Wednesday, 22 April 2026

கப்பல் காரன் ஓட்டு யாருக்கு.

 



   இன்று அதிகாலையே கப்பல்காரன் டைரியின் வாசகரும்,நண்பருமான சேலம் பிரகாஷ். “அண்ணா உங்களுக்கு ஓட்டு போடமுடியுமா? கப்பலில் இருப்பதால் எதெல்லாம் இழக்கிறீர்கள்”என கேட்டார்.

 எனது வாப்பா காங்கிரஸ்காரர் பள்ளியில் படிக்கும்போது தேர்தல் சமயத்தில் ஆட்டோவிலும் ,ஜீப்பிலும் மைக்கில் சொல்லும் பிரச்சாரத்தை கேட்டுள்ளேன் சுவாரசியாமாக இருக்கும்.சுவர் விளம்பரங்களை படிப்பேன்.(சூரியன் உதிக்காது,கறந்தபால் மடிபுகாது,காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்பன) சிறுவனாக இருந்தபோது. எனது கிராமத்திற்கு தலைவர் எம் ஜி ஆர் ,ஜெயலலிதா,வை கோ ஆகியோர் வந்துள்ளனர் மிக அருகில் பார்த்திருக்கிறேன்.

குளச்சல் எனது சட்டமன்ற தொகுதி ஆ.பாலையா அவர்கள் ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நேர்மையான காங்கிரஸ்காரர் அவர். காங்கிரசின் கோட்டையாக குமரிமாவட்டம் இருந்த காலம் அது. 

  பதினெட்டு வயது பூர்த்தியாகி முதல் முறை ஒட்டு போட்டது சின்னவிளை பள்ளியில். மணவாளக்குறிச்சியில் தான் ஓட்டு எனக்கு. அது பாராளுமன்ற தேர்தல் மறைந்த வாஜபேயி பிரதமரானார்.பொன்.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை உறுப்பினராகி,இணையமைச்சராவகவும் இருந்தார்.

  மும்பையில் பணிசெய்தபோது ஊருக்கு வந்து ஓட்டு போட்டுவிட்டு திரும்பி செல்ல ரயிலுக்கு கையில் பணமில்லாததால் வரவில்லை. 2005ஆம் ஆண்டு கப்பல் பணியில் சேர்ந்தபின் பெரும்பாலும் எல்லா தேர்தலின் போதும் கப்பலிலேயே இருக்கிறேன்.

   கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சட்டமன்ற,பாராளுமன்ற தேர்தலின்போது மட்டுமே வாக்களித்த நினைவு இருக்கிறது.கடந்தமுறை ஊராட்சிமன்ற தேர்தல் நடந்தபோது ஊரில் இருந்ததால் மணவாளக்குறிச்சி சென்று பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தேன்.நான் வாக்களித்தவர் வெற்றிபெற்றார்.



இப்போது நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்குரிமை உள்ளது. ஸ்காட் பள்ளி வாக்குசாவடி மையம். கடந்த சிறப்பு வாக்களர் பட்டியல் திருத்தம்செய்தபோதும் எனது வாக்குரிமையை தக்க வைத்துக்கொண்டேன்.

   கப்பல்காரர்களுக்கு ஓட்டு மட்டுமில்லை பெரும்பாலான பண்டிகைகள்,குடும்பத்தில் நிகழும் அனைத்து விசேஷங்களும் போட்டவாக மட்டுமே கிடைக்கும். ஒருமுறை கப்பலில் விடுமுறை விண்ணபித்த ஒருவரிடம் காரணம் கேட்டார் காப்டன். அண்ணனின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என பதில் சொல்ல. உனது திருமணம் இல்லையே என சொல்லி சிரித்துவிட்டு கப்பல் நிறுவனத்துக்கு விடுமுறை விண்ணபத்தை அனுப்பிவைத்தார்.

  கடந்த பத்து ஆண்டுகளாக எரிவாயு ஏற்றும் டாங்கர் கப்பல்களில் பணிபுரிகிறேன். சோமாலிய கப்பல் கடத்தல்காரர்களிடம் துப்பாக்கி சண்டையில் தப்பித்து நாங்கள் கொண்டுவரும் காஸ் தான் உங்கள் வீடுகளில் அடுப்பெரிகிறது.

தற்போது நடக்கும் போரினால் நிலைமை இன்னும் மோசம். கப்பல்கள் தாக்கபடுவது கவலையை தருகிறது. உலக பொருளாதாரதிற்கு முதுகெலும்பாக இருக்கும் கப்பல் கார்களின் உயிருக்கு ஆபத்தான நேரமிது. இன்றும் இரு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.ஹோர்முஸ் மூடியே இருப்பதால் ஏராளமான கப்பல்கள் சிக்கியுள்ளது அதில் பணிபுரியும் பணியாளர் நிலைமை இன்னும் மோசம். உணவும் தண்ணீரும் பற்றாகுறை இருக்கிறது. அந்த கப்பல்களை வெளியே செல்ல அனுமதித்துவிட்டு சண்டை போடுங்கள் என போர் செய்யும் தலைவர்களை வேண்டுகிறேன்.

  இன்றும் மாலுமிகள் சார்பாக பாரத பிரதமருக்கு கடிதம் எழுத சொல்லி எங்கள் சங்கம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்த நிலைமையில் ஊருக்கு சென்று ஓட்டு போடுவதை கப்பல்காரர்கள் எண்ணவே இயலாது.

 ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே கப்பல் மாலுமிகளுக்கு இணையவழி தபால் ஓட்டு செலுத்த சில முயற்சிகள் நடக்கிறது. அப்படி அது நடந்தால் தமிழ்நாட்டில் சில ஆயிரம் ஓட்டுகளும் இந்தியாவில சில லட்சம் ஓட்டுகளும் பதிவாக வாய்ப்பு உள்ளது.

 கப்பல்களில் இப்போது இணையம் மேம்பட்டுள்ளதால் கீழ்த்தரமான தேர்தல் பிராச்சாரங்களை ஊடகங்கள் மூலம் அறியும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் தமிழகத்தில் நடந்த தேர்தல் திருவிழாவை காணக்கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம்தான்.

 நாஞ்சில் ஹமீது,

21 april 2026

Tuesday, 7 April 2026

தொடரும் போர் பதட்டம் ....

   


   மார்ச் மாதம் ஆறாம் தேதி நைஜீரியாவின் போனி துறைமுகப்பில் கரையணைந்து அறுபத்தி இரண்டாயிரம் மெட்ரிக் டன் (LNG) மீத்தேனை நிரப்பினோம். கப்பல் நைஜீரியா செல்லும் முன்பே அந்த சரக்கை சீனாவுக்கு கொண்டு செல்ல தகவல் வந்தது. மறு நாளே சீனா இல்லை கொரியாவின் இன்சொன் செல்ல வேண்டும் என்றார்கள்.

  மத்திய கிழக்கில் போர் தொடங்கியிருந்த நேரம். எண்ணெய் மற்றும் LPG,LNG கப்பல்களுக்கு அதிக வாடகையில் சவாரி கிடைத்த நேரம். உலகெங்கும் எரிஎண்ணெய்,திரவ வாயுக்கள் தேவைக்கு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் டாங்கர் கப்பல்களுக்கு கிராக்கி அதிகமாயிற்று.



உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடான கத்தாரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சவுதியின் ரஸ்த நூறா எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் குண்டுவீச்சில் நாசாமனது. ஹோர்மூஸ் கால்வாயை ஈரான் மூடியதால் குவைத்,ஈராக்,சவூதி போன்ற நாடுகளிலிருந்து எண்ணையை உலகுக்கு விநியோகிப்பதில் தடை ஏற்பட்டது. இஸ்ரேல்,அமெரிக்க முதலாளிகளுக்கு சொந்தமான கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்டன. அங்கு பெரும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

ஹோர் முஸ் 


 கப்பல் போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. கத்தாரின் கத்தார் ஏர்வேஸ் உலகின் நூறுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விமான சேவை வழங்குகிறது. தோகாவிலிருந்து இந்தியாவின் தில்லி,மும்பை,சென்னை,ஹைதராபாத்,பெங்களூர்,கோவா,கொச்சி,திருவனந்தபுரத்திற்கு தினமும் விமான சேவை அளிக்கும் ஒரு பெரிய நிறுவனம்.அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய,தென்ன்னமரிக்க நகரங்களையும் இணைப்பார்கள். அதுபோலவே துபாயை மையமாக கொண்டு இயங்கும் எமிரேட்ஸ்,அபுதாபியிலிருந்து இயங்கும் எதிகாட் நிறுவனமும் உலகின் அதிக நகரங்களுக்கு விமான சேவை வழங்குபவை. எல்லாம் அடியோடு முடங்கி உலக வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. 

  உலகின் அதிகாரத்திலிருக்கும் தலைவர்கள் மாறி,மாறி குண்டுகளை வீசுவதால் பெரும் அழிவுகள் மட்டுமே மிச்சமாகும். உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து போர் செய்யும் நாடுகளை பேச்சு வார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டுவராமல் ஏன் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

   சூழல் அறிந்த நண்பர்கள் என்னிடம் கேட்டு கொண்டே இருக்கிறார்கள் 

“ஷாகுல் எங்க இருக்கா,கப்பல் இப்ப எங்க பெயிட்டு இருக்கு என”

 நைஜீரியாவில் சரக்கு நிறைத்து புறப்படும் முன் குஜராத்தின் தகேஜ் துறைமுகத்திற்கு செல்லுமாறு பணித்தார்கள். பதினெட்டு நாள் பயணம் உறுதியானது. ஆபத்தில்லாத பாதையில் செல்லலாம். சில தினங்களில் மீண்டும் கொரியா செல்லுங்கள் என்றார்கள். திரவ வாயுவின் விலை உயர்வால். யார் அதிக விலைக்கு சரக்கை வாங்க வாங்குவார்களோ அவர்களுக்கு விற்கும் பொருட்டு எங்களின் சரக்கு இறக்கும் துறைமுகம் உறுதியாகவில்லை.



 இரண்டாம் அதிகாரி அர்ஜுன் “இப்ப எல்லாம் வில கூடி,கூடுதல் பைசா கிட்டுந்த இடத்து கார்கோ கொடுக்கும், டிஸ்சார்ஜ் போர்ட் இதுவர உறபில்லா,இந்தியாயிக்கும் போவாம்” என்றார். இருபதாம் தேதிக்கு பின்னர் இலங்கையை நெருங்கும்போது இந்தியா இல்லை என்பது உறுதியானது. 

 சைனாவா,கொரியாவா எனபது தெரியாமலே பயணம் தொடர்ந்தது. நீண்ட பயணத்தில் ரமலான் விடுமுறை,ஞாயிறுகள் விடுமுறையாக கழிந்தது. கார்கோ டிபார்ட்மெண்ட்டில் இருப்பதால் வார நாட்களிலும் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் நாட்களை கடத்துவது எனக்கு கடினமாகிவிட்டது.

  இந்தோனேசியாவை சுற்றிகொண்டு மேலே சென்றபோது கொரியாவின் பீயோன்டெக் துறைமுகப்பில் சரக்கை இறக்குவது உறுதியாகியது. இருபத்தி ஆறு நாட்களுக்குப்பின் ஏப்ரல் இரண்டாம் தேதி கொரியாவின் யோசூ துறைமுகம் அருகில் கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். கப்பலின் கடிகாரம் எட்டு மணிநேரம் முன்னே நகர்ந்து கொரிய கடிகாரத்துடன் இணைந்து கொண்டது.

  பழங்கள்,பச்சை காய்கறிகள் முற்றிலும் ஒழிந்து உணவுபொருட்கள் பெரும்பாலும் தீர்ந்துபோயிருந்தது.கப்பலுக்கு தேவையான எரிஎண்ணெய் முன்னூற்றியைம்பது டன்,உணவு பொருட்கள்,உதிரி பாகங்கள் என நிறைத்தோம். இரு கொரிய ஆய்வாளர்கள் கப்பலுக்கு வந்திருந்தனர். சில சோதனைகளை முடித்து சான்றிதழ் பெற வேண்டும். காஸ் டிப்பார்ட்மெண்ட் ஆய்வு ஆதலால் ஆய்வாளருடன் இரவு முழுவதும் எனக்கு பணிஇருந்தது.

  நான்காம் தேதி மாலை ஆறு மணிக்கு கப்பல் கொரியாவில் கரையணைந்து சரக்கு இறக்கும் பணியை துவங்கினோம்.மதியம் மூன்று மணி தொடங்கி நள்ளிரவு பன்னிரெண்டு மணிவரை எனக்கு வேலை. ஐந்தாம் தேதி மதியமே அறுபதாயிரம் மெட்ரிக் டன் திரவ வாயுவை கொடுத்து முடித்தோம். கொரியாவிடம் எரிவாயு தட்டுபாடு இல்லை ஆனாலும் அதிக விலைகொடுத்து வாங்கி சேமிப்பில் வைக்கிறார்கள் என உள்வட்டார தகவல்கள் கிடைத்தது.

 இருபத்திஎட்டு நாட்கள் நீண்ட பயணம் முடிவுக்கு வந்தது. உலகின் ஒரு பகுதியில் கப்பல் போக்குவரத்து முடங்கி போயிள்ளது. ஹோர்முஸ் கால்வாயை கடக்க முடியாமல் எழுநூறுக்கும் அதிகமான கப்பல்கள் சிக்கியுள்ளது. காப்பீடு நிறுவனங்கள் கப்பல் தாக்கபட்டால் பணம் தராது அதுவே காரணம். அதிக பிரீமிய தொகை செலுத்தி கப்பலை ஆபத்தான பகுதியில் நகர்த்த கப்பல் நிறுவனங்கள் தயாராக இல்லை. முப்பது நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில்,குடிநீர் போக மற்ற தேவைகளுக்கு நீர் இல்லை. கக்கூஸில் கடல் நீரை ஊற்றி சமாளிக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் போர் தொடர்ந்தால் அந்த பணியாளர்களின் உணவும் கேள்விக்குறிதான்.

   ஐந்தாம் தேதி மாலை நான்கு மணிக்கு முன்பாகவே கப்பல் கயிறுகளை அவிழ்த்துவிட்டு புறப்பட்டது ஆஸ்திரேலியாவின் கிளாஸ்ட்சன் துறைமுகம் நோக்கி. நாங்கள் நைஜீரியாவிலிருந்து புறப்பட்ட போதே அடுத்து சரக்கு நிறைப்பது கிளாஸ்ட்சன் என உறுதியாகியிருந்தது. பன்னிரெண்டு நாள் பயணம். அங்கு ஏற்றும் சரக்கை மீண்டும் கொரியா அல்லது வியத்நாமில் கொடுக்கவேண்டியிருக்கும். நண்பர்களே அடுத்த ஒரு மாதத்துக்கான எனது பயண பாதை போர் ஆபத்தில்லாத பகுதியில்தான் என இப்போதே உறுதியாகியுள்ளது.

  நாஞ்சில் ஹமீது,

07 april 2026.

sunitashahul@gmail.com

Friday, 20 March 2026

ரமலான்- இந்திய பெருங்கடலில்



நோன்பு பெருநாள் 2021

நோன்பு பெருநாள் 2024

நோன்பு பெருநாள் 2025

ரமலான் நோன்பு 29 முடிந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறை தென்பட்டதால் பெருநாள் வெள்ளிக்கிழமை என அறிவிக்கப்பட்டது. கேரளாவிலும் இன்று ரமலான் (ஈதுல் பித்ர்) கொண்டாடபடுகிறது.இம்முறையும் அனைத்து நோன்புகளும் இருக்கும் பாக்கியம் கிடைத்தது. வரும் ஆண்டுகளிலும் இதே ஆரோக்கியத்தை இறைவன் தந்தருள் புரிவானாக.



   மூன்றாம் அதிகாரி தேஜஸ் தினந்தோறும் சூரிய உதய,அஸ்தமன நேரத்தை கணக்கிட்டு தந்தார். இப்தார் மற்றும் சகர் நேரங்களை கணக்கிட பேருதவியாக இருந்தது.


  மத்திய கிழக்கு நாடுகளில் குவைத்,கத்தார்,பஹ்ரைன்,சவூதி அரேபியாவில் நேற்று ரமலான் நோன்பு முப்பது நிறைவடைந்தது.போர் சூழல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் பெருநாள் சிறப்புதொழுகைக்கு மைதானங்களில் அனுமதி இல்லை ஜிம்மா தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்களில் மட்டுமே பெருநாள் தொழுகை என அறிவிகபட்டது. அதிகாலை ஈதுல் பித்ர் தொழுகையும் அங்கே விரைவாக முடித்துள்ளனர்.தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும்,இந்தியா,மலேசியா,புருனே நாடுகளில் நாளை ஈதுல் பித்ர் கொண்டாடப்படும்.

 கப்பலில் நான்,இந்தோனிசிய மூன்றாம்இஞ்சினியர்,மலேசிய காஸ் இஞ்சினியர் நோன்பு வைத்திருந்தோம்.எனக்கும் இன்று ரமலான். காலை குளித்து புத்தாடை அணிந்து அறையிலேயே இரண்டு ரக்காத் சுன்னத் தொழுதேன்.

  இன்று முழுநாளும் ஓய்வு அறிவிக்கப்பட்டது. கல்கத்தாவின் சமையல்காரர் சந்தீப் மண்டேல்,பிரியாணியும்  சேமியா பாயாசம் வைத்திருந்தார்.

   கப்பல்துறையில் இருப்பவர்களுக்கு  எந்த பண்டிகையும் இல்லை என்றே சொல்லலாம். அதிசயமாக நிலத்திலும் சிலருக்கு பண்டிகைகள் கிடைக்காமல் ஆகிவிடுகிறது. அரபு தேசம் ஒன்றில் பணிபுரியும் என் உறவினர் ஒருவர் பணிசெய்யும் இடத்தில் பெருநாள் தொழுகைக்கு பள்ளிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை வருத்ததுடன் சொன்னார்.

 எனது இளைய சகோதரன் கத்தார் ஆயில் ரிக்கில் பணிபுரிகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் போர் காரணமாக திரும்பிசெல்ல முடியாமல் இருந்தார். இன்று காலை சரியாக பதினோரு மணிக்கு அவருக்கு கத்தார் செல்ல கொச்சியிலிருந்து பயண சீட்டு வந்ததால். நேற்றிரவே வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

  2022ஆம்  ஆண்டு சிங்கப்பூர் எனெர்ஜி எனும் கப்பலில் இருந்தபோது இந்தோனேசிய,மலேசிய அதிகாரிகள் நிறையபேர் இருந்தோம். காப்டன் இமாமாக நின்று கொத்பாவும்,தொழுகையும் நடத்தினார். கப்பலில் கிடைத்த ஒரே ஒருநாள் பெருநாள் தொழுகை அது. வழக்கமாக கப்பலில் நான் மட்டுமே இஸ்லாமியனாக இருப்பேன் பெருநாள் கடந்து போவதே தெரியாது. பணி நாளாக இருக்கும். இன்று ஓய்வு ஆதலால் பணிக்கு செல்ல வேண்டாம்.

 கடந்த ஆண்டு இருந்த கப்பலில் காப்டனின் மனைவி இருந்தார் பெருநாளன்று அவரே அதிக சிரத்தையுடன் சிறப்பு உணவுகள் தயாரித்து உணவுகூடத்தை பலநாள் உழைப்பில் அலங்கரித்து  பெருங்கொண்டட்டமாக மாற்றினார். அப்போதே அவரிடம் சொன்னேன். “இருபது வருட கப்பல் வாழ்வில் இந்த பெருநாள் என்றும் நினைவில் நிற்கும் நாளாக மாத்தீட்டீங்க”என. இன்று காப்டனின் மனைவி துருவி பெருநாள் வாழ்த்து அனுப்பியிருந்தார். கடந்த ஆண்டின் பெருநாள் உங்களால்தான் மறக்கமுடியாத நாளாக அமைந்தது என குறிப்பிட்டிருந்தார்.

  சுனிதாவும் மகன்களும்,உறவுகளும் இன்று காலை பள்ளிவாசலில் பெருநாள் தொழுதுவிட்டு புகைப்படங்களை அனுப்பிருந்தனர். டெக்னாலஜி உச்சத்தில் இருப்பதால் விடியோ காலில் பேசவும் உலகெங்கும் இருக்கும் உறவுகள், நண்பர்களின் வாழ்த்தும் எளிதாக கிடைக்கிறது.அதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கிறது.

  சென்னையில் வாழும் இளையவள் கிருத்திகா தன் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் இஸ்லாமியர்களுடன் பேச வைத்தார். ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

இனிமேல் இரு வேளை உணவை மட்டுமே எடுத்து கொள்வதாக இருக்கிறேன்.பழக்கத்தால் மட்டுமே மூவேளை உண்கிறோம்.அதனால் தான் கழிவுகள் அதிகமாக உடலில் சேர்கிறது.கழிவுகள் அகன்று விட்டால் நோயே இல்லை.

கப்பல் காரனின் ரம்ஜான் என முந்தைய பதிவுகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

2021 ஆம் ஆண்டில் பதினந்து வருட பெருநாள் அனுபவங்கள் உள்ளன. இந்த பதிவின் துவக்கத்தில் அந்த சுட்டி உள்ளது.

  நாஞ்சில் ஹமீது,

20 march 2026.

sunitashahul@gmail.com

Sunday, 15 March 2026

பாதை மாறும் பயணம் விலையேறும் எண்ணெய்

 


போர் பதட்டம் அச்சுறுத்தல் இருப்பதால் நண்பர்கள் பலரும் தொடர்ந்து விசாரித்துகொண்டே இருக்கின்றனர். இத்தனை மனிதர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் அவர்களின் அன்பு மகிழ்ச்சியையும் தந்தது.

    ஹோர்முஸ் வளைகுடாவில் தொடர்ந்து கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதில் சில இந்திய மாலுமிகளும் இறந்தனர். பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டியில் ஏற்றிய சரக்கை பிரான்ஸில் 22 ஆம் தேதி இறக்கியபின் அங்கிருந்து பன்னிரெண்டு நாள் பயணத்துக்குப்பின் நைஜீரியாவின் போனி துறைமுகத்தை அடைந்தோம்.

  அங்கே சரக்கு நிறைக்கும்முன் சைனாவுக்கு செல்ல உத்தரவு வந்தது மறுநாளே இல்லை கொரியா செல்லுங்கள் என்றார்கள். போனியில் ஒருலட்சத்து  நாற்பத்திஓராயிரம் மெட்ரிக் டன் எல்என்ஜி நிறைத்து முடித்தபோது இந்தியாவின் குஜராத்துக்கு செல்ல பணித்தார்கள்.

  கப்பல்களின் பயண பாதை போர் காரணமாக மூடப்பட்டுள்ளதால் குறிப்பாக எண்ணெய்,காஸ் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் உலக சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

 விலையேற்றம் நாளுக்கு நாள் மாறுகிறது. மீண்டும் எங்கள் கப்பலை கொரியாவின் இன்சொன் போக சொல்லியிருக்கிறார்கள். நைஜீரியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா,இலங்கை,சிங்கை வழியாக செல்வதால் கப்பலின் பயண பாதையில் எங்கும் போர் பதட்டம் இப்பொது இல்லை.

  கப்பலில் பணி ஒப்பந்தம் முடிந்து ஊருக்கு செல்பவர்கள் உண்டு.அதற்காக கப்பலை தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் அருகில் ஒருமணிநேரம் நிறுத்தி பணியாளர் மாற்றம் செய்ய விடுத்த கோரிக்கையை சரக்கை கையாளும் நிறுவனம் மறுத்தது.எங்கும் நில்லாமல் முழுவேகத்தில் இந்தியாவிற்கு செல்லுமாறு. ஆனால் இப்போது பயண பாதை மாறிக்கொண்டே இருக்கிறது.

 எனினும் சரக்கை இறக்குவது கொரியாவா?என்பதில் எந்த உறுதியும் இல்லை.யார் அதிக பணம் தருகிறார்களோ அவருக்கு இந்த எரிவாயு விற்கப்படும். எனவே பயண பாதை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் நிச்சயாமாக போர் நடக்கும் பகுதிக்கு கப்பல் இப்போது செல்லாது என்பதில் நிம்மதி.



ரமலான் நோன்பு இன்றோடு இருபத்தியைந்து நாட்கள் நிறைவடைகிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கிறது ரமலான் நம்மை விட்டு விலகி செல்ல.

நாஞ்சில் ஹமீது,

15 march 2026.

sunitashahul@gmail.com

Saturday, 14 March 2026

வெடித்து சிதறும் கப்பல்கள் - கடிதம் டெய்சி

 


சரியான நேரத்தில் நல்ல ஒரு பதிவு. விலையுயர்ந்த கார்களை பாண்டிச்சேரியில் பதிவு செய்தால் ஏதோ வரி குறையும் என்று அங்கு செய்வதுபோல கப்பல்களுக்கும். பதிவு செய்வதில் இருக்கும் கட்டாயமான வழிமுறைகள் என்பது அதன் பாதுகாப்பிற்காகத்தான் இல்லையா? ஆனால் அந்த நச்சுப்பிடித்த வேலையை ஏன் செய்துகொண்டு என்று பனாமா போன்ற நாடுகளில் பதிவு செய்து சட்டம் இயற்றுபவர்களை, பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்துபவர்களை எல்லாம் முட்டாள்கள் ஆக்கி கப்பல் சொந்தக்காரர்கள் மிகப்பெரும் புத்திசாலிகளாகிவிடுகிறார்கள். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்திற்கு நெறி கட்டுவது போல இந்த பாதிப்புகள். குரூட் ஆயிலில் இருந்து பிளாஸ்டிக் வருகிறதாம் அதனால் அதுவும் கிடைக்காதாம். இப்படிஒன்று, பெட்ரோல் போட வந்த கூட்டத்தை போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தும் அளவிற்கு போய்விட்டது. எங்கு என்னப் பெரிய நிகழ்வுகள் நடந்தாலும் பாதிக்கப்டுவது என்னவோ நம்மைப்போன்றவர்கள்தான். நேற்று சந்தையில் காய்கறிகள் கொள்ளை மலிவு. அதன் ரகசியம் இப்போதுதான் தெரிகிறது.

டெய்சி, திருச்சி 



Friday, 13 March 2026

வெடித்து சிதறும் கப்பல்கள்.


 


   நேற்று நாகேர்கோவில் வடசேரியிலுள்ள குறுகிய சந்தில் இருக்கும் உணவக்கதில் வழக்கமாக சாப்பிடும் ரசவடை கேட்ட ஐயப்பன் தாத்தாவுக்கு “சண்ட நடக்குல்லா,இன்னேலேயிருந்து ரசவட கிடயாது ஒய், இன்னும் ரெண்டுநாள் களிச்சா ஓட்டலுக்கே வராதயும்,கிருஷ்ணன் கோவிலிலேயே படுத்துகிடும்” என பதில் கிடைத்தது.

   “எங்கயோ தூரத்துல ரெண்டு நாடு அடி வெக்கதுக்கு நாப்பது வரியமா நான் தின்ன ரசவட கிடக்க மாட்டேங்கு” என தாத்தா சொன்னாதாக நண்பர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.உலகமயமாக்கலில் ஒவ்வொரு நாடும் பிற நாடுகளை சார்ந்து இருக்கிறோம் என பலருக்கு புரியவில்லை.  ஹோட்டல்கள் மூடப்பட்டதால் கோயம்பேடு சந்தையில்  டன் கணக்கில் காய்கறிகள் குப்பையில் கொட்டபட்டதாக செய்தியில் கண்டேன்.

   பதினான்கு நாட்களாக நடக்கும் அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருவது இப்போது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.ஹார்மோஸ் நீரிணையை ஈரான் முழுவதுமாக அடைத்து விட்டதால் கச்சா எண்ணெய்,எரிவாயு சப்ளை உலகை பாதித்துள்ளது.



  இதனால் எழுநூறுக்கும் மேற்ப்பட்ட கப்பல்கள் நகரமுடியாமல் சிக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான அமீரகத்தின் ஜபல்அலி துறைமுகம் மூடப்பட்டுள்ளது.

  நாமக்கல்லில் ஏற்றுமதியான நான்கு லட்சம் கோடி முட்டைகள் நடுக்கடலில் குஞ்சுபொரிக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பாஸ்மதி அரிசி டன்கணக்கில் தேங்கியுள்ளது.இன்னும் காய்கறி உணவு பொருட்கள் என மொத்த ஏற்றுமதியும் ஆட்டம் கண்டுள்ளது.



  அமெரிக்காவுக்கு சொந்தமான இரு கப்பல்கள் தாக்கப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டது இந்தியர் ஒருவர் பலி எனும் செய்தியை எளிதாக கடந்து செல்கிறோம்.

  நாளுக்குநாள் கழுத்தை நெரிக்கும் சட்டங்களினால் கப்பல் பணி மிக கடினமாதாக மாறிக்கொண்டிக்கும் வேளையில். கடலில் கப்பல்கள் தாக்கப்பட்டு மாலுமிகள் கொல்லப்படுவது கொடுமையின் உச்சம்.

  அமெரிக்கா,இஸ்ரேல் முதலாளிகளின் கப்பல்களை ஈரான் தாக்குகிறது.ஈரானின் கப்பல்களை எதிரிகள் ஏவுகனை வீசுகிறார்கள்.கப்பல் முதலாளி எங்கோ குளிரூட்டப்பட்ட அறையில் செல்போனுடன் அமர்ந்திருப்பார். ஆனால் அந்த கப்பலில் பணிபுரிபவர்கள் பிலிப்பினோ,இந்திய மற்றும் வேறு நாட்டை சார்ந்த மாலுமிகள்.

  கப்பல் முதலாளிக்கு இதில் எந்த நட்டமும் இல்லை. முழுகப்பலுக்கான காப்பீடும் கிடைக்கும். சரக்கு நிறுவனத்துக்கு மொத்த தொகையும் இன்சூரன்ஸ் கிடைத்துவிடும். வயிற்று பிழைப்புக்காக வேலை செய்ய சென்ற மாலுமியின் உயிரிழப்பு அந்த குடும்பத்தின் வாழ்வாதார இழப்பு.

  

  எல்லா துறையைபோலவே கப்பல் துறையிலும் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெரும் முதலாளிகள் பணம் பண்ணுகிறார்கள். செய்திகளில் பார்த்திருப்பீர்கள் பனமா நாட்டு கப்பல் கன்னியாகுமரி அருகே மூழ்கியது அல்லது தரை தட்டியது என.

  உண்மையில் அது பனமா நாட்டு கப்பல் அல்ல. அதன் முதலாளி வேறு நாட்டை சார்ந்தவராக இருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த கப்பல்களில் பெரும்பாலானவை பனமா நாட்டு கப்பல்தான். ஆனால் பனாமாவுக்கு சொந்தமானது அல்ல.

  மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதுபோல் கப்பல்களை பதிவு செய்வது கட்டாயம். அமெரிக்கா,சிங்கப்பூர்,ஜப்பானில் பதிவு செய்தால் கடுமையான சட்டதிட்டங்களை செயல்படுத்தவேண்டும் செலவு அதிகம்.அதனால் பெருமபாலான ஜப்பானிய மற்றும் வேறு நாட்டு முதலாளிகள் பனாமா,லைபீரியா,மார்ஷல் போன்ற நாடுகளில் கப்பல்களை பதிவு செய்து கொள்வார்கள். அந்த விலாசத்தில் பத்துக்கு பத்து ஒரு அறைமட்டுமே இருக்கும். கப்பலை ஜப்பான் அலுவலகத்திலிருந்து இயக்குவார்கள்.

 நான் தற்போது இருக்கும் LNG (இயற்கை எரிவாயு) பசிபிக் சக்சசும் பனாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் தென்கொரியாவிலுள்ள சினோகொர் நிறுவனம். முந்நூறுக்கும் மேற்பட்ட கப்பல்கள் அந்த நிறுவனத்திடம் இருக்கிறது.

 ஜப்பானின் NYK,MOL போன்ற நிறுவனங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் இருக்கிறது. குறைந்த செலவு,சிக்கலில்லாத நடைமுறைகள் போன்ற காரணங்களால் இவ்வாறு பதிவு செய்து கொள்கிறார்கள்.

    கப்பல் மூழ்கினாலும்,கார்கோ மூழ்கினாலும் முதலாளிக்கு எந்த இழப்பும் இல்லை. இழப்பு அதில் வேலை செய்யும் பணியாளனின் குடும்பத்துக்கு மட்டுமே. அவனுக்கும் இனிசூரன்ஸ் இருக்குமே என நீங்கள் எண்ணுவது எனக்கு கேட்கிறது. ஆள் இல்லாமல் பணம் மட்டும் இருந்து என்ன செய்ய.

  மனிதன் அறிவியல்,விஞ்ஞானத்தின் உச்சம் தொட்டது சக மனித உயிரை கொல்வதற்கு தானா.

நாஞ்சில் ஹமீது,

13 march 2026.

sunitashahul@gmail.com.

Monday, 9 March 2026

ரமலான் நோன்பு- இறுதி பத்தில்

 லைலத்துல் ஃகத்ர் இரவு



  கப்பல் இப்போது HRA ஏரியாவை பத்திரமாக கடந்து இந்தியாவை நோக்கி பயணிக்கிறது. போனி துறைமுகம் விட்டபின் ஞாயிறன்று ஓய்வாக இருந்தது. இன்று திங்கள்கிழமை ஹோலி பண்டிகைக்கான விடுமுறை வேண்டி கொரிய முதன்மை இஞ்சினியரும்,மலேசிய முதன்மை அதிகாரி திவ்யனும் விடுத்த கோரிக்கையை காப்டன் ஷின் ஏற்றுகொண்டதால் இன்றும் விடுமுறையாக இருந்தது.

   இரு தினங்களாக குடியிருப்பை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை மாலையில் தான் உணர்ந்தேன் எனவே மாலை ஆறு மணிக்கு மேல் அறையை விட்டு வெளியே சென்று அரைமணி நேரம் நடைபயிற்சி செய்தேன்.எட்டுமணிக்கு சூரிய அஸ்தமன நேரமாக இருந்தது.

இம்மாதம் ராம நவமி,மாஹாவீர் ஜெயந்தி,ஈதுல் பித்ர் என மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வருவதாக இந்தோனேசிய இரண்டாம் இஞ்சினியர் மீட்டிங்கில் சொன்னார். இந்திய அதிகாரிகள் இருக்கும் கப்பல்களில் இது போல் விடுமுறைக்கு சாத்தியமேயில்லை. மலேசிய,இந்தோனேசியர்கள் எப்படி எல்லாம் விடுமுறையை எடுக்காலாம் என யோசிப்பவர்கள் எனவே இம்மாதம் குறைந்தது  மேலும் இரு விடுமுறை நாட்கள் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

   கப்பலின் கடிகாரம் கடந்த மாதம் பத்தொன்பதாம் தேதிக்கு பின் மாறவே இல்லை. பதினாறு நாட்களுக்குப்பின் நேற்று கப்பலின் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னே சென்றது.

ரமலான் நோன்பு துவங்கி பத்தொன்பது நாட்கள் நிறைவடைந்துவிட்டது. எனக்கு எப்போதும் ஏன் நாட்கள் வேகமாக நகருகின்றன என தெரியவில்லை.

    அதிகாலை நோன்பு வைக்க (அத்தாளம்) இரவுணவை எடுத்து வைத்துகொள்வேன். மதியமுள்ள  பச்சை காய்கறி சாலடும். நோன்பு திறக்கும் இப்தாருக்கு ஆப்பிள்,பேரிக்காய்,தர்பூசணி என மதியம் இருக்கும் பழம் வைத்துகொல்வேன். தலைமை சமையற்காரர் நோன்பு துவங்கும்போது ஒரு கிலோ பேரீத்தம் பழம் தந்தார். அறையில் நோன்பு திறந்து தண்ணீர் குடித்து பழம் சாப்பிட்டபின் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு மெஸ் ரூமுக்கு போய் உண்பேன்.



    இதுவரை நான்கு முறை கப்பலில் கஞ்சி வைத்தேன். பிரான்ஸிலும்,நைஜீரியாவின் போனி துறைமுகத்தில் இருந்தபோதும் மிகசரியாக பணியில் இருந்தேன் நோன்பு திறக்கும் வேளையில் பேரீத்தம்பழமும்,சிறு குப்பியில் நீரும் தயாராக கொண்டு சென்றதால் மேனிபோல்டில் நோன்பு திறந்த நாட்கள் அவை.

  நைஜீரிய துறைமுகத்தில் இருந்தபோது மட்டும் அதிக பணியால் ஒரு நாள் மட்டும் கடினமாக இருந்தது. கப்பலில் இந்தோனேசிய மூன்றாம் இஞ்சினியரும்,மலேசிய காஸ் இஞ்சினியரும் நோன்பு வைத்துள்ளனர்.அவர்களை நான் சந்திப்பதே இல்லை எப்போது சகர் மற்றும் இப்தாருக்கு வருகிறார்கள் என தெரியாது.  

 

 நைஜீரியாவை நோக்கி செல்லும்போது மூன்று தினங்கள் காலை எட்டே முக்காலுக்கு சூரிய உதயமாக இருந்தது. சமையற்காரர் காலை ஆறரை மணிக்கு காலை உணவு தயாராகிவிடும் என்றதால் அந்த மூன்று நாட்களும் ப்ரேக் பாஸ்ட் உண்டே நோன்பு வைத்தேன். அந்நாட்களில் அந்தி அணையும் நேரமும் எட்டரைக்கு மேல் இருந்தது.

 


 

       

 புனித ரமலானில் அல்லாஹ்வால் குர்ஆன் முழுமையாக இறக்கபட்டது. அந்த இரவைத்தான்  லைலத்துல் ஃகத்ர் இரவு சொல்லப்படுகிறது.   நபிகள் நாயகம் அவர்களிடம் ரமலானில் எந்த நாளில் லைலத்துல் ஃகத்ர் என சகாபாக்கள் கேட்டபோது கடைசி பத்தில் ஒற்றை படையான ஒரு நாளில் என குறிப்பிட்டார்கள். அதாவது ரமலானின் 21,23,25,27,மற்றும்29வது நாளின் இரவாக இருக்கலாம்.

லைலத்துல் ஃகத்ர் இரவு எண்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு சமம். அதாவது அன்றிரவு நின்று வணங்குவதால் ஆயிரம் இரவு வணங்கியதற்கு சமம். அன்று செய்யும் ஒரு ரூபாய் தானம் ஆயிரம் ரூபாய் தானம் செய்வதை போன்றது. அந்த மேன்மையான இரவை தவறவிடக்கூடாது என்பதால் ரமலான் நோன்பு இருபது முடிந்த அந்த இரவிலிருந்து ஒற்றைப்படையான இரவுகளை லைலத்துல் ஃகத்ர் ஆக எதிர்பார்த்து இருப்பதோடு அதிகப்படியான வணக்க வழிபாடுகளில் ஈடு பட்டு இறைவனிடம் நன்றி செலுத்தியும், பாவ மன்னிப்பும் கேட்க வேண்டும்.

  நாளை இருபதாம் நோன்பு முடிந்தபின்  ரமலானின் இருபத்தி ஒன்றாம் இரவு அது  லைலத்துல் ஃகத்ர் இரவாகவும் இருக்கலாம் எனவே நாளை இரவு முதல் அதிகமான வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் ஃகத்ர் இரவின் நன்மைகள் கிடைத்திட அனைவரும் முயற்சிக்கலாம். ஏக இறைவன் அனைத்தையும் அறிந்தவன்.

 

நாஞ்சில் ஹமீது,

09 march 2026.

sunitashahul@gmail.com