Saturday 17 February 2024

ஷோர் லீவ் 5

 


   மீண்டு வந்த கலீல்



       முந்தைய பதிவில் கோம்ஸின் சிறப்பு உணவுகள் பற்றி எழுதியபின் நடந்தைவைகளை உடனே எழுதிவிட மனம் வரவில்லை.கோம்ஸ் இங்கே தானிருந்தான். அவன் சமைக்கும் உணவுகளையே நாங்கள் சாப்பிடும் கட்டாயம் இருந்தது. எனவே மிக தாமத்தித்தே இந்த பதிவை எழுதுகிறேன்.ஷோர் லீவ் நான்காம் பதிவில் கோம்ஸ் மீதமான உணவுகளை மாதக்கணக்கில் பிரிட்ஜில் வைத்து வழங்கியதை சொல்லியிருந்தேன் அதன் தொடர்ச்சி............

  கடும்கோபத்தில் இருந்த முதன்மை இஞ்சினியரை அறைக்கு போக சொல்லும்படி சொன்னார் மூன்றாம் இஞ்சினியர்.நான் அவரை அழைத்து “ரூமுக்கு போங்க இங்க நின்னா இன்னும் டென்சன் ஆவும்”என்றதும் விரைந்து சென்றுவிட்டார்.

  அவருக்கு முடி வெட்டி தருவதாக சொல்லியிருந்ததால் போனில் அழைத்து “சீக்கிரம் வந்தியள்ன்னா முடி வெட்டி தந்துட்டு குளிக்க போவேன்” என்றேன்.

  முடி வெட்டுகையில் கேட்டார் “பல வித்தைகள கையில வெச்சிருக்கியோ எப்டி” எனக்கேட்டார்.

“படிச்சி முடிச்சி பாம்பேக்கு வேல தேடி போனேன்,அங்க வாழ்ந்த நாட்கள் பல பாடங்கள சொல்லித்தந்தது,இப்பவும் எனக்கு புடிச்ச ஊரு மும்பைதான்”.

 

 ஒரு மணிக்கு நான் சாப்பிட வரும்போது நாங்கள் சமைத்த சிக்கன்,மட்டன் பிரியாணி அப்போதே தீர்ந்துவிட்டது. அடுமனையில் என் பணி முடிந்து விட்டது.அனைத்தையும் உரிய இடத்தில் வைத்துவிட்டு மனமகிழ் அறையில் அமர்ந்து விளக்குளை அணைத்துவிட்டு எழுபது அங்குல டிவியில் தியேட்டர் எபக்டில் மாமன்னன் எனும் படம் பார்த்துகொண்டிருந்தேன்.

  மூன்று மணிக்கு கோம்ஸ் அழைத்தான். “ஷாகுல் நாளைக்கி என்ன மெனுன்னு பாத்து அயிட்டங்கள வெளிய எடுத்து வை”என்றான் .

“எனட்ட ஏன் சொல்லா சீப் ஆபிசர்,காப்டன்ட்ட கேட்டு தேவையானத எடுத்து வெய்,நான் இனி காலில டூட்டி இல்ல” என்றேன்.

 இருபது நிமிடங்கள் கழிந்தபின் மீண்டும் கோம்ஸ் அழைத்தான்.

“போசன் ...எங்க”

“இங்க இல்ல”

“வேற  யாரு இருக்கா”

“யாரும் இல்ல”

“எனக்கு கோவிட் பாஸிடிவ்,கேப்டன் என்னைய மாஸ்க் போட்டுட்டு சமைக்க சொல்லாரு” என்றான்.

 “பாசிடிவ்ன்னா நீ சமக்கித நாங்க எப்டி சாப்டுக்கு”

“அதான் சொல்லேன்,கேப்டன் என்னைய போர்ஸ் பண்ணாரு”என்றான்.

 ஒ எஸ் இர்பான் மனமகிழ் அறையை சுத்தம் செய்ய துடைப்பத்துடன் வந்து விளக்குகளை எரிய விட்டான். விசயத்தை சொன்னேன்.

“என்னையத்தான் நாளக்கி கோம்ஸ்க்க கூட ஹெல்ப்க்கு போவே சொல்லிருக்காரு சீப்”என்றான்.

 போசன் வந்தார் அவரிடம் அதுபற்றி சொன்ன போது “கோம்ஸ் போன் பண்ணுனான்,நமக்கு அபிசியலா யாரும் சொல்லல அவனுக்கு கொரோனா இருக்கா இல்லியான்னு பாப்போம்” என்றார்.

 அடுத்த ஐந்து நிமிடத்தில் முதன்மை அதிகாரி மனமகிழ் அறைக்குள் வந்து  என்னிடம் கேட்டார் “கோம்ஸ்க்கு கோவிட்ன்னு யாரு சொன்னா,காலத்த நாங்க டெஸ்ட் பண்ணியாச்சி நெகடிவ் ரிசல்ட் எங்ககிட்ட இருக்கு”என்றார்.

 அடுத்த அழைப்பு அனைவரும் பிரிட்ஜில் வாருங்கள் என. கப்பலின் அனைத்து பணியாளர்களும் அங்கிருந்தனர். கோம்ஸின் கொரோனா டெஸ்ட் ரிப்போட்டை அவனுக்கு சோதனை செய்த இரண்டாம் அதிகாரி காண்பித்து ரிசல்ட் நெகடிவ் வந்திருப்பதை காண்பித்தார்.

  காப்டன் அமரவே முடியாமல் நாற்காலியை சுவரோரத்தில் ஒட்டி தலை சாய்ந்து, முககவசம் அணிந்து சோர்வுடன் நாக்கு குளற.

 “ஸீ திஸ் இஸ் ரிபோர்ட்... கோம்ஸ்க்கு ஒன்னும் இல்ல அவன் சமைக்கணுமா வேண்டாமா?சொல்லுங்கள்” என கேட்டார்.

 கோம்ஸ் பலருக்கும் போன் செய்து தனக்கு கோவிட் இருக்கும்,நிலையில் காப்டன் பணி செய்ய நிர்பந்திக்கிறார் என சொல்லியிருக்கிறான்.அதனால் தான் ஓய்வு நேரத்தில் இந்த அவரச கூட்டம்.

 முதன்மை அதிகாரி அவன் சமைக்கவேண்டும் என சொன்னபின்,பெரும்பாலான பணியாளர்கள் ஆமோத்தித்ததால் காப்டன் கோம்சை அழைக்கச்சொன்னார். கோம்சிடம் யாரும் பேசவே இல்லை. நானே தொடங்கினேன். “கோம்ஸ் நீ கோவிட் இருக்கு,காப்டன் கட்டாய படுத்தாரு வேல செய்ய சொல்லின்னு எனக்கு போன் பண்ணுனா,அது போல வேறயும் நாலஞ்சி வேருக்கு கூப்ட்டிருக்கா.காலைல எடுத்த டெஸ்ட் ரிசல்ட் உனக்கு நெகடிவ்ன்னு  இருக்கு. கப்பல்ல சாப்பாடு ரொம்ப முக்கியம் எல்லாரும் வேல செய்து டயர்டா வரும்போ தின்ன நல்ல சாப்பாடு வேணும்.இங்க இருக்க இருவத்தி ஏழுவேருக்க உடல் ஆரோக்கியம் இப்ப உனக்க கைல அத மனசில வெச்சிட்டு நீ சோறு போடு எங்களுக்கு”என கையெடுத்து கும்பிட்ட பின் “வேறு யாரவது ஏதாவது சொல்லனுமா?”எனக்கேட்டேன் .

மூன்றாம் இஞ்சினியர் “அவ்ளோதான்”என்றார். கூட்டம் கலைந்தது.

  அன்று இரவுணவு முதல் கோம்ஸ் சமைக்க தொடங்கினான்.உதவிக்கு ஒரு டெக் பணியாளர் உடனிருந்தார். மறுநாள் காலை ஆறரை மணிக்கே மெஸ் மேன் கலீல் அழைத்தான். “பாய் ஜான் ரொம்ப முடியல ரூமுக்க வெளிய எனக்க தண்ணி பாட்டில் வெச்சிருக்கேன்,அதுல எல்லார் கையும் பட்டது அத சுடு தண்ணில நல்லா கழுவி தண்ணி புடிச்சி ஓதி ஊதி தா” என்றான்.

  அதில் மந்திரம் ஏதும் இல்லை குர்ஆன் வசனம் ஓதி சக்தியை நீரில் பாய்ச்சி தருதல்.விஷயம் தெரிந்தவர்கள் செய்யலாம்.நானும் அதை செய்பவன் என அவன் எப்படி யூகித்தானோ? நீரில் சக்தி பாய்ச்சி கொடுத்தேன்.

   அன்று மாலை மூன்று மணிக்கு மூச்சுவிட முடியாமல் போன் பண்ணியிருக்கிறான் கலீல் பதறி ஓடிய உக்ரைனின் இரண்டாம் அதிகாரி அவன் சொல்வது புரியாமல் மராத்தி பேசும் நிதினை அழைக்க அதற்குள்,இலங்கையின் ஹிராத்தும்,அலெக்ஸ்ம் இணைந்து நிலை குலைந்த அவனை தாங்கி அறைக்கு வெளியே கொண்டு வந்து டெக்கில் சுத்த காற்றை சுவாசிக்க செய்த சில நிமிடங்களில் அவன் இயல்புக்கு வந்தான். முகக்கவசம் அணிந்து கண்களில் நீர் நிரம்ப சற்று தள்ளி சிலையாக நின்றுகொண்டிருந்தார் காப்டன்.

  இரவுணவின் போது விஷயம் அறிந்து கலீலை அழைத்தேன். “இப்ப பரவாயில்லை,பாணி கதம் ஓஹையா”என்றான்.அவனது தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிறைத்து அறைக்கதவின் வெளியே நின்று பார்த்தேன் அவனது  விழிகள் உச்சகட்ட பயத்தில் இருப்பதை காட்டியது.

 “பயப்டாதே இன்னும் ஒரு மூணு நாள்,வியாழக்கிழமை நீ வெளிய வந்துரலாம்”என்றான்.

   இரு தினங்களுக்குப்பின் வழக்கமான பணிக்கு காப்டன் திரும்பினார். மாலையில் ப்ரிட்ஜில் சென்றபோது “ஷாகுல் காலைலேலிருந்து உன்ன கேட்டுக்கிட்டே இருந்தேன்”.

 “பார்வேர்டில வேல ரெண்டு நாளா உங்க பிரண்ட்ஸ் ஒரு எழுபது பேரு பறந்துகிட்டே கூட வாராங்க”.

காப்டன் “என்ன நடந்துன்னே எனக்கு தெரியாது கேட்டரிங் டிப்பார்ட்மென்ட் சிக் ஆன பிறவு இருபத்தி ஏழு பேருக்கும் மூணு நாளு சாப்பாடு போட்டுருக்கா,நன்றி ஷாகுல்”என சொல்லும்போது அவரது வலக்கை இடது மார்பில் பதிந்து,தலை லேசாக சரிந்தது.

 “கலீல வியாழன் முடிஞ்சி வெள்ளிக்கிழமை வேலக்கி கூப்பிடுங்க அவன் நல்லாயிட்டான் இப்ப அவனை அறையில பாத்தேன்,ஹி இஸ் ஓகே நொவ்”

 “கலீல் ரொம்ப பயங்காட்டிட்டான் நானே பதறிட்டேன்”என்றார்.

நான் சிரிப்புடன் “கேப்டன் சாப் உங்களோட பாஸிட்டிவ் எண்ணம் உங்க பலம் ஒரு நாளும் உங்களுக்கு ஒண்ணும் ஆவாது”எனச்சொன்னேன்.

  “நான் பாஸிட்டிவா இருந்தா தானே,என் crewம் கப்பலும் நல்லா இருக்கும் அது எனக்கு தெரியும் ஷாகுல் தேங்க் யூ சோ மச்”.

  சில தினகளுக்குப்பின் மாலை அஸ்தமனம் பார்க்க பிரிட்ஜில் சென்றபோது காப்டன் சோர்வாக இருந்தார். “கேப்டன் சாப் என்னாச்சி”எனக்கேட்டேன் “பிரச்சனை ஒண்ணு ஓடிட்டு இருக்கு,எல்லாம் எனக்கெதிராக திரும்பிவிட்டது,உங்களுக்கு பொறவு தெரியும் எனக்கேட்டுவிட்டு ஏதாவது கேள்வி பட்டாயா?”என கேட்டதும் சுதாரித்துக்கொண்டு என் முக பாவனையை மாற்ற முயற்சித்தேன்.

நான் யோசிப்பதை பார்த்துவிட்டு “டோன்ட் திங் மச்”என்றார் .

அன்று காலையே எனக்கு தெரிந்திருந்தது கோம்ஸ் கப்பலில் காப்டனின் டார்ச்சர் தாங்க முடியவில்லை,என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.என்னை விரைவில் விடுவியுங்கள் என கோலாலம்பூர் அலுவலக முக்கிய மேலதிகாரிக்கு போனில் புகாரளித்துள்ளான்.துறைமுகம் செல்லும் போது விசாரணைக்காக கோலாலம்பூர் அலுவலகத்திலிருந்து வரும் மேலதிகாரியை காப்டன் நேரில் எதிர்கொள்ள வேண்டும்.

 காப்டனாக பொறுப்பேற்ற நாற்பது நாட்களுக்குள் சோதனைகளாக வந்து கொண்டே இருந்தது. முப்பத்தி ஏழு வயது பூர்த்தியானதும் எல்லா பிரச்சனையும் ஒண்ணா வந்து கண்டம் விலகுகிறது என எண்ணிக்கொண்டேன்.

 காலை கோம்ஸ் இட்லி சாம்பார் செய்திருந்தான் எல்லோர் கண்களிலும் மைனஸ் பதினெட்டு டிகிரியில்  குளிர் பெட்டியிலிருந்து வெளியே எடுத்த ஒரு கல் பந்து நினைவிலிருந்ததால் யாரும் அன்று இட்லியை தொடவே இல்லை.

    கடந்த ஆறாம் தேதி சைனாவின் நிங்போ துறைமுகப்பிலிருந்து எட்டு பணியாளர்கள் ஊருக்கு சென்றனர். அதில் சமையல் கோம்சும் அடக்கம்.

நிறைவு.

22-oct-2023,

நாஞ்சில் ஹமீது.

sunitashahul@gmail.com.

Friday 16 February 2024

ஷோர் லீவ் 4

 


  கோம்ஸின் சிறப்பு உணவு.

   


                 பனாமாவை தாண்டி பசுபிக் கடலில் பயணம் தொடங்கியது.அடுத்த இருபத்தி மூன்று தினங்களுக்கு இடைநில்லா பயணம்தான்.பன்னிரெண்டு தினங்களுக்குப்பின் நடுக்கடலில் இருக்கும் ஹவாய் தீவு வரும். ஏதாவது எமெர்ஜென்சி மட்டும் வராமல் இருக்கவேண்டுமென காப்டன்கள் நினைத்து கொள்வார்கள்.

    கலீல் கொஞ்சம் உடல்நலமில்லாமல் தான் இருந்தான். இரு தினங்களாக காப்டனும் பிஸி. முந்தைய நாள் மாலை கிரீன் சிக்கன் சமைக்கும்போது மூன்றாம் இஞ்சினியர் கேட்டார் “நாளை என்ன சமைப்பது” என.நெய்சோறும்,மட்டன் குழம்பும் வெச்சி தாரேன்” என்றேன்.

“பிரியாணி தெரியாதா”

“நாலஞ்சி வேருக்குன்னான் வெச்சிருலாம் ஆளு கூடுதால இருக்கு,அதுனால நமக்கு நல்லா தெரிஞ்சத வெப்போம்” என்றேன்.

“எனக்கு சிக்கன் பிரியாணி தெரியும்”

“அப்புறம் என்ன சிக்கனுக்கு பதிலா மட்டன போட்டா மட்டன் பிரியாணி” என்றபோது ஒத்துக்கொண்டார். மாலையிலேயே கோம்சிடம் கேட்டு ஒன்றரை ஆட்டுக்காலை எடுத்து,வெளியே வைத்தேன்.மட்டன் சாப்பிடாதவர்களுக்கு ஒரு முழு கோழியும்.

    மூன்றாம் இஞ்சினியர் காலை எட்டுமணிக்கு அடுமனைக்கு வருவதாக சொல்லி சென்றார். கப்பல் பனாமா கால்வாயில் டீசலில் இயங்க வேண்டும்.எனவே கால்வாய் விட்டபின் டீசலிலிருந்து எரிஎண்ணெய்க்கு மாற்றும் வால்வுகளை திறந்தார்கள்.அது முழுமையாக மாற எட்டு மணி நேரத்திற்கு மேலாகும் அதுவரையில் இயந்திர அறையில் இஞ்சினியர்கள் இருந்தார்கள்.

  இரவு பத்துக்கு மேல் தூங்கி காலை ஐந்துக்கு விழித்து அதிகாலை தொழுகைக்குப்பின் தயாராகி அடுமனை சென்றேன்.கத்தியை தீட்டி ஆட்டின் முழுகாலை வெட்ட தொடங்கினேன்.இதற்கு முன்பு எப்போதும் இப்படி வெட்டியதே இல்லை.

   நேரம் போய்கொண்டே இருந்தது ஏழரை மணிக்கு மேல் இறைச்சியை வெட்டி முடித்தேன். காலை உணவுக்கு வந்த கோடா இன்று என்ன மெனு எனக்கேட்டான். “தீன் ஸாப் வந்து பிரியாணி செய்வார்” என்றேன்.காலை உணவை உண்டு சென்ற கோடா இயந்திர அறை இன்று விடுமுறை எனசொல்லி அடுமனைக்கு வந்தான்.கலீலுக்கும்,கோம்சுக்கும் சுக்குகாப்பியை காலையிலேயே அறையில் கொடுத்திருந்தேன்.

   “சிக்கன் பிரியாணின்னா நான் செய்துருவேன்,மட்டன் செய்ய தெரியாது எனசொல்லிவிட்டு  ‘லேட்டாகுது இன்னும் அரிசியே போடல்ல நீ” என கேட்டான் கோடா. கலீல் எட்டு மணிக்கு என்னை போனில் அழைத்து “கொஞ்சம் பால் சுட வெச்சி மஞ்சள்தூள் போட்டு தருவியா தொண்ட வலி,உடம்பு வலி இருக்கவோ,படுக்கவோ முடியல்ல,ராத்திரி பூரா உறக்கமும் இல்ல”என்றான். 

   எட்டு மணிக்குமேல்  மூன்றாம் இஞ்சினியர் பிரம்லியை அழைத்தேன். “பிட்டர் ஸாப் காலத்த அஞ்சி மணிக்கி தான் வந்தேன்,நீ க்ஹீ ரைஸ் போடுவேன்னு சொன்னால்லா அதையே செய்” என்றான். மண்டைக்குள் ஒரு பரப்பாகியது எல்லா ஞாயிறுகளிலும் கப்பலில் பிரியாணிதான்,என்ன மெனு என கேட்டவர்களிடம் எல்லாம் பிரியாணி என சொல்லியிருந்தேன்.பாத்திரங்களை பார்த்தேன். இறைச்சியை எண்பது சதம் வேக வைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு,அதிலேயே அரிசி மசாலாவை மற்றும் பிரியாணிக்கான இடுபொருட்கள் கலந்து அரிசி முழுமையாக வேகும்முன் அடுப்பின் வெப்பத்தை குறைத்து,எண்ணையில் பொரித்த வெங்காயம்,முந்திரி,பதாம்,கிஸ்மிஸ்,மல்லிஇலையை பிரியாணிக்கு மேல் தூவி,கொஞ்சம் ரோஸ் வாட்டர் மற்றும் எஸ்சென்ஸ் தெளித்து ஆவி வெளியே செல்லாதவாறு மைதா மாவை உருட்டி மூடிக்கிடையில் வைத்து இறுக்கமாக மூடி சிறு வெப்பத்தில் முப்பது நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான பிரியாணி ரெடி.

 அதற்கான பாத்திரங்களை தேடினேன் கிடைக்கவில்லை. கோடா தாமதமாகிறது  என்றான்.கழுவி ஊற வைத்திருந்த அரிசியை வேகவைக்க சொல்லி விட்டு,ஆட்டிறச்சியை வேக வைத்தேன்.முழுகோழியை பதினான்கு துண்டுகளாக வெட்டி அதையும் தனியாக வேக வைத்தேன்.ஆயத்த மசாலாக்கள் ஏதும் சேர்க்கவில்லை.எல்லாம் நானே மிக்சியில் பொடித்தேன் மஞ்சள்தூள் தவிர.கோடா சோறு வெந்துவிட்டது என்றான்.

  வெங்காயத்தை நறுக்கி,முந்திரியும்,பாதமும் எண்ணையில் போட்டு பொன்னிறமாக எடுத்து வைத்தான். ரிச்சர்ட் எனக்கும் ஏதாவது வேலை கொடு என்றான் கூடவே இலங்கை மோட்டார் மேனும் வந்தார்கள். ரிச்சரிடம் தயிர் பச்சடி மற்றும் அப்பளம் பொரிக்க சொன்னேன். ரஹீம் உல்லா காலையில் வெட்டிய வெங்காயம் பெரிதாக இருக்கிறது என அதை சிறிதாக நறுக்க தொடங்கினான்.

  டெக் பணியாளர்கள் யாரும் இன்று அடுமனை பக்கம் எட்டிபார்க்கவேயில்லை.கடந்த இரு தினங்களாக கோம்சை கவனித்தபோது இன்று நன்றாக தேறியிருந்தான்.எனினும் பணிக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை.பனாமா கால்வாயை கடக்கும் முன் நடந்த கூட்டத்தில் காப்டன் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்குமாறு அச்சிடப்பட்ட காகிதம் ஒன்றை அனைவருக்கும் கொடுத்தார். அதற்கு முன் அடுமனை பணியாளர்கள் இருவரையும் சந்தேகம் வராத படி அடுமனைக்கு அனுப்பி வைத்தார்.

  அதற்கு மறுநாள் தான் கோம்ஸ் உடல் நலமில்லால் ஆனான்.அன்று காலை காப்டன் சொன்னார். “நேத்துள்ள சைகாலஜிக்கல் எபக்ட்,அதான் காய்ச்சல் வந்துட்டு,நாளை செரியாவும்”எனச்சொல்லி சிரித்தார். ஆனால் ஐந்து நாட்களாகியும் அவன் அறையை விட்டு வெளியே வரத்தயாராகவில்லை.

 அஞ்சுமன் வந்து காப்டனுக்கு முட்டை புர்ஜி செய்து கேட்டான். அவருக்கு என்னாச்சி ஏன் கீழே வரவில்லை எனக்கேட்டபோது “தெரியாது எனக்கு போன் பண்ணி பிரேக் பாஸ்ட் அறைக்கி வெளிய வெச்சிட்டு போன்னு சொன்னார்,லேட்டா தூங்குனதால இப்பதான் முளிசிருப்பார்”என்றான்.



 முதன்மை இஞ்சினியர் காலை பத்துமணிக்கு அடுமனைக்குள் வந்தார். சிக்கன்,மட்டன் பிரியாணி,இறைச்சி சாப்பிடாத போசன் மற்றும் கொரோனா நோயாளி க்கு பிளைன் ரைஸும் தயாராகி கொண்டிருப்பதை கவனித்தார். “இன்னைக்கு பதினோரு மணிக்கி மேல எனக்கு முடி வெட்டி தர முடியுமா” எனக்கேட்டவர் இயந்திர பணியாளர்களை பார்த்துவிட்டு  “இன்னைக்கு லீவு குடுத்தேன் இங்க வந்து உங்களுக்கு உதவி செய்யாங்க,நாளக்கி லீவு உட முடியாது,வேல கெடக்கு”என்றார்.

  “ஸார் அவன் நல்லாதான் இருக்கான்,அந்த சைகாலஜிக்கல் எபக்ட் தான்,வேலக்கி வராம கிடக்கான் கோம்ஸ்”என்றேன்.அஞ்சுமன் போட்டிருந்த மசாலா சாயாவை கப்பில் எடுத்து சென்றவர்.போனில் என்னை அழைத்தார் “மத்தியானம் சமையல் முடிச்சி,எல்லாத்தையும் கிளீயர் பண்ணீருங்க,சாயங்காலம் டின்னருக்கு அவன் வந்து சமைப்பான்,நான் காப்டன்ட்ட பேசியாச்சி” என்றார்.

காலை முதல் அமரவே முடியவில்லை கோடா “டீ ஆறுக்கு மின்ன குடிச்சிருவோம்” எனச்சொன்னபோது அமர்ந்து பொறுமையாக தேநீர் அருந்தினோம். பதினோரு மணிக்குள் தயாரான உணவுகளை அடுமனைக்குள்ளேயே வைத்து விட்டு அனைத்தையும் சுத்தபடுத்தினோம்.மூன்றாம் இஞ்சினியரும் வந்து தனித்தனியாக இறைச்சியுடன் பிரியாணி சாதத்தை கலந்து பிரியாணியாக மாற்றுவதில் உதவினார்.

   முதன்மை இன்ஜினியர் மீண்டும் அடுமனைக்குள் வந்தார். “ப்ரிட்ஜில் இருக்கும் சமைத்த உணவுகள் அனைத்தையும் வெளியே எடு” என உத்தரவிட்டார்.

 நான் இருக்கும் இடத்தில் எப்போதும் நன்மையே நடக்கும் ஆனால் அது சிலருக்கு பாதகமாகவும் முடியும். அடுமனைக்குள்ளிருந்த குளிர் பெட்டியில் டப்பாகளில் அடைத்து மூடி வைத்திருந்தவற்றை எடுத்தோம்.எப்போதோ  சமைத்து உண்டு போக மீதி வந்த சட்னி,கடலை கறி,ஓட்ஸ் மீல்ஸ்,மூன்று பாலித்தீன் பைகளில் சிறிதளவே அடைத்த போகா,சாம்பார் என பாஞ்சாலியின் சேலையை போல உள்ளிருந்து வந்துகொண்டே இருந்தது. அனைத்தயும் உணவு கூடத்தின் மேஜையில் வைத்தபோது ஏழடி மேஜை நிரம்பி விட்டது.கடும் கோபத்தில் போனில் காப்டனை அழைத்து கீழே வரச்சொன்னார் முதன்மை இஞ்சினியர்.கடந்த சிலநாட்களாக அடுமனைகுள்ளேயே வேலை செய்தும் குளிர்பெட்டியில் என்ன இருக்கிறது என நான் பார்க்கவேயில்லை.

  முன்பொரு முறை மீன் சாப்பிட்ட போசன் இது “பிரெஷ் இல்ல” என சொல்லி குப்பை தொட்டியில் வீசினார். எதிரில் நான் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன் நன்றாக இருந்தது.மூன்றாம் இஞ்சினியர் சிக்கன் விங்க்ஸ் சாப்பிட்ட போது “இது முந்தா நேத்து பார்டியில்  மீதி வந்ததை சூடாக்கி வெச்சிருக்கான்” என திட்டியது நினைவுக்கு வந்தது.ஞாயிறு காலை மட்டுமே சமைக்கப்டும் ஓட்ஸ் மீல்ஸ் குளிர் பெட்டியில் இருந்தது ஒரு முறை என் கண்ணிலும் பட்டது.

  போகா எல்லா திங்கள் காலையிலும், எல்லா புதனிலும் வடை அல்லது இட்லி அல்லது ஊத்தப்பதுடன் சாம்பார் இருக்கும்.கோம்ஸின் மெனு மாறாதது காலை விடியலுக்குப்பின் கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம் என்ன மெனு என.

   அடுமனைக்கு கீழே இருக்கும் குளிர் பெட்டியிலிருந்து ஒரு தட்டு நிறைய பொரித்த சால்மன் மீன் மட்டும் கிடைத்தது.மேஜையிலிருந்த அனைத்தையும் புகைப்படம் எடுத்தபின் காப்டனை கீழே வந்து பார்க்க சொன்னார் முதன்மை இஞ்சினியர். காப்டன் முகக்கவசம்,கையுறை அணிந்து நடக்கவே முடியாமல் வந்து அனைவரையும் விலகி நிற்க சொன்னார். மிகப்பழைய சமைத்த உணவுகளை மைனஸ் பதினெட்டு பாகையில் பாதுகாக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பணியாளர்களின் முகத்தில் ஒரு பேரமைதி நிலவியது.

  காப்டனும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது இப்போதுதான் எங்களுக்கு தெரிந்தது.அவர் கவனமாக எதையும் தொடாமல் கோம்சை அழைக்க சொன்னார்.

  கோம்ஸ்,கையுறையும் முகக்கவசமும் அணிந்து கண்கள் மிளிர புன்னைகையுடன் வந்தான். முதன்மை இஞ்சினியர் “இதெல்லாம் ஏன் வெச்சிருக்கா?”என கேட்டதும் நான் சாப்பிடுவதற்கு வைத்துளேன் என்றான் கோம்ஸ்.கோபத்தில் எகிறினார் முதன்மை இஞ்சினியர். மேலும் இருவரை உடனழைத்து கொண்டு அடுமனைக்கு கீழே இருக்கும் சமைக்காத உணவுவுகளை பாதுகாக்கும் குளிர் பெட்டிக்கு அழைத்து சென்று சோதனையிட சொன்னார். கீழே கோம்சும் வந்தார். “நீ போ ரெஸ்ட் எடு நாங்க பாத்துகிடோம்” என முதன்மை இஞ்சினியர் சொல்ல. “இங்க ஒண்ணும் கிடையாது”என வாதிட்டான் கோம்ஸ். வலுகட்டாயமாக அவனை அனுப்பிவிட்டு குளிர்பெட்டி அறைக்குள் சோதனையிட்டபோது அட்டை பெட்டிக்குள், பாலீத்தீன் பைகளில் அடைத்து வைத்து மறைந்திருந்த சப்பாத்தி பைகள் நான்கு, எறிந்தால் மண்டையுடையும் கெட்டியுடன் இருந்த மூன்று பை இட்லி,வடை மேலும் போகா,ஒரு மாதம் முன்பு பார்டியில் மிஞ்சிய மட்டன் ஸ்டேக்,தினசரி உண்டு மீதமாகும் சப்பாத்திகள் மேலும் சாம்பார் என வந்து கொண்டே இருந்தது.

  இங்கே கப்பலில் நான் உட்பட இருபது பேருக்கு மேல் ஒருவர் மாற்றி ஒருவருக்கு வயிற்றுபோக்கும்,காய்ச்சலும் தொடர்ந்தது(கப்பலின் உணவும் என் வயிறும் என கட்டுரையே எழுதினேன்.). அமெரிக்காவை நெருங்கும்முன் நடந்த கூட்டத்தில் காப்டன் உன் உணவில் பிரச்சனை இருக்கிறது அதை உடனே சரி செய் இல்லையெனில் அமெரிக்காவில் சிலரை மருத்துவமனை அனுப்பும் சூழ்நிலை ஆகிவிடும் என எச்சரித்திருந்தார்.

  இன்று தான் தெரிந்தது கோம்ஸ் எங்களுக்கு எப்படியான உணவை தந்திருக்கிறான் என்.வயிற்றுவலி,வயிற்று போக்கு,காய்ச்சலுக்கான காரணம் தெளிவானது.

நாஞ்சில் ஹமீது,

10 September 2023.

sunitashahul@gmail.com

Thursday 15 February 2024

 

ஷோர் லீவ் 3

  

      அடுத்தடுத்து ஒவ்வொருவராக நோய் தொற்றுவது ஒரு அச்சத்தை தந்து ஒரு பதட்டமான சூழல் உருவாவனது.என்னிடம் இருக்கும் கபசுர குடிநீரை தேடினேன் கிடைக்கவேயில்லை. கடந்த இரு கப்பல்களில் கொண்டு சென்றது இம்முறை வீட்டிலேயே விட்டு வந்துள்ளேன்.

   மதியம் கலீலை போனில் அழைத்தேன் “ஜனாப் எப்படி இருக்கா”

“காய்ச்சல் இருக்கு,உடம்பு வலி,தலைவலி இருக்கு”

“பேடிக்காத நான் சாயங்காலம் ஒரு காப்பி போட்டு தாரேன் குடி,மருந்து என்ன தந்தாங்க எனக்கேட்டேன்.

காய்ச்சலுக்கு மாத்திரை தந்தாங்க சோறும்,பருப்பும் தந்தத வேங்கி வெச்சிருக்கேன்,தின்னுட்டு மாத்திரை போடணும்”என்றான் கலீல்.

சுனிதாவிடம் போனில் பேசும்போது சொன்னேன் “மெஸ் மேனும் தனிமைபடுத்தலுக்கு போயாச்சி”.

“ஒரு ஆளுக்கு தொத்திட்டுன்னா,இனி ஒரு ரவுண்டு எல்லாருக்கும் வந்துட்டுதான் போவும்”எனச்சொன்னாள்.

  காலையில் கோம்ஸின் அறைக்கு வெளியே ஒரு அஞ்சால் அலுப்பு மருந்தை வைத்து விட்டு போனில் சொன்னேன் அதை எப்படி குடிக்கவேண்டுமென. அடுமனை பணியாளர் இருவரும் அறைக்குள் முடங்கி போயினர். அன்று மதிய உணவுக்கு போசன் பருப்புக்குழம்பு செய்திருந்தார்.பிகில் மீனை பொரித்தான்.

   சென்குப்தாவுக்கு சோதனையில் நெகடிவ் என வந்ததால் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து உணவுக்கூடத்துக்கு வந்தான்.

          முதன்மை அதிகாரி தலைமையில் ஆங்கர் பார்ட்டி நங்கூரத்தை உருவியபின். இஞ்சின் இயக்கப்பட்டு முன்னே நகர்ந்தது மாலை நான்கு மணிக்கு பனாமா கால்வாய் பைலட் மற்றும் பணியாளர்கள் மொத்தம் 21 பேர் வந்தனர்.

 

  பார்வர்ட் மற்றும் ஆப்ட் ஸ்டேஷனில் இரு குழுவாக பிரிந்து சென்றனர்.கப்பல் பணியாளர்கள் மதியத்திற்குப்பின் நல்ல ஓய்வில் இருந்துவிட்டு மாலை கால்வாயை கடக்கும் பொருட்டு அனைவரும் பணிக்கு வந்தனர். கப்பல் ஆறு மணிக்கு முதல் கேட்டுக்குள் நிறுத்தி,ஷட்டர்களை அடைத்தபின் தண்ணீரை நிரப்பி கப்பல் மேலே உயர்ந்தது இவ்வாறு இரண்டாவது,மூன்றாவது,நான்காவது கேட்டுகளில் நுழைந்து பனாமா கால்வாய்க்குள் இரவு ஒன்பது மணிக்கு கப்பல் நுழைந்தது. ஆப்ட் ஸ்டேஷனில் இரு கயிறுகளை கரையில் கொடுத்தோம். விஞ்சை இயக்குவது மட்டும் நாங்கள். ஒரு விஞ்சை பனாமா கால்வாய் மேற்பார்வையாளர் சொல்லும் சைகையை புரிந்துகொண்டு நான் இயக்கினேன். பணிக்கு வந்த சென்குப்தாவை மூன்றாம் அதிகாரி ரஹீம் உல்லா ஓய்வு எடுத்துகொள்ள சொல்லி அனுப்பி வைத்தார்.

 

  சுக்கு,கொத்தமல்லி,நல்லமிளகு,ஜீரகம் சேர்த்து பொடித்து தந்திருந்தாள் சுனிதா. அந்த பொடியில் ஒரு கரண்டி எடுத்து நீரில் கொதிக்கவிட்டு,கொஞ்சம் வெல்லம் கலந்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தேன்.

     கோம்ஸ் இரவில் போனில் அழைத்தான் “உனட்ட ஏதாவது மருந்து இருக்கா”

“என் மருந்து மிஸ்ஸிங்,வீட்டுலேய வெச்சிட்டு வந்துட்டேன். காலத்த ஒரு பொடி தந்தேனே,அதுல ஒன்னு கூட தாறேன் குடி செரியாவும்” என்றேன்.

 அஞ்சால் அலுப்பு மருந்தை கொடுத்துவிட்டு சுடுநீரில் கலந்து குடிக்க சொன்னேன். “இத உள்ள குடிக்கணுமா?”எனக்கேட்டான்.

“நேத்து தந்தத என்ன செய்தா”

“நான் வாய் கொப்பளிச்சி துப்புனேன்”என்றான் கோம்ஸ்.

“அதுல தெளிவா இங்க்லீஷ்ல எழுதியிருந்ததே,நான் சொன்னேனே குடிக்கணும்னு”

   கிறுக்கன் ஒரு மருந்த வேஸ்ட் பண்ணிட்டான் என எண்ணிக்கொண்டேன். இரவில் ஒன்றரைமணிக்கு மேல் நங்கூரம் பாய்ச்சியபின் கப்பல் நிறுத்தபடுவதால் நாங்களனைவரும் பிஸி நாளைக்கி சாப்பாட பாத்துக்கோ,சோறு வடிச்சி,பருப்பு குழம்பு செய்தா போரும் என என்னிடம் சொல்லியிருந்தார் போசன்.

   கோம்சிடம் இருபத்தி ஏழு பேருக்கு அரிசி எவ்வளவு,என்ன மீன் எவ்வளவு எடுக்கவேண்டும்,காரட் கூட்டு வைக்க எவ்வளவு காரட் வேண்டும் எனும் அளவுகளை கேட்டு மீனை மாலையிலேயே குளிர் பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்திருந்தேன்.

     சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கே போய் அடுமனையின் மின் அடுப்பின் சுவிட்களை ஆன் செய்துவிட்டு வந்தேன்(electric hot plates).அது சூடாக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு.மீண்டும் அடுமனை சென்று காலையுணவுக்கு வேண்டிய முப்பது வீதம் உள்ள இரு தட்டு முட்டைகள்,பழச்சாறு,பால்,பிரட் ஆகியவற்றை குளிர்பெட்டியிலிருந்து எடுத்து வந்தபின் பன்னிரண்டு முட்டைகளை தண்ணீரில்,உப்பு கலந்து பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைத்தேன்.நோயாளிகளுக்கு சுக்கு காப்பியை கொதிக்க வைத்தேன்.

    வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாயை வெட்டியபின்.கொஞ்சம்  சிறுபருப்பை ஊற போட்டேன். பெரிய காரட்டுகளில் பத்து எடுத்து கிரேட்ட்ரில் சிறிதாக நறுக்கி மூடி வைத்தேன். பேக்டு(baked fish fillet) பிஷ் பில்லட் செய்வதற்காக மீன்களை வெட்டியபின் தெரிந்தது குறைவாக இருக்கிறது என.மீண்டும் குளிர் பெட்டியிலிருந்து மீன்களை எடுத்து தண்ணீரில் போட்டேன்.நோயாளிகளுக்கு அவரது அறைகளில் சுக்கு காப்பியை கொடுத்தேன்.

   காலை ஏழு மணிக்கு ஜப்பானின் ஷிண்டோ மட்டும் வந்து மூன்று அவித்த முட்டைகளை எடுத்துச்சென்றார்.ரிச்சர்ட் ஏழரைக்கு வந்து தனக்கான முட்டை புர்ஜியை செய்து எடுத்துசென்றான்.எட்டு மணிக்கு பிறகுதான் ஓ எஸ் இர்பான்,மற்றும் பணியாளர்கள் வந்து தங்களுக்கு வேண்டிய முட்டை வகைகளை செய்து எடுத்துச்சென்றனர். கேஸ் இஞ்சினியரிடம் காஸ் பிளாண்டை பார்த்துக்கொள்ளுங்கள் இன்று நான் கிச்சனில் பிஸி எனச்சொன்னேன். சென் குப்தா அறைக்குள் இருந்த இருவருக்கும் காலை உணவாக அவித்த முட்டையும்,பிரட்டும் கொடுத்துவிட்டு வந்து பாத்திரங்களை கழுவி தருவதாக சொன்னான். இரவுணவுக்கு இரு முழு கோழிகளை உரிப்பதை பார்த்த சென் குப்தா “இத உனக்கு வெட்ட தெரியுமா” எனக்கேட்டான்.

   காடட் அஞ்சுமன் எனக்கு முட்டை ஆம்பளேட் போட்டுதந்தான். சீரியல்சுடன் சாப்பிட்டுவிட்டு பருப்பை கழுவி கொஞ்சம் உப்பும்,மஞ்சள்தூள் கலந்து வேக வைத்தேன்.அதில் கீறிய இரு பச்சை மிளகாய்,நறுக்கிய பூண்டுகளை போட்டேன்.

   ஊற வைத்திருந்த இருபத்தி ஏழு பேருக்கு தேவையான அரிசியை கழுவி, அடுப்பில் சூடாகியிருந்த தண்ணீரில் ‘பிஸ்மில்லாஹி ஹிர் ரஹ்மானிர்ரஹீம்” என சொல்லி போட்டு மிக கொஞ்சமாக உப்பும் கலந்து மூடி வைத்தேன்.

 


    பத்து மணிக்குமேல் போசனும்,நிதினும் வந்தனர். மீனை அவனில் நூற்றி எண்பது டிகிரி வெப்பத்தில் நாற்பத்தியைந்து நிமிடம் வைக்குமாறு கோம்ஸ் சொல்லியிருந்தார். மீன்களின் மேல் உப்பும்,மிளகுதூளும் தூவி,மெலிதாக வெட்டிய எலுமிச்சையை வைத்து ஓவனுக்குள் வைத்து மூடினேன் சரியாக இருபத்தியைந்து நிமிடத்தில் திறந்து பார்த்தேன் சரியான பதத்தில் இருந்ததால் வெளியே எடுத்து சில்வர் பாயிலால் மூடி வைத்தேன்.காடட் “காப்டன் எழுந்து விட்டார்,ரெண்டு முட்ட புர்ஜி மட்டும் கேட்டார்”என அதை செய்து பேப்பர் தட்டில் கொண்டு சென்றான்.

  போசன் பருப்பை தாளித்து இறக்கி சுவை பார்த்தபின் கவுண்டரில் வைத்து மூடினார்.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான எண்ணையில் கடுகு வெடித்தபின்,காய்ந்த கறிவேப்பிலை,வத்தல் மிளகாய் போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பும் போட்டபின்,காரட்டை தட்டி  லேசா மஞ்சள்  தூவினேன்.ஐந்து நிமிடத்தில் வெந்து தயாரான காரட் கூட்டை உடனே வேறு பாத்திரத்தில் மாற்றி கவன்டரில் வைக்க சொன்னேன்.

 


  போசன் “ஒன்னரைக்கு ஆங்கர் எடுக்கணும் நாலு மணிக்கு ஸ்டேஷன்,டின்னருக்கு முட்டை புர்ஜி போட்டு,பன்னு வெய் போதும்,சீப் குக் செரியாயிட்டான்,நாளைக்கி வந்துருவான்” என்றார்.

பருப்புக்குழம்பு கொஞ்சம் காரமாகவும்,காரட் கூட்டு சுவையாக இருந்ததாகவும் சொன்னார்கள். அஞ்சுமன் “இந்த கேரட் பாஜி,சாப்பிட்டதே இல்ல,ருசிக்கு என்ன செய்தா” எனக்கேட்டான்.

 


“என் மனைவி இதுபோல செய்வா,சுவையூட்டி,கலர் பொடி ஒன்னும் சேக்கல்ல”என்றேன்.

“அச்சா ஹே”.

 

 அனைவரும் சாப்பிட்ட பின் சாதம் மட்டும் கொஞ்சம் மீதியிருந்தது.எனது புதிய சுவை அனைவருக்கும் பிடித்திருந்தது சமையல்காரர் கோம்சும் காரட் கூட்டு நல்லா இருந்தது என்றதால் ஒரு அகமகிழ்வு இருந்தது.ஒருமணிக்கு மேல் அறைக்கு வந்து தூங்கினேன் கப்பல் பனாமா கால்வாய்க்குள் நகர தொடங்கியிருந்தது. கப்பல் அதிர பெரும் ஓசை கேட்டு விழித்தேன் அறையின் கண்ணாடி ஜன்னலின் திரையை விலக்கியபோது பெருமழை அறைந்துகொண்டிருந்தது.மீண்டும்,மீண்டும் இடியோசை கப்பலுக்கு மிக அருகிலேயே கேட்டது.

 


  பின் மதியம் மூன்று மணிக்கு அடுமனைக்கு சென்றேன். முட்டை புர்ஜிக்கு நாற்பது முட்டைகள் வேண்டும் என சொல்லியிருந்தார் கோம்ஸ்.மதிய உணவு கொடுக்கும்போது நோயாளிகள் இருவரையும் பார்த்தேன். கோம்ஸ் நன்றாக தேறியிருந்தான்,கலீல் தலை வரை கம்பளியால் மூடி நல்ல காய்ச்சலும் நிற்கவோ அமரவோ இயலவில்லை” என்றான்.

“ஜனாப் காலத்த போட்டு தந்த காப்பி ஒன்னு தருவியா” எனக்கேட்டான்.

இருவருக்கும் சுக்கு காப்பியை அடுப்பில் வைத்தபோது மூன்றாம் இஞ்சினியர் அடுமனைக்கு வந்தார். “ஷாகுல் என்ன செய்ய போறா” எனக்கேட்டுவிட்டு. “பன்னு யாரும் தின்ன மாட்டாங்க,சிக்கன் நீ சம்ச்சிட்டியா”

“இல்ல வெட்டி,உப்பும்,மஞ்சயும் விரவி வெச்சிருக்கேன்”என்றேன்.

“மல்லி இல இருக்கா,கிரீன் சிக்கன் செய்து தாரேன்,கொஞ்சம் ரைஸ் போடு” என்றார்.

“சிக்கன் தின்னாத்த ஆளுக்கு கொஞ்சம் பருப்பு செய்திருவோம்”எனச்சொல்லி பருப்பை ஊற வைத்தேன். காலையில் மைனஸ் பதினெட்டு டிகரியில் இருந்து எடுத்து வைத்த பன்கள் இருந்த அட்டை பெட்டியை பழங்கள்,காய்கள் வைக்கும் குளிர் பெட்டிக்குள் தள்ளினேன்.

   மூன்றாம் இன்ஜினியரின் கிரீன் சிக்கனும்,வெள்ளை சாதமும்,பருப்பும் இரவுணவாக இருந்தது.கப்பல் பனாமா கால்வாயின் மறு எல்லையான பல்போவாவின் கேட்களை அடைந்து முதல் கேட்டுக்குள் நுழைந்து

 


தண்ணீரை வெளியேற்றி கப்பலை கீழே இறக்கிகொண்டிருந்தார்கள்.கப்பல் பணியாளர்கள் அனைவரும் மும்மூரமான பணியில் இருந்ததால் நேரம் கிடைத்தவர்கள் பலர் சாப்பிட்டார்கள், சிலர் சாப்பிடவே இல்லை.

காப்டன் மதியமும் சாப்பிட வரவில்லை. பிரிட்ஜ் விங்கில் நின்று பனாமா பைலட்டின் உத்தரவுகளை பெற்று கப்பலுக்கு வழங்கிகொண்டிருந்த காப்டனை போய் பார்த்தேன். “சாப்பிடவே இல்ல இன்னைக்கு” எனக்கேட்ட என்னை சைகையால் தூரத்திலயே நிப்பட்டினார். குறைவான ஓய்வுக்குப்பின் தொடர்ந்து பணிகள் செய்து சோர்ந்திருந்த கண்களுடன் மழை சட்டை அணிந்து நின்றுகொண்டிருந்தார்.முதல் முறையாக அவர் பனாமா கால்வாயை கடக்கிறார் பத்திரமாக கப்பலை கொண்டு சேர்க்கும் பதட்டம் அப்பிய முகம்.

  “நான் சாப்பிடுவேன் பொறவு”

“மத்தியானமும் சாப்பிடல நீங்க”

“நான் டீ பிஸ்கட் சாப்பிட்டேன்”.என்றார்.

 

   நான் கீழிறங்கி வந்தேன். கிரீன் சிக்கனில் சில துண்டுகளும்,கொஞ்சம் சாதமும் மட்டுமே மீதியிருந்தது. இன்னும் சாப்பிடாதவர்கள் இருந்தார்கள். மதிய உணவின் மீதமிருந்த சாதத்தை கொட்டாமல் வைத்திருந்தேன்.

    அதில் பாதியை எடுத்து ஜீரகம்,தக்கோலம்,பட்டை,கிராம்பு,ஏலக்காயை  எண்ணையில் கிளறி ,வெங்காயம்,உப்பு போட்டு வதக்கி,மை போல அரைத்த இஞ்சி,பூண்டை சேர்த்து மஞ்சள்,மல்லி,மிளகாய்,பெருஞ்சீரக தூள் போட்டு அதில் சாதத்தை சேர்த்து பிரைடு ரைஸ் ஆக மாற்றினேன்.



     இரவு ஒன்பது மணிக்கு கேட்களை கடந்து கப்பல் பசுபிக் கடலில் நுழைந்தது. 2008 ஆண்டு பணிபுரிந்த கப்பலில் இந்த பல்போவா துறைமுகத்திற்கு நிறைய முறை வந்திருக்கிறேன்.விளக்குகளின் வெளிச்சத்தில் துறைமுகத்தில் கட்டபட்டிருந்த கப்பல்களிலிருந்து கிரேன்கள் மூலம் சரக்கு பெட்டகங்களை இறக்கும் காட்சி ஆயிரம் பாய் கொண்ட பெருநாவாயிலிருந்து சரக்கு இறக்குவது என்ற வெண்முரசின் வரிகள் மனதில் ஓடின.  தலைக்கு மேலுள்ள பாலத்தை கடக்கையில் பழைய நினைவுகளை மனம் அசை போட்டுகொண்டிருந்தது. மிக மகிழ்ச்சியான நாட்களாக அவை இருந்தது.முதன் முறை பனாமாவை கடக்கும் ஷோகே யுடன் அதை பேசிக்கொண்டிருந்தேன்.

 


 

    பனாமாவில் கப்பலுக்கு வேண்டிய பெயிண்ட்கள் வந்தது.அவற்றை போசன் குழுவினர் கிரேன் மூலம் தூக்கி கப்பலுக்குள் கொண்டுவந்தனர். பனாமா ஏஜென்ட் கொண்டுவந்த ரசீதுகளில் காப்டனுக்கு பதிலாக முதன்மை அதிகாரி முத்திரை பதித்து கையொப்பமிட்டு அனுப்பினார்.

   காப்டனுக்கும்,முதன்மை அதிகாரிக்கும் சாப்பாடு இருக்கிறதா என பார்த்தேன். இரவில் செய்திருந்த பிரைடு ரைசும் தீர்ந்து போயிருந்தது.

   அஞ்சுமனிடம் கேட்டேன் “ரிசிப்ட்ல சிக்னேச்சர் வாங்க எதுக்கு சீப் ஆபிசர தேடா? காப்டன்ட்ட வேங்கி குடுக்க வேண்டியது தானே”

 “காலைலிருந்து கேப்டனுக்கு உடம்பு செரியில்ல,நிக்கவே முடியல,எப்படியோ பனாமா தாண்டியாச்சி, கொஞ்சம் மின்ன அவரு ரூமுக்குள்ள போயிட்டாரு யாரையும் கிட்ட வர உடல்ல”

  “அவருக்கும் கொரோனாவா”எனக்கேட்டேன்.“யாருக்கு  தெரியும்” என்றான் அஞ்சுமன்.

நாஞ்சில் ஹமீது,

09-september 2023

sunitashahul@gmail.com

Wednesday 14 February 2024


 

ஷோர் லீவ் 2

   தொடரும் கொரோனா.....

                    கப்பல் காரன் எப்போதும் எதையும் செய்து கொண்டே இருப்பவன். அனைத்து பணியாளர்களுக்கும் தினமும் எட்டு முதல் பதினோரு மணிவரை பணி செய்தாக வேண்டிய கட்டாயம்.

  துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் போது,கரையணையும் முன்,நீண்ட கால்வாய் அல்லது ஆற்றுப் பயணங்களில் (manovering ) காப்டன்,நேவிகேசன் அதிகாரிகள்,முதன்மை இஞ்சினியர்,இஞ்சினியர்கள்,போசன்,ஓ.எஸ்சுக்கு மிக நீண்ட பணி நாளாக இருப்பதை தவிர்க்கவே இயலாது.

   ஞாயிறுகளில் அரை நாள் ஓய்வை சனிக்கிழமையே மனம் எதிர்நோக்கியிருக்கும். ஞாயிறுகளில் முழு நாள் கிடைத்தால் அந்த ஓய்வை எப்படி கழிப்பது என தெரியாமல் மண்டைவெடிக்கும் கப்பல் காரர்கள் உண்டு.

   முன்பு ஒரு முறை ஐடியா மணி என்னிடம்  “லே ஷாகுல் சண்டே  ஹாப் டே ரெஸ்ட்ல பிரியாணிக்கு பொறவு உறங்கி எழும்பி ஒரு படம் பாத்தா நாள் முடியும்,புல் டே ரெஸ்ட் அதுனால கேபினுக்குள்ள இருந்து ஒரு மாதிரி ஆயிட்டு” என்றார்.

    ஞாயிறு பிரியாணிக்குப்பின் இரண்டு மணி நேரம் தூங்கி எழும் கப்பல்காரர்கள் இரவு நீண்டநேரம் தூக்கமில்லாமல் அதிகாலை தூங்கி திங்கள்கிழமை காலை விழிக்கையில் சோர்வுடன் எழுவதை தவிர்க்கும் பொருட்டு ஞாயிறு மதிய தூங்காமல் அறையில் ஏதாவது செய்துகொண்டே இருக்கும் கப்பல்காரர்கள் உண்டு.சிங்கப்பூரில் கப்பலை நிறுத்தி எரிஎண்ணெய்,உதிரிபாகம்,உணவு பொருட்களை நிறைத்தபின் கப்பல் புறப்பட்டால் போக்குவரத்து நிறைந்த மலாக்கா முனையை கடக்க பதினைந்து மணிநேரத்துக்கும் மேலாகும்.

   ஒருமுறை அப்படி மலாக்கா கடந்த மறுநாள் முதன்மை இஞ்சினியரிடம் கேட்டேன் “ஸார் தூங்குனீங்களா” என.

அவர் “தூக்கம் எல்லாம் வீட்டுக்கு போய் தான்”என்றார்.

   பொறுப்பை மண்டைக்குள் திணித்து வைத்திருப்பதால் இன்ஜினின் பிரஷர்,டெம்பறேச்சர் எல்லாம் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருப்பது தான் அவரது தூக்கமின்மைக்கு காரணம்.

  கொரோனாவால் அறையை விட்டு வெளியே வராதவர்களின் பாடு சுகமின்மையை விட கொடுமை.வாசிப்பு பழக்கம் இருப்பவர்களுக்கு தனிமை சுகமளிக்கும் என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

  ஏழாம் தேதி கப்பல் பனாமாவின் கிறிஸ்டோபல் அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்றது.பனமா கால்வாயை கடக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. இன்றும் பிகிலுடன் இணைந்து மெஸ்மென் கலீல்,கோழி குழம்பும்,காலிபிளவர் கூட்டும்,வெள்ளை சாதமும் வடித்திருந்தான்.இரவுணவுக்கு சப்பாதிக்கான மாவை பிசைந்து வைத்துவிட்டு ஓய்வுக்கு போய்விட்டு மூன்று மணிக்குமேல் வந்து சப்பாத்தியும்,காராமணி கூட்டும் செய்திருந்தான்.

  கொரானா அறைக்கு கலீல் கையுறை,முககவசம் அணிந்து,பேப்பர் கப்,பேப்பர் தட்டில் உணவை வழங்கி கொண்டிருந்தான்.சாப்பிட்டபின்  தட்டை அவர்களின் அறையின் எதிரில் கட்டிவைத்திருந்த பிளாஸ்டிக் பையில் அவர்களே போட்டுவிட வேண்டும். உணவுக்காக தவிர வேறதெற்கும் அவர்கள் அறையை திறக்க கூடாது.



 இன்றும் மாலை இரவுணவு நேரத்தில் காப்டன் எங்கள் உணவு கூடத்துக்கு வந்து போசனிடம் விசாரித்தார். “எல்லாரும் இப்ப ஓகே தானே,ஒரு வாரம் இப்படியே மெயின்டேன் பண்ணிட்டா ஒரு பிரச்னையும் இல்ல,ஐ  டோண்ட் வான்ட் எனி ஒன் பி சிக் மோர், பிளீஸ் வியர் மாஸ்க்” என சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றார்.

   முதன்மை அதிகாரி கொரோனா நோயாளிகளை பார்ப்பதற்காக சென்றார். நானும் அவருடன் சென்றேன். சென்குப்தா,கோம்சுக்கு அடுத்தடுத்த அறைகள் அறைகதவை தட்டி விட்டு விலகி நின்றோம். சென்குப்தா கலைந்த தலைமுடி,வீங்கிய கண்களுடன் கதவை திறந்தான். “நல்லா இருக்கேன்,எனக்கொண்ணும் பிரச்னை இல்ல,சீக்கிரம் வெளிய உடுங்கோ”என்றான். முதன்மை அதிகாரி “வெயிட் மேன் வில் ஸீ”என்றார். அருகிலிருந்த கோம்ஸ் கதவை திறக்கும்போது ஒரு நோயாளியின் தோற்றத்தில் சோர்வாக  இருப்பதை அவனது முகம் உணர்த்தியது. தொண்டை,கை,கால்,உடல் வலியுடன்,இருமலும் இருப்பதாக சொன்னான்.



    மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆறு மணிக்கு அடுமனைக்கு சென்றேன். மதிய உணவுக்கு வேண்டிய  நாற்பத்தியிரண்டு அயில மீன்களை சுத்தபடுத்த என்னிடம் தந்துவிட்டு கலீல் தொடர்ந்தான்  “பாய் ஜான் நான் தூங்கவே இல்ல நேற்று சாயங்காலம் ப்ரீசர் ரூமுக்குள்ள தொப்பி போடாம போயிட்டேன்,லேசா தொண்ட புடிச்சி,காய்ச்சல் போல இருக்கு,வேற பிரச்னை ஒண்ணும் இல்ல” என்றான். மீனின் வயிற்றை கீறி,குடலை வெளியே எடுத்து தலையை வெட்டாமல் உள்ளே  இருந்த கழிவுகளை நீக்கி சுத்தபடுத்திய பொரிப்பதற்கு வசதியாக லேசாக வகுந்து கொடுத்துவிட்டு வந்தேன். “லஞ்ச் பே பாங்க்டா பிறை” என முந்தைய நாளே சொல்லியிருந்தான்.


  எட்டு மணிக்கு மேல் குளித்துவிட்டு முதன்மை அதிகாரியை சந்தித்தபோது  “மாலை நான்கு மணிக்கு பைலட் கப்பல் கால்வாய்க்குள் நுழையும்,இன்று ஆப்ட் ஸ்டேசனில் உன்னை அழைப்போம் சென்குப்தாவிற்கு பதிலாக,மதியத்திற்கு பின் ஓய்வு எடுத்துக்கொள், கேட்களை கடந்து உள்ளே சென்று மலையில் உள்ள ஆற்றில் நங்கூரம் பாய்ச்சுவோம், மறுநாள் மதியம் புறப்பட்டு இரவு பல்போவாவில் உள்ள கேட்களை தாண்டி பசுபிக்கடலில் இரவில் நுழைவோம் என்றார்.



பனாமா கால்வாய் 


     கம்ப்றசர் அறைக்கு சென்று காலை பணிகளை முடித்துவிட்டு பத்து மணிக்கு கட்டன் சாயாவை எடுத்துவிட்டு அறைக்கு வந்து சுனிதாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

சுனிதா “கொரோனா காரனுவ எப்டி இருக்கானுவோ?

“நல்லா இருக்கானுவோ,நேத்து நான் அவனுவள பாத்தேன்”

“எப்டி”

“சீப் ஆபிசர் போவும்போ,கூட போய் வெளிய நின்னு பாத்தேன்” என்றேன்.

“ரெம்ப கிட்ட போவாதியோ, உங்கள பாத்துகிடுங்கோ” என்றாள்.

“ம்,செரி”என்றேன்.

கட்டன் சாயா குடித்தபின் உணவு கூடத்துக்கு போனேன். ஓ எஸ் இர்பான் “ஷாகுல் பாய் மாஸ்க் போடு”என்றான்.

“ஏன்” எனக்கேட்டுவிட்டு அடுமனைக்குள் நுழைந்து குழாயை திறந்து தேநீர் குவளையை கழுகும் போது பார்த்தேன் போசன்,நிதின்,பிகில் ஆகியோர் சமையலில் மும்மூரமாக நின்றுகொண்டிருப்பதை.

இர்பான்  “நீ சாயாக்கு இங்க இல்லேல்லா, கலீல் ரூமுக்குள்ள போயாச்சி, டெஸ்ட் பாசிடிவ்” என்றான். அறிவிப்பு பலகையில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து,சமூக இடைவெளியை பேணி,கைகளை அடிக்கடி கழுவுமாறு எழுதியிருந்தது.

நாஞ்சில் ஹமீது.

08 September 2023.

sunitashahaul@gmail.com.