Thursday 20 January 2022

உம்மா

 

உம்மா  இப்போதெல்லாம் மணவாளக்குறிச்சியில்தான் அதிகமாக இருக்கிறாள்.

நான் பிறந்து வளர்ந்த காந்தாரி விளையில் உள்ள எங்கள்  பழைய வீட்டை வாங்கி  இடித்து  புதிய வீடு கட்டியிருக்கிறாள் அக்காவின் மகள் அப்ரிதா உம்மா பெரும்பாலும் அவள் பேத்தியின் வீட்டில் தான்.

அக்காவின் வீடும் மிக அருகில் இருக்கிறது.உம்மா எப்போதாவது தான் என் வீட்டிற்கு  வருவதுண்டு.

நான்கு தினங்களுக்கு முன் அக்கா,மருமகள், மகன், பேத்தி என அனைவரும் வெளியூர் செல்ல. நான் உம்மாவை அழைத்தேன் என் வீட்டிற்கு வருமாறு.

"நல்ல காய்ச்சல்,இருமல், சளி், மூச்சு முட்டல் இருக்கு ஆசுபத்திரி போய்ட்டு சாயங்காலம் வாரேன் மக்களே" என்றாள்.

அன்று மாலை வீட்டிற்கு வந்து இரவு தூங்கி காலையில் எழும்போது .

" இன்னைக்கு கொஞ்சம் கொள்ளாம்" என்றாள். அவ்வப்போது இருமி சளி வெளியே வரவில்லை என சிரமபட்டாள்.

மறுநாள் காலை படுக்கையிலிருந்து தாமதமாக எழுந்து "முடியவில்லை ஆசுபத்திரி போவோம்" என்றாள் உம்மா.

ஜெயசேகரன் மருத்துவமனையில்  தான் கடந்த பல ஆண்டுகளாக சிகிட்சை .இரு மூட்டுகளும் அறுவை சிகிட்சை செய்து மாற்றபட்டுள்ளது. சுகர், பிரசர் ஆஸ்துமா எல்லாம் உண்டு இது போக கொஞ்சம் இதய கோளாறும்.

மருத்துவமனைக்கு வந்து டாக்டர் சதீசை பார்த்தோம். அவர் எந்த சோதனையும் செய்யமால் சார்ட்டில்  நர்ஸ் எழுதியிருந்த விபரங்களை பார்த்துவிட்டு உம்மாவிடம் “என்ன செய்யுது”என  கேட்டு விட்டு .

“ரெண்டு நாள் அட்மிட் ஆகி பாருங்க” என்றார்.

உடனே ஈஸிஜி ,எக்ஸ்ரே எடுத்துவிட்டு  அறைக்கு சென்றோம் . ஊசி,மருந்து, குளுகோஸ் ஏற்றப்பட்டது. மாலையில் கொரோனா சோதனைக்கு சளி எடுத்து சென்றனர்.

நுரையீரல் நிபுணர் வந்து எக்ஸ ரே வை பார்த்துவிட்டு சி டி ஸ்கேன் எடுக்க சொன்னார்.

அவர் உம்மாவிடம் “தடுப்பூசி போட்டீர்களா” எனக்கேட்டார்.

"இல்லை"

"ஏன் போடவில்லை, அரசாங்கம் இவ்வளவு முயற்சி எடுக்குது , நீங்க ஆஜாக்கிரதையா இருக்கீங்க"

"டாக்டர் வீட்டு கிட்ட எல்லாரும் பயம் காட்டினாங்க" என்றாள்.

"இப்ப ஏன் இங்க வந்தீங்க அந்த அறிவாளிகள் கிட்ட கேட்டு அங்கேயே டிரீட் மெண்ட் எடுக்க வேண்டியது தானே?"

"இல்ல டாக்டர் இப்ப வீட்டுக்கு போனதும் ஊசி போடேன்"என்றாள் உம்மா.

நான் மருந்து வாங்க லிஃப்ட்ல் கீழிறங்கி வரும்போது மருத்துவரும் உடன் வந்தார்.

"எக்ஸ்ரே கொஞ்சம் டவுட் இருக்கு அதான் சி டி ஸ்கேன் எழுதினேன் பாத்துருவோம்" என்றார்.

இரவு ஏழு மணிக்கு கேரளத்து அலுவலக பெண்மணி வந்து விவேக் லாபில் இரவு பத்துமணிக்கு கோவிட் ரிப்போட் வாங்க சொல்லி ரசீது  கொடுத்து விட்டு சென்றாள்.

இரவு பணியில் இருந்த நர்ஸ் டிரிப்ஸ்ஸை எடுத்து விடுவோம் அம்மா நல்லா தூங்கட்டும் என சொல்லி கையில் குத்தி வைத்திருந்த குளுகோஸ் குழாயை உருவி விட்டாள்.

நானும் உம்மாவும் எட்டரை மணிக்கே தூங்கி விட்டோம். இதற்கு முன் உம்மா மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட போதெல்லாம் நான் ஊரிலேயே இல்லை. இதுதான் உம்மாவுடன் நான் முதல் முறையாக மருத்துவ மனையில் இருக்கிறேன்.ஓரிரு தினங்களில் வீட்டிற்கு சென்று விடலாம்.இரவில் மனம் கொந்தளிப்பாகவும்,தொடர்ச்சியான  எதிர்மறை எண்ணங்களினாலும் தூக்கம் இல்லை.

அதிகாலை ஐந்து மணிக்கு முன்பாக விழித்து விட்டேன். உம்மா ஐந்தே காலுக்கு எழுந்தாள் கட்டன் சாயா போட்டு கொடுத்தேன். அதை குடித்து விட்டு இயல்பாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள்.ஆறு மணிக்கு முன்பே செவிலி பெண் வந்து சோதனைகளை செய்துவிட்டு இரவில் நிறுத்திவைத்திருந்த ட்ரிப்சை மீண்டும் செலுத்திவிட்டு போனாள்.சி டி ஸ்கேன் ரிபோர்ட்டை வாங்கி எனது மருத்துவ தோழிக்கு அனுப்பினேன்.அவர் அந்த அதிகாலையே பதிலளித்தார். “ல்ங்கஸ்ல கொஞ்சம் இன்பெக்ஷன் இருக்கு,பயப்படாண்டாம்,ஹாஸ்பிட்டல இருக்கதுனால அவங்க பாத்துப்பாங்க”என்றார்.

CT SCAN 


ஆறரை மணிக்கு சயாவும்,உண்ணியப்பமும் வாங்கி கொடுத்துவிட்டு பணியில் உள்ள நர்ஸிடம் வீட்டிற்கு போய் வருவதற்கு அனுமதி சீட்டு கேட்டேன். அன்று ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்திருந்தது அரசு.

pass 







மருத்துவரிடம் கையொப்பம் பெற்று வெளியில் சென்றுவரும் சான்றிதழை  ஏழரை மணிக்கு செவிலி பெண் என்னிடம் தந்தாள்.ஒரு மணிநேரம் உம்மாவை பார்த்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டேன்.அருகில்தான் விவேக் ஆய்வகம். அங்கு போய் உம்மாவின் கோவிட் ரிப்போர்ட்டை கேட்டேன்.சில நிமிடங்களில் அச்சுபிரதி ஒன்றை கையில் கையில் தந்தாள் அங்கிருந்த பெண்.உம்மாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என அந்த காகிதம் சொன்னது.



  எந்த எண்ணங்களுமின்றி செய்வதறியாது சில நிமிடங்கள் வெறிச்சோடி கிடந்த சாலையை பார்த்துக்கொண்டிருந்தேன்.



மேலும்

No comments:

Post a Comment