Saturday 8 June 2019

கப்பல் காரன் டைரி. கண்

                                             கண்

   கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி எனது வலது கண் கொஞ்சம் மங்கலாக தெரிந்தது.மேகமூட்டம் போல,எதோ மறைப்பது போலவும்.கப்பலின் கடிகாரம் தொடர்ந்து நான்கு மணிநேரம் பின்நோக்கி சென்றுவிட்டதால் அன்று அதிகாலை மூன்று மணிக்கே விழித்திருந்தேன்.நீராடி,தொழுகையும் ,பயிற்சிகளும் முடிந்தபின் ஐந்தரை மணிக்குமேல் கைபேசியை பார்த்தேன் அப்போதுதான் என்னால் படிக்க முடியவில்லை .வலது கண்களை கைகளால் மறைத்துவிட்டு இடதுகண்களால் பார்த்தேன் ,இடது கண்களால் படிக்க முடிந்த சிறிய எழுத்துக்களை ,வலது கண்ணால் படிக்க முடியவில்லை .
    
   கண்களை நன்னீரில் நன்றாக கழுவினேன் பார்வை அப்படியேதான் இருந்தது. அது அன்று மாலை வரை தொடர்ந்தது ,லேசாக கண் உறுத்தலும்  .அன்றிரவு எனது இரண்டாம் இஞ்சினியரிடம் சொன்னேன்.அவர் கப்பலின் மருத்துவ அதிகாரியான,இரண்டாம் அதிகாரியை சந்தித்து  கண்களை கழுவும் ‘ஐ வாஷ்’ வாங்கி தந்தார்.மறுநாளும் அப்படியே இருந்ததால் மீண்டும் கப்பலின் மருத்துவ அதிகாரியிடம் சென்றேன்.அப்போது காப்டனும் அவருடன் இருந்தார்.காப்டன் என்னிடம் “உனக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறதா?சர்க்கரை  வியாதி உள்ளதா” என கேட்டார். “இல்லை”  என்றேன் “மாலையில் பணி முடிந்தபின் குளித்துவிட்டு வா” என்றார்.(தினமும் இரு வேளை நீராடுபவன் நான்) இரண்டாம் அதிகாரியிடம் “ ஷாகுலின் கண்களை பூத கண்ணாடியால் சோதனை செய்,ரத்த அழுத்தத்தையும் பார் நாளை மறுநாள் துறைமுகம் செல்கிறோம் தேவை பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பலாம்”என சொன்னார் .

    மாலையில் அவரை மீண்டும் சந்தித்தேன். இரண்டாம் அதிகாரி கார்த்திக் பூத கண்ணாடியால் பார்த்துவிட்டு “கண்ணில் பூ வளர்ந்துள்ளது  உனக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்” என்றார். “இப்போதெல்லாம் நாற்பது வயதானவர்களுக்கும் இப்படி ஆகிவிடுகிறது .எனது அக்காள் இப்போது தான் அந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டாள்.ஒன்றும் பிரச்னை இல்லை” என்றார் .
மறுநாள் மாலை பார்வை தெளிவடைந்தது.எரிச்சலோ உறுத்தலோ,எதுவும் இல்லை.மருத்துவமனை சென்று கண் மருத்துவர் ஒருவரை பார்த்து பரிசோதனை செய்தால் நன்று என ஒரு எண்ணம் இருந்தது.
  
       அதன் பின் அவ்வப்போது இடது கண்ணை மறைத்துவிட்டு வலது கணணால் பார்ப்பேன் .வலது கண் கொஞ்சம் பார்வை குறைவாக இருப்பது உறுதியானது .மீண்டும் இரண்டாம் அதிகாரியை சந்தித்தேன். “இரு கண்களாலும் பார்க்கும்போது பிரச்சனை  ஏதும் இல்லையே,நான் புத்தகத்திலும் தேடினேன்,அதிலும் ஒன்றும் இல்லை” என சொன்னார் .

     பின்னர் இரு வாரங்களுக்கு பின் முன்பு போல் வலது கண்ணில் எதோ மறைப்பது போலிருந்தது .பின்னர் சரியாகியது.மீண்டும் இரண்டாம் அதிகாரி,காப்டனை சந்தித்தேன் .கப்பலில் கண்களுக்கான மருந்துகள் ஏதும் இல்லை .இருதிருந்தாலும் கண் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ணில் எந்த மருந்தும் நான் போடுவதில்லை.

    இறுதியாக காப்டன் என்னை கப்பல் துறைமுகதிற்கு  செல்லும்போது மருத்துவமனைக்கு அனுப்புவதாக சொன்னார்.கடந்த ஏழாம் தேதி கப்பல் அமெரிக்கா வந்தடைந்தது .எட்டாம் தியதி காலை பத்தரை மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வண்டி வரும் அதற்கு முன் தயாராக இருங்கள் என்றார் .  டிமெல்லோ கப்பலில் டெக் பிட்டராக  இருக்கிறார் .சில தினங்களுக்கு முன்பு கீழே விழுந்திருக்கிறார் வலது கால் மூட்டு பகுதியில் நல்ல அடி .அவரும் என்னுடன் வருவார் என்றனர் .
  
        காலை பத்து மணிக்கு புதிதாக பணிக்கு வரும் மூவரும் மூன்றாம் அதிகாரி ஆப்தே ஸ்ராயாசின் மனைவியும் கப்பலுக்குள் வந்தனர்.அதே வண்டியில் நாங்கள் செல்ல வேண்டும் .பத்தரைக்கு கப்பலில் இருந்து இறங்கி வண்டியில் அமர்ந்து கொண்டோம். வெள்ளைக்கார அமெரிக்கர் லூ எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார் .வண்டியில் ஏறியதும் “மருத்துவருக்கான படிவம்,வெளியே செல்வதற்கான அனுமதி சீட்டு இருக்கிறதா” என எங்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்டபின் வண்டியை இயக்கினார்.
   
       துறைமுக வாயிலில் அனுமதி பெறவேண்டி வண்டியிலிருந்து ஒருமுறை இறங்கி ஏறிகொண்டோம் .லூ எங்களிடம் பதினொன்றே காலுக்கு நாம் மருத்துமனையை சென்றடைவோம் என்றார். வண்டி பிலடெல்பியாவை நோக்கியே சென்றது .பிலடெல்பியா  வானூர்தி நிலையம் தாண்டி வலப்பக்க சாலையில் பிரிந்து சென்றது .பிப்ரவரி மாதம் நான் இங்கு வரும்போது மரங்கள்,செடிகள் இலைகளை உதிர்த்து குளிரில் நடுங்கி  கொண்டு நின்றிருந்தது.புற்கள் பனிக்கட்டிகளாக இருந்தது .இப்போது மரங்களும்,செடிகளும் இலைகளை துளிர்த்து இளம் பச்சை நிறத்தில் என்னை பார்த்து சிரித்தது .லூ எங்களிடம் இன்று நல்ல தட்பவெப்ப நிலை எண்பது பாரன்கீட்(சுமார் இருபத்தியாறு பாகை) என்றார் .
  
         

  லூ சொன்னது போலவே பதினொன்றேகாலுக்கு  ஒரு அழகிய கிராமத்திற்குள் வண்டி நுழைவது போலிருந்தது.ஆம் அது fair view village எனும் குடியிருப்பு பகுதி,அந்த கிராமத்தில் கட்டிடங்கள் சுட்ட சிறு செங்கல்களால் கட்டப்பட்டு,வெளி பூச்சும்,வண்ண சாயமும் செய்திருக்கவில்லை .முழு கிராமமும் செந்நிறத்தில் இருந்தது. அதில் ஒரு கட்டிடம்தான் சிறிய கிளினிக்.பெரும்பாலும் வீடுகள் தான்.அனேகமாக பத்தில் நான்கு  வீடுகளின்  முன் அமெரிக்க தேசிய கொடி பறந்துகொண்டிருந்தது.இதை அமெரிக்காவில் நான் சென்ற பகுதிகளில் எல்லாம் காண்கிறேன் .
  
லூ காரை நிறுத்திவிட்டு ,பின்னால் வரும் வண்டியை கவனித்து இறங்கசொன்னார் .கிளினிக்கின் உள் சென்று அமர்ந்தோம் நானும் ,டிமெல்லோவும்.என் எதிர் இருக்கையிலிருந்த கறுப்பின பெண் படித்துகொண்டிருந்த புத்தகத்திருந்து விழிகளை விலக்கி ஒரு புன்னகையால் குட் மார்னிங் என்றாள்.எங்களுக்காக முன்னரே பதிவு செய்யபட்டிருந்தது .ஒரு வயதான தம்பதி உட்பட நான்கு பேர் அமர்ந்திருந்தனர்.மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்து என்னை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு ,ஒரு நோயாளியின் பெயரை அழைத்து ,அவரை அறைக்குள் கூட்டிசென்றார் .வேறொரு அறையிலிருந்து வந்த பெண் மருத்துவர் என்னருகிருந்த வயதான பெண்மணியை பெயர் சொல்லி அழைத்து இன்னும் எவ்வளவு நேரம் உங்களுக்கு காத்திருக்க விருப்பம் என கேட்டார்.கைகளில் இருந்த சக்கர உதவியுடன் கூடிய நடை துணைவனை ஊன்றி எழுந்தவர் .இதோ வருகிறேன் என மருத்துவருடன் சென்றார் .
   
    முதல் அறைக்கு சென்ற நோயாளி வெளியே வந்ததும் .வரவேற்பறையின் மேஜையில் இருந்த .காகிதத்தை எடுத்த மருத்துவர் என்னை பார்த்து “உன் முதல் பெயர் ஷாகுலா?”என கேட்டார். “ஆமா என்றேன்” உள்ளே வா என்றார் . அறைக்குள் சென்றதும் குட்மார்னிங் டாக்டர் என்றேன். அவர் “எனது பெயர் கீல்மன்,உட்காருங்கள்” என எதிரிலிருந்த இருக்கையை காண்பித்தார் .கப்பலிலிருந்து கொண்டு சென்றிருந்த படிவத்தை பார்த்துவிட்டு.என்னிடம் விபரங்களை கேட்டறிந்தார் .உயரமான சாய்வு நாற்காலியில் என்னை அமர சொன்னார் .நான் அமரும் முன் அதிருந்த மென்தாளை மாற்றி ,புதியதை போட்டார்.எதிரிலிருந்த நாட்காட்டியை பார்க்க சொல்லிவிட்டு எனது வலகண்ணை ,கண் பரிசோதிக்கும் சிறிய விளக்கால் பார்த்தார் ,பின்பு இடது கண்ணையும் பரிசோதித்தார் .எழுந்து மீண்டும் அவரது மேஜை முன்னிருந்த இருக்கையில் அமர சொன்னார்.
    
     “உனது கண்களில் நான் எதையும் காணவில்லை .உன்னை கண் மருத்துவரிடம் அனுப்புகிறேன் போய்வா” என்றார்.நன்றி கூறி வெளியே வந்தேன் .பின்னர் டி மெல்லோ உள்ளே சென்றான் .டி மெல்லோ வெளியே வந்தபின் மருத்துவர் லூவிடம், “இவருக்கு கண் ஆஸ்பத்தரி,இவருக்கு எக்ஸ் ரே,அழைத்து செல்லுங்கள்”என்றார் .அங்கிருந்து பதினைந்து நிமிட தொலைவில் எக்ஸ் ரே நிலையம் ,டிமெல்லோவை அங்கு இறக்கிவிட்டு,அங்கிருந்து ஐந்து நிமிட தொலைவிலிருந்த கண் மருத்துவமனையை நோக்கி சென்றோம் .லூ என்னிடம் இவர் மிகச்சிறந்த கண் மருத்துவர் என்றார் .
  
    வண்டியை நிறுத்திய பின் தான் கவனித்தேன்,அங்கு நிறுத்தியிருந்த வாகன பதிவெண்கள் நியூஜெர்சி  என எழுதியிருந்தை.டாக்டர் கோசிஸ் என பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகையின் எதிரில் அமர்ந்தேன் .லூ வரவேற்பறையிலிருந்து ஒரு படிவத்தை வாங்கி தந்து என்னிடம் பூர்த்தி செய்ய சொன்னார் .பெயரும் ,பிறந்ததேதியும் தான் என்னால் அதில் எழுத முடிந்தது .கையொப்பமிட்டு கொடுத்தேன் .என்னருகிருலிந்த வியட்நாம் முகச்சயால் கொண்ட  நடுவயதுக்கு மேலிருந்த பெண்ணை பெயர் சொல்லி அழைத்து சென்றார் மருத்துவர் கோசிஸ்.
  அந்த பெண் வெளியே வந்ததும்  மருத்துவர்  என்னிடம் “கொஞ்சம் பொறுங்கள் அடுத்து நீங்கள் தான்” என்றார் .அதிக காத்திருப்பு இல்லை அங்கே. “சுல்தான் நீயா” என கேட்டார். “இல்லை” என்றேன் .உனது முதல் பெயர் ஷாகுலா என கேட்டுவிட்டு .பரிசோதனை அறைக்குள் கூட்டிசென்றார் என்னை .டாக்டர் கோசிஸ் என்னை விட ஐந்து அங்குல உயரம்,நல்ல குண்டான உடல்வாகு,தாடையில் மட்டும் நீண்ட தாடி வளர்த்து வழுக்கை தலையுடன் இருந்தார் .கண் மருத்துவர் கோசிஸின் படத்தை சுனிதாவிற்கு அனுப்பிவைத்தேன் .அவள் டாக்டருக்கு எப்போது பிரசவ தேதி என கேட்டாள்.
  
     
dr kosiss
அவர்  என்னிடம்  பிரச்னை என்ன என கேட்டறிந்தார்.மேற்பகுதி வட்டமான ,நெகிழியால் ஆன கண்களை மறைக்கும்  ஒரு வெண்ணிற குச்சியை என்னிடம் தந்து இட கண்ணை மறைத்து விட்டு வலகண்ணால் எதிரிலிருந்த திரையில் தெரியும் எழுத்துகளை படிக்க சொன்னார் .பெரிதிலிருந்து ,சிறிதாகி கொண்டே வந்தது .பின்னர் இடது கண்ணால் படைக்க சொன்னார் .பின்னர் லென்ஸ் பொருத்திய கருவியை கண்களில் மாட்டி எழுத்துகளை படிக்கச் சொன்னார் .மூன்றாவதாக இன்னும் ஒரு கருவி .அனைத்தும் நான் அமர்ந்திருந்த இருக்கையில் எதிரிலேயே இருந்தது .அவரும் நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமலே ,கைகாளால் கருவிகளை நகர்த்தி எளிதாக சோதனைகளை செய்தார்.
   
     பின்னர் எதிரிலிருந்த வேறொரு அறைக்கு அழைத்து சென்று .கண் பார்வையின் அளவை சோதனை செய்யும் தானியங்கி கருவியில் பார்க்க சொல்லி அச்சு பிரதி எடுத்துகொண்டார் .மீண்டும் முதல் அறைக்கு அழைத்து வந்து கையில் துடைக்கும் மென்தாளை தந்துவிட்டு கண்களில் இரு விதமான சொட்டு மருந்துகளை விட்டபின் .எதிர் சுவரின் மூலையை பார்க்க சொல்லிவிட்டு சிறியதொரு விளக்கொளியில் இரு கண்களையும் சோதனை செய்தார் .பின்னர்  பலகைகளில் எழுதும்(whiteboard marker) பெரிய பேனாவை  கைகளில் வைத்து வட்டமாக சுற்றினார்.எனது கண்களும் அதற்கேற்ப சுழலவே அவர் “வெரி குட்” என்றார். “நான் இதுபோல் தினமும் கண்பயிற்சி செய்கிறேன்” என்றேன். “தலை கீழே,கால் மேலே வைத்து நிற்கும் பயிற்சி செய்வாயா?”என கேட்டார். “எனது குரு அந்த பயிற்சி செய்வதை தவிர்க்கும்படி சொல்லியுள்ளார் .அதனால் மண்டையில் உள்ள மெல்லிய நுண் நரம்புகள் அதிக அழுத்தத்திற்கு உட்படும் .அது நல்லதல்ல” என்றேன் .”நீ யார்” என கேட்டார் .
  “
          நான் ஒரு யோகா ஆசிரியர் ,உடற்பயிற்சிகள் ,எளிய தியானம் ,மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி, மன அழுத்தத்தை தவிர்ப்பது எப்படி என வகுப்பெடுப்பேன்,பயிற்சிகள் சொல்லித்தருபவன்” என்றேன். “ஓ கிரேட்,நீ எந்த நாட்டை சார்ந்தவன்”என கேட்டார். “நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தவன்” என்றேன். “என்னுடன் படித்த ஒருவன் பஞ்சாபி, தீடிரென உருது பேசுவான்,திடீரென ஹிந்தி பேசுவான்” என்றார். “நான் சிரித்துக்கொண்டே நானும் ,தமிழ் ,மலையாளம் ,ஹிந்தி போன்ற இந்திய மொழிகளை” பேசுவேன். நாங்கள் தென்னிதியர்கள் வட இந்தியா சென்றால் உலகின் வேறொரு கண்டத்திற்கு போனதுபோல் இருக்கும் ,உணவு ,உடை ,மொழி ..............கலாசாரம் எல்லாம் வேறு” என்றேன்  .
  
     மருத்துவர் கோசிஸ் ஒரு நிமிடம் காத்திரு வருகிறேன் என்றுவிட்டு சென்றவர் .பத்து நிமிடத்திற்கு பின் வந்தார்.சுவரில் ஒட்டபட்டிருந்த கண்ணின் படத்தை காண்பித்து “இந்த லென்சில் நீ பார்ப்பது பின்னால் வரும்போது எண்பது சதவீதம் தான் உனக்கு தெரிகிறது .அதன் காரணம் உன் வலக்கண்ணின் பின் பகுதியில் வீக்கம் இருக்கிறது .உன் கண்ணில் எந்த பிரச்னையும் இல்லை .இப்போது உனக்கு கண்ணாடியும் தேவையில்லை .உன் கண்ணில் பின் பகுதி நீர்கோர்த்திருபதற்கு உனது கோபம்,கவலை மன அழுத்தம் போன்றவையே” காரணம் என்றார்.நான் உரக்க சிரித்தேன். அவர்என்னிடம்  “கீப் யுவர் மைன்ட் ரிலாக்ஸ் ,எந்த மருந்தும் உனக்கு தேவையில்லை.அடுத்த மூன்று மாதத்திற்கு பின் அல்லது உனது பணி ஒப்பந்தம் முடிந்து ஊருக்கு சென்றபின் .ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்” என்றார் .சிறு கட்டங்களும்,அதன் நடுவில் ஒரு கரும்புள்ளியும் உள்ள ஒரு காகிதத்தை தந்து நடுவிலுள்ள புள்ளியை பார்க்க சொன்னார்.கட்டங்கள் பாம்பு போல வளைந்து ,நெளிந்து தெரிந்தது .ஏதாவது “கட்டங்கள் காணவில்லையா” என கேட்டார்.”இல்லை”என்றேன்.”பெர்பெக்ட் யூ டூயிங் வெல்” என்றார் .இந்த சார்ட் ஐ வாரம் ஒருமுறை பார் ,ஏதாவது வித்தியாசம் இருந்தால் ,மீண்டும் கண்பரிசோதனை அவசியம் என்றார் .

     எனக்கு நானே கேட்டேன் எனக்கு மன அழுத்தமும்,கவலைகளும் இருக்கிறதா என.நான் செய்யும் ஐவேளை தொழுகை ,தியானம்,பயிற்சிகள் எதுவும் எனக்கு உதவவில்லையா ?நண்பர்கள் பலரும் என்னை எப்போதும் சிரித்த முகம் என்பனர்.இந்த கப்பலுக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது ,இந்த கப்பலின் மேலதிகாரிகள் ,கீழ் நிலையிலிருப்பவர்களை தேவையில்லாமல் எப்போதும் ஒரு அழுத்தமான மன நிலையிலேயே வைத்திருக்கின்றனர் .நான் வந்த அன்றே என்னிடம் எனது இரண்டாம் இஞ்சினியர், “முதன்மை இஞ்சினியருக்கு முஸ்லீம்களை பிடிக்காது ,கவனமாக இரு” என்றார் .நான் வந்த மறுநாள் ஊருக்கு சென்ற ஒருவர் “,நீ இங்கே தொப்பி அணியாதே” என்றார். “ஏன்” என கேட்டேன். “முதன்மை இஞ்சினியர் தேவையே இன்றி உன்னை கஷ்டபடுத்துவான்” என்றார். “நான் பார்த்துகொள்கிறேன்,இது எனது மத அடையாத்துக்காக அணையவில்லை” என பதிலுரைத்தேன் .
   
         கப்பல் பணியே பல நேரங்களில் கடினம் தான் .இந்த கப்பலில் அதிக பணி சுமையோ,அதனால் அழுத்தமோ இல்லை .தென்னிந்தியன்,வடஇந்தியன் ,இங்கே போகாதே,அதை செய்யாதே என்பன போன்ற பணிக்கு பின்பான அழுத்தங்கள்.நிம்மதியாக இருக்கும் பணியாளன் என எவரும் இந்த கப்பலில் இல்லை .அது என்னையும் பாதித்திருக்கிறது.சுனிதாவிடம் கேட்டேன் அவள் “நீ கோவ காரன் ஷார்ட் டெம்பர்” என ஒற்றை வரியில் சொன்னாள்.பதினைந்து ஆண்டுகள் ஆகிறது அவளுடன் வாழ தொடங்கி.தாய்க்குபின் இல்லாளுக்கு தானே சரியாக தெரியும் கணவனை பற்றி .எனது சகோதரி அஜிதாவும் சொல்வாள் அவன் ஒரு இஞ்சி என .
  
          மூத்த சகோதரை அழைத்து பேசினேன். “நீ எல்லாருக்கும் டிப்ஸ் கொடுக்கா உனக்கு என்ன ஆச்சு” என கேட்டார்.எனக்கு தெளிவாக தெரிந்தது இந்த கப்பல் சூழ்நிலை தான் பிரச்னை என. எனது மருத்துவ நண்பர்கள் நீ எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென நினைக்கிறாய் அதுவே ஒரு அழுத்தம் தான் .இயல்பாய் ,நிகழ்காலத்தில் இரு .
 வேறொருவர் நீ உனது கோபத்தை வெளியில் காட்டுவதில்லை சிரித்துக்கொண்டே உன்னுள் அடக்கி கொள்கிறாய்.அதுதான்  இது போல் உடல் பிரச்சனைகளாக வெளிப்படும் என்றார்.

          கண் மருத்துவர் கோசிசுடன் ஒரு படம் எடுத்துக்கொண்டு,அவர் தந்த அறிக்கையுடன் வெளியில் வந்தேன்.சொட்டு மருந்துகள் ஊற்றியதால் வெயிலில் கண்கூசியது ,எதையும் தெளிவாக பார்க்கஇயலவில்லை,காரின் முன் இருக்கையில் அமர்ந்து,சீட் பெல்டை அணிந்துகொண்டேன். “உனது நண்பரும் தயாராக இருக்கிறார்.எக்ஸ் ரே நிலையத்திலிருந்து அழைத்து சொனார்கள்” என்றார் லூ. இது நியூ ஜெர்சியா என கேட்டேன். “ஆம் நாம் இப்போது இருப்பது நியூ ஜெர்ஸி அந்த பக்கம் பிலடெல்பியா” என்றார் டி மெல்லோவுக்கு முறிவுகள் ஏதும் இல்லை,எக்ஸ் ரே யை குறுந்தகடில் கொடுந்திருந்தனர் அது அவருக்கானது .மருத்துவர் கீல்மனுக்கு இணையத்தில் அனுப்பி வைத்திருந்தனர் .
  
         

மீண்டும் அந்த அழகிய fair view village க்குள் நுழைந்தோம்.மருத்துவர் கீல்மன் மதிய உணவுக்கு சென்றிருந்தார்.நான் வேடிக்கை பார்க்கும் பொருட்டு வெளியில் வந்தேன்.எதுவும் தெளிவாக தெரியவில்லை மீண்டும் உள்சென்று அமர்ந்துகொண்டேன் .மருத்துவர் வந்து டிமேல்லோவுக்கு ,மருந்துகளும் ,கால் மூட்டில் அணிய பட்டையும் வாங்க எழுதி கொடுத்தார்.என்னிடம் ஊருக்கு போனபின் ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள் என்றார் .
  
      கார் கப்பலை நோக்கி புறப்பட்டதும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நான் கண்களை மூடி கொஞ்சம் தூங்கி விட்டேன் .முந்தைய நாள் காலை எட்டுமணி முதல் அதிகாலை நான்கு மணி வரை வேலை செய்துவிட்டு,அதிகாலை ஐந்து மணிக்கு தூங்கி எட்டு மணிக்கு விழித்ததால் நல்ல களைப்பு .வண்டி கப்பலை நெருங்கிய போது லூ “தினமும் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச்செல்ல வேண்டியிருக்கிறது.மணிக்கணக்கில் அங்கே காத்திருப்பது வேலையாகி விட்டது” என்றார். “உன் கப்பலிலிருந்து ஊருக்கு செல்லும் மூவரை விமான நிலையம் அழைத்துச்செல்லவேண்டும்.அவர்களுக்காக காத்திருக்கிறேன் என சொல்லி சீக்கிரம் வரச்சொல்” என்றார்.என்னுடன் கப்பலுக்கு வாருங்கள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்றேன் .இல்லை பணிகள் எல்லாம் முடிந்தபின் வீட்டிற்கு போய் சாப்பிடுவேன் எனக்கான உணவு வீட்டில் காத்திருக்கிறது என்றார்.

    “காலையில் வந்த பெண் காப்டனின் மனைவியா”என கேட்டார். “இல்லை அவள் மூன்றாம் அதிகாரியின் மனைவி” .என்றேன். “ரொம்ப சின்ன பொண்ணாக இருக்கிறாள்” . “இருபத்தி மூன்று வயது தான் ஆகிறது அவளுக்கு” என்றேன் . “அவளை பார்த்தால் பதினெட்டு தான் மதிக்க முடியும் என்றார் லூ. நான் காலையில் பார்த்தபோது பள்ளி மாணவி என  தோன்றியது”என்றேன் .சரி உனது நண்பர்களை சீக்கிரம் வரச்சொல் என்றார் .லூவுக்கு நன்றி சொல்லி கப்பலை நோக்கி நடந்தோம்
ஷாகுல் ஹமீது ,
10 may 2019 

No comments:

Post a Comment