Sunday, 16 February 2025

பணியில் இணைந்தேன். (தஞ்சுங்க் செக்காங் Tanjung)

விடுதியை சுற்றி 


 மும்பையில் விமானம் ஏறும் முன் lounche இல் சென்று சாப்பிட்டு வந்தேன்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருந்தும் விமானநிலைய லௌஞ்சில் உபயோகித்ததே இல்லை. கடந்த டிசம்பரில் மும்பை சென்றுவிட்டு வரும்போது பெங்களூர் விமான நிலையத்தில் ஆறு மணிநேர காத்திருப்பு. நண்பர் சங்கர் நாரயணன் “ஸார் டெபிட் கார்டு ஏதாவது இருக்கா, அத யூஸ் பண்ணி லௌஞ்சில்  போய் இருந்து சாப்பிட்டு டைம் பாஸ் பண்ணுங்க” என்றார்.

  சர்வதேச டெபிட் கார்டை நான் கையில் வைத்திருப்பதே இல்லை. இம்முறை அதை கொண்டு வந்ததால் முதல் முறையாக சங்கர் உதவியால் உபயோகித்தேன். லௌஞ்சில் பெரும்கூட்டம் குடி பிரியர்களே அதிகம். 

    ஜகார்தாவில் இறங்கும்போதே நல்ல பசி கார் புறப்பட்டதும். ஹோட்டலுக்கு அழைத்துச்செல்கிறோம் இரண்டு மணிநேரம் ஆகும் என்றார்.பசிக்கு முதலில் உணவு வாங்கிக்கொடு என்றோம். முகவரிடம் பேசிவிட்டு வழியில் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றார்.

     ஜகார்த்தா-தஞ்சுங் செகாங் (tanjung sekong) நல்ல தரமான சாலை மழை நின்று சாலை போக்குவரத்து நெரிசல் இல்லாததால் ஒருமணிநேரம் பத்து நிமிடத்தில் நாங்கள் தங்கும் விடுதிக்கே போய்விட்டோம்.காரின் முன் இருக்கையில் அமர்ந்து நன்றாக தூங்கி விட்டேன்.

   சிங்கப்பூர்,மும்பை போன்ற இட நெருக்கடியான இடங்களில் வானுயர்ந்த கட்டிடங்களில் அறை தருவார்கள். இந்த விடுதி அமெரிக்காவின் குடியிருப்புகளை நினைவுபடுத்தியது. அடுக்குமாடி  கட்டிடமே இல்லை. மரங்கள் சூழ்ந்த வனத்துக்குள்,தரைதளத்தில் தொகுப்பு வீடுகள் போல் பத்து அறைகள் கொண்ட கட்டிடங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்கள்.

   விடுதியின் வரவேற்பறையும்,உணவுவிடுதியும் தனிக்கட்டிடம். அறைச்சாவியை வாங்கிவிட்டு சுடு நீரில் குளித்து,உடை மாற்றி உள்ளேயே பள்ளிவாசல் பெயர் பலகையை கண்டிருந்ததால் அங்கு செல்லும் வழியை விசாரித்தபோது பேட்டரி காரில் கொண்டு விட்டார்கள்.

மற்றவர்களும் தயாராகி வந்ததும் இரவுணவுக்கு சென்றோம். பின்னர் விடுதிக்கு வெளியே ஒரு நடை சென்றோம்.வழக்கமாக நான் நள்ளிரவு செல்லும் நடையை யோசிக்கவே இல்லை.

 இரு இரவுகள் நல்ல தூக்கம் இல்லாததால் பத்து மணிக்கு படுத்ததும் நல்லுறக்கம் அதிகாலை அறைக்குள் வெளிச்சம் வந்தபோதுதான் விழித்தேன். வழக்கமாக குளித்து அறையிலேயே தொழுதபின் சதாசிவ் அழைத்தார். “காலை உணவுக்கு செல்லலாம் என.



   ஏழு மணிக்கு உணவு கூடத்தில் இருக்கும்போது எங்களை அழைத்துசெல்ல காருடன் ட்ரைவர் வந்துவிட்டார். உணவுகூடத்தின் அருகிலேயே நீச்சல்குளமும்,கோல்ப் மைதானமும் இருந்தது. ஓட்டுனர் இரு மணிநேரம் தாமதமாக வந்திருந்தால் விடுதியின் உள்ளேயே ஒரு நடை போய் வந்திருக்கலாம். அடர் காட்டுக்குள்இருக்கும் அனுபவத்தை இழந்த உணர்வு.

  பைகளுடன் காரில் ஏறினோம் இலங்கையின் மூன்றாம் இஞ்சினியர் நள்ளிரவு ஒரு மணிக்கு அறைக்கு வந்ததாக சொன்னார். முதன்மை அதிகாரியை இரவில் காணவேயில்லை. தஞ்சுங்க் செக்காங் துறைமுகப்பிற்கு அருகிலுள்ள சிறுபடகுகள் அணைந்திருந்த பகுதியை அடைந்தோம். கப்பலில் ஆய்வு செய்வதற்காக மலேசிய ஆய்வாளர் ஒருவரும் வந்திருந்தார். 

 அனைவரின் பயணபைகளை ஏற்றிவிட்டு சற்று தொலைவில் (ஐந்து நிமிட பயணம்) நின்றுகொண்டிருந்த ஒரு பெரிய படகுக்கு பைகளுடன் மாறினோம்.அங்கிருந்து இருபது நிமிட தொலைவில் நின்றுகொண்டிருந்த என் எஸ் ப்ரண்டியர் கப்பலுடன் படகு அருகணைந்தது. கப்பலை கட்டியிருந்த இந்த துறைமுகப்பில் ப்ரேக் வாட்டர் எனப்படும் கடலையை தடுக்கும் தடுப்புச்சுவர்கள் இல்லாததால் VLGC(very large gas carrier) வகையை சார்ந்த பெரிய கப்பலான என் எஸ் ப்ரண்டியர் ஆடிக்கொண்டே தான் இர்ருந்தது.

  பெரிய அலைகளில் தத்தளிக்கும் சிறு படகிலிருந்து ஏணி வழியாக தாவி ஏறுவது கர்ணம் தப்பினால் மரணம் தான். அனைவரும் சாமர்த்தியாமாக  துள்ளி குதித்து கப்லுக்குள் சென்று சேர்ந்தோம். பிஸ்மில்லாஹ் என கால் பதித்து அடுத்த ஏழு மாதத்திற்கான வீட்டுக்குள் பத்திரமாக குடி புகுந்தோம்.



  அமெரிக்காவிலிருந்து ஏற்றி வந்த ப்ரோப்பேன்(proprne C3),பியூட்டேன் C 4(butene)திரவங்கள்  குழாய்கள் மூலம் கரையிலிருந்த சரக்கு தொட்டிகளுக்கு சீராக போய்க்கொண்டிருந்தது. சரக்கு இறக்கும் பணி முழுமையாக முடிந்த பின்னரே ஊருக்கு செல்பவர்கள் புறப்படும்படி விமான சீட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. உபரியாக இருந்த அறைகளை எங்களுக்கு தந்தார்கள்.

எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கழிப்பறை வேலை செய்யாததால்.ராஜேசுடன் கப்பலின் மருத்துவமனையை பகிர்ந்துகொண்டோம்.இரவில் தூங்க மட்டும் அறைக்கு சென்றேன். குளிக்கவும்,கழிப்பறைக்கு மட்டுமே ஆஸ்பத்திரி. எனக்கு காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணிவரையும் மாலை ஆறு முதல் பன்னிரண்டு வரையும் பணி. 

 நான் விடுவிக்கும் சஜீத் கான் கல்கத்தாவை சார்ந்தவர் இதே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணி செய்கிறார். Handing Over நோட்ஸ் மட்டுமே தந்தார். முக்கியமாக காட்டி தர வேண்டிய எதையும் சொல்லிதரவில்லை நான் ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் இதே கப்பலில் பணிபுரிந்துள்ளேன் என்பதும் ஒரு காரணம். அடுத்த ஏழு முதல் எட்டு மாதங்கள் இங்கே தான் இருக்க வேண்டும் பார்த்துக்கொள்ளலாம் என அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.ஊருக்கு செல்லும் உற்சாகத்தில் இருக்கும் கப்பல் காரனின் உளஎழுச்சியை நான் அறிவேன்.

   

  பதினைந்தாம் தேதி இரவு பத்து மணிக்குமேல் சரக்கு இறக்கும் பணி முடிந்து. டெர்மினல் அதிகாரிகள் கப்பலுக்கு வந்து கணக்குகள் பார்த்து ஆவணங்கள் பரிமாறபட்டபின் கப்பல் புறப்பட தயாராகியது.சீக்கிரம் கப்பலின் கயிறுகளை அவிழ்த்துவிட்டு சென்றுவிடவேண்டும் என காப்டன் முனைப்பு காட்டினார்.

  சரக்கு இறக்கும் பணி முடிவதற்கு இரண்டு மணிநேரம் முன்பு கப்பலை கட்டியிருந்த கயிறுகளில் (முன்பும்,பின்பும் 8 வீதம்) ஒன்று அறுந்துவிட்டது. கடுமையான கடலைதான் காரணம். கயிறு அறுந்து தெறித்தபோது அருகில் யாருமில்லாதாதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.கயிறு அறுந்து விசையுடன் வந்து மோதி கப்பல் காரர்கள் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு.

  கயிறுஅறுந்துவிடும் என்பதால் காப்டன்  இருதினங்கள் தூங்காமல் இருந்ததாக சொன்னார். நான் எண்ணிக்கொண்டேன் கயிறு எப்போது அறும் என காத்திருந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த பிரபஞ்சத்திற்கு செய்தி அனுப்பியது அவர்தான் அவர் எண்ணப்படி எல்லாம் நடந்தது.


     அதிகாலை மூன்றுமணிக்கு ஊருக்கு செல்லும் ஆறுபேரும் புறப்பட்டு சென்றார்கள். பதினாறாம் தேதி அதிகாலை ஆறு  மணிக்கு கப்பல் கரையிலிருந்து விலகி சற்று தள்ளி நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. பத்துமணிக்கு மேல் கப்பலுக்கு எரி எண்ணெய் தரும் சிறு கப்பல் Kenlana kumbala எனும் கப்பல் அருகணைந்து எண்ணெய் தர ஆரம்பித்தது.மொத்தம் ஆயிரத்தி நானூற்றியைம்பது (1450m3) மெட்ரிக் டன் எண்ணெய் எங்களுக்கு தரவேண்டும். இரவு பத்துமணிக்கு ஆயிரம் மெட்ரிக்டன் எண்ணெய் தந்தபின் அந்த கப்பல் விலகி சென்றது. அதன் கொள்ளளவு அவ்வளவுதான் (1 டன் ஆயிரம் லிட்டர்).

  மதியம் பணியிலிருந்த ராஜேசை உணவுண்ண விடுவித்தேன்,இயந்திர அறையில் வேறு பணியிருந்ததால் அவர் சென்றுவிட்டார். இரவு சிறு கப்பலை விடுவித்தபின் நான் அறைக்கு சென்று தூங்கிவிட்டேன். அடுத்த கப்பல் வரும்போது வேறு டீம் வருவார்கள் என முதன்மை இஞ்சினியர் சொன்னார். 

 மீதியுள்ள நானூற்றியைம்பது டன் எண்ணையை தரும் கப்பல் இரவு பதினோரு மணிக்கு(PT trans indo pratama) அருகனைந்துள்ளது.குழாய் பொருத்தி,எண்ணெய் நிரப்பி,கணக்குகள் பார்த்து,கப்பல் விலக அதிகபட்சம் ஆறு மணிநேரம் ஆகும் நானூற்றி ஐம்பது டன் எண்ணெய் நிரப்ப அதிகாலை ஆறு மணிக்கு நான் விழித்தபோது கப்பல் நங்கூரம் பாய்ச்சிய இடத்தில் நின்றுகொண்டிருந்தது.பங்கர் முடியவில்லை என தெரிந்ததால் ஏழு மணிக்கு பங்கர் மேனிபோல்ட் அருகில் சென்றேன். ராஜேஷ் மற்றும் மோட்டார் மேன் பணியில் இருந்தார்கள். இருவரையும் விடுவித்தேன் ஐம்பது டன் எண்ணெய் குறைவாக தந்ததாக சொல்லி முதன்மை இஞ்சினியர் பங்கர் பார்ஜ்ஜிடனும,எங்கள் நிறுவனத்துடனும் பேசிக்கொண்டிருந்தார். மீண்டும் வால்வுகள் திறக்கப்பட்டு பம்பை இயக்கி கொஞ்சம் எண்ணெய் தந்தார்கள். ராஜேசும் ,மோட்டார்மேனும் வந்து என்னை போக சொன்னார்கள். மதிய உணவிற்கு பின்பும் கப்பல் நின்றுகொண்டிருந்ததால் மீண்டும் மேனிபோல்ட் போய் பார்த்தேன்.மொத்தம் 1450 டன் வர வேண்டியதில் ஐந்து டன் குறைவாக இருப்பதாக சொல்லி மீண்டும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தது.

      மதியம் இரண்டு மணிக்கு கணக்குகள் சரி செய்யப்பட்டு பங்கர் பார்ஜ் விடுவிக்கபட்டது.மாலை நான்கரை மணிக்கு புறப்பட்டது. கத்தாருக்கு சென்று சரக்கு நிறைக்க வேண்டும்மென உத்தரவு வந்ததால். காப்டன் கப்பலை திருப்பினார் கத்தாரை நோக்கி. கன்னியாகுமரி வழியாக பதினோரு நாள் பயணம் கத்தாருக்கு .

   சரக்கு தரும் டெர்மினல் முப்பத்தி ஒன்றாம் தேதி வந்தால் போதும் என்றதால் இந்திய பெருங்கடலில் பாதுகாப்பான இடத்தில் மூன்று நாட்கள் கப்பலை நிறுத்திவைத்திருந்தோம்.

நாஞ்சில் ஹமீது.

   

 பி கு நாங்கள் எண்ணெய் நிரப்பும்போது டெர்மினலில் அணைந்த வேறொரு கப்பலின் கயிறு ஒரு மணி நேரத்தில் அறுந்து தெறித்தது.

Sunday, 9 February 2025

என் எஸ் ப்ரண்டியரை நோக்கி

 

மும்பை இமிகிரேசன்

                             திருவனந்தபுரம் – மும்பைக்கு இரவு எட்டு நாற்பதுக்கு விமானம். 

   பாஸ்கர் அண்ணா “டவுனுக்குள்ள போனா பார்வதிபுரம் தாண்டுக்கு ஒரு மணிக்கூர் ஆயிரும்,கடற்கரை பாதைக்கு போவோம் அப்பதான் ஏழு மணிக்குள்ள போய் சேர முடியும்” என்றார்.

காரில் செல்லும்போதே ஏர் இந்தியா மும்பை விமானத்துக்கு வெப் செக் செய்து கொண்டேன்.மும்பை ஜகார்த்தா வெப் செக் இன் திறக்கவேயில்லை  “சீட் புக் பண்ணியாச்சி ஏழு மணிக்கி நீங்கோ ஏர்போர்ட்ல்ல உட்டா போரும்” என்றேன்.எனது பயணத்திற்கான  Ok to board ஆவணம் இந்தோனேசியாவிலிருந்து வந்ததை மாலை மூன்று மணிக்குதான் அனுப்பித்தந்தார்கள். அதை நகலெடுக்க முடியாததால்  கோவாவிலிருந்து என்னுடன் கப்பலுக்கு வரும் காஸ் இஞ்சினியர் சதாசிவ்விடம் நகலெடுத்து வருமாறு சொன்னேன். மும்பையில்  இமிகிரேஷன் அதிகாரிகள் அதை கேட்பார்கள்.

  சொத்தவிளை,ஈத்தா மொழி,மணவாளகுறிச்சி,பூவார் வழியாக காரை ஓட்டிச்சென்றார். “நீங்கோ எந்த நாட்ல போய் கப்பல் ஏறணும்”

“இந்தோனேசியாக்கு கப்பல் வருது அங்க போய் ஏறணும்,டெர்மினல் டூ”

“இங்க இருந்து நீங்கோ போறது பாம்பேன்னு சொன்னியோ” 

“ஆமா ஏர் இந்தியா பிளைட் இன்டெர்நேசனல் டெர்மினல்ல இருந்து தான் போவும்”

பாஸ்கர் அண்ணா மீண்டும் சொன்னார். “அன்னைக்கி ஒரு ஆள் அப்படிதான் சொல்லி ஏற்போர்ட் மாறி போயிட்டு நம்மள டென்சன் ஆக்கி உட்டுட்டாரு”

திருவனந்தபுரம் விமான நிலையம் போய் சேரும்போது மணி ஏழாகவில்லை. சுனிதாவும்,சல்மானும் விடைபெற்று சென்றனர்.வாயில் காவலரிடம் எனது ஆதார் அட்டையை காண்பித்தேன். “பாஸ்போர்ட்” என்றார். 

“டொமஸ்டிக் பாம்பே பிளைட்டா” என்றேன்.

“அது வேற ஏர்போர்ட்,டெர்மினல் ஒன்னு ஆ இவிடருந்து ஆறு கிலோமீட்டர்”.எனச்சொன்னார் விமான நிலைய பாதுகாப்புபடை காவலர்.

சுனிதாவை போனில் அழைத்தேன்.கார் திரும்பி வந்தது.

பாஸ்கர் அண்ணா “நான் முதல்லே சொன்னமில்லா”. 

இன்னும் நேரமிருக்கு பெயிரலாம் என்றேன். சங்குமுகம் கடற்கரையில் ஞாயிறு மாலை ஓய்வை கழித்த கூட்டம் எதிரில் வந்துகொண்டே இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி நின்றுகொண்டே இருந்தோம். பின்னர் ஒவ்வொரு அங்குலமாக நகர தொடங்கியது.

 “ஒரு நாளும் இப்டி நடக்காதே?இன்னைக்கி மண்டைக்குள்ளே நிறைய ஓடுதுல்லா அதான் ஏர்போர்ட் மாறி போச்சி” என்றாள் சுனிதா. 

ஏழு நாற்பதுக்கு டெர்மினல் ஒன்றை அடைந்தோம்.பைகளுகுடன் ஓடினேன்.பைகளை எக்ஸ்ரே மிஷனில் சோதனை செய்த பெண் காவலர் “எவிடயா போகுந்து” எனக்கேட்டாள்.  இரண்டு பைகளில் பெரிய பையை திறக்க சொல்லி அதிலிருந்த இன்டெர்நேஷனல் மல்டி சார்ஜர்,இயர் பட்ஸ்,முடிவெட்டும் கருவி,டார்ச் லைட்,மொபைல் போன், போன்றவற்றை சோதனை செய்தபின் மீண்டும் எக்ஸ்ரே மிஷனில் போட்டார்கள். பின்பு கணினியில் என்னை பார்க்க சொல்லி “லெப்ட் கார்னர் ஈ ஸ்பானர்ன்ற தொட்டடுத்து எந்தா,பாட்டரி வல்லதும் உண்டோ”?

எனக்கு அது என்ன வென்று புரியவேயில்லை. இந்த பொருட்களுடன்தான்  கடந்த இருபது ஆண்டுகளாக விமானத்தில் பறக்கிறேன்.மீண்டும் பெட்டியை பிரித்தார்கள் ஷேவிங் கிட் இருக்கும் சிறு பையை திறந்து காட்ட சொன்னார்கள். சந்தேகிக்கும் படியான அனைத்தையும் எடுத்துப்பார்த்துவிட்டு இன்டெர்நேஷனல் மல்டி சார்ஜர்,இயர் பட்ஸ்,முடிவெட்டும் கருவி,டார்ச் லைட்,ஸ்பானர் போன்றவற்றை வெளியே வைத்துவிட்டு பெட்டியை மிஷினில் போட்டார்கள். மணி எட்டை நெருங்கிகொண்டிருந்தது.

  பாதி பொருட்களுடன் வெளிவந்த பெட்டியில் திருப்தியடைந்தார்கள்.  “பாம்பே போயிட்டு அவிடருந்து வேற பிளைட் கேறும்போ பிரஸ்னம் ஆவும்,இவிடே நோக்குந்தது நல்லதா” என்றபின்  வெளியிலிருந்த பொருட்களை பெட்டியில் அடைத்து மீண்டும் எக்ஸ்ரே மிஷினுக்குள் செலுத்தி வெளிவந்தபின்  Bag checked முத்திரை பதித்து என்னை அனுமதித்தார்கள் .

   மும்பை செல்லும் ஏர் இந்தியா கவுண்டரில் கடைசிஆளாக போய் நின்றேன். உங்க டிக்கெட் அப்கிரேட் ஆயிருக்கு 4c  உங்கள் இருக்கை என அட்டையை கையில் தந்தாள். கைப்பையுடன் பாதுகாப்பு சோதனையில் இடுப்பு பெல்ட்டை கழற்றி போடும்போது ஷாகுல் ஹமீது சுல்தான் விரைந்து வந்து விமானத்தில் ஏற சொல்லி அறிவித்ததை ஒலிபெருக்கியில் கேட்டேன்.சமாதானமாக கழிப்பறை சென்று சிறுநீர் கழித்துவிட்டு விமானத்தில் ஏறிக்கொண்டேன்.

 இருக்கையில் அமர்ந்தபின் கடைசியாக நான் சதாசிவ்விடம் நகலெடுக்க சொன்ன ஆவணத்தை பார்த்தேன். நான் செல்லும் மும்பை- ஜகார்த்தா விமானத்திற்கு பதிலாக தோகா- ஜகார்த்தா என தவாறாக இருந்ததை கண்டேன்.மும்பை அலுவலகத்தை தொடர்புகொண்டு விபரத்தை சொல்லிவிட்டு வாட்சாப்பில் அனுப்பிவைத்தேன்.

 மும்பையில் இறங்கும்போது திருத்தம் செய்த சரியான ஆவணத்தை அனுப்புவதாக பதிலளித்தாள் எங்கள் பயணத்தை ஒருங்கிணைக்கும் அதிகாரி. ஏர் இந்தியா விமானம் சங்குமுகம் கடலுக்கு மேலே பறக்க தொடங்கியது.


  தென்னிந்திய உணவுகளை வழங்கி சிறப்பாக உபசரித்தார்கள் முதல்வகுப்பு பயணிகளை.பத்தரை மணிக்கு மும்பையில் இறங்கியபின் எனது பி எஸ் என் எல் சிம் வேலை செய்யவில்லை. சதாசிவ் கோவாவிலிருந்து வரும் விமானம் பதினோரு மணிக்கு மும்பை வந்து சேரும்.தொடர்புகொள்ள முடியாமல் தவித்தேன். இறுதியாக விமான நிலைய உதவி மையத்தை அணுகினேன்.அரை மணிநேரத்திற்கு இணையம் கிடைத்தது. புதிய ok to board ஆவணம் வந்திருந்தது.அங்கேயே பிரிண்ட் போட்டு வாங்கி கொண்டேன். சதாசிவ்வை அழைத்து நான் இருக்கும் இடத்தை சொன்னேன்.

      இண்டிகோ கவுண்டரில் அதிகாலை மூன்றரை மணிக்கு வரச்சொன்னார்கள். நல்ல சாய்வு நாற்காலி ஒன்றை கண்டு அமர்ந்துகொண்டேன். துயில் கொள்ள இயலாது.அதிகாலை ஆறு இருபதுக்கு  அடுத்த விமானம் ஜகார்த்தாவுக்கு. 

   பயணபைகளை அளித்துவிட்டு,இமிகிரேஷன் வரிசையில் நிற்கும்போது அருகில் நின்றவர்களை கேட்டேன் “ஸீமேன் ஆ” 

“ஆம்  என் எஸ் ப்ரண்டியர்” என்றார்கள். இஞ்சின் பிட்டர் ராஜேஷ் சவுகான் ,மூன்றாம் அதிகாரி ராகுல்.மும்பையிலிருந்து பயணிக்கும் மேலும் இரண்டுபேரை விமானம் ஏறும் முன் கண்டதில் மகிழ்ச்சி. சதாசிவ் முன்னரே போய் விமானம் புறப்படும் கவுண்டர் நாற்பத்தி ஏழின் முன் அமர்ந்திருந்தார்.

 குழுவாக பயணிப்பதில் ஒரு வசதி காத்திருப்புகள் எளிதாக கடந்துவிடும்.அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் விமானம் ஏறினோம். அரபு நாடுகளில் பணிபுரியும் புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்களால் நிரம்பியிருந்தது இருக்கைகள்.இண்டிகோ விமானத்தில் முதல் முறையாக நீண்ட பயணம் பறக்கை வடசேரி மினி பஸ் போன்ற இருக்கை குடிநீர் மட்டும் தருவார்கள் போல யாருக்கும் உணவு வழங்கப்படவில்லை. எங்களுக்கு உணவு இருந்தது இரு துண்டு சாண்ட்விட்ச் மட்டும். சாண்ட்விச்சை பிரித்து உண்ணும் முன் அருகிலிருந்த பெண்ணிடம் கேட்டேன். தயங்காமல் ஒரு துண்டு சான்ட்விட்சை வாங்கி உண்டபின் பலமுறை நன்றி கூறினாள். அபுதாபியில் ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் அவளின் பெயர் சரி தேவி,தனது தாயின் பெயர் ஸ்ரீ தேவி இந்தியர் என்றார். 

  அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களில் பெரும்பாலோர் இந்தோனேசிய பெண்களே.ஆங்கிலம் அறவே பேசத்தெரியாது.இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் தான் அதிகமான இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.இந்திய வம்சாவளியினர் இங்கே மிக அதிகம்.

ஜகார்தவில் இறங்கியதும் 


   சாய்ந்தும் அமர முடியாத இருக்கையாதலால் ஏழு மணிநேர பயணம் மிக கடினமாகிவிட்டது.ஜகார்த்தாவில்  இறங்கும்போது பின்மதியம் இரண்டரை மணி. நூற்றி பதிமூன்றாவது முறையாக நான் பயணித்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பெண் பைலட் காயத்திரியின் திறமை தெரிந்தது.இந்தோனேசியா எனது கன்னியாகுமரி மாவட்டத்தின் பசுமையை நினைவு படுத்தும் நிலம்.ஜாகார்தாவின் பெருமழை வரேவற்றது எங்களை அழைத்துச்செல்ல வேண்டிய முகவர் வரவேயில்லை.




   பலமுறை அழைத்தோம் அருகில் தான் இருக்கிறேன்,வந்துகொண்டிருக்கிறேன் என பதில் வந்தது.மிக தாமதமாக தில்லியிலிருந்து  வேறு வந்த முதன்மை அதிகாரியின் விமானம் இறங்கியது அருகிலுள்ள வேறு டெர்மினலில் அந்த விமானம் தரையிறங்கும் நேரம் நான்கு மணிக்கு அதன் பின்னரே காரில் வந்து எங்களை அழைத்துச்சென்றார்.

நாஞ்சில் ஹமீது.

Saturday, 8 February 2025

மீண்டும் என் எஸ் ப்ரண்டியருக்கு


       கப்பல் இந்தோனேசியாவிற்கு ஜனவரி பன்னிரெண்டாம் தேதி வரும் பத்தாம் தேதி வாக்கில் புறப்பட வேண்டும் என சொல்லியிருந்தார்கள். நான் பாண்டியில் fire fighting வகுப்பு முடித்து அங்கிருந்து மாலையில் புறப்பட்டு தாம்பரத்தில் இறங்கினேன். நண்பர் அசோக்கின் இல்லம் சென்று இரவுணவுக்குப்பின் சீக்கிரமே தூங்கி ஏழாம் தேதி காலையில் எட்டரை மணிக்கு தி நகர் பாலாஜி மெடிக்கல் சென்டர் சென்று சேர்ந்தேன்.

   மருத்துவ பரிசோதனை செய்து முடித்து அன்றிரவே ரயிலில் நாகர்கோவில் பயணம்.ஒன்பதாம் தேதி தற்போது குடியிருக்கும் வீட்டை காலி செய்து சாவியை ஒப்படைப்பாதாக உருதியளித்திருந்தாள் சுனிதா. வேறு வாடகைகாரர் வந்துவிட்டதால் சீக்கிரம் காலி செய்து தர வேண்டினார் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்.

  எட்டாம் தேதி காலை டவுண் ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு வந்து உடனே பொருட்களை ஒதுக்க தொடங்கினேன். நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் முழு வீடும் காலி செய்து புதிய வீட்டிற்கு சென்று தூங்கும்போது அதிகாலை இரண்டு மணி.

    காலை பத்து மணிக்கு மேல் வீட்டின் சாவியை கேட்டு அழைத்துகொண்டே இருந்தார்கள். சுனிதா சாவியை மாலை நான்கு மணிக்கு தருவதாக சொன்னாள்.சில பொருட்கள் அங்கு இருந்தன.மாலையில் சென்று அவற்றையும் எடுத்துவிட்டு வாட்ச்மேன் கிருஷ்ணன்,துப்புரவு பணியாளர் கண்ணனுக்கு சுனிதா படியும் சில பொருட்களையும் கொடுத்துவிட்டு இரவு வீடு வந்து சேர்ந்தோம்.

   மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மும்பை அலுவலகம் அனுப்பும் மின்னஞ்சல்களால் மெயில் பாக்ஸ் நிறைந்துவிடும் கேட்கும் ஆவணங்களை அனுப்பிக்கொண்டே இருக்கவேண்டும்.

   எழாம் தேதி இரவு ரயிலில் இருக்கும் போது வந்த ஒரு மின்னஞ்சலை தவிர வேறேதும் வரவில்லை. வழக்கமாக நாலைந்து நாட்களுக்கு முன்பே முக்கிய ஆவணங்கள் பரிமாற்றம் முடிந்து விமான சீட்டு தகவலும் முடிந்துவிடும். தம்பி ஷேக் புருனே யுனிவர்சிட்டியில் பணிசெய்கிறார். விடுமுறை முடிந்து குடும்பத்துடன் புறப்படும் நாள் பத்தாம் தேதி முடிந்தவரை அடுத்த ஒராண்டுக்கான பொருட்களை கொண்டு செல்வார்கள். அவர்களது பயண பைகளை மூன்று ஆண்டுகளாக நான் தான் தயார் செய்து கொடுக்கிறேன். பத்தாம் தேதி அதிகாலை ஷேக் வீட்டிற்கு போய் பொருட்களை அடுக்கி எடை பார்த்து தயார்செய்தோம்.

  காலை பத்துமணிக்கு முன்பே எனது மருத்துவ அறிக்கையை கேட்டு மும்பை அலுவலகம் மெடிக்கல் சென்டருக்கு அனுப்பிய மின்னஞ்சலை கண்டேன். அடுத்த பத்து நிமிடத்தில் எனக்கு போன் வந்தது. “ஷாகுல் ஒரு உதவி செய் மெடிக்கல் சென்டருக்கு அழைத்து,உடனே ரிப்போட்டை அனுப்பச்சொல்” என.

    எனது மருத்துவ அறிக்கை கிடைக்காததால் தான் இன்னமும் விமான சீட்டு பதிவு செய்யவில்லை என புரிந்தது. நானும் இன்னும் இரு தினங்கள் கிடைத்தால் நல்லது என இருந்தேன்.

    பன்னிரெண்டாம் தேதிக்கு புறப்பாடு உறுதியாகி எனது பணி ஒப்பந்தம் அனுப்பிதந்தார்கள். அதை நகலெடுத்து கையொப்பமிட்டு அனுப்பிவைத்தேன். ஒரு நாள் தான் இருக்கிறது. கப்பலுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது.

   எட்டாம் தேதி இரவே உம்மாவுக்கு உடல் நலமில்லாமல் மருத்துவமனைக்கு போய் வந்தாள். ஆனாலும் மறுநாள் சரியாகாமல் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள்.எனக்கு வேலைகள் குறையவேயில்லை. 

 பத்தாம் தேதி மாலையில்  தம்பி ஷேக் புறப்படும் முன் சுனிதாவுடன் போய் பார்த்து வழியனுப்பி வைத்துவிட்டு வந்தேன்.பதினொன்றாம் தேதி இரவுவரை விமான சீட்டு வராததால் பன்னிரெண்டாம் தேதி எனது புறப்பாடு இல்லை என்பதில் கொஞ்சம் அக மகிழ்வாக இருந்தது. பயணம் எப்போது என மின்னஞ்சல் அனுப்பி கேட்டேன். 

  நீ தயாராக இரு கூப்பிடும் போது பெட்டியுடன் விமான ஏற வேண்டும் என பதில் வந்தது. கப்பலில் இருக்கும் லீ மேன் இந்தோனேசியாவில் கப்பல் நங்கூரம் இடுவதா?இல்லை சரக்கை இறக்கியபின் நங்கூரமிடுவதா என்பது இன்னும் உறுதியாகாததால் காப்டன் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார் என்றார். 

 தம்பி ஷேக் விமானம் ஏறும் முன் உம்மாவை மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு சென்றான். “உம்மாய பாத்தது கொஞ்சம் கஷ்டமாயிட்டு,முகத்துல ஆக்ஸிஜன் மாஸ்க்,மேலெல்லாம் என்னமெல்லாமோ டியுப் மாட்டிருக்கு என்றான்.

  சனிக்கிழமை மாலை பதினொன்றாம் தேதி என் அலுவலக உதவி மேலாளர் நிகிதா அழைத்து “ஷாகுல் நாளை நள்ளிரவு கத்தார் ஏர்வேஸில் உனக்கு டிக்கெட் பதிவு செய்கிறோம். மற்ற ஆவணங்கள் அனைத்தும் இன்று இரவுக்குள் அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

  மறுநாள் இரவு பதினோரு மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும்.பயண பையை தயார் செய்தல் ஆவணங்களை சரி பார்த்து வைத்தல், மினன்ஞ்சலில் வரும் ஆவணங்களில் தேவையானதை நகல் எடுத்தல் என என் பயணத்துக்கு மனதளவில் தயாராகி கொண்டிருந்தேன்.

  உம்மாவை மறுநாள் காலையில் போய் பார்க்க எண்ணியிருந்தேன். என் அக்கா மருத்துவ மனையில் இருந்தாள். மறுநாள் புறப்பட வேண்டும் எனும் தகவல் சொன்னேன். இரவு ஒன்பது மணிக்கு அக்கா அழைத்து “உம்மா உன்ன பாக்கணும்னு  சொன்னா” என்றாள். சுனிதாவுடன் புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்றேன். 

  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதியில்லை மறுநாள் வெளிநாடு புறப்படுகிறேன் எனச்சொல்லி அனுமதி கேட்டேன். உம்மா குளிரில் சிறு நடுக்கத்துடன் குளறும் குரலில் பேசினாள். போர்வையால் உம்மாவின் கைகளை போர்த்துவதை பார்த்து செவிலி கம்பளி ஒன்றை கொண்டு வந்து போர்த்தி விட்டாள்.

   மருத்துவ மனையிலிருந்து வெளியே வரும்போது நிகிதாவின் மின்னஞ்சல் வந்திருந்தது. மாமா மகன் ஷேக் பத்து மணிக்கு மேல் தான் கடையை பூட்டுவேன் எனச்சொன்னான். நகலெடுக்கும் ஆவணங்கள் அனுப்பிவிட்டு. வீட்டுக்கு செல்லும் வழியில் நகல்களை வாங்கிகொண்டு சென்றோம்.

      முதலில் ஆவணங்களை சரிபார்த்து அடுக்கினேன்.நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குமேல் டிக்கெட்டை பார்த்து வைப்போம் என தோன்றியதால் நிகிதாவின் மின்னஞ்சலை திறந்தபோது எனது விமான சீட்டு மாறியிருந்தது. தோஹா கத்தாருக்கு பதிலாக மும்பை வழியாக ஜகார்தாவுக்கு விமான சீட்டு பதிவு செய்யபட்டிருந்தது.

    நான் பன்னிரெண்டாம் தேதி மாலை நான்கு மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டாக வேண்டும். ஆவணங்கள் சரிபார்த்து விட்டு தூங்க வேண்டும் காலையில் பயணப்பையை  தயார் செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். வேறு வழியே இல்லை கப்பலுக்கு கொண்டு புதிய வீட்டில் பொருட்கள் எங்கும் சிதறி கிடந்தது. வழக்கமாக பொருட்களை அடுக்கும்போது சுனிதா “நகம் வெட்டி எடுத்தாச்சா,பல்லு தேய்க்கபிரஸ்,குளிருக்கு சுண்டுல போட லிப் பாம்,ஊசி,நூல் ஓறுமையா எடுங்கோ சாறே”என்பாள். 



  வீட்டில் சிதறி கிடந்த பொருட்களுக்கு நடுவே என் பொருட்களில் பாதி கிடைக்கவேயில்லை. நல்ல தூக்கத்தில் இருந்த சுனிதா “என்னத்த குடஞ்சிட்டு கிடக்குதியோ,ஓறங்கலியா என உளறினாள். அறையின் விளக்கை அணைத்து விட்டு டார்ச் லைட் வெளிச்சத்தில் என் பொருட்களை தேடினேன்.பலதும் கிடைக்கவேயில்லை. எரிச்சல்தான்  மிஞ்சியது படுத்து கண்மூடினேன்.எண்ணங்கள் ஒன்றன்பின்  ஒன்றாக தொட்டு தொட்டு காட்சிகளாக மாறினச.

 ஐ சி யூவில் இருக்கும் உம்மா குளறும் குரலில் பேசியது,மாலையில் உறவினர் பீர் முகம்மது அண்ணனின் மகன் அசாருதீன் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என இருந்தேன்.காலையிலேயே போய்வர வேண்டும்,போத்தீஸில் போய் கப்பலுக்கான பொருட்கள் வாங்குதல் என.தூங்காமலே நான்கு மணிக்கு விழித்துகொண்டேன். எனது துணிகளை துவைத்து குளித்து அதிகாலை தொழுகைக்கு பள்ளி வாசல் போய் வந்தேன். சுனிதா தொழுகை பாயில் இருந்தாள். “கப்பலுக்கு போணுமின்னா நமக்கு உறக்கமே வராதே” என்றாள்.

   கிடைக்காத பொருட்களை எடுத்து தந்தாள்.வீட்டில் நான் செய்து கொடுக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது. இனி என்னால் எதுவும் செய்ய முடியாது நீயே பார்த்துக்கொள் என நேற்றிரவே சொல்லியிருந்தேன்.இரவில் நான் பொருத்திய காஸ் அடுப்பில் புதிதாய் தோசை சுட்டு தந்தாள் .காலை உணவுக்குப்பின். கொஞ்சம் தூங்குகிறேன் என படுத்துக்கொண்டேன்.இருமுறை அறைக்கதவை திறந்து நான் தூங்குவதை பார்த்துச்சென்றாள் சுனிதா.

    ஒன்பதரை மணிக்கே தயாராகி வாங்க வேண்டிய பொருட்களை குறித்துக்கொண்டு புறப்பட்டேன். “பன்னிரண்டு மணிக்கு வருவேன் தயாராக இரு கல்யாண வீட்டுக்கு போணும்” என கிளம்பிசென்றேன். செட்டிகுளம் தாண்டி மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் இல்லம் அருகில் செல்லும்போது மருத்துவமனையில் உம்மாவின் காட்சி கண் முன்னால் ஓடியது. 

   போத்தீஸ் துணிக்கடையில் இரு பனியன்கள்,வாங்கியபின்,கீழ் தளத்தில் வாங்கிய பொருட்களுக்கு பில் போட சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். “பெரிய டாக்டர் ரௌண்ட்ஸ் வார நேரம்,இப்ப உள்ள உட முடியாது” என்றார் காவலர். நேற்றிரவு இருந்த காவலர் மாறி வேறு காவலர் பணியில் இருந்தார். நேற்று சொன்னதையே மீண்டும் சொன்னேன். “சாயங்காலம் வெளிநாட்டுக்கு போறேன்,ஆறாம் நம்பர்ல இருக்க பேசண்ட் பீமாக்க மோனாக்கும் நான்”.

 “எனக்கு எல்லாம் மனசிலாவும், கொஞ்சம்  நில்லுங்கோ, நான் விளிக்கேன்” என்றார். சிறிது நேரத்திற்கு பின் உள்ளே அனுமதித்தார்.உம்மா படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். “ஆராக்கும்” என செவிலி கேட்டாள்.

“எனக்க மொவன்” உம்மாவின் குரலும்,முகமும் சற்று தேறியிருந்தது. உம்மா சாயா வாங்கி கேட்டாள். நர்ஸ் கஞ்சி தண்ணி குடுக்கணும்,ஒரு பாக்கெட் தயிரும் வேங்கி தாங்க என்றாள். 

 அவற்றை வாங்கி கொண்டு போனபோது. “வெளிய நில்லுங்க பெரிய டாக்டர் இப்ப வருவாரு,அப்ப விளிப்போம் டாக்டர்ட்ட பேசுலாம்” என்றாள் நர்ஸ்.

மூத்த மருத்துவர்,இளம் மருத்துவர் ஐவர் சூழ நோயாளிகளை பார்த்து விவாதித்துகொண்டு வந்தனர்.மருத்துவர் என்னிடம் “மகனா நீங்க,அவங்களுக்கு என்னனு கண்டுபிடிச்சாச்சி,ஆண்டிபயாட்டிக் போட்டுருக்கு,லங்ஸ் டாக்டர் சாயங்காலம் பார்ப்பார். அம்மாவுக்கு இனிமேல் வீட்டுல செய்த ஈஸி டைஜஸ்ட் புட் தான் சாப்பிடணும்,கடையில் வாங்கிய எதுவுமே சாப்பிட கூடாது,இன்னும் மூன்று நாட்களில் அறைக்கு மாற்றி விடுவோம்” என்றார்.

    கடைகளுக்கு போய் பொருட்களை வாங்கிவிட்டு பைக்கில் ஏறியதும் சுனிதா அழைத்து “மாமிய பாத்தியளா,ஆசுபத்திரிக்கு போனீயளா நேத்து மாமி கிடந்த கிட என் கண்ணுலேயே நிக்கி”என்றாள். மருத்துவரை சந்தித்து பேசிய விபரம் சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து ,பின் கல்யாண வீடு. சையதலி அண்ணன் மலேசியாவில் இருந்து மருமகன்,மருமகள் என குடும்பத்துடன் வந்திருந்தார். மூன்று மாதம் முன்பு குலாலம்பூரில் அவரின் இல்லத்தில் சந்தித்தபின் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு. பீர் முகம்மது அண்ணன் “நாளக்கி கல்யாணத்துக்கு நீ வரமாட்டியா” இன்னும் இரண்டு மணிநேரத்தில் நான் புறப்பட வேண்டும் என்றேன்.

“நீ கிட்ட வந்த பொறவும் வீடு பால்க்காயசிக்கு நம்மள கூப்பிடல” என கடிந்து கொண்டார். ஆம் உறவிலும்,நண்பர்களிலும் நிறையபேர்களை நான் அழைக்கவில்லை.

  பயணப்பை இன்னும் பாக்கிருந்தது.தயார் செய்து கொண்டிருந்தேன். நண்பர் ஸாம்,சுனிதாவின் சகோதரிகள் வழியனுப்ப வந்திருந்தார்கள்.பாஸ்கர் அண்ணாவின் கார் காத்திருந்தது.நான்கரை மணிக்கு புறப்பட்டோம். சுனிதாவும்,சல்மானும் விமான நிலையம் வந்தார்கள். 

நாஞ்சில் ஹமீது,