Wednesday, 6 August 2025

விடை தந்த என் எஸ் ப்ரண்டியர்


 


      கப்பல் காரன் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும்.

    ஜப்பானின் நகோயா அருகிலுள்ள ஐச்சி(aichi) துறைமுகத்திலிருந்து எழுதுகிறேன். இன்னும் ஒருமணி நேரத்தில் கப்பலில் இருந்து இறங்குகிறேன். இரவு நகோயாவின் விடுதியறையில் தூங்கிவிட்டு நாளை காலை (07 august 2025) ஒன்பது மணிக்கு புறப்படும் விமானத்தில் ஊருக்கு பயணிக்கிறேன்.

   வியட்நாம் எர்லைன்சில் ஹோ சி மின் சிட்டி தில்லி வழியாக வெள்ளிக்கிழமை காலை திருவனந்தபுரம் வந்து சேருகிறேன். ஜனவரி பன்னிரெண்டாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு இந்தோனேசியாவில் ஜனவரி பதினான்காம் தேதி பணியில் இணைந்தேன் இந்த கப்பலில்.

  ஏழு மாத பணிஒப்பந்தம் முடிய ஆறு நாட்களே இருக்கிறது.என் எஸ் ப்ரண்டியர் நாட்குறிப்புகள் முழுமையடையவில்லை. மே மாதம் முதல் இருபது ஆண்டு நிறைவு கட்டுரைகள் எழுத துவங்கி நாற்பது கட்டுரைகள் வந்துவிட்டன. கடந்த இரு வாரமாக அதிக பணி மற்றும் இரண்டாம் இஞ்சினியர்,இஞ்சின் பிட்டர் சவுகான் உடல்நலமில்லாமல் ஆனாதால் அவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டியிருந்ததால் எனது ஓய்வு நேரம் பெரும்பாலும் அதிலேயே போய்விட்டது. அதனால் கட்டுரைகள் எழுத சிறு தாமதம்.இருபது ஆண்டு நிறைவு தொடர் மற்றும் என் எஸ் ப்ரண்டியர் பதிவை விரைவில் எழுதி முடிப்பேன்.

   2007 ஆம் ஆண்டு பணிபுரிந்த ஐஜின் கப்பலில் தினமும் ஒரு ஹிந்தி சினிமா பார்த்து ஓய்வு நேரத்தை கடத்தினேன். இம்முறை துறைமுகம் இல்லாத நாட்களில் ஒவ்வொரு நாளும் எழுதியிருக்கிறேன். நாட்கள் வேகமாக சென்றதே தெரியவில்லை.

  இருபது ஆண்டு தொடர் எழுத துவங்கியதும் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க துவங்கினேன்.கடுமையான மற்றும் சவாலான நாட்களில் மாலை ஆறு மணி இரவுணவுக்குப்பின் எழுத அமர்ந்தால் என்னால் எழுதவே முடியவில்லை மடிகணினியில் தூங்கி விழுவேன் எனவே சன்னி ஜாய் நாட்குறிப்புகள் எழுதிய நாட்களை போலவே அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து எழுத துவங்கினேன். கப்பலின் கடிகாரம் பின்னே செல்லும் நாட்களில் அதிகாலை மூன்று மணி அல்லது அதற்கும் முன்பே எழுந்து எழுத துவங்கினேன். ஆறு மணி முதல் ஐம்பது நிமிடம் தவறாமல் உடற்பயிற்சி. (வேதாத்ரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சிகள்) அதன் பின் குளியல்,காலை உணவு எட்டு மணிக்கு வேலை துவங்கும். அதற்கு பதினைந்து நிமிடம் முன் மீட்டிங். மாலை ஐந்து மணிக்கு பணி முடிந்து குளித்து அஸர் தொழுகைக்குப்பின் ஆறு மணிக்கு இரவுணவுக்குப்பின்  ஒன்றுமே செய்ய இயலாது.இரவு எட்டு மணிக்கு கம்பிரசர் அறையில் ரவுண்ட்ஸ்க்கு போக வேண்டும் அரை மணிநேரம். ஒன்பது மணிக்கு தூங்க செல்வது என ஒழுங்கு ஒரு நாளும் தவறவேயில்லை. ஆசிரியர் ஜெயமோகன் திரும்ப,திரும்ப சொல்வது வெட்டி அரட்டையில் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய நினைத்தால் ஒரு ஒழுங்கை கடை பிடியுங்கள் என. அந்த வரிகள் மிக,மிக உதவியானவை.

   அப்படி என்ன தான் எழுதிவிட்டேன். எனது அன்றாடத்தை மட்டுமே உள்ளதை உள்ளபடி எழுதுகிறேன். கப்பல் காரன் டைரிக்கு இன்று வாசகர்கள் அமைந்துவிட்டார்கள் எனது அன்றாடத்தை ஒரு நாளும் எழுதாமல் இருக்கவே இயலாது இனிமேல். அதில் எனக்கு என்ன கிடைக்கிறது. ஒவ்வொரு கட்டுரை எழுதி முடிந்ததும் கிடைக்கும் ஒரு நிறைவு,மகிழ்ச்சி,ஒரு துள்ளல் அதுவும் அதிகாலை ஐந்தரை மணிக்கு கண்ணாடியில் பார்த்து இன்று எழுதிவிட்டேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டு துள்ளி சிரிப்பதில் எனது நாள் உற்சாகமாக துவங்கும்.

அறையின் ஒன்பதாவது மாடியில் இருந்து.


   நண்பர்கள் என்ன வாசிக்கிறாய்  என கேட்பார்கள். ஜெயமோகன் தளத்தை தவிர வேறெதிலும் செல்ல நேரமே இருக்காது.

  ஊருக்கு வந்தபின் விட்ட வரவேண்டிய அனைத்து கட்டுரைகளும் வரும்.

நாஞ்சில் ஹமீது,

06-aug-2025.

Sunitashahul@gmail.com

மாலை 5மணிக்கு 

கப்பலில் இருந்து இறங்கி 

7 மணியளவில் 

நகோயாவின் 

சைப்ரஸ் கார்டன் 

ஹோட்டலுக்கு வந்து விட்டேன்.



Tuesday, 5 August 2025

சுனாமி கடிதங்கள் டெய்சி



           

      சுனாமி நிறைய பழைய நினைவுகளைத் தூண்டியது. கடற்கரையிலிருந்து வெகுதூரம் உள்ளடங்கியுள்ள திருச்சி மாவட்டத்தில் இருப்பதால் தொலைக்காட்சி பார்த்துத்தான் அதுவும் மதியத்திற்கு மேல்தான் தெரிந்தது. ஆனாலும் அது ஏற்படுத்திய அழிவுகள் அதற்கடுத்தடுத்த நாட்களில்தான் தெரியவந்தது. வேளாங்கணணியில் உறவினர்கள் இருப்பதால் கொஞ்சம் உண்மையான தரவுகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் குளச்சல் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல் நீர்மட்டம்குறைந்தவுடன் என்னமோ ஏதோ என்று கப்பலை கொஞசம் தள்ளி இயக்கிக்கொண்டு போனதால் தப்பித்தது என்பதெல்லாம் புதிய செய்திதான். என் பெரிய மகள் ஏழுமாத கைக்குழந்தை அப்போது. ஊரில் சேர்கிற குப்பை எல்லாத்தையும் கடல்யாடா போடுறீங்க என்று கடலன்னை நாடு நகரங்களை எல்லாம் குப்பைமேடாக்கிவிட்டது. ரோட்டில் போகும்போது நான் வியந்து பார்க்கும் விலையுயர்ந்த கார்கள் எல்லாம் சுருட்டிப்போடப்பட்ட குப்பைக்காகிதங்களாய் மாறிப்போனது. பெரும் பெரும் படகுகள் எல்லாம் சம்பந்தமே இல்லாத நகரத்தின் முக்கிய சாலைகளில் சரிந்து கிடந்தது. வெண்முரசில் துவாரகை அழிவதை நன்றாகவே உணரமுடிந்தது. பூகம்பம், எரிமலை, சுனாமி, மழைவெள்ளம், புயல் போன்ற ஐம்பூதஙகளில் யாராவது ஒருத்தர் நினைத்தாலும் நாம் பெற்றுக்கொள்வது பேரழிவையே.

     டெய்சி,

  திருச்சி .


  சுனாமி கட்டுரைய வாசித்த பலரும் தங்களது நினைவுகளை எழுதியிருந்தனர். நண்பர் கணேஷ் மிக விரிவாக எழுதியிருந்தார்.அவரது அலுவலகத்தில் வேலை பார்த்தவரின் மகன் காணாமல் போய் இரு தினங்களுக்குப்பின் கிடைத்ததாகவும். வேறொருவரின் மகன் காணாமல்போய் இருபது ஆண்டுகளாகியும் இன்னும் திரும்பவில்லை என சொல்லியிருந்தார்.

   குமரியில் கலக்டர் ஆக இருந்த திரு ககன் தீப் சிங் சுனாமிக்கு இருதினங்களுக்கு முன் கடலூருக்கு மாற்றம் செய்யப்பட்டு புதிதாய் பதவியேற்றார்  கலக்டர் ராஜகோபால். குமரியில் சுனாமிக்குப்பின்  உரிய அரசு இயந்திரங்கள் செயல்படாமல் போகவே. மூன்று தினங்களுக்குப்பின் அவரும் மாற்றப்பட்டு அனுபவம் மிகுந்த திரு சுனில் பாலிவால் பணிக்கு வந்தார்.

 குமரியை விட கடலூரில் சேதம் அதிகம் ககன் தீப் சிங்  மாவட்ட ஆட்சியர் பதவியேற்று அங்கே நிறைய உதவிகளை உரியவர்களிடம் பெற்று கடலூர் மக்களுக்கு உதவினார்.

  மும்பையிலிருந்து நண்பர் மைகேல் நண்பர்களிடம் சுனாமி நிதி வசூலித்து  அனுப்பினார். ராணிதோட்டம் அருகிலிருந்த காப்பகத்திற்கு சென்றிருந்தேன். சுனாமி அலையால் சில வினாடிகளில் பெற்றோரை இழந்த பதினெட்டு வயதுக்குமேற்பட்ட பெண் பிள்ளைகளுக்காக புதிய காப்பகம் ஒன்று தக்கலை அருகில் துவங்கியிருப்பதை அறிந்தேன். அதன் பொறுப்பிலிருந்த உமா மகேஸ்வரியை தொடர்புகொண்டபோது. தக்கலை பெண் பிள்ளைகள் காப்பகத்திற்கு உணவு சமைக்க கேஸ் அடுப்பும்,வேறு சில பொருட்களும் வேண்டினார்.

  அங்கு தங்கியிருந்த பதினேழு பிள்ளைகளை பார்த்தேன். பெரும்பாலும் கல்லூரி மாணவிகள்,கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர்கள் என .....


மணக்குடி புதிய பாலம் 


    சுனாமிக்கு மறுநாள் மணக்குடி பகுதியில் இடிபாடுகளுக்குள் பிணங்கள் அகற்றப்படாமல் இருந்ததை கண்டேன். மணக்குடியிலிருந்து கன்னியாகுமரி செல்ல நாகர்கோவில் வந்து செல்லும் நிலை இருந்தது. அவ்வூர் மக்களின் நீண்ட கோரிக்கை,போராட்டங்களுக்குப்பின் புதிதாய் கட்டிய மணக்குடி பாலம் காணமல்போயிருந்தது.

  என் கிராமத்தில் வள்ளியாற்றில் குளித்துகொண்டிருந்த சிலரை சுனாமி கொண்டு சென்றது. முதல் அலையில் சிக்கிய இளம்பெண்ணொருத்தியின் ஆடை இழுத்து செல்ல அடுத்த அலைக்குமுன் ஆற்றிலிருந்து மேலே வருமாறு உடனிருந்த பெண்கள் கூச்சலிட மானம் பெரிதென ஆற்றிலேயே நின்றவளையும் சுனாமி கொண்டு சென்றது.

  கொட்டில்பாடு கடற்கரை கிராமத்தில் நான்கு பிள்ளைகளை சுனாமிக்கு பறிகொடுத்தாள் தாய் ஒருத்தி. குடும்ப கட்டுப்பாடு செய்திருந்த அவள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் மீண்டும் நான்கு குழந்தைகளை ஈன்றாள்.

 நண்பர்களிடம் இன்னும் நேரில் கண்ட துயர சம்பவங்கள் நிறைய இருக்கலாம். 


05- 08- 2025.

தொடர்புடைய பதிவுகள் 

Tsunami(சுனாமி)

Monday, 4 August 2025

Tsunami,(சுனாமி கடிதங்கள்) சிஜோ ,விஜி

 


Tsunami (சுனாமி)

      ஷாகுல், சுனாமி கட்டுரை படித்தேன். நான் இந்தியாவிற்கு வெளியே (சைப்ரஸில் வேலைக்காக)சென்ற என் முதல் பயணத்திற்கு சில நாட்கள் கழித்து நடந்த மாபெரும் பேரழிவு. அன்று ஊரில் இல்லாததால் அதன் முழுமையான தாக்கம் அப்போது புரியவில்லை. அந்த காலகட்டம் உங்கள் கட்டுரையைப் படித்தபின் ஞாபக அடுக்குகளிலிருந்து மேலெழுந்து வருகிறது.

சிஜோ அட்லாண்டா


இக்கா...இந்த கட்டுரை நல்லா இருக்கு.

கடல் உள்வாங்கிய கணத்தில் மீன் பிடிக்க  சென்ற  மக்கள்  , படகில்  சென்றவர்கள்  கடல் உள்வாங்கியதால்  கடலில் பின்னோக்கியபடியே  சென்றவர்கள், ஒரு Gut Feeling ( உள்ளுனர்வு) வழியா கப்பலை  கொச்சி  நோக்கி  செலுத்தியது  போன்ற செய்திகளே புனைவை நோக்கி தள்ளுகிறது.அவரவர்களுக்கு  என்ன நிகழுமோ  அப்படி நடந்தது .

இது ஒரு சுவாரசியமான நிகழ்வுகள் இக்கா.பிரபஞ்சம் , மனம் ,மனித  வாழ்வு  என எல்லாமே   கண துளிகளில் மாறியது,

துயரம் தாண்டி  இந்த கட்டுரை எனக்கு அன்மையா  இருக்கு.  நான் செய்திகளை  கேட்பதில்லை  , படிப்பதும் இல்லை,  ஆனால் சுனாமி  எச்சரிக்கை ஜப்பானில் வந்தது  என கேள்வி  பட்டபின் உங்களை நினைத்து  கொண்டேன் . தினமும் வணக்கம் என்ற குறுங்செய்தி  தொடர்பால்  நீங்கள் அனைவரும்  நலமுடன்  இருக்கீங்க என நினைச்சிட்டே.ன்.

விஜி சிங்கப்பூர் .



   சுனாமி எழும்போது ஆழ்கடலில் அந்த அலைகளின் உயரம் மூன்று மீட்டரும்,ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் நூறு மீட்டர்வரை இடைவெளி இருப்பதால் ஆழ்கடலில் செல்லும் கப்பல்களுக்கு பெரிய பாதிபில்லை. நான் தற்போது இருக்கும் கப்பல் (NS FRONTIER)VLGC (VERY LARGE GAS CARRIER .வகைகை சார்ந்த மிக பிராமாண்ட கப்பல். இருநூற்றி நாற்பது மீட்டர் நீளமும்,முப்பத்தி ஆறு மீட்டர் அகலமும் நீரிலிருந்து பன்னிரெண்டு  மீட்டர் உயரத்தில் இருக்கும் டெக்கிலிருந்து ஐந்து மாடி உயரம் கொண்டது. 

    

2011 புக்குஷிமா சுனாமியில் சின்னாபின்னமான கப்பல்களில் ஒன்று  

   சுனாமியை நாங்கள் உணரவே முடியாது ஆழ்கடலில். அதுவே கரையில் என்றால் இந்த பிரம்மாண்ட கப்பல் சுனாமிக்குமுன் சின்னாபின்னமாகிவிடும் .

நாஞ்சில் ஹமீது,

05 Aug 2025.



நடுக்கடலில்


Sunday, 3 August 2025

Tsunami (சுனாமி)

 

சுனாமி என்ற வார்த்தையை 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி வாக்கில் தினமணி கட்டுரை ஒன்றில் வாசித்து அறிந்தேன்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள்  திருமணம் நடந்த எனக்கு பத்து நாட்களுக்குபின் மறுவீடு நிகழ்ச்சி. அதாவது டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சுனிதாவின் இல்லத்திலிருந்தும் எனது உறவினர்களும் என மொத்தம் நூறுபேர் வரை வருவார்கள். மதிய உணவாக அனைவருக்கும் ஆட்டிறைச்சி பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது.

அன்று காலை ஒன்பது மணியளவில் மும்பையிலிருந்து நண்பர் மைக்கேல் அழைத்து “கன்னியாகுமரி கடல் கொந்தளிப்பாமே, எங்க இருக்கீங்க” எனக் கேட்டார். மறுவீடு நிகழ்வுக்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருந்ததால் எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. நண்பர் டீவியில் செய்தியை பார்க்க சொன்னார். அன்று டீவி எங்கோ மூலையில் இருந்தது. யாருக்கும் நேரமில்லை.

அப்போது நாங்கள் இருந்த வீட்டிலிருந்து கடற்கரைக்கு ஐந்து கிலோமீட்டர்கள் தான். கடற்கரை மக்கள் நகருக்குள் வருவதற்கான முக்கிய சாலை என் வீட்டின் அருகில் இருந்தது. சிறிது நேரத்தில் வாகனங்கள் அதிக ஒலிஎழுப்பி நெரிசலாக செல்ல தொடங்கியது. கால்நடையாக குழைந்தைகள், சிறுவர்கள் என மக்கள் போய்கொண்டிருந்தனர்.

எனது சொந்த கிராமமான மணவாளகுறிச்சியும் கடற்கரை கிராமம். உறவினர்கள் வாழ்வதும் கடற்கரை கிராமங்களில். சில தொலைப்பேசி அழைப்புகள் வந்தன. அழுகையும், கண்ணீருடனும், கடல் ஊருக்குள் வந்துவிட்டது நாங்கள் பங்சனுக்கு வரவில்லை என. சுனிதாவின் உறவுகளும் தேங்காய்பட்டணம். ஆதலால் முப்பதுபேர் மட்டுமே அன்றைய மறுவீடு நிகழ்ச்சிக்கு வந்தனர்.

கடற்கரை மக்கள் பெரும்பாலும் சர்ச்சுகளில் தங்கவைக்கப்பட்டனர். கோட்டார் சவேரியார் கோவிலில் இருந்த மக்களுக்கு எங்கள் வீட்டு நிகழ்வுக்கு செய்த பிரியாணியை என் தம்பி ஷேக் கொண்டுபோய் விளம்பினான். மணக்குடி, கொட்டில்பாடு போன்ற ஊர்களில் அதிகமான பேரை கடல் தனக்குள் எடுத்துகொண்டது. குமரியில் ஆயிரம்பேருக்கு உயிர்நீத்த துயர சம்பவம் அது.

அப்போதெல்லாம் தினமணி பத்திரிகை தினமும் வாசிப்பேன். குறிப்பாக அதிலுள்ள கட்டுரைகள். குமரியை கடல் சூறையாடிய இரு தினங்களுக்குப்பின் வந்த ஒரு கட்டுரை அது. கடல் கொந்தளிப்பல்ல, ‘சுனாமி’. சுமத்ரா தீவுகளுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் உண்டான அலை கரையை கடக்கும்போது மிக உயர்ந்து பேரலையாக சீறி ஊருக்குள் புகுந்து கிடைத்ததை வாரிசுருட்டி தன்னுள் கொண்டு சென்றுவிடும்.  சுனாமி பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையில் சுனாமி அலைகளை ஆழ்கடலில் மூன்று மீட்டர் உயரம் மட்டுமே இருக்கும். அது கரையை தொடும்போது நூற்றியைம்பது மீட்டர் வரை உயரும் வாய்ப்பு உண்டு. ஜப்பான் மற்றும் பசிபிக் கடல் பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் சுனாமி ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

(என் இளைய தம்பி பாபு ஹூசைன் “கமலஹாசன் பெரிய அறிவாளி” என்று சொல்லி, அன்பே சிவம் படத்தில் கமல், மாதவனிடம் சுனாமி பத்தி சொல்லும் காட்சிகளை கூறினான்.)

  


சுனாமி கரையை தொடும்முன் கடல் நீர் உள்வாங்கும். அங்கெல்லாம் கடலின் உயரத்தை அளவிடும் கருவிகள் பொருத்தபட்டிருக்கும். கடல் நீர் மிக அதிகமாக உள்வாங்க துவங்கினால் உடனே கரையோர மக்களை எச்சரித்து அப்புறப்படுத்தும் ஏற்பாடுகளும் அங்கே உண்டு.

இந்தியாவில் குமரி கடற்கரையை தாக்குவதற்கு இரண்டு மணிநேரம் முன்பே சுமத்ராவில் துவங்கியயிருந்தது சுனாமி. அதுபற்றிய அறிவு இங்குள்ள அதிகாரிகள் யாருக்கும் இல்லாததால் பேரிழப்பை சந்திக்கவேண்டி வந்தது என கட்டுரையாளர் எழுதியிருந்தார்.

  


சுனாமி தாக்கிய அன்று குளச்சலில் பள்ளி மாணவர்களுடன் சிறு படகில் கடலுக்குள் சென்ற ஒருவர் கடல் உள்வாங்கியதை கண்டு மேலும் கடலுக்குள் சென்றதால் தப்பித்தார். சொத்தவிளை, கன்னியாகுமரி கடல் பகுதிகளில் கடல் உள்வாங்கியதும் கரையில் மிதந்த மீன்களை அள்ளவும், காலை நடை பயிற்சியில் இருந்தவர்களும், சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகளும் கடலுக்குள் சென்றுவிட்டனர். கப்பலில் பத்தி சாபாக (எலெக்ட்ரிக்கல் இஞ்சினியர்) இருந்த என் நண்பர் சேலம் பாலா அப்போது பணிபுரிந்த கப்பல் இந்திய அரசுக்கு சொந்தமான ஆய்வு கப்பல். குளச்சல் கடற்கரையில் நங்கூரமிட்டிருந்த அவரது கப்பலில் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பச்சைமால் சென்றிருந்தார்.

கடலின் நீர்மட்டம் திடீரென இரண்டு மீட்டர் குறைந்ததும் காப்டன் கப்பல் நிறுவனத்தை தொடர்புகொண்டு எதோ ஆபத்து இருப்பதை சொல்ல என்ன செய்யவேண்டுமென காப்டனே முடிவு செய்துகொள்ளுங்கள் எனச்சொல்ல உடனடியாக நங்கூரம் உருவப்பட்டு கப்பலை கடலுக்குள் கொண்டு சென்று கொச்சியை நோக்கி பயணித்ததாக பாலா சொன்னார். குளச்சல் கரையில் நிறுத்தியிருந்த சட்டமன்ற உறுப்பினர் பச்சைமாலின் சுமோ காரை சுனாமி பேரலை கடலுக்குள் கொண்டு சென்றது.

அதன் பின் சுனாமி குறித்து விரிவான தகவல்கள் பரவலாக எங்கும் பேசப்பட்டு சாமானியர்களும் அதுகுறித்து அறிந்துகொண்டனர். அப்போது கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகள் கடுமையான இழப்பை சந்தித்தது. கப்பல் பணிக்கு வந்தபின் மிக அதிகமாக ஜப்பானிய துறைமுகங்களுக்கு வருவதால் சுனாமி பற்றி தெளிவாக இருக்கிறோம். ஜப்பானிய துறைமுகத்தில் இருக்கும்போது சுனாமி எச்சரிக்கை வந்தால் பத்து நிமிடங்களுக்குள் கப்பலை அவிழ்த்து கடலுக்குள் செல்லும் பயிற்சிகளை துறைமுகமும், கப்பலும் இணைந்து செய்துள்ளோம்.

கடந்த முப்பதாம் தேதி காலை ரஷ்யாவில் கடலுக்கடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமியால் சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. அப்போது நாங்கள் ஜப்பானை நோக்கிய பயணத்தில் ரஷ்யாவின் கடலுக்கு கீழே இருந்தோம். அன்று எங்களுக்கு புயல் எச்சரிக்கை இருந்தது. அதை தவிர்க்கும் பொருட்டு பயணப்பாதையில் இருந்து சற்று விலகி அலைகுறைவான பாதையில் கப்பலை சென்றுகொண்டிருந்தது.

சுனாமி வந்ததை மறுநாள் காலையில் செய்திகளை பார்த்துதான் தெரிந்துகொண்டோம். என்னுடன் தினமும் உரையாடலில் இருக்கும் நண்பர்கள் நான் ஜப்பானுக்கு அருகில் சென்றுகொண்டிருப்பது தெரியுமாதலால் வாட்சப்பில் தொடர்புகொண்டு கேட்டிருந்தனர். அந்த சுனாமியால் எங்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. ஆழ்கடலான வட பசிபிக் கடலில் ஒன்றுமே தெரியவில்லை. மிக பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கிறோம். வரும் ஐந்தாம் தேதி மதியம் ஜப்பானின் ஐஜி எனும் துறைமுகத்தை அடைவோம்.

நண்பர்கள் சிலர் கவலையுடன் கேட்டிருந்தனர். ஆகவே இந்த கட்டுரை.

தொடர்புடைய பதிவுகள்: 

நடுக்கடலில்

நாஞ்சில் ஹமீது.

03-August-2025.

sunitashahul@gmail.com

Saturday, 2 August 2025

என் எஸ் ப்ரண்டியரின் கடைசி பிரியாணி.

 கடைசி பிரியாணி





 

     ஜனவரி மாதம் பதினான்காம் தேதி கப்பலுக்கு வந்த எனக்கு ஏழு மாத பணி ஒப்பந்ததம். ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி ஒப்பந்தம் முடிவடையும். ஒப்பந்த காலம் ஏழு மாதங்கள் பிளஸ்,மைனஸ் ஒரு மாதமென இருக்கும். எனவே ஆறு மாதங்கள் ஆகிவிட்டால் தயாராக இருக்கவேண்டும். அதன்பின் எப்போது வேண்டுமென்றாலும் வீட்டுக்கு அனுப்பலாம்.துறைமுகம் கிடைக்காமல் ஆனால் நீண்டு எட்டு மாதங்கள்வரை அல்லது அதற்குமேலும் ஆகும் வாய்ப்பும் உண்டு.


ரஜீதீப் சிங் 


     இம்முறை ஏழு மாதங்கள் முடிந்து ஆகஸ்டில் ஊருக்கு செல்ல நான் விரும்பவில்லை. நவம்பர் இறுதி மகன் ஸாலிமின் பிறந்தநாள்,டிசம்பரில் எனது பிறந்தநாள்,திருமண நாள்,விஷ்ணுபுரம் விருது விழா, ஜனவரி இரண்டாம் தேதி சுனிதாவின் பிறந்தநாள் என இருப்பதால் எல்லா வருடமும் நவம்பர் இறுதி முதல் ஜனவரி பதினைந்துவரை ஊரில் இருக்கவே விரும்புவேன்,

சாகர் பாட்டில்


   கப்பல் ஜூலை முதல் வாரம் அமெரிக்காவின் ஹூஸ்டனிலிருந்து புறப்பட்ட போது நாங்கள் செல்லும் துறைமுகம் உறுதியாகவில்லை.பனாமா கால்வாயை தாண்டி ஆசியாவை நோக்கி போக சொன்னார்கள். சீனா அல்லது ஜப்பான் துறைமுகத்தில் கப்பலில் நிறைத்த நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன் ப்ரோப்பேனை இறக்க வேண்டும். அது ஆகஸ்ட் முதல் வாரத்தில். அப்போது ஜப்பான் அல்லது சீனாவிலிருந்து ஊருக்கு செல்லும் நால்வர்குழு  இருந்தார்கள்.

ஊருக்கு செல்லும் சோகத்தில் மூன்றாம் இன்ஜினியர் ரஜிதா 



   எனக்கு செப்டம்பர் மாதம் ஊருக்கு சென்றால் டிசம்பர் இறுதிவரை ஊரில் இருப்பது சாத்தியமாகும். எனவே ஜூன் மாதமே காப்டனை சந்தித்திருந்தேன் ஒரு மாத பணி நீட்டிப்பு கடிதத்துடன். கடிதம் குலாலம்பூர் அலுவலகத்திற்கு அனுப்பினால் மறந்திருக்கும் அவர்கள் விழித்துக்கொள்ள நேரிடும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வராததில் உன்னை வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பும் உண்டு. எனவே காத்திரு என்றார் காப்டன்.

இயந்திர கட்டுப்பாட்டு அறையில் 


  ஜூலை இறுதியில் ஊருக்கு செல்பவர்களின் பெயர் பட்டியலில் இருந்த நால்வரும்  ஜப்பான் அல்லது சீனா சென்று சேரும்போது வீட்டுக்கு செல்வது உறுதியாகியிருந்தது. முன்பே முதன்மை இஞ்சினியரிடமும் சொல்லியிருந்தேன். ஜப்பானிலிருந்து அனுப்பும் குழுவில் என்னை அனுப்பாமல் இருக்க வேண்டி காப்டனிடம் சொல்லும்படி. முதன்மை இஞ்சினியர் “ஜூலை பாட்ச் தான் இப்ப போகுது உன் பெயர் இல்லை” என்றார்.

மெஸ் மேன் ஹர்திக் 


   இருபது நாட்களுக்கு முன் நான் ஜனவரி மாதம் இந்த கப்பலில் விடுவித்த காஸ்பிட்டர் சாஜித் கான் இங்கு வரவிருப்பதாக வேறு கப்பலில் இருக்கும் நண்பர் ரவீந்திர பாட்டக் சொன்னார். சாஜித் கானை தொடர்புகொண்டேன் என் எஸ் ப்ரண்டியர் கப்பலுக்கு செல்ல தயாராக இருக்கும்படி மும்பை அலுவலகம் சொன்னதாக சொன்னார். ஆனால் அவரது பாஸ்போர்ட் அமெரிக்க துணை தூதரகத்தில் விசாவுக்கு அனுப்பி இன்னும் கிடைக்கவில்லை காத்திருக்கிறேன் எனக்கூறினார்.


ஞாயிறு காலை பிரியாணிக்கு மட்டன் வெட்டும் சீப் குக் 



அன்றே காப்டனை சந்தித்து  கேட்டேன். “கேப்டன் சாப் எனக்கும் ஜப்பான்ல இருந்து சைன் ஆப் இருக்கா”? என.

“ஆபிஸ்ல என்ன செய்றாங்கன்னு தெரியல” என்றார் கேப்டன்.

இரண்டாம் அதிகாரி ரஜ்தீப் சிங்கிற்கு ஆறு மாத பணி ஒப்பந்தம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவருக்கு ஐந்து மாதங்களே நிறைவடையும். அவரது மாற்று பணியாள் உக்ரைனின் ஒலாக்ஸ் அவரை தொடர்புகொண்டு கப்பலுக்கு வரவிருக்கும் தகவலை சொன்னார். எனக்கும்,ரஜ்தீப்க்கும் நாங்கள் ஊருக்கு செல்லலாம் என தெரிந்தது.

  எங்களது விடுமுறை குறித்து கப்பலில் அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை என எண்ணியிருந்தோம்.ஜூலை முப்பதாம் தேதி நடந்த மாதாந்திர பாதுகாப்பு கூட்டத்தின் இறுதியில் காப்டன் “குட் நியுஸ் ஆல் தி ரிலிவர் நேம்ஸ் ஆர் கம்,சிக்ஸ் பீப்பிள் சைனிங் ஆப்,போர் ஆன் சைனர்ஸ்”என்றார். கப்பலின் ஓணர் தரப்பிலிருந்து பயிற்சிக்காக வந்திருந்த  இரு பிலிப்ப்னோ இஞ்சிநியர்களான இவான் மற்றும் ரோடலுக்கு பதிலாக மாற்று பணியாளர் இல்லை.இலங்கையின் மூன்றாம் இஞ்சினியர் ரஜிதா,மகாராஷ்டிராவின் சாகர் பாட்டில்,இரண்டாம் அதிகாரி ரஜ்தீப் உட்பட ஆறு பேர் ஆகஸ்ட் ஆறாம் தேதி ஜப்பானிலிருந்து ஊருக்கு செல்வது உறுதியானது.

 “ஷாகுல் சாஜித் வரவில்லை,சஞ்சய் என வேறு ரிலிவர் வருகிறார்” என காப்டன் சொன்னார்.நீண்ட நாட்களாக ஒரே நிறுவனத்தில் இருப்பதாலும்,கப்பல் பணியாளர்களின் வாட்ஸ்அப் குழுக்கள் இருப்பதாலும் இப்போதெல்லாம் யார் எந்த கப்பலுக்கு போக இருக்கிறார் என உடனுக்குடன் எங்களுக்கு தெரிந்துவிடும். மாற்று பணியாளர் தேர்வான உடனே கப்பலுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும். ஆனால் காப்டன் எதனால் எங்களது விடுமுறையை மிக ரகசியமாக வைத்திருந்தார் என தெரியவில்லை.

 மறுநாள் வியாழக்கிழமையே எனது டிக்கெட்டை காப்டன் எனது அறையில் போட்டிருந்தார். வரும் ஏழாம் தேதி ஜப்பானின் நகோயாவிலிருந்து வியட்நாம் ஏர்லைன்சில் ஹோ சி  மின் சிட்டிக்கு  ஆறு மணிநேர பயணம்,அங்கே ஆறு மணிநேர காத்திருப்புக்குப்பின் தில்லிக்கு ஐந்து மணிநேர பயணம். அன்றிரவு பத்து மணிக்கு தலைநகர் தில்லி சென்று தில்லியில் மீண்டும் ஐந்துமணிநேரம் காத்திருப்பு அதிகாலை மூன்றரைக்கு அடுத்த விமானம் மூன்றரை மணிநேர பயணத்திற்குப்பின் காலை ஏழு மணிக்கு திருவனந்தபுரத்தில் இறங்குகிறேன்.எட்டாம் தேதி மதியம் ஜும்மா தொழுகை வீட்டருகில் உள்ள பள்ளி வாசலில்.

 பதிமூன்று மணிநேர பயண நேரம் அதற்கு இணையான காத்திருப்பும்.சிங்கப்பூர் அல்லது மலேசியா வழியாக சென்றால் இரண்டே விமானத்தில் காத்திருப்பு நேரம் உட்பட பதினைந்து மணிநேரத்தில் செல்லும் விமானங்கள் இருக்கிறது.

 காப்டனை சந்தித்தேன் “இரண்டே ஆப்சன் தான் வந்துருக்கு, ஹாங்காங் வழியா போறது ஆறாம் தேதி சாயங்காலம்,அந்த பிளைட்ட புடிக்க முடியாது. சோ இதுதான் என்றார்.

சண்டிகர் வரை செல்லும் இரண்டாம் அதிகாரி என்னுடன் தில்லி வரை வருவார். மும்பை செல்லும் சாகர் பாட்டிலுக்கு ஏழாம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு வியட்நாமின் தலைநகர் ஹனோய் வழியாக விமானம் அன்றிரவே போய்சேர்ந்துவிடுவார். கொழும்பு செல்லும் மூன்றாம் இன்ஜினியரு சிங்கப்பூர் வழியாக விமானம் அவரும் அன்றிரவு வீட்டில் இருப்பார். பிலிப்பினோ இனிஞ்சியர்களுக்கு ஆறாம் தேதி மாலையே விமானம் அவர்கள் ஏழாம் தேதி அதிகாலை மணிலாவில் இருப்பார்கள்.

  நமது உறுதியான ஆழ்மன கணக்குகள் பல இருக்கும் ஆனால் நாம் அறியவே முடியாத இப்பிரபஞ்ச கணக்கு உண்டு.பிரபஞ்சத்தில் எது எனக்கு எழுதி இருக்கிறதோ அது எனக்கு கிடைத்தே ஆகும் என உறுதியாக நம்புபவன் நான்.

 

 கடந்த ஞாயிறன்றே சமையல்காரர் பிரையன் மஸ்கரனஸிடம் சொல்லியிருந்தேன் “அடுத்த ஞாயிறு இந்த கப்பலில் எனக்கு கடைசி பிரியாணியாக இருக்கலாம்,மட்டன் பிரியாணி போடுங்க” என.

தொடர்புடைய பதிவுகள் 

விடுமுறை உறுதியாதல்

விடுமுறை   

கப்பல் காரனின் விடுமுறை

தள்ளிப்போன விடுமுறை

வீடு திரும்புதல்

விடுமுறையும் பயண சீட்டும்

கடைசி பணிநாள்

கடைசி பிரியாணி



நாஞ்சில் ஹமீது,

03-august -2025.

sunitashahul@gmail.com