமை பாதுகாப்பு ஒத்திகைகளை செய்து பார்த்தோம்.கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்துவிட்டால் அவர்கள் கையில் மாலுமிகள் அகப்படாமல் சிட்டாடெல் அறைக்குள் புகுந்து அருகிலுள்ள கடற்படைக்கும்,உதவிவேண்டி  அழைக்கவேண்டிய தொலைப்பேசி எண்கள் மற்றும் அந்த போனை திறக்கும்  ரகசிய எண்கள் பற்றிய பயிற்சிகள் வழங்கபட்டது.

   கப்பலின் பின்பகுதி முழுவதும் முள்வேலி சுற்றப்பட்டு. அதிக விசையில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் குழாய்கள் பொருத்தபட்டது. கப்பல் ஆறாம் தேதியே போய் சேருவதாக இருந்தது. ஆனால் நைஜீரியாவின் போனி துறைமுகம் ஏழாம் தேதிதான் உள்ளே வரவேண்டும் ஒரு நாள் அருகில் காத்திருமாறு வேண்டினர். கொரிய காப்டன் ஷின் உறுதியாக முடியாது என மறுத்துவிட்டார். எனவே ஆறாம் தேதியே உள்ள செல்ல அனுமதி கிடைத்தது.

 கடந்த நான்காம் தேதி இரவு HRA பகுதியில் நுழைந்தோம். கப்பலின் அனைத்து கதவுகளும் உள்ளிருந்து பூட்டபட்ட்து. ஒரேயொரு கதவு மட்டும் உள்-வெளியில்  செல்ல திறக்கப்பட்டிருந்தது. இரவில் யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை.



 போனி துறைமுகத்தின் நூற்றிபத்து மைல்களுக்கு முன்னால் ஆறாம் தேதி அதிகாலை கடற்ப்படை கப்பல் ஒன்று பாதுகாப்புகாக  இணையும் என்று சொல்லியிருந்தார்கள். அதுவரை கடல்கொள்ளையர்கள் பிடியில் சிக்காமல் சென்றுவிட்டால் கப்பலின் பாதுகாப்பு அனேகமாக உறுதி.

 வெள்ளி காலை குறிப்பிட்ட இடத்தை அடைந்த போது இன்னும் கொஞ்சம் முன்னால் வாருங்கள் என்றார்கள். இரு மணிநேரத்துக்கு பிறகு அருகில்தான் இருக்கிறோம் இன்னும் வாருங்கள் என சொன்னார்கள். இனியும் என்னால் வரமுடியாது உங்கள் கப்பல் எங்கு இருக்கிறது என காப்டன் கேட்கவும் பத்து மைல்முன்னால் வாருங்கள் நாங்களும் வந்து விடுவோம் இப்போது தான் புறப்பட்டோம் எனும் தகவலை சொன்னார்கள்.

   அதிகாலை கடற்ப்படை கப்பல் எங்களுடன் இணைந்து துறைமுகம் வரை வந்தது. மாலையில் கப்பல் போனி துறைமுகப்பில் கட்டப்பட்டது. துறைமுகத்திலும் கடற்ப்படை கப்பல்கள் பாதுகாப்புக்காக ரோந்து பணியில் இருந்தனர்.



  சனிக்கிழமை மதியம் ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு (LNG) நிறைக்கும் பணி முடிந்து மாலை ஐந்தரை மணிக்கு கப்பல் புறப்பட்டது. இரு தினங்கள் மீண்டும் HRA எரியவில் பயணம். திங்கள்கிழமை அதிகாலை ஆபத்தான பகுதியை கடப்போம். கப்பல் இந்தியாவின் குஜராத்தின் தகேஜ் துறைமுகத்திற்கு செல்கிறது.அரபு வளைகுடாவின் கத்தார்,குவைத்,அபுதாபியில் lng உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  எகிப்தின் இடுக்கு துறைமுகத்தில் சரக்கு நிறைத்தாலும் ஹார்மொஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கப்பல் வர முடியாது.இந்தியாவின் தொழில்துறை மற்றும் போக்குவரத்துக்கு நாங்கள் கொண்டு செல்லும் இந்த இயற்கை வாயு மிக அத்தியாவசியமானது இப்போது. அதற்கு இன்று இரவும் கடற்கொள்ளைகள் கையில் சிக்காமல் இருக்க வேண்டும்.

  நாஞ்சில் ஹமீது,

08 march 2026.

sunitashahul@gmail.com

Sunday, 1 March 2026

அமெரிக்கா – ஈரான் போர்.

 



  ரமலானின் பத்தாவது நாளான நேற்று சனிக்கிழமையாக இருந்தது. சனிக்கிழமை மட்டும் செய்யும் வேலைகளை செய்தோம். (Saturday routine,alarm tests greasing etc)

  கப்பல் பிரான்சிலிருந்து நைஜீரியாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. காலை எட்டே முக்காலுக்கு சூரிய உதயமும் அஸ்தமனம் இரவு எட்டரை மணிக்கும். கப்பலின் கடிகாரத்தை ஒரு மணிநேரம் பின்நோக்கி நகர்த்தியிருக்க வேண்டும். ஆனால் பிரான்ஸ் ,நைஜீரியாவின் கடிகார நேரம் ஒன்றாக இருப்பதால் கப்பலின் கடிகாரத்தை மாற்றவே இல்லை.

  கடந்த மூன்று தினங்களாக அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து குளித்து ஆறேமுக்காலுக்கு காலை உணவு உண்டுதான் ஸகர் வைக்கிறேன். இரவு எட்டரை வரை காத்திருந்து சூரியன் அஸ்தமனம் ஆன பின்பு இப்தார் எனும் நோன்பு திறத்தல்.



  கப்பலில் இரண்டாவது நாளாக நேற்றும் கஞ்சி வைத்து குடித்தேன். நேற்று காலையிலேயே எனது இளையவள் காதர்பீவி அழைத்தாள் “காக்கா நீ எங்க இருக்கா நோம்புன்னு பாக்காம போர் தொடங்கிட்டானுவோ” என பதறினாள்.நேற்றிரவு நண்பர் கவிஞர் ஆனந்த் குறுஞ்செய்தி அனுப்பியிருர்ந்தார். ஷாகுல் எங்கே இருக்கீங்க என.


 இன்று அதிகாலையே திரைப்பட இயக்குனர் நண்பர் கே.பி வினோத் அழைத்தார். “எங்க இருக்குதிய இப்ப,கப்பல் போக்குவரத்து கஷ்டம் ஆச்சே போர் நட்க்கதுல்லா” என கேட்டார்.

   இன்று எனது தாய் பீமாவை அழைத்தபோது “மோனே நீ எங்க இருக்கா,கத்தார்ல குண்டு வெடிடிக்குதாமே” என பதறினார்.

 தோழி கவிதாவும்,சுபஸ்ரீயும் கவலையுடன் விசாரித்தனர். மும்பையில் வாழும் மாமி ஒருவர் “இந்த கப்பல் வேல என்னத்துக்கு,பொண்ணாட்டி,பிள்ளையளுக்க கிட்ட இல்லாம,ஆயிரத்தெட்டு வேல துனியாவுல இருக்கு,உங்களோட போட்டு இந்த வேல,உங்க மக்களுக்கு இந்த வேல வேண்டாம் மோனே” என்றார்.





 போர் பதட்டம் உலகை சூழ்ந்து கொண்டது. எண்ணெய் கப்பல்கள் மற்றும் காஸ் கப்பல்கள் சரக்கு ஏற்றுவது இந்த மத்திய கிழக்கு நாடுகளான ஈரான்,குவைத்,கத்தார்,ஓமான்,சவூதி,அபுதாபியில் தான். யுஏஇயில் உள்ள புஜைரா கப்பல் போக்குவரத்தில் உலகில் மிக முக்கியமான மையம். சரக்கு கப்பல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

  ஆம் உண்மையில் கடல் வழி வாணிபமும்,கப்பல் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கும். இந்திய கடல்சார் ஆணையம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது ஈரான் மற்றும் வளைகுடா பகுதிகளிலுள்ள மாலுமிகளை உடனடியாக தொடர்புகொள்ள அறிவுறுத்தபட்டுள்ளனர்.

அதே போல் விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளது. துபாய்,டோஹா அபுதாபி போன்ற விமான நிலையங்கள் சர்வதேச அளவில் உலகை இணைக்கும் விமானங்களின் இணைப்பு பாதை. இதனால் சர்வதேச பயணங்கள் ரத்தாகியுள்ளது.

  நாகரீகத்தின் உச்சத்தில் மனித சமுதாயம் இருப்பதாக சொல்லிகொள்கிறோம். அறிவியல் வளர்ச்சியிலும் அதுதான்.வலுகட்டாயமாக ஒரு நாட்டின் மேல் போர் திணிக்கப்பட்டு மக்களை கொன்றழிப்பதுதான் நாகரீகமா?அணு ஆயுதங்களை வைத்திருப்பது வலுவற்ற நாடுகளை அச்சமூட்டதானா?

  எளியவர்களின் இந்த கேள்விகளுக்கு விடையே இல்லை.உலக தலைவர்கள் சமாதனம் பேசி போரை முடிவுக்கு கொண்டுவந்து.மனித உயிர்கள் கொல்லப்படுவதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.

 நண்பர்கள் பலரும் தொடர்ந்து என்னைபற்றிய கவலையுடன் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்ட இருக்கிறார்கள். நான் ஐரோப்பா- மேற்கு ஆப்ரிக்கா பயணத்தில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறேன். இம்மாத இறுதிவரை இதே பகுதியில்தான் பயணம் இருக்கிறது.

   சகோதரி மனோபாரதி எனக்காக வேண்டிகொண்டார். நண்பர்களின்  பிரார்த்தனைகளுக்கு நன்றி நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.

நாஞ்சில் ஹமீது,

01 march-2026.

sunitashahul@gmail.com