Wednesday, 4 February 2026

டாலஸ்புரம் 2

 



    செந்திலின் வீட்டை சுற்றிலும் கடந்த வாரம் அடுத்த பனிப்புயலின் ஐஸ் இன்னும் உருகாமலே இருந்தது.காலையில் உணவுண்டபின் செந்திலின் மகனை ஒரு வகுப்புக்கு கொண்டு விட்டபின். இந்திய (ஹரேலி)கடை ஒன்றுக்கு சென்று பொருட்களை வாங்கினோம். சின்ன வெங்காயம் முதல் அதிரசம் வரை இங்கே கிடைகிறது.




Frisco வில் இருக்கும் நூலகத்திற்கு சென்றோம். இரண்டு வயது பூர்த்தியாகத குழந்தைக்கு பெற்றோர் புத்தகத்தை கையில் கொடுத்து படங்களை காட்டி கொடுக்கின்றனர்.மிகப்பெரிய நூலகம்.ஒருவர் ஐம்பது புத்தகங்கள் வரை ஒரே நேரத்தில் எடுத்து செல்ல முடியும். சைலண்ட் ரூம் தனியாக இருக்கிறது.மாணவர்கள் அதை பயன்படுத்துகின்றனர். நூல்களை புனைவு, அ புனைவு, வரலாறு,புவியியல் தன் வரலாறு என பிரித்தே வைத்துள்ளனர்.




நமக்கு தேவையான நூலை கணினியில் தேடலாம். ஆசிரியர் ஜெயமோகனின் Stories of true இருக்கிறதா என தேடினோம். அங்கே இல்லை. அந்த சிறுகதை தொகுப்பை அங்கே வைக்க ஆலோசனை சொல்லலாம் என கூறினார் செந்தில்.



 அருகிலிருந்த உணவகத்தில் ஒரு மசாலா சாயா குடித்துவிட்டு,சப்பாத்தியும்,கறியும் வாங்கிகொண்டோம்.இங்கே உள்ள அனைத்து சிறிய,பெரிய வணிக வளாகங்களிலும் ஒன்றிரண்டு இந்திய கடைகள் இருக்கிறது(சாய் பிளவர் ஷாப்,சிந்து சினாக்ஸ்). வகுப்பு முடிந்து காத்திருந்த மகன் சித்தார்த்தை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தோம்.காலையில் செந்திலின் மனைவி சமைத்திருந்த பொங்கல் எனக்கு பசிக்கவேயில்லை.

  அவரது மகள் சாதனாவுக்கு பாலிவுட் நாட்டிய வகுப்பு அதற்கு அழைத்து சென்றுவிட்டு வால்மார்ட் சென்றுவிட்டு திரும்பும்போது சாதனாவின் வகுப்பு முடிந்திருந்தது. மூன்று மணி ஸ்லாட்டுக்கான மாணவர்கள் குவிந்துவிட்டனர். இந்திய பெண் மாஸ்டர் டான்ஸ் கற்றுகொடுக்கிறார்.

 மதியம் மூன்று மணிக்குமேல் பசியில்லாமலே சாப்பிட்டேன்.சித்தார்த் பள்ளி மாணவர்களுடன் நாடக குழுவில் ஸ்டேஜ் மேனேஜராக இருக்கிறார். நாடகத்தின் முக்கிய திரையிடலுக்காக கிளம்பி சென்றார். இங்குள்ள கல்வி முறையில் பாடத்திற்கு வெளியே கலை,இலக்கியம்,விளையாட்டு என அதிகம் கற்றுகொள்ள பிள்ளைகளை பள்ளிகளும்,பெற்றோர்களும் ஊக்குவிக்கிறார்கள்.

    பள்ளி கல்வி முடிந்து கல்லூரி செல்லும்போதே திறைமையானவர்களாகவே நுழைகிறார்கள்.இங்குள்ள கல்விமுறை அப்படி.




மாலையில் நண்பர்கள் நாகர்கோவில் கணேஷ்,பிரதீப் மற்றும் பாலாஜி சந்திக்க வந்திருந்தனர். கப்பல் காரன் டைரியை வாசித்தவர்கள். எனது முதல் வாசகர் சந்திப்பு என்றே சொல்லலாம்.




 ஜெயமோகன்,கப்பல் பணி,தமிழக அரசியல் என இரண்டு மணிநேரம் உரையாடியபின் நண்பர்கள் விடைபெற்று சென்றனர். நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு தூங்க சென்றோம்.

காலையில் தொழுகைக்குப்பின் செந்திலின் குடித்தேன். காலை உணவுக்குமுன் அவரது வீட்டில் பூஜையறையில் அதுவே அவரது அலுவலகம் அனைவரும் அமர்ந்து தியானம் செய்தோம். அவர்களுக்கு ஒரு தியான அறிமுகம். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அடிப்படை தியான பயிற்சிகளை டாலஸ் நண்பர்களுக்கு இலவசமாக சொல்லி தருவதாக உறுதியளித்தேன்.



    நானும் செந்திலும் அவர்களின் குடியிருப்பு பகுதியான windsong raanch community பகுதியில் சுற்றி வந்தோம் இரண்டாயிரம் ஏக்கர் கோழி பண்ணையாக இருந்த இடம் தான் இப்போது குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கே பறந்து விரிந்த நிலம் அதிகமாக இருப்பதால் இருவழி சாலை போல அகலமான தெருக்கள். குடியிருப்பில் எங்கும் கடைகளே இருக்காது. ஆசிரியர் ஜெயமோகன் நண்பர்களுடன் வந்து நடந்து போய் டீ குடிக்க விரும்பினால் முடியாது. சில மைல்கள் காரில் பயணித்து வணிகவளாகம் சென்றால்தான் ஒரு காப்பி கிட்டும்.



  இந்த குடியிருப்பு வாசிகள் பயன்படுத்த நீச்சல்குளம,சமைத்து உண்ண பார்பிகியூ அடுப்புகள் அனைத்தும் கம்முனிடி செய்து கொடுத்துள்ளது. குளிர் காலமாதலால் யாரும் இப்போது அங்கே வரவில்லை.

   நண்பர் கணேஷ் மதிய உணவிற்கு வீட்டிற்கு அழைத்திருந்தார். தை பூசம் ஆதலால் சைவம் மட்டுமே என சொல்லியிருந்தார். செந்திலின் வீட்டிலிருந்து மிக அருகிலேயே கணேசின் வீடு. சப்பாத்தி,நெய் சோறு,பன்னீர் டிக்கா,வெஜிடபிள் குறுமா,தயிர் உள்ளி என சுவையாக உண்டபின் அரிசி கீர் ஒன்றும் தந்தார்.

கணேஷின் குடும்பம்


   வீட்டிலிருக்கும் ஒரு வயது குட்டியான ஸ்கை எனும் பெண் நாயை அறையில் பூட்டியிருந்தனர். கணேசின் மகன் ஆதித்யா ஸ்கையை பார்க்க அழைத்தான். கணேஷ் அறைக்கு வெளியே கொண்டுவந்தார்.

   நான்கு விடைபெற்றோம்.2012 இல் என்னுடன் தோஹா – ஹூஸ்டன் விமானத்தில் பயணித்த பாலக்காட்டு மாமி உஷா இங்கே ப்ரிஸ்கோவில் வசிக்கிறார். “சாயா குடிச்சிட்டு போலாம் ஆத்துக்கு வாங்கோ”என அழைத்திருந்தார். அவரது மகன்கள் சிறுவர்களாக இருக்கும்போது சேட்டை பசங்களாக விமானத்தில் பார்த்ததுபதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. மிக ஆவலோடு சந்திக்க காத்திருந்ததால் உஷாவின் இல்லத்திற்கு சென்றோம்.

பிங்க் ஆடை உஷா கண்ணாடி அணிந்தவர் ராமசந்திரன்


  உஷாவின் வீட்டிற்கு முன் ஐஸ் இன்னும் உருகாமல் இருந்ததால் மிக கவனமாக வரச்சொன்னார். உஷாவின் கணவர் ராமச்சந்திரனை இப்போது தான் பார்க்கறேன். மகன் தேஜஸ் கல்லூரியில் படிக்கிறான்.இளையவன் பள்ளியிலிருந்து பேண்ட் வாசிப்பதற்காக வேறு ஊருக்கு சென்றிருந்தான். நல்ல பில்டர் வேண்டும் என கேட்டிருந்தேன். சுவையான காபியை தந்தார் உஷா.

   ஏழு மணிக்கு மேல் அங்கிருந்து புறப்பட்டோம்.பிள்ளைகள் வீட்டில் தனியாக இருப்பதால் போனில் இன்னும் ஒரு மணிநேரம் கழித்து வருகிறோம். பொறுத்துக்கொள்ள முடியுமா என சியாமளா கேட்டார். அவர்கள் ஒத்துகொண்டதால் இங்கிருக்கும் ஹனுமான் கோயில் செல்வது என முடிவு செய்தோம்.

மேலும் .....

நாஞ்சில் ஹமீது,

04- feb - 2026

sunitashahul@gmail.com

Tuesday, 3 February 2026

டாலஸ்புரம்

 



   பசுபிக் சக்சஸ் கப்பலில் பணியில் இணைவதற்காக ஹூஸ்டன் வந்து இன்றோடு பதினெட்டு நாட்கள் ஆகிவிட்டது.

இங்கே கடுமையான பனிப்புயல் வீசியதால் சற்று தூரத்திலிருக்கும் நண்பர்களை சென்று சந்திக்க இயலவில்லை. பனிப்புயல் வீசியபோது ஹூஸ்டனில் ஐஸ் விழவேயில்லை மழை பெய்து வெப்பம் மைனஸ் மூன்று டிகிரிவரை சென்றது.

 ஹூஸ்டனில் இருக்கும் நண்பர் சிவா “இந்த வார இறுதியில் டாலஸ் போய்வாருங்கள் வெதர் நன்றாகிவிட்டது” என ஊக்கினார்.   டாலஸில் வாழும் நெருங்கிய செந்தில் நண்பர் தாராளமாக வாருங்கள் என்று பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்து அனுப்பினார். எழுத்தாளர் ஜெயமொகனுக்கு உலகம் முழுக்க வாசகர்கள்,அவரது வாசகர்களுக்கு உலகம் முழுக்க நண்பர்கள்.

    2020 கோவிட் காலத்தில் சுக்கரி வாசிப்பு குழுவில் அறிமுகமாகி 2023 இல் செந்தில் சென்னை வந்திருந்தபோது நான் மும்பை செல்லும் வழியில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து ரயில் புறப்படும் முன் பத்து நிமிடங்கள் மட்டுமே சந்தித்தோம். கடந்த அக்டோபரில் செந்தில் இந்தியா வந்திருந்தபோது திருநெல்வேலி மாவட்டம் கடையம் சென்று அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

   பாரதி செல்லாம்மாளின் வீட்டை அவரது தந்தை விலைக்கு வாங்கி குடியிருக்கிறார்.அவ்வகையில் அவரது குடும்பமும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டதை இனி யாராலும் மாற்ற முடியாது.




  வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு பஸ் ஹூஸ்டனின் டவுன்டவுனிலிருந்து கிளம்பும். என் விடுதியிலிருந்து இருபது நிமிட பயண தூரம்தான். போக்குவரத்து நெரிசல் இருந்ததை விடுதியின் எட்டாவது மாடியில் இருக்கும் உணவுகூடத்தில் இருக்கும்போது கண்டதால் மதிய உணவுக்குப்பின் கீழே வந்து ஊபர் டாக்ஸியில் புறப்பட்டேன். மூன்று மணிக்கே பஸ் புறப்படும் மரியாட் ஹோட்டல் அருகில் வந்துவிட்டேன். டவுண்டவுன் சாலையில் நாற்பது நிமிடங்கள் நடந்தே சுற்றிவந்தேன்.

இங்கு கேட், கேட் கீப்பர் இல்லாமல் சாலையிலேயே ரயில் ஓடுகிறது.




   நான் செல்லவேண்டிய ரெட்கோச் பேருந்து ஐந்துநிமிடம் தாமதமாக வந்தது.சுத்தமான கழிப்பறை,இணைய வசதியுடன் முப்பத்தி நான்கு இருக்கைகள் கொண்ட பேருந்தில் பதினைந்துபேர் மட்டுமே இருந்தோம். இரு இருக்கைகளுக்கிடையில் தாராளமாக இடைவெளிவிட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து கால்களை தொங்கவிடாதவாறு நீட்டிகொள்ளும் வசதியான இருக்கை.ஹூஸ்டன் நகர் பகுதியை கடக்கவே ஒரு மணிநேரம் ஆனது. ஆறுவழிச்சாலையில் பெரும்பாலும் கார்களும்,டிரக்களும் தான் ஏராளமாக செல்கிறது.



 நகரை கடந்த பின் நான்கு வழி சாலையாக குறுகி இருபுறமும் விரிந்த புல்வெளிகள் அல்லது மரங்கள் நிறைந்த காடுகளாக இருந்தது.சில மாட்டுபண்ணைகளும் இருந்தது.  இரு நூறுஏக்கர்,நூறு ஏக்கர் விற்பனைக்கு என போர்டுகள் நிறைய இருக்கிறது.ஹூஸ்டன் எல்லையில் ஸாம் ஹூஸ்டனின் வெண்ணிற உயர்ந்த சிலையும் இருந்தது.

இடைநில்லா பேருந்து என்றால் இதுதான் சீரான வேகத்தில் எங்கும் நிற்கவேயில்லை. டாலஸ் நெருங்கியபின்தான் சிக்னலில் வண்டி நின்றது.குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வண்டி டாலசை அடைந்தது.நான் இரண்டாவது நிறுந்தமான ப்ளானோவில் இறங்கினேன்.நான்கு மணிநேர பயணம். அடுத்த நிறுத்தமான ப்ரிஸ்கோ நண்பர் செந்திலின் வீட்டிலிருந்து மிக அருகில்தான். டிக்கெட் முன்பதிவு செய்யும் அதை கவனிக்க தவறிவிட்டோம்.

   


செந்தில் அங்கே காரில் காத்திருந்தார்.இருபது நிமிடத்தில் எட்டரைக்குள் வீடு சென்று சேர்ந்தோம்.வீட்டு வாசலில் ஐஸ் இன்னும் உருகாமல் இருந்தது.




அவரது மகன் சித்தார்த், மகள் சாதனா என்னை காண்பதற்கு மிக ஆவலாய் காத்திருந்தனர். சேலம் ஆர் ஆர் பிரியாணி கடையிலிருந்து மட்டன் பிரியாணி தயாராக இருந்தது. அவரது மனைவி சியாமளா நான் தூங்க வேண்டிய அறையை காண்பித்தார். கடந்த ஓராண்டுக்கு முன் அவர்கள் வாங்கிய கனவு வீடு.நான்கு படுக்கையறை,மீடியா அறை,சலவை இயந்தர அறை,கூடம்,அடுமனை,உணவுக்கூடம் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய மாடி வீடு.நல்ல குளிராக இருந்தால் எரிவாயு கணப்புடன் இணைக்கபட்டிருந்தது கூடம். இரு கார்களை நிறுத்த வசதியான கார் நிறுத்தம்.இரவு பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு தூங்க சென்றோம்.


 சனிக்கிழமை மாலை நண்பர்கள் சந்திக்க வருவதாக சொல்லியிருந்தார்.

மேலும்.....

நாஞ்சில் ஹமீது,

03 feb2026.

sunitashahul@gmail.com

Tuesday, 27 January 2026

நீண்ட காத்திருப்பு 1

  

காலை சூரியன் வெளிவந்தபோது

     கப்பலிலிருந்து சந்தோஷ் அவ்வப்போது அழைத்து செய்திகளை சொல்வார். கப்பல் மெக்ஸிகோ சென்ற மறுநாள்  ஊருக்கு செல்பவர்களுக்கான மெக்ஸிகோ விசா விண்ணப்பித்திருப்பதாக சொல்லியிருந்தார். எனக்கான டிக்கெட்டும் கிடைத்ததால் இருபத்தி எட்டாம் தேதி கப்பல் செல்வது உறுதியாகியிருந்தது.

  கடந்த சனிக்கிழமை சந்தோஷ் அழைத்தபோது கப்பல் மீண்டும் ஹூஸ்டனுக்கு ஒன்பதாம் தேதி வருவதாக சொன்னார். அன்று மாலையே என்னுடன் இருந்த கேடட் ருமேனியா அலுவலகம் அவனுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை காண்பித்தான்.

    விடுதியில் இருக்கும் மூவருக்கும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டாம் என எழுதியிருந்தது.கப்பல் வரும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஹூஸ்டனுக்கு வரும் என்றார் சந்தோஷ்.

    எனது மெக்ஸிகோவிற்கான டிக்கெட் எப்போது வேண்டுமானலும் ரத்து செய்வார்கள் என்பதை நான் எதிர்பார்த்துகொண்டிருந்தேன்.

   திங்கள்கிழமை அதிகாலை மும்பை அலுவலகம் எனது டிக்கெட்டை ரத்து செய்து ஹூஸ்டனுக்கு கப்பல் வரும் வரை  காத்திருக்குமாறு மின்னஞ்சல் அனுப்பியது. 

இலைகளை உதிர்த்த மரம் 

பச்சையாக செடிகள் 


      காப்டனின் சிறு தவறு ஜனவரி பதினைந்து முதல் பத்தொன்பதாம் தேதி வரை கப்பல் ஹூஸ்டனில் நின்றிருந்தபோது படகு ஒன்று ஏற்பாடு செய்து உணவுபொருட்கள் வாங்கி அதே படகில் பணியாளர் மாற்றம் செய்யதவறியது  நாங்கள் விடுதியறையில் காக்கும்படி ஆகிவிட்டது.

  இன்று  நல்ல வெயில் அடித்தது குளிரும் குறைந்தது.இதை எழுதிகொண்டிருக்கும் போது இரவு ஏழு மணிக்கு ஐந்து டிகிரியாக இருந்தது.



    இன்றும் காலை பத்து மணிக்கு விடுதியிலிருந்து சென்ற வண்டியில் பத்து மணிக்கு சென்று Tea House காபி ஒன்று குடித்துவிட்டு பன்னிரெண்டரை மணிக்கு திரும்பி வந்தோம்.

 கேடட் டடுர் எழுபது டாலரில் சூ (shoe) ஒன்று வாங்கினான்.வேறு நிறுவனத்தை சார்ந்த தமிழரான முதன்மை இஞ்சினியர் துவேஷ் இன்று காலை கப்பலுக்கு புறப்பட்டு சென்றார்.

   இவ்வாறாக ஹூஸ்டனின் காத்திருப்பு நாட்கள் நீண்டுகொண்டே செல்கிறது. ஒன்பதாம் தேதி கப்பல் வருமென எதிர்பார்க்கபடுகிறது. அதை உறுதியாக சொல்ல இயலாது.

   நாஞ்சில் ஹமீது.

மேலும்.


Monday, 26 January 2026

நீண்ட காத்திருப்பு


  

          கடந்த ஞாயிறு மாலை ஹில்டன் விடுதி வரவேற்பறை போனில் அழைத்து. இன்று இரவு நீங்கள் இங்கே தங்க முடியாது. மூட்டை,முடிச்சுகளுடன் கீழே வாருங்கள் என்றார்கள்.

   ஹில்டன் வசதியான பெரிய நட்சத்திர விடுதி. இரு தினங்களாக இங்குள்ள கான்பாரன்ஸ் கால்களில் கூட்டங்கள்,பயிற்சிகள் நடக்கிறது. 

   தினமும் மாலை நான்கு மணிக்கு உள்ளூர் முகவரின் மின்னஞ்சல் வந்தபின் எங்கள் தங்கும் அறையை நீட்டிப்பார்கள்.

  இப்போது மேலும் மூன்று குழுக்களின் பயிற்சி கூட்டங்கள் நடக்கவிருப்பதால் எங்கள் மூவரையும் காலி செய்ய சொன்னார்கள்.

   எனது பைகளுடன் கீழே வந்தேன். என்னுடன் கப்பலுக்கு வரவேண்டிய டடுர்  வரவேற்பறையில் காத்திருந்தான். அறை சாவியை கொடுத்ததும். "மன்னித்து கொள்ளுங்கள் உங்களது அறையை எங்களால் மேலும் நீட்டிக்க இயலவில்லை அதிகமான புக்கிங் உள்ளது. புரிந்துகொண்டதற்கு நன்றி" என கூறினார்.



       ஏராளமானோர் விடுதிக்கு வந்துகொண்டே இருந்தனர்.ஹில்டனின் மேலாளர் ஒருவர் வேறு விடுதியில் அறையை தேடிக்கொண்டிருக்கிறார். இங்கே அருகில் தான் இருக்கும் கொஞ்சம் காத்திருங்கள் என்றார்.



   நண்பர் சிவா வந்திருந்தார். அவரது மொபைல் எண்ணை கேடட் அமோவிடம் கொடுத்துவிட்டு காரில் இந்திய உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டோம். 

    சாப்பிட்டு முடியும்போது அமோ அழைத்து "நம்மை அழைத்து செல்ல இன்னும் சில நிமிடங்களில் வண்டி வருகிறது"என்றான்.



   நான் விடுதிக்கு வந்து சேரவும் வண்டி வந்தது. நண்பர் சிவா விடைபெற்று சென்றார். ஹில்டனிலிருந்து அரை மணிநேர பயணத்துக்குப்பின் பசடேனா என்னும் இடத்திலுள்ள குவாலிட்டி இன் எனும் விடுதியை அடைந்தோம்.



  இந்தியர் ஒருவரால் நடத்தப்படும் விடுதி இது. அறையும் இரவுணம் தந்தார்கள். காலையில் எட்டாவது மாடியிலுள்ள உணவகத்துக்கு சென்றபோது காலை உணவாக அமெரிக்க உணவுகளுடன் இட்லி சாம்பாரும் இருந்தது. சைவ உணவும்,சப்பாத்தி,பருப்பு குழம்பு வகைகளும் மதிய,இரவு உணவுகளில் இருந்தது.



   வேறு நிறுவன கப்பல்களில் இணைவதற்கு வந்தவர்களில் மதுரையை சார்ந்து பிரபு எனும் இரண்டாம் இன்ஜியர்,பாண்டிச்சேரி விக்னேஷ், சென்னையை சார்ந்த முதன்மை இஞ்சினியர் ஒருவரும் இங்கே இருந்தார்கள்.

  இங்கே அருகிலேயே வணிக வளாகங்கள் நிறைய இருந்தது.காலை பத்து மணிக்கு இங்கிருத்து வண்டி ஒன்று சற்று தூரத்தில் இருக்கும் வால்மார்ட்,கல்ப் கேட் வணிக வளாகத்திற்கு அழைத்து சென்று,இரண்டு மணிநேரத்திற்கு பிறகு அழைத்து வருகிறார்கள்.




   இரண்டாம் நாள் மதுரை,பாண்டி கப்பல்காரர்கள் சென்றுவிட்டனர்.எங்கள் நிறுவன கப்பல் ஒன்றில் இணைய வந்த நால்வரில் கேரளாவின் போசன் நாசர் மற்றும் ஆந்திராவின் ராம் பாபு முன்பே என்னுடன் பணி புரிந்தவர்கள்.

   இங்கேயே இன்னும் சில நாட்கள் இருந்தால் முன்பு என்னுடன் பணிபுரிந்த பலரையும் சந்தித்து விடலாம் என எண்ணினேன்.

    எனது மும்பை அலுவலகம் மின்னஞ்சல் மூலம் என்னிடம் கேட்டது கப்பலுக்கு போய்விட்டதை உறுதி செய்யுமாறு. இன்னும் விடுதியறையில் தான் இருக்கிறேன். கப்பல் மெக்ஸிகோவில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. நான் எப்போது கப்பல் ஏறுவேன் என எனக்கு யாரும் இதுவரை சொல்லவில்லை என்று பதிலளித்தேன்.

  அடுத்த சில நிமிடங்களில் விரைவில் தொடர்புகொள்கிறேன் அதுவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டினார் என் மேலாளர் தர்சனா.

  அடுத்த ஒரு மணிநேரத்தில் மும்பை அலுவலகம் இருபத்தி எட்டாம் தேதி மெக்ஸிகோ செல்வதற்கான விமான டிக்கெட்டை அனுப்பியது.

   வேறு வழியே இல்லை இங்கேயே இருக்கவேண்டியது தான். பக்கத்து ஊரில் வசிக்கும் நண்பர் செந்திலை அழைத்தபோது  "இங்கே பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,இப்போது பயணம் செய்வது சாத்தியம் இல்லை" என்றார். 

   


ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில்  பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கபட்டிருந்தது. பனிப்புயலில் வீட்டைவிட்டு வெளியே செல்வது பாதுகாப்பில்லை. நான் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்திலும் பனிப்புயல் எச்சரிக்கை இருந்தது.




 நான் தற்போது தங்கியிருக்கும் பசடேனாவில் வெப்பம் மைனஸ் மூன்று டிகிரிவரை சென்றது. ஆனால் பனி விழவில்லை. அமெரிக்காவின் நீயுயார்க்,நீயு ஜெர்ஸி மற்றும் பல பகுதிகளை பனிப்ப்புயல் கடுமையாக தாக்கியது.

  நாஞ்சில் ஹமீது.

மேலும் ...

Wednesday, 21 January 2026

ஹூஸ்டன் நாட்கள்

     


      கப்பல் பணியில் இணைவதற்காக விமானம் ஏறி வந்துவிட்டால் ஒரு இரவு ஓய்வுக்கு மனம் எங்கும்.கப்பலுக்குள் போய்விட்டால் உடனே செய்ய வேண்டிய வேலைகள் தயாராக இருக்கும்.  நீண்ட விமான பயணத்திற்குபின் உடலும் மனமும் களைத்து,இரவு,பகல் நேர வித்தியாசம் தரும் சோர்வு,தள்ளிப்போன,உணவு,குளியல்,உறக்கம் என குழப்பமாக இருக்கும்.

       இம்முறை பசுபிக் கப்பலில் இணைவதற்காக   கடந்த வியாழன் (15- jan- 2026) அதிகாலை விமானம் திருவனந்தபுரத்திலிருந்து.புதன்கிழமை இரவு பதினோரு மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டேன்.



   இருபத்தியொரு மணிநேர விமான பயணம் காத்திருப்பு எல்லாம் சேர்த்து ஒரு நாளுக்கு மேலாக ஆன பயணம்.வியாழன் மாலை ஐந்து மணிக்கு ஓட்டுனர் ஹூஸ்டனிலுள்ள ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலில் கொண்டு விட்டார்.

  


ஐந்தாவது மாடியில் அறை. கப்பலுக்கு போகும்முன் கிடைக்கும் முழு இரவு தூக்கம் காலையில் புத்துணர்ச்சியை தரும்.குளித்து  ஆடை மாற்றி இரவுணவுக்குபின் ஒன்பது மணிக்கு தூங்க சென்றேன். கப்பல் துறைமுகத்தை விட்டு சற்று தள்ளி நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது.



       காலையில் கப்பலுக்கு போகலாம் என எண்ணியிருந்தேன். கப்பல் துறைமுகம் வரவேயில்லை. காலையில் நடைபயிற்சி,நல்ல வெயில் அடிக்கும் உச்சி வேளையில் வெளியே  ஒரு நடை. 

  



ஞாயிறு மதியம் ஹூஸ்டனில் வசிக்கும் நண்பர் சிவா வந்திருந்தார். இந்திய உணவகம் சென்று அரிசி சோறு,பொழிச்சது எல்லாம் சாப்பிட்டோம். 

  



அருகிலேயே இருந்த மாலுக்கு சென்று மோட்டார் மேன் சந்தோஷ் கேட்ட வாட்ச் ஒன்று வாங்கினோம். இங்கே புத்தக கடை இருப்பதை கண்டு உள்ளே அழைத்து சென்றார். என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய புத்தகக்கடையை நான்  பார்த்ததே இல்லை. நிறையபேர் வாசிப்பு பழக்கமுள்ளவர்கள் என்பதை இந்த கடை காட்டுகிறது.



   ஏராளமான மாணவர்கள் அங்கே குவிந்திருந்தனர். எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகரான சிவா அறம் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான stories of the true இருக்கிறதா என தேடினார். ஸ்டாக் இல்லை என சொன்னது. ரூமியின் கவிதை நூலான வாட்டர் நூலை எனக்கு வாங்கி தந்தார். நான் அவருக்கு கவிதை நூல் ஒன்று பரிசளித்தேன்.



   எனது விடுதியறைக்கு திரும்பி வந்து ஐந்து மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அவரது இல்லம் திரும்பி சென்றார்.



   திங்கள்கிழமை நடந்தே வெளியே சென்று வந்தேன். உணவகத்தில் எனது கப்பலுக்கு வரும் பிலிப்பினோ கேடட் அமோவை பார்த்தேன். வியாழன் மாலை வந்ததாக சொன்னான்.



 திங்கள் மாலை கப்பல் மெக்ஸிகோ புறப்பட்டு விட்டதாக மோட்டர் மேன் சந்தோஷ் சொன்னார்.ஹூஸ்டன்,முகவர் மற்றும் மும்பை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினேன். காத்திருக்க சொன்னார்கள்.இரவுணவின் போது இன்னுமொரு கேடட் ருமேனியாவின் ட்டுரை பார்த்தேன்.

   நேற்று காலை நண்பர் சிவா அழைத்து   விடுதியிலிருந்து செல்லும் வாகனத்தில் விமான நிலையம் போய் வாருங்கள் என்றார்.




  அரை மணி நேரத்திற்கு ஒருமுறை  விமான நிலையம் செல்லும் சட்டில் பஸ்கள் உள்ளது. நாங்கள் மூவரும் அதிலேறி ஜார்ஜ் புஷ் இன்டெர்நேஷனல் விமான நிலையம் சென்றோம். விடுதியிலிருந்து ஆறு நிமிட பயணம் மட்டுமே.அங்கே 'சி' டெர்மினலில்  இறங்கி சுற்றிவிட்டு எ,பி,சி,ட,ஈ டேர்மினல்களை இணைக்கும் ரயிலில் ஒரு பயணம் போனோம். பி டெர்மினலில் இறங்கி மீண்டும் ஒரு நடை சி வரை. வெளியே வந்தபோது ஹோட்டலுக்கு செல்லும் பஸ் தயாராக இருந்தது. ஏறிக்கொண்டோம்.



 இந்த விடுதி விமான பணியாளர்களான பைலட்,பணிப்பெண்களால் எப்போதும் நிரம்பியிருக்கிறது.விமானம் புறப்படும் பெரிய திரை ஒன்று இங்கே வைக்கப்பட்டுள்ளது. 



  உணவு கூடத்தில் பேச்சுக்கள் எப்போதும், முப்பது மணிநேரம் ஏர் டைம்,நான் விமானத்தில் ஏறியபோது இப்படி இருந்தது என மொபைலில் படத்தை காட்டிவிட்டு அதை சரி செய்ய இரண்டு மணிநேரமானது  பின்னர் விமானத்தை கிளப்பினேன்.



   விமானம் தரை இறங்கும்போது வானிலை மோசமாகி கஷ்டப்பட்டுதான் விமானத்தை தரையிரக்கினேன் என உரையாடால்கள் கேட்கும்.

     கப்பலுக்கு செல்பவர்களும் நிறையப்பேர் இங்கு வந்து செல்கின்றனர். இரு தினங்களுக்கு முன் கார்னிவல் ட்ரீம் எனும் கப்பலுக்கு செல்லும் அறுபது பணியாளர்களை பஸ் ஒன்றில் ஏற்றி சென்றார்கள்.

 நாகலாந்தை சார்ந்த பெண் ஒருத்தி உட்பட ஆறு இந்தியர்களும் அதில் அடக்கம்.மறுநாள் கேரளாவை சார்ந்த ஒருவரை சந்தித்தேன். கொச்சியில் விமானம் தாமதமானாதல் ஒரு நாள் பிந்தி விட்டது என்றார். கப்பல் ட்ரீம் புறப்பட்டுவிட்டு மயாமியில் சென்று கப்பல் ஏற மறுநாள் புறப்பட்டு சென்றார்.

   இன்று காலை உள்ளூர் முகவர்            பதிலனுப்பினார்.மெக்ஸிகோவின்அல்டா மிரா எனும் துறைமுகத்திற்கு கப்பல் வருகிறதுவிமான சீட்டு வந்ததும் அங்கே அனுப்புகிறோம் என.

  நாஞ்சில் ஹமீது ,

21 - jan - 2026