Thursday 13 December 2018

கப்பலுக்கு புறப்படுதல்


   கப்பலுக்கு புறப்படுதல்
  
           குலேசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த காயல்பட்டினத்தை சேர்ந்த முப்பத்தியிரண்டே வயதான  சுரேசுக்கு ஆறு யூனிட் இரத்தம் தேவைப்பட்ட தகவலறிந்து எனது மச்சான் சாகுல் ஞாயிறு இரவு “மாப்ளே காலத்த போயிருவோமா” எனக்கேட்டார் .எனக்கும்,அவருக்கும் பி பாசிட்டிவ் வகை ரத்தம்தான். ரத்தம் தேவையென மணவை இசுலாமிய மருத்துவ சேவை அமைப்பின் வாட்ஸ் அப்பில் செய்தி வெளிட்டிருந்தார்கள் .
  
    திங்கள்கிழமை காலை எட்டரை மணிக்கு மேல் நான் நாகர்கோயிலிலிருந்து புறப்பட்டு அழகியமண்டபத்தில் எனது மச்சானுடன் இணைந்து கொண்டேன் .அவர் மணவாளக்குறிச்சியிலிருந்து அவரது காரில் வந்தார்.காரில் சென்றுகொண்டிருக்கும்போதே எனது மும்பை அலுவலகத்திருந்து அழைத்தார்கள் .நீண்ட உரையாடலுக்கு பின்  அவசரமாக நாளை கப்பலுக்கு போக வேண்டும் என்றார்கள்  .கப்பல் ஜப்பானிலிருந்து அமெரிக்கா செல்வதுவரை தான் உங்கள் பணி அமெரிக்காவிலிருந்து வீட்டிற்கு வந்து விடலாம் .அதிகபட்சம் மூன்று வாரங்கள் ஆகும் என்றார்கள்.கடந்த பத்து தினங்களுக்கு முன்பும் மும்பை அலுவலகம் என்னை தொடர்புகொண்டு பதினைந்தாம் தேதி கப்பலுக்கு போக முடியுமா?என கேட்ட போது மறுத்திருந்தேன் .இப்போது வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டேன் .மறுநாள்  காலை கொச்சி அலுவலகம் சென்று விமான சீட்டு பெற்றுக்கொண்டு அங்கிருந்து பயணிக்க வேண்டும் .

    மூகாம்பிகையில் ரத்ததானம் கொடுத்துவிட்டு புறப்பட மணி பதினொன்று தாண்டியிருந்தது .திருவிதாங்கோடு ஜாமத்திலிருந்து இரு இளைஞர்கள் சுரேசுக்கு ரத்தம் கொடுக்க வந்திருந்தனர் .சுரேசின் உறவினர்கள் காயல்பட்டிணத்தில் உள்ள ஜமாத்தை தொடர்புகொண்ட போது அவர்கள் இந்த ரத்த தேவை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.சுரேசுக்கு தேவையான ஆறு யூனிட் ரத்தம் கிடைத்துவிட்டதாக சொன்னார்.

     அழகியமண்டபத்தில் காரை நிறுத்திவிட்டு ஒரு சர்பத்தும் ,செந்தொளுவன் பழமும் சாப்பிட்டுவிட்டு ,நான் எனது இருசக்கரத்தில் நகேர்கோயில் நோக்கி புறப்பட்டேன் .மச்சான் மணவையை நோக்கிச்சென்றார்.
   
    கொச்சி அலுவலகத்தை தொடர்புகொண்டேன் “மறுநாள் காலை பயணப்பையுடன் வந்துவிடு” என்றார்கள் .வீடு வந்து சேரும்போது கடிகாரம் ஒன்றை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.மகன்கள் இருவருக்கும் அரையாண்டு தேர்வு தொடங்கிவிட்டதால் மதியமே வீட்டிற்கு வந்திருந்தனர் .சல்மான் கடந்த சில நாட்களாக சர்க்கஸ் பார்க்க அழைத்து செல்ல சொல்லிக்கொண்டிருந்தான்.எனது மூத்தமகன் ஸாலிம் 2.0 பார்க்கவேண்டுமென்றான். “நான் நாளை கப்பலுக்கு போகிறேன்” என்றேன்.இருவரும் நம்பவில்லை.


     அரையாண்டு தேர்வு விடுமுறையில் இந்தியாவின் வணிக தலைநகருக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ரயிலில் பயணசீட்டுகள் முன்பதிவு செயவைத்திருதோம்.எனவே மகன்கள் இருவரின் முகமும் வாடிப்போயவிட்டது மகன்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு 2.0 படம் பார்த்தோம். மாலை வீட்டிற்கு வந்து நான் பயணத்திற்கு ஆயாத்தமானேன் .தேவையான பொருட்கள் இருக்கிறதா என பார்த்தேன் .இல்லாததை வாங்க வேண்டும் .அடுத்த சில தினங்களுக்கு வீட்டிற்கு தேவையான மளிகை, காய்கறிகள் வாங்கி வந்தேன்.
   
     இரவு பயண பையை தயார் செய்துவிட்டு தூங்க போனேன். காலை ஒன்பது மணிக்கு குஜராத் செல்லும் ரயிலில் செல்லவேண்டும்.மாமாவும் ,மாமியும் காலை ஏழரைக்கு வீட்டிற்கு வந்தார்கள் .நண்பர் ஸாம் எட்டரைக்கு வந்தார் .இப்போதெல்லாம் அவர்தான் நான் கப்பல் செல்லும்போது ரயில் நிலையம் வந்து அனுப்பிவைக்கிறார்.
      
          பள்ளிவிளை ரயில் நிலையம் வீட்டிலிருந்து ஐந்து நிமிடம்தான் ரயில் பத்து நிமிடம் தாமதமாக வந்தது.திருவனந்தபுரத்திலிருந்து முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் எனது இருக்கை அருகில் அமர்ந்தார்கள் ஒருசில போலிஸ்காரர்களும் நான்கைந்து கட்சி காரர்களும் மட்டுமே இருந்தனர் .கேரளாவில் அரசியல்வாதிகள் வரும்போது அதிக ஆர்பாட்டம் இல்லை .மதிய உணவு சுனிதா கட்டி தந்திருந்தாள்.இரண்டரை மணிக்கு எர்ணாகுளத்தில் இறங்கும்போது முதல்வர் உம்மன்சாண்டியும் இறங்கினார் இப்போதும் அவருடன் வந்த நான்கு கட்சி காரர்கள் மட்டுமே அமைதியாக நடந்து சென்று காரில் ஏறி சென்றார் .ரயில் பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லை .
      மூன்று மணிக்கு அலுவலகம் சென்றேன் .கப்பல் இப்ப்போது கொரியா செல்கிறது எனவே உனது பயணம் ஞாயிறன்றுதான் திருவனந்தபுரத்திலிருந்து விமானசீட்டு தருகிறோம் சில ஆவணங்களில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்றார் தாமஸ் .
   அவசரமாக அனைத்து பணிகளையும் முடித்து ரயில் நிலையம் வரும்போது நாலரைக்குமணிக்கு  நாகர்கோயில் செல்லும் எரநாட் வண்டி நடை மேடையில் வந்துகொண்டிருந்தது .பயணசீட்டு எடுத்து அவசரமாக ஏறிக்கொண்டேன் .ரயிலில் அருகில் அமர்ந்திருந்த பிரான்ஸ் நாட்டு இளைஞன் அர்ஜுனுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன் .வட இந்தியா ,தென்இந்தியா சுற்றிபார்க்க வந்துள்ளான் .அவியல் ,புட்டு ,தேங்காய் போட்ட மீன் குழம்பு ,ஆப்பம் ஆகியவைகள் பிடித்த உணவுகள் என்றான் .
  
   வீடு வந்து சேரும்போது இரவு மணி பதினொன்றரை ஆகியிருந்தது .முழுநாளும் ரயில் பயணத்தில் கழிந்தநாள் .மறுநாள் மாலையில் அழைத்தேன் விமான சீட்டு வந்துவிட்டதா என  இல்லை என்றார்கள் .இன்று காலை ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்  மறு நிமிடமே பதில் வந்தது கப்பலுக்கு போவது ரத்தாகி விட்டது என .
ஷாகுல் ஹமீது ,
13-dec-2018.

Saturday 29 September 2018

இந்தோனேசிய -சுனாமி

கடந்த இருபத்தி ஆறாம் தியதி இரவில் இந்தோனேசியாவின் தெலுக்சமாக்க எனும் எ இடத்திற்கு வந்து சேர்ந்தோம் , கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம் .மலைகாளால் மூன்று புறமும் சூழ்ந்திருக்கும்  கப்பலிலிருந்து தென்னை மரங்கள் அடர்ந்த கரைபகுதி பச்சை பசேலென தெரியும் .
       மறுநாள்  வியாழன் மாலை  கப்பலிலிருந்து ஒன்பதுபேர் வெளியே சென்றோம் .மாலை நான்கு மணிக்கு படகு வந்தது .லேசான அலையில் ஆடிகொண்டிருந்த மிகச்சிறிய  படகில் அனைவரும் லாவகமாக ஏறிக்கொண்டோம் .மிக மெதுவாக  நகர்ந்துகொண்டிருந்தது படகு  கரை நெருங்கிக்கொண்டே இருந்தது .அரை மணி நேரத்திற்கு பிறகு கரையை அடைந்தோம் .
     நாட்டினுள் நுழையும்   அனுமதி சீட்டு வாங்கி இரண்டு கார்களிலாக புறப்பட்டோம் .பாதுகாபுக்குக்கு ஒருவரும் ,வழிகாட்டியாக ஒருவரும் வந்தனர் .இசுலாமியர் அதிகமாக வாழும் நாடு இது .
   ஒன்றரை மணி நேர பயணம் செய்து ப்ரின்செவ் எனும் இடத்தை அடைந்தோம் .எந்த நோக்கமும் இன்றி நான் சென்றிருந்தேன் .ஒரு புதிய ஊரை பார்க்கும் ஆவலில் .கார் பயணம் எங்களூரில் சென்றதுபோலவே இருந்தது .பச்சை பசேலென வளைந்தும் நெளிந்தும் சிறிய ஓடைகளும் ,ஆறுகளையும் கடக்கும் பாலங்கள் .அடர்ந்த தென்னை ,வாழை  மரங்களும் .விழிஞ்சம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் சாலையை நினைவுறுத்தியது .
  ஓவ்வொரு நூறு மீட்டருக்குள்ளும் இரு பள்ளிவாசல்கள் இருக்கின்றன .செல்லும் வழியில் காரை நிறுத்தி பள்ளிவாசல் சென்று மக்ரிப் தொழுகையை நிறைவேற்றினேன் . ப்ரின்செவ் சென்றுவிட்டு  திரும்ப நள்ளிரவு இரண்டு மணியாகிவிட்டது .
   மறுநாள் மாலையில் இந்தோனேசியாவின்சுலோவேசி தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு  சுனாமியும் தாக்கியது .ஏழரை ரிக்டர்  அளவில் இருந்துள்ளது ..நானூறு உயிர்களை பலிவாங்கியுள்ளது ..
பலு என்னுமிடத்தில் ஆயிரம் கட்டிடங்கள் சரிந்துள்ளன ,டொங்கான என்னுமிடத்திலும் உடல்கள் கடற்கரையில் கிடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நான் இருக்கும் தெலுக்சமக்காவில் எதுவும் தெரியவில்லை .இங்கிருந்து இருநூறு மைல் தொலைவு என்றார்கள் .
 ஷாகுல் ஹமீது,
 30- september-2018

Friday 14 September 2018

ஆயத்த புறோட்டா

       உடல் ஆரோக்கியம் தரும் குறிப்புகளை எழுதும்படி என்னிடம் சிலர் வேண்டியதுண்டு .நேற்று மாலையில் எனது கப்பலில் இரவுணவாக ஆயத்த புறோட்டவை வைத்திருந்தார் சமையற்காரர் மெர்வின்.

சாதாரணமாக புறோட்டா மைதாமாவில் செய்யப்படும் ஒரு உணவு .மைதாவுடன் ,பால்,சீனி,நெய் அல்லது டால்டா,பாமாயில் ,தண்ணீர்,உப்பு  கலந்து நன்கு பிசையவேண்டும் .பிசைந்தமாவை அரைமணிநேரம் கழித்து சிறு உருண்டையாக பிடித்துக்கொள்ளவேண்டும் திருப்பதி லட்டுபோல இல்லாமல் நாகர்கோயில் ராமலக்ஷ்மி ஸ்வீட்ஸ் லட்டுபோல்,ஒரு கிலோ மாவில் இருபத்தைந்து என்ற அளவில் உருண்டையக்கினால் சரியாக இருக்கும்  .பின்னர் உருண்டைகளை வட்டமாக தட்டி, சுத்தமான மேசையில் எண்ணை தடவி இரு இருகைகளாலும் வீசி சுருட்டி வைக்கவேண்டும் .மீண்டும் வட்டமாக தட்டி சூடான கல்லில் சுட்டு இருகைளாலும் அதை அடித்து பஞ்சராக்கி வைத்து பரிமாறினால் சுவையாக இருக்கும் புறோட்டா .


   இங்கு விஷயம் புறோட்டா எப்படி செய்வது என்பதல்ல .மைதாவில் செய்யப்படும் உணவு வகைகள் உடலுக்கு கெடுதல்களை செய்யும் அதனால் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நான் புறோட்டா சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன் .

    இந்த ஆயத்த புறோட்டா என்பது மேற்கூறியதுபோல் செய்து குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாக்கிறார்கள் .நீண்டநாள் கெட்டுபோகாமல் இருக்க உரிய ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சேர்த்தால் தான் நீண்ட நாட்கள் இருக்கும் .பின்னர் அது நுகர்வோரின் கைகளுக்கு சென்று மீண்டும் சூடாக்கி உண்ணப்படுகிறது .

    எந்த உணவையும் சமைத்தபின் மீண்டும் சூடாக்கினால் கெடுதல்தான் .அதிலும் ரசாயனங்கள் கலந்த பாதார்த்தங்களை சமைத்து குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து மீண்டும் சூடாக்கினால் அது விஷத்தன்மை உடையதாக மாறிவிடும் .
  எனக்கு சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி உண்டால் ஒவ்வாமை ஏற்படுகிறது .அது தெரியாமல் மிக அவதிப்பட்டேன் .நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் கண்டுபித்து சமைத்த உணவுகளை மீண்டும் சூடாக்கி உண்பதை தவிர்த்தபின் நலமாக உள்ளேன் .இப்போது எல்லா ஊர்களிலும் ஆயத்த புறோட்டா ,சப்பாத்தி,பிரியாணி ,இட்லி போன்றவை கிடைக்கிறது. சமைக்க சோம்பல்பட்டு இவைகளை சூடாக்கி சாப்பிடும் மனிதஇனம் கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கு தெரிந்தே தன்னை பலிகொடுப்பது தவிர்க்க இயலாது .

    கப்பலில் உணவு கொஞ்சம்பிரச்சனைக்கு உரியதுதான்.கப்பல் பயணம் எதிர்பாராமல் கரைதொடாமல் நீண்டுவிடும் வாய்ப்பு அதிகம் எனவே குறைந்தது இரண்டு மாதத்திற்க்கான உணவு பொருட்களை வைத்திருக்கவேண்டியது காப்டன் மற்றும் சமையற்காரரின் பொறுப்பு .பொதுவாக புத்தம் புதிய காய்கள் வாங்கிய பதினைந்து நாட்களுக்கு மேல் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருந்தாலும் அழுகிவிடும் .எந்த ஒரு பொருளும் நீண்டநாள் கெட்டுபோகவில்லை என்றால் அதில் அதிகப்படியான ரசயானம் கலந்துள்ளது உறுதி .
 
   கீரைகள் வாங்கும்போது புழு பூச்சிகள் கடித்ததையே வாங்குகள் .பார்க்க அழகாக,புழு,பூச்சிகள் கடிக்கதாவை அதிக ரசாயனம் தெளிக்கபட்டவை என்பது உறுதி.

   கப்பலில் இருக்கும் இறைச்சி,மீன் மற்றும் காய்கறிகள் ஆண்டுக்கணக்கில் குளிர் சாதனபெட்டியில் பாதுகாக்கப்பட்ட பின்னரே அடுமனைக்கு வருகிறது.அதிலும் பெரும்பாலானவை காலாவதியாகும் தியதிக்கு சற்று முன் கப்பலுக்கு அனுப்பிவைத்து காசு பார்கின்றனர் கப்பலுக்கு உணவு விநியோகிக்கும் வியாபாரிகள்
கப்பலில் வரும் இந்த ஆயத்த புறோட்டா எவ்வளவு நாட்களுக்கு சமைத்து பதப்படுத்தினார்களோ,கப்பலுக்கு வந்தபின் இங்குள்ள குளிர் அறையில் சில மாதங்கள் .அது நெடுகாட்கள் கெட்டுபோகாமல் இருக்க உடலுக்கு கெடுதல்தரும் ரசயானங்கள் எவ்வளவு சேர்த்தார்களோ .உடல் நலம் விரும்புபவர்கள் இயன்றவரை அளவாக சமைத்து நான்கு முதல் ஆறு மணிநேரத்திற்குள் உண்டுவிடுங்கள் .எந்த சமைத்தஉணவையும் குளிர் சாதன பெட்டியில் வைத்து மீண்டும் சூடாக்கி சாப்பிடாதீர்கள் ,அது விஷத்தை சாப்பிடுவதற்கு சமம் .
 
    இன்று கலப்படமில்லாத உணவு பொருட்கள் மிக குறைவு ,எதை தவிர்ப்பது ,எதை உண்பது என குழப்பமான ஒரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.குறிப்பாக அசைவ உணவுவகைகளை உறுதியாக தெரியாத வெளியிடங்களிலுள்ள உணவு விடுதிகளில் தவிர்ப்பது நல்லது.

      கடந்த நவம்பர்மாதம் கிழக்கு ஆப்ரிக்காவின் டோகோ விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு செல்ல வேண்டி காத்திருந்தேன் .மதியவேளை அந்த ஊர் விமானத்தில் சாப்பிட என்ன கிடைக்கும் என தெரியாது.எனவே விமான நிலைய உணவு கடைகளை வட்டமடித்தேன்.ஒரு கடையில் வெள்ளை சாதம் இருப்பது கண்டேன் .(சாம்பார் ,பருப்பு,அயில மீன்கறி ஒன்னும் கிடைக்காது)கண்ணாடி பெட்டியில் கையால் சுண்டி அது வேண்டுமென்றேன்.அங்கிருந்த கறுத்த குண்டான பெண்மணி கடையின் உள் பக்கம் சென்று ஒரு வெள்ளைசாத பொட்டலத்தை கொண்டுவந்தாள்.அதை சூடாக்கும் பொருட்டு மைக்ரோ ஓவனில் வைக்க தயாரானபோது சூடாக்க வேண்டாம் என்றேன் .மிக குளிர்ச்சியாக இருக்கும் சாப்பிட இயலாது என்றாள்.உடன் மூளை உஷாராகி வேண்டாம் என தவிர்த்துவிட்டு .வெட்டி வைத்திருந்த பழங்களை வாங்கி சென்றேன் .
 
    அந்த சாதம் முன்பே சமைத்து பாதுகாக்கப்பட்டது .எவ்வளவு நாட்களுக்கு முன்போ .விமானங்களுக்கு உணவு தயாரிக்கும் அடுமனைகளில் சமைத்த உணவுகளை மைனஸ் முப்பத்தியாறு பாகைகளுக்கு கீழ் பாதுகாக்கப்பட்டு பின்னர் பலநாட்களுக்கு பின் விமானம் பறக்கும் நாளில் சூடாக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது .விமானத்தில் ஒசுல கிடைப்பதனால் நள்ளிரவு பயணத்திலும் தேவையே இல்லையென்றாலும் வாங்கி சாப்பிடுவதை பழக்கமாக்கிகொண்டுள்ளோம் .
   
     எந்த உணவையும் சமைத்து நான்கு மணிநேரத்தில் உண்டு தீர்த்துவிடுங்கள் .நல்லதையே உண்போம் ஆரோக்கியமாய் வாழ்வோம் .

ஷாகுல் ஹமீது,
14 September 2018.

Monday 20 August 2018

வானூர்தி நிலைய அனுபவங்கள்

    கடந்த  சில மாதங்காளாகவே வானூர்தி நிலைய அனுபவங்களை எழுதவேண்டுமென நினைத்துகொண்டிருந்தேன் .எனது ஈராக் போர்முனை முதல் கட்டுரையை படித்துவிட்டு சுசித்ரா எழுதிய கடிதத்திற்கு பின் உடனே எழுதியே ஆக வேண்டுமென நினைத்தேன் .
 
முதல் அனுபவம் ,

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் .புறப்பாடு
 
     2003 ம் ஆண்டு ஏப்ரல் இருபதாம் தியதி வானூர்தியில் முதல் பயணமாக குவைத் சென்றேன் .அப்போது அமெரிக்கா-ஈராக் போர் நடந்துகொண்டிருந்ததால் குவைத்திலிருந்து பலரும் தாய்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த நேரம் அது ,
    குடியுரிமை அதிகாரி “ஏன் இப்போது குவைத் செல்கிறாய்” என கேட்டார் . குறைந்த கால பணிக்காக செல்கிறேன்” என்றேன் .

அதன் பின் சில வினாக்களைக் கேட்டுவிட்டு எனது கடவுசீட்டை பார்த்துக்கொண்டு இருந்தவர்  “மணவாளக்குறிச்சி மார்தாண்டத்திலிருந்து எவ்வளவு தூரம்” என்றார். “முப்பது கிலோமீட்டர்கள்” என்றேன் .

அவர் தமிழில் பேசியதும் என்னுள்ளம் மகிழ்ச்சியில் பூரிப்படைந்தது.
  முதல் முத்திரை என கடவுச்சீட்டில் புறப்பாடு என .

    அனுபவம் இரண்டு : மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் .வருகை

    2004 ம் ஆண்டு ஜனுவரி இருபத்தி ஆறாம் தியதி குவைத்திற்கு சென்ற நான் திரும்பி வந்தது ஈராக்கிலிருந்து.என்னுடன் வந்த கொல்கத்தாவின் சக்ரபோர்த்தியை வெளியே அனுமதிக்கவில்லை .
 எப்படி ஈராக் சென்றாய் நீ சென்றபோதிருந்த கடவுச்சீட்டு எங்கே என கேள்விகள் .சக்ரபோர்த்தி என்னை அழைத்தான் ,குடியுரிமை அதிகாரிகளிடம் ஆங்கிலத்திலும் ,ஹிந்தியிலுமாக பேசினோம் ,கடவுச்சீட்டு தொலைந்த கதையும் ,பாக்தாத்திலுள்ள இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டின் கதையையும் கேட்டறிந்தபின் சக்ரபோர்த்தியைவெளியே செல்ல அனுமதித்தார்கள் .

     எனது பயண பையில் ஒன்று வரவில்லை .மோசமான ,வானிலை காரணமாக வானூர்தியில் அதிக எரிபொருள் நிரப்பியதால் ,மாலையில் வரும் விமானத்தில் உங்களின் விடுபட்ட பைகள் வந்துசேரும்,உங்களுக்கு மாலைவரை நீங்கள் அனைவரும் அருகிலுள்ள லீலா விடுதியில் தங்கியிருங்கள் என பயணபைகள் வராதவர்களிடம் சொன்னார்கள் .

     அனுபவம் மூன்று :பாக்தாத் அகிலஉலக வானூர்தி நிலையம்
 2004 டிசம்பர் ஒன்பதாம் தியதி
 
     போரில் நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்து அப்போதுதான் சிறிய ரக விமானம் ஒன்று தினமும் அம்மான் நகருக்கு தனியார் நிறுவனத்தால் இயக்க துவங்கியிருந்தது .
  பாக்தாத் நவீன விமான நிலையமாக இருந்திருப்பதை காண முடிந்தது .போருக்கு பின் பெரும்பகுதி சிதைந்திருந்தது .
பயணபைகளை ஒப்படைத்துவிட்டு காத்திருந்தோம் .மூன்று பேர் வீதம் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் இருவர் உடன் வர விமானத்தின் அருகில் வரை அழைத்துச் சென்றனர் .
  அங்கிருந்த ஊழியர் “உங்களது பை இங்கே இருக்கிறதா என பார்த்துகொள்ளுங்கள்” என கூறினார் .
  “பை இருக்கிறது” என்றபின் விமானத்தில் ஏற சொன்னார்.

    செல்வராஜ் மும்பையிலிருந்து ஈராக் வந்தபோது அவனது பயணப்பைகள் எதுவும் வரவில்லை .
 பதினைந்து நாட்கள் ராணுவ முகாமில் பணி செய்தபின் ,அங்கிருக்க பிடிக்காமல் திரும்பி ஊருக்கு செல்கிறான் .நான் செல்வராஜை பாக்தாத் விடுதியில் தங்கியிருந்தபோது சந்தித்தேன் .
எங்களில் சிலர் செல்வராஜுக்கு சில பொருட்களும் உடைகளும் கொடுத்துதவினோம் .அதுவே ஒரு பையளவுக்கு வந்ததால் .ஒருவர் பையும் கொடுத்தார் .
மும்பையில் இறங்கியபோது செல்வராஜின் பை மீண்டும் வரவில்லை .
அனுபவம் நான்கு .
பெங்களூரு அகிலஉலக வானூர்தி நிலையம்

      2016 ஜனவரி பதினைந்தாம் நாள்
  அமெரிக்காவின் பால்டிமோர் நகருக்கு பயணம், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் வழியாக ,விமான நிறுவன ஊழியர் சோதனையும் ,குடியுரிமையும் சோதனையும் முடிந்து விமானத்தில் ஏறுவதற்க்கான காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்தேன்.கோட் அணிந்த சர்தார்ஜி ஒருவர் என்னை அணுகி “அமெரிக்காவிற்கு என்ன விசயமாக செல்கிறீர்கள்” என கேட்டார்.அவரை சில வினாடிகள் பார்த்தேன் அவரது சட்டைப்பையில்  குடியுரிமை அதிகாரி  என எழுதப்பட்டிருந்ததை காண்பித்தார். “கப்பலுக்கு செல்கிறேன்” என்றேன் கப்பல் பணிக்கான ,சி டி சி மற்றும்,ஒப்பந்த கடிதங்களை காண்பிக்குமாறு கேட்டார் .அதன் பின் வினாக்கள் ஏதும் இல்லை .
 
     ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமானநிலையத்தில் விமானம் மாறும்போது அங்கிருந்த பெண்மணி வினாக்களை தொடுத்தாள். “எங்கே செல்கிறாய்,உனது பயண பைகளை கட்டியது யார் ,உனது பயண பையில் உள்ள பொருட்களுக்கு யார் பொறுப்பாளர்”என்பது போன்ற ........

அனுபவம் ஐந்து

     கொச்சி அகில உலக விமான நிலையம்

   2012 மார்ச் மாதம்
  கொச்சியிலிருந்து ,கத்தார் நாட்டின் தோஹா வழியாக அமெரிக்காவின் ஹுஸ்டன் நகருக்கு பயணம் .கொச்சி வானூர்தி நிலையம் பரபப்பின்றியும்,சுத்தமாகவும்இருக்கும் ,உள்நாட்டு ,வெளிநாட்டு விமானங்கள் புறப்படும் இடத்தில் உள்ள காத்திருப்பு பகுதியில் தொழுகைக்கான தனி அறைகள் உள்ளது.

      அதிகாலை நான்கு மணிக்குதான் பயணம் இரவு பதினோரு மணிக்கே கொச்சி அகிலஉலக வானூர்தி நிலையத்தில் நுழைந்துவிட்டேன்.பாதுகாப்பு வீரர் “ஏன் இவ்வளவு சீக்கிரம் செல்கிறாய் ,ஏதாவது சாப்பிட்டாயா?” என வினவினார்  “சீக்கிரம் வந்துவிட்டேன்” என்றேன் .

      அதிகாலை குடியுரிமை அதிகாரிக்கு முன் சென்று “குட் மார்னிங்”என்றேன் ஆவணங்களை பார்த்தவர் ஒரு காகிதத்தில் எதோ எழுதினார் மேலதிகாரியை சென்று பாருங்கள் என்றார் .

      காகிதத்தில் கொச்சியிலிருந்து முதல் முறையாக அமெரிக்கா செல்கிறார் ,தமிழ்நாடு கடவுசீட்டு என எழுதியிருந்தது .மேலதிகாரியின் அறைக்கு ஒருவர் என்னை அழைத்து சென்றார்.அங்கு வேறு சில பயணிகளை அவர் விசாரித்து கொண்டிருந்தார் .கத்தார் ஏர்வேய்ஸ் இன் விமானம் புறப்படும் நேரம் நெருங்கிகொண்டிருந்தது .
 மேலதிகாரியிடம் என் முறை வந்தபோது “எங்கே பணி செய்கிறாய்,ஏன் அமெரிக்கா செல்கிறாய்” என கேட்டார். “கப்பலில் சேருவதற்க்காக செல்கிறேன்” என்றேன் மீண்டும் ஆவணங்களை பார்த்துவிட்டு அனுமதிக்குமாறு அதே காகிதத்தில் எழுதி தந்தார் .அமேரிக்கா பயணம் ,உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் கேட்பதற்கு நன்றாக இருக்கும் ‘லே அவன் அமேரிக்கா இல்லா போறான்” என்பார்கள் இருபத்திநான்கு மணிநேரங்களுக்கு மேல் இரண்டு விமானங்களிலாக பயணிப்பவன் அங்கு போய் இறங்கும்போது தண்ணீரில் நனைந்த கோழி போலிருப்பான் .

    அனுபவம் ஆறு
2017 ஏப்ரல்  கொச்சி விமான நிலையம் .

    கொச்சியிலிருந்து – சிங்கப்பூருக்கு பயணம் .குடியுரிமை அதிகாரியின் முன் சென்று “குட் இவினிங்” என்றேன் .கடவு சீட்டையும் சிங்கப்பூரின் விசா மற்றும் எனது கப்பல் நிறுவன கடிதத்தையும் கொடுத்தேன் .

      “என்ன விசயமாக செல்கிறாய் ,சிங்கப்பூரில் கப்பல் எவ்வளவு நாட்கள் நிற்கும,அங்கிருந்து கப்பல் எங்கு செல்கிறது” என்ற கேள்விகளை கேட்டதுமே எனக்கு புரிந்தது அவர் புதிதாக பணிக்கு வந்தவர் என .அவருக்கருகிலிருந்த அதிகாரியிடம் ஆவணங்கள் காட்டி ஓப்புதல் பெற்றார் .
  மீண்டும் “உங்கள் பனாமா சி.டி.சி” என கேட்டார் .அவரிடமே கேட்டேன் “நீங்கள் புதிதா” என “ஆம்” என்றார். “நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து செல்கீர்களா” என கேட்டார் .
 
    மூத்த சகோதரி ஒருவர் இலங்கைக்கு பயணம் செல்லும்போது பயண பைகளை பிரித்த சுங்க அதிகாரிகள் அதிலிருந்த இருபத்தியிரண்டு புடவைகளை பார்த்துவிட்டு “புடவை வியாபாரம்”செயகீறீர்களா என கேட்டுள்ளார் .ஒரு வார பயணத்திற்கு இருபத்தியிரண்டு புடவைகள் சற்று அதிகம்தான் .

    என்னுடன் பணிபுரிந்த இஞ்சினியர் ஒருவரின் விமான பயணங்களின்போதெல்லாம் அவரைத்தனியாக அழைத்து அரை மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்துவதாக சொன்னார் .அவரது பெயரையுடைய ஒருவர் வரதட்சணை புகாரில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ளார் .

   ஒருமுறை அவர் குடியுரிமை ஆதிகாரிகளிடம் என்னை இந்தியாவின் எல்லா விமானநிலையங்களிலும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகீறீர்கள் .அவன் நானனில்லை என எழுதித்தரும்படி மன்றாடியுள்ளார் .கடந்த வருடம் அவரது மனைவியுடன் கொழும்பு செல்லும்போது அதே போல் விசாரணைக்கு அழைத்தபோது அவர் அதிகாரிகளிடம் , “சார் அந்த வரதட்சணை கேஸ் தானே அது நானில்லை” என்றிருக்கிறார்.அது எப்படி உனக்கு தெரியும் .ஒவ்வொரு முறையும் இப்படி தானே நடக்கிறது .நான் அவனில்லை என்னுடன் என மனைவியும் வருகிறாள் என சொல்லி விசாரணையிலிருந்து தப்பித்துள்ளார் .

     உங்கள் பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கலாம் .
 இன்னும் இருக்கிறது .இரண்டாம் பாகம் என பின்னர் எழுதுகிறேன்.

ஷாகுல் ஹமீது ,
20 aug 2018.

Wednesday 15 August 2018

தினமும் ஒரு கைப்பிடி அரிசி

   தோழி ஒருவர் முழுநேர சமூக பணியாற்றுகிறார்.கைவிடப்பட்ட குழைந்தைகள் கல்வி உதவி,மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுதல்,புயல் ,பெருமழை,சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளில் களப்பணியாற்றுதல், குளங்களை சுத்த சுத்தபடுத்தும் குழுவுடன் இணைந்து பணி செய்தல்,திருநங்கைகள் வாழ்வாதாரத்துக்கு உதவுதல்  என தன்னலம் பாராது முழுநேரம் பணியாற்றுகிறார் .

     கடந்த ஐந்தாண்டுகளாக நான் அவரது பணிகள் குறித்து அறிவேன் .கடந்த சில தினங்களுக்கு முன் அவருடன் தொலைபேசி உரையாடலில் எங்கள் கிராமத்தில் இசுலாமிய இளைஞர்கள் நடத்தி வரும் மருத்துவ சேவை,ஆம்புலன்ஸ் சேவை பற்றி பேசினோம் .அப்போது நான் முன்பு வருடம் ஒரு முறை அந்த மருத்துவ சேவை அமைப்பு பணம் கொடுக்க எண்ணினேன் அது வருட இறுதியில்மிக பெரிய தொகையாக கையில் போதிய பணமும் இல்லாமல் இருக்கும்.அதனால் கொடுக்க நினைத்ததை விட பாதிக்கும் குறைவான தொகையே என்னால் கொடுத்து உதவ முடிந்தது .

    கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மருத்துவ சேவை அமைப்பின் நிர்வாகி ஒருவரிடம் இனி எல்லா மாதமும் ஒரு சிறு தொகையை தந்துவிடுவேன் என உறுதியளித்தேன்.இந்த மாதம் வரை அந்த  சிறு தொகையை கொடுத்துவிட்டேன் என்றேன் .ஒரு ஆண்டுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என நினைத்தேனோ அந்த தொகை இப்போது எளிதாகி விட்டது .

    அப்போது அந்த தோழி அவரறிந்த வேறொரு சமூக பணியாளர் எப்படி உதவி பெறுகிறார் என சொன்னார்.தினமும் நீங்கள் வீட்டில் சமைக்கும்போது ஒரு கைப்பிடி அரிசியை தானமாக ஒரு பையில் போட்டுவிடுங்கள் என பல வீடுகளில் ஒரு பையை கொடுத்து ,மாத இறுதியில் அதை அவர் பெற்றுக்கொண்டு இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுகிறார் .

   தினமும் வீட்டில் சமைக்கும்போது ஒரு கைப்பிடி அரிசியை அதிகமாக சமைக்கிறோம் என நினைத்துக்கொண்டு தனியாக தானத்திற்கு வைப்பது சிரமமாக இருக்காது நம் குடும்ப பெண்மணிகளுக்கு .உதவுவதற்கு பணமே வேண்டாம் மனம் மட்டும் இருந்தால் இப்படியும் உதவலாம்  என்றார் அவர் .
ஷாகுல் ஹமீது,
09 july2018

Wednesday 25 July 2018

ஆனந்த சந்திரிகையில் ஈராக் போர்முனையில்

  ஆனந்த சந்திரிகையில் ஈராக் போர்முனையில்.

     கடந்த 2016 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஈராக் போர்முனை அனுபவங்கள் என எழுதிய கட்டுரைகள் அமெரிக்காவின் டல்லஸ் நகரிலிருந்து மாதமிருமுறை வெளிவரும் ஆனந்த சந்திரிகை எனும் இணைய இதழில் தொடராக வெளிவருகிறது .
 கடந்த ஏழாம் தியது முதல் கட்டுரை பிரசுரமாகியிருந்தது.

     ஆஸ்டின் நகரில் வசிக்கும் சௌந்திரராஜன் அவர்கள் விஷ்ணுபுர குழுமும்மூலமாகஅறிமுகமானார்.பின்னர் எனது வலைப்பூவில் கட்டுரைகள வாசிக்க ஆரம்பித்தவர் ஈராக் போர்முனை அனுபவங்களை படித்து விட்டு விரிவாக விமர்சனமும் எழுதினார் ,காற்றின் நிழல் எனும் அவரது முகநூல் பக்கத்தில் .அவரே ஆனந்த சந்திரிகைக்கும் என்னை அறிமுகப்படுத்தினார் .


       ஈராக் போர்முனையில்: ஷாகுல் ஹமீது நமது பத்திரிகைக்கு எழுதும் “கன்னி” கட்டுரைத் தொடர் எனலாம். அரபு நாடுகளில் வசிக்கும் இவர் நமது பத்திரிகையில் எழுதும் ஆவலில் இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கிறார். ஈராக் போரின் போது தாம் நேரில் கண்டவற்றை காண்னொலிக் காட்சி போல் சுவைபட எழுதுகிறார். தொடர்ந்து படியுங்கள்.
https://drive.google.com/open?id=19oop8a70DLoaBjSSdqk7wAh_BKrqkbHA
ஷாகுல் ஹமீது
25-07-2018

Monday 2 April 2018

நடை பயணம்

                    நீண்ட நடை அவ்வப்போது செல்வதுண்டு இன்று காலை நடையாக நான் தற்போது வசிக்கும் நாகர்கோவிலில் இருந்து எனது சொந்த ஊரான மணவாளக்குறிச்சிக்கு காலை தொழுகைக்கு பின் நடக்க தொடங்கினேன் .வெகு நாட்களாகவே  நான் பிறந்து வளர்ந்த ஊருக்கு கால் நடையாக செல்ல வேண்டுமென எண்ணியிருந்தேன் .நாகர்கோயில்–மணவாளக்குறிச்சி பதினாறு கிலோமீட்டர்கள்.


  முன்பு ஒருமுறை நாகர்கோயில் –கன்னியாகுமரி நடந்திருக்கிறேன் இருபது கிலோமீட்டர்கள்.பொற்றையடியில் இருக்கும் மருந்துவாழ் மலைக்கு ஓவ்வொரு விடுமுறையிலும் இருமுறையாவது ஏறி விடுவேன் .சதுரகிரி மலைக்கு ஏறி இறங்கியபின் மருந்துவாழ் மலை மிக சிறியதாக இருக்கிறது .

  1989  ஆம் ஆண்டு ஆண்டுதோறும் நடக்கும் தக்கலை பீர்முஹம்மது அப்பா தர்காவில் நடக்கும் ஞான புகழ்ச்சி விழாவிற்கு சென்றிருந்தோம் .இரவு முழுவதும் அங்கு இருந்துவிட்டு காலையில் வீட்டிற்கு செல்வது திட்டம் .அதிகாலை ஐந்துமணிக்கு கலைஞர் கருணாதியின் ஆட்சி கலைக்கப்பட்டது எனும் செய்தி கிடைத்தது .

 பேருந்துகள் ஓடவில்லை நானும் நண்பர்களும் தக்கலை- மனவளாக்குறிச்சிக்கு  நடக்க தொடங்கினோம்  பதிநான்கு கிலோமீட்டர் .மூன்றரை மணிநேரம் அதுதான் எனது முதல் நீண்ட நடை .

இப்போது சூரிய உதயம் மிகவும் தாமதமாகிவிட்டது  ஆறரைக்கு தான் கதிரவன் வெளிவருகிறான் .காலை நேர தொழுகை ஐந்து நாற்பதுக்கு .ஆறு மணிக்கு முன்பே வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.குளிரே இல்லை டிசம்பர் ,ஜனுவரியில் உலகின் பெரும்பகுதி கடும் குளிரில் அவதிப்படும் .ஞாயிறு ஆகையால் நகரம் இன்னும் விழித்திருக்கவில்லை .

  வில்லியம் மருத்துவமனையை ஒட்டிய ஹென்ரி சாலை வழியாக ஜோஷ்வா தெரு சாலை .ஹென்றி சாலையிலுள்ள ஆல்பா பள்ளியின் வெள்ளிவிழா அலங்கார வளைவு பெரும் பொருட்செலவில் கட்டி முடியும் நிலையில் இருந்தது.வில்லியம் மருத்துவமனை அருகில்  துவங்கும் ஹென்றி சாலை முடிவில் சாம் மருத்துவமனை இருக்கிறது.

 ஸ்காட் பள்ளியை ஒட்டிய சாலை மிக குறுகலானது ஓரல் காது கேளாதோர் பள்ளியை தாண்டினால் ஹாஸ்டல் மைதானம் .நடை பயிற்சி செய்பவர்கள் யாரும் இன்னும் மைதானத்திற்கு வரவில்லை .கிரிக்கெட் மட்டையுடன் சில மாணவர்கள் மைதானத்தின் வாயில் வழியாக நுழைந்து கொண்டிருந்தனர் .

   மைதானத்தை ஒட்டிய கிறிஸ்தவ கோயில் ஞாயிறு காலை பிரார்த்தனைக்கு தாயராகிகொண்டிருந்தது .ஆலயம் கிறிஸ்மஸ்,புத்தாண்டுக்கு போடபட்டிருந்த மின்விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்தது .இந்த சாலை தண்ணீர் தொட்டி சாலையில் முடியும் .இதன் முடிவிலும் ஓராண்டுக்கு முன் புதிதாக ஒரு மகப்பேறு மருத்துவமனை வந்துவிட்டது .ஓஹி புயல் தாக்கியபோது இந்த சாலை மரங்களும் ,மின் கம்பங்களும் விழுந்து முழுமையாக இருநாட்கள் துண்டிக்கபட்டு இருந்தது நினைவில் வந்து மறைந்தது .

  தண்ணீர் தொட்டி சாலையை தாண்டி டெரிக் சந்திப்புக்கு செல்லும் சாலையின் துவக்கத்தில் இருக்கும் கோழிகடை மின் விளக்குகளால் விழித்திருந்தது .இந்த சாலையிலும் ஒரு மருத்துவமனை இருக்கிறது .நண்பர் சாம் பிரின்சின் வீடும் இங்குதான் .டெரிக் சந்திப்பில் வந்து சேர்ந்தேன் .இது தான் பிராதன சாலையான  கே .பி ரோடு .

 மணவாளகுறிச்சி செல்ல ஆசாரிபள்ளம் சாலையை அடைந்தேன்.வசந்த் அன் கோ ,ஐரின் மருத்துவமனை தாண்டினால் பிஷப் வளாகம் .அதன் முன் குப்பை மலைபோல் குவிந்திருக்கிறது நாற்றம் வேறு .

 நேசமணிநகர் சி எஸ் ஐ ஆலயத்தில் ஞாயிறு பிரார்த்தனை தொடங்கியிருந்தது .ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து பேருந்துகள் வந்துகொண்டிருந்தன .ஓட்டை ,ஓடிசல்கள் தான் இப்போது அதிகம் .இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு நேசமணி பேருந்துகள் அழகாக இருக்கும் .

 இங்கு பணிமனையில் புதிய பேருந்துகளுக்கு உடல் வடிவமைக்கும்(body building ) மையம் ஒன்று தனியாருக்கு கொடுக்கபட்டிருந்தது .திருநெல்வேலிக்கும், மற்ற மாவட்ட பேருந்துகளையும் இங்கு உடல் வடிவமைத்து கொடுப்பார்கள் .அது காணாமல் போனதற்கு உழல் தான் காரணமோ என்னமோ?நான் அப்போதெல்லாம் பேருந்தை பார்த்தாலே சொல்வேன் இது நாகர்கோயிலில் வடிவமைக்கபட்டது என .

அனந்தன் பாலம் இடப்புறமாக சானல் கரையை ஒட்டி சென்றால் .கோணம் அகில இந்திய வானொலி நிலையம் சென்றுவிடலாம் .அனந்தன் பாலம் அருகில் இப்போது வங்கிகளும் ,ஏ டி எம் களும் ,நிறைய கடைகளும் வந்துவிட்டன.
ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி.பழைய காச நோய் மருத்துவமனை சிறுவனாக இருக்கும் போது இவ்வழியில் பேருந்தில் செல்லும்போது மிகவும் சுற்றிகொண்டு செல்கிறதுபோல் தோன்றும் .
மருத்துவகல்லூரி வளாகத்திற்குள் நுழைத்தேன் .நிறைய உயரமான தேக்கு  மரங்கள் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் .பிரதான வாயிலில் நுழைந்து பின்புறமுள்ள வாயில் வழியாக வாகனத்தில் செல்ல அனுமதி கிடையாது.

 முன்பு காச நோய் மருத்துவமனையாக இருக்கும்போது .என் வீட்டருகில் உள்ள ராமகிருஷ்ணன் தாத்தா மகன் ஸ்ரீதரன் மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் உள் புகுந்து வெளியேறினோம் .அப்போதும் அனுமதி இருந்ததா என தெரியவில்லை .
பின்புற வாயிலுக்கு வெளியேதான் தான் பரபரப்பாக காலை நேர இட்லி,ஆப்பம் என வியாபாரம் நடக்கிறது .வாயிலை ஒட்டியிருக்கும் கடையின் முன்பகுதி அழுக்கும் ,தூசியுமாக பாழடைந்த கடை போல இருக்கிறது .
இங்குதான் நோயாளிகளுக்கு உணவும் ,பானங்களும் தயாராகிறது .மருத்துவ கல்லூரி அருகிலேயே எப்படி இவ்வளவு சுத்தமில்லாமல் கடைகள் நடத்துகிறார்களோ .பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் போல .

ஆசாரிபள்ளம் காவல் நிலையமும் மரக்கடையும் தாண்டி சானல்கரை அருகிலும்,அதை ஒட்டிய தென்னந்தோப்பிலும்  பாலிதீன்
தண்ணீர் பாக்கெட்கள் குவிந்து கிடக்கிறது கண்ணுகெட்டிய தூரம் வரை .பின்புதான் தெரிந்தது  அரசு டாஸ்மார்க்
கடைதான் காரணம் என .மருத்துவ கல்லூரி அருகிலேயே சாரயக்கடை .

 அந்த தென்னம்தோப்பில் அனைத்து தென்னை மரங்களும் மொட்டையாக இருப்பதை முன்னரே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பார்த்திருக்கிறேன் .கடந்த ஆண்டு வறட்சியில்தண்ணீர் இல்லாமல் பட்டு போனதாக அறிந்தேன் .
பாம்பன்விளைக்கு முன்பு ஒரு பெரிய மருத்துவமனையும் புதிதாக வந்துள்ளது .மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் இங்குபகுதி நேரமாக பணி செய்ய ஏற்ற இடம் என ஒரு எண்ணம் வந்து மறைந்தது .
பின்பு தோப்பூர் சந்திப்பு  சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்துள்ளது .அதனால் இவ்வூருக்கு இப்பெயர் வந்திருக்கலாமோ?தோப்பூர் சந்திப்பிலிருந்து ராஜாக்கமங்கலம் ,எதிர் திசையில் இரணியல்-தக்கலை செல்லும் சாலைகள் உள்ளன.

அதன் பின் சாந்தபுரம் ,இங்குள்ள அரசு பள்ளி மைதானத்தில் தொண்ணூறுகளில் கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறேன் .காலையில் மாணவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர் .சாந்தபுரம் கிறுஸ்தவ ஆலயம் மிக பழமையானது பார்பதற்கு மிக பெரிதாக தெரிந்தது .
கொஞ்சம் மேலே அரசன்விளைக்கு முன்பு ஒரு இந்து கோயில் உள்ளது அதன் எதிரில் உள்ள வீட்டின் முன்பு உள்ள தண்ணீர் குழாயில் பித்தளை நல்லி இருந்தது  ஆச்சரியம்தான். அந்த வீட்டுக்காரர் நிச்சயம் எழுபது வயதுக்காரர் ஆக இருக்க வேண்டும் .அந்த தண்ணீர் குழாய்க்கும் அவரே காவல் அதனால் தான் பித்தளை நல்லி  அங்கு மட்டும் இருகிருக்கிறது . வழிநெடுகிலும் எங்கும் பொதுகுழாய்களில் பிளாஸ்டிக் நல்லி தான் பொருத்தபட்டிருந்தது.சில இடங்களில் நல்லியே எல்லாம் குடிகாரர்கள் வேலைதான்  .

அரசன் விளை சந்திப்புக்கு முன் ஒரு சாமில் அதன் எதிரில் கொட்டாரம் (அரண்மனை)போல் ஒரு பெரிய வீடு .இங்கு யோகிராம் சூரத் குமார் ஆஸ்ரமம் ஒன்று உள்ளது இந்த வழியாக செல்லும்போதெல்லாம் அங்கு ஒருமுறை செல்ல வேண்டும் என நினைப்பேன் பல ஆண்டுகளாக செல்லவேயில்லை .

இன்று உட்புறமாக அந்த பெயர் பலகை இருந்த அம்புக்குறியை நோக்கி நடந்தேன் .பிரதான சாலையிலிருந்து பத்தடி தாண்டியதும் எங்கும் பாலிதீன் தண்ணீர் உறைகள் நிறைந்து கிடக்கிறது .அருகில் எங்கோ டாஸ்மார்க் இருக்கிறது .
குழாயில் தண்ணீர் குடத்துடன் நின்ற இளம்பெண்ணிடம் ஆஸ்ரமம் எவ்வளவு தூரம் என விசாரித்தேன் ,நேர போங்க கிட்டதான் என்றாள்.

ஒரு தென்னம் தோப்புக்குள் இருக்கிறது ஆஸ்ரமம்.அடர் காட்டுக்குள் வந்துவிட்டதுபோல் சுற்றிலும் மரங்கள்.புதியதாக கட்டிடம் கட்டிகொண்டிருக்கிறார்கள் .ஒரு வயதானவர் யோகிராம் சூரத்குமார் ,யோகிராம் சூரத்குமார் ஜெயகுருராயா என உச்சரித்து கொண்டே தியான கூடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார் .

  என்னை கண்டதும் உள்ளே வாருங்கள் என அன்போடு அழைத்தார் .காலணியை கழற்றிவிட்டு உள் சென்று நாற்காலியில் அமர்ந்தேன்.தென்னை ஓலையால் முடைந்த மேற்கூரையும் ,பக்க சுவர்களும்  (நாங்கள் அதை செத்த பெரை என்போம் )தரை மணல் .அவரே பேசினார் .நீங்கள் முஸ்லிமா என கேட்டார் .சிரித்துக்கொண்டே ஆம் என்றேன் .ஊர் எங்கே , நாகர்கோயில் எனக்கு .அவரது பேச்சு மொழியில் அவர் கன்னியாகுமரிகாரர் இல்லை என்பதை உணர்ந்து எந்த ஊர் என கேட்டேன் .திருச்சிங்க நம்மளுக்கு என்றார் .

  வழியில் எங்கும் நிற்கவோ யாரிடமும் பேசவோ இல்லை அதுவரை .இன்று இங்கு திருவாசகம் வாச்சிப்பார்கள் இருந்துவிட்டு போங்க என வேண்டிக்கொண்டார் .
 இயற்கை உந்தியது கழிவறையை கேட்டு சிறுநீர் கழிக்க சென்றேன் .அங்கேயுள்ள அடுமனையில் ஒரு பாட்டி அன்று வருபவர்களுக்கு காலை உணவாக கஞ்சி தயாரித்துகொண்டிருந்தார்கள்.தேங்காய் போட்டு சுடு கஞ்சி சுவையானது .என்னிடம் எய்யா கஞ்சில போட ரெண்டு தேங்கா தொலிச்சி தாய்யா என கேட்டார் .

 அங்குன இருக்கு பாரு குத்தி என மண்ணில் நாட்டி வைத்திருந்த ஈட்டி போலிருக்கும் தேங்காய் தொலிக்கும் கருவியை காண்பித்தார் .நான் முதல் தேங்காயை தொலிக்கும் போதே பாட்டி அறிந்துவிட்டாள் அதில் தேங்காய் தொலித்து எனக்கு முன் அனுபவம் இல்லை என . ஆரம்பித்ததும் எய்யா கை பாத்துய்யா,எய்யா தெரியானுனா உட்டுரு வேற யாரவது இப்பம் வருவாவ அவியல்ள்ட்ட சொல்லி தொலிச்சிகிடுதேன். இல்லை நான் தொலிப்பேன் என நான்கு தேங்காயை தொலித்துவிட்டேன்.

அப்போது அங்கு வந்தவர் அதன் பொறுப்பாளர் என அவர் அந்த பெரியவரிடம் கேட்ட கேள்விகளில் தெரிந்து கொண்டேன் .என்னை காட்டி அவர் யார் என்ன செய்கிறார் என பெரியவரிடம் கேட்டார் .கஞ்சிக்கு தேங்காய் தொலிக்கிறார் நடந்தே நாகேர்கோயிலில் இருந்து மணவாளகுறிச்சிக்கு போறாராம் என சொன்னது என் காதில் விழுந்தது .
 இப்பம் கஞ்சி வெந்துவிடும் குடித்துவிட்டு போ என கேட்டுகொண்டார் பாட்டி.இல்லை பாட்டி வேறொரு நாள் வருகிறேன் என்றேன் . அங்கிருந்து புறப்படும்போது அந்த பெரியவர் வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்கிகொண்டார் .

 முன்பு ஒருமுறை திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமம் சென்றபோது , யோகிராம் சூரத்குமார்  ஆஸ்ரமத்தில் மதிய உணவு சாப்பிட்டோம் .தினந்தோறும் பசியுடன் வரும் ஆயிரம்பேருக்கு மேல் அங்கு உணவு வழங்கப்படுகிறது அன்னதானம் தான் .
மீண்டும் பிராதன சாலையை வந்ததும் அரசன்விளை சந்திப்பு ஒரு சாலை இங்கிருந்தும் ராஜக்கமங்கலதிற்க்கும்,சரல் வழியாக குருந்தன்கோடுக்கும் செல்கிறது .சரல் செல்லும் சாலையில் ஒரு பெரிய ஆலமரம் எப்போதும் பார்கிறேன் இப்போதும் கண்டேன் .ஒகி சாய்க்கவில்லை .சரல் அருகில் சேனா பள்ளி உள்ளது .பள்ளி நாட்களில் சேனா பள்ளிக்கு திருநைனார்குறிச்சி வழியாக வாடகை மிதி வண்டியில் வருவோம் .மணிக்கூர் ஒரு ரூபாய் என நினைவு .சிறுவனாக இருந்தபோது பெருமாள்பிள்ளை சைக்கிள் கடையில் கால் வண்டியில் மணிக்கூர் முப்பது காசுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுகொண்டோம் .

 அரசன்விளை சாலையில் உள்ள கடைகளில் இருபதுக்கும் மேற்பட்ட வாழை குலைகளை தொங்க விட்டிருப்பார்கள் .பாளையங்கோட்டை ,ரசகதலி,எத்தன் ,செந்துளுவன் ,வெள்ளைதொளுவன்,பூங்கதலி,கற்பூரவல்லி ,பேயன் ,மட்டி,சிங்கன்,பச்சைபழம்................................ என .

அரசன் விளையை தாண்டி சாலையோரமாக விலையுயர்ந்த மது பாட்டில்களும் ,பீர் புட்டிகளும் கிடக்கிறது .கொஞ்சம் காலி நிலம் நீண்ட காலமாகவே இதில் எந்த பயிரும் இல்லை .எதிரில் உள்ள இடத்தில மருத்துவமனைகான இடம் என பலகை இருந்தது .ஒத்தையாக இருந்த கடையில் தேநீர் அருந்தலாம் என அமர்ந்தேன் .

ஒரு பெண்மணி கடையை நடத்துகிறார் .சட்டையில்லாமல் கையில் சிறு பொட்டலத்துடன் இருந்த பெரியவர் .எங்க இருந்து வாறீய என்றார் .நாரோல் மணவாளகுறிச்சிக்கு போறேன் .நடந்து போறீய ஏதும் வேண்டுதலா என அருகிலிருந்த நடு வயதுக்காரர் .வேண்டினால் ஒண்ணும் கிடைக்காது .செய்துதான் வேண்டியதை பெறவேண்டும் என்றேன் .

  சட்டை அணியா பெரியவர் உங்களுக்கு மனவளாகுறிச்சியா ,கன்னகுறிச்சியாக்கும் எனக்கு ,அங்க மூணு  சாயிப்புமாரு உண்டு இப்பம் மணவாளகுறிச்சில தாமசம் .நான் மணல் கம்பெனில வேலே செய்து ரிட்டைடு அங்க பண்டு கருமண்ணு செமந்து உள்ள போனேன் என்றார்  .சுல்தான் தெரியுமா என கேட்டேன்,ஆமா அவருக்க தம்பி யூசுப் ,அண்ணன் சேக்மீரான் எல்லாரும் அங்க தானே வேலே பாத்தாவே என்றார்  .

 நான் சுல்தானுக்க மொவன் என்றேன் .சாயிப்பு கம்பேனிக்க மின்ன கட போட்டிருந்தாரு ரிட்டேர்டு ஆனா பொறவு இப்பம் எப்படி இருக்காரு .இறந்துவிட்டார் இரண்டு மாதங்களுக்கு முன் என்றேன் .ஆறுதல் வார்த்தைகளுக்கு பின் . அம்மை இப்ப சொகமா இருக்கவாள ,நல்லா பாத்து கிடுங்கப்பா என்றார் .

  நான் செல்லும் வழியில் என்னுடன் அவரும் நடந்தார் வீட்டுக்காரி இறந்த பொறவு பத்து வருசமா நான் இங்க தான் இருக்கேன் மொவன் இங்க வீடு போட்டிருக்கான் .போலிசுல இருக்கான்  ராத்திரி வேலைக்கு போனான் இனிதான் வருவான் என என்னுடன் பேசிக்கொண்டே வந்தவர் .இதுதான் மொவனுக்கு வீடு போயிட்டுவா தம்பி என வாயிலை திறந்து உள் நுழைந்தார் தாத்தா என ஒரு குழந்தை கூப்பிட்டது .

 அடுத்து மாறச்சன் ஆஸ்பத்திரி .இன்னும் அதே பழைய ஒட்டு கட்டிடம் .மிக பழைய எம் பி பி எஸ் மருத்துவர் .முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றியுள்ள பகுதிகளில் தற்கொலை முயற்சி செய்து உயிருக்கு போராடுபவர்களை,மற்ற மருத்துவர்கள் கைவிடப்பட்ட நிலையில்  டாக்டர் மாறச்சன் மட்டுமே சிகைட்சையளிபார் .இது போலீஸ் கேஸ் என பலரும் அப்போது தயங்குவார்கள் சிகிச்சைதர .என் உறவினர் ஒருவர் வயிறை தானே பிளேடால் கீறியபோது  உடனே வெள்ளிச்சந்தை மாறச்சனிடம் கொண்டுபோங்கள் என்றார்கள்.
 இருபத்தியேழு தையல்கள் இது நடந்து 29 ஆண்டுகள் ஆகிறது .இப்போதும் நலமாக இருக்கிறார் .

அருகில் ஒரு வீட்டின் முன் கண்ணீர் அஞ்சலி ஒரு பெண் நேற்று இறந்துவிட்டார் என இருந்தது .பிறப்பு 1976 என் வயதுதான் இறப்புக்கான வயது இது இல்லையே என்றது மனம் .  வெளிச்சந்தைக்கு சற்று முன் பன்றி இறைச்சியும் ,அருகிலேயே  மாட்டிறைச்சியும் விற்கிறார்கள் .

  வெள்ளிக்கிழமைகளில் இங்கு சந்தைகூடும்  அதனால் இவ்வூர் இப்பெயர் பெற்றது .இங்கிருந்து மணவிளை செல்லும் சாலையில் அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி உள்ளது .ஸ்ரீ ராம தியேட்டர் இங்கிருக்கிறது அதை தாண்டி ஒரு  கல்யாணமண்டபம் ஒரு குளம் அதில் அதில் அல்லியும் ,தாமரையும் கிடந்தது  .குளக்கரைக்கு எதிர்புறம் சாலையை ஒட்டி மலகுவியல் நாற்றம் மூக்கை பிடித்து கொண்டே நடந்தேன். வீடுகளில் கழிப்பறை இருந்தாலும் இன்னும் பலருக்கு குண்டியில் புல் உரசினால் தான் மத்தது வெளிய வரும் போல .
தூய்மை இந்தியா பேசுபவர்கள் காலையில் இங்கு நின்றால்தான் அது சாத்தியமாகும் போல .குளம் தாண்டி கடலைகடை காரர் வீடு .அவர் ஆசான் வேறு முறிவுகளுக்கு கட்டு போடுவார் .அவர் மகன் ஜெயராம்ராஜ் என நண்பர் தற்போது சென்னையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

  வழியில் இந்து கோயில்களும் ஆலமரங்களும் பனைமரங்களும் நிறைந்த சாலை வெள்ளமடி வரை .மணவை அன்பர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தவர் என்னை அடையாளம் கண்டு கையசைத்தார் .ஆம் ஊர் நெருங்கிவிட்டது .வெள்ளமடி சந்திப்பிலிருந்து ராஜாக்கமங்கலம் வழியாக நாகர்கோயில் செல்லும் சாலை ,ஈசன்தங்கு சாலை ,குளச்சல் சாலைகள் சந்திக்கின்றன .வெள்ளமடியில் சன் குழும பொறியியல் கல்லூரி உள்ளது .கேரள மாணவர்கள் அதிகம் பயில்கின்றனர் .

 பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்கள் தோற்றத்தில் ஜோடியாக வந்தவர்கள் பைக்கை நிறுத்திவிட்டு நின்றிருந்தனர்.திருவனத்தபுரம் சொந்த ஊர் கன்னியாகுமரி சென்றுவிட்டு வருவதாக சொன்னார்கள் .

 டேக் ப்ளோர் கோ .கயிற்று கம்பனி என்பார்கள் .மிதியடிகள் இன்னும் பல கயிறு பொருட்கள் உற்பத்தி நிறுவனம் .எனக்கு பதினைந்து வயதிருக்கும் போது ஆயுத பூஜை நாட்களில் இங்கு நடக்கும் பாட்டு கச்சேரி நிகழ்ச்சிகளை பார்க்க இரவுகளில் வந்துள்ளேன் .
இதன் அருகிலும் ஆலமரம் நிற்கிறது .அடுத்து கட்டைக்காடு அரசு பள்ளி அருகில் வரும்போது மணவையின் சுக்கூர் அண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் என்னை ஏறுமாறு சொன்னார் .இல்லை நடையாக்கும் என்றேன்  .இங்க தாமசத்துக்கு வந்தாச்சா என கேட்டார் .இல்லை என்றேன் அப்போ நாரோல் ல இருந்த நடையா என்றார் .பதிலாக சிரித்தேன் .

  அடுத்து அம்மாண்டிவிளை விளைகள் நிறைந்த ஊர் ஆதலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது என படித்திருக்கிறேன் .இந்த சந்திப்பில்லிருந்து இயக்குனர் பாரதிராஜா தமிழகதிற்கு அறிமுகபடுத்திய முட்டம் கடற்கரைக்கு செல்லலாம் .அங்கு கலங்கரை விளக்கமும் ,தற்போது ஜே பி ஆர் மீன்பிடி துறைமுகமும் உள்ளது .மிக அழகிய  கடற்கரைகளில் ஒன்று.பார்க்கவேண்டிய இடம் இது .ஆழி சூழ் உலகு நாவலை எழுதிய ஜோ டி குருஸ் இவ்வூரை சார்ந்தவர் .அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதி ராஜ காட்டிய முட்டம் ரயில் நிலையத்தை தேடி யாரும் இங்கு அலைய வேண்டாம் .
சாத்தன் விளைக்கு அருகில் மிமிக்ரி கலைஞர்,எனது நண்பர் என்னை கண்டார் ஓரிரு வார்த்தைகள் பேசினோம்.முன்பு மேடை நிகழ்சிகளை நடத்தியுள்ளார் .அம்மாண்டிவிளையில் புரோட்டா கடை நடத்துகிறார் .

சாத்தன்விளை கோயில் தாண்டி பெரிய இறக்கம் .இங்கிருந்து வாகனங்களில் சென்றால் மிக வேகமாக வயிறு குலுங்க செல்லும் .இந்த குத்தற ஏத்ததுல சைக்கிளிலில் கீழே இறங்காமல் போயிருக்கிறேன் .

மணி ஒன்பதே கால் .சுனிதா போனில் அழைத்தாள் என்னா சாரே போய் சேர்ந்தாச்சா என்றாள் இல்லை இப்பந்தான் மணவாளகுறிச்சி பாலம் என்றேன் .இன்னும் போய் சேரல்லையா .நீங்க ஒரு சரியான லூசு,நடக்காரம் இவுரு .வயறு கொத்துபா ஓதுமே இப்போ என்றாள்.ஆமா அஜி அக்காட்ட கேட்டேன் காப்பிக்கு என்னதுன்னு ,ஓறட்டியும் இறைச்சியும் நீ சீக்கிறம் வான்னு சொன்னா அங்க போய்தான் காப்பி குடிக்கணும் என்றேன்  .

   மணல்வாழும் குறிச்சி ,இங்குள்ள மணலில் யுரேனியம் ,தோரியம் ,கார்டனைட்,மோனோசைட்,ரூட்டைல் என தனிமங்கள் நிறைய கிடைக்கிறது .இந்திய மணல் அபூர்வ ஆலை இங்குள்ளது மத்திய அரசு நிறுவனம் .தோரியம் இந்தியாவில் அதிகமாக கிடைக்கும் கடற்கரை இது .

  நான் சிறுவனாக இருக்கும் போது நிறைய மணல் மேடுகளாக இருந்தது அனைத்தையும் எடுத்துவிட்டார்கள் இப்போது .1800 களில் ஜெர்மனியில் இந்திய கயிறுகளில் சில தனிமங்கள் ஒட்டி இருந்ததை கண்டு அது எங்கிருந்து வந்தது என ஒருவர் விசாரித்து மணவாளகுறிச்சிக்கு வந்துள்ளார்.இங்கு அவர் எதிர்பார்த்ததைவிட நிறைய தனிமங்கள் இருந்ததால் அது எப்படி வந்தது என ஆராய்ந்ததில்   வேளிமலையில் உருவாகி கடியபட்டிணம் கடலில் கலக்கும் வள்ளியாறு  கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு சேர்த்தது என கண்டுகொண்டார் .இந்தியாவில் சிறந்த கிராமம் என இருமுறை மத்திய அரசு விருது பெற்ற கிராமம் இது .

    மணவை சந்திப்பில் நண்பர் சிங்குடன் பத்துநிமட உரையாடல் .பின்னர் எனது தெருவான காந்தரிவிளையில் எனது சகோதரி வீட்டிற்கு சென்றேன் .சாலமி (என் சகோதரி என்னை அப்டித்தான் அழைப்பாள்) நீ நடந்தா வாற அங்கேருந்து என்றாள் .

  மிக மெதுவாக நடக்க வேண்டும் ஆர்வ கோளாறில் ஒரே நாளில் அதிக தூரம் மிக வேகமாக நடந்தால் மறுநாள் படுத்துவிட வேண்டியாதுதான் உடலை அதிகம் வருத்த கூடாது என 2009 ஆண்டு நாகர்கோயில் –கன்னியாகுமரி நடக்கும்போது நண்பர் முத்துகுமார் சொன்னார்.

  பதினோரு மணிக்கு முன் பேருந்தில் ஏறி ஒரு மணிக்குள் வீடு வந்து சேர்ந்தேன் .
கடந்த ஜனவரி 21 ம் தியதி தான் நாகர்கோவில்-மணவாளகுறிச்சி நடை சென்ற அனுபவம் இது .
03 april 2018

ஷாகுல் ஹமீது .