என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 2025
கப்பல் காரன் டைரி இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியாயிற்று இருந்தும் புது தகவல்கள் இருக்கின்றன என வாசகர்கள் சொல்கிறார்கள். இந்த கப்பலில் வந்தபின் அன்றாட நாட்குறிப்புகள் இனியும் தேவையில்லை என எண்ணினேன். நண்பர் கணேஷ் இல்லை ஷாகுல் தினசரி நாட்குறிப்புகள் போலல்லாமல் வாரம் ஒரு முறையாவது தொகுத்து எழுதுமாறு வேண்டினார்.
என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகளின் கடைசி பதிவு மார்ச் ஒன்றாம் தேதி எழுதியிருக்கிறேன். கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ரமலான் நோன்பு பதிவுகள்,இதுல் பிதர் மற்றும் இதயம் போன்ற பதிவுகளை எழுதியிருக்கிறேன்.
கப்பல் காரன் டைரி யாருக்காக என எழுதிய பதிவின் தொடர்ச்சிகளை இனி தொடர்ந்து எழுதுவேன். எழுதுவதை உடனுக்குடன் வலையேற்ற நண்பர் கணேஷ் உதவி செய்கிறார். அது எனக்கு பெரும் உற்சாகத்தையும்,தொடர்ந்து எழுதவும் தூண்டுகிறது.
இரண்டரை மாதங்களுக்கு முந்தைய பதிவை எப்படி எழுதுகிறேன். சில குறிப்புகள் வைத்திருக்கிறேன். அதை பார்த்ததும் என்னால் எளிதாக அந்த நாளுக்குள் சென்றுவிட முடிகிறது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் எழுத துவங்கியபோது முதலில் எழுதிய தொடர் ஈராக் போர்முனை அனுபவங்கள். ஈராக்கிலிருந்து வந்து பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் அந்த அனுபவங்களை எந்த குறிப்புக்களும் இன்றி எழுதினேன். என்னால் அந்த நாட்களில் சென்று விவரிக்க முடியும் என்பதை நானே அப்போதுதான் அறிந்தேன்.
என் எஸ் பிரண்டியர் நாட் குறிப்புகளின் தொடர்ச்சி....
இந்த பதிவை எழுதும் முன் லண்டனிலிருந்து நண்பர் கண்ணன் அழைத்திருந்தார். கடைசி பதிவில் சரக்கு கையாளும் முறையை கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தேன். பொது வாசகர்களுக்கு அது புரியாதே எனும் எண்ணமிருந்தது.
நண்பர் கண்ணன் “உலகமே ஜீரோ எமிஷன் பத்தி பேசுறாங்க,நீங்க முன்னூறு டன்களுக்கு மேல் (proppene C3) எல்பிஜி திரவத்தை அனாயசமாக காற்றில் கலக்கவிடுகிறீர்கள்.கப்பல் துறையில் உங்களுக்கு வேறு வழியே இல்லை”என்றார். அவர் ஆயில் அண்ட் காஸ் துறையில் பணி புரிவதாக சொன்னார். அந்த கட்டுரை தேவைதான் என்றும் குறிபிட்டார். கத்தார் எல் என் ஜி துறைமுகத்தில் பணிபுரியும் கணேச மூர்த்திக்கும் இன்னும் இந்த துறை சார்ந்து பணியில் இருப்பபவர்களுக்கும் மிக தெளிவாக புரியும்படி உள்ள கட்டுரை தான் அது.
இன்றும் எங்கள் கப்பலில் நடந்த பயிற்சிவகுப்பில் காற்று மாசு,மற்றும் கடல் மாசடைவதை குறைக்கும் பொருட்டு கப்பல்காரர்கள் செய்ய வேண்டியது. தினமும் எவ்வளவு ஏரி எண்ணெய் உபயோக்கிறோம் எனும் கணக்கை எங்கள் நிறுவனத்துக்கும் சம்பத்தப்பட்ட துறைக்கும் அனுப்புவதை விவாதித்தோம்.
கப்பலில் இனி வரும் பார்ட்டிகளில் பேப்பர் தட்டுகள்,பிளாஸ்டிக் கரண்டிகள் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்து கைதுடைக்கும் மென்தாள் உபயோகத்தையும் குறைக்கும்படிவேண்டினார் காப்டன். நான் இந்த கப்பலில் வந்து மூன்று மாதங்கள் ஆகிறது அதிகபட்சமாக பத்து டிஷு பேப்பர்கள் தான் உபயோக படுத்தியிருப்பேன். வெள்ளை துண்டுகள் வைத்திருக்கிறேன் கை,வாய் துடைக்கவும் சாப்பிடும் தட்டு,குவளை,கரண்டிகளை அதைக்கொண்டே துடைத்துகொள்கிறேன்.
கத்தாரின் மைசஜீத் துறைமுகம் அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்ற எங்களை மார்ச் ஒன்றாம் தேதி அதிகாலை துறைமுகம் வருமாறு அழைத்தது மைசஜீத் போர்ட் கண்ட்ரோல். ஒன்பதரை மணிக்கு நங்கூரம் உருவப்பட்டு கப்பல் நகர தொடங்கியது. இயந்திர அப்போது முதல் விழித்துகொண்டது.பதினொன்றே முக்காலுக்கு பைலட் வந்தார். நல்ல தூக்கதிலிருந்த என்னை அதிகாலை இரண்டே முக்காலுக்கு அழைத்தார்கள். “ஷாகுல் கம் டு மேனிபோல்ட்”
முகம் கழுவி பல்தேய்த்து மூன்று மணிக்கு சென்றேன்.கப்பலை முன்பும் பின்பும் எட்டு கயிறுகள் வீதம் பத்திரமாக கட்டி வைத்திருந்தார்கள்.பதினாறு பாகைக்கும் குறைவாக வெப்பம் இருந்தது. குல்லாய்,ஜாக்கெட் அணிந்து சென்றேன். அதிக குளிரில்லைதான். துறைமுக ஊழியர்கள் சரக்கு நிறைக்கும் குழாயை பொருத்தியபின் அனைத்து சோதனை செய்யபட்டது. குழாய்கள் இணையும் இடத்தில் ஒழுகல் இருக்கிறதா எமர்ஜென்சி வால்வுவுகள் தானியங்கி முறையில் முப்பது வினாடிகளுக்குள் மூடுகிறதா என்பன (ESD =Emergency shut down) ஆவணங்கள் பரிமாறப்பட்டு,பாதுகாப்பு விதிமுறைகள் விவாதித்தபின் கப்பலுக்கு சரக்கு நிறைக்கும் பணி துவங்கியது.
முதலில் மெதுவாக தொடங்கி மணிக்கு 1200 மெட்ரிக் டன் வேகத்தில் கப்பலுக்கு ப்ரோப்பேன் திரவம் சிராக வந்துகொண்டிருந்தது.சரக்கு தொட்டிகளின் முழு கொள்ளளவில் தொண்ணூறு சதம் மட்டுமே நிரப்புவது பாதுகாப்பானது. சரக்கு தொட்டி காலியாக இருப்பதால் திரவத்தை உள்ளே போட்டதும் அது ஆவியாகும். அதனால் சரக்கு தொட்டியின் அழுத்தம் வேகமாக அதிகரிக்கும். எனவே கம்ப்ரசர்களை இயக்கி அதில் உள்ள வாயுவை எடுத்து குளிர்வித்து திரவமாக மாற்றி மீண்டும் தொட்டிக்குள் அனுப்புவோம். மூன்று கம்ப்ரசர்களை இயக்கி சரக்கு தொட்டிகளின் இயக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தோம்.
எல்லாம் சரியாக இருக்கிறது என உறுதியானதும் ஐந்தரை மணிக்கு மேல் அறைக்கு சென்று குளித்து அதிகாலை தொழுகை முடித்து டெக்கில் வந்து காஸ் இஞ்சினியரை ஓய்வுக்கு போக சொன்னேன். இரவு பன்னிரெண்டு முதல் காலை ஆறு வரையும்,மதியம் பனிரெண்டு முதல் மாலை ஆறு வரை அவருக்கு பணி.
எனக்கு காலை ஆறு முதல் பன்னிரண்டு,பின் மாலை ஆறு முதல் பன்னிரெண்டு வரை பணி என முறை வைத்து இருவரில் ஒருவர் எப்போதும் சரக்கு கட்டுப்பட்டு அறை,டெக் அல்லது காஸ் பிளாண்டில் இருக்கவேண்டும். ரேடியோவில் அழைத்தால் உடனடியாக அதை ஏற்கும்நிலையில்.
சரக்கு தொட்டிகளின் அழுத்தத்தை கண்காணிப்பது தேவைபட்டால் இன்னுமொரு,கம்ப்ரசரை இயக்கவேண்டும். சீரான வேகத்தில் திரவம் வந்துகொண்டே இருக்கும். ஓடிகொண்டிருக்கும் கம்ப்ரசர்களின் வெப்ப, அழுத்த மானிகளை (parameters) கண்காணிப்பதோடு. அதை குறித்துகொள்ள வேண்டும் . கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினி திரையில் தெரியும் ப்ரோப்பேன் திரவத்தின் வெப்பம் மற்றும் மோட்டார் ஓடும் ஆம்பியர் போன்றவற்றை ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கும் லாக் புக்கில் எழுத வேண்டும். டெக்கில் பணியில் இருப்பவர்கள் கப்பலை கட்டியிருக்கும் கயிறுகளை இறுக்கவும்,தளர்த்தவும் செல்லும்போது காங்வே எனப்படும் கப்பலின் நுழைவு வாயிலில் சில நிமிடங்கள் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். முக்கியமாக காஸ் பிளாண்டில் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை கண்காணித்தல் தான் முக்கிய பணி. உடலுழைப்பு பெரிதும் இல்லையெனினும் ஆறு மணி நேரம் முறை வைத்து பணி செய்கையில் துறைமுகத்தில் இருக்கும் தினங்களில் சரியான தூக்கம் அமையாது.
சரக்கு தொட்டிகளில் சரக்கு நிறைக்கும் வேகம்,அளவுக்கு தகுந்தவாறு பலாஸ்ட் தொட்டிகளில் இருக்கும் கடல் நீரை கணக்கிட்டு சரியான முறையில் வெளியேற்ற வேண்டும். (பலாஸ்ட் நீரை வெளியேற்றும் முறை பற்றி விரிவாக தனிக்கட்டுரையில் எழுத வேண்டும் )டெர்மினலுடன் கப்பல் அதிகாரிகள் தொடர்பிலேயே இருப்பார்கள். ஒவ்வொரு மணிநேரமும் எவ்வவளவு சரக்கு கப்பலுக்கு வந்திருக்கிறது. எவ்வளவு டெர்மினல் தந்துள்ளார்கள் என்பதை கப்பலும்,டெர்மினலும் சரிபார்த்து ஆவணபடுத்தி கொள்வார்கள்.
மூன்று டெக் அதிகாரிகள் நான்கு மணிநேர பணியும் எட்டுமணிநேர ஓய்வும் என முறை வைத்து இருபத்தி நான்கு மணிநேரமும் பணியில் இருப்பார்கள். டெக் பணியாளர்கள் இருவர் வீதம் நான்கு மணிநேரம் பணி எட்டு மணிநேர ஓய்வு எனும் சுழற்சியில் இருப்பார்கள். துறைமுகத்தில் இருக்கும்போது கப்பலுக்கு வரும் உதிரி பாகங்கள்,உணவுபொருட்களை கப்பலுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஓவர் டைம் செய்வார்கள்.
கப்பலை ஆய்வுக்கு தயார் நிலையில் வைத்திருந்தோம் ஆய்வாளர் இரண்டாம் நாள் தான் வருவதாக தகவல் வந்தது. ஆய்வாளர் இரண்டாம் தேதி காலை பத்து மணிக்கு வந்தார்.முழுநாளும் பிரிட்ஜ்,இயந்திர அறை,டெக்,கார்கோ பிளாண்ட்,என முழுமையாக ஆய்வு செய்து ஆவணங்களையும் சரிபார்த்தார்.
இரவு ஒன்பது மணிக்குதான் ஆய்வை நிறைவு செய்து படகில் இறங்கி சென்றார். ஆறு ரிமார்க்ஸ் தந்தார்.அவற்றை மூன்று மாதத்திற்குள் சரி செய்திருக்க வேண்டும்.
எங்களிடம் நான்கு சரக்கு தொட்டிகள் (cargo tanks) இருப்பதாக சொன்னேன் (C3)ப்ரோப்பேன் திரவத்தை Tank 1-8771 ,tank 2 -12498,tank3- 11230,tank4- 14049 மெட்ரிக் டன்கள் வீதம் சரக்கு நிறைக்கும் பணி இரவு பத்து மணிக்கு முடிந்தது.
பின்னர் டெர்மினலும்,கப்பலும் இணைந்து மொத்தம் எவ்வளவு திரவம் வந்துள்ளது என்பதை ஊறுதி செய்து இருதரப்பும் ஒத்துகண்ட பின் ஆவணங்களில் கையொப்பமிட்டு பரிமாறிகொண்ட பின்.சரக்கு ஏற்றும் பணி முழுமையடையும் .
அதன் பின்னரே கப்பலில் இணைக்கப்பட்டுள்ள டெர்மினல் குழாய்கள் விடுவிக்கபடும். பதினோரு மணிக்கு குழாய்கள்விடுக்கபட்டது. மொத்தம் நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன் ப்ரோப்பேன் திரவம் இருந்தது கப்பலில்..
டூல்ஸ்களை எனது வொர்க்ஷாப்பில் வைத்து விட்டால்.எனக்கு பணி முடிந்து விடும். பதினோரு நாற்பதுக்கு பைலட் வந்தார். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு கப்பல் புறப்பட்டது. திங்கள்கிழமை முழு நாளும் எனக்கு ஓய்வாக இருந்தது.
கப்பலில் ஏற்றிய ப்ரோப்பேன் திரவத்தை தைவானின் மைலியோவ் (mailiao)துறைமுகத்தில் கொடுக்க சொல்லி உத்தரவு வந்தது. கப்பல் தைவானை நோக்கி பயணிக்க தொடங்கியது.
நாஞ்சில் ஹமீது,
13 -4-2025.
sunitashahul@gmail.com