Friday 21 January 2022

உம்மா 2

            
            தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் கடந்த ஆண்டு கோவிட் வந்து ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரியில் சிகிச்சை எடுத்த பின் அதை பதிவு செய்திருந்தார்.செயவிலியர்களின் கவனிப்பு, மிகச்சிறந்த உணவு என அது மனதில் பதிவாகியிருந்ததால் நான் முடிவு செய்தேன் உம்மாவை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்வது என. மருத்துவ தோழி மகேஸ்வரியை அழைத்து சொன்னேன்.நான் என்ன செய்ய வேண்டும் என கேட்தறிந்தேன். ஜி ஹெச் கொண்டு போகிறேன் எனவும் சொன்னேன்.அவர் “ரொம்ப நல்லது ஜி ஹெச்சில் பார்த்துக்கொள்வார்கள், நீங்க கூட இருந்ததால உங்களுக்கும் வந்திருக்கும்.அம்மா வீட்டில் இருந்ததால் சுனிதா,குழந்தைகளுக்கும் இருக்கும்”என சொன்னார்.சுனிதாவை போனில் அழைத்து விசயத்தை சொன்னேன்.
                 
           காலை உணவை பையில் வைத்து வெளியே வைக்க சொன்னேன். வெறிச்சோடிய சாலையில் வீட்டிற்கு சென்று வெளியேயிருந்த இட்லி,சாம்பார் பையை எடுத்துகொண்டு மீண்டும் மருத்துவமனை சென்றேன்.உம்மாவிடம் "காப்பி குடிம்மா" என சொல்லி தட்டில் இட்லி,சாம்பாரை எடுத்து வைத்துவிட்டு “மெடிக்கல் காலஜ் போவோம்”என்றேன். நான் அங்கேய குளித்து உணவுண்ண தயாராகும்போது மூன்று நர்சுகளுடன் மருத்துவர் உள்ளே நுழைந்தார்.அப்போது தான் விசயத்தை சொன்னேன் “அம்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது,நான் மெடிக்கல் காலேஜிக்கு மூவ் பண்ணுகிறேன்”என்றேன் மருத்துவரிடம்.அவர் “டிஸ்சார்ஜ் தருகிறேன்” என்றார். அப்போது தான் உம்மாவுக்கு தெரியும் தனக்கு கொரோனா என.கண்ணீர் விட்டு அழுதாள் “என்னை நல்ல ஆசுபத்திரிக்கு கொண்டு போய் காட்டு மக்களே,அண்ணனுக்கு மெசேஜ் குடு”என்றாள். “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். 


          சுனிதா உம்மாவிடம் பேசிவிட்டு என்னை அழைத்து “மாமிய ஆசாரிபள்ளம் கொண்டு போறது அவ்வளுக்கு தெரியுமா?”. “நான் இன்னும் சொல்லவில்லை” “பேசண்டுட்ட எங்க ட்ரீட்மெண்ட்க்கு போறோம்னு சொல்லது முக்கியம் அவங்ககிட்ட கேட்டுகிடுங்கோ” என்றாள். மருத்துவமனை பில் தயாராகி வர பதினோரு மணியை தாண்டிவிட்டது.பன்னிரண்டு மணிக்கு ஆம்புலன்சை அழைத்து உம்மாவை அமரவைத்து நான் எனது இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தேன்.கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி ஆசாரிப்பள்ளம் நுழைவாயிலை கண்டதும் உம்மா ஆம்புலன்சை நிறுத்திவிட்டாள் “மொவன் என்ன கிம்சுக்கு கொண்டு போறேன்னு சொன்னான்”என்றிருக்கிறாள்.

   

             ஆம்புலன்ஸ் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி வாயிலில் திரும்பி நின்றிருந்தது. நான் வந்ததும் ஆம்புலன்சை உள்ளே போக சொன்னேன்.உம்மாவின் ஆதார் அட்டையை வாங்கி சில ஆவணங்களை பூர்த்திசெய்துவிட்டு உடலில் ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்துவிட்டு கோவிட் வார்டுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு காலியாக இருக்கும் ஒரு படுக்கையை தேர்வு செய்ய சொன்னார் செவிலிப்பெண்.வயதானவர் என்பதால் நான் உடனிருக்க முடியும் என்றனர். போர்வையை விரித்து உம்மமாவை படுக்கவைத்தேன்.
  
      பெண்களுக்கும்,ஆண்களுக்கும் படுக்கைகளை ஒரு தட்டி வைத்து பிரித்துவைத்திருந்தனர்.ஒரு ஒன்பதுமாத குழந்தை,எட்டுமாத கர்ப்பிணிப்பெண்,அறுபதுவயதான மூன்று பெண்கள்,நடுவயதை உடைய ஒரு ஒருவர் இளம்வயது பெண் ஒருவரும் இருந்தனர். மதிய உணவு நோயாளிகளுக்கு வழங்கிகொண்டிருந்தனர். 
நோயாளிகளுக்கு உணவு வழங்கபடுகிறது 


    
     உம்மாவுக்கு ஈசிஜி மற்றும் ரத்த சோதனை செய்தனர்.மருத்துவமனை உணவகத்திலிருந்து சைவ சாப்பாடு வாங்கி சாப்பிட்டோம். மேலும் “தனியார் மருத்துவமனையிலிருந்து ஏன் இங்கே கொண்டுவந்தீர்கள்” என கேட்டாள் செவிலிப்பெண். “இங்கே கடந்த ஆண்டு அனுமதிக்கப்ட்டிருந்த வி ஐ பி ஒருவர் இங்குள்ள சிகிட்சை முறை,உங்களின் கவனிப்பு பற்றி எழுதியிருந்தார்”என்றேன். உம்மா சுனிதாவிடம் போனில் “எனக்க எழுவத்திரண்டு வயசுல இதையும் பாக்கனும்னு இருக்கு,எனக்க மூத்த மொவன் என்னய எங்க போனாலும் ஏ சி ரூமுல தான் தங்கவெப்பான்,ஏ சி ரயில்ல தான் கூட்டிட்டு போவான் இவன் என்னய இங்க கொண்டு போட்டுட்டான்”என . 
       
    நான் உம்மாவிடம் சொன்னேன் “கொரானாவுக்கு இங்கதான் நல்ல மருந்து உண்டு,அரசாங்க ஆசுப்பத்திரி மட்டும்தான் காப்பத்த முடியும்” என்றேன் இரு மணிநேரத்தில் எதிர்படுக்கையிலிருந்த பெண்ணை உம்மா அடையாளம் கண்டு கொண்டு பேச்சு கொடுத்தாள். கர்ப்பிணி பெண்ணையும்,கைக்குழந்தையையும் கண்டபின் கொஞ்சம் இயல்புக்கு நிலைக்கு மாறியது உம்மாவின் மனம்.

           மாலையில் கசாயம்,சுண்டல்,பால் கொடுத்தார்கள். நண்பர் அருட்பணி காட்சன் சாமுவேல் போனில் அழைத்தபோது விபரம் சொன்னேன் .உம்மாவிடம் பேசி விரைவில் நலம்பெற ஜெபித்தார்.கடந்த ஆண்டு கோவிட் வந்து மீண்ட தோழிகள் மற்றும் நண்பர்கள் அழைத்தபோது உம்மாவிடம் பேசி தைரியாமாக இருக்க சொன்னார்கள்.

             இரவு ஏழு மணிக்கு முன்பாக பணியிலிருந்த செவிலிப்பெண் “அண்ணா சுனிதாக்க ஹஸ்பண்டா நீங்க,சுனிதா போன் பண்ணி சொன்னா” என்றாள். அவர்கள் சுனிதாவின் சகோதரிகளின் நெருங்கிய நண்பர்கள்.அந்த செவிலி பெண்ணின் கணவன் டார்வின் நிறைய உதவிகள் செய்பவர்.நான் மற்றும் சுனிதாவின் இரு சகோதரிகளின் கணவன்களும் வெளிநாட்டில் இருப்பதால் எதாவது அவசரம் என்றால் ஓடி வருபவர் டார்வின்.தனியார் வங்கியில் மேலாளராக இருக்கிறார்.
  
            2019 ஆண்டு ஜூலை மாதம் சுனிதா நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தாள்.என் இரு மகன்களும் சுனிதாவின் சகோதரிகளின் வீட்டில்.சுனிதாவுக்கான உணவை தயார் செய்து கொடுத்தால்மருத்துவமனை சென்று படுக்கையில் இருக்கும் சுனிதாவிற்கு டார்வின் உணவை பிரித்து தட்டில் வைத்து அவள் உண்பதுவரை காத்திருப்பார்.சொந்த சகோதரியை போல் பார்த்துகொண்ட நல்ல உள்ளம் அது.

      இரவு பணிமுடிந்து மனைவியை அழைத்துச்செல்ல வந்தார் டார்வின்.சந்தித்து பேசிக்கொண்டோம்.மறுநாள் முதல் மதியம் ஒரு மணிக்கு மனைவியை அழைத்து வரும்போது எனக்கும் உம்மாவுக்கும் மதிய உணவும்,இரவு பணிமுடிந்து செல்கையில் இரவுணவும் வீட்டிலிருந்து வாங்கி வருகிறேன் என்றார்.பெரிய உதவி அது.டார்வினின் மனைவி இரவு பணியில் உள்ள செவிலியிடம் உம்மாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்றாள். 
 
ஆண்கள் வார்டு


     உம்மாவின் அருகில் இருந்த இரு படுக்கைகள் காலியாக இருந்தது அந்த இடைவெளியில் தரையில் பாய் விரித்து படுத்துக்கொண்டேன்.இரவு பத்து மணிக்கு பணிக்கு வந்த காவலர் “இது லேடிஸ் வார்டு இங்க ராத்திரி இருக்ககூடாது வெளிய போங்க” என்றார்.பாயை சுருட்டிக்கொண்டு ஆண்கள் வார்டில் வந்தேன் கட்டில்கள் நிறைய காலியாக இருந்தது பாயை விரித்து படுத்துக்கொண்டேன் . 


 மேலும்

1 comment: