இன்று அதிகாலையே கப்பல்காரன் டைரியின் வாசகரும்,நண்பருமான சேலம் பிரகாஷ். “அண்ணா உங்களுக்கு ஓட்டு போடமுடியுமா? கப்பலில் இருப்பதால் எதெல்லாம் இழக்கிறீர்கள்”என கேட்டார்.
எனது வாப்பா காங்கிரஸ்காரர் பள்ளியில் படிக்கும்போது தேர்தல் சமயத்தில் ஆட்டோவிலும் ,ஜீப்பிலும் மைக்கில் சொல்லும் பிரச்சாரத்தை கேட்டுள்ளேன் சுவாரசியாமாக இருக்கும்.சுவர் விளம்பரங்களை படிப்பேன்.(சூரியன் உதிக்காது,கறந்தபால் மடிபுகாது,காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்பன) சிறுவனாக இருந்தபோது. எனது கிராமத்திற்கு தலைவர் எம் ஜி ஆர் ,ஜெயலலிதா,வை கோ ஆகியோர் வந்துள்ளனர் மிக அருகில் பார்த்திருக்கிறேன்.
குளச்சல் எனது சட்டமன்ற தொகுதி ஆ.பாலையா அவர்கள் ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நேர்மையான காங்கிரஸ்காரர் அவர். காங்கிரசின் கோட்டையாக குமரிமாவட்டம் இருந்த காலம் அது.
பதினெட்டு வயது பூர்த்தியாகி முதல் முறை ஒட்டு போட்டது சின்னவிளை பள்ளியில். மணவாளக்குறிச்சியில் தான் ஓட்டு எனக்கு. அது பாராளுமன்ற தேர்தல் மறைந்த வாஜபேயி பிரதமரானார்.பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை உறுப்பினராகி,இணையமைச்சராவகவும் இருந்தார்.
மும்பையில் பணிசெய்தபோது ஊருக்கு வந்து ஓட்டு போட்டுவிட்டு திரும்பி செல்ல ரயிலுக்கு கையில் பணமில்லாததால் வரவில்லை. 2005ஆம் ஆண்டு கப்பல் பணியில் சேர்ந்தபின் பெரும்பாலும் எல்லா தேர்தலின் போதும் கப்பலிலேயே இருக்கிறேன்.
கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சட்டமன்ற,பாராளுமன்ற தேர்தலின்போது மட்டுமே வாக்களித்த நினைவு இருக்கிறது.கடந்தமுறை ஊராட்சிமன்ற தேர்தல் நடந்தபோது ஊரில் இருந்ததால் மணவாளக்குறிச்சி சென்று பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தேன்.நான் வாக்களித்தவர் வெற்றிபெற்றார்.
இப்போது நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை உள்ளது. ஸ்காட் பள்ளி வாக்குசாவடி மையம். கடந்த சிறப்பு வாக்களர் பட்டியல் திருத்தம்செய்தபோதும் எனது வாக்குரிமையை தக்க வைத்துக்கொண்டேன்.
கப்பல்காரர்களுக்கு ஓட்டு மட்டுமில்லை பெரும்பாலான பண்டிகைகள்,குடும்பத்தில் நிகழும் அனைத்து விசேஷங்களும் போட்டவாக மட்டுமே கிடைக்கும். ஒருமுறை கப்பலில் விடுமுறை விண்ணபித்த ஒருவரிடம் காரணம் கேட்டார் காப்டன். அண்ணனின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என பதில் சொல்ல. உனது திருமணம் இல்லையே என சொல்லி சிரித்துவிட்டு கப்பல் நிறுவனத்துக்கு விடுமுறை விண்ணபத்தை அனுப்பிவைத்தார்.
கடந்த பத்து ஆண்டுகளாக எரிவாயு ஏற்றும் டாங்கர் கப்பல்களில் பணிபுரிகிறேன். சோமாலிய கப்பல் கடத்தல்காரர்களிடம் துப்பாக்கி சண்டையில் தப்பித்து நாங்கள் கொண்டுவரும் காஸ் தான் உங்கள் வீடுகளில் அடுப்பெரிகிறது.
தற்போது நடக்கும் போரினால் நிலைமை இன்னும் மோசம். கப்பல்கள் தாக்கபடுவது கவலையை தருகிறது. உலக பொருளாதாரதிற்கு முதுகெலும்பாக இருக்கும் கப்பல் கார்களின் உயிருக்கு ஆபத்தான நேரமிது. இன்றும் இரு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.ஹோர்முஸ் மூடியே இருப்பதால் ஏராளமான கப்பல்கள் சிக்கியுள்ளது அதில் பணிபுரியும் பணியாளர் நிலைமை இன்னும் மோசம். உணவும் தண்ணீரும் பற்றாகுறை இருக்கிறது. அந்த கப்பல்களை வெளியே செல்ல அனுமதித்துவிட்டு சண்டை போடுங்கள் என போர் செய்யும் தலைவர்களை வேண்டுகிறேன்.
இன்றும் மாலுமிகள் சார்பாக பாரத பிரதமருக்கு கடிதம் எழுத சொல்லி எங்கள் சங்கம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்த நிலைமையில் ஊருக்கு சென்று ஓட்டு போடுவதை கப்பல்காரர்கள் எண்ணவே இயலாது.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே கப்பல் மாலுமிகளுக்கு இணையவழி தபால் ஓட்டு செலுத்த சில முயற்சிகள் நடக்கிறது. அப்படி அது நடந்தால் தமிழ்நாட்டில் சில ஆயிரம் ஓட்டுகளும் இந்தியாவில சில லட்சம் ஓட்டுகளும் பதிவாக வாய்ப்பு உள்ளது.
கப்பல்களில் இப்போது இணையம் மேம்பட்டுள்ளதால் கீழ்த்தரமான தேர்தல் பிராச்சாரங்களை ஊடகங்கள் மூலம் அறியும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் தமிழகத்தில் நடந்த தேர்தல் திருவிழாவை காணக்கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம்தான்.
நாஞ்சில் ஹமீது,
21 april 2026

















