Monday, 28 July 2025

சட்டை

 



    பள்ளியில் படிக்கும்போது வப்பா சொல்வார். “துணி கூடிபோச்சி,அதனால தான் திசக்கி ஒன்னாட்டு கிடக்குது” என. அப்போதெல்லாம் வருடத்தில் ரமலான் பண்டிகைக்கு ஒரு உடுப்பு,பள்ளி சீருடை ஒன்று அவ்வளவுதான்.

 அவர் சிறுவனாக இருக்கும்போது வைத்தியராக இருந்த என் உப்பாவுடன் (முகம்மது குஞ்ச்)கயிறு திரிக்கும் வேலைக்கு சென்றிருக்கிறார். அப்போது அணிவதற்கு அரைக்கால் சட்டையில்லாமல் பெரிய தேக்கிலையை தென்னை ஈக்கிலால் கோர்த்து இடுப்பில் கட்டிகொள்வதை சொல்லிவிட்டு  “உங்களுக்கு துணி கூடிபோச்சி”என்பார்.

 இப்போது ஆடைகள் தேவைக்கு அதிகமாவே இருக்கிறது எனக்கு. எனது மகன்கள் என்னைவிட அதிக ஆடைகள் வைத்திருகின்றனர். அவர்களுக்கு தனி அலமாரியும் உள்ளது.

 

நண்பர்  ராஜா மற்றும் வேலுப்பிள்ளை

   அமெரிக்காவில் வாழும் நண்பன் வேலுப்பிள்ளை இரு மாதங்களுக்கு முன் ஒரு புகைப்படம் அனுப்பி 11 years ago  என குறிப்பிட்டிருந்தார். 2014 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் பெனிசியா துறைமுகத்துக்கு சென்றபோது  எடுத்தது. நண்பன் ராஜா மற்றும் வேலுப்பிள்ளை அந்த படத்தில் இருந்தனர்.அந்த படத்தை அனுப்பிய அவ்வேளையில் அதே சட்டையை அணிந்திருந்தேன். ஒரு செல்பி எடுத்து இன்றும் அதே சட்டை என அவருக்கு அனுப்பினேன்.




கப்பலில் இருந்த மெஸ்மென் டானிசிடம் அதுபற்றி சொன்னபோது “ஷாகுல் சாப் இப்பவும் இந்த சட்ட நல்லா இருக்கே எப்டி” எனக்கேட்டார். காரணம் என்னவென்று யோசனையில் ஆழ்ந்தபோது எனது துணிகளை நானே கையால் துவைத்து கொள்வேன். வீட்டில் சலவை இயந்திரத்தில் எனது துணிகளை போடக்கூடாது என கண்டிப்பாக சொல்லியிருக்கிறேன். வருடத்தில் ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை கப்பலில் இருக்கிறேன். சட்டைகள் வீட்டில் பத்திரமாக இருக்கும்.கப்பலுக்கு வரும்போது இருப்பதில் நல்லதாக உள்ள சட்டை இரண்டும் ஒரு ஜீன்ஸ் ஒன்று பயணத்தில் அணியவும்,கப்பல் பார்டிகளில் உடுத்தவும் வைத்திருப்பேன்.


  அன்றாடம் அணிவதற்கு எல்லா கப்பல் காரர்களையும் போல இருப்பதில் பழைய சட்டை, டி சர்ட் சிலதை கொண்டுவந்து உபயோகபடுத்திவிட்டு பணி முடிந்து ஊருக்கு செல்லும்போது கப்பலை துடைப்பதற்கு கொடுத்துவிட்டு போவது வழக்கம்.


  இஞ்சின் மற்றும் டெக் பணியாளர்கள் நாள் முழுவதும் அந்த கனத்த பணியாடையை அணிந்திருப்போம்.மாலை ஆறு மணிக்குப்பின் வேலை முடிந்து உணவுக்கூடம் சென்றுவருவதற்கும் பொது இடமான டி வி அறையில் இருப்பதற்கும் கண்ணியமான ஆடையை அணிவது ஒரு நாளில் அதிக பட்சம் இரண்டு மணிநேரம் தான். அறைக்குள் இருக்கும்போது மேல் சட்டையில்லாமல் இடையை மறைக்கும் அரைக்கால் சட்டை மட்டுமே.


 காப்டன் மற்றும் நேவிகேசன் அதிகாரிகளுக்கு மட்டுமே நல்ல ஆடைகள் நான்கைந்து தேவைப்படும்.நான் பணி முடிந்து ஊருக்கு செல்லும்போது சுனிதாவிடம் கேட்பேன் “பழைய சட்டய எல்லாம் தூர போட்டுடுறேன்” என.


 “கிழிஞ்சி போவல்லேன்னா,லக்கேஜ்ல இடம் இருந்தா கொண்டு வாருங்கோ” என்பாள். வீட்டுக்கு வந்தபின் வாட்ச்மேன் அல்லது துப்புரவு பணியாளர் அதை அணிந்திருப்பதை காண்பேன்.

  திருமணத்திற்குப்பின் என் ஆடையை சுனிதா தேர்வுசெய்ய தொடங்கினாள். அதனால் கலர்,கலாரக நல்ல ஆடைகள் சில சேர்ந்துவிட்டன. கப்பலிலும்,வீட்டிலும் எனது துணிகளை நானே கையால் துவைப்பதால் எனது ஆடைகள் வருடக்கணக்கில் வீணாகாமல் மிக நன்றாக இருக்கிறது. வருடத்தில் இருநூறு நாட்களுக்கு மேல் கப்பலில் இருப்பாதால் என் ஆடைகள் பெட்டியில் காத்திருக்கிறது.

  வீட்டிற்கு வந்து தினமும் ஒரு சட்டை அணிந்தும் தொடர்மழையால் துணிகளை துவைக்காமல் இருந்தபோது ஒரு மாதம் வரை எனக்கு தினம் ஒரு சட்டை பெட்டியில் இருப்பதை கண்டு இனிமேல் சட்டையே வாங்க கூடாது என முடிவு செய்தேன். ஒரு மனிதனுக்கு ஆறு சட்டைகள் போதுமானது. அதனால் எனக்கான துணிகளை தேவையே இன்றி வாங்குவதே இல்லை. உள்ளாடைகள்,காலுறைகள் மட்டுமே வாங்கும் தேவை உள்ளது.

 எனது பிறந்தநாளில் சுனிதா ஒரு சட்டை வாங்கி தருவது வழக்கம். கப்பலில் இருந்து வந்தபின் அவள் வாங்கி வைத்திருந்த சட்டையை அவள் முன் அணியாமல் விஷ்ணுபுரம் விழாவில் என் நண்பர்களுக்கு காட்டுவதற்காக அணிந்ததாக குற்றம்சாட்டி தற்போது எனக்கு உடை ஏதும் அவள் வாங்குவதே இல்லை. கடந்த சில வருடங்களாக  தம்பி ஷேக் என் பிறந்தநாளுக்கு வாங்கிதரும் சட்டையே அணிகிறேன். எனது அண்ணன் சென்னை சென்றால் உடைகள் வாங்கும்போது எனக்கும் ஒரு சட்டை வாங்கி தந்துள்ளார். மலேசியாவில் வாழும் சகோதரி ஹமீமா மைனி சந்திக்கும்போதெல்லாம் எனக்கு சில சட்டைகள் வாங்கி தந்துள்ளார்.

  ரமலான்,பக்ரீத் பண்டிகைகளில் நான் கப்பலில் இருந்தால் பழைய ஆடையையே அணிகிறேன் என்பதால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கப்பலுக்கு வரும் முன் இரண்டு பெருநாளுக்கும்  இரண்டு டி ஷர்ட் வாங்கி கொண்டுபோக சொன்னாள் சுனிதா. என்னிடம் “போத்தீஸ்ல போய் ஆயிரத்தி இருநூறு ரூவாக்கு குறையாம ரெண்டெண்ணம் வாங்குங்கோ,அதுல குறஞ்சா நல்லா இருக்காது’ என சொல்லி அனுப்பினாள்.



நான் கடைக்கு சென்று எனக்கு பிடித்த வெள்ளைநிறம் கலந்த ஒரு டி ஷர்ட்டை தேர்வு செய்தேன் ‘otto’ என அதன் காலரில் எழுதியிருந்தது.  1399 என அதன் விலையும் ஒட்டபட்டிருந்தது. அதை தனியே எடுத்துவைத்துவிட்டு இன்னும் ஒன்றை தேர்வு செய்ய பார்த்துக்கொண்டிருந்தேன். (எனக்கு செலக்சன் தெரியாது என சுனிதாவும்,தோழிகள் சிலரும் சொல்கிறார்கள். மூத்த சகோதரி ஒருவர். சென்னைக்கு வந்தால் நல்ல சட்டைகள் ரெண்டு வாங்கி தருகிறேன். நீ போடும் கலர் ஒன்றும் சரியில்லை என்றும் சொல்லியுள்ளார்.)

   அருகிலிருந்த வேறு கவுண்டரில் எனக்கு பிடித்த கலரில் 499 விலையில் மிக அழகான டி சர்ட்கள் என்னை கவர்ந்தன. முதலில் தேர்வு செய்த டி சர்ட்டின் விலையில் இதில் மூன்று வாங்கலாம் என மனம் சொல்லியது. இரண்டு பெருநாள் இரண்டே போதுமென இரண்டை மட்டும்  ஆயிரம் ரூபாயில் வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.



  இனிமேல் ஆடைகளை குறைக்கவேண்டும். ரயில் பயணத்தில் உடன் பயணித்த ஒருவர் தான் உடுத்திருப்பது போக மாற்று உடை ஒன்றை கையில் வைத்திருத்தார்.

மும்பையில் இருக்கும்போது அறை நண்பர் மானாமதுரை மாயாவி ஒருமுறை சொன்னார் நடிகர் சிவாஜி கணேசன் தினமும் ஒரு ஜட்டி அணிவார் என. “நானும் டெய்லி ஒண்ணுதான் போடுவேன்”  என்றேன். “புதுசா”

“இல்ல டெய்லி துவைச்சி போடுவேன்”

“அவரு புதுசில்லா போடுவாரு” என்றார் மாயாவி.

சமீபத்தில் நடிகர் கமலஹாசன் ஒரு ஆடையை ஒரு முறை மட்டுமே அணிவார் என நண்பர் ஒருவர் சொல்லி அறிந்துகொண்டேன்.

  பத்து ஆண்டுகளுக்குப்பின் வீட்டு மாடியில் குடில் கட்டி அமரும்போது இடுப்புக்கு கீழே ஒரு வெள்ளை துணி, உடலை சுற்றி மூட ஒரு வெள்ளை துணி அதுதான் என் உடை என முடிவு செய்துவிட்டேன்.

அசோக் வீட்டில் 2014

 தற்போது சொல்லிகொண்டிருக்கும் அந்த சட்டையை 2013 ஆம் ஆண்டு வாங்கியிருக்கிறேன் சுனிதாவின் தேர்வு. அது ஒரு ரமலான் அல்லது பக்ரீத் பண்டிகைக்கு வாங்கியதாக இருக்கலாம். அதே ஆண்டு அந்த சட்டையை அணிந்து நண்பர் அசோக்கின் வீட்டு கிரகபிரவேசத்துக்கு சென்றிருக்கிறேன். கடந்த ஆண்டு எல்என்ஜி அலையன்ஸ் கப்பலுக்கு போகும்போது அந்த சட்டையை அணிந்து சென்று கப்பலை துடைப்பதற்கு கொடுத்துவிட வேண்டுமென எண்ணியிருந்தும் ஏனோ கொடுக்காமல் எடுத்து வந்துள்ளேன், நண்பர் அசோக்கிடம் அந்த சட்டையின் வரலாறு குறித்து சொன்னபோது “ஷாகுல் அது தூர போட்டுராதீங்க அது உங்கள் நினைவாக இருக்கட்டு” என்றார்.


  

  தற்போது எழுதும் இருபது ஆண்டு நிறைவு தொடருக்காக படங்களை தேடும்போது நிறைய படங்களில் அந்த சட்டையுடன் இருக்கிறேன். அமேரிக்கா,ஐரோப்பா,மலேசியா போன்ற உலகநாடுகள் பலவற்றுக்கும் இந்தியாவின் பல ஊர்களுக்கும் அந்த சட்டை பயணித்துள்ளது. .இம்முறையும் விடுமுறைக்கு வீட்டுக்கு செல்லும்போது அந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டையை துவைத்து மடித்து கொண்டு செல்ல வேண்டியதுதான்.

கொல்லிமலை வாசகர் சந்திப்பு 2016

 நாஞ்சில் ஹமீது,

28 – july-2025.

sunitashahul@gmail.com






Thursday, 24 July 2025

இருபது ஆண்டு நிறைவு 40 சிங்கப்பூர் கெப்பல் ஷிப் யார்டில்

 



சன்னி கிரீன் 2017




     காலை ஒன்பது மணிக்கு வீட்டருகிலுள்ள டவுண் ரயில்நிலையத்திலிருந்து ரயிலில் கொச்சிக்கு பயணிக்கையில் அருகிலிருந்த சக பயணி இங்கிலாந்து நாட்டை சார்ந்த தாம்சன். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபின்  சுற்றுலா பயணியாக உலகை வருகிறார். கடந்த ஐந்து நாட்களாக கன்னியாகுமரியில் இருந்ததாக சொன்னார். ஒரு ஊரில் தங்கியிருந்து கால்நடையாக சுற்றிப்பார்த்தால்தான்   அவ்வூரையும் அங்குள்ள கலாசாரத்தையும் முழுமையாக அறியமுடியும் என உறுதியாக சொன்னார்.




 கன்னியாகுமரி விடுதியில் தங்கியிருந்த அவர் அதிகாலை ஐந்துமணிக்கு எழுந்து பதினைந்து கிலோமீட்டர் வரை நடந்தே ஊர் சுற்றியதாக சொன்னார்.கையில் ஆங்கில மொழிபெயர்ப்பு திருக்குறள் இருந்தது.ஆலப்புழையில் இறங்கி சென்றார்.அங்கும் ஐந்து நாட்கள் தங்கபோவதாக சொன்னார் அறுபது வயதை தாண்டிய தாம்சன்.

singapore airport



   எனக்கு கொச்சியிலிருந்து சிங்கை செல்லும் விமானம். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பத்து நிமிடங்கள் இருக்கையில் விமானம் மேலெழுந்து வானில் பறக்கத்தொடங்கியது அதுதான் கொச்சியிலிருந்து புறப்படும் கடைசி விமானம்.நள்ளிரவு விமான பயணத்தில் அவர்கள் தரும் உணவுக்காக காத்திருந்து உணவுண்டபின் இடுப்பு பட்டையை இறுக்கி சாய்ந்து அமர்ந்தால் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும்.இம்முறை உறுதியாக உணவு வேண்டாம் என சொல்லிவிட்டு கண்மூடி அமர்ந்த சிறிது நேரத்தில் நல்லுறக்கம்.



  ஐந்துமணிநேர பயணத்துக்குப்பின் அதிகாலை ஏழு மணிக்கு சிங்கப்பூரில் பத்திரமாக இறக்கினார் பைலட். விமான நிலைய வாயிலில் என் பெயர் எழுதிய காகிதத்துடன் நின்ற காரோட்டியை பிடித்துக்கொண்டேன். சன்னி கிரீன் கப்பல் சிங்கப்பூர் ட்ரை டாக்கில் நின்றுகொண்டிருந்தது.

கெப்பல் ஷிப் யார்ட் 


  இருபத்தைந்து வயதான கப்பல் ஏழுநாட்களுக்கு முன் ட்ரை டாக்கில் கட்டபட்டிருந்தது. இஞ்சின் பிட்டர்,மோட்டார்மேன்,எபி மூன்றாம் அதிகாரி என ஐந்துபேர் புதிதாக பணியில் சேர்ந்தோம். மும்பையிலிருந்த வந்த பணியாளர்கள் வேறு விமானத்தில் வந்ததால் மதியத்திற்கு மேல் வந்தனர்.

 ஊருக்கு செல்பவர்கள் மாலையில் புறப்பட்டு சென்றனர்.மோட்டார்மேன் கோவாவை சார்ந்த காசியானோ 2007 இல் என்னுடன் ஸ்டேயிட்ஸ் வென்சர் கப்பலில் இருந்தவர். சன்னி கிரீன்  முதல் முதலாக எங்கள் நிறுவனத்தில்  வந்த எல்பிஜி கப்பல் என்றார்கள். இருபத்தியைந்து ஆண்டுகள் ஆன பழைய கப்பல் ஆதலால் நிறைய பணிகள் நடந்துகொண்டிருந்தது. சிங்கை கெப்பல் ஷிப் ரிப்பேர் யார்டில் டெல்டா மாவட்டத்தை சார்ந்த நிறைய தமிழர்கள் இருந்ததனர். சன்னி கிரீனுக்கான ப்ராஜெக்ட் மேனேஜர் சென்னையை சார்ந்த இஞ்சினியர் ராஜா.

 கப்பலில் மோடார்மேனாக இருந்த சீனியர் ராம ராவ் ஆந்திராவின் சிர்க்காகுளத்தை சார்ந்தவர்.போசன் குருமூர்ர்தியை தெரியுமா எனக்கேட்டேன். அடுத்த தெருவில் வசிப்பதாக சொன்னார். சிங்கை ட்ரை டாக்கில் இருக்கையில் மாலை ஆறுமணி வரை வேலை. அதன் பின் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வெளியில் சென்றேன். கெப்பல் ஷிப் யார்டின் வாயிலிலேயே பேருந்து நிறுத்தம்.

நண்பர் மணியுடன் மீன் தலைக்கறி



  இங்கே கிடைக்கும் பயண அட்டையை பேருந்து மற்றும் ரயிலுக்கும் பயன்படுத்திகொள்ளும் வசதி உள்ளது.பொது போக்குவரத்தை சிங்கப்பூர் ரொம்பவே ஊக்குவிக்கிறது. கார் வைத்திருக்கவேண்டுமெனில் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டின் பார்க்கின் வசதி கடிதம் கண்டிப்பாக வேண்டும். கார்களுக்கு இரண்டு வகையான ரோட் டாக்ஸ் இருக்கிறது இங்கே. குறைவான கட்டணம் செலுத்தி இரவில் மட்டும் ஓடும் வாகனங்களின்  நம்பர் பிளேட் சிவப்பு  வண்ணத்திலும்,பகலில் ஓடும் வாகனங்களுக்கு கருப்புநிற நம்பர் பிளேட்டும் உள்ளது.



https://www.drivelah.sg/blog/demystifying-coe-everything-you-need-to-know-about-owning-a-car-in-singapore-clgw79tcq827003tpbuo1mz8gb/#coe-prices

 

கடுமையான சாலையை வரியை விதித்து கார் வாங்காதே பொது போக்குவரத்தை உபயோகி என கட்டாயபடுத்துகிறது அரசு. சிங்கையில் வசதியான பொது போக்குவரத்து உள்ளது.

கிருஷ்ணமூர்த்தியுடன் 


   சிங்கையில் இருக்கையில் ஒவ்வொரு இரண்டாம் நாளும் வெளியில் சென்றேன். போக்குவரத்து அட்டை கையில் இருந்தது. பஸ்ஸில் ஏறி ரயிலில் ஏறி இறங்கி ஜூராங் கிழக்கில் இருக்கும் மணியின் இல்லம் சென்று உரையாடி அங்கேயே இரவுறங்கிவிட்டு அதிகாலை மணி தனது காரில் கெப்பல் ஷிப் யார்டில் இறக்கிவிட்டார்.

விஜயகுமாருடன் 

  ஈராக் போர்முனையில் உடன் பணியில் இருந்த விஜயகுமார் இங்கே ரெஸ்டாரண்ட் மேனேஜராக இருக்கிறான் என அறிந்து அவனையும் போய்பார்த்தேன்.எனது மணவாளகுறிச்சி கிராமத்தில் பாபூஜி பள்ளியில் உடன் பயின்ற கிருஷ்ணமூர்த்தியை ஒரு நாள் சென்று சந்தித்தேன்.

 நான் வந்தபின்  கப்பல் எட்டு நாட்கள் சிங்கை கெப்பல் ஷிப் யார்டில் நின்றது. மொத்தம் பதினைந்து நாட்களில் பணி முடிந்து கப்பல் புறப்பட்டது.பத்தி சாப் அசோக்கின் மனைவி மற்றும் இரண்டாம் இஞ்சினியர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி கப்பலில் இருந்தார்கள்.கெப்பல் ஷிப் யார்டை விட்டு கப்பல் புறப்படும்போது பயணிகளாக இருந்த இரு பெண்களும்வீட்டுக்கு சென்றனர்.

எல்பிஜி கப்பல் ட்ரை டாக்கில் பழுதுபார்


க்கும் பணிக்காக  வரும்போது அதன் சரக்கு தொட்டிகளில் இருக்கும் மிகக்குறைந்த எல்பிஜி திரவம் சூடாக்கபட்டு ஆவியாக மாற்றி வெளியேற்றப்படும். அதில்காற்று நிறைக்கப்பட்டு கப்பலில் நடக்கும் வெல்டிங் வேலைகளுக்கு உகந்தமுறையில் பாதுகாப்பாக வைத்திருப்போம்.

  கப்பல் ட்ரை டாக்கை விட்டபின் சரக்கு ஏற்றுவதற்கு வசதியாக சரக்கு தொட்டிகளை குளிர்விக்கவேண்டும். சரக்கு தொட்டிகளில் inert gas எனப்படும் கார்பன் மோனாக்சைடு செலுத்தப்பட்டு ஆக்சிஜன்முழுமையாக வெளியேறிய பின் எல்பிஜி வாயு செலுத்தபட்டு inert gas முழுமையாக வெளியேறியபின் எல்பிஜி வாயுவால் சரக்கு தொட்டிகள் குளிர்விக்கபட்டு.மிக குறைந்த அளவில் எல்பிஜி திரவம் நிறைக்கவேண்டும்.


   கப்பல் கெப்பல் ட்ரை டாக்கிலிருந்து வெளியேறி கிழக்காக திரும்பிய இந்தோனேசியாவின் நிபா கடலில் இருப்பதகாக வரைபடம் காட்டியது.அங்கேயே நங்கூரமிட்டு முன்னூற்றியைம்பது டன் ப்ரோப்பேன் திரவம் நிறைக்க முப்பத்தியாறு மணிநேரம் ஆகியது.அந்த பணிக்காக மூத்த காப்டன் புனித் சைனி வந்திருந்தார்.கப்பல் சரக்கு நிறைப்பதற்காக சவூதிஅரேபியாவின் ரஸ்தநூறா துறைமுகம் நோக்கி பயணிக்க தொடங்கியது.


  ட்ரை டாக்கில் இருந்த முதன்மை இஞ்சினியர் மணீஷ் ஊருக்கு செல்ல அவருக்கு பதிலாக இலங்கையை சார்ந்த முதன்மை இஞ்சினியர் வந்திருந்தார். மிக பழைய கப்பல் ஆதலால் டெக்கில் ரிப்பேர் டீம் பிட்டராக வினோத் குப்தா மற்றும் இரு டிரயினிங் ஓஎஸ் என மொத்தம் இருபத்தி ஏழுபேர் இருந்தோம். கப்பல் புறப்பட்ட ஏழாம் நாள் அதிகாலை அறையிலிருந்து வெளியேவந்தபோது சூரியன் மேற்கில் உதித்திருந்தை கண்டு மண்டை குழம்பி ப்ரிட்ஜில் சென்றேன்.

  கப்பலின் பயண பாதை மாறி ஆப்ரிக்கா செல்லும் உத்தரவு வந்ததால் இரவிலேயே கப்பலை திருப்பியதாக சொன்னார் மூன்றாம் அதிகாரி ரோலாண்டோ. கப்பல் மேற்கு ஆப்ரிக்காவின் கானா அருகிலுள்ள டோகோ கடற்கரையிலிருந்து ஏழு மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. மிக அருகிலேயே கடல் கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்து எங்களின் உடைமைகள் மற்றும் கப்பலின் பொருட்களை திருடிசெல்லும் வாய்ப்பு மிக அதிகமுள்ள பகுதி அது. டோகோவின் கடல் எல்லைக்குள் அதாவது கரையிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவில் நிறுத்தப்படும் கப்பல்களுக்கு டோகோ கடற்ப்படை பாதுகாப்பு வழங்கும் எனும் உறுதியிருந்ததால் அங்கே சில கப்பல்கள் நிருத்தபட்டிருந்தது.


  அங்கு நிலவும் மித சீதோஷ்ண பருவநிலை காரணமாக எல்பிஜி கப்பல்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு வர்த்தகம் நடக்க அந்நாடு அனுமதி வழங்குகிறது.அதனால் அந்நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் தான் மிக முக்கிய காரணம்.டோகோ கடற்ப்படை கப்பல்களுடன் திமிங்கலங்களும் ஓய்வின்றி இருபத்தி நான்கு மணிநேரமும் ரோந்து சுற்றிகொண்டிருந்ததால். நாங்கள் கப்பலில் நிம்மதியாக இருந்தோம்.

 நாஞ்சில் ஹமீது,

24 july 2025.

sunitashahul@gmail.com

பின் குறிப்பு.  இரண்டாம் இன்ஜினியரின் இடுப்பு பகுதியில் சதை உடைவு ஏற்பட்டு அமரவோ,நடக்கவோ இயலாமல் கடும் வலியுடன் அவதிபடுகிறார் சனிக்கிழமை மாலை முதல். எனக்கு எழுத கிடைக்கும் நேரத்தில் அவருக்கு சில உதவிகள் செய்யவேண்டியிருப்பதால். கடந்த ஞாயிறுக்குப்பின் என்னால் எழுதவே முடியவில்லை நேரமின்மை. இரண்டாம் இஞ்சினியர் நலமடையை இன்னும் சில நாட்கள் ஆகும். கப்பலில் உடல் முடியாமல் போனால் அறையில் அமருவது மிக கடினம். அதிலும் அமரவோ,நிற்கவோ முடியாமல் ஆனால் நிலைமை இன்னும் கஷ்டம். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி துறைமுகம் சென்றபின்தான் அவரை மருத்துவ மனைக்கு அனுப்பி முறையான சிகிச்சை அளிக்க முடியும். அதுவரை மருத்துவரின் ஆலோசனைப்படி கப்பலில் உள்ள மருந்துகளை கொடுத்து அவர் மனம் தளராமல் பார்த்துகொள்ளும் கடமையில் உள்ளோம்.

  இருபது ஆண்டு நிறைவு தொடர் சிறு தொய்வு ஏற்பட காரணம்.

Friday, 18 July 2025

இருபது ஆண்டு நிறைவு 39 - மெக்காவில்

 

 

  மெக்காவில்

காபத்துல்லாஹ் 

 வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் அலுவகத்துக்கு அடுத்து எப்போது தயார் என சொல்லவேண்டும்.என் கப்பல் நிறுவனத்துக்கு அழைத்து அடுத்தமுறை கார் கேரியர் கப்பலில் அனுப்புங்கள் எல்பிஜியில் செல்ல விருப்பம் இல்லை என்றேன். என்ன பிரச்சனை என கேட்ட மேனேஜர் அனிதா தாக்கூரிடம் சாப்பாடு சரியில்லை என சொன்னேன்.



   டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதி ஊருக்கு வந்த மறுவாரமே கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் இரு தினங்கள் கலந்துகொண்டேன்.வண்ணதாசன் எனும் மூத்த எழுத்தாளருக்கு விருது வழங்கபட்டது.



   விழா முடிந்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடன் காரில் ஊட்டி குருகுலம் சென்றுவந்தோம்.சக்தி கிருஷ்ணன்,செல்வராணி என விஷ்ணுபுர வட்டத்தை சார்ந்தவர்கள் அறிமுகமானார்கள்.



 கோவையில் இருந்து திரும்பியதும் தம்பி ஷேக்,மாமா மகன் ஹக்கீம் இணைந்து மூணார் மற்றும் கொச்சிக்கு ஒரு பயணம் ஏற்பாடு செய்திருந்தனர்.இரு கார்களில் மூன்று குடும்பங்களாக ஐந்துநாள் குடும்ப சுற்றுலா சென்று வந்தோம்.




எனது தாய் பீமா மெக்கா சென்று உம்ரா கடமையாற்ற ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி உம்ரா செல்லும் குழுவுடன் இணைந்து செல்ல பயணத்தேதி உறுதியாகியிருந்தது.

நான் சுனிதா மற்றும் சுனிதாவின் சகோதரிகள் அழகியமண்டபம் ஊரில் திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது சுனிதா “நாலு ஆம்ள புள்ளையள பெத்த தள்ளய தனியா உம்ராக்கு அனுப்புதியோ,நீங்கோ தள்ளக்க கூட போலாம் நல்ல சான்ஸ் வேற புள்ளைகள் ஊர்ல இல்ல” என சொல்ல. சுனிதாவின் அக்காவும் “உம்மாக்க கூட நீங்கா போங்கோ” என்றனர்.

 எனது தாயின் பயணத்திற்கு பதினைந்து தினங்களே இருந்தது. ட்ராவல் ஏஜெண்டை அழைத்து விசாரித்தேன் இன்றே பாஸ்போர்ட் மற்றும் புகைப்படங்கள் தந்தால் உங்கள் பயணம் உறுதியாகும் தாமதிக்கவேண்டாம் என கூறினார்.

with my masters

  என் சகோதரி அஜிதாவை அழைத்து “வருகிறாயா”? எனேக்கேட்டேன். பிப்ரவரி ஆறாம் தேதி தாய்,சகோதரியுடன் புறப்பட்டு மெக்காபோய் சேர்ந்தோம்.முதல் இறையில்லமான காபாவின் முன்  இறைவனிடம் என்னை ஒப்புக்கொடுத்து  நிற்கையில் உறுதியானது அது எனக்கான அழைப்பு என. உம்ரா கடமையை நிறைவேற்றி ஏழு நாட்கள் மக்காவில் தங்கியிருந்துவிட்டு இறைதூதர் முகம்மது நபி அவர்கள் வாழ்ந்த வீடு,பள்ளிவாசல் (மஸ்ஜிதுல் நவமி) இருக்கும் மதீனாவில் ஏழு நாட்கள் இறைவணக்கங்கள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது  எனது நல்லூழ்.அங்கிருந்த நாட்களில் இறை வணக்கத்தை தவிர வேறேதும் எண்ணமேயில்லை.


   எப்போதும் நன்றியுடனும்,என் ஆழ் மனதில் நான் மெக்கா சென்று வந்தவன் எனும் உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது. எனது யோகா குரு ராதாகிருஷ்ணன் ஐயாவும்,ஆசான் ஜெயமோகனும் என் இல்லம் வந்து என்னை வாழ்த்தி அனுப்பிவைத்திருந்தனர்.

பதினாறு கவனகர்


  மெக்கா சென்று திரும்பியபின் ஓய்வாக படுத்திருந்த வேளையில் மெக்கா செல்லும் முதல் எண்ணத்தை விதைத்தவர் யார் எனும் நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

   2010 இயமலை பயணத்தில் நைனிடாலில் தங்கியிருந்தபோது எங்களை அழைத்துசென்று குரு பதினாறு கவனகர் நடத்திய சத்சங்கத்தில் காபாவை பற்றி கூறினார். அவருக்கு நான் மெக்காவில் காபா சென்றுவந்ததை சொல்ல வேண்டும் என உடனே போனில் அழைத்தேன். “ஷாகுல் நான் இப்ப தக்கல பீரப்பாவ பாத்துட்டு நாரோல் வந்துட்டுருக்கேன்” என்றார். அவரையும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

   எனது சகோதரியின் மகள் திருமணம் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிச்சயிக்கபட்டிருந்ததால்,நான் சீக்கிரமே கப்பலுக்கு போய்விட்டு செப்டம்பரில் விடுறைக்கு வருவதற்காக பிப்ரவரிமாத இறுதியிலேயே கப்பலுக்கு போகும் விருப்பத்தை சொல்லியிருந்தேன். மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திலும் பணியில் இணைவதற்கான அழைப்பு வராததால் கொச்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டேன். கணினியில் பார்த்துவிட்டு பல்க் காரியர் வகை கப்பலில் மே மாதம் உனக்கான தேதி என்சொன்ன்னார். கப்பல் காரனுக்கு விடுறையில் வீட்டில் இருக்கையில் சம்பளம் கிடையாது. வருமானமே இல்லாமல் ஆறுமாதங்கள் தாக்கு பிடிப்பது கடினம்.

   மும்பையை தொடர்பு கொண்டு கேட்டேன் “எல்பிஜி யில் இனி போக மாட்டேன் எனச்சொல்லிவிட்டாய் கார் கேரியரில் இப்போது வாய்ப்பு இல்லை காத்திருக்க வேண்டும்” என்றார் அனிதா தாக்கூர்.

“ஐ  ஆம் ரெடி டு ஜாயின் எனி வெசல்” எனசொன்னேன்.

தஞ்சை வாசகர் சந்திப்பு 


  சில தினங்களுக்குப்பின்  சென்னை அலுவலக மேலாளர் சுகுமாரன் அழைத்தார். “ஏப்ரல் மாசம் உங்களுக்கு கப்பல் போட்டுருக்கு” எனச்சொன்னார். விடுமறை நீண்டுகொண்டே சென்றதால் மார்ச் மாதம் எழுத்தாளர் ஜெயமோகன் தஞ்சையில் நடத்திய வாசகர் சந்திப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பயன்படுத்தி கொண்டேன்.எனெர்ஜி ஒர்பசில் இருக்கும்போது எழுதிய ஈராக் போர்முனை அனுபவங்கள் தொடர் பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் எந்த குபிப்பும் இல்லாமல்  நினைவிலிருந்து எழுந்துவந்ததை தொகுத்து எழுதியிருந்தேன். அப்போது என்னுடன் ராக்கில் உடன் பணிபுரிந்த நண்பர்கள்  கமல்ஹாசன்,முருகனை தேடிச்சென்று சந்தித்தேன். குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய ஆன்மாக்கள்.



 ஏப்ரல் பதினான்காம் தேதி யூஷோ எனும் கப்பலில் இணையசொல்லி விமான டிக்கெட் மின்னஞ்சலில் வந்திருந்தது. என் அலுவலகம் அதை உறுதிசெய்யவே இல்லை. மும்பை அலுவகம் என்னை அழைத்து சன்னி கிரின் எனும் கப்பலுக்கு நாளையே கிளம்பவேண்டும் தயாரா என்றார்.

 “ரெடி” என்றேன்.

நாஞ்சில் ஹமீது,

18-july -2025,

sunitashahul@gmail.com

Wednesday, 16 July 2025

இருபது ஆண்டு நிறைவு 38 வெப்பம் மிகுந்த இஞ்சின் அறை

 



எனெர்ஜி ஒர்பஸ் பகுதி 2

   கார் கேரியர் வகை கப்பல்களில் கப்பலுக்கு வேண்டிய எரிஎண்ணெய் தொட்டிகள் கார்கோ ஹோல்டின் கீழ் பகுதிகளில் பலாஸ்ட் தொட்டிகளை ஒட்டி இருக்கும்.

 எல்பிஜி கப்பலின் சரக்கு தொட்டிகளின் அமைப்பு கப்பலின் பக்கவாட்டில் (போர்ட் அண்ட் ஸ்டார்போர்ட் சைட்) தண்ணீரை தேக்கும் பலாஸ்ட் தொட்டிகள் அதையொட்டி ஹோல்ட் ஸ்பேஸ் எனப்படும் (inert gas நிரப்பி வைக்கபட்டிருக்கும் ) தொட்டிகள்,நடுவில் எல்பிஜி திரவத்தை நிரப்பும் கார்கோ தொட்டிகள் இருக்கிறது. இந்த வடிவ அமைப்பினால் பங்கர் டாங்க்ஸ் எனப்படும் எரிஎண்ணெய் தொட்டிகள் இயந்திர அறையை சுற்றி இருக்கிறது. அது எப்போதும் ஐம்பது டிகிரி வெப்பநிலையில் பாதுகாக்கவேண்டியது இல்லையெனில் அது உறைந்து பின்னர் எப்போதும் உபயோகிக்காமல் ஆகிவிடும்.

   இயந்திர அறையின்  பீயுரி பயர் இயந்திரங்கள் இருக்கும் இடம் அதிக வெப்பமாக இருக்கும் பகுதியாகும். அது தனியறையாக பாதுகப்பப்படும்.இங்கே அந்த அமைப்பும் இல்லை. மிகச்சிறிய  இயந்திர அறை ஆகவே கடுமையான வெப்பம் எப்போதும்.

கப்பலின் சரக்கு நிறைக்கும் டெர்மினல்கள் பெரும்பாலும் அரபு வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா,கத்தார்,ஐக்கிய அமீரகம்,குவைத் கோடையில் அங்கு பொசுக்கிவிடும்  வெப்பம் ஐம்பத்திரண்டு டிகிரிவரை அதிகபட்சமாக.நான் கப்பலில் இணைந்த பதினைந்தாவது நாளில் உக்ரைன் நாட்டை சார்ந்த காப்டன் விடுமுறையில் செல்ல புதிதாக வந்த இந்திய இளம் காப்டன் லேசாக மரை கழண்டவர். ராஜா எப்படியோ அப்படி நாடு என்பது போல அவர் இருந்த மூன்று மாதங்களும் கப்பலின் சூழல் கடினமானதகாக இருந்தது. எல்பிஜி கப்பலில் இருக்கும் இந்தியர்களின் அரசியல் விளையாட்டு கணக்குகள் எனக்கு பிடிபடாமல் வந்த துன்பங்கள்.

   கார் கேரியர் வகை கப்பல்களில் இருக்கும்போது எல்பிஜி கப்பலின் உணவுவகைகளை மெச்சுவார்கள். இந்திய காப்டன் சிங்கப்பூரில் கிடைத்த வாய்ப்பில் உணவு பொருட்களை வாங்காமல் பதினைந்து நாட்களில் மீண்டும் திரும்பி வருகையில் வாங்கலாம் என தள்ளிபோட காப்டனின் கணக்கு தப்பாகி கப்பல் இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியது. இந்தோனேசியாவில் இந்திய காப்டன் ஊருக்கு செல்ல ரஷ்யாவை சார்ந்தவர் வந்தார்.

   பிலிப்பினோ பணியாளர்கள் அதிகமாக சாப்பிடும் மாட்டிறைச்சி,ஜூஸ் வகைகள் காலியாகிவிட்டது. அரிசியும்,மீனும் தேவையான அளவு இருந்தது.பெரும்பாலும் தினமும் சோள மாவு தடவி எண்ணையில் பொரித்த கேட் பிஷ் இருபது நாட்களுக்கு பரிமாறப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பயோந்தன் துறைமுகத்தில் ஆய்வுக்கு வந்த அம்சா (AMSA –AUSTRLITAN MARINE SAFETY AUTHORITY ) ஆய்வாளர் உணவு பொருட்கள் இருக்கும் குளிரூட்டி அறை காலியாக இருப்பதை கண்டு உணவு பொருட்களை நிறைக்காமல் கப்பல் துறைமுகத்திலிருந்து புறப்படுவதை தடுத்துவிட்டார். சமையல்காரர்,மோட்டார்மேன்,காடட் ,பத்தி சாபின் தலைமையில் சூப்பர் மார்கெட்டுக்கு சென்று காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி வர மூவாயிரம் டாலர் பணத்தை கொடுத்தனுப்பினார் காப்டன். கப்பலின் சரக்கு நிறைக்கும் பணி முடியும் முன் வந்து சேர்ந்தனர்.

  கப்பலில் ஏரி எண்ணை பயண நாட்களைவிட  பதினைந்து நாட்களுக்காவது அதிகமாக இருக்கவேண்டும். உணவு பொருட்கள் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.எதிர்பாராமல் கப்பலின் பயண நாட்கள் நீண்டுவிடலாம் அல்லது கரையணையாமல் நங்கூரம் பாய்ச்சி நிற்க நேரிடலாம். கப்பலில் பட்டினி இருக்க வேண்டிய கட்டாயம் வராது. அரிசியும்,பருப்பும்,மைனஸ் பதினெட்டு டிகிரியில் பாதுகாக்கப்பட்ட காய்கறிகளும் கொஞ்சமாவது இருக்கும்.




   பத்து ஆண்டுகளுக்கு மேல் கார் ஏற்றும் கப்பலில் பணியில் இருந்தும் சீனாவுக்கு வந்ததே இல்லை. இம்முறை சரக்கு இறக்க சீனாவின் குவான்சு துறைமுகம் வந்தபோது வெளியில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சீனாவை பற்றி பொதுவாக சொல்லபடுவது தரமற்ற பொருட்களுக்கு உதராணம் சைனா என. நேர்த்தியான,விரிவான சாலைகள்,பொது இடங்களின் சுத்தம் ஆகியவற்றில் ஐரோப்பாவுக்கு இணையாக இருக்கிறது சீனா. இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

சீனாவில் பனை பொருட்கள்



  இயந்திர அறையில் எனக்கு வேலையில் கார் கேரியர் கப்பலை போலவே தான் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எல்பிஜி கப்பலின் கடும் வெப்பத்தை என்னால் தாங்கவே இயலவில்லை  உரிய நேரத்தில் உணவுபொருட்களை வாங்க தவறியது மற்றும் ரஷ்ய காப்டன் உணவு வழங்குவதில் காட்டிய கஞ்சத்தனம் ஆகியவை திரும்பவும் கார் ஏற்றும் கப்பலுக்கே போய்விட வேண்டுமென முடிவு செய்தேன்.



  பத்தி சாப் ஆந்திராவின் மெண்டோசா ராஜு கொலஸ்ட்ராலுக்கு மாத்திரை சாப்பிட்டுகொண்டிருந்தார். என்னிடம் தியானமும்,உடற்பயிற்சியும் கற்றுகொள்ள விரும்பினார். இங்கே பத்துநாட்கள் அடிப்படை பயிற்சியை நடத்தி அவருக்கு  தீட்சை வழங்கி,உடற்பயிற்சியும் கற்றுகொடுத்தேன். பயிற்சி முடிந்தபின் அதிகாலை ஆறுமணிக்கு அவரது அறையில் விரிப்பை விரித்து காத்திருப்பார். ஊருக்கு செல்லும் வரை தினமும் ஒன்றாக பயிற்சிகளை செய்தோம்.



  ஜப்பானிலிருந்து சவுதி அரேபியாவின் யான்பு துறைமுகம் செல்லும் வழி சோமாலிய கொள்ளையர்கள் உலவும் பாதை கப்பலை கடத்தி செல்லும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே அந்த பாதையில் பயணிக்கையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இலங்கையிலிருந்து கப்பலுக்கு வந்ததனர். கல்ப் ஆப் எடன் பகுதி ஹை ரிஸ்க் ஏரியா என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதில் பயணிக்கும் மூன்று நாட்களும் இரவும் பகலும் முறைவைத்து துப்பாகிகளுடன் வீர்ர்கள் காவல் காத்து பத்திரமாக கப்பலை யான்பு துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

நான் பணியில் இணையும்போது முதன்மை அதிகாரியாக இருந்த பஞ்சாபின் சவுத்ரி விடுமுறைக்கு சென்றுவிட்டு காப்டனாக பதவி உயர்வு பெற்று இலங்கையிலிருந்து கப்பலுக்கு வந்திருந்தார். யான்பூவில் ரஷ்யகாப்டன் ஊருக்கு செல்ல அவர் கப்பலின் தலவைராக பொறுப்பேற்பார்.யான்பூவில் ரஷ்ய காப்டனை அழைத்து செல்லும் படகு வருவதில் குழப்பம் ஏற்பட்டு படகு வரமாலே போய்விட்டது.ரஷ்ய காப்டன் ஊருக்கு செல்ல முடியவில்லை பெட்டியுடன் நீண்ட நேரம் டெக்கில் காத்திருந்தபின் திரும்பி கப்பலுக்கு வந்தார். புதிதாய் காப்டனாக பொறுப்பேற்றவர் கப்பலின் தலைவனாக வழிநடத்த ரஷ்ய காப்டன் பயணியாக அமர்ந்திருந்தார். கப்பல் தனது அடுத்த பயணத்தை தொடங்கியிருந்தது.  எனக்கு ஐந்தரை மாதம் ஆகியிருந்தது. சமையல்காரர் ஊருக்கு செல்ல வேண்டும் என்னுடன் இணைந்து விடுமுறை கடிதம் கொட்டுப்பாயா எனக்கேட்டார்.

   “இலங்கையின் காலேயில் பாதுகாப்பு வீரர்கள் இறங்கவேண்டியுளது அதனுடன் ரஷ்ய காப்டனும் செல்வார். இப்போது கடிதம் குடுத்தால் நாமும் இறங்கிவிடலாம் எனச்சொன்னார்.

   எங்களது விடுமுறை உறுதியாகி ஜப்பானை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் இலங்கைக்கு அருகில் செல்லும்போது கப்பலின் வேகத்தை குறைத்து காவலர்கள் இறங்கும்போது நானும்,சமையல்காரரும் இறங்கினோம்காலே கொழும்பு

இலங்கையின் காலேவில் இறங்கி ஒருநாள் கொழும்புவில் தங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வாழ்வில் முதல்முறையாக கடினமில்லாத விமான பயணம். இது குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன்.சதாமின் அரண்மனையில்

  இந்த கப்பலில் இருக்கும்போது என பிளாக்கில் பதிவுகள் எழுதி வலையேற்ற தொடங்கினேன். சதாமின் அரண்மனையில் என எழுதிய பதிவை கண்ட மூத்த சகோதரி முனைவர் லோகமாதேவி ஈராக் அனுபவங்களை முழுமையாக எழுதசொன்னார்.



எனது   வலைப்பூவில் பதினாறு அத்தியாயங்கள்  எழுதியபின் ஈரோடு வக்கீல் கிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பினேன். அக்டோபர் மாதம் ஆசான ஜெயமோகனின் தளத்தை திறந்தபோது என் படம் அதிலிருப்பதை கண்டன்.

நாஞ்சில் ஹமீது,

16july2025.






     சீனாவில் எடுத்த புகைப்படங்கள்