ஹீரோயிக் ஏஸ் பகுதி ஒன்று
புருசு சேட்டாவின் மனைவி ராஜி போனில் அழைத்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார். யார் அழைத்தாலும் அழைப்பை ஏற்று சென்றுவிடுவேன். சுனிதா மகன்களுடன் நாகர்கோயிலில் இருந்து கொச்சுவேளி, கோழிக்கோடு வழியாக ரயிலில் மாஹி சென்று இறங்கும்போது காற்றுடன் அடை மழை கொட்டிகொண்டிருந்தது. புருசு சேட்டாவின் மூத்த மகள் ரெம்யா குடையுடன் ரயில் நிலையத்தில் காத்திருந்தாள். அவள் இரண்டாவது குழந்தை பிரசவித்து ஐந்துமாதங்களே ஆகியிருந்தது.
மூன்றரை வயதான மூத்த மகனை உடன் அழைத்து வந்திருந்தார். “ரெண்டு பேரயும் நோக்காம் அம்மெக்கி பற்றுல்லா” என்றவர் அருகில்தான் வீடு என சொல்லி ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.
புருசுசேட்டா தனது வீட்டருகில் வாழும் மாப்பிள்ளை சமூகத்தை பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். திருமணத்திற்குப்பின் பெண்வீட்டோடு இருந்துவிடும் கணவன்மார்கள், அந்த உம்மாக்களுக்கு மகளின் கணவன்களுக்கு சமைத்தே இடுப்பொடிந்துவிடும்.
மாஹி பாண்டிசேரியின் கீழ் வருகிறது. வடகரைக்கும், தலைச்சேரிக்கும் இடையில் இருப்பது மாஹி. கிரிக்கெட், சர்க்கஸ், கேக் இங்குதான் துவக்கம் என்றார் ரெம்யா.
அங்கு இரு தினம் தங்கி மாஹி கடற்கரை, கண்ணூர் பாம்பு பண்ணையை சுற்றிபார்த்துவிட்டு, ராஜி சேச்சியின் கைவண்ணத்தில் மலபார் மீன்குழம்பு உண்டு திரும்பினோம்.
வாப்பாவுடன்... |
நண்பர் அசோக் சென்னை தாம்பரத்தில் புதிதாய் வீடுகட்டி கிரகபிரவேசத்திற்கு அழைத்திருந்தார். எனது வாப்பாவுடன் சென்றுவிட்டு தோழி வெற்றி செல்வியின் இல்லத்தில் இரவில் தங்கி அதிகாலை விமானத்தில் திருவனந்தபுரம் வந்தோம்.
தோழி வெற்றி செல்வி |
வாப்பாவின் முதல் விமான பயணம். அதிகாலை சென்னை விமான நிலையம் செல்வதுவரை அவரிடம் சொல்லவேயில்லை விமானத்தில் போகப்போகிறோம் என்பதை.
வாப்பாவின் முதல் விமான பயணம் |
இம்முறையும் சீக்கிரமாகவே மும்பை அலுவலக மேனேஜர் பிரத்தமேஷ் அழைத்தார். ஹீரோயிக் ஏஸ் எனும் கப்பலுக்கு. 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கார் காரியர் வகை கப்பல் (PCC – PURE CAR CARRIER) சிங்கப்பூர் சென்று பணியில் இணைவேண்டுமென்பதை சொன்னார். கப்பலில் இருக்கும் பணியாளர்களின் பட்டியலை பார்த்தேன். 2011ல் வேலை செய்த ஹார்மொனி கப்பலில் இருந்த இலங்கை காப்டன் இருந்தார்.
![]() |
சிங்கப்பூர் |
கொச்சியிலிருந்து இரவு பதினோரு மணிக்கு விமானம். நான்கு மணிநேர பயணத்தில் இறங்கிவிடலாம் என்பது கப்பல்காரனுக்கு மகிழ்ச்சிதான். கேரளாவின் திருச்சூரை சார்ந்த மோட்டார்மேன் விஜித் உடன்வந்தார். சிங்கையில் விமானநிலையத்தில் இறங்கினால் கடினமே இருக்காது. விசா காப்பியுடன் முகவர் விமானநிலையத்தின் உள்ளேயே வந்துவிடுவார். கப்பல்காரர்களுக்கு குடியுரிமை சோதனைக்கு தனிவரிசை. எங்கள் கையிலிருக்கும் தேவையான ஆவணங்கள் (agent details, gurrenty letter, visa copy) குடியுரிமை அதிகாரியின் மேஜையிலும் இருக்கும். ஏதாவது விடுபட்டிருந்தால் அவரே முகவரை போனில் அழைத்து சரிபார்த்துவிட்டு அனுப்பிவைப்பார்.
தினமும் ஆயிரக்கணக்கில் கப்பல் பணியாளார்கள் சிங்கையிலிருந்து ஊருக்கு செல்வதும், சிங்கைக்கு வந்து கப்பலேறவும் செய்கிறார்கள். சிங்கையில் இறங்கும் அனைத்து விமானங்களிலும் கப்பல்காரன் சிலபேர் இருப்பார்கள். சிங்கை அரசு கப்பல்துறை சார்ந்த அனைத்து சேவைகளையும் மிக எளிதாக்கியுள்ளது. உலக வரைபடத்தில் ஒரு புள்ளி வைத்தால் அதுதான் சிங்கப்பூர். சிங்கை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் இங்கே நின்று தங்களுக்கு தேவையான அனைத்தயும் பெற்று மில்லியன் டாலர்களில் பணத்தை கொடுத்துவிட்டு செல்லும்.
சிங்கையில் இறங்கும்போது அதிகாலை ஏழுமணி. சென்னையிலிருந்து வந்த தேவராஜின் விமானம் சற்று தாமதம். எனவே காத்திருந்து விடுதியறைக்கு அழைத்து சென்றார் காரோட்டி. விமான பயணத்தில் என்னால் தூங்கவே முடியாது.
![]() |
நண்பர் நாகராஜன் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் |
முந்தைய நாள் காலை பதினோருமணி ரயிலில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டபோதே என் பயணம் துவங்கியது. பயணப்பைகள் ஆவணங்களை சரிபார்த்து வைப்பதிலேயே இரவு கழியும். மாலையில் கொச்சி அலுவலகத்தில் ஆவணங்களை பெற்று அங்கிருந்து விமானநிலையம். இரு இரவுகள் தொடர்ந்து தூக்கமின்மையும் பயண களைப்பும். அறையில் பையை போட்டுவிட்டு குளித்து, காலை உணவுக்குப்பின் விஜித், தேவராஜிடம் கேட்டேன் “வெளியில் போகலாமா” என. விஜித் என்னுடன் வர தேவராஜ் தூங்க சென்றுவிட்டார்.
சந்தோசா தீவு இருமுறை போய்விட்டதால், இம்முறை பறவைகள் பூங்காவிற்கு சென்றோம். மிகப்பெரிய பூங்கா காடு போல உருவாக்கினார்களா, இயற்கையாக அமைந்ததா என அறியமுடியவில்லை. உயர்ந்த, மிகப்பெரிய வலைகூண்டு. சிறு காட்டுக்குள் அரிய பறவைகள் அதனுள் சுதந்திரமாக பறக்கிறது. மூன்றரை டாலரில் அங்கே விற்கப்படும் ஐம்பது மில்லி ஜூஸ் வாங்கினால் நமது தோளில் அமர்ந்து குடிக்கும் பறவையுடன் புகைப்படம் எடுத்துகொள்ள முடியும்.
அரைத்தூக்த்தில் பகல் முழுக்க நடந்து களைத்து வெளியே வந்தோம். நண்பர் மணி காரில் வந்துஅவரது இல்லம் அழைத்து சென்றார். சகோதரி மலர், சுனிதா, மகன்களை நலம் விசாரித்தபின் சூடான காபியை தந்தார்.
சுனிதாவின் தாய் மாமா தஸ்தகீர் பஹ்ரைனிலிருந்து சிங்கபூருக்கு சுற்றுலா வந்திருந்தார் நான் சிங்கையில் இருப்பதை அறிந்து விடுதியறைக்கு வந்து சந்தித்து சென்றார்.இரவில் மீன்குழம்புடன் வயிறு நிரம்ப உண்டபின் விடுதியறையின் போர்வைக்குள் ஆழ்ந்த உறக்கம். காலை எட்டுமணிக்கு தயாராக இருக்கச் சொன்னார்கள். விடுதி வரவேற்பறையில் மும்பையிலிருந்து வந்தா கேடட் சீமா, மோட்டார்மேன் நீலேஷ் இருந்தனர். தாய்லாந்து பத்தி சாப் புகைப்பிடிக்கும் அறையிலிருந்து வெளியே வந்து சிரித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
![]() |
சிங்கப்பூர் படகு துறையில் |
கப்பல் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருந்தது. முகவர், ஷாகுல் யார் என கேட்டு எனது பாஸ்போர்ட்டை பெற்று மூன்று சிம் கார்டுகள் வாங்கிவர காப்டன் சொன்னதாக சொன்னார்.
படகுப் பயணம் |
காரில் சென்று நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பல்களுக்கான சேவைகள் வழங்கும் படகு துறைக்கு சென்றோம். துறைமுக குடியுரிமை சோதனை முடித்து ஒருவர் படகில் இறங்க மேலிருந்து எங்கள் பயண பைகளை ஒவ்வொன்றாக ஆடும் படகில் இறக்கி அடுக்கிவைத்துவிட்டு நாங்களும் அமர்ந்தோம். சிங்கையில் சிகரெட் கொண்டுவர அனுமதியில்லை. பிரித்த ஒரு பாக்கெட் சிகரெட்டை பையில் வைத்துகொள்ளலாம். கப்பலிலிருந்து இறங்கும் கப்பல்காரர்கள் சிலர் கத்தி வைத்திருப்பார்கள். அதை துறைமுக குடியுரிமை அதிகாரியிடம் காண்பித்து கடிதம் பெற்று விமானநிலையத்தில் அந்த கடிதத்தை வழங்கியபின் தான் கொண்டு செல்ல முடியும்.
அரை மணிநேர பயணத்திற்கு பின் பங்கர் நிறைத்துக்கொண்டிருந்த கப்பலில் சென்று ஏறினோம். “வெல்கம் ஆன் போர்ட் ஷாகுல்” என வரவேற்ற காப்டனுக்கு மிக நன்றாக என்னை நினைவிருந்தது. நலமுடன் இருப்பதாக சொல்லி கைகுலுக்கியபோது உடன் வந்த சக பணியாளர்களும், கப்பலில் இருந்தவர்களும் புருவம் உயரத்தி வியப்படைந்ததை கண்டேன்.
கேப்டனுடன்... |
நாஞ்சில் ஹமீது.
11-June-2025.
sunitashahul@gmail.com
![]() |
நண்பர் மணி |
No comments:
Post a Comment