Wednesday 7 October 2020

கப்பல் காரன் டைரி ஆன் லைன் வகுப்புகள்

                         ஆன் லைன் வகுப்புகள்

             கோவிட் -19 வந்ததுக்கு பிறகு நிறைய ஆன் லைன் வகுப்புகள் ,ஜூம் மீட்டிங் எல்லாம் .வீட்டில் பிள்ளைகளுக்கு பள்ளி பாடங்கள் ஜூம் ல,ஸாலிம் இப்போது பத்தாம் வகுப்பு .திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு மூணு மணிக்கூர் வகுப்புகள்  நடக்கும் .டியூஷனும் உண்டு,அதுக்கு அவன் பரிட்சையும் எழுதுவான் .

   பிள்ளைகளுக்கு படிப்பு இப்படி ஆயிபோச்சேன்னு  இருந்தது .எனது கப்பல் நிறுவனம் என்னை பணிக்கு அழைப்பது தள்ளிபோய்க்கொண்டே இருந்தது .கடந்த ஜூன் மாதம் எனது அமெரிக்கா விசா காலாவதியாகிவிட்டது.தூதரகம் ,துணை தூதரங்கள் எல்லாம் செயல்பாடததால் .விசா வேண்டி விண்ணப்பிக்க இயலவில்லை .

 எனது நிறுவனம் தனி விமானங்களில் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில்தான் கப்பல் பணியாளர்களை பணி மாற்றம் செய்து வருகிறது .என்னிடம் விசா இல்லாததால் பணியில் சேருவது தாமதமாகிக்கொண்டே போனது .எனது மேலாளர்  அனிதா தாக்கூரை இருமுறை அழைத்தேன். “ஷாகுல் கொஞ்சம் பொறு என்னால் உனக்கான கப்பலை தேர்வு செய்யமுடியவில்லை ,உன்னிடம் அமரிக்க விசா இல்லாததே பிரச்னை ,கப்பல் ஐரோப்பா அல்லது ஆசியா வருகிறதா என பார்க்கிறேன்” என்றார்.

 கடந்த மாதம் ஆறாம் தேதி மாலை அனிதா தாக்கூர் என்னை அழைத்தார். மொபைலில் அனிதாதாக்கூர் என வந்தபோது எண்ணெய் ஆலையில் மாயப்பொன் தயாரிப்பில் இருந்தேன் .என்னுடன் பணிபுரியும் கலா அக்காவிடம் “கம்பேனில இருந்து போனு கப்பலுக்கு  கூப்பிடு ஆ போல”.  என சொல்லி கொண்டே ,

“மாலை வணக்கம்,நான் ஷாகுல்,நீங்கள் நலமா”

“ஆம் ஷாகுல், நீ  நலமா”

“ஷாகுல்,சன்னி ஜாய் எனும் கப்பல் நமது நிறுவனத்திற்கு வருகிறது ,உத்தேசமாக அக்டோபர் ஐந்தாம் தேதி பிலிப்பைன்ஸ்லிருந்து பணியில் சேர வேண்டியிருக்கும்,உன்னிடம் அமெரிக்க விசா இல்லை ,பிரச்சனை இல்லை ,உன்னால் அமெரிக்காவில் வெளியே செல்ல முடியாது .பிலிப்பைன்ஸ் விசா வேண்டிவரும்,உனது (DCE) DANGORES CARGO ENDOSMENT அடுத்த மே மாதம் காலாவதியாகிறது ,ஆன் லைன் இல் விண்ணபித்து பெற்றுக்கொள்” என்றார் .

  இனையம் கடற்கரை கிராமத்தை சேர்ந்த தம்பி ஹெல்டன் ஐ அழைத்தேன் . “எனக்கும் போன்,வந்தது அதே கப்பல் தான் ,எனக்கும் DCE அப்ளே பண்ணனும் ,நாளைக்கு வீட்டுக்கு வாறேன்” என்றான்.

  மதியம் பனிரெண்டு மணிக்கு இருவரும் கணினியின் முன் அமர்ந்தோம்,மத்திய அரசின் (DG SHIPPING )அந்த தளம் திறக்கவே இல்லை,வேகமும் மிக குறைவு ,எனது முந்தைய(DCE) சான்றிதழ் கொச்சி MMD (MARINE MERCANTILE DEPARTMENT) யில் பெற்றது,தம்பி ஹெல்டன் சென்னையில் வாங்கியிருந்தான் .நான் கொச்சி அலுவலகத்தை தேர்வு செய்தேன். அவன் சென்னையை.

ரூ மூவாயிரம் செலுத்தி,விண்ணபங்கள் பூர்த்தி செய்து,வேண்டிய ஆவணங்கள் புகைப்படங்கள் எல்லாம் வலையேற்றம் செய்தோம் . ஹெல்டனுக்கு பணம் செலுத்தியதற்கான தகவல் அதில் உறுதியாகவில்லை .மீண்டும் மூவாயிரம் செலுத்தினான் .

 எனக்கு செக்குல புண்ணாக்கு கிடந்ததால்  நான் ஆறு மணிக்கு மில்லுக்கு போய் விட்டேன் .இரவு ஏழரைக்கு மேல் தம்பி ஹெல்டன் வீட்டுக்கு போனான் .அரசாங்க இணையதளங்கள் மிக மோசமாக இருக்கிறது .

 நான் மறுநாள் எட்டாம் தேதி விண்ணப்பித்தேன் .ஒன்பதாம் தேதி ஒரு QUERI  வந்தது ,உங்கள் புகைப்படம் சரியில்லை மாற்றுங்கள் என .தளத்தில் போய் புகைப்படம் மாற்றினேன் .



 பதினொன்றாம் தேதி மீண்டும் ஒரு QUERI உனது FIRE FIGHTING CERTIFICATE எங்களது தளத்தில் பதிவு செய்யவில்லை என .நாங்கள் ஒரு COURSE படித்து சான்றிதழ் பெற்ற பின் அந்த கல்வி நிறுவனம் அரசின் தளத்தில் சென்று எனது பெயரில் பதிவு செய்ய வேண்டும்.அதை நான் செய்ய முடியாது .நான் படித்து சான்றிதழ் பெற்ற

 பாண்டிச்சேரி மாரிடைம் அகாடாமியை அழைத்தேன் .2018 ஜனவரியில் உங்கள் கல்வி நிலையத்தில் நான் பயின்று பெற்ற சான்றிதழை பதிவு செய்ய வேண்டினேன். “சார் சான்றிதழை அனுப்புங்கள் பார்த்து சொல்கிறோம்” இணையத்தில் அனுப்பினேன் என்றார்கள் .

 சில நாட்கள் பதிலேதும் இல்லை .மீண்டும் அழைத்தேன் “சார் பேசிக்கொண்டிருக்கிறோம் விரைவில் பதில் சொல்கிறேன்’ என்றார்கள்.பதினேழாம் தேதி என்னை அழைத்து “சார் உங்கள் சான்றிதழை இனி பதிவு செய்ய முடியாது,நீங்கள் மீண்டும் ஒரு முறை படித்து,சான்றிதழ் பெற்று கொள்ளுங்கள் ,இணையவழி வகுப்பு ,அதுலேயே பரீட்சை நீங்கள் பாஸ் ஆனால் சான்றிதழும் ,தானாகவே அரசின் தளத்தில் பதிவாகிவிடும் .நீங்கள் DCE பெற்றுகொள்ளலாம்” என்றார்கள் .

  


அப்போ நான் படித்த இரு சான்றிதழ்கள் மற்றும் நான் DCE வேண்டி விண்ணபித்த மூவாயிரம் உங்களால் எனக்கு வீணாகிவிட்டதே,இது உங்கள் தவறு” என சொன்னேன் . “சார் ஒன்றும் செய்ய இயலாது ,இரண்டு படிப்புகளுக்கு ஏழாயிரம் ரூபாய் ,நீங்கள் மூவாயிரம் கட்டினால் ,உங்களுக்கு இப்போதே நான் வகுப்புகளுக்கு பதிவு செய்கிறேன்,உங்கள் விபரங்களை தாருங்கள்”என்றான் .

   வேறு வழியே இல்லாமல் ஒத்துக்கொண்டேன் .இணைய வழி வகுப்புகளுக்கு அரசின் இணைய தளத்தில் நான் படிப்பதற்கான சுட்டிகள்,ரகசிய எண்கள் எனது மின்னஞ்சலில் வந்தது .ஒன்பது மணி நேரம் படிக்க வேண்டும் ,பின்னர் அதிலேயே பரீட்சை. அன்று இரவு அதை பார்க்கவில்லை.மறுநாள்  மருத்துவ பரிசோதனைக்கு தூத்துக்குடியில் இருக்கும் பாலாஜி மருத்துவ மையத்திற்கு செல்ல வேண்டி எனது நிறுவனம் பணித்தது .பதினெட்டாம் தேதி அதிகாலை தம்பி ஹெல்டன் வீட்டிற்கு வந்தார்.ஏழுமணிக்கு முன்பாகவே புறப்பட்டோம்.காரின் முன் இருக்கையில் அமர்ந்து “தம்பி எனக்கு இ லேனிங் இருக்கு ஒன்பது மணிக்கூர்,தூத்துக்குடி போறதுக்கு முன்ன நான் மூணு மணிக்கூர் படிக்கேன்” என சொல்லிவிட்டு மத்திய அரசின் அந்த இணைய தளத்தில் போய் எனது பாடத்தை திறந்தேன் .அது உன்னை புகைப்படம் எடுத்து சரி பார்த்தபின் தான் அனுமதிப்பேன் என்றது .

புகைப்படம் எடுக்க எனது மடிக்கணினியின் கேமரா உயிர் பெறவில்லை,மொபைலில் பார்த்தேன் .புகைப்படமெடுத்து என்னை உள் செல்ல அனுமதித்தது.என்னால் அந்த சிறிய திரையில் என்னால் படிக்க இயலவில்லை.

சனிக்கிழமை காலை மீண்டும் முயற்சித்தேன் முடியவில்லை .பாண்டிசேரி கல்வி நிலையத்தை அழைத்தேன் பதில் இல்லை .ஷாலிமின் கணினியில் முயன்றேன் முடியவில்லை .அந்த நாள் முழுவதும் வீணாகிவிட்டது.இரவு பத்து மணிக்கு சென்னையில் இருக்கும் தாம்சன் அண்ணனை அழைத்தேன் . “காடேட் ஒரு பையன் இருக்கான் ,அவன் இந்த ஆன் லைன் கோர்ஸ் பண்ணி முடிக்க முடியாம இருக்கான் ,லேசா அசைஞ்சிட்டான்,வெளிச்சம் இல்லைன்னு சிஸ்டம் பெயிலாக்கி விட்டது.உங்களுக்கு நாளைக்கி கேட்டு சொல்கிறேன்” என்றார்.

 மறுநாள் இரவு அழைத்து “கூகிளில் தேடுங்கள்” என்றார். DG SHIPPING  வலைத்தளம் குரோமில் வேலை செய்யாது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இல் போங்கள் என சொல்லும். கூகிளில் தேடிய போது உங்கள் கேமரா எக்ஸ்ப்ளோரரில் உதவி செய்யாது குரோமில் போங்கள் என்றது .புகைப்படம் எடுத்து சரிபார்த்தபின் நீதான் என ஒத்துக்கொண்டு என்னை அனுமதித்தது .இரவு பதினோரு மணி வரை பதினைந்து சதவீதம் படித்தேன் .

மறுநாள் அதிகாலை தொழுகைக்கு பின் அமர்ந்தேன் .உணவுக்கு,தொழுகை,தொலைபேசி அழைப்புகள்,மாயப்பொன் (எண்ணை)ஆர்டர்கள் என இடையிடையே நிறுத்தி நாற்பது,ஐமபத்தி ஏழு ,எண்பத்திமூன்று சதவீதம் என இறுதியாக தொன்னூற்றி ஏழு சதம் வந்தபோது படிப்பு முடிந்தது .ஒவ்வொரு முறையும் வெளியில் சென்றுவிட்டு உள் நுழையும்போது புகைப்படம் எடுத்த பின் தான் அனுமதித்தது .

அதன்பிறகு (assement)பரீட்சை முப்பதுக்கு பதினைந்து மார்க் எடுத்து அதை அனுப்பி கொடுத்தால் பாண்டிசேரி கல்வி நிறுவனம் எனக்கான ஜூம் வகுப்புக்கு ,மத்திய அரசின் சீபெயரர் இணையதளத்தில் பதிவு செய்து பதிவு எண் தருவார்கள். பரிட்சை துவங்கியதும் கடிகாரம் ஓட ஆரம்பிக்கும் முப்பது நிமிடத்திற்குள் முடிக்க வேண்டும் . நான் நான்கு முறை எழுதியும் பதினான்கு ,பதிமூன்று மதிப்பெண்ணை தாண்ட வில்லை .பாடத்தில் இருப்பதற்கும் கேள்விகளுக்கும் சம்பந்தமேயில்லை .இரவுபதினொரு மணிக்கு தூங்க சென்றேன் .

 மறுநாள் அதிகாலை தொழுகைக்குப்பின் பரீட்சை எழுத அமர்ந்தேன் மூன்று முறை எழுதியும் மதிப்பெண் பதினான்கை தாண்டவில்லை .பத்து மணிக்கு இந்த ஆன் வகுப்பு பரீட்சைகளில் அனுபவம் உள்ள செல்வனை அழைத்தேன் . “அண்ணே ஒவ்வொரு சாப்ட்டர் முடிஞ்சதும் குவிஸ் இருக்கு ,அத க்ளிக் பண்ணுங்க அதுதான் வரும் அஸஸ்மென்டுக்கு” என்றான் .அதற்குள் கல்வி நிறுவனம்  குறுஞ்செய்தி அனுப்பி திங்கள்கிழமை ஜூம் வகுப்பு இருக்கிறது அஸஸ்மென்ட் முடித்து விட்டீர்களா?என.முடித்துவிட்டு சொல்கிறேன் என்றேன் .

 பின்பு அமர்ந்து குவிஸ் ஐ படிக்க தொடங்கினேன்.பணிக்கு செல்லும் முன் மும்பையில் பத்து நாட்கள் தனிமை படுத்தலுக்கானஎனது கப்பல் நிறுவன  அழைப்பு வந்தது  அதற்காக தயாராகி கொண்டிருந்ததால்.கணினியை திறந்து அமர நேரமில்லை .கொச்சி mmd மின்னஞ்சல் அனுப்பியது உங்களது விண்ணப்பம் உங்களிடமிருந்து உரிய பதில் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது என .

  மும்பைக்கு வந்த மறுநாள் 26 ஆம் தேதி குவிசில் உள்ள எல்லா கேள்வி பதிலையும் அமர்ந்து படித்துவிட்டு அஸஸ்மென்ட் எழுதி பாசாகிவிட்டு பாண்டிசேரி கல்வி நிறுவனத்தை தொடர்பு கொண்டேன் .ரிப்போர்டை அனுப்புங்கள் செவ்வாய்கிழமை வகுப்பு இருக்கிறது .பணம் கட்டிவிட்டு ரசீது அனுப்புங்கள் என்றனர்.

நான் மூவாயிரம் கட்ட முடியாது என்றேன்.இது முழுக்க முழுக்க உங்கள் தவறு என்றேன் .மகேஷ் போனை துண்டித்து விட்டான்.வேறு எண்ணில் அழைத்தேன் அதில் எப்போதுமே அழைப்பை எடுக்கமாட்டார்கள் .ஒரு பெண் எடுத்தாள்.பறக்கை வில்லுப்பாட்டு போல முதலிலிருந்து எல்லாவற்றையும் சொன்னேன்.நான் முன்பு பேசிய மகேசும் அங்கே இருந்ததால் ஆயிரம் தருவதாக சொல்லி அந்த பெண் ஒத்துக்கொண்டாள்.

  மீண்டும் திங்கள்கிழமை கல்வி நிறுவனத்திலிருந்து வேறு ஒருவர் அழைத்தார் .செய்வாய்கிழமை  ஜூம் வகுப்பு ,உங்கள் பெயர் பதிவு செய்ய வேண்டுமென்றால் பணம் கட்டிய ரசீது ஸ்க்ரீன் ஷாட் அனுப்புகள் என்றான்.

இரவுக்குள் பணம் அனுப்பிவிட்டு செய்தி அனுப்பினேன்.வகுப்புகளுக்கான கால அட்டவணை ,புத்தகம் மின்னஞ்சலில் வந்தது.எனது மடி கணினி மும்பை வந்தது முதல் தானாகவே அணைந்து மீண்டும் உயிர்பெறும் ..

அன்று மாலை கொச்சி MMD மின்னஞ்சல் வந்தது QUERI.உங்கள் DCE விண்ணப்பம் சார்பாக எங்களை அழைத்து சொல்லுங்கள் என .யாருக்கு அழைப்பது என்றோ,தொலைபேசி,கைபேசி எண் எதுவும் இல்லை.அது பதிலளிக்க முடியாத வகை மின்னஞ்சல்.எனது போனில் கொச்சி MMD எண் இருந்தது அழைத்தேன்.வேறு எண் தந்தார்கள் அழைத்தபோது பதிலளிக்கவில்லை .

புதன்கிழமை குளித்து உடை மாற்றி போனை சார்ஜில் போட்டு,ஜூம் வகுப்புக்கு தயாராக இருந்தேன் ஒன்பதுமணிக்கு ஆசிரியர் மோகன் கந்தசாமி வந்துவிட்டார் .அவரது பின்பக்க சுவரில் நங்கூரம் வடிவில் கடிகாரம் இருந்தது .மூன்று பேர் இருந்தோம் .என்னை பெயர் சொல்லி அழைத்தார் ஐந்து நிமிடங்களில் வகுப்பு துவங்குவோம் இன்னும் சிலர் வரவேண்டியுள்ளது என்றார் .


  ஆ மோகன் கந்தசாமி

LPG வகை கப்பல்களில் சீப் இஞ்சினியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன் என அறிமுகபடுத்திகொண்டு வகுப்பை துவங்கினார் .பேசிக்கொண்டே இருந்தார்.ஒன்பது நாற்பத்தைந்து க்கு டீ பிரேக் என போய்விட்டார் .மீண்டும் பத்து மணிக்கு தீயை அணைக்கும் முறைகள் பற்றிய வீடியோக்களை போட்டார் .பத்தே முக்கால் வரை மீண்டும் ப்ரேக்.

பதினொன்னு மணிமுதல் அடுத்த வகுப்பு தீயின் வகைகள் பற்றிய வகுப்பும் வீடியோவும்.ஒரு கொரியன் கப்பலில் தீயை அணைக்கும் வீடியோ  நிஜமாக எடுத்தது போலிருந்தது .கடைசி பிரேக் டைம் முடிந்து பனிரெண்டு மணி நாற்பதியைந்தாவது நிமிடத்தில் வகுப்பு முடிந்தது.

அடுத்து எக்சிட் எக்ஸ்சாம் நாற்பது மணிநேரத்திற்குள் முடித்திருக்க வேண்டும்.சான்றிதழ் தானாகவே இணையதளத்தில் பதிவாகிவிடும் ,சான்றிதழை தரவிறக்கம் செய்து அச்சு பிரதி எடுத்து கொள்ள வேண்டும்..

வகுப்பு முடிந்த பின் ஒருவர் பாசாகி விட்டேன் எப்போது சான்றிதழ் கிடைக்கும் என பாண்டிசேரி கல்வி நிறுவனத்தின் வாட்ஸப் குருப்பில் கேட்டார் .இருபத்தி நான்கு மணிநேரதிற்கு பின் கிடைக்கும் என .பதில் சொன்னார்கள். என்னிடம் மறுநாள் ஒன்றரைக்கு மேல் பரீட்சை எழுத சொன்னார்கள் .

 செல்வன் என்னிடம் பரீட்சை எழுதும் முறைகளை சொன்னார் .

“ஷாகுல் அண்ணே ,லேசா அசஞ்சா போச்சு ,வெளிச்சம் நல்லா இருக்கணும்,போனை சைலன்டுல போடுங்க சௌண்டு கேக்க பிடாது,லேசா திரும்பீட்டிய முடிஞ்சது,பெயில் ஆயிருவீய .பொறவு முன்னூறு ரூவா கெட்டிதான் பரீட்சை எக்சிட் எக்ஸ்சாம் எழுத முடியும்”

நான் “ஒருக்க குவிஸ் ல போய் பாத்துகிடலாம்,பரீட்சை துவங்கும் முன்”  என சொன்னேன் .

 செல்வன்  “ நீங்க பாசாவே மாட்டிய என்றான்”. ”பார்க்கிறேன்” என்று சொன்னதும் .அவரது மடி கணினியில் அந்த வலை தளத்ததில் சென்று எக்ஸ்சிட் எக்ஸ்சாம் பக்கத்தை திறந்து நிபந்தனைகளை மேலும் ஒருமுறை சொன்னார் .

எனது புகைப்படத்தை தானே எடுத்தது,சரிபார்த்தபின்.முப்பது நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும்,உங்களை ஐந்து முறை உங்களை படமெடுப்பேன் என்றது.செல்வன் “அசைய பிடாது கம்புட்டர மட்டும் பார்த்து அன்செர் கிளிக் பண்ணுங்க”என்றான் செல்வன்.

பதினேழாவது நிமிடத்தில் முடிந்தது .முடிவை பதிவு செய்து உடனே அறிவித்தது பதினேழு மதிப்பெண்  என பாசகிவிட்டேன் . .

மின்னஞ்சல் வந்தது வாழ்த்துக்கள் உங்கள் சான்றிதழ் திங்கள்கிழமை கிடைக்கும் என .

 

                                                          புதிய சான்றிதழ் 

அன் று மீண்டும் கொச்சி MMD அழைத்தேன் .நீங்கள் படித்த கல்வி நிறுவனத்திடம் சொல்லி எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப சொல்லுங்கள் உங்களுக்கு DCE ஆவணம் தந்து விடுகிறோம் என்றார்கள் .

அது அக்டோபர் ஒன்றாம் தேதி வியாழக்கிழமை பாண்டிசேரி கல்வி நிறுவனத்தை அழைத்து மின்னஞ்சல் அனுப்ப சொன்னேன். “ஸார் திங்கள்கிழமை தான் முடியும்” என்றார்கள் . மன்றாடினேன் நாலு வரியில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் எனக்கான ஆவணம் கிடைக்கும் என .மூன்று நாட்கள் விடுமுறை என்றார்கள்.

  DG SHIPPING இணையதளத்தில் நான் ஒன்றாம் தேதி  நான் இணையவழி பரீட்சையில் பாசாகிய சான்றிதழ் எண் பாண்டிச்சேரி கல்வி நிறுவனத்தால் பதிவேற்றம் செய்யபட்டிருந்தது .ஐந்தாம் தேதி காலை எனது சான்றிதழும் இணையத்திலேயே வந்திருந்தது .கொச்சி mmd க்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.எனது பழைய சான்றிதழை உறுதிபடுத்த கல்வி நிலையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன் மற்றும் நான் இணையவழியாக  படித்து,புதிய சான்றிதழும் கிடைத்துள்ளது எனக்கு .DCE தருமாறு வேண்டுகிறேன் என .

  காலைமுதல் dg shipping தளத்தில் எனது கணக்கை  திறந்து பார்த்தேன் .எனது dce பரிசீலனையில் (under process)இருக்கிறது என இருந்தது.

இன்று எப்படியும் DCE கிடைத்துவிடும் என மகிழ்ச்சியில் இருந்தேன்.மதியம் MMD queri வந்தது உங்கள்  புதிய சான்றிதழை  விண்ணப்பம் அனுப்பிய ஆவணத்துடன் பதிவேற்றம் செய்யுங்கள் என .

இன்று புதன் மாலை ஆகியும்  எனது .DCE வரவில்லை .

ஷாகுல் ஹமீது ,

07-oct -2020.


No comments:

Post a Comment