Thursday, 27 November 2025

இருபது ஆண்டு நிறைவு 43 எனெர்ஜி ஒர்பஸ் 1

 




 சக்குரா மலர்கள்.

        விடுமுறையில் இருந்த நாட்கள் முதல் முறையாக நினைவுக்கு வரவேயில்லை. மூன்றரை மாதத்திற்குப்பின் எனெர்ஜி ஒர்பஸ் எனும் கப்பலில் இணையசொல்லி அழைத்தார்கள்.



  நான் 2016 இல் பணிபுரிந்த கப்பல். கப்பலிலிருந்து ராமநாதபுரத்தை சார்ந்த பெசில் அழைத்து கிரிக்கெட் பேட் இரண்டு வாங்கிவரச்சொன்னார். கொச்சி அலுவலகத்திலிருந்து மும்பை வழியாக சிங்கைக்கு பயணம். இரவு பதினோரு மணிக்கு மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் ஏறியதும் டூ நாட் டிஸ்டரப் ஸ்டிக்கரை இருக்கையில் ஓட்டிவிட்டு தூங்கிவிட்டேன்.உணவுக்காக விமான பணிப்பெண்கள் என்னை எழுப்பவே இல்லை.




  சிங்கையில் இறங்கியோது கப்பல் தாமதமாகிவிட்டதால்.ஹோட்டலுக்கு அனுப்பினார்கள். குளித்து காலை உணவுக்குப்பின் கால் நடையாக நகரை சுற்றிவந்தேன். மதிய உணவுக்குப்பின் தூங்கி எழுந்ததும் மாலையில் படகில் ஏற்றி கப்பலுக்கு கொண்டுவிட்டார்கள். 



  சன்னி கிரீனில் என்னுடன் இருந்த இரண்டாம் இஞ்சினியர் அபிஷேக் பானர்ஜி இங்கும் இருந்தார். நான் விடுவித்த கேரளாவின் தினேசை முன்பே கொச்சி அலுவலகத்தில் சந்தித்துள்ளேன். கப்பலில் இணைந்தபோது அறை,குளியலறை மிக சுத்தமாக பேணப்பட்டிருந்தது. இரண்டாம் இஞ்சினியரிடமும் சொன்னேன் “ஸார் கேபின் ரொம்ப கிளீன் ஆ இருக்கு”



“ஆம் நாலஞ்சி நாளாவே நாலு மணிக்கே இஞ்சின் ரூம்ல இருந்து கேபின் கிளீன் பண்ணனும்னு சீக்கிரமே அறைக்கு சென்றான்” என.

 தினேசுக்கு வாடசப்பில் செய்தி அனுப்பினேன் அறை சுத்தமாக இருந்தது நன்றி என.

 தினேஷ் பதிலனுப்பியிருந்தார் “சேட்டா ஞான் கப்பல்ல கேறிய ஆத்தியத்த திவசம் முறில கிடந்தொறங்காம் பற்றுல்லா அதுகொண்டு ஞான் கொடுக்கும்போ விர்த்தியாயிட்டு கொடுக்கணும்னு தீர்மானிச்சு” 

 கப்பலிலிருந்து இறங்கும்போது சிலர் அறையை அசுத்தமாக விட்டுசெல்வர். முறையாக பேணப்படாத அறையில் முதல் இரவு தூங்குவது மிக கடினம்.அப்படி எனக்கும் சில சிலமுறை கிடைத்துள்ளது.



  ஜப்பான் சென்றபோது வெளியே செல்லும் வாய்ப்பு கிட்டியது. உடன் பணிபுரியும் பத்திசாப் திலோச்சன் சிங், பிலிப்பினோ மாலுமி மைக்கேல்,மற்றும் மூன்றாம் அதிகாரியுடன் வெளியே சென்றோம். ரயிலேறி சற்று தள்ளியிருந்த வணிகவளாகத்திற்கு சென்றோம்.சர்வதேச விமான நிலையத்தை போல பராமரிக்கபடுகிறது.ஜப்பானின் சுத்தம் குறித்து முன்பே எழுதியிருக்கிறேன். 

கப்பல் பணியில் இணைந்தபின்  2006 ஆண்டு முதல் ஜப்பானுக்கு வந்துகொண்டே இருக்கிறேன்.இங்கே கோடையில் பூக்கும் சக்குரா பூவை பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவேயில்லை. இம்முறை துறைமுகத்திலிருந்து வெளியேறும் முன்பே சக்குராமலர்களை கண்டேன். அதை உறுதி செய்வதற்காக அங்கே வாழும் நண்பர் எழுத்தாளர் செந்தில்குமாரை அழைத்தேன். அவர் அதை உறுதி செய்ததோடு “ஷாகுல் சக்குரா பூக்கள் ஒரு வாரம் தான் இருக்கும் பின்னர் சிறு தூறல் விழும்போதே உதிர்ந்துவிடும்,உங்களுக்கு அதை காண்பதற்கான நல்ல வாய்ப்பு இது”என்றார்.




   தெருக்களை மூடி சக்குரா மலர்களை நிறைந்து இருந்த பாதையில் இருந்த சிமென்ட் நாற்காலிகளில் வெகுநேரம் அமார்ந்திருந்தோம். வேறு பூக்களும் நிறைவே பூத்திருந்தன. அங்கிருந்த சிறுகடை ஒன்றில் சக்கரைவள்ளி கிழங்கும் வாங்கினேன்.

இருபத்தியைந்து ஆண்டு பழைமையான கப்பல் ரிப்பேர் டீம் பிட்டர் ராம் பாபு,அவருக்கு உதவியாக பண்டிட் என ஒருவரும் ட்ரை டாக் பணிகளுக்காக வந்தனர்.எனெர்ஜி ஒர்பஸ் இரு மாதத்திற்குப்பின் சைனாவில் ட்ரை டாக்கில் நிறுத்தப்பட்டது. ஜப்பானில் ஒரு கப்பலுக்கு ஆகும் செலவில் இங்கே மூன்று கப்பல்களை ட்ரை டாக் செய்ய முடியும்.அதனால் ஜப்பானிய முதலாளிகள் இப்போது தங்களது கப்பல்களை சைனாவுக்கு அனுப்புகிறார்கள்.




  சைனா ஐரோப்பாஅளவிற்கு வளர்ந்த நாடு. இங்குள்ள உள் கட்டமைப்புகள் பொது சுகாதாரம்,பொது இடங்களின் தூய்மை என. ட்ரை டாக்கில் கப்பலில் என்ன வேலைகள் செய்யப்படும் எனபதை மிக விரிவாக முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.



   இரு தினங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று வந்தோம். மலிவான விலையில் காலானிகள்,துணிகள் வாங்கினோம். ட்ரை டாக்கின் வாயிலின் வெளியே நிறைய உணவு கடைகள் இருந்தன. பெரும்பாலும் யாரும் இங்கே ஆங்கிலம் பேசுவதில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு உதவியில் உலகையே வலம்வரலாம்.நண்பர்கள் பெரும்பாலும் சீன சிம் கார்டு வைத்திருந்தனர்.



    டாக் வாயிலை ஒட்டிய கடையிலிருந்த இளம்பெண்ணொருத்தி சுமாரான ஆங்கிலம் பேசுவாள். டாலருக்கு நல்ல எக்ஸ்சேஞ் விலையும் அவளிடம் கிடைக்கும்.(ஒரு அமெரிக்க டாலர் ஆறு சீன யுவான்) கப்பல்காரர்கள் அவளிடம் வேண்டிய தகவல்களை பெற்று செல்வோம்.

  நண்பர் ஒருவர் அவளை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவள் சொன்னாள் உங்கள் ஊரில் பெண்களை கற்பழித்து விடுவார்களாமே என கேட்டாள்.

  யாரோ தவறான தகவலை சொல்லியிருக்கிறார்கள் என நண்பர் பெசில் சொன்னதும் அவள் “நான் செய்திதாளில் படித்தேன்,தில்லி அருகே ஆசிபா எனும் பள்ளிசிறுமியை ஆறுபேர் கொண்ட கும்பல் கற்பழித்ததை நான் வாசித்தேன்”என்றாள்.

 “இங்கே நள்ளிரவு  நான் தனியாக செல்லமுடியும், இந்தியாவில் சாத்தியமா”என கேள்வி எழுப்பினாள்.

   டாக்கை ஒட்டிய சாலையோர கடைகள் அனைத்திலும் பீர்,மது வகைகள் விற்பனை செய்யபடுகிறது. டாக் தொழிலாளார்கள் அங்கே அமர்ந்து மிதமாக குடித்துவிட்டு உணவுண்டு செல்கின்றனர். ஒரு நாளும் எந்த பிரச்சனையை நாங்கள் கண்டதே இல்லை.

  அதன் பின் அந்த பெண்ணை சந்திப்பதே தலைகுனிவாக உணர்ந்தோம்.உலக அரங்கில் நாம் தாய்நாடு எப்படி பேசப்படுகிறது என்பதும் புரிந்தது.

   சமூக வலைத்தளங்களில் டூப்ளிகேட்=சீனா என பரப்புகிறார்கள்.சீனாவில் நாம் கொடுக்கும் பணத்திதிற்கு தகுந்தமாதிரி பொருள் கிடைக்கும். உதராணமாக ஒரு தரமான பேரிங்க் ஐம்பது டாலர் என்றார். தரம் குறைந்த பேரிங்க் பத்து டாலரிலும் வாங்கலாம். பணத்திற்கு தகுந்தமாதிரி பொருளின் தரம் இருக்கும். நான் வாங்கிய காலணிகள்,துணிகள் நீண்ட காலம் உழைத்தது.

    ட்ரை டாக்கில் வெல்டிங் மற்றும் பிற பணிகளுக்கு பெண்கள் நிறையே வேலைக்கு வருகிறார்கள். பெண் என்பதால் எந்த சலுகையும் இல்லை. ஆணுக்கு நிகராக அவர்களும் பணிசெய்கிறார்கள்.



   மூன்று வாரங்கள் ட்ரை டாக் முடிந்து எங்கள் கப்பல் பயணத்திற்கு தயாராகியது. காப்டன் ஆசுதோஷ் கவுல் என்பவர் புதிதாய் எங்கள் நிறுவனத்தில் இணைந்து எனெர்ஜி ஒர்பசில் பொறுப்பை ஏற்றுகொண்டார்.

 

நாஞ்சில் ஹமீது,

27 nov 2025.

sunitashahul@gmail.com

தொடர்புடைய பதிவுகள் 

நண்பர் பெசில்

ஜப்பான்



நண்பர் பெசில் (ஒரு பழைய டைரி குறிப்பு )

 

                                                    


                                                                                                       22aug2018
                                                                                                                                                                                                                            at sea haeding to singapore                               

      இன்று பக்ரீத் ,ஹஜ் பெருநாள் .எனக்கு கப்பலில் வழக்கமான வேலைநாளாக இருந்தது .இன்று காலை இரண்டு ரக்காத் பெருநாள் சுன்னத் தொழுகையை தொழுதேன் .

   பெருநாளில் ஊரில் இருந்தால் தான் சிறப்பு .

   திங்களன்று மாலை நண்பர் சூசை ஆன்றனி பெசில் பெர்னாண்டஸ்  ஊருக்கு புறப்பட்டு சென்றார் .நான் வருவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் வந்திருந்தார் இந்த கப்பலுக்கு .இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டே நாங்கள் அறிமுகம்.

  மும்பை செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்தோம் இரு நாட்கள் அறிமுகமில்லாமல்.  மும்பையில் வெல்டிங் படிக்க எனது நிறுவன பயிற்சி மையத்திற்கு சென்றபோது பெசிலும், அங்கு  வந்திருந்தார் .நாம் ஒரே ரயிலில் ஒரே பெட்டியில் வந்தோம் என சிரித்துக்கொண்டோம் .

  நான் குடும்பத்துடன் கீழக்கரை சென்றபோது இராமநாதபுரம் ரயில் நிலையம் வந்து சந்தித்தார் .தொடர்பிலேயே இருந்தோம் ,அவர் இங்கிருந்த நாட்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம் .

  பதினாறாண்டுகளாக இந்த நிறுவன கப்பல்களில் பணிபுரியும் மூத்தவர் ,அமைதியானவர்,அதிர்ந்து பேசமாட்டார். அவரது அறையில் ப்ரொஜெக்ட்டரில் படம் பார்ப்போம்.செய்தி வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் .எல்லா செய்திகளையும் அவர்தான் எனக்கு முதலில் சொல்வார் .அவருடன் இருந்த ஆறரை மாதங்கள் மிக மகிழ்ச்சியானவை .

  தற்போது சென்னைக்கருகில்  செங்கல்பட்டில் வசிக்கிறார் .மனைவி அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார் .மூத்த மகன் பொறியியல் கல்லூரியிலும், இளையவன் எட்டாவதும் படிக்கிறார்கள்.

  மூத்தவன் இசையில் விருப்பமுடையவன்,நல்லகுரலும் இருக்கிறது .இளையவன் ஜெர்வின் குதிரையேற்றத்தில் ஆர்வமுடன் இருக்கிறான்.கிளி,மீன் இவைகளை வீட்டில் வளர்க்கவும் ஆர்வமுடையவன் .

பெசில் ஆன்மீகத்திலும் ஈடுபாடுயுடையவர் .மாஹிம் சர்ச்சில் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு கிடைத்த சிறிய பிரார்த்தனை புத்தகத்தை இப்போதும் வைத்திருக்கிறார் .எல்லா புதனிலும் அந்த பிரார்த்தனைகளை தொடர்ந்து செய்துவந்ததால் எல்லாம் மனப்பாடம் ஆகிவிட்டது என்றார் .

  நாளை நடைபெறும்  தனது அக்காவின் மகள் திருமணத்திற்கு செல்ல நினைத்திருந்தார் .நல்ல வேளையாக ஜப்பானிலிருந்து ஊருக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் அவர் விரும்பியதுபோல் திருமணநிகழ்வில் கலந்துகொள்ளமுடியும்.கப்பல் பணியாளர்களுக்கு இதுபோல் நிகழ்ச்சிகள் அரிதாக கிடைப்பதால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை .பெசில் கும்பத்திலுள்ள அனைவருடனும் அணுக்கமாக இருக்க விரும்புபவர் .குடும்பத்தைப்பற்றி அவர் சொல்வதிலிருந்து தெரிந்துகொண்டேன்.

  எண்பது வயதிலும் மனைவியின் தந்தை மிதிவண்டி  ஓட்டுவதை சொல்லுவார் ,மிக எளிமையான மனிதர் எனவும் அவரைபற்றி சொல்லுவார்.

  பெசிலின் மனைவி சகோதரி அனிதா அவர்கள் கடந்த நான்காண்டுகளாக ஊதியம் இன்றி பணியில் தொடர்வது சங்கடம்தான் ,பெசில் அதற்காக நிறையவே தொலைபேசி செய்வார் .

  சகோதரி அனிதா சக மனிதனின் துயர்தாளதவர் .பக்கத்துவீட்டில் இருக்கும் எழுபத்தியைந்து வயது முதிய பெண்மணிக்கு தான் பள்ளிக்கு செல்முன் அவருக்கு உணவு கொடுக்க தவறுவதில்லை.அறிமுகம் இல்லாதவர்களை தாயை போலவோ ,அல்லது குழைந்தையை போலவே பேணுவதற்கு மிக உயர்ந்த உள்ளம் வேண்டும் .இறைவன் பெசிலின் குடும்பத்தில் பலருக்கு அதை கொடுத்திருக்கிறான் .இறைவவா அவர்களனைவருக்கும் மகிழ்வான ,நிறைவான வாழ்வை எப்போதும் அளித்திடு .

 பெசில் இப்போது மதுரை விமானநிலையத்தில் இறங்கி காரில் ஊர் போய்கொண்டிருப்பார்.நேற்றுதான் எனக்கு இந்த கப்பலில் அவரில்லாமல் முதல் நாள் .நேற்று காலையே ஜப்பானிலிருந்து புறப்பட்டிருந்தது .நேற்று முழுநாளும் ஓய்வு .இன்று மாலை ஐந்து மணிவரை பணி .அறைக்கு வந்தபின்தான் பெசில் இல்லாததை உணர்ந்தேன் .இரவுணவுக்குப்பின் அவரது அறையில் குறைந்தது ஒரு மணிநேரமவாவது பேசிக்கொண்டிருப்போம் இருப்போம் .இன்று இரவுணவுக்குப்பின் அறைக்கு வந்து அறையிலேயே இருக்கிறேன் .இனி இந்த கப்பலில் நான் பெசில் இல்லாமல் இருந்து பழகிக்கொள்ளவேண்டும்  கொஞ்சம் கடினம்தான் .எல்லாம் கடந்து செல்லும்.பெசில் நானும் விடுமுறை விண்ணப்பம் கொடுத்துவிட்டேன் .அடுத்த மாதம் பதினைந்தாம்  தியதி கத்தாரின் ரஸ் ல பானிலிருந்து ஊருக்கு வரும் வாய்ப்பு உள்ளது .

 பெசில் விரைவில் ஊரில் கண்டிப்பாக சந்திப்போம் .

ஷாகுல் ஹமீது ,

22 aug 2018

Sunday, 23 November 2025

பணியில் இணைய காத்திருப்பு

 

கிருஷ்ணம்மாள் பாட்டியுடன்


        செப்டம்பர் ஐந்தாம் தேதிக்குப்பின் இப்போதுதான் அடுத்த பதிவை வலையேற்றினேன்.ஊருக்கு வந்தபின் மூன்றரை மாதங்களில் ஒரு பதிவுகூட எழுதவில்லை என்றே சொல்லலாம்.



  ஆசிரியர் ஜெயமோகன் சொல்வது தினமும் எழுதுபவர் தான் எழுத்தாளன் என.இம்முறை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம்தான் ஊருக்கு வருவதாக இருந்தேன்.ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிலேயே விடுமுறை உறுதியானதால் ஊருக்கு வந்துவிட்டேன்.

  செப்டெம்பர் மாதமே வேறு நிறுவனங்கள் என்னை அழைத்தது. நானும் தயாரானேன் ஆனால் வாய்ப்பு நழுவிவிட்டது. தூரன் விருது விழா, வெள்ளிமலையில் ஆலயக்கலைவகுப்பு,வாசிப்பு பயிற்சி மற்றும் இந்திய தத்துவ வகுப்புகளில் கலந்துகொண்டு நாட்கள் வேகமாக சென்றது.

மஞ்சரி 

சிவராஜ் 

தூரன் விழாவுக்கு செல்லும்முன் திண்டுக்கல் காந்தி கிராமம் சென்று பாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை சந்தித்தது மிக முக்கியமான தருணம். நூறு வயதான பாட்டி காந்தியுடன் இருந்துள்ளார்.அவரது திருமணத்தை காந்தியே நடத்திவைத்துள்ளார்.ஏழை விவசாயிகளுக்கு பெரும் நிலக்கிழார்களிடமிருந்து ஆயிரக்கணக்கான நிலத்தை பெற்று தந்தவர்.


ஊர் கிணறு புனரமைப்பு செய்யும் மஞ்சரி குக்கூ காட்டுப்பள்ளி சிவராஜ் அண்ணாவையும் காந்தி கிராமத்தில் சந்தித்தேன்.



   பாண்டிச்சேரி சபரி செவிலியர் கல்லூரி துணைமுதல்வர் உமா அவர்கள் கப்பல்காரன் டைரியின் வாசகி.அவர்கள் கலூரியில் நடக்கும் மாணவர்களுக்கான ஆளுமை திறன்மேம்மபாட்டு பயிற்சியில் ocean science எனும் தலைப்பில் உரையாற்ற அழைத்தார். கல்லூரி மாணவர்கள் முன் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிவிட்டு வந்தேன்.



 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் பிசியாக சென்றது.என் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பணியில் இணைய தயாராக உள்ளேன் எனக்கூறினேன்.அக்டோபர் முதல் வாரம் முதல் பணியில் இணைவதற்காக காத்திருக்கிறேன். இன்னும் அழைப்பு வரவில்லை.இருமுறை எனது மேலாளர் தர்சனாவை அழைத்து பேசினேன். கொஞ்சம் பொறு எனும் பதில் தான் கிடைத்தது.

  கப்பல் காரனுக்கு விடுமுறையில் சம்பளம் கிடையாது.விடுமுறையில் ஊருக்கு வந்தால் ஒரே மாதத்தில் கையிலிருக்கும் காசு காலி. எப்போது அழைப்பு வரும் என காத்திருக்கிறேன்.எழுதுவதற்கு அதிகம் இருந்தபோதும் எழுதவோ,வாசிக்கவோ இல்லை.

  அதிகாலை நான்கு சுனிதா தொழுகைக்காக வைக்கும் அலராம் என்னையும் எழுப்பிவிடும். படுத்தே இருப்பேன்.ஐந்துமணிக்கு எழுந்து அதிகாலை தொழுகைக்காக அருகிலிருக்கும் பள்ளிவாசல் சென்றுவருவேன்.காலை ஏழு முதல் இங்கேயே நண்பர்களுடன் நடைபயிற்சி  முடித்து எட்டுமணிக்கு வீட்டுக்கு வருவேன்.குளித்து சிறிது நேரம் தியானம் செய்தபின் காலை உணவு. மகன்கள் ஒன்பதரைக்குள் பள்ளிக்கும்,கல்லூரிக்கும் சென்றுவிடுவார்கள். எனக்கு செய்வதற்கு ஒன்றும் இருக்காது.சில நாட்கள் மீன் சந்தைக்கு சென்று மீன் வாங்கி வருவேன்.

   ஒன்றும் செய்யாமலே சோர்வாகவே நாள் முடிந்துவிடும்.ஐவேளை தொழுகைக்கும் பள்ளிவாசல் சென்று வருவதை தவிர. இரவு ஒன்பது மணிக்கே படுக்கைக்கு சென்றுவிடுகிறேன்.தினமும் எனது கம்பனியின் அழைப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

  கடந்த பத்து நாட்களாக என் குடியிருப்பு பகுதியிலுள்ள பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்த வாக்களார் படிவம் நிரப்பும் முகாமில் இருந்தேன்.நானூறுக்கும் மேற்பட்டோருக்கு வாக்காளர் படிவம் தன்னார்வலர்களால் நிரப்பிகொடுத்தோம்.அந்த பணியும் இப்போது முடிந்துவிட்டது, கடந்த சில நாட்களாகவே எழுதவேண்டும் என நினைத்து இன்று ஒரு பதிவு எழுதி வலையேற்றினேன்.

  வரும் நாட்களில் தொடர்ந்து எழுதி இருபது ஆண்டு நிறைவை விரைவில் முடிப்பதாய் இருக்கிறேன்.

 நாஞ்சில் ஹமீது,

23 November 2025,

sunitashahul@gmail.com

இருபது ஆண்டு நிறைவு 42

 

சிங்கை கெப்பல்ஷிப் யார்ட் 


சன்னி கிரீன் 3

      கப்பல் நின்றுகொண்டே இருந்ததால் பெரும்பாலான பணிகளை செய்து முடித்தோம்.மிகப்பழைய கப்பல் ஆதலால் பணிகள் தீரவேயில்லை. டெக்கிலிருந்து தினமும் ஓட்டையான குழாய்களை இயந்திர அறைக்கு கொண்டுவந்து சரிசெய்தும், புதிதாய் செய்துகொண்டும் இருந்தனர்.உணவு பொருட்கள் தீர்ந்துகொண்டே இருந்தது.இங்கே தரமான பொருட்களை வழங்க சப்ளையர்கள் இல்லை.

    நீண்ட நாட்களாக விடுமுறைக்கு செல்ல வேண்டிய ஆறுபேர் கொண்ட குழுவுக்கு மாற்று பணியாளர்கள் வருவதற்கான கடிதம் வந்தது. படகில் ஏறி டோகோவிலிருந்து ஆப்ரிக்காவின் ஏத்தியோப்பியா வழியாக மும்பை செல்லும் விமான சீட்டும் வந்தது.

  இலங்கையின் முதன்மை இஞ்சினியருக்கு அனுமதி மறுக்கபட்டது இருநாடுக்களுக்குமான அரசியல் காரணங்கள். சிங்கபூரிலிருந்து பங்களாதேசிகள் ஊருக்கு செல்ல முடியாது. பனாமா நாட்டில் கப்பலேற செல்லும் இந்தியர்கள் ஹோட்டல் அறையை விட்டு வெளியே செல்ல கூடாது.இப்படி உலகெங்கும் பல தடைகள் உள்ளது.




  இரு வாரங்களுக்குப்பின் எரிஎண்ணை நிறைப்பதற்காக கப்பல் கானா நாட்டிற்கு சென்றபோது உணவுபொருட்கள் நிறைத்தோம். முதன்மை இஞ்சினியர் இறங்கிசென்றார். புதிதாய் வந்த பிலிப்பினோ முதன்மை இஞ்சினியர் முன்பே என்னுடன் எனெர்ஜி ஒர்பஸ் கப்பலில் பணிபுரிந்தவர்.எரிஎண்ணை நிறைக்கும் பணிமுடிந்து மீண்டும் டோகோவில் வந்து நங்கூரம் பாய்ச்சினோம்.தீபாவளி நெருங்கிவந்ததால் அதற்கான அலங்காரங்கள் செய்ய துவங்கினார் காப்டன்.தீபாவளியை மிக சிறப்பாக கப்பலில் கொண்டாடினோம்.ஊரிலிருந்து வந்தவர்களிடம் காப்டன் பதினைந்து கிலோவுக்கு மேல் இனிப்புகளை வரவளைத்திருந்தார்.


 எண்பது வயதை தாண்டிய என் தந்தையின் உடல்நிலை மோசமானதால் நான் காப்டனை சந்தித்து விபரம் சொன்னேன்.கடிதம் எழுதி தரச்சொன்னார்.அவ்வபோது  பிபி ஜாக்கி மற்றும் வேறு கப்பல்கள் வந்து காஸ் நிரப்பி சென்றது.

 மீண்டும் ஒரு வாரத்திற்குபின் மீண்டும் காப்டனை பார்த்து என்னை ஊருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தேன். குலாலம்பூர் அலுவலகத்துடன் பேசியிருக்கிறேன் கரையிலிருந்து ஏதாவது படகு வந்தால் அதில் உன்னை அனுப்பிவைக்கிறேன் என உறுதியளித்தார்.

   அடுத்த ஆறாவதுநாள் என் தந்தை இறந்த செய்தி வந்தது. காப்டனை பார்த்தேன். சென்னை அலுவலகம் அனுப்பிய செய்தியை அப்போதுதான் படித்ததாக சொன்னார்.சனி,ஞாயிறாக இருப்பதால் திங்கள்கிழமை தான் உன்னை அனுப்ப முடியும் “சாரி” எனச்சொன்னார். எனது இளையதம்பி வருவதற்காக இரு தினங்கள் உடலை வீட்டில் வைத்திருந்தனர்.


லோம் நகரில் 


 உடனடியாக ஏற்பாடு செய்து விமானசீட்டு தந்திருந்தால் அடக்கம் செய்யும் முன் வீடு வந்து சேர்ந்திருக்கமுடியும். காப்டன் சொன்னதுபோல் இருதினங்களுக்குப்பின் என் சொந்த கிராமமான மனவாளகுறிச்சியில் அடக்கம் முடிந்தபின் எனக்கான படகு வந்து. டோகோ-எத்தியோப்பியாவின் அடிசாபாப – மும்பை வழியாக திருவனந்தபுரம் வந்துசேர்ந்தேன்.

வாப்பாவுடன்


  கப்பல் பணியில் இருந்ததால் தந்தையின் இறுதி சடங்கில் என்னாலும்,என் அண்ணனாலும் கலந்துகொள்ள முடியவில்லை.

சன்னி கிரீன் நிறைவு.

நாஞ்சில்ஹமீது.

sunitashahul@gmail.com