Sunday 11 December 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 28


                பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள் .
  எப்போது  நான் இந்தியா செல்வேன் என்ற எந்த தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன் .இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர் .புதிதாக பணிக்கு தேர்வாகி வந்தவர்கள், அனைவரும் என் நிறுவனத்தின் மூலம் வந்தவர்கள் .இந்தியாவில் ஈராக் செல்ல தடை இருந்தபோதும் துபாய் வழியாக அழைத்துவரப்பட்டுள்ளனர். துபாய் விமான நிலையத்தின் சரக்குகளை கையாளும்(cargo terminal) முனையத்திலிருந்து வேறு விமானத்தில் ஏற்றி இங்கு கொண்டுவந்ததாக  சொன்னார்கள் .



  போர்முனையில் பதினெட்டு மாதம் பணிபுரிந்து,பல இழப்புகள்,சாவின் விளிம்பை பலமுறை சந்தித்துவிட்டு பல இன்னல்களுக்கு பின் ஊர் செல்வதற்காக காத்திருக்கிறேன் .அவர்கள் இப்போது தான் இங்கு ஒரு அபாயகரமான வாழ்வை துவக்க போகிறார்கள் .ஒவொருவருக்கும் ஒரு சூழ்நிலை .


   ஒவ்வொரு ஆணுக்கும் படித்துமுடித்து வேலைகிடைப்பது வரை உள்ள காலம் மிக மிக கஷ்டமானது .சிலருக்கு படித்த வேலை கிடைப்பதில்லை,சிலருக்கு அவர் விரும்பிய வேலை கிடைக்காது .சிலர் தற்காலிகமாக மனமில்லாமல் ஒரு வேலையில் சேர்வார்கள் ,சேரும்போது தனுக்குரிய வேலைகிடைத்ததும் மாறிவிடலாம் என்ற எண்ணத்தோடு ஆனால் பலருக்கு அது சாத்தியமே இல்லாமலாகிவிடும் .சிலர் மட்டும் இதில் விதிவிலக்கு.அப்பவோ,சொந்தக்காரர்களோ வைத்திருக்கும் நிறுவனத்தில் வேலை அல்லது கல்லூரி இறுதியாண்டில் பணிதரும் நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்  இது போன்ற எந்த கஷ்டத்தையும் அறியாதவர்கள் .


  நான் இங்கே பார்த்த அநேகம் பேர் கொஞ்ச நாள் அனுபவத்துக்ககாவும்,தற்போதைய பணதேவைக்காகவும் வந்ததாக சொன்னார்கள் .


  தற்போது அமெரிக்க ராணுவம் புதிதாக ஈராக்கிய ராணுவத்தை உருவாக்கும் பொருட்டு இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளிக்கிறது.அந்த பயிற்சி முகாமிலுள்ள ஈராக்கிய வீரர்களுக்கான உணவு கூடத்தில் பணி செய்ய வந்துள்ளாக தெரிவித்தனர் .தமிழ் இளைஞர்கள் நிறையபேர் இருந்தனர் .


 என்னிடம் தொடர்ந்து அவர்கள் உரையாடிக்கொண்டே இருந்தனர்.எனது அனுபவங்களை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆவலில் தூங்கும் நேரம் தவிர என் அறையிலேயே இருந்தனர் . நான் அவர்களிடம் பக்குபா தீ விபத்தையும் ,அனைத்து சான்றிதழ்களை  இழந்ததையும் சொன்னேன்.யாரும் உங்களுடைய அசல் சான்றிதழ்களை கொண்டுசெல்லாதீர்கள் என்று உறுதியாக சொன்னேன் .அதில் மது என்னும் சமையல்கலைஞன் மட்டும் தன்னுடைய சான்றிதழ்களை என்னிடம் தந்து சென்னையிலுள்ள தந்து வீட்டு முகவரியில் அனுப்பிவைக்கும்படி தந்தான் .


  பெரும்பாலானவர்களிடம் கடவுசீட்டை தவிர பிற முக்கிய சான்றிதழ் எதுவும் இல்லை .எப்போதும் கடவுசீட்டை தங்களுடன் வைத்துகொள்ளுங்கள் என்றபோது .பாக்தாத்திலுள்ள இந்திய தூதகரத்தால் எனக்கு வழங்கப்பட்ட கடவுசீட்டை வாங்கிபார்த்தபின் ஏன் சொல்கிறேன் என்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர் .


  அவர்களை மும்பையில் தேர்ந்தெடுக்கும்போதே நேர்முகத்தேர்வில் இங்கு நிலவும் அசாதரண சூழ்நிலையை தெளிவாக சொல்லியுள்ளனர் .அதனால் பலரும் முக்கிய ஆவணங்கள் எதையும் கொண்டு வரவில்லை எனவும் எதையும் சந்திக்கும் மனநிலையுடேனே வந்துள்ளனர் .



  முன்பு பக்குபா தொடர் குண்டுவெடிப்பில் என் கண்முன்னே சில நாட்களில் மனம் பிறழ்ந்த லக்ஷ்மணை பற்றி ஈராக் போர்முனை அனுபவம் 5 ம்  பதிவில் குறிப்பிட்டுருந்தேன் .மீண்டும் ஈராக்கிற்கு பணிக்கு வரும் பொருட்டு மும்பை அலுவலகத்தில் லஷ்மனை  பார்த்ததாக ஒருவர் சொன்னார் .அதை கேட்டபோது அதிர்ச்சியும் ,ஆச்சரியமுமாக இருந்தது .குணமடைந்தவர் மீண்டும் ஏன் இங்கே வரவேண்டும் ?முன்பு உண்மையாக அவர் மனபிறழ்வு அடைந்தாரா அல்லது அவர் அப்படி நடித்தாரா ?என விடைகிடைக்காத கேள்விகள் பல எழுந்தது .லஷ்மண் மட்டுமே அதற்க்கு விடை சொல்ல முடியும் .அப்போதே ஐம்பது வயதை கடந்திருந்தார் .இப்போது பதிமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது .அவரை சந்தித்து மனதிலுள்ள கேள்விகளுக்கு விடைகாண விளைகிறேன் .
  


     அதுபோல் என்னுடன் இருந்த ஜோக்கிம் விடுமுறையில் சென்று திருமணம் செய்துவிட்டு இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு வந்தவன் திக்ரித் குண்டுவெடிப்பில் இனி இங்கு பணிசெய்ய இயலாது என இந்தியாவிற்கு சென்றான் .மீண்டும் இரண்டு மாதத்திற்கு பின் வேறு முகாமிற்கு வந்ததாக அறிந்தேன் .


   மனிதமனம் உறுதியில்லாதது என நினைத்துகொண்டேன்.பாக்தாத் விடுதியில் வந்த மூன்று தினங்களுக்கு பின் தான் எனது கடவுசீட்டை வாங்க என் நிறுவனத்திலிருந்து ஆட்கள் வந்ததாக சொன்னார்கள் .
  கடவுசீட்டுடன்  விடுதியின் வரவேற்பறைக்கு சென்றபோது .பக்குபாவில் என்னுடன் பணிபுரிந்த முனாவர் நின்றுகொண்டிருந்தான் .என்னை அடையாளம் கண்டுகொண்டான் .பக்குபா குண்டுவெடிப்பில் ஒரு காலை இழந்தவன் .எங்கள் நிறுவனம் ஜெர்மனியில் உயர்தர மருத்துவ சிகிச்சையளித்து .மனிதவளத்துறையில்  உயர்பதவியும் கொடுத்து பணிக்கு வைத்து கொண்டது .


  செயற்கை கால்களுடன் அவனால் நடக்கவும் முடிந்தது .அவனால் பாக்தாத் நகர வீதிகளில் அச்சமின்றி நடமாடவும் முடிந்ததை கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது .என்னுடன் நான்கைந்து பேரின் கடவுசீட்டுகளை பெற்றுகொண்டு .விமான சீட்டு உறுதியானதும் உங்கள் பயணதேதிகளை சொல்ல்கிறேன் என்றான் .


    எப்போது என கேட்டேன் .எனது திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது நான் விரைவாக செல்ல வேண்டுமென்றேன் .ஒரே ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே பாக்தாத் –அம்மானுக்கு (ஜோர்டன் )விமானத்தை இயக்குகிறது .நமது நிறுவனத்திற்கு வாரத்தில் முப்பதுபேர் மட்டுமே அதில் பயணிக்க அனுமதி என்றான் முனாவர் .


   உன் விஷயம் எனக்கு முன்பே தெரியும் .நீ திக்ரிதிலிருந்து புறப்பட்டே அன்றே எங்களுக்கு செய்தி வந்தது உன்னை விரைவில் இந்தியா அனுப்பி வைக்குமாறு .ஆனால் பாக்தாத் –அம்மான் செல்லும் விமானத்தில் இன்னும் இடம் உறுதியாகவில்லை .முயற்சிசெய்துகொண்டிருக்கிறோம்.

   விடுதியறையில் செல்வராஜ் என்றொருவனை சந்தித்தேன் .மும்பையிலிருந்து இங்கு வந்தவன் பதினைத்து நாட்களுக்குள்ளாக இந்தியா திரும்பி செல்வதாக சொன்னான் .


  விமானத்தில் ஈராக் வந்திறங்கியபோது அவனது பயண பைகள் வந்து சேரவில்லை .உடுத்திருந்த ஆடையை தவிர மாற்று ஆடை இல்லை அவனிடம் .ஒரு வாரம் அனகோண்டா என்னும் முகாமில் பணிசெய்திருக்கிறான் .இருந்தாலும் அவனுக்கு மனம் ஒன்றவில்லை பணியில் .

  தன்னுடைய பொருட்களை இழந்த கவலை வேறு திரும்பி செல்வதாக சொன்னான் .அவனது கதையை கேட்டபின் சிலர் தங்களிடம் இருந்த உடைகள் ,சோப்பு ,இன்னபிற பொருட்கள் என கொடுத்ததில் ஒரு பைக்கான பொருட்கள் சேர்ந்துவிட்டன .அதனால் ஒருவன் ஒரு பையையும் கொடுத்து அவற்றை எடுத்து செல்லுமாறு சொன்னான் .


  பாக்தாத் விடுதிக்கு வந்த ஏழாம் நாள் எனக்கு தகவல் வந்தது மறுநாள் எட்டாம்தியதி காலை பயணம் என .காலை ஏழு மணிக்கு விடுதியில் தயாராக இருக்கும்படி சொன்னார்கள் .


   அன்று மாலையில் திக்ரித் முகாமிலிருந்து என்னுடன் ஊர் செல்ல வேண்டிய உண்ணி,பிரான்சிஸ் ,கில்ராய் ,தென்னாப்ரிக்காவின் மேலாளர் ஜாக் உட்பட ஆறு பேர் பாக்தாத் விடுதிக்கு வந்துசேர்ந்தனர் .என்னை பார்த்ததும் நீ இன்னும் போகவில்லையா ?என்ன காரணம் என வினவினர் .

   அவர்கள் வந்த பேருந்தில் இருக்கைகள் அனைத்தும் கழற்றபட்டு குண்டு துளைக்காத இரும்பு பிளேட் வைத்து வெல்டிங் செய்யபட்டிருந்தது அனைவரும் இருக்கை இல்லாமல் பேருந்தின் தரையில் அமர்நதுதான் பயணித்ததாக சொன்னார்கள் .
 நான் ஊருக்கு செல்லாமல் இன்னும் இங்கிருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .

  இங்கு வந்து ஒரு வாரத்திற்கு பின் தான் விமானசீட்டு ஏற்பாடு செய்ய முடிகிறது என்றேன் .நாங்களும் இங்கு ஒரு வாரம் இருக்க வேண்டுமா என கேட்டனர் .என்னுடன் பத்து நாட்களுக்கும் மேலாக சிலர் 
இங்கிருப்பதை சொன்னேன் .

ஷாகுல் ஹமீது

11-12-2016

5 comments:

  1. தம்பி என்ன இன்னும் இந்தியாவிற்கு வரலியா நீங்கள்? 6 ஆம் தேதி திருமணம் என முந்தைய பதிவில் வாசித்த ஞாபகம் இந்த பதிவில் 8 ஆம் தேதியாகியும் இன்னும் இங்கேயே இருந்து மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே? உங்கள் பதிவுகளில் பல நிகழ்வுகளும் மனிதர்களும் மறக்க இயலாதர்வகளெனினும் லக்‌ஷமனன் மிக முக்கியம்னான ஒரு நபர். அவரைக்குறித்து அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். அவர் நிச்சயம் நடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அன்றைக்கிருந்த அசாதாரண சூழலில் அப்படி மனம் திரிவது வெகு எளிதென்றே இன்னும் நினைக்கிறேன்.
    அனகோண்டா என்றொரு இடத்தின் பெயரா? வேடிக்கையாக இருக்கிறது. வெளிநாட்டில் வெலை செய்து சொந்த நாட்டிற்கு திரும்ம்பிய பலர் மீண்டும் வேரு நாடுகளுக்கு பணிக்கு செல்வதை நானும் கண்டிருக்கிறேன் தம்பி. அது அவர்களின் உறவுகளால் நடப்பது. வெளிநாட்டில் இருந்து வரும் பணம் உறவுகளின் கண்களை மறைப்பதை பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். அவர்களின் தொடரும் மனச்சாட்சியற்ற எதிர்பார்ப்புகளை உள்ளூரில் நிறைவேற்ற இயலாமல் மீண்டும் மீண்டும் வெளியேறிச்செல்பவரகளை பலமுறை பார்க்கிறேன். முனாவர் மீண்டும் நடமாடுவதிலும் அச்சமின்றி இருப்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது
    உங்கள் திருமண சஸ்பென்ஸ் எப்போது சொல்லுவிர்கள் என்று காத்திருக்கும்
    லோகமாதேவி

    ReplyDelete
  2. விரைவில் அக்கா ,நன்றி

    ReplyDelete
  3. மிக சுவாரசியமாக இருக்கிறது

    ReplyDelete
  4. உங்கள் திருமண சஸ்பென்ஸ் எப்போது சொல்லுவிர்கள் என்று காத்திருக்கும்

    ReplyDelete
  5. Innum virivaaka eluthungal Anna kuta iran ullur arasiyal ranuva nilavarangalum eluthungal erkanave ezuthierunthal enakku limk kudungal kathir3145@gmail.com

    ReplyDelete