Sunday, 23 November 2025

பணியில் இணைய காத்திருப்பு

 

கிருஷ்ணம்மாள் பாட்டியுடன்


        செப்டம்பர் ஐந்தாம் தேதிக்குப்பின் இப்போதுதான் அடுத்த பதிவை வலையேற்றினேன்.ஊருக்கு வந்தபின் மூன்றரை மாதங்களில் ஒரு பதிவுகூட எழுதவில்லை என்றே சொல்லலாம்.



  ஆசிரியர் ஜெயமோகன் சொல்வது தினமும் எழுதுபவர் தான் எழுத்தாளன் என.இம்முறை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம்தான் ஊருக்கு வருவதாக இருந்தேன்.ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிலேயே விடுமுறை உறுதியானதால் ஊருக்கு வந்துவிட்டேன்.

  செப்டெம்பர் மாதமே வேறு நிறுவனங்கள் என்னை அழைத்தது. நானும் தயாரானேன் ஆனால் வாய்ப்பு நழுவிவிட்டது. தூரன் விருது விழா, வெள்ளிமலையில் ஆலயக்கலைவகுப்பு,வாசிப்பு பயிற்சி மற்றும் இந்திய தத்துவ வகுப்புகளில் கலந்துகொண்டு நாட்கள் வேகமாக சென்றது.

மஞ்சரி 

சிவராஜ் 

தூரன் விழாவுக்கு செல்லும்முன் திண்டுக்கல் காந்தி கிராமம் சென்று பாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை சந்தித்தது மிக முக்கியமான தருணம். நூறு வயதான பாட்டி காந்தியுடன் இருந்துள்ளார்.அவரது திருமணத்தை காந்தியே நடத்திவைத்துள்ளார்.ஏழை விவசாயிகளுக்கு பெரும் நிலக்கிழார்களிடமிருந்து ஆயிரக்கணக்கான நிலத்தை பெற்று தந்தவர்.


ஊர் கிணறு புனரமைப்பு செய்யும் மஞ்சரி குக்கூ காட்டுப்பள்ளி சிவராஜ் அண்ணாவையும் காந்தி கிராமத்தில் சந்தித்தேன்.



   பாண்டிச்சேரி சபரி செவிலியர் கல்லூரி துணைமுதல்வர் உமா அவர்கள் கப்பல்காரன் டைரியின் வாசகி.அவர்கள் கலூரியில் நடக்கும் மாணவர்களுக்கான ஆளுமை திறன்மேம்மபாட்டு பயிற்சியில் ocean science எனும் தலைப்பில் உரையாற்ற அழைத்தார். கல்லூரி மாணவர்கள் முன் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிவிட்டு வந்தேன்.



 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் பிசியாக சென்றது.என் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பணியில் இணைய தயாராக உள்ளேன் எனக்கூறினேன்.அக்டோபர் முதல் வாரம் முதல் பணியில் இணைவதற்காக காத்திருக்கிறேன். இன்னும் அழைப்பு வரவில்லை.இருமுறை எனது மேலாளர் தர்சனாவை அழைத்து பேசினேன். கொஞ்சம் பொறு எனும் பதில் தான் கிடைத்தது.

  கப்பல் காரனுக்கு விடுமுறையில் சம்பளம் கிடையாது.விடுமுறையில் ஊருக்கு வந்தால் ஒரே மாதத்தில் கையிலிருக்கும் காசு காலி. எப்போது அழைப்பு வரும் என காத்திருக்கிறேன்.எழுதுவதற்கு அதிகம் இருந்தபோதும் எழுதவோ,வாசிக்கவோ இல்லை.

  அதிகாலை நான்கு சுனிதா தொழுகைக்காக வைக்கும் அலராம் என்னையும் எழுப்பிவிடும். படுத்தே இருப்பேன்.ஐந்துமணிக்கு எழுந்து அதிகாலை தொழுகைக்காக அருகிலிருக்கும் பள்ளிவாசல் சென்றுவருவேன்.காலை ஏழு முதல் இங்கேயே நண்பர்களுடன் நடைபயிற்சி  முடித்து எட்டுமணிக்கு வீட்டுக்கு வருவேன்.குளித்து சிறிது நேரம் தியானம் செய்தபின் காலை உணவு. மகன்கள் ஒன்பதரைக்குள் பள்ளிக்கும்,கல்லூரிக்கும் சென்றுவிடுவார்கள். எனக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்காது.சில நாட்கள் மீன் சந்தைக்கு சென்று மீன் வாங்கி வருவேன்.

   ஒன்றும் செய்யாமலே சோர்வாகவே நாள் முடிந்துவிடும்.ஐவேளை தொழுகைக்கும் பள்ளிவாசல் சென்று வருவதை தவிர. இரவு ஒன்பது மணிக்கே படுக்கைக்கு சென்றுவிடுகிறேன்.தினமும் எனது கம்பனியின் அழைப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

  கடந்த பத்து நாட்களாக என் குடியிருப்பு பகுதியிலுள்ள பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்த வாக்களார் படிவம் நிரப்பும் முகாமில் இருந்தேன்.நானூறுக்கும் மேற்பட்டோருக்கு வாக்காளர் படிவம் தன்னார்வலர்களால் நிரப்பிகொடுத்தோம்.அந்த பணியும் இப்போது முடிந்துவிட்டது, கடந்த சில நாட்களாகவே எழுதவேண்டும் என நினைத்து இன்று ஒரு பதிவு எழுதி வலையேற்றினேன்.

  வரும் நாட்களில் தொடர்ந்து எழுதி இருபது ஆண்டு நிறைவை விரைவில் முடிப்பதாய் இருக்கிறேன்.

 நாஞ்சில் ஹமீது,

23 November 2025,

sunitashahul@gmail.com

No comments:

Post a Comment