Friday 12 July 2024

கெபிலியே

 கெபிலியே (GEFELIGE NAVROZE)


       கப்பல் காரனுக்கு தண்டனை கொடுக்க விரும்பினால். இரண்டு நாள் அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என சொன்னால் போதும். அது மிகக்கடும் தண்டனையாக இருக்கும்.

  என்னைப்போல் அதிகம் பேசுபவர்களுக்கு இன்னும் கஷ்டம்தான். வாசிப்பு பழக்கமாகி அந்த இன்பத்தை உணர்ந்ததால் எனக்கு இப்போது தனிமையும்,அறைக்குள் அடைந்து கிடப்பதும் பிரச்சனை ஏதும் இல்லை.

   இந்த கப்பலில் மார்ச் மாத இறுதியில் கொரியாவிலிருந்து வாட்சில்லா நிறுவனத்தின் ஆறு கொரியர்கள் ஜெனரேட்டர் பணிக்காக வந்தனர்.ஐம்பத்தியைந்து நாட்கள் அவர்கள் கப்பலில் இருப்பார்கள் என காப்டன் சொன்னார். இரு மாதங்களுக்குபின்பும் அவர்கள் பணி தொடர்ந்தது.பணி முடிந்தபோது அவர்கள் இறங்க துறைமுகம் கிடைக்காமல் மேலும் பத்து நாட்கள் இருந்தனர்.

   ஐக்கிய அமீரகத்தின்(UAE) தாஸ் தீவில் யாரும் இறங்க அனுமதியில்லாததால் மீண்டும் நீண்டது அவர்களுடைய கப்பல் பயணம். கொரிய டெக்னீசியன் ஒருவர் ஒருநாள் காலை உணவுக்கு வரும்போது கை கால்கள்,சிவப்பாக தடுத்து அரிக்கிறது என்றார்.

 

“எதோ அலர்ஜி இருக்கிறது சிக்கன்,பீப்,மட்டன்,முட்டை வகைகளை சாப்பிடாதே” என்றேன். ஆனால் அவன் பன்றிக்கறி உட்பட எல்லா இறைச்சி வகைகளையும் வெட்டி விழுங்கிகொண்டிருந்தான். அவனது உடல் நிலையை கவனித்த மருத்துவ அதிகாரி அவருக்கு சின்னம்மை இருப்பதாக சொல்லி அறைக்குள்ளேயே இருக்கசொன்னார். உணவு அறைக்கே வழங்கப்பட்டது. மூன்று வேளையும் மெஸ்மேன் அவனது அறைக்கு வெளியே உணவு தட்டை வைப்பான். காலி தட்டுகள் பின்னர் அடுமனைக்கு கொண்டுவந்து கழுவி மீண்டும் உணவு வழங்குவான். அவனை தாஸ் தீவில் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார் காப்டன்.

மருத்துவரை சந்தித்துவிட்டு அன்று மதியம் உணவு கூடத்துக்கு வந்த அவனிடம் “டாக்டர் என்ன சொன்னார்” எனக் கேட்டேன். “சிக்கன் பாக்ஸ்” என பதிலளித்தான். “ஏன் இங்கே இருக்கிறாய் அறைக்கு போ” என்றேன்.

 இங்கிருப்பவர்களில் பத்துக்கும் மேற்பட்டவர் பிலிப்பினோ பணியாளர்கள். காடேட்டும், ஓ எஸ் கார்லோவும் “உனக்கு சிக்கன் பாக்ஸ் முன்பு வந்துள்ளதா”? எனக்கேட்டு கொஞ்சம் பயத்தில் இருந்தனர்.

  பத்து தினங்களுக்குப்பின் கொரியர்கள் அமீரகத்திலிருந்து இறங்கி சென்றனர். மறுமுறை அமீரகம் செல்லும்போது பழுதான வேறொரு ஜெனரேட்டரில் பணி செய்ய வாட்சில்லா துபையை சேர்ந்த ஐந்து இந்திய பணியாளர்கள் கப்பலுக்கு வந்தனர்.இது ஜூன் பத்தாம் தேதி.அன்று மதியமே மெஸ்மேன் கெபிலியே நவ்ரோஸ் உடலில் லேசான கொப்பளங்கள் தெரிய அறைக்குள் தனிமைப்படுத்தபட்டான்.

  நவ்ரோஸ் இந்த கப்பலில் மெஸ் மேனாக கடந்த ஏப்ரல் மாதம் சிங்கபூரிலிருந்து பணியில் இணைந்தான். இருபத்தியாறு வயதே ஆன நவ்ரோஸ் ஒல்லியான தேகமும் ஐந்தடி ஐந்து அங்குல உயரமும் என்னைபோல லேசான கறுத்த தேகம் கொண்ட அவன் இந்தியாவின் லட்சதீவிலுள்ள மினிகோய் எனும் ஊரில் பிறந்தவன். 

   மூன்று வருட ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தபின் ஓராண்டு கோவையில் நட்சத்திர விடுதியில் பணி,கொச்சி மினிகோய் பயணியர் படகில் ஆறு மாதம் பணி. பின்னர் உல்லாச கப்பலில் ஓராண்டு பணிசெய்தான்.

  எங்கள் நிறுவனத்தில் கடந்த ஆண்டு தேர்வாகி சிங்கப்பூர் எனர்ஜி எனும் கப்பலில் முதல் முறையாக பணியில் இணைந்தான். மூன்றே மாதத்தில் அக்கப்பலில் ஆட்குறைப்பு செய்ததால் இந்த கப்பலுக்கு பணி மாற்றம் பெற்று வந்தான்.

    ஊரில் வாப்பா,உம்மா உடன் பிறந்தவர்களும் உண்டு. பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெண்ணுடன் காதல் கொண்டு இவ்வருடம் அக்டோபரில் திருமணம் நிச்சயயிக்கபடுள்ளது. அந்த பெண் ரேடியோ டெக்னீசியனாக கொச்சியில் பணி புரிவதாக சொன்னான். அவனது பெயரை பலநாள் கூர்ந்து நோக்கியும் என்னால் வாசிக்க முடியாததால் “உனது முதல் பெயரை எப்படி உச்சரிப்பது” என கேட்டபோது “கெபிலியே என்ற வீட்டு பேரானு” என்றான்.

(கேரளாவில் பெரும்பாலானவர்களுக்கு வீட்டு பெயர் உண்டு அணில் குமார் கூரியாட், கூரியாட் வீட்டு பேரு,உப்பாலா ஜாவித்,உப்பாலா ஆஸிப்,உப்பாலா ஊரின் பெயர்.)

  மெஸ்மேன் செய்யும் அனைத்து பணிகளும் முடங்கின. சாப்பிட்ட தட்டுகளை அவரவரே கழுகி கொள்ள வேண்டும். காப்டன்,சீப் இஞ்சினியர் உட்பட அனைத்து அறைகளும் சுத்தபடுத்துதல் இல்லாமல் ஆனது. மெஸ் மேன் சுத்தம் செய்ய வேண்டிய குடியிருப்பின் பொது இடங்கள் டெக் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

   அடுமனையில் சாலட் தயார் செய்தல், அடுமனை பாத்திரங்கள் கழுவுதலை முதன்மைசமையல்காரர் மற்றும் இரண்டாம் சமையல்கரார்கள் செய்தார்கள். இரவுணவுக்கு (வாரத்தில் மூன்று நாட்கள் )சப்பாத்தில் செய்த நாட்களில் ரைமுண்டோ சப்பாத்தியை பரத்தி தர நான் மாலை நான்கரைக்கே அடுமனைக்கு சென்று சப்பாத்தி சுட்டு கொடுத்தேன்.

   நவ்ரோஸ் அறைக்கு சென்ற முதல் நாள் அழைத்தேன் “கெஹ்னத்தே” அவனது தாய்மொழியில் எப்படி இருக்கியாய் என. “ரங்க்காலோ, ரங்க்காலோ” என்று பதில் சொன்னான். வழக்கமாக நானும் அவனும் மலையாளத்தில் பேசிக்கொள்வோம்.

  “மேலில் புள்ளி,புள்ளியாக வந்துள்ளது லேசான அரிப்பும் உள்ளது என்றான்.

 இரு தினக்ளுக்குப்பின் அவனது அறையை தட்டி வெளியில் நின்று அவனை பார்த்தேன். இரு கைகளிலும்,வயிறு,முதுகு கால்கள் தொடை என புள்ளி புள்ளியாக சிறு கொப்புளங்கள் போல இருந்தது. அவனிடம் சொன்னேன் “கோளி இறைச்சி,முட்ட,நான் வெஜ் ஒண்ணும் வேண்டா” என்றேன்.

  “ஞான் இப்போள் ஈ முறிக்குள்ள கிடக்குந்த அவஸ்தையில் ஈ ஆகாரமும் இல்லேங்கி என்னே கொண்டு பற்றுல்லா” என்றான்.

  மருத்துவ அதிகாரி எல்லாம் சாப்பிடலாம் என சொன்னதாக சொன்னான்.பதினான்கு நாட்கள் ஆகியும் அவனுக்கு சரியாகவேயில்லை. இந்தியாவில் இருந்தபோது மருத்துவரிடம் அனுப்ப காப்டன் தவறிவிட்டார். பின்னர் நெடும் பயணமாக கப்பல் ஆப்ரிக்காவின் நைஜீரியாவை நோக்கி புறப்பட்டது இடைநில்லாமல்.

  

நான் அவனை இரு தினங்களுக்கு ஒரு முறை அறைக்கு வெளியே நின்று சந்தித்து வருவேன். அவனிடம் புகைப்படங்களை பெற்று எனது மருத்துவ நண்பர் மாரி ராஜிக்கும், தோழி மகேஸ்வரிக்கும் அனுப்பினேன். புது மாப்பிள்ளை டாக்டர் மாரிராஜ் இது குணமான சின்னம்மை போலுள்ளது. இன்னும் மூன்று தினங்களுக்குப்பின் படம் எடுத்து அனுப்புங்கள் நான் சொல்கிறேன் என்றார்.

  தோழி மகேஸ்வரி மேலும் சில விவரங்களை கேட்டறிந்தபின் சக மருத்துவரிடம் கலந்தாலோசித்து இது வைரல் இன்பெக்ஷன் குணமாக இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என உடலில் பூச இரு மருந்துகளை பரிந்துரைத்தார்.

   நாட்கள் செல்ல,செல்ல அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த நவ்ரோஸ் அரை பயித்தியம் போல் ஆகிவிட்டான். அறையின் கண்ணாடி ஜன்னலின் திரைசீலையை விலக்கினால் கொந்தளிக்கும் கடலும்.அலையும் மட்டுமே காண முடியும்.காப்டனிடம் என்னை ஊருக்கு அனுப்புங்கள் என மன்றாடினான். காப்டன் செய்த தவறு அவன் உடல் நலமில்லாமல் ஆனதை எங்கள் நிறுவனத்தில் தெரிவிக்கவேயில்லை. சிக்கன் பாக்ஸ் பதினைந்து நாளில் சரியான பின் அவன் மீண்டும் பணியில் இணைந்துவிடுவான் என உறுதியாக நம்பியிருந்தார்.

   ஒப்பந்த காலம் முடியும் முன்பே வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால். விமான கட்டணம் கொடுத்துதான் செல்ல வேண்டும். கப்பல் தென்ஆப்பிரிக்கவாவின் கேப் டவுன் அருகில் செல்லும்போது பணியாளர் மாற்றத்திற்கு கப்பலை நிறுத்தும் திட்டம் இருந்தது. நவ்றோஸ் சொந்த செலவில் செல்லவேண்டுமென்றால் அவனது இருபது நாள் சம்பளத்தை கொடுக்கவேண்டும்.

    காப்டன் அவனது உடல் நிலையை விளக்கியபோது எங்கள் நிறுவனம் அவனை கேப்டவுனில் இறக்கி மருத்து பரிசோதனை செய்துவிட்டு அடுத்த துறைமுகமான நைஜீரியாயில் பணியில் இணைய சொல்லி உத்தரவு வந்தது.

  இருபத்தியைந்து நாட்களுக்குப்பின் கடந்த வெள்ளியன்று (05 july 2024) பணியாளர் மாற்றத்திற்கு கப்பலை நிறுத்தியபோது நவ்ரோஸ் இறங்கி சென்றான் மருத்துவ பரிசோதனைக்கு.

   அவன் கப்பலில் இருந்து இறங்கும்போது மீண்டும் கொரிய வாட்சில்லா பணியாளர்கள் கப்பலுக்குள் ஏறி வந்தனர். முன்பு சிக்கன் பாக்ஸ் வந்தவர் நவ்றோசிடம் “நீ ஏன் சீக்கிரமாக ஊருக்கு செல்கிறாய்” என கேட்டார்.

  “எல்லாம் உன்னால் தான்” என சொன்னான்.

07-07-2024

At sea 

நாஞ்சில் ஹமீது..

ஆட்டம் கண்ட அலையன்ஸ்

     

              தென்னாபிரிக்காவின் ஒரு துறைமுக நகரம் தான் கேப் டவுன். இவ்வூரை சொல்லும்போதே காந்தியும்,நெல்சன் மண்டேலாவும் நினைவுக்கு வருவார்கள். ஆப்ரிக்காவின் தென்பகுதியில் உள்ள தென்ஆப்ரிக்காவில்  இந்தியாவின் cape comerin போல வளைந்த பகுதியில் இருப்பது கேப் டவுன் நகரம்.

 கிழக்கில் இந்தியபெருங்கடலும் , மேற்கில் தென் அட்லாண்டிக் கடலாலும் சூழ்ந்துள்ளது. ஜூன் பத்தொன்பதாம் தேதி இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கு சொந்த ஊருக்கு அருகிலுள்ள தகேஜ் துறைமுகப்பில் சரக்கை இறக்கியபின் நைஜீரியா செல்லும் உத்தரவு வந்தது. இருபத்தியாறு நாள் பயணம்.

   மே ஆறாம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், குஜராத்துக்கும் நான்கு முறை  போய் வந்தோம். நாற்பது நாட்களில் எட்டு துறைமுகம் என்பது கிணற்றில் தண்ணீர் ஊற,ஊற எடுப்பது போல.கப்பல் காரனின் சக்தியை துளியும் மிச்சமில்லாமல் பிழிந்தெடுப்பது மிகக்குறுகிய பயணங்கள். ஒவ்வொரு நான்கு நாட்களிலும் துறைமுகம் கூடவே கடும் கோடை,தலை பொசுங்கிவிடும் சுட்டெரிக்கும் வெயில்.

  நீண்ட பயணத்தை காப்டன் சொன்னதுமே உடலும்,உள்ளமும் ஓய்வுக்கு தயாரானது. சோம்ராஜ் கேட்டான் “அங்கயும் இது போல சூடா இருக்குமா” என.“அங்க இப்ப வின்டர் தொடக்கமாக்கும்” என்றார் போசன்.  செல்லும் வழியில் கேப்டவுனில் பணியாளர் மாற்றம்,உணவுபொருட்கள் தருவித்தல்,உதிரிபாகங்கள் வாங்குதல் போன்றவை திட்டமிடப்பட்டது.

   பயணம் தொடங்கிய மூன்றாவது நாள் ஞாயிறாக இருந்ததால் முழு ஓய்வு கிடைத்தது நீண்ட இடைவெளிக்குப்பின். நைஜீரியா எங்கோ தூரத்தில் இருந்ததால். செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு போதிய நேரமும் அவகாசமும் இருந்ததால் எந்த அழுத்தமும் இல்லை. காலை எட்டு முதல் ஐந்து வரை பணி என சாதாரண நாட்கள். பெரும்பாலும் மதியம் மூன்றரைக்கு மேல் எனக்கு பணியே இல்லாத நாட்கள்.

   துறைமுகம் விட்ட எட்டாவது நாளே கடும் கடல் சீற்றமும்,கொந்தளிப்புமாக இருந்தாள் கடலம்மா. கடும் காற்று காரணமாக டெக் பணியாளர்கள் இரு தினம் குடியிருப்புக்குள்ளேயே  வேலை செய்தார்கள்.வெளியே செல்ல அனுமதியில்லை. காலையில் எல் என் ஜி மோட்டார் அறை மற்றும் கம்ப்ரசர் அறைக்கு நான் சென்றே ஆக வேண்டும் என்பதால் மிக எச்சரிக்கையாக சென்று வந்தேன்.

   இருதினங்களுக்குப்பின் கடல் சாந்தமானது. வெப்பம் வெகுவாக குறைந்தது. இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் கடலில் எழுந்த பேரலைகளும், கடும் காற்றும் முன்னூறு மீட்டர் நீளமுள்ள இந்த பெருங்கலத்தையே சுழன்றடிக்க வைத்தது. அறையின் பொருட்கள் அனைத்தையும் மேஜை பெட்டிகளுக்குள் போட்டேன். கப்பல் ரோல்லிங்கில் அவை வலமும்,இடமும் உருண்டோடி மரப்பலகையில் இடித்து எழும் சப்தம் கேட்டு இடைவெளி இல்லாமல் இறுக்கி வைத்தேன்.

ஆடி,ஆடி அசைந்து  தூக்கமே பிடிக்காமல் நெடுநேரத்திற்கு பின் கண்சொருகும் நேரம் ஏதாவது ஒரு பொருள் உருண்டு,ஓடி,இடித்து எழும் ஓசை தூக்கத்தை கலைக்கும். அது எந்த பொருள்,எந்த மேஜை டிராயரில்  என கண்டுபிடித்து துணியை போட்டு அசையாமல் வைத்துவிட்டு தூக்கத்திற்கும்,விழிப்பிற்கும் இடையில் கண்மூடி இரவை கழித்து காலையில் டான்ஸ் ஆடிக்கொண்டே எழுந்தேன்.

   பின்னர் தான் அறிந்தேன் கப்பலில் பலரும் இந்நாட்களில் படுக்கையை தவிர்த்து சோபாவில் தான் துயில்கின்றனர் என. அதன் நீளம் குறைவாக இருப்பதால் தரையில் கம்பளியை விரித்து கப்பலின் குறுக்குவாக்கில் படுத்துக்கொண்டேன். ஆம் தூங்கவும் செய்தேன்.

   மடகாஸ்கர் தாண்டி கேப் டவுனுக்கு வளைந்து திரும்பி மேலேறுகையில் கப்பலின் ஆட்டம் குறையவேயில்லை. ஜூலை ஐந்தாம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு கேப்டவுனில் கப்பலை நிறுத்தி பொருட்கள் ஏற்றுவதும் பணியாளர் மாற்றமும் நடக்கும். மூன்று மணி நேரம் போதும் என்றார் காப்டன். முந்தைய நாள் மதியத்திற்கு மேல் எங்களனைவருக்கும் ஓய்வு தரப்பட்டது. மறுநாள் அதிகாலையே விழிக்கவேண்டியிருந்ததால். இரு தினங்களுக்கு முன் ஜெனரேட்டர் ஒன்றில் ஏற்பட்ட பழுதால் இருநூறு லிட்டர் அளவுள்ள முப்பது எண்ணெய் பீப்பாய்கள் வருவதும் உறுதியாகியது.நான்காம் தேதியே வரவேண்டிய கப்பல் கடல் சீற்றம் காரணமாக ஒரு நாள் தாமதமானது.

   கேப் டவுனுக்கு தயாராகும் பொருட்டு இரவு எட்டரைக்கே படுத்துவிட்டேன். அதிகாலை மூன்று மணிக்கே விழித்திருந்தேன். அதற்கு முன்பும் கப்பலின் ஆட்டத்தால் இரு முறை விழித்தேன்.கழிப்பறையின் தண்ணீர் வாளி அறை சுவரில் இடித்து எழுப்பிய சப்தத்தால்,குளியலறையின் சோப்பு விழுந்து எழுப்பிய சப்தம் என.

   மூன்றரை மணிக்கு ஆகாயத்திலிருந்து விழுந்தது போல எழும்பிய பெரும் ஓசை நெஞ்சில் இடி இறங்கியது போல் கேட்டது. அலைகளுக்கு ஏற்ப கப்பலை திருப்ப முயற்சித்தபோது எழுந்த பேரலை கப்பலை தூக்கி கீழே அடித்தது தான் காரணம். நெஞ்சில் இடி இறங்கிய அந்த ஒரு சப்தம் அனைவருக்கும் நினைவு இருந்தது.

    ஐந்தே முக்காலுக்கு ராம் அழைத்தார். “அண்ணே ஸ்டோர்ஸ் ஹெல்ப் பண்ண கூப்பிறாங்க” என. அழைப்பை நோக்கி காத்திருந்த நான் அடுத்த பதினாறாவது நிமிடத்தில் டெக்கில் இருந்தேன். பாட்டீல்,தலேர் சிங்,போசன் முதன்மை அதிகாரி,மோட்டர்மேன் அஸ்பக்,ஜெர்ரி,வைப்பர் ஜோ, காடேட் ஜேம்ஸ் ஆகியோர் டெக்கில் இருந்தனர். “பாட்டீல் ரொம்ப சீக்கிரமே வந்துட்டா” எனக்கேட்டார். “இப்போது தான் அழைப்பு வந்தது” என்றேன். லேசான காற்றுடன்,மெல்லிய குளிரும் இருந்ததால் அனைவரும் வெப்ப ஆடைகளை அணிந்திருந்தோம்.

  அவர்களை காலை நான்கு மணிக்கே  அழைத்து கப்பலின் முன் பகுதியில் இருந்து அறுபது காலி ட்ரம்களை கொண்டு வந்து  கப்பலின் நடுப்பகுதியில் வைத்திருந்தனர். கப்பலுக்கருகில் பொருட்களுடன் வந்த சிறு படகு கப்பலுடன் அணையாமல் தத்தளித்து கொண்டிருந்தது. கப்பலுக்கு வரவேண்டிய ஐந்து மாற்று பணியாளர்கள், வாட்சில்லா நிறுவனத்தின் கொரிய டெக்னீசியன்கள் ஐவர் படகில் இருந்தனர்.

   கப்பலிலிருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் அலைகளில் சிக்கி மேலும்,கீழும்,வலமும்,இடமும் என கள்ள சாராயம் குடித்தவன் போல் தள்ளாடிக்கொண்டிருந்தது படகு.

   அரை மணிநேரத்திற்கு பின் தலேரிடம் கேட்டேன் “இந்த குளுத்திக்கி சூடா ஒரு சாயா குடிச்சா எப்டி இருக்கும்” என.

 “நானும் அதான் நினைச்சேன், ஆனா இந்த ரோல்லிங்ல எப்டி சாயா போடுது”

அஸ்பக்  “ஒரு மணிக்கூரா போட் கிட்ட வர முடியாம சுத்திகிட்டே இருக்கு வா போவோம்” என அடுமனைக்கு அழைத்து சென்றார். கப்பலை நிறுத்தியிருந்ததால் இருபது டிகிரிக்கு மேல் ரோல்லிங் இருந்தது. அடுமனைக்குள் ரைமுண்டோ புர்ஜி போட உடைத்த பதினேழு முட்டைகள் சிதறி தரையில் கொட்டி கிடந்தது. தள்ளாடிக்கொண்டே “பேகன் சூத் மேரா அண்டா கெயா, க்யா ரோல்லிங் ஹை ரே” என சிதறிய பாத்திரங்களை ஒவ்வொன்றாக கிடைத்த இடங்களில் சொருகி கொண்டிருந்தார்.

   இஞ்சி,ஏலக்காய்,பால்,சீனி கலந்து  அடுப்பில் வைத்த பாத்திரம் ஓடாமல் பிடித்து வைத்து  சாயா போட்டு பிளாஸ்கில் ஊற்றி இறுக்கமான இடத்தில் சொருவிவிட்டு குடித்த சூடான சாயா உடலில் பரவி குளிருக்கு சுகத்தை தந்தது. டெக்கிலிருந்து ஒவ்வொருவராக சாயா குடிக்க உணவுக்கூடம் போய் வந்தனர்.மணி எழரையை தாண்டிய பின்பும் படகு அருகணைய முடியவில்லை. இருள் விலகி மெல்லிய வெளிச்சம் கப்பலுக்குள் வரத்தொடங்கியது.

      ஜெர்ரியும்,ஜோவும் காலைவுணவுக்கு சென்றனர். ப்ரிட்ஜிலிருந்து மூன்றாம் அதிகாரி ரவுப் போர்ட் சைடில் ஏணியை போட சொன்னார். பின்னர் சிறிது நேரம்  கழித்து ஸ்டார்போர்ட் சைடில் ஏணியை தயார் செய்யுங்கள் என்றார். பொருட்கள் ஏற்றி வந்த படகுகாரர்  சொல்வதை முதன்மை அதிகாரிக்கு உத்தரவுகளாக சொல்லிகொண்டிருந்தார்.அதற்கேற்ப போசனும் குழுவினரும் கப்பலின் போர்ட்,ஸ்டார்போர்ட் சைடுகளுக்கு பூனை போல சுற்றி கொண்டிருந்தனர். இப்போது இரு பக்கமும் ஏணி தயாராக இருந்தது.

 எட்டுமணிக்கு தலேர் சின் என்னிடம் “நாஸ்டா ஓஹையா க்யா? எனக்கேட்டான். “இல்லை” எனச்சொன்னதும். “போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வா இது எவ்வளவு நேரம் ஆகும் என தெரியாது” என்றான்.

   எட்டுமணிக்கு மேல் படகு ஸ்டார் போர்ட் சைடில் கப்பலுடன் அருகணைய முயற்சித்தது இரண்டு மீட்டருக்கு மேல் எழுந்த அலையில் மேலும் கீழும் என அலைகளிக்கபட்டது. பெரிய இரு அலைகளுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டு வந்த ஒரு சிறிய அலையில் அருகணைந்த படகிலிருந்து ஏணியில் தாவி ஏறி, இரும்பு காங்க்வேயில் ஏறி கப்பலுக்குள் வந்தார் ஹரியானாவின் விகாஸ்.

      மேலும் பத்து நிமிடம் கழித்தே ஏணியில் தாவும் வாய்ப்பு கிடைத்தது காஸ் இஞ்ஜினியரான லக்னோவின் அருணுக்கு. மூன்றாவதாக காத்திருந்த இந்தோனேசியாவின் நான்காம் இஞ்சினியர் தும்பாக் ஏணியில் தாவ இயலவேயில்லை.இரையை கொண்டு செல்லும் எறும்பு கூட்டங்கள் போல  இடைவெளியில்லாமல் பேரலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது.

   படகுகாரர் பொருட்களை ஏற்றுவோம்.அலைகள் குறைந்ததும் ஆட்களை அனுப்புகிறேன் என்றார்.கப்பலின் பின் பகுதியில்தான் பொருட்களை இறக்கி எங்களால் அடுமனைக்கும், டெக்,இஞ்சின் ஸ்டோர்களுக்கு கொண்டு செல்ல முடியும். கப்பலின் பின் பகுதி உள்பக்கமாக வளைந்து இருப்பதால் கப்பலின் அடிப்பகுதிக்கு செல்லும் படகு அலையில் மேலெழுந்து கப்பலில் இடித்து உடையும் அபாயம் உண்டு அதனால் கப்பலின் நடுப்பகுதியில் உள்ள கிரேனை கீழே இறக்க சொன்னார்கள்.

   கடும் ஆட்டத்தில் கீழே சென்ற கிரேன் கொக்கியில் பொருட்கள் அடங்கிய பெட்டியை சுற்றிய அதிக எடையை தாங்கும் கயிற்றின் முனையிலுள்ள கொக்கிகளை மாட்டி மேலே தூக்கினர். கிரேன் கொக்கியில் மூன்று கயிறுகளை கட்டி முன்பும்,பின்பும்,பக்கவாட்டிலும் என மூவர் பிடித்து  காற்றின் போக்கில் கட்டுப்பாடில்லாமல் ஆடும் பெட்டியின் ஆட்டத்தை குறைக்க முயற்ச்சித்தது பலனளிக்கவில்லை.

 கப்பலின் பக்கங்களில் இடித்தும், உரசியும் ஒவ்வொன்றாக மேலேறி வந்தது. அலை குறைந்தபோது எலக்ட்ரிகல் ஆபிசர் சுஷ்மாண்டோவும்,இரண்டாம் இஞ்சினியர் அலெக்ஸ் தர்சனும் மேலேறி வந்தனர். குட்டி யானையை போல இருந்த தும்பாக் நீரில் முக்கிய கோழி போல சோர்ந்து வந்து சேர்ந்தான். ஜேம்ஸிடம் சொல்லி உணவுகூடத்துக்கு தும்பாக்கை அழைத்து செல்ல சொன்னேன்.

  சப்பாத்தி மாவு,மைதா பைகள் கிழிந்து டெக்கில் கொட்டி கால்கள் பட்டு நீல நிற டெக் வெண்மையாக மாறியது.  அவ்வப்போது வந்த பெரிய அலைகளில் டெக்கில் வைத்த பொருட்களும் உருண்டோட தொடங்கியது. சக்கரம் பொருத்திய வண்டிகளில் பொருட்களை அடுக்கி உடனடியாக கப்பலின் பின்புறத்தில் கிடைத்த இடத்தில் எல்லாம் வைத்து கட்டினோம்.

   இருபத்தி எட்டு எண்ணெய் பீப்பாய்கள் கயிற்று வலையில் கட்டி மேலே எடுத்தோம் சிலமுறை டெக்கில் ட்ரம்கள் இடித்த போதும் உடையாதது அதிர்ஷ்டம். ஐந்து லிட்டர் அளவில் உள்ள பெயின்றுக்கான கார்ட்னர்கள் பெருபாலும் உடைந்து கொட்டி விட்டது. இறுதியாக வாட்சில்லா பணியாளர்கள் பன்னிரெண்டு மணிக்கு மேலேறி வந்தனர். படகிலேய வாந்தி எடுத்து சோர்ந்துபோய் இருந்தனர்.

   மீன்,இறைச்சி,பழங்கள்,காய்கறிகள்,பிரட்,ஐஸ்க்ரீம்கள் உடனடியாக அடுமனையின் குளிரூட்டிகளில் கொண்டு செல்லப்பட்டது.கிடைத்த இடைவெளிகளில் ரைமுண்டோவும்,ஜானியும் மதிய உணவையும் தயார் செய்தனர். 

   ஊருக்கு செல்லும் ,லாரன்சும்,ஹபிக்கும் படகில் இறங்கியதுமே வாந்தி எடுத்து பின் படுத்து கொண்டதாக பத்தி சாபும், நவ்ரோசும் சொன்னார்கள். இயந்திர அறைக்கான உதிரி பாகங்கள், பணியாளர்களின் பயண பைகள் மேலே வந்தபின் உடைந்த இயந்திர பாகங்களை அடைத்திருந்த பெரிய பெட்டி ஒன்றை கீழே இறக்கினோம். இருமுறை கவிழ்ந்து கடலில் விழாமல் தப்பித்து படகின் பலகையில் அமர்ந்தது. படகின் போக்கு குழாயில் ஒரு சிறு சொட்டல் மட்டும் விழுந்தது.மிக திறைமையான படகு பணியாளர்கள் கயிறுகளை பிடித்தும், விலகி ஓடியும் பொருட்களை இறக்கினர்.

   ஒன்றரை மணிக்கு மேல் ஆபத்தான ஆப்ரேசன் முடிந்ததாக முதன்மை அதிகாரி சொன்னார். உடனே இஞ்சின் இயக்கப்பட்டு கப்பல் நகர தொடங்கியது. கப்பலின் நடுப்பகுதியில் இருந்த பொருட்களை போசனிடம் சொல்லி அங்கேயே கட்டி வைக்க சொன்னார். முதன்மை அதிகாரி காப்டனிடம் இனிமேல் உணவுக்குப்பின் பொருட்களை அப்புறப்படுத்துவோம் என்றார்.

   முதன்மை அதிகாரி,போசன்,இரு ஒ எஸ், இரு மாலுமி, காஸ் இஞ்சினியர், முதன்மை இஞ்சினியர்,இரண்டாம்,மூன்றாம் இஞ்சினியர்கள், மூன்று மோட்டார் மேன்கள்,வைப்பர், பயிற்சி இஞ்சினியர், இரு அடுமனை பணியாளர்கள், பிரிட்ஜில் காப்டன், மாலுமி ஒருவர், நேவிகேசன் அதிகாரி என இருபது பேர் மிக போராடி முடித்த பணி இன்று.

  எனது பத்தொன்பது ஆண்டு கால அனுபவத்தில் ஜப்பானில் கப்பல் பாறையில் மோதி கப்பலின் முன் பகுதி ஓட்டையாகி தண்ணீர் புகுந்தது,இயந்திர அறையின் ஜெனரேட்டர் வெடித்து பெரும் தீ பற்றி எரிந்தபோது பத்து மீட்டர் அருகில் நின்ற நான் தீயனைப்பானை கொண்டு அணைக்க முடியாமல் ஓடி தப்பியது,இன்சிநிரேட்டர் தீ பற்றிய விபத்து, இயந்திர அறையின் தீ விபத்து ஏற்பட்டால் உபயோகிக்கும் கார்பன்டை ஆக்சைடு தவறுதலாக ஒருவர் திறந்துவிட மயிரிழையில் உயிர்பிழைத்த  மிகக்கடுமையான நாட்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் இன்று போல் ஆட்டம் கண்ட,இவ்வளவு கடினமான ஒருநாள் இதற்கு முன் இருந்ததில்லை. 

   O5 july 2024,

நாஞ்சில் ஹமீது.

Sunday 7 July 2024

பணியில் இணைதல்.

 எல் என் ஜி அலையன்ஸ் நாட்குறிப்புகள்

LNG ALLAIANCE 



  கடந்த பிப்ருவரி மாதம் ஜிப்ரேல்டர் வரை வந்து பணியில் இணையமுடியாமல் ஊருக்கு திரும்பிசென்ற இரு தினங்களுக்குப்பின் மும்பை அலுவலகத்தை அழைத்து வேறு கப்பலுக்கு மாற்றசொன்னேன். இருபதாம் தேதி தென் ஆப்ரிக்காவின் கேப் டவுனில் பணியில் இணையலாம் என்றார்கள்.

கப்பல் நைஜீரியாவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் செய்தி கிடைத்தது.பதிமூன்றாம் தேதி நைஜீரிய துறைமுகம் விட்டபின் தென்னாபிரிக்காவை கப்பல் கடக்கும்போது கேப்டவுன் அருகில்  கப்பலின் வேகத்தை குறைத்து கப்பலில் ஏற வேண்டும். எப்போதும் அங்கு கடல் சீற்றமாக இருக்கும் கடல் அது.  கொஞ்சம் ஆபத்துதான் வேறு வழியில்லை போய் தான் ஆகவேண்டும்.

  பிப்ரவரி இருபத்தி நான்காம் தேதி அதிகாலை திருவனந்தபுரத்திலிருந்து கத்தாரின் தோகா வழியாக கேப்டவுனுக்கு விமானம். இருபத்தி மூன்றாம் தேதி இரவு பத்துமணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு என் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மூர்த்தி அண்ணாவின் ஆட்டோவில் வடசேரி பேருந்து நிலையம் சென்று பஸ் ஏறினேன். ஸாலிமும்,ஷல்மானும்  வந்து ஏற்றிவிட்டார்கள். பஸ் எனது வீட்டை தாண்டும்போது சுனிதா எனக்கு கையசைத்தாள்.

    மறுநாள் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி பொங்கலிடும் நாளாக இருந்ததால் பேருந்து நிரம்பியிருந்தது. “போன ட்ரிப்புல ரூட்ட மாத்தி உட்டானுவோ,போறதுக்கு நாலு மணிக்கூர் ஆகிவிட்டது”என்றார் நடத்துனர். எனக்கு அதிகாலை மூன்று ஐம்பதுக்கு விமானம்  இரண்டு மணிக்குள் விமான நிலையத்தில் இருந்தாக வேண்டும். சாலை காலியாக இருந்ததால் ஒரு மணிக்குள் திருவனந்தபுரம் போய் சேர்ந்துவிட்டேன்.

  தம்பி ஜானகி ஒரு மணிக்கு மேல் வந்து என்னை அழைத்து சென்றான். விமான நிலையத்தில் பணிபுரிவதால் அவனது அடையாள அட்டையை காண்பித்து சகாய விலையில் சுலைமானி குடித்துவிட்டு என்னை அனுப்பி வைத்தான்.

   சிறு நகரங்களிருந்து புறப்புடுகையில் எளிதாக இருக்கிறது.அதிக கூட்டமில்லை. இணையத்தில் இருக்கை பதிவு செய்திருந்ததால் வரிசையில் நிற்காமல் எளிதாக பயண பைகளை போட்டு விட்டு,குடியுரிமை,பாதுகாப்பு சோதனைகளை கடந்து விமானம் புறப்படும் வாயிலின் அருகில் சென்று பயண தொழுகையை தொழுதுவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தூங்கிவிட்டேன். குடியுரிமை அதிகாரி “கடந்த முறை எங்கிருந்து இறங்கி வந்தாய்” என்ற ஒரு கேள்வியை மட்டும் கேட்டார்.

   விமானம் சரியாக நான்கு மணிக்கு வானத்தில் பறக்க தொடங்கியது. நான்கு மணிநேர பயணம் தோகாவிற்கு. நான் அதிக முறை வந்த விமான நிலையம் இதுவாக்கதான் இருக்குமென நினைக்கிறேன்.   விமான நிலையத்தில் இருந்த தொழுகையறைக்கு சென்று காலை நேர பஜர் தொழுகையை ஜமாத்தாக நிறைவேற்றினேன்.


     பிரபுல் மற்றும் ரைமுண்டோ கேப்டவுன் செல்லும் வாயிலில் காத்திருந்தனர். மூவருமாக பேசிகொண்டிருந்ததால் காத்திருப்பு நேரம் விரைவாக கடந்து விமானம் ஏறும் நேரம் வந்தது. பத்து மணி நேர பயணம், இரு முறை நல்ல உணவும்,குடிக்க தேநீர்,பழச்சாறுகள் தந்தனர். நீண்ட நேர பயணம் கொண்ட கத்தார் ஏர்வேஸில் எப்போதும் உணவு நன்றாக இருக்கும்.

     கேப் டவுனில் மாலை மூன்று மணிக்கு மேல் இறங்கியது விமானம். இரு படங்கள் பார்த்தேன்.இப்போதெலாம் சினிமா பார்ப்பது விமான பயணத்தில் தான்.

  ஐந்தரை அடிக்குமேல்  குண்டான கறுப்பின  பெண் குளிரை தாங்கும் வெப்ப ஆடைகளை அணிந்து எங்கள் பெயர் எழுதிய அட்டையை பிடித்துகொண்டிருந்தாள். வேறு கப்பலுக்கு செல்லவேண்டிய பிலிப்பினோ மாலுமிகள் சிலர் வருவதற்காக காத்திருந்தோம்.சுற்றியிருந்த கூட்டத்தை மறந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறிய இளம் பெண்ணை உதடுகள் அழுந்த முத்தமிட்டு கொண்டேயிருந்தான். மனைவி ஒரு மாதம் தாய் வீட்டிற்கு சென்றிருப்பாள் போல.

குடியுரிமை அதிகாரி எங்களது கப்பல் நிறுவன கடிதத்தை பெற்றுகொண்டு ஸீ மேன் புக்கை பார்வையிட்டு ,பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து தந்தார்.கேள்விகள் ஏதும் இல்லை.சுங்க அதிகாரி எங்கள் பைகளை சோதிக்கவே இல்லை கிரீன் சானலில் வெளியேறினோம்.

  மெல்லிய குளிரில் வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டோம்.வழியிலேயே முகவர் பெண் இறங்கிகொண்டாள்.அரை மணிநேர பயணத்தில் விடுதியை அடைந்தோம். நீராடி,உடை மாற்றியபின் சுனிதாவிற்கு தகவல் சொன்னேன்.இரவுணவுக்கு சென்று ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தோம். முக்கால் மணி நேரத்திற்குப்பின் எங்கள் உணவுகள் மேஜைக்கு வந்தது. உண்டு முடிக்கும்போது ஒரு ஒன்றரை மணிநேரம் ஆனது. உணவுகள் அனைத்து எதிர்பார்த்ததைவிட அளவுகள் அதிகமாக இருந்தது. “வயிறு அடைத்து விட்டது” என்றார் ரைமுண்டோ. எனக்கும் அப்படித்தான் இருந்தது.

       இரவு தொழுகையை முடித்துவிட்டு தூங்கவிட்டேன். நீண்ட பயணத்திற்குப்பின் உடல் சுத்தமாகி வயிறும் நிறைந்ததால் இரவில் நல்லுறக்கம். காலையில் தாமதமாக விழித்தேன்.

  காலை உணவுக்குப்பின் நாங்கள் மூவரும் கேப்டவுன்  சாலையில் ஒரு நீண்ட நடை சென்றோம்.வயிறு லேசாகியது மதியம் மீண்டும் சாப்பிட்டோம்.உணவக்கதில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என தெரிந்ததால் ஒரு மணிக்கு முன்பாகவே சென்று ஆர்டர் கொடுத்தோம். மூன்றரை மணிக்கு எங்களை அழைத்துச்செல்லும் காரோட்டி வருவதாக சொன்னதால்.பைகளுடன் வரவேற்பறைக்கு வந்தோம்.

  என்னுடன் சிங்கப்பூர் எனெர்ஜி கப்பலில் பணிபுரிந்த கொரியாவின் முதன்மை இஞ்சினியர் சாய் நின்றுகொண்டிருந்தார். என்னை நினைவிருந்தது அவருக்கு பெயர் சொல்லி அழைத்தார். அந்த கப்பலில் பணிமுடிந்து செல்லும்போது காஸ் பிட்டருக்கு பரிந்துரை செய்து கடிதம் கேட்டேன். தர இயலாது என சொன்னதாக இரண்டாம் இஞ்சினியர் அப்போது சொன்னார்.நான் அடுத்த கப்பலிலேயே காஸ் பிட்டராக பதவி உயர்வு பெற்று சென்றேன். 

    விடுதியிலிருந்து துறைமுக குடியுரிமை சோதனை மற்றும் அனுமதிகள் பெற்று எங்கள் முகவர் அலுவலகத்தை அடைந்தோம். கப்பல் வருவது தாமதமாகிறது எனவே ஒரு மணிநேரத்திற்குப்பின் படகில் புறபட்டால் போதும் எனக்கூறினார்.

    கப்பல் கேப்டவுன் துறைமுகத்திற்கு  வராது. கேப்டவுன் வழியாக கரையிலிருந்து நாற்பது மைல் தொலைவில் சென்றுகொண்டிருக்கும் கப்பலில் படகில் சென்று ஏற வேண்டும். கடல் கொஞ்சம் சீற்றமாக இருந்தது. தத்தளித்து கொண்டே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணித்தபின் கப்பலை கண்டோம். நைஜீரியாவில் முழுமையாக சரக்கு நிறைக்கப்பட்ட கப்பல் வேகம் குறைத்து மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தபோது படகு அருகணைந்து  தேர்ந்த சர்க்கஸ் காரனை போல ஏணிகளில் தொத்தி ஏறி டெக்கில் போய் சேர்ந்தோம்.

    உணவு பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களை படகிலிருந்து கிரேன் மூலம் ஏற்றியபின் எங்கள் பயணபைகளும் வந்து சேர்ந்தது.கேரளாவின் தினேஷ் டெக்கில் நின்றிருந்தார்.அங்கேயே கை குலுக்கி விடைபெற்று கொண்டார். பணிகள் குறித்து போனிலேயே சொல்லியிருந்தார்.இங்கே காஸ் இஞ்சினியர் இருப்பதால் பார்துக்கொள்ளலாம் என நானும் எதுவும் கேட்கவில்லை.

  2018 ஆம் ஆண்டு எனெர்ஜி ஒர்பஸ் எனும் கப்பலில் அவரை விடுவித்துள்ளேன். அறையை மிக சுத்தமாக பராமரிப்பவர். முதல் நாள் இரவில் சுத்தபடுத்தாமலேயே அறைக்குள் தூங்க இயலும்.ஞாயிறு இரவாததால் தூங்கி காலையில் விழித்து.  பணியாடைகள் மற்றும் காலணியை பெற்றுகொண்டு பணிக்கு சென்றேன்.

  என்னுடன் சிங்கப்பூர் எனெர்ஜி கப்பலில் பணிபுரிந்த மாலுமி பிலிப்பினோ ஜோயல் மற்றும் கொரிய காப்டன் கிம் தெரிந்தவர்களாக இருந்தனர். கொரியன்,மலேசியன்,பிலிப்பினோ,ஸ்ரீலங்கன் மற்றும் இந்தியர்கள் பணிபுரியும் கப்பல் இது.

நாஞ்சில் ஹமீது.

26.feb.2024.