Saturday, 8 February 2025

மீண்டும் என் எஸ் ப்ரண்டியருக்கு


       கப்பல் இந்தோனேசியாவிற்கு ஜனவரி பன்னிரெண்டாம் தேதி வரும் பத்தாம் தேதி வாக்கில் புறப்பட வேண்டும் என சொல்லியிருந்தார்கள். நான் பாண்டியில் fire fighting வகுப்பு முடித்து அங்கிருந்து மாலையில் புறப்பட்டு தாம்பரத்தில் இறங்கினேன். நண்பர் அசோக்கின் இல்லம் சென்று இரவுணவுக்குப்பின் சீக்கிரமே தூங்கி ஏழாம் தேதி காலையில் எட்டரை மணிக்கு தி நகர் பாலாஜி மெடிக்கல் சென்டர் சென்று சேர்ந்தேன்.

   மருத்துவ பரிசோதனை செய்து முடித்து அன்றிரவே ரயிலில் நாகர்கோவில் பயணம்.ஒன்பதாம் தேதி தற்போது குடியிருக்கும் வீட்டை காலி செய்து சாவியை ஒப்படைப்பாதாக உருதியளித்திருந்தாள் சுனிதா. வேறு வாடகைகாரர் வந்துவிட்டதால் சீக்கிரம் காலி செய்து தர வேண்டினார் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்.

  எட்டாம் தேதி காலை டவுண் ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு வந்து உடனே பொருட்களை ஒதுக்க தொடங்கினேன். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் முழு வீடும் காலி செய்து புதிய வீட்டிற்கு சென்று தூங்கும்போது அதிகாலை இரண்டு மணி.

    காலை பத்து மணிக்கு மேல் வீட்டின் சாவியை கேட்டு அழைத்துகொண்டே இருந்தார்கள். சுனிதா சாவியை மாலை நான்கு மணிக்கு தருவதாக சொன்னாள்.சில பொருட்கள் அங்கு இருந்தன.மாலையில் சென்று அவற்றையும் எடுத்துவிட்டு வாட்ச்மேன் கிருஷ்ணன்,துப்புரவு பணியாளர் கண்ணனுக்கு சுனிதா படியும் சில பொருட்களையும் கொடுத்துவிட்டு இரவு வீடு வந்து சேர்ந்தோம்.

   மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மும்பை அலுவலகம் அனுப்பும் மின்னஞ்சல்களால் மெயில் பாக்ஸ் நிறைந்துவிடும் கேட்கும் ஆவணங்களை அனுப்பிக்கொண்டே இருக்கவேண்டும்.

   எழாம் தேதி இரவு ரயிலில் இருக்கும் போது வந்த ஒரு மின்னஞ்சலை தவிர வேறேதும் வரவில்லை. வழக்கமாக நாலைந்து நாட்களுக்கு முன்பே முக்கிய ஆவணங்கள் பரிமாற்றம் முடிந்து விமான சீட்டு தகவலும் முடிந்துவிடும். தம்பி ஷேக் புருனே யுனிவர்சிட்டியில் பணிசெய்கிறார். விடுமுறை முடிந்து குடும்பத்துடன் புறப்படும் நாள் பத்தாம் தேதி முடிந்தவரை அடுத்த ஒராண்டுக்கான பொருட்களை கொண்டு செல்வார்கள். அவர்களது பயண பைகளை மூன்று ஆண்டுகளாக நான் தான் தயார் செய்து கொடுக்கிறேன். பத்தாம் தேதி அதிகாலை ஷேக் வீட்டிற்கு போய் பொருட்களை அடுக்கி எடை பார்த்து தயார்செய்தோம்.

  காலை பத்துமணிக்கு முன்பே எனது மருத்துவ அறிக்கையை கேட்டு மும்பை அலுவலகம் மெடிக்கல் சென்டருக்கு அனுப்பிய மின்னஞ்சலை கண்டேன். அடுத்த பத்து நிமிடத்தில் எனக்கு போன் வந்தது. “ஷாகுல் ஒரு உதவி செய் மெடிக்கல் சென்டருக்கு அழைத்து,உடனே ரிப்போட்டை அனுப்பச்சொல்” என.

    எனது மருத்துவ அறிக்கை கிடைக்காததால் தான் இன்னமும் விமான சீட்டு பதிவு செய்யவில்லை என புரிந்தது. நானும் இன்னும் இரு தினங்கள் கிடைத்தால் நல்லது என இருந்தேன்.

    பன்னிரெண்டாம் தேதிக்கு புறப்பாடு உறுதியாகி எனது பணி ஒப்பந்தம் அனுப்பிதந்தார்கள். அதை நகலெடுத்து கையொப்பமிட்டு அனுப்பிவைத்தேன். ஒரு நாள் தான் இருக்கிறது. கப்பலுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.

   எட்டாம் தேதி இரவே உம்மாவுக்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனைக்கு போய் வந்தாள். ஆனாலும் மறுநாள் சரியாகாமல் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள்.எனக்கு வேலைகள் குறையவேயில்லை. 

 பத்தாம் தேதி மாலையில்  தம்பி ஷேக் புறப்படும் முன் சுனிதாவுடன் போய் பார்த்து வழியனுப்பி வைத்துவிட்டு வந்தேன்.பதினொன்றாம் தேதி இரவுவரை விமான சீட்டு வராததால் பன்னிரெண்டாம் தேதி எனது புறப்பாடு இல்லை என்பதில் கொஞ்சம் அக மகிழ்வாக இருந்தது. பயணம் எப்போது என மின்னஞ்சல் அனுப்பி கேட்டேன். 

  நீ தயாராக இரு கூப்பிடும் போது பெட்டியுடன் விமான ஏற வேண்டும் என பதில் வந்தது. கப்பலில் இருக்கும் லீ மேன் இந்தோனேசியாவில் கப்பல் நங்கூரம் இடுவதா?இல்லை சரக்கை இறக்கியபின் நங்கூரமிடுவதா என்பது இன்னும் உறுதியாகாததால் காப்டன் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார் என்றார். 

 தம்பி ஷேக் விமானம் ஏறும் முன் உம்மாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு சென்றான். “உம்மாய பாத்தது கொஞ்சம் கஷ்டமாயிட்டு,முகத்துல ஆக்ஸிஜன் மாஸ்க்,மேலெல்லாம் என்னமெல்லாமோ டியுப் மாட்டிருக்கு என்றான்.

  சனிக்கிழமை மாலை பதினொன்றாம் தேதி என் அலுவலக உதவி மேலாளர் நிகிதா அழைத்து “ஷாகுல் நாளை நள்ளிரவு கத்தார் ஏர்வேஸில் உனக்கு டிக்கெட் பதிவு செய்கிறோம். மற்ற ஆவணங்கள் அனைத்தும் இன்று இரவுக்குள் அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

  மறுநாள் இரவு பதினோரு மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும்.பயண பையை தயார் செய்தல் ஆவணங்களை சரி பார்த்து வைத்தல், மினன்ஞ்சலில் வரும் ஆவணங்களில் தேவையானதை நகல் எடுத்தல் என என் பயணத்துக்கு மனதளவில் தயாராகி கொண்டிருந்தேன்.

  உம்மாவை மறுநாள் காலையில் போய் பார்க்க எண்ணியிருந்தேன். என் அக்கா மருத்துவ மனையில் இருந்தாள். மறுநாள் புறப்பட வேண்டும் எனும் தகவல் சொன்னேன். இரவு ஒன்பது மணிக்கு அக்கா அழைத்து “உம்மா உன்ன பாக்கணும்னு  சொன்னா” என்றாள். சுனிதாவுடன் புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்றேன். 

  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதியில்லை மறுநாள் வெளிநாடு புறப்படுகிறேன் எனச்சொல்லி அனுமதி கேட்டேன். உம்மா குளிரில் சிறு நடுக்கத்துடன் குளறும் குரலில் பேசினாள். போர்வையால் உம்மாவின் கைகளை போர்த்துவதை பார்த்து செவிலி கம்பளி ஒன்றை கொண்டு வந்து போர்த்தி விட்டாள்.

   மருத்துவ மனையிலிருந்து வெளியே வரும்போது நிகிதாவின் மின்னஞ்சல் வந்திருந்தது. மாமா மகன் ஷேக் பத்து மணிக்கு மேல் தான் கடையை பூட்டுவேன் எனச்சொன்னான். நகலெடுக்கும் ஆவணங்கள் அனுப்பிவிட்டு. வீட்டுக்கு செல்லும் வழியில் நகல்களை வாங்கிகொண்டு சென்றோம்.

      முதலில் ஆவணங்களை சரிபார்த்து அடுக்கினேன்.நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குமேல் டிக்கெட்டை பார்த்து வைப்போம் என தோன்றியதால் நிகிதாவின் மின்னஞ்சலை திறந்தபோது எனது விமான சீட்டு மாறியிருந்தது. தோஹா கத்தாருக்கு பதிலாக மும்பை வழியாக ஜகார்தாவுக்கு விமான சீட்டு பதிவு செய்யபட்டிருந்தது.

    நான் பன்னிரெண்டாம் தேதி மாலை நான்கு மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டாக வேண்டும். ஆவணங்கள் சரிபார்த்து விட்டு தூங்க வேண்டும் காலையில் பயணப்பையை  தயார் செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். வேறு வழியே இல்லை கப்பலுக்கு கொண்டு புதிய வீட்டில் பொருட்கள் எங்கும் சிதறி கிடந்தது. வழக்கமாக பொருட்களை அடுக்கும்போது சுனிதா “நகம் வெட்டி எடுத்தாச்சா,பல்லு தேய்க்கபிரஸ்,குளிருக்கு சுண்டுல போட லிப் பாம்,ஊசி,நூல் ஓறுமையா எடுங்கோ சாறே”என்பாள். 



  வீட்டில் சிதறி கிடந்த பொருட்களுக்கு நடுவே என் பொருட்களில் பாதி கிடைக்கவேயில்லை. நல்ல தூக்கத்தில் இருந்த சுனிதா “என்னத்த குடஞ்சிட்டு கிடக்குதியோ,ஓறங்கலியா என உளறினாள். அறையின் விளக்கை அணைத்து விட்டு டார்ச் லைட் வெளிச்சத்தில் என் பொருட்களை தேடினேன்.பலதும் கிடைக்கவேயில்லை. எரிச்சல்தான்  மிஞ்சியது படுத்து கண்மூடினேன்.எண்ணங்கள் ஒன்றன்பின்  ஒன்றாக தொட்டு தொட்டு காட்சிகளாக மாறினச.

 ஐ சி யூவில் இருக்கும் உம்மா குளறும் குரலில் பேசியது,மாலையில் உறவினர் பீர் முகம்மது அண்ணனின் மகன் அசாருதீன் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என இருந்தேன்.காலையிலேயே போய்வர வேண்டும்,போத்தீஸில் போய் கப்பலுக்கான பொருட்கள் வாங்குதல் என.தூங்காமலே நான்கு மணிக்கு விழித்துகொண்டேன். எனது துணிகளை துவைத்து குளித்து அதிகாலை தொழுகைக்கு பள்ளி வாசல் போய் வந்தேன். சுனிதா தொழுகை பாயில் இருந்தாள். “கப்பலுக்கு போணுமின்னா நமக்கு உறக்கமே வராதே” என்றாள்.

   கிடைக்காத பொருட்களை எடுத்து தந்தாள்.வீட்டில் நான் செய்து கொடுக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது. இனி என்னால் எதுவும் செய்ய முடியாது நீயே பார்த்துக்கொள் என நேற்றிரவே சொல்லியிருந்தேன்.இரவில் நான் பொருத்திய காஸ் அடுப்பில் புதிதாய் தோசை சுட்டு தந்தாள் .காலை உணவுக்குப்பின். கொஞ்சம் தூங்குகிறேன் என படுத்துக்கொண்டேன்.இருமுறை அறைக்கதவை திறந்து நான் தூங்குவதை பார்த்துச்சென்றாள் சுனிதா.

    ஒன்பதரை மணிக்கே தயாராகி வாங்க வேண்டிய பொருட்களை குறித்துக்கொண்டு புறப்பட்டேன். “பன்னிரண்டு மணிக்கு வருவேன் தயாராக இரு கல்யாண வீட்டுக்கு போணும்” என கிளம்பிசென்றேன். செட்டிகுளம் தாண்டி மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் இல்லம் அருகில் செல்லும்போது மருத்துவமனையில் உம்மாவின் காட்சி கண் முன்னால் ஓடியது. 

   போத்தீஸ் துணிக்கடையில் இரு பனியன்கள்,வாங்கியபின்,கீழ் தளத்தில் வாங்கிய பொருட்களுக்கு பில் போட சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். “பெரிய டாக்டர் ரௌண்ட்ஸ் வார நேரம்,இப்ப உள்ள உட முடியாது” என்றார் காவலர். நேற்றிரவு இருந்த காவலர் மாறி வேறு காவலர் பணியில் இருந்தார். நேற்று சொன்னதையே மீண்டும் சொன்னேன். “சாயங்காலம் வெளிநாட்டுக்கு போறேன்,ஆறாம் நம்பர்ல இருக்க பேசண்ட் பீமாக்க மோனாக்கும் நான்”.

 “எனக்கு எல்லாம் மனசிலாவும், கொஞ்சம்  நில்லுங்கோ, நான் விளிக்கேன்” என்றார். சிறிது நேரத்திற்கு பின் உள்ளே அனுமதித்தார்.உம்மா படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். “ஆராக்கும்” என செவிலி கேட்டாள்.

“எனக்க மொவன்” உம்மாவின் குரலும்,முகமும் சற்று தேறியிருந்தது. உம்மா சாயா வாங்கி கேட்டாள். நர்ஸ் கஞ்சி தண்ணி குடுக்கணும்,ஒரு பாக்கெட் தயிரும் வேங்கி தாங்க என்றாள். 

 அவற்றை வாங்கி கொண்டு போனபோது. “வெளிய நில்லுங்க பெரிய டாக்டர் இப்ப வருவாரு,அப்ப விளிப்போம் டாக்டர்ட்ட பேசுலாம்” என்றாள் நர்ஸ்.

மூத்த மருத்துவர்,இளம் மருத்துவர் ஐவர் சூழ நோயாளிகளை பார்த்து விவாதித்துகொண்டு வந்தனர்.மருத்துவர் என்னிடம் “மகனா நீங்க,அவங்களுக்கு என்னனு கண்டுபிடிச்சாச்சி,ஆண்டிபயாட்டிக் போட்டுருக்கு,லங்ஸ் டாக்டர் சாயங்காலம் பார்ப்பார். அம்மாவுக்கு இனிமேல் வீட்டுல செய்த ஈஸி டைஜஸ்ட் புட் தான் சாப்பிடணும்,கடையில் வாங்கிய எதுவுமே சாப்பிட கூடாது,இன்னும் மூன்று நாட்களில் அறைக்கு மாற்றி விடுவோம்” என்றார்.

    கடைகளுக்கு போய் பொருட்களை வாங்கிவிட்டு பைக்கில் ஏறியதும் சுனிதா அழைத்து “மாமிய பாத்தியளா,ஆசுபத்திரிக்கு போனீயளா நேத்து மாமி கிடந்த கிட என் கண்ணுலேயே நிக்கி”என்றாள். மருத்துவரை சந்தித்து பேசிய விபரம் சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து ,பின் கல்யாண வீடு. சையதலி அண்ணன் மலேசியாவில் இருந்து மருமகன்,மருமகள் என குடும்பத்துடன் வந்திருந்தார். மூன்று மாதம் முன்பு குலாலம்பூரில் அவரின் இல்லத்தில் சந்தித்தபின் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு. பீர் முகம்மது அண்ணன் “நாளக்கி கல்யாணத்துக்கு நீ வரமாட்டியா” இன்னும் இரண்டு மணிநேரத்தில் நான் புறப்பட வேண்டும் என்றேன்.

“நீ கிட்ட வந்த பொறவும் வீடு பால்க்காயசிக்கு நம்மள கூப்பிடல” என கடிந்து கொண்டார். ஆம் உறவிலும்,நண்பர்களிலும் நிறையபேர்களை நான் அழைக்கவில்லை.

  பயணப்பை இன்னும் பாக்கிருந்தது.தயார் செய்து கொண்டிருந்தேன். நண்பர் ஸாம்,சுனிதாவின் சகோதரிகள் வழியனுப்ப வந்திருந்தார்கள்.பாஸ்கர் அண்ணாவின் கார் காத்திருந்தது.நான்கரை மணிக்கு புறப்பட்டோம். சுனிதாவும்,சல்மானும் விமான நிலையம் வந்தார்கள். 

நாஞ்சில் ஹமீது,

No comments:

Post a Comment