Wednesday 15 August 2018

தினமும் ஒரு கைப்பிடி அரிசி

   தோழி ஒருவர் முழுநேர சமூக பணியாற்றுகிறார்.கைவிடப்பட்ட குழைந்தைகள் கல்வி உதவி,மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுதல்,புயல் ,பெருமழை,சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளில் களப்பணியாற்றுதல், குளங்களை சுத்த சுத்தபடுத்தும் குழுவுடன் இணைந்து பணி செய்தல்,திருநங்கைகள் வாழ்வாதாரத்துக்கு உதவுதல்  என தன்னலம் பாராது முழுநேரம் பணியாற்றுகிறார் .

     கடந்த ஐந்தாண்டுகளாக நான் அவரது பணிகள் குறித்து அறிவேன் .கடந்த சில தினங்களுக்கு முன் அவருடன் தொலைபேசி உரையாடலில் எங்கள் கிராமத்தில் இசுலாமிய இளைஞர்கள் நடத்தி வரும் மருத்துவ சேவை,ஆம்புலன்ஸ் சேவை பற்றி பேசினோம் .அப்போது நான் முன்பு வருடம் ஒரு முறை அந்த மருத்துவ சேவை அமைப்பு பணம் கொடுக்க எண்ணினேன் அது வருட இறுதியில்மிக பெரிய தொகையாக கையில் போதிய பணமும் இல்லாமல் இருக்கும்.அதனால் கொடுக்க நினைத்ததை விட பாதிக்கும் குறைவான தொகையே என்னால் கொடுத்து உதவ முடிந்தது .

    கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மருத்துவ சேவை அமைப்பின் நிர்வாகி ஒருவரிடம் இனி எல்லா மாதமும் ஒரு சிறு தொகையை தந்துவிடுவேன் என உறுதியளித்தேன்.இந்த மாதம் வரை அந்த  சிறு தொகையை கொடுத்துவிட்டேன் என்றேன் .ஒரு ஆண்டுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என நினைத்தேனோ அந்த தொகை இப்போது எளிதாகி விட்டது .

    அப்போது அந்த தோழி அவரறிந்த வேறொரு சமூக பணியாளர் எப்படி உதவி பெறுகிறார் என சொன்னார்.தினமும் நீங்கள் வீட்டில் சமைக்கும்போது ஒரு கைப்பிடி அரிசியை தானமாக ஒரு பையில் போட்டுவிடுங்கள் என பல வீடுகளில் ஒரு பையை கொடுத்து ,மாத இறுதியில் அதை அவர் பெற்றுக்கொண்டு இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுகிறார் .

   தினமும் வீட்டில் சமைக்கும்போது ஒரு கைப்பிடி அரிசியை அதிகமாக சமைக்கிறோம் என நினைத்துக்கொண்டு தனியாக தானத்திற்கு வைப்பது சிரமமாக இருக்காது நம் குடும்ப பெண்மணிகளுக்கு .உதவுவதற்கு பணமே வேண்டாம் மனம் மட்டும் இருந்தால் இப்படியும் உதவலாம்  என்றார் அவர் .
ஷாகுல் ஹமீது,
09 july2018

No comments:

Post a Comment