Sunday, 12 July 2026

விடுமுறை நாட்கள்



   கப்பல் காரனுக்கு விடுமுறை உண்டா? அப்படி விடுமுறை கிடைத்தால் அந்த நாளில் அவன் எங்கு செல்வான்? என்ன செய்வான்? இது பலரும் கேட்பது.

   இரண்டாயிரத்தி ஐந்தாம் ஆண்டு நான் முதல் கப்பலில் நான் இணைந்தபோது விடுமுறை என்பதே தெரியாது. அது துபாய் முதலாளிக்கு சொந்தமான கப்பல். துபாயில் ஏற்றிய சரக்குகளை, ஈராக்கில் இறக்குவோம். 

   துறைமுகம் இல்லாமல் இருந்தால் அரிதாக வெள்ளிக்கிழமையில் அரைநாள் ஓய்வு சாத்தியம். அது கப்பலில் பிட்டராக இருக்கும் எனக்கும் பகல் பணியில் இருக்கும் ஓ எஸ், போசன் பத்தி சாபுக்கும் மட்டுமே கிடைக்கும். அப்போது ஏதேனும் எமேர்ஜென்சி வந்தால் உடனே பணிக்கு சென்றாக வேண்டும். 

   வாட்ச் கீப்பர்கள் ஆகிய நேவிகேஷன் அதிகாரிகள், கப்பலோட்டும் மாலுமிகள், இயந்திர அறையிலுள்ள இஞ்சினியர்கள், அவர்களுக்கு உதவியாகவுள்ள மோட்டர்மேன்கள் குறைந்தது எட்டு மணிநேர பணி செய்தே ஆகவேண்டும். 

 விடுமுறை கிடைத்தால் என்ன செய்வது. ஒன்றும் செய்ய முடியாது. படம் பார்த்து, துணிகள் துவைத்து, தூங்கி எழ வேண்டியதுதான். கடும்பணிக்குப்பின் உடலுக்கு ஓய்வு மட்டும் உறுதி.

  கப்பலை விட்டு எங்கும் செல்ல முடியாது. ஓய்வாக இருக்கும்போது உணவுகூடத்துக்கும், அறைக்கும் தவிர நடமாட்டமே குறைந்துவிடும் நாட்கள்தான். 



   தற்போது பணியிலிருக்கும் நிறுவனத்தில் 2006 ஆம் ஆண்டு பயிற்சி பிட்டராக இணைந்தேன். ஞாயிறுகளில் துறைமுகம் இல்லாமலிருந்தால் அரைநாள் ஓய்வு பகல் பணியாளர்களுக்கு கிடைக்கும். பயிற்சி பிட்டரான என்னை மூன்று மணிவரை வேலை செய்ய சொல்வார்கள். இரண்டு மணிநேரம் ஓய்வு அரிதாக கிடைக்கும். மற்ற நாட்களில் காலை ஆறு முதல் இரவு ஏழுமணி வரை எனக்கு வேலை தருவார்கள்.

   பதவி உயர்வு பெற்றபின் பணி காலை எட்டுமுதல் ஐந்துவரை. ஞாயிறு அரைநாள் ஓய்வு உறுதியானது. புதிய கப்பல்கள் வந்தபோது இயந்திர அறை மாலை ஐந்துமணிக்கு மேல் ums (un manned ship) முறைகள் வந்தது. இயந்திரஅறை பணியாளர்களுக்கும் ஞாயிறு அரைநாள் ஓய்வு கிடைக்க துவங்கியது . 

 இந்தியரல்லாத உயரதிகாரிகள் கப்பலுக்கு வந்தபோது சனிக்கிழமை அரை நாள் ஓய்வும், ஞாயிறு பத்து மணிக்கு மேல் விடுமுறையும் சாத்தியமானது. அது துறைமுகங்கள் இல்லாமல் அவரச பணிகள் ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே. புதிய கப்பல்களாக இருந்து நீண்ட பயணமாக இருந்தால் ஓய்வு சாத்தியமே.

  2022 ஆண்டு முதல் முதலாக எல்என்ஜி கப்பலில் பணிக்கு வந்தேன். உயரதிகாரிகள் கொரிய,மலேசிய,இந்தோனேசியாவை சார்ந்தவர்கள். சனிக்கிழமை அரை நாளும், ஞாயிறுகளில் முழுநாளும் பெரும்பாலும் ஓய்வு உறுதி. பண்டிகை நாட்கள் மற்றும் ஞாயிறுகள் பணி நாட்களாக அமைந்து விட்டால் அதற்கு பகரமாக மற்றொரு நாள் விடுமுறை எடுப்பதில் வல்லவர்கள் கணக்கு தவறாது.

  எனது முதல் எல்என்ஜி கப்பலில் பணியில் இணைந்த மறுநாள் பனாமாவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. நீராவி இஞ்சினில் ஏற்பட்ட பெரிய பழுதை நீக்க டெக்னீசியன்கள் கப்பலுக்கு குழுவாக வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு சனி,ஞாயிறு ஏதும் இல்லை எவரிடே மண்டே என்பாரகள். 

  முதல் குழு இரண்டு மாதம் பணிசெய்துவிட்டு சென்றபோது சில உதிரி பாகங்களுக்காக நாங்கள் காத்திருந்தோம். அவை கப்பலுக்கு வந்தபின்தான் இரண்டாவது வந்து பணியை துவங்கவேண்டும். இரண்டாம் இஞ்சினியர், முதன்மை இஞ்சினியரிடம் ஆறு வாரங்கள் தொடர்ந்து ஓய்வே இன்றி பணி செய்துள்ளோம் அதற்காக காம்பன்செட் செய்ய வேண்டுமென்றார். வெள்ளிக்கிழமை மதியத்திற்குபின் அரை நாள் ஓய்வு துவங்கி திங்கள்கிழமை காலை பணிக்கு வரவேண்டும். டூட்டி இஞ்சினியர், டூட்டி மோட்டேர்மேன் மட்டும் இயந்திர அறைக்கு சென்று தினமும் செய்தே ஆக வேண்டிய பணிகளை செய்து லாக் புக் எழுதிவிட்டு வருவார்கள்.

  இருவராங்களுக்கு பின் பக்ரீத் பண்டிகை வந்தது அது ஞாயிறாக இருந்தது. மறுநாள் திங்கள்கிழமை பணிக்கு சென்றேன். இயந்திர கட்டுப்பாட்டு அறையில் மோட்டர்மேன் மட்டும் இருந்தார். இன்று விடுமுறை என்றார். பக்ரீத் ஞாயிறில் வந்துவிட்டதால் இன்று விடுமுறை என விளக்கம்சொன்னார். தொடர் விடுமுறையில் அறையில் அடைந்து ஒரு டீப் சோர்வுகுள்ளானேன். அந்த கப்பலில் நாங்கள் ஆறுபேர் மட்டுமே இந்தியர்கள் அதில் இருவரை உணவுகூடத்தில் மட்டுமே பார்க்க முடியும். அதிகமாக பேசும் எனக்கு பேச ஆள்கிடைக்காததால் தான் பிரச்னை என புரிந்தது.

   கோவாவின் மோட்டேர்மேன் பெர்னாண்டோவிடம் சொன்னேன் என்னால் இனியும் அறையில் அடைந்துகிடக்க முடியாது என. விடுமுறை நாளில் பத்து மணிக்கு மேல் என் அறைக்கு வந்துவிடு என்றார்.

  தற்போது இருக்கும் கப்பலும் எல்என்ஜி (LNG) கொரிய காப்டன் மற்றும் முதன்மை இஞ்சினியர். இந்தோனேசிய இரண்டாம் இஞ்சினியர், மலேசிய முதன்மை அதிகாரி. சனிக்கிழமை அரைநாள் ஓய்வு,ஞாயிறில் முழு நாள் ஓய்வு கட்டாயம். ஞாயிறு துறைமுகமாக இருந்தால் திங்கள்கிழமை நிச்சயம் ஓய்வு.

இத்தனை வருடங்களில் பண்டிகை நாட்கள் அரிதாக தெரியவரும். பெரும்பாலும் கப்பல் காரனுக்கு பண்டிகை நாட்கள் கடந்து செல்வதே தெரியாது. இங்கே முகரம் நாளன்று முழுநாள் ஓய்வு கிடைத்தது.

  துறைமுகத்தில் கப்பல் நிற்கும்போது காஸ் டிப்பார்ட்மெண்ட், டெக் பணியாளர்களுக்கு கொஞ்சம் அதிக பணி இருக்கும். முதன்மை அதிகாரி, காஸ் இஞ்சினியர் தொடர்ந்து முப்பது மணிநேரம் வரை பணி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. 

  ஒவ்வொரு முறை துறைமுகம் விட்ட மறுநாள் முழுநாள் ஓய்வு என்பது இங்கே எழுதப்படாத விதி. கடந்த வாரம் பசுபிக் கடலில் மெக்ஸ்சிகோ நோக்கி பயணித்தோம் ஒரு நாள் பின்னோக்கி நகர்த்தவேண்டும். அது ஞாயிறாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். எனவே சனிக்கிழமை அரை நாள், முதல் ஞாயிறு, இரண்டாம் ஞாயிறு என இரண்டரை நாள் முழு ஓய்வு. ஓய்வு நாட்களில் பத்து மணி மீட்டிங்கில் கண்டிப்பாக முகம் காட்டி வரவேண்டும்.

   இந்தவாரம் திங்கள் மற்றும் செய்வாய்க்கிழமை துறைமுகத்திலிருந்தோம். sire inspection எனும் ஆய்வும், மெக்ஸிகோ துறைமுக அதிகாரிகளின் ஆய்வும் நடந்தது. அதற்காக நாங்கள் கப்பலை தயார் செய்து வைத்திருந்தோம். இரு ஆய்வுகளிலும் தேறியதால். புதன், வியாழக்கிழமை என இரு தினங்கள் ஓய்வு.(2024 maarch built, இது இரண்டு ஆண்டுகளே ஆன புத்தம்புதிய கப்பல். பெரிதாக தயார் செய்ய ஒன்றுமேயில்லை. நன்றாக துடைத்து சுத்தமாக வைத்திருந்தாலே போதும்.) 

   வெள்ளிக்கிழமை காலை பணிக்கு சென்றேன். மீட் ரூம் கதவின் லாக் ரிப்பேர் கதவு திறக்கவில்லை. கழட்டி பார்த்தேன் அதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஸ்ப்ரே அடித்து துடைத்து தற்காலிகமாக திறக்கும்படி பொருத்திவிட்டு புதியது ஆர்டர் செய்யும்படி முதன்மை அதிகாரியிடம் சொன்னேன்.காஸ் பிளாண்டில் நீராவி வால்வ் ஒன்றில் காஸ்கட் மாற்றும் பணியில் காஸ் இஞ்சினியருக்கு கொஞ்சம் உதவினேன். வாழ்வை கழட்டி சுத்தம் செய்து புதிய காஸ்கட்டும் அவரே வெட்டி வைத்திருந்தார். கொண்டு போய் பொருத்தினேன்.

   மூன்று மணிக்கு மேல் பணியாடை மாற்றும் இடத்தில் சலவை இயந்திரம் பொருத்த தண்ணீர் குழாயின் இணைப்புகளை தேடும்பணி அதோடு நாள் முடிந்தது.

 நேற்று சனிக்கிழமை வேலைகளை பதினோரு மணிக்கே முடித்து விட்டேன். இன்றும் ஓய்வு. இந்த வாரத்தில் மூன்றை நாள் பணியும் மீதி ஓய்வுமாக பணியை விட ஓய்வே அதிகமாக இருந்தது.

  பசுபிக் கடலில் கொரியாவை நோக்கிய பயணத்தில் இருக்கறோம். திங்கள் இரவு தூங்கி எழுகையில் புதன்கிழமையாக விடியும். அதிலும் இவ்வாரத்தில் ஒருநாள் காணமல் போகிறது. 

  இப்போதெலாம் ஓய்வு நாட்களில் அறைக்குள் அடைந்து கிடப்பதில் எந்த சிரமும் இல்லை குறைவாக உண்டு, மாலை நேர உடற்பயிசிற்சிக்குப்பின் எழுத்தும், வாசிப்பும் இனிமையாக கழிகிறது. ஊரிலிருந்து புறப்பட்டு ஆறு மாதங்களும் கப்பலுக்கு வந்து ஐந்து மாதங்கள் ஒருவாரமாகிறது.

நாஞ்சில் ஹமீது,

12july2026.

sunitashahul@gmail.com



Saturday, 27 June 2026

கடிகாரக் கணக்கு .

 


காணாமல் போன செவ்வாய் கிழமை

இரு வெள்ளிக்கிழமைகள்

   நேற்று தோழி கவிதாவிடம் போனில் பேசும்போது “ஷாகுல் எங்க இருக்கீங்க” என கேட்டாள். 

  “கவிதா இதுதான் நடுக்கடல்ன்னு சொல்லலாம், கொரியாலருந்து மெக்ஸிகோக்கு பெயிட்டு இருக்கோம், நார்த் பசுபிக் கடல், ரொம்ப தூரத்துக்கு ஒண்ணுமேயில்ல, சுத்தி கடல் மட்டும்தான்” என்றேன்.

  ஏப்ரல் நான்காம் தேதி கொரியா வந்தோம் அதன்பின் கப்பல் மூன்றுமுறை ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைத்து அதை வியட்நாம், சீனாவின் ஹாங்காங் அருகிலுள்ள ஷுகாய் மற்றும் ஷென்சென், கொரியாவின் காங்க்வாங் துறைமுகங்களில் இறக்கினோம். 

  ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் அருகிலுள்ள கிளாஸ்டோனின் கடிகாரம் GMT+10 வியட்நாம் GMT+7 சீனா GMT+8 மற்றும் கொரியா GMT+9 கடந்த இரண்டரை மாதங்களில் கப்பலின்  கடிகாரம் இரண்டு மணிநேரம் மட்டுமே முன்னேயும்,பின்னேயும்  மாறிக்கொண்டிருந்தது. கொரியா, ஆஸ்திரேலியா பயணத்தில் பத்து நாளில் ஒருமணி நேரம் கடிகாரம் முன்,பின் சென்றால் அதுவும் ஓய்வு கிடைக்கும் நாளில் கடிகாரம் மாறினால் கப்பல்காரனுக்கு அது பொருட்டே இல்லை.


  பிப்ரவரி ஆறாம் தேதி நான் அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டியில் பணியில் இணைந்தபோது கடிகாரம் GMT-6. அங்கிருந்து பதினான்கு நாட்கள் பயணித்து பிரான்சை அடைந்தபோது GMT+1. இரு தினங்களுக்கு ஒரு மணிநேரம் என ஏழு மணிக்கூர் கப்பலின் கடிகாரம் முன்னே சென்றது. அங்கிருந்து நைஜீரியாவின் போனி சென்றோம். போனியிலும் அதே கடிகார நேரம் தான் ஆனால் இடையில் கிரேட் பிரிட்டனை தாண்டும்போது அங்குள்ள கடிகார நேரம் GMT+0 விற்கு கப்பலின் கடிகாரத்தை பின்னோக்கி நகர்த்தி, இரு தினங்களுக்கு பின் மீண்டும் முன்னோக்கி நகர்த்தும் விளையாட்டு வேண்டாம், “என் கப்பல் என் இஸ்டபடி” என காப்டன் லீ சூங் சொன்னார்.

  பயணத்தில் அப்போது ஒருநாள் காலை உதய நேரம் 8மணி.45நிமிடமாக இருந்தது. ரமலான் நோன்பாக இருந்த அன்று காலை சகர் உணவாக ஆறேமுக்காலுக்கு ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டேன். 

  (என்ன ரொம்ப குழம்புதோ? வாசிப்பவர்களை நான் எப்போதும் குழப்புவதில்லை அருகிலிருந்து கதை சொல்வதுபோல இருக்கிறது என நீங்களே பலமுறை சொல்லியுள்ளீர்கள்)

  மார்ச் ஏழாம் தேதி நைஜீரியாவிலிருந்து புறப்பட்டபின் இருபத்தியைந்து நாட்கள் பயணம் கொரியாவிற்கு. மிக மெதுவாக எட்டு மணிநேரம் கப்பலின் கடிகாரம் முன்னே சென்றதில் உடல் பொறுத்துகொண்டது.



   இப்போது செவ்வாய்க்கிழமை கொரியாவிலிருந்து புறப்பட்டோம் மெக்ஸிகோ நோக்கி. அங்கே கடிகார நேரம் GMT-6 ஜூலை ஆறாம்தேதி துறைமுகம் சென்றடைவோம். புதன்கிழமை முதல் கப்பலின் கடிகாராம் தினமும் ஒரு மணி நேரம் என முன்னே நகர்த்தப்படுகிறது. முதல் இரு தினங்கள் சிக்கலே இருக்காது. 



 பின்பு தூக்கம் வராது. நான்கு நாட்களில் நான்கு மணிநேரம் கடிகாரம் முன்னே சென்றால் மாலை ஆறு மணி இரவு பத்தாக இருக்கும். படுத்தால் தூக்கமே வராது. நள்ளிரவு இரண்டு மணிக்கு கண்ணயர்ந்தால் காலை ஐந்தரை ஆறு மணிக்கு கண் திறக்கவே முடியாது. எட்டு மணி காலை பணிக்கூட்டம் முடிந்தபின் கண் சொக்கி, உடல் கிறங்கடிக்கும். 

   ஏழே காலுக்கு சாப்பிடும் காலை   உணவு வயிற்றுக்கு நள்ளிரவாக இருக்கும். இந்த ரமலானுக்கு பிறகு இருவேளை மட்டுமே உண்கிறேன். காலையுணவு ஏழரை மணிக்குள், மதியம் சரியாக பன்னிரண்டு மணிக்கு லஞ்ச். மாலை ஐந்து மணிக்கு பணி முடிந்து,நீராடி உடற்பயிசிக்குப்பின், முந்தைய நாள் ஊற வைத்த ஐந்து பாதாம்பருப்பு, ஒரு கப் பால், தேனில் ஊற வைத்த பேரிட்சை, கருப்பு திராட்சை, அத்திப்பழம் அரை ஸ்பூன். இரவுகளில் உடல் லேசாக இருப்பதுடன். இரவு பத்துமுதல் காலை ஐந்துவரை நல்லுறக்கம்.



 அதிகாலை எழுந்தபின் ஒரு கப் தண்ணீர் குடித்து பல் தேய்த்து, வயிறு சுத்தமானவுடன் மென் குளிர் நீரில் குளியல். உச்சியில் தண்ணீர் விழுந்து தலை குளிர்ந்தபின்தான் மண்டையே வேலை செய்யும்.

 தொடர் கடிகார மாற்றத்தினால் மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆனது. காலையில் வயிறு சுத்தமாகமல் காலை உணவையும், மதிய உணவையும் தவிர்த்து போராடியிருக்கிறேன். 2010 இல் உடன் பணியிலிருந்த சமையல்காரர் பிரபீஸ் கிருஷ்ணா “கப்பலின்ற சமயம் கீ கொடுத்து மாற்றாம், சரீரம் அது போல பெட்டந்து மாறத்தில்லா, ஆகாரம் கழிக்காத இருந்தா கக்கூஸ் வரத்தில்லா” என. 

 அதன்பின் புரிந்துகொண்டேன் விரைவாக கடிகாரம் மாறியபின் உடல்கடிகாரம் மாறுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என. காலையில் கக்கூசில் அமர்ந்து போராடுவதில்லை குளித்து, காலை, மதிய உணவுகளை எடுத்துக்கொண்டேன். 

  கடிகாரம் மாறாத நாட்களில் எல்லாம் சரியாக இருக்கிறது. இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிறு, நாளை மறுநாளும் ஞாயிறாகவே இருக்கும். பதிமூன்று நாட்களில் கடிகாரம் பத்துமணிநேரம் முன்னே நகர்ந்து, ஒரு நாள் பின்னால் செல்லும். 

  திரும்பி வருகையில் அதே போல் பதிமூன்று தினங்களில் இரவு பகலாகி ஒரு நாள் காணாமல் போய்விடும். அதாவது ஒரு மாதத்திற்குள்ளாக இருமுறை பகலிருந்து, இரவுக்கும் மீண்டும் இரவிலிருந்து, பகலுக்கும் மாறுவதில் கடிகாரத்திற்கு எந்த சேதமும் இல்லை.

   சைனா, கொரியா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஓடிக்கொண்டிருக்கையில் கடும் வெப்பமான நாட்களாக இருந்தது. ஜூன் மாதம் ஆஸ்திரேலியவில் குளிர்கால துவக்கம் என்றாலும் நாங்கள் சென்ற துறைமுகம் டார்வின் வடக்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவின் அருகில் எனினும் டார்வினில் ரம்மியமான பருவ நிலை இருந்தது. சைனாவின் சூஹாய் துறைமுகப்பில் நின்ற நாளில்தான் கடும் வெப்பத்தில் மிகவும் களைத்துபோயிருந்தோம்.


  வட பசுபிக் கடலில் நுழைந்தது முதல் வெப்பம் குறையத்தொடங்கியது வெள்ளிக்கிழமை பதிமூன்று டிகிரியை தொட்டது. ஜாக்கெட் அணிந்து சென்றோம் டெக்கில். வெண்சாம்பல் மேகங்கள் வானத்தில் அடர்த்தியாக நிறைந்து இருக்கிறது. சூரியக்கதிரின் சிறு பிசிறு கூட கீழே வராமல் மேகங்கள் அதன் வேலையை செய்கிறது.

  வெள்ளிக்கிழமை இரவு படுக்கைக்கு போகும்முன் அறையின் வெப்பம் இருபத்தியொரு டிகிரியாக இருந்ததால் வெப்ப சட்டையை அணிந்து, கால்சட்டையை அருகில் வைத்துகொண்டு படுத்தேன். இரவில் குளிர்ந்தால் அணியலாமென. காலை விழித்தபோது அறையின் வெப்பம் பதினெட்டு டிகிரிக்கு குறைந்திருந்தது.



 தொழுகை நேரம் நம்பவே முடியவில்லை. மாலை நேர மக்ரிப் இரவு ஒன்பதரைக்கு,இரவு நேர இஷா நள்ளிரவு 12.03 ஆகவும், அதிகாலை பஜர் தொழுகை 0328 வும் இருந்தது. 

 சனிக்கிழமை வேலைகளுக்காக டெக்கில் சென்றபோது குளிரை உணர்ந்தேன். ஒன்பது டிகிரி. கடிகார மாற்றத்தினால் சனி மாலை சுக்கிரி மீட்டிங் நடக்கும் இந்திய நேரம் ஐந்து மணி, எனக்கு இரவு பதினொன்றரை மணி. மீட்டிங் முடிந்து இரண்டு மணிக்கு தூங்க செல்கையில் அலமாரியிலிருந்து இரண்டாவது கம்பளி போர்வையை எடுத்துக்கொண்டேன். குளிருக்கான வெப்ப ஆடையை, காலுக்கும், உடலுக்கும் அணிந்து இரு கம்பளிகளுக்குள் நுழைந்துகொண்டேன். 

   பாதங்கள் மட்டும் லேசாக குளிர்ச்சியாக இருந்தது. காலையில் விழிக்கும்போது, உடலின் வெப்பம் கம்பளிக்குலிருந்து வெளியேறாமல் இருந்ததால் கதகதப்பாக இருந்தது. அறையின் வெப்பம் பதினாறு டிகிரிக்கு கீழிறங்கியிருந்தது.

நாஞ்சில் ஹமீது,

28-JUNE- 2026.

sunitashahul@gmail.com

  

Friday, 26 June 2026

அஸ்தினாபுரம் – ஜோ.டி.குருஸ்

 


       இருபத்தோரு ஆண்டுகளாக கப்பலில் பணிபுரிகிறேன். கப்பலை ஓட்டுவதுதான் எங்களின் வேலை.கப்பல் நிற்கக்கூடாது எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும். குறிப்பிட்ட நேரத்தில் துறைமுகம் சேர்ந்திருக்க வேண்டும்.

   சரக்கு ஏற்றுதல் அல்லது இறக்குதல் முடிந்தபின் கட்டபட்டிருக்கும் கப்பல் உடனடியாக புறப்பட வேண்டும். கால தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் கட்டணம் டாலர்களில் கண்டிப்பாக செலுத்தவேண்டும். கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் இடத்திற்கும் கட்டணம் உண்டு. கப்பலை துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வரும் பைலட் (வழிகாட்டி) கப்பலுக்குள் வந்தபின் இஞ்சினில் கோளாறாகி தாமதித்தால், அப்போது கப்பலை கட்டியிழுத்து வெளியே கொண்டு செல்ல அணைந்த்திருக்கும் டக் போட், மூரிங் கேங் ஆகியோருக்கும் அதிக தொகை கொடுக்க வேண்டும்.

  கப்பலின் முதலாளிக்கு தினசரி வாடகையாக பணம் கொடுப்பது, சார்ட்டர், அதாவது சரக்கை கையாளும் நிறுவனம். கப்பலின் இயந்திரங்களின் கோளாறினால் ஏற்படும் தாமதத்திற்கு சார்ட்டர் பொறுப்பேற்க மாட்டார். அது கப்பல் முதலாளி தலையில் விழும். 

  இயந்திர கோளாறுக்கு காரணம் காட்டி இஞ்சினியர்,காப்டன் வேலையிழக்க நேரிடும்.

  எங்களின் வேலை இயந்திரங்களுடன். ட்ரபுள் சூட்டிங் (troubleshootting) அதாவது diagnosing டாக்டர் நோயை கண்டுபிடிப்பது போல இயந்திரத்தின் பிரச்சனையை கண்டுபிடிக்க தெரிந்தவர் நல்ல இஞ்சினியர். இயந்திரத்தின் மொழியான, சூடு,அதிர்வு, சப்தம் ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கும் அனுபவம் உள்ள இஞ்சினியர்கள் இருந்தால் கப்பல் நிற்காமல் ஓடும். 

  இயந்திரங்களுக்கு அரசியல் கிடையாது,லஞ்சம் கேட்காது, மதுப்பழக்கம்இல்லை, ரூம் போட்டு ஒரு பெண்ணையும் கூட்டி தா என கேட்கவே கேட்காது.

  இந்த கப்பல் தொழில் சிறப்பாக நடக்க வேண்டுமெனில் கரையில் கப்பலை கரையணைய வைத்தல், குடியுரிமை சோதனை, சுங்கம், பைலட் அரேஞ்மெண்ட் என சிக்கலான நிறைய பணிகளை துறைமுகத்தில் செய்யவேண்டியிருக்கிறது.

  அந்த ஷிப்பிங் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை செய்யும் அமுதன் தான் அஸ்தினாபுரம் கதையின் நாயகன்.

  ஒவ்வொரு முறையும் கப்பல்களை கரையனைய வைத்து சரக்கு நிறைத்து அல்லது சரக்கு இறக்கி பாதுகாப்பாக கப்பலை வெளியே அனுப்பும்முன் அமுதன் சந்திக்கும் சிக்கல்கள், தலைமை அலுவலகம் தரும் அழுத்தம், சகஅதிகாரிகள், ஊழியர்களின் ஒத்துழையாமை, அவர்களுக்குள் இருக்கும் அரசியல், துறைமுக அதிகாரிகள், காவலர்கள், வாகன ஓட்டிகள், சரக்கு ஏற்றும் இறக்கும் தொழிலாளர்கள், போட்டி நிறுவனங்கள் என எந்த நிமிடத்திலும் நினைத்தே பார்க்க முடியாத பிரச்சனைகள் எழக்கூடும். 

நூல் ஆசிரியர் ஜோ டி குரூஸ் 


 இவை அனைத்தையும் தனது அனுபவம், தொலைநோக்குடன் கூடிய பார்வை, அதிகாரிகளுடன் பணிவாக பேசுதல் என மிக திறமையாக செய்கிறார் அமுதன். 

     துறைமுக தலைமை பொறுப்புக்கு வரும் அதிகாரிகள் அதற்குரிய அறிவும், தொலைநோக்கு பார்வையும் இல்லாததால் உள்ளூர் துறைமுகங்களுக்கு வரவேண்டிய வருமானம் வெளிநாட்டிற்கு செல்வதை (சிங்கப்பூர் துறைமுகம்) அத்தியாயம் இருபத்தி ஆறில் விரிவாக விவரிக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். அரபிக்கடலில் குஜராத் முதல் வங்காள விரிகுடா கல்கத்தா வரை மிக நீண்ட கடற்கரையை கொண்ட இந்தியா கப்பல் தொழில் ஜொலித்து, பல ஆயிரம் கோடிகள் அந்நிய செலவாணியை ஈர்க்க தவறியதை சொல்வதும் நேர்த்தி.

 தான் செய்யும் பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்வதால் அமுதனுக்கு ஓய்வு நாளிலும் பணி செய்ய நேர்கிறது. நள்ளிரவு, அதிகாலை என எந்த நேரத்திலும் துறைமுகத்தில் ஏற்படும் விபத்து, அலுவலக்கத்தில் நடக்கும் குளறுபடி என அமுதனை போனில் அழைக்கிறார்கள். பிறரால் சரி செய்யமுடியாத எல்லா சிக்கல்களையும் தனது விவேக புத்தியால் தீர்த்து கப்பல்களை உரிய நேரத்தில் அவரால் அனுப்பிவைக்க முடிகிறது.

 ஆமந்துறை கடற்கரை கிராமத்தில் பிறந்த அமுதன் சென்னையில் முனைவர் ஆய்வில் இருக்கும்போது வழிகாட்டியால் பல ஆண்டு இழுத்தடிக்கப்பட்டு, அவரின் வீட்டு வேலை, அவரின் கீப்புக்கும் பணிவிடை செய்தும் பலனில்லாமல் ஆய்வை முடிக்காமலே வெளியேறுகிறார்.

 கட்டிய மனைவியை பிரிகிறார், பெற்ற தாயால், உடன்பிறந்த சகோதரனால் வஞ்சிக்கபடும் அமுதன். தாய் எஸ்கலின், இப்படியும் ஒரு தாய் இருப்பாளா? என அதிர்ச்சியடைய வைக்கிறது. கணவன் அமுதன் அருகில் இருக்கும்போதே, மனைவி புனிதாவிடம் தாலியை கழற்றி வாங்கும் காட்சி. 

 வாழ்வை துவங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் பிரச்சனையை சந்திக்கிறார். கொஞ்சம் நிம்மதி முதல் திருமண பிரச்சனைக்களுக்கிடையில் இரண்டாவதாக திருமணம் செய்யும் தாய், தந்தையை இழந்த ஆனந்தி மற்றும் அவரது குழந்தைகள் எழிலன், அமலா மட்டுமே.

  பெற்ற தாய், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் என கூடவே இருக்கும் மனிதர்களின் குரோதம், கசப்பு, தந்திரம், சூழ்ச்சியை அமுதனின் மனக்குமுறல்களாக கொட்டபட்டுள்ளது.  

  பெரும்பாலானோர் அறியாத கப்பல் தொழிலின் ஒரு பக்கமான ஏஜென்சியின் பங்கு என்ன என்பதை மிக விரிவாக சொல்கிறது. ஒரு துறைமுகம் எப்படி இருக்க வேண்டும். அதில் இன்னன்ன வசதிகள் இருந்தால், அதிகாரிகள் எப்படி இருந்தால் துறைமுகமும் கப்பல் தொழிலும் சிறக்கும் என்பதை துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது.

  என்னை போன்ற கப்பலில் வேலை செய்பவர்களுக்கு பணியில் இணைந்துவிட்டால் கப்பல் நின்றாலும், ஓடினாலும் சம்பளம் உண்டு. ஆனால் கப்பல்களில் சரக்கை, நிறைத்து உரிய இடத்தில் சரியான நேரத்தில் இறக்கினால் மட்டுமே கப்பல் முதலாளிகளுக்கும் அது சார்ந்து வாழும் பல கோடி பேருக்கும் வருமானம்.

   கடல் வாணிபம் லாபத்தை கொட்டி கொடுப்பது மட்டுமல்ல, மிககுறைந்த செலவில் பொருட்களை கொண்டு செல்ல முடிவதும் நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே. அதில் சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம் போன்றவை வெற்றிபெற்ற நாடுகள். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிய நாடு இந்தியா என்பதும் இந்த நாவலை வாசித்ததில் புரிந்தது.

  விறுவிறுப்பான நடையில் கப்பல் போக்குவரத்தின் ஒரு பக்கத்தை வாசகர் புரியும் மொழியில் சொல்லியிருகிறார். அவர் அந்த துறையில்தான் பணிபுரிகிறார் அந்த அனுபவத்தாலேயே மிக விரிவாக இதில் சொல்ல முடிந்திருக்கிறது.

 நான் பிறந்த கிராமமான மணவாளகுறிச்சி நாவலில் இருமுறை வருவதும் மகிழ்ச்சியை தந்தது.

  நான் பணிபுரியும் கப்பல் துறையில் நான் அறியாத மறுபக்கத்தை அஸ்தினாபுரம் நாவல் அனுபவமாக தந்தது. 

நன்றியும், வாழ்த்துகளும் ஜோ.டி.குருஸ் ஸார்.

நாஞ்சில் ஹமீது.

(கப்பல் காரன்)



Saturday, 6 June 2026

ஈராக் போர்முனை - சஜீ

 

     இளம் எழுத்தாளர் சஜீ ஈராக் போர்முனை அனுபங்கள் குறித்து எழுதிய குறிப்பு.




மணவாளக்குறிச்சியை பூர்வீகமாகக் கொண்ட அண்ணன் ஷாகுல் ஹமீதின் "ஈராக் போர்முனை அனுபவங்கள்" எனும் இந்நூல் கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பாக வெளிவந்துள்ளது. ஏழ்மைக் காரணமாக இளம் வயதில் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்ற தன்னுடைய வாழ்வனுபவங்களைப் போர்முனையில் நின்று வாழ்ந்து எழுதியுள்ளார் எழுதியுள்ளார் நாஞ்சில் ஹமீது. தினம் தினம் பொழியும் குண்டு மழைக்கு நடுவே அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்கும் ஓர் எளிய இளைஞனாக மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையே அவர் நடத்தியிருக்கும் போராட்டம் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்தொழுகும். 

தன் கைப்புண்ணியத்தில் சமைக்கும் உணவை தான் உண்ணுவேன் என்று எந்த உத்தரவாதமும் இல்லாத ஓர் சூழலில் ஏழ்மை வாழ்க்கையிலிருந்து முன்னேற துடிக்கும் ஓர் இளைஞன் தான் தேர்ந்தெடுத்த சவாலான பணிக் குறித்தும், அதிலுள்ள இக்கட்டான ஆபத்துக் குறித்தும் இந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். 

ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடைய கடவுச்சீட்டு உள்பட அனைத்துச் சான்றிதழ்களும் தீக்கிரையானதும், செல்வம் சேர்க்கச் சேர்த்த கல்வி தடமே இன்றி அழிந்ததும், குண்டுவெடிப்பில் தன்னுடைய நண்பன் படுகாயம் அடைந்ததும், உலகமெங்கிலுமிருந்து கிடைத்த நல்ல நட்புக்கள் குறித்தும் இந்நூலில்  உருக்கமாக பதிவு செய்துள்ளார். அதோனோடு சதாமை பற்றியும், அமெரிக்க இராணுவத்தைப் பற்றியும், போர் காரணமாக ஈராக்கின் திக்ரித், பாக்தாத் போன்ற நகரங்களின் வாழ்க்கை சூழலையும் விரிவாக கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார். 

முப்பது நான்கு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் ஓர் பெரும் நாவலுக்கான களத்தைக் கொண்டுள்ளதோடு எளிய வாசிப்பிற்கும் ஏதுவாகவும் அமைந்துள்ளது. 

வாழ்த்துக்கள் அண்ணா. 


ஈராக் போர்முனை அனுபவங்கள்

ஆசிரியர் - நாஞ்சில் ஹமீது 

பதிப்பகம் - யாவரும்

விலை - ₹ 250

மூத்த எழுத்தாளருடன் சஜீ 


Saturday, 30 May 2026

பக்ரீத்


        கப்பலில் முன்பெல்லாம் பண்டிகைகளே தெரியாது. இம்முறை சென்னையில் வாழும் இளையவள் கிருத்திகா குறுஞ்செய்தி அனுப்பி கேட்டாள். “அண்ணா பக்ரீத் எப்போது” என. “இன்றும், நாளையும் என பதிலனுப்பினேன்”. இம்முறை ஒரு நீண்ட பக்ரீத் பெருநாளாக இருக்கிறது.

3rd  officer Asad 

Chief officer Dinesh 


  இருபத்தி ஏழாம் தேதி புதன்கிழமை அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவில் தியாகத்திருநாள் (பக்ரீத் பண்டிகை) கொண்டாடப்பட்டது. புருனே, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் கேரளா தவிர மற்ற பகுதிகளில் வியாழக்கிழமை பக்ரீத்தாக இருந்தது.

   என் வீடு இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் புதன்கிழமை பக்ரீத் தொழுகை காலை ஏழு மணிக்கு நடந்தது. சுனிதா அருகிலுள்ள பள்ளியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினாள். மகன்கள் இருவரும் வியாழக்கிழமை பெருநாள் தொழுகைக்கு சென்றனர். அவர்களுக்கும் ஊரிலிருந்த உறவினர், நண்பர்களுக்கும் வியாழக்கிழமை தான் பாண்டிகை நாளாக இருந்ததது.

  கப்பல் கடந்த ஞாயிறு மாலையில் ஹாங்காங் அருகிலுள்ள சீனாவின் சுகாய் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டது. பூமத்தியரேகையையொட்டிய பயணம் ஆதலால் கடும் வெப்பம்.

Main engine air cooler 



  துல்கஜ் மாதம் பத்தாம் நாள் தான் பக்ரீத் பண்டிகை. துல்கஜ் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் நோன்பிருந்து சௌதியின் அரபாவிலுள்ள மினா மைதானத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை காபாவை நோக்கி சென்று ஏழு முறை தவாப் செய்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவர் ஹாஜிகள். உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் துல்கஜ் ஒன்பதாம் நாளில் நோன்பிருப்பர்.

  கப்பலில் இந்தோனேசியாவை சார்ந்த மூன்றாம் இஞ்சினியர் செய்னல் அன்று காலையில் என்னிடம் கேட்டார் “நோன்பு வைத்திருக்கிறாயா” என. கடும் வெப்பமாக இருந்ததால் நான் நோன்பு வைக்கவில்லை.



    கடந்த ஞாயிறு துறைமுகம்விட்டபின் திங்கள்கிழமை ஓய்வுநாள். கப்பலின் முக்கிய இயந்திரத்தின் காற்று குளிர்விப்பானில் நன்னீர் ஒழுகல் இருந்ததை மூன்று வாரங்களுக்கு முன் கண்டுபிடித்தோம்.


  கப்பலை நிறுத்திதான் அந்த பணியை செய்யமுடியும். அதற்கு கப்பல் முதலாளி மற்றும் மேனேஜர், சரக்கை கையாளும் நிறுவனத்திடம் அனுமதிபெறவேண்டியது கட்டாயம். முக்கியமாக கப்பல் முதலாளிக்கு தினசரி வாடகை தரும் சரக்கு நிறுவனம் அனுமதி தரவேண்டும்.

  கப்பலை பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி பணியை துவங்கி முடிக்க குறைந்தது ஒரு நாளுக்கு மேலாகும். இந்த கப்பல் இரட்டை இன்ஜின்களை கொண்டது. ஒரு இஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும் பழுதான இன்ஜினின் பணி செய்ய இஞ்சின் தயாரிப்பு நிறுவனம் ஒத்துகொள்ளவில்லை.

  இறுதியாக சரக்கை கையாளும் நிறுவனம் இருபத்தி நான்கு மணிநேரத்துக்கு மட்டும் கப்பலை நிறுத்த அனுமதி வழங்கியது. அதற்கு மேல் ஆகும் நேரத்திற்கு கப்பலின் வாடகை தரமாட்டோம் என உறுதியாக சொல்லிவிட்டார்கள். சீன துறைமுகத்துக்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நின்றால் பணம் கட்ட வேண்டும். எனவே காப்டன் பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் பாய்ச்சாமல் கப்பலை நிறுத்துவோம் என்றார்.

  சீனாவிலிருந்து புறப்பட்டு இரண்டு நாள் பயணித்த பின்னரே போக்குவரத்து இல்லாத பாதுகாப்பான இடம் வரும். பண்டிகை தினமான அன்று கப்பலை நிறுத்தும் நாளும் வந்தது. முந்தையநாள் பணி விவாதத்தின் போது கொரியாவின் முதன்மை இஞ்சினியர் சூன் லீ “காப்டன் இதுதான் பாதுகாப்பான இடம் என சொல்கிறார் எனவே நாளை கப்பலை நிறுத்தி கூலர் பணியை செய்வோம் உனக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா” எனக்கேட்டார்.

  புதன்கிழமை காலை எட்டு மணிக்கு கப்பலை நிறுத்தி இரு குழுவாக பிரிந்து வேலையை துவங்கினோம். வியாழன் காலை ஐந்து மணிக்கு பணி முடிந்து இஞ்சின் இயக்கப்ட்டு கப்பல் நகர்ந்தது. நான் அதிகாலை நான்கரைக்கே அறைக்கு வந்து குளித்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அடிவானம் வெளுக்க துவங்கியிருந்தது. காலை நேர பஜர் தொழுகையை நிறைவேற்றியபின் கதிரெழும் நேரம் ஐந்து மணி நான்கு நிமிடம் என காபாவின் திசை மற்றும் தொழுகை நேரத்தை காட்டும் ஆப் சொல்லியது. 



   கதிரெழுவதை பார்த்துவிட்டு உறங்க சென்றேன். ஒன்பதரைக்கு மேல் விழித்து மீண்டும் குளித்து பெருநாளுக்காக வைத்திருந்த புதிய சட்டையை அணிந்து இரண்டு ரக்காத் சுன்னத் தொழுது இரண்டு பேரீச்சைபழம் மட்டும் சாப்பிட்டேன். பிரிட்ஜில் மூன்றாம் அதிகாரி ரத்னகிரியின் அசத். அவருக்கு வாழ்த்து சொல்ல பிரிட்ஜில் சென்றேன். 

முதன்மை அதிகாரி மலேசியாவின் தினேஷ் “அண்ணே எல்லாரும் டயர்டா இருப்பீங்க, நாளைக்கி பெருநாள் ஹாலிடே, மத்தியானம் மட்டன் பிரியாணி செய்ய சொல்லீருக்கேன்.” என்றார். “இன்னும் தூங்காமல் என்ன செய்கீர்கள்” எனக்கேட்டார். பன்னிரண்டு மணி மதிய உணவுக்குப்பின் மூன்று முதல் ஐந்துவரை தூங்கினேன். முழுநாளும் தூக்கத்திலேயே கழிந்தது.









  வெள்ளிகிழமையன்று காலை பத்துமணி மீட்டிங் முடிந்தபின். அடுமனை சென்று சமையலுக்கு கொஞ்சம் உதவினேன். மதிய உணவாக மட்டன் பிரியாணி, பப்படம், வெங்காய ரைத்தா. பிலிப்பினோ, கொரியர்களும் இருப்பதால் ஆவியில் வேகவைத்த சாலமன் மீன், நண்டும், கணவாயும் சேர்ந்த கறி, நூடுல்ஸ், சிக்கன் நகட்ஸ், வெஜ் ரோல்ஸ், ரோஸ்ட்ட் போர்க், பீப் மின்ஸ், கிம்ச்சி, வாழைப்பழம், திராட்சை ஆகியவையும் இருந்தது. குடிபிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றம். இம்முறை சைனாவில் வாங்கி பீர்கள் அனைத்தும் ஆல்கஹால் இல்லாத (NON ALHAHOL ) வையாக சப்ளை செய்துவிட்டார்கள்.




  மதிய உணவவிற்குப்பின் விளையாட்டு போட்டிகள் துவங்கியது, மூன்று அணிகளாக பிரிந்துகொண்டோம். வாயில் கவ்விய கரண்டியில் திராட்சை பழத்தை வைத்து நடந்து இலக்கை எட்டியபின் சக அணியிலுள்ளவரின் வாயிலிருக்கும் கரண்டியில் திராட்சையை கைதொடாமல் மாற்ற வேண்டும்.




 இரு கால்களிலும் சாக்கு பையை நுழைத்து அமர்ந்த நிலையில் இலக்கை தொட்டு திரும்புதல். கப்பலின் பாகங்களை எழுதிய துண்டு நெற்றியில் ஒட்டப்படும் சக அணியை சேர்ந்தவர் எதிரில் இருப்பார். அவரிடம் இதுவா,இதுவா எனக்கேட்டுகொண்டே வந்து சரியான விடையை கண்டுபிடிப்பது. அவர் ஆம்,இல்லை,இருக்கலாம் என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும்.




  மூன்று மணிக்கு மேல் மேஜை பந்து விளையாட்டு துவங்கியது. மொத்தம் பத்து அணிகள். ஒவ்வொரு அணியும் ஐந்து போட்டிகளில் விளையாடவேண்டும். மொத்தம் இருபத்தியைந்து போட்டிகள். பதிமூன்று போட்டிகள் மாலை ஆறு மணிவரை நடந்து முடிந்தது. நானும், முதன்மை அதிகாரியும் ஓரணி. விளையாடிய மூன்று லீக் போட்டியிலும் வென்றோம்.



  இன்று சனிக்கிழமை வேலைகள் மட்டுமே. அரை நாள் விடுமுறை. அலாரம் டெஸ்ட் செய்வது மட்டுமே என் பணி. மதியம் மூன்று மணிக்கு மேல் மீதமுள்ள லீக் போட்டிகள் நடந்தது. அனைத்து லீக் போட்டியிலும் வென்று அரையிறுதிக்கு என் அணி தகுதி பெற்றது. நாளை ஞாயிறு பத்துமணிக்குமேல் அரையிறுதி போட்டியும், இறுதி போட்டியும் நடக்கும். 

  புதன்கிழமை அரபுவளைகுடா, மலேசிய, சிங்கப்பூர் உறவுகள், சுனிதாவுக்கு பக்ரீத் பெருநாள், மறுநாள் உலகின் பிறபகுதியிலுள்ளவர்கள் கொண்டாடினர். எனக்கும் அன்றுதான் பக்ரீத். வேலை காரணமாக பக்ரீத் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை அதை தொடர்ந்த போட்டிகள் ஞாயிறு வரை தொடர்வதால். இம்முறை ஐந்து நாட்கள் பக்ரீத் பண்டிகையாக இருக்கிறது. வழக்கமாக கப்பல்களில் பண்டிகைகள் கடந்து செல்வதே தெரியாது குறிப்பாக அன்றும் பணி நாளாக இருக்கும்.



  இம்முறை பக்ரீத் வாழ்த்து அனுப்பியவர்கள் ஆட்டின் படத்துடன் ஸ்டிக்கர் அனுப்பியிருந்தனர். இப்ராஹீம் நபி இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு வயதான காலத்தில் பெற்ற குழந்தையை பலியிட தயாராவார். அப்போது இறைவனின் அசரீரி ‘உம்மை சோதித்தோம், மகனை பலியிட வேண்டாம், ஒரு ஆட்டையோ, மாட்டையோ, ஒட்டகத்தையோ பலியிட்டு ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் பங்கிட்டு நீங்களும் உண்ணுங்கள்’ என கேட்கும். 

அவரது தியாகத்தை எல்லோரும் நினைவு கூர்வதே தியாக திருநாளாக கொண்டாடபடுகிறது.

நாஞ்சில் ஹமீது,

30 may 2026.

sunitashahul@gmail.com 

Sunday, 24 May 2026

கடல் – வாசிப்பனுவம்

   

 


ஆசிரியர் ஜெயமோகன் எழுதிய கடல் நாவலை ஞாயிறு ஓய்வாக இருந்தபோது மதியம் வாசிக்க துவங்கினேன் ஒரே நாளில் முன்னூற்றியைம்பது பக்கங்கள் வாசித்து விட்டேன். பின்பு வேலைநாட்களாக இருந்ததால் இரவில் தூங்க செல்வது வரை கொஞ்சம் வாசிப்பு என வியாழன் இரவில் முடித்தேன்.

   கையில் எடுத்தபின் கீழே வைக்கவே முடியாதபடி விறுவிறுப்பான நாவல் மொத்தம் 555 பக்கங்கள்.

சாம் எனும் பாதிரியாரை நாற்காலியில் கையில் துப்பாக்கியுடன் அசையாமல் இருக்க சொல்லி தாமஸ் சொல்லுமிடம் தான் துவக்கம்.

  பெரும் வணிகரான ஜேம்ஸ் பெர்னாண்டோ மற்றும் மணப்பாடு சாலோம் மாளிகையில் வாழ்ந்த தம்பதிக்கு தங்க தொட்டிலில் பிறந்து வளரும் பணக்கார பணியடிமை சாம் பெர்னாண்டோ.வேலைகாரியின் குழந்தையை வெயிலில் சிமெண்ட் தரையில் போடுவதை பார்த்து தந்தையை வெறுக்கிறார். 

 கல்விபயில சென்னைக்கு செல்லும் சாம் கிறிஸ்தவ மதகுருவாக முடிவெடுத்து செமினரியில் சேருகிறார். அங்கே கடும் தவங்களை செய்து தான் ஒரு புனிதராக மாற விரும்புகிறார். புனிதர் என்றே தன்னை நம்புகிறார்.

 தான் பணிபுரிந்த சர்ச்சில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட அக்னீஸ் மேரியின் குழைந்தையை காப்பாற்றியபின் அந்த ஊரில் புனிதராகவே வலம் வருகிறார். காலில் விழுந்து ஆசி பெற்ற அவ்வூர் மக்களே அவரை அடித்து காறிதுப்பி சிறைக்கு அனுப்புகின்றனர். இறைவனை நம்பிய பாதர் சாமின் மனம் அமைதியின்றி ஊசலாடுகிறது. 

 கடற்கரையின் மகன் தாமஸ். தாய் சாகயமேரிக்கு அந்த சமூகம் தரும் கொடுமைகளை,கீழ்மைகளை காண்கிறான். தாய் இறந்த அன்றே அனாதையாகிவிடும் தாமஸ் தாயின் அடக்கத்திற்குபின் வந்து பார்க்கும்போது குடிசையே காணாமல் போய்விட்டது. பட்டினி போராட்டத்தில் வளர்ந்தபின் எதையும் செய்ய துணிகிறான். அன்றாடத்தில் வாழ்பவன் கடலின் மகன். மீன் பிடிப்பதிலும்,சுறா வேட்டையிலும்,பெர்க்மான்சுக்காக செய்யும் கடத்தல் வேலைகளிலும் உள்ளூர உணர்ந்து தெளிவாக செயல் புரிகிறான். அலைபாயாத மனம் கொண்ட அவனால் கடலையை வசப்படுத்தியது போல் பயமின்றி செய்கிறான் செயல்களை. எதுவும் பாவம் இல்லை அவனுக்கு. ஊர் மக்கள் அனைவரும் அவனை பாவத்தில் பிறந்தவன் என்று வெறுக்கிறது.

  செமினரியில் வகுப்பெடுக்கும் பெர்க்மான்ஸ் சாமினால் பாவத்தின் பக்கம் வருகிறார். அறிவாளி,இசை,ஓவியம்,அழகியல் என ஒரு ஆளுமை ஆவர். செய்யும் அனைத்து பாவ செயல்களனைத்தையும் தெளிவாக செய்கிறார். தன்னை சாத்தானின் பக்கம் திருப்பிய சாமையும் நினைத்து கொள்கிறார் புனிதரை சாத்தானின் மூலம் வீழ்த்துவதே வெற்றி என நம்புகிறார்.

பியா ஷணத்தில் வாழ்பவள். மனதில் எதையும் நினைவாக சேமிக்காததால் அவள் தான் புனிதர். மருத்துவம் செய்யும் செவிலி பெண்ணாக வரும் பியாவை ஊர் மக்களனைவரும் புனிதராகவே நம்புகின்றனர். எந்த இறப்பும் அவளை பாதிப்பதே இல்லை.

 கடலில் கட்டுமரம் அடித்து இறந்துபோகும் இளைஞரின் மரணம் பற்றி தாமஸ் கேட்கும் இடம் “உங்களுக்கு வருத்தமே இல்லியா”

“எதுக்கு” 

“ஒருத்தன் செத்து போயிருக்கான்இல்ல?”

“அவன் ஆண்டவன் கூடத்தானே இருப்பான்” என என பியா சொல்லுமிடம்.

 கடலிலிருந்து கடல் நாவலை வாசித்தேன். கடந்த வாரங்களில் ஏழாம் உலகம்,அனல் காற்று என நாவல்களை வாசித்திருந்தேன். ஒவ்வொன்றும் வேறு,வேறு உலகங்களை சொல்லும் படைப்புகள்.

 கடலில் நடக்கும் ஆயுத கடத்தல்கள்,கப்பல்கள் படகுகள் என விவரணைகள் மிக துல்லியம்.குறிப்பாக எதிர்பாராத திருப்பங்களுடன் திரில்லர் நடையில் இருப்பதால் கடல் நாவலை கையில் எடுத்தபின் கீழே வைக்கவே முடியவேயில்லை.

  பாவமும்,புண்ணியமும் மனித மனதை பொறுத்தே,பாவம்,புண்ணியம் என இருக்கிறதா எனும் கேள்வியை இறுதியின் தந்தது கடல் நாவல்.

இருபத்தியொரு ஆண்டுகளாக கடலிலேயே இருக்கிறேன். கடலம்மா கருணை காட்டவில்லை என்றால் எதுவும் நடக்காது. அவள் எப்போது சீறுவாள்,எப்போது சாந்தமாவாள் என்பது யாரும் கணிக்க முடியாது. அவ்வகையில் நாவலில் பிடித்த வரிகள் என ஏராளம். கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வரிகள் 

“லே கடலுக்குள்ள வந்துட்டியண்ணா,பின்ன உனக்கு ஒரு மனுசனும் கூட்டு இல்ல பாத்துக்க.நீயும் கடலும் மட்டுமாக்கும்,கடலம்மோன்னு விளிசிட்டு கைவிரிச்சி நிக்க வேண்டியதுதான். அவ வளத்தணுமானா வளத்துவா கொல்லனுமான கொல்லுவா”.

 “கடலம்ம அள்ளிகுடுப்பா ஆத்திரம் வந்தா அள்ளி வாயிலயும் போட்டுகிடுவா”

  இவை உண்மையும் கூட.

ஷாகுல் ஹமீது.

Thursday, 30 April 2026

விடுமுறை நாட்கள்

 


    அதிகாலை குளியலுக்குப்பின் ஆறரை மணிக்கு பிரிட்ஜில் அழைத்தேன். “காப்டன்” என பதில் வந்தது, “காஸ் பிட்டர், வாட் டைம் ஸ்டேஷன்” எனக்கேட்டேன். ஏழு மணி என பதிலளித்தார்.

 நேற்றிரவே இரண்டாம் அதிகாரி சொல்லியிருந்தார் காலை ஏழு மணிக்கு பைலட் என.காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவதால் போனில் அழைப்பான் வைப்பதே இல்லை.ஆறரை மணிக்கு தயார் ஆனால் போதும். இரவுகளில் பத்துமணிக்கே தூங்க சென்று விடுவேன். அதிகாலை ஐந்துக்கு முன்பே விழிப்பு தானாவே வந்துவிடும். இந்த ரமலானுக்கு பின் இரவுணவு சாப்பிடுவதில்லை நாற்பது நாட்கள் ஆகிவிட்டது. டீ,காபியும் இல்லை.இரவு ஏழு மணிக்கு முன்பாக ஊற வைத்த ஐந்து பாதாம்பருப்பு, ஒரு கப் பால். இரவில் வயிறும்,உடலும் லேசாக இருக்கிறது கனமே இல்லை அதனாலேயே நல்லுறக்கம்.காலை ஏழேகால் மணிக்கு காலை உணவுக்கு செல்வேன்.

  இன்று காலை ஆறு நாற்பதுக்கே ஸ்டேஷன் என ஒலிபெருக்கியில் அறிவித்தார் காலை பணியில் இருந்த மலேசிய மூன்றாம் அதிகாரி சபரி. ஆடை மாற்றி டெக்கில் செல்லும்போது குட்மார்னிங் என முகம் பார்த்து புன்னைகைத்து வயதான பைலட்டை தொடர்ந்து ஒரு இளம் பைலட்டும் பிரிட்ஜை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.கேடட் பிலிப்பைன்சின் ரிஜி அழைத்து சென்றுகொண்டிருந்தார்.

  ரிஜி இம்மாதம் நான்காம் தேதி கொரியாவில் பணியில் இணைந்தான். இருபத்திநான்கு வயதான ரிஜி பணியில் இணைந்த இருதினங்களில் அவனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இளம் தந்தையான அவனுக்கு வாழ்த்து சொல்லி நலம் விசாரித்தபோது இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றான். முப்பது வயதான அவனது கேள்ல் பிரண்ட் அவளது பொற்றோருடன் இருப்பதாக சொன்னான். 

 பெரிய ப்ளே பாயாக இருந்திருப்பான் போல. தேநீர் இடைவேளைகளில் ஆந்திராவின் இருபத்தைந்து வயதான ஓஎஸ் பிரதீப்புக்கு பெண்களுடன் உறவுகொள்வது எப்படி என வகுப்பெடுக்கிறான்.

  பிலிப்பைன்ஸ் பணியாளர்கள் இரண்டு அல்லது மூன்று வங்கி கணக்குகளில் பணம் அனுப்புவார்கள். திருமணதிற்கு முன் ஒரு குழந்தை பிறந்திருக்கும் அவனது பதினேழு வயதில் அந்த குழந்தையின் தாய் பிரிந்து சென்றிருப்பாள். வேறு கல்யாணம் செய்திருப்பான் ஆனாலும் ஒரு கேள்ல் பிரன்ட் நிச்சயம் இருப்பாள்.

  கேரளாவின் வயதான பத்திசாப் அலெக்ஸாண்டர் சொல்வார். “எந்தா ஒரு லைப் இவ மார”என்று. முன்பு என்னுடன் பணிபுரிந்த சாங் என்பவனின் மனைவி பழைய காதலுடன் சென்றுவிட்டாள். அவனது வீட்டில் உடன் பிறந்தவர்கள் தாய் உட்பட பதினாறு பேர். குடும்பத்திற்கும் பதினாறு வயதில் கல்லூரி படிக்கும் மகளுக்கும் சாங் பணம் அனுப்புவார்.

  வாங் தாவ் துறைமுகம் கடலிலிருந்து பதினேழு மைல் தொலைவில் இருக்கிறது. கடலில் இணையும் ஆற்றில் மிகப்பெரிய கப்பல்கள் வர முடியும். இங்கிருந்து ஹோசிமின் சிட்டி வரை இந்த ஆறு கொஞ்சம் சிறிதாக நீள்கிறது. இங்கே இறக்கப்படும் சரக்கு பெட்டகங்களை ஏற்றி சிறு கப்பல்கள் ஹோசிமின் சிட்டி வரை பயணிக்கிறது என கணிக்கிறேன். தேடிப்பார்த்து உறுதி செய்யவேண்டும்.

  நிறைய சிறிய கப்பல்கள் ஆற்றில் சென்றுகொண்டே இருக்கிறது. ஏழு மணிக்கு நான்கு டக் போட்கள் கப்பலுடன் கட்டப்பட்டு கரையிலிருந்து இழுந்து பின்னோக்கி நகர்ந்து ஆறு கிளை பிரியும் இடத்தில் பாதுகாப்பாக திருப்பி பயணிக்க தொடங்குகையில் எட்டு மணியாகியது.காலை உணவுக்குப்பின் முதன்மை அதிகாரி தினேஷ் “அண்ணா இஎஸ்டி கவர் எல்லாம் போட்டு செக்யூர் பண்ணிருங்க,ரெஸ்ட்க்கு போங்க, நாளைக்கு மே டே ஹொலிடே” என்றார். 

  காஸ் இஞ்சினியர் அருண் “பாலாஸ்ட் சிஸ்டத்தை பிளஸ் பண்ணிருங்க” என்றார். இங்கே கிட்டதட்ட எண்பதாயிரம் மெட்ரிக் டன் திரவத்தை இறக்கினோம். கப்பலின் சமநிலைக்காக பாலஸ்ட்தொட்டிகளில் நீர் நிறைப்போம். ஆற்றுநீர் சகதி கலந்து இருந்ததால் காஸ் இஞ்சினியரும்,முதன்மை அதிகாரியும் இரவு முழுவதும் தூங்கவேஇல்லை . பலாஸ்ட் பம்ப் தந்த பிரச்சினையால்.

  இன்று காலை பத்தரை மணிக்கே எனது பணிகள் முடிந்துவிட்டது. காஸ் இஞ்சினியரும்,முதன்மை அதிகாரியும் கார்கோ கட்டுப்பாட்டு அறையிலிருந்தனர். “எங்கண்ணே போறீங்க செயர்ல உட்காருங்க” என்றார். பதினொன்றே கால் வரை அவர்களுடன் பேசிகொண்டிருந்தேன். சரக்கு நிறைக்க வந்த வழியில் பயணம் ஆஸ்திரேலியாவை நோக்கி. பதினொன்றாம் தேதி போய்சேர்வோம்.

Engine control room.


 இந்தவாரம் துவங்கிய வேகத்திலேயே முடிந்துவிட்டது.நாளை மே டே விடுமுறை நாள். சனிக்கிழமை அரைநாள் மட்டுமே பணி மாலையில் ட்ரில்ல்ஸ் இருக்கும்.பயணத்தில் இருப்பதால் இந்த வார ஞாயிறு விடுமுறை உறுதி.

நாஞ்சில் ஹமீது,

30 april 2026.

sunitashahul@gmail.com