Saturday 22 June 2019

தாயை இழந்த சோலங்கி

கப்பல் காரன் டைரி
                        தாயை இழந்த சோலங்கி                 
    கடந்த பத்தாம் தியதி இரவு ஒன்பது மணிக்கு மேல் ஸ்பெயினின் தாராகுணாவிலிருந்து புறப்பட்டோம்.கப்பல் கரையிலிருந்து விலகுகையில்  கதிரணைந்து கொண்டிருந்தது வெண்மேகங்களில்
செங்கதிர்கள் பட்டு செந்நிறத்தில்  இருந்தது .பனிரெண்டு நாள்  பயணத்திற்கு பின் இப்போது அமெரிக்காவின் பிலேதெல்பியா அருகிலுள்ள மார்க்ஸ் ஹூக் துறைமுகத்தை நெருங்கிவிட்டோம் .

இம்முறை பயணம்அதிக கடினமில்லை கடைசி இருதினங்கள் மட்டும் கடும் காற்று வீசியது .நேற்று நாற்பது மைல்வேகத்தில் காற்று வீசியதால் டெக் பணியாளர் யாரும் வெளியில் செல்லவில்லை குடியிருப்பு பகுதியில் பணி வழங்கப்பட்டது அவர்களுக்கு .அதிகாலை நான்கு  மணிக்கு உள்ளூர் பைலட் வந்தபின் காலை பத்துமணிக்கு கப்பல் துறைமுகத்தில் கட்டப்படும் என அறிவிப்பு பலகை சொல்லியது. கப்பல் புறப்பட்டபின் முதல் நான்கு நாள் இணையம் இல்லை .பின்னர் இருதினங்கள் இணையம் வந்தது மீண்டும் இருதினங்கள் இல்லாமலாகியது .

    நேற்று முன்தினம் மாலைமுதல் கப்பலில் இணையம் இல்லை .சில நேரம் நெட்வொர்க் இருக்காது.
(பெரும்பாலான காப்டன்கள் கப்பலுக்கான செய்திகளை இணையம் வழியாக அனுப்பும்போது கப்பல் பணியாளர்களுக்கான இணைப்பை துண்டித்துவிடுவர்.அவரது பணி முடிந்தபின் இணைப்பை கொடுக்காமலே சென்றுவிடுவார் .இரவு தூங்க சென்றால் யாரும் அவரை தொந்தரவு செய்யமுடியாது .காலை அவர் எழுந்து கப்பலின் வீல் ஹவுசிலிருக்கும் இளம் அதிகாரியை அழைத்து கப்பலின் வேகம் ,அலையின் உயரம் ,காற்றின் வேகம் ,கப்பல் போகும் திசை , புயல் அறிவிப்பு பற்றிய செய்திகள் அனைத்தையும் கேட்டறிந்துவிட்டு .பல் தேய்த்து ,மெஸ் மேனை அழைத்து ஒரு சாயா குடித்துவிட்டு,கக்கூஸ் போய் ,குண்டி கழுவிவிட்டு பத்துமணிக்கு மேல் அடுமனைக்குள் வந்து சமையல்காரருக்கு சில உத்தரவுகளை கொடுத்துவிட்டு ,தனக்கு வேண்டியதை செய்யசொல்லி வயிறு நிமிர தின்னுவிட்டு .பைய மேல போய் ரேடியோ அறையில் தனக்குள்ள கணினியில் அன்று வந்திருக்கும் செய்திகளை பார்ப்பார் .பின்னரும் மறந்து பணியாளர்களுக்கான இணைய இணைப்பை இணைக்காமலே மதிய உணவுக்கு செல்லும் கப்பல் தலைவன்களும் உண்டு )

  நேற்று  மதிய உணவின் போது  என்னெதிரில் அமர்ந்திருந்த குஜராத் டீயு நகரில் வசிக்கும் ஐமபத்தி எழு வயதான திலிப்குமார் நதொட் சோலங்கியிடம் .”எல்லாம் மிக சரியாக போகிறதா” என கேட்டேன் . “ஆம் எவரிதிங் ஓகே சாகுல்” என்றார் .மதிய உணவு இடைவேளை முடிந்து பணிக்கு செல்லும்போது உடை மாற்றும் அறையில் காலனி அணிந்து கொண்டிருக்கும்போது  டிமெல்லோ என்னிடம்  “ஷாகுல் சோலங்கியின் தாய் இறந்துவிட்டார்” என்றார் . உடனே சோலங்கியை பார்க்க அவரது அறைக்கு சென்றேன் .அப்போதுதான் லூயி அவரிடம் துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்தார் .
சோலங்கி 
 
தொண்ணூற்றியைந்து  வயதான தனது தாய் இந்திய நேரப்படி காலை ஒன்பது மணிக்கே இறந்துவிட்டார் என்றார் .எங்கள் கப்பலின் கடிகாரம் இந்தியாவைவிட எட்டரை மணிநேரம் பின்னால் இருக்கிறது .கப்பலில் இணையம் இல்லாததால் அவருக்கு தாயின் மரண செய்தி வரவில்லை . இதுபோல் அவசர காலங்களில் எங்கள் நிறுவன அலுவலகத்தில் தகவல் தெரிவித்தால் உடனே கப்பலுக்கு தெரியபடுத்துவார்கள்.

 சோலங்கயிடம் கேட்டேன் “உங்கள் மகனிடம் சொல்லி உடனே மும்பை அலுவலகத்துக்கு தெரிவித்திருந்தால் உடனே கப்பலுக்கு மின்னஞ்சல் வந்திருக்குமே” என கேட்டேன் .மகன் பணிபுரியும் அஹமதாபாத் அலுவலகத்தில் உள் நுழையும்போது செல்போன் உட்பட அனைத்து உடமைகளையும் வைத்து பூட்டிவிட்டு பணி சீருடையில் உள் செல்லவேண்டும் ,எனவே எனது தாய் இறந்த செய்தி மாலை ஐந்து மணிக்குத்தான் மகனுக்கும் தெரியவந்தது என்றார்.
சோலங்கி என்னிடம்  தனது தாய் கடைசிவரை கண் கண்ணாடி அணியவில்லை .ஐந்தாண்டுகளுக்கு முன் கண் கொஞ்சம் மங்கலாக இருக்கிறது என்றபோது .கண் பரிசோதனைக்கு அழைத்தேன் ,இன்னும் கொஞ்ச காலம் சமாளித்து கொள்கிறேன் என்றார் .காது நன்றாக கேட்கும் ஒருகுறையும் இல்லை .இரண்டாண்டுகளுக்கு முன் வரை தானே அருகிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்று வருவார் .கடந்த நான்கு நாட்களாக உணவதும் உட்கொள்ளாமல் படுக்கையிலேயே இருந்துள்ளார் .நேற்று காலை அழைப்பு வந்துவிட்டது அவருக்கு .

  நான் வரும்போது சொல்லிவிட்டு வந்தேன் நான் ஊரில் இருக்கும்போதுதான் உனக்கு மரணம் வரும் என,.நான் நினைத்தது போல நடக்கவில்லையென கண் கலங்கினார் .கருவில் சுமந்து ,முலையூட்டிய அன்னையை கடைசியாக ஒருமுறை காணகிடைக்கவில்லை எனும் பெருந்துயர் அது .

 இரவுணவுக்குப்பின்  எட்டு மணிக்கு முன்பாக சோலங்கியின் அறைக்கு நானும் நீலேஷ் தண்டேலும்  சென்றோம் .நீலேஷ் பணியிலிருந்ததால் அவரை சந்திக்கவில்லை.சோலங்கியின் அறை கதவை தட்டும்போது அவர் துயில தொடங்கியிருந்தார் . .”அதிகாலை மூன்று மணிக்கு பைலட் வருவதற்கான ஏணியை தயார் செய்ய செல்லவேண்டும்,நான்கு மணிக்கு பைலட்” என்றார். .சோலங்கி நீலேசுடன்  குஜராத்தியில்
பேசிக்கொண்டிருந்தார்.என்னிடமும் குஜ்ராத்தியிலேயே பேச ஆரம்பித்தார் அந்த சூழ்நிலையை நன்கறிவதால் அவர்கள் பேசியது எனக்கு புரிந்தது .நீலேசும் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பணிக்கு செல்லவேண்டுமென்பதால் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு வநதுவிட்டோம் .

 பத்து மணிக்கு மேல் துயில சென்றேன் .அதிகாலை மூன்றரைக்கே விழித்து விட்டேன் .பல் தேய்த்துவிட்டு அறையிலிருந்து வெளியே சென்றேன்..தேய் நிலவு  கீழ் வானில் இருக்க ,நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தது ,காலை பஜர் தொழுகைக்கு இன்னும் அரைமணிநேரம் இருப்பது உறுதியானது .லேசான அலை இருந்ததால் பைலட் வரும் படகு கப்பலுடன் அருகணைய முடியாமல் தத்தளித்துகொண்டிருந்தது .நெடுநேரம் கப்பலுக்கு இணையான வேகத்தில் வந்துகொண்டே இருந்தது .அலையின் வேகம் குறைந்த தருணத்தில் மிக சரியாக படகு அருகணைந்ததும் அமெரிக்க பைலட் கப்பலின் ஏணி வழியாக மேலேறி வந்தார் .
மென் குரிளிரில் வெப்ப ஆடை அணிந்திருந்த சோலங்கியும் ,லூயியும் ஒரு கயிற்றை படகில் வீசி பைலட்டின் உடைமைகளை மேலேற்றினார்.உக்ரைன் நாட்டின் காடேட் விக்டர் பைலட்டை அழைத்து செல்ல ,லூயி அவரது பையுடன் வந்தார் .இருளில் நின்றிருந்த என்னைக்கண்டதும் “நேரத்தே எழிச்சா”என கேட்டார் .

 இன்றும் கப்பலில் இணையம் இல்லை .பத்து மணிக்கு மேல் மார்க்ஸ் ஹூக் துறைமுகத்தை நெருங்கினோம் பனிரெண்டு மணிக்கு முன்பாக கப்பலின் கயிறுகளை கரையில் கொடுத்து அதற்கான  தூண்களில் கரை பணியாளர்கள் இணைத்ததும் கப்பல் அசையாமல் நின்றது .அதிகாலை நான்கு மணிக்கு வந்த பைலட்டை அழைத்து செல்ல படகு அருகணைந்து கொண்டிருந்தது , ஷ்யாம் தண்டேல் அவரது பைகளுடன் சென்று கொண்டிருந்தான் .குஜராத் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள வல்சாட் கடற்கரை நகரில் வசிப்பவர்கள் தண்டேல்கள் .எல்லா கப்பல்களிலும் ஒரு தண்டேலாவது இருப்பான் .டீயு நகரில் இருப்பவர்கள் சோலங்கிகள் ரமேஷ் சோலங்கி ,மோகன் சோலங்கி என .

 22-june -2019,
ஷாகுல் ஹமீது .
sunitashahul@gmail.com

No comments:

Post a Comment