Thursday 4 January 2024

வீடு திரும்பினேன்

திருவனந்தபுரம் 

 


      எனது விடுமுறை நானே எதிர்பாராமல் உறுதியாகி கடந்த நவம்பர் மாதம் நான்காம் தேதி வீடு வந்து சேர்ந்தேன். மஸ்கட் விமானநிலையத்தில் எழுதிய பதிவுக்குப்பின் ஏதும் எழுதவே இல்லை. இம்முறை விஷ்ணுபுரம் விழாவுக்கு சென்றபோது கப்பல்காரன் டைரியை  வாசிப்பவர்களை கண்டேன். “மஸ்கட் விமான நிலையத்துக்குப்பின் ஏதும் எழுதவில்லையே” என கேட்டனர்.

   அது எனக்கே குற்ற உணர்ச்சியாக இருந்தது. வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எழுதாமல் விட்டு விட்டேனே என.தினமும் ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைக்கிறேன்.என்னால் அது இயலுமா எனத்தெரியவில்லை.

ஓமான் ஏர்லைன்ஸ் விமானம் 


  கெய்ரோ-மஸ்கட் எனது நூறாவது விமான பயணம், 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது முதல் பயணம் கல்ப் ஏர்லைன்சில் மும்பையிலிருந்து –குவைத்  செல்லும்போது பஹ்ரைன் வழியாக சென்றது. இருபது ஆண்டுகளில் நூறு  விமான பயணத்தை நிறைவு செய்திருக்கிறேன். என் தம்பி பாபு ஹுசைன் மாதத்தில் குறைந்தது இரண்டு விமான பயணம் செய்கிறான் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக.

    எனது விடுமுறை பயணத்தை என் நெருங்கிய நண்பர்கள் மூவரைத்தவிர யாருக்கும் நான் சொல்லவில்லை.சுனிதாவுக்கும்,உம்மாவுக்கும் கூட. மஸ்கட்டிலிருந்து காலை ஒன்பதரை மணிக்கு புறப்பட்ட விமானம் மதியம் இரண்டு மணிக்கு திருவனந்தபுரத்தில் பத்திரமாக தரையிறங்கியது. தம்பி ஜானகி விமான நிலையத்தில் பயணபைகள் வரும் சுழல் பெல்ட்டுகளுக்கு அருகிலேயே வந்து விட்டான்.

தம்பி ஜானகியுடன்


  ஜானகியின் பைக்கில் ஏறி ரோட்டுக்கு வந்து ஆட்டோவில் ஏறி தம்பானூர் பஸ் நிலையத்திலிருந்து நாகர்கோவில் பஸ்ஸில் ஏறினேன்.யாருக்கும் தகவல் சொல்லாமல்(நெருங்கிய நண்பர்கள் இருவரைத்தவிர) வீட்டுக்கு வருவது இதுவே முதல் முறை.

  வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழைத்ததும் கூரியர் ஒன்றை எதிர்பார்த்திருந்த சுனிதா,சல்மானிடம் கதவை திறக்க சொன்னாள்.கதவின் வெளியே நான் நிற்ப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தாலும்,கடும் கோபமடைந்தாள் “என்ன இப்ப தீடீர்னு இன்னும் ஒரு மாசம் இருக்கே,நீண்ட யாத்ர,இப்டி சொல்லாம வாறதா?” என கடிந்து கொண்டபின் “விஷ்ணுபுரம் விழாக்கு கரெக்டா வந்துட்டாரு” என்றாள்.

   வீட்டுக்கு வந்தபின்பும் தீபாவளி வரை நான் ஊரில் இருப்பதை நண்பர்களுக்கு சொல்லவேயில்லை.தீபாவளி பண்டிகைக்கு திருச்சி சென்று அங்கும் நண்பர்களுக்கு அதிர்ச்சியளித்தேன்.

   என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் முழுமையாக முடிந்துவிடவில்லை அதை தொடர்ந்து எழுதி பகிர்வேன்.

    20-dec-2023.

நாஞ்சில் ஹமீது.

No comments:

Post a Comment