Sunday 4 December 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 27

  
        
              திக்ரித் – பாக்தாத் திகில் பயணம்
  
  முழு வேகத்துடன் வண்டி போய்கொண்டிருந்தது கண்ணிலிருந்து மறைவதுவரை சதாமின் அரண்மனை முகப்பை நோக்கியிருந்தேன்.

  முன்பும் ,பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர அந்த திகில் பயணம் தொடங்கியது .முன்பும்,பின்பும் உள்ள வாகனங்கள் வளைவுகளில் இரு பக்கவாட்டுகளில் (வலது,இடது )வந்து எங்கள் வண்டியை தொடரும்  . பொதுவாக பயணங்களில் ஒரு இலக்கும்,உத்தேசமாக சென்றுசேரும் நேரமும் தெரியும் பயணிப்பவர்களுக்கு .எனது அன்றைய திக்ரித் –பாக்தாத் பயணத்தில் இலக்கை சென்று சேருவேனா என உறுதியற்ற பயணமாக துவங்கியிருந்தது.வண்டியுனுள் ஒரு பதட்டம் நிறைந்திருந்தது .மனதில் பயமும் .யாருடனும் பேசிக்கொள்ளவேயில்லை அதுவும் மனம் இறுக்கமாக இருக்க ஒரு காரணமாயிற்று .

  திக்ரித்திலும் தொடர்ந்துவந்த சாலையிலும் இடிபாடுகளுடன் கட்டிடங்களும், போரில் சிதைந்த நகரமும்,கந்தலாடை அணிந்த மக்களையும் காணமுடிந்தது .

 சாலையெங்கும் ராணுவவீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி வாகனங்களில் ரோந்து சுற்றிவருவதையும் பார்த்தேன்.நாங்கள்  வந்துகொண்டிருந்தபோது ஓரிடத்தில் போக்குவரத்து தடைபட்டிருந்தது நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்தது ,அது ஒருவழிப்பாதை எங்கள் வாகனங்கள் நின்றதும் துப்பாக்கியுடன் எங்கள் பாதுகாப்பு வீரர்கள் கீழறங்கி நின்றுகொண்டனர் .

  எதிர் திசையில் வாகனங்கள் வரத்தொடங்கியதும் எங்கள் வண்டியை திருப்பி எதிர் திசையில் உள்ள சாலையில் போக சொன்னார் குழுவின் தலைவன் .எதிரில் வரிசையாக வாகனங்கள் வந்துகொண்டிருந்தது. வண்டியை நிறுத்தவேண்டாம் மெதுவாக போய்கொண்டே இருங்கள் என்றான் குழுத்தலைவன் .

  சில ராணுவ வாகனங்கள் எதிரில் வந்தபோது  மட்டும் லேசாக வேகத்தை குறைத்து அவர்களை பார்த்து கையசைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.அவர்களும் வெள்ளைகார்களை கண்டுவிட்டால் ஒரு புன்னகையுடன் கடந்து செல்கிறார்கள் .ஒரு கிலோமீட்டருக்கு  பின்னரே  மீண்டும் சரியான சாலையில் எங்கள் வாகனங்கள் பயணிக்க ஆரம்பித்தது. அதுவரையில் பாதுகாப்பு வீரர்கள் எங்கள் வண்டியின் கதவுகளுக்கு வெளியேதான் நின்றுகொண்டிருந்தனர்.

   இரண்டரைமணிநேர பயணத்துக்குபின் ஒரு முகாமுக்கு சென்று சேர்ந்தோம். அங்கே ஒருவர் இறங்கிகொண்டார் .அங்கிருந்த உணவு கூடத்தில்  மதியஉணவு சாப்பிட்டுவிட்டு பின் பறப்படுவோம் என்றனர் .நான் இரண்டு சீஸ் சாண்ட்விட்ச்ம் ,ஒரு டி போர்ன் ஸ்டேக்ம் சாப்பிட்டேன் .

 முன்பே குறிப்பட்டதுபோல  இருவர் அங்கிருந்து பாக்தாத் செல்லும் பொருட்டு எங்களுடைய வண்டியில் ஏறிகொண்டனர்.என்னை வேறொரு வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னார்கள் .இப்போது நான் முன்னால் செல்லும் வண்டியில் இருந்தேன் .
  
   அந்த வண்டியின் ஓட்டுனர் ஈராக்கி அவன் ஈராக்கி உடையணிந்திருந்தான் அதுவும் பாதுகாப்பு யுக்திதான் .முன் இருக்கையில் இருக்கும் குழு தலைவனின் உத்தரவுப்படி வண்டியின் வேகத்தை ,குறைத்தும்,கூட்டியும் ஒட்டவேண்டும் .உள்ளூர் ஈராக்கிக்கு ஆங்கிலம் தெரியாது .குழுத்தலைவன் சொல்லும் உத்தரவுகளை நடு இருக்கையில் என் அருகில் இருந்த வீரன் ஒருவன் அரபியில் மொழிபெயர்த்துகொண்டிருந்தான் .

    பாக்தாத் நகரை நெருங்கும்போது எங்கள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு ஈராக்கியின் கார் நின்றுவிட்டது .மூவ் மூவ் என்றபடியே எங்கள் வீரர்கள் கீழே இறங்கிவிட்டனர்.எங்களுடைய வண்டிகள் செல்ல வழியில்லதவாறு சாலையின் நடுவே அந்த கார் பழுதாகி நின்றது. அந்த காரின் ஓட்டுனர்  எவ்வளோ முயன்றும் வண்டியை நகர்த்த இயலவில்லை .

  எங்கள் குழு தலைவன் எங்கள்  காரோட்டியிடம் புஷ் ஹிம் என்றான். அதை அரபியில் மொழி பெயார்த்ததும் கரோட்டி பழுதாகி நின்ற அந்த வண்டியின் பின்புறத்தில் மெதுவாக மோதி தள்ளிக்கொண்டு பக்க வாட்டில் நிறுத்தி சாலையில் வழியை உருவாக்கினான் .அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வண்டிகாரன் அரபியில் எதோ திட்டிகொண்டிருந்தான் .எதோ கெட்டவார்தைகள் என நினைத்துகொண்டேன் .

 இது என்ன அராஜகம் என தோன்றியது .சொந்த நாட்டிலேயே சுதந்திரம் பறிக்கப்பட்டு ,அந்நியர்களால் துன்புறுத்தப்படும் நிலையில் ஈராக்கிய மக்கள். மாலையில் பாக்தாத் வந்து சேர்ந்தோம் .மனதிலிருந்த பரபரப்பும் ,பதட்டமும் கொஞ்சம் குறைந்திருப்பதை உணர்ந்தேன் .
 
 பாக்தாத் சாலைகள் முன்பு மிக நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள உள்கட்டமைப்புகளை(பாலங்கள் ,சாலைகள் ...) உருவாக்கியதில் இந்தியர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர் .இப்போது சரியான பராமரிப்பின்றியும், அழியாத போர்சுவடுகளுடனும் காணமுடிந்தது.உலகமே நாலுகால் பாய்ச்சலில் முன்நோக்கி செல்லும்போது ,ஈராக் பின்நோக்கி செல்லும் அவலம் .

 பாக்தாத்தின் சாலையில் ஒரு வண்டி என்னை அழைத்து செல்ல தயாராக நின்றுகொண்டிருந்தது .அதனருகில் நிறுத்தி எனது பயண பையை எடுத்துகொள்ளுமாறு சொன்னார்கள் .என்னை அழைத்துவந்த குழுவின் தலைவன் நாங்கள் வேறு முகாமிற்கு செல்கிறோம் இவர்கள் உன்னை விடுதியறைக்கு அழைத்து செல்வார்கள் என்றார் .நான் அணிந்திருந்த கவச உடையையும், தலை கவசத்தையும் திரும்ப வாங்கிகொண்டனர் .

   குழுதலைவனுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி கூறினேன் .அவர்கள் சிறிதும் தாமதிக்காது புறப்பட்டு சென்றனர் .என்னை அழைத்துசெல்ல வந்திருந்த விடுதியின் மேலாளர் தலை வெளியே தெரியாதவாறு குனிந்து அமர்ந்து கொள்ளுமாறு சொன்னார் .பத்து நிமிட பயணத்தில் விடுதியை அடைந்ததும்  என்னிடம் வண்டியிலிருந்து இறங்கி வேகமாக விடுதிக்குள் செல்லுமாறு சொன்னார் .
  
   அவர்களே எனது பயண பைகளை கொண்டு வந்து தந்தனர் .முன்பு விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது நான் தங்கியிருந்த அதே விடுதி அங்கிருந்த மேலாளரும் ,சில பணியாளரும் நான் ஏற்கனவே சந்தித்தவர்கள்.ஒரு அறைசாவியை தந்து போக சொன்னார்கள் .நிறைய இந்தியர்கள் அங்கே தங்கியிருந்தனர்.பெரும்பாலானோர் நான் பணி செய்த அதே நிறுவனத்தை சார்ந்தவர்கள் .

    முன்பு சிலர் விடுதியிலிருந்து  வெளியே செல்ல அனுமதித்தனர் .இப்போது விடுதியின் வரவேற்பறைக்கு அருகில் வரவேண்டாம் எனவும் அறையிலேயே இருக்கும்படியும் அறிவுறுத்தினர் .இரவில் குப்புசும்,உப்பும், மிளகுதூள் இட்ட அவித்தகோழியும் தந்தனர் .

  இரவில் தூங்கிகொண்டிருக்கும் போது அருகில் எங்கோ குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன்.பின்பு தூக்கமே இல்லை.அது பழகிய சப்தம்தான் ஆனால் இப்போது அது ஒரு பய உணர்வை தருகிறது .

    காலையில் நிறைய இந்தியர்களை சந்தித்தேன் .கடந்த பலநாட்களாக இங்கு தங்கியிருப்பவர்கள் .சிலர் ஊருக்கு செல்வதற்கும்,சிலர் வேறு முகாமிற்கு செல்வதற்காகவும் விடுதியில் இருப்பதாக தெரிந்தது.இங்கே இந்திய உணவு கிடைப்பதில்லை எனவே விடுதியில் தங்கியிருக்கும் சிலர் ஒன்று சேர்ந்து சாதமும்,கறியும்,கூட்டும் சமைப்பதாகவும் விடுதி மேலாளர் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதாகவும் அறிந்தேன் . அன்று மதிய சமையலுக்கு என்னையும் உதவி செய்யும்படியும் வேண்டினர் .
 
 அன்று அரிசி சோறும் ,கோழி குழம்பும் ,வெள்ளரிக்காய் ,காரட் ,தக்காளி ,வெங்காயம் ,காப்சிகம் சேர்த்த சாலடும் செய்தார்கள் .நான் சாலடுக்கான காய்களை நறுக்கிகொடுதேன் .

  எப்போது நான் இந்தியா செல்வேன் என எந்த தகவலும் இன்றி இருதினங்கள் கழிந்தது .விடுதி மேலாளரிடம் கேட்டேன் .உன் நிறுவன ஆட்கள் வருவார்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.மீண்டும் ஊர் செல்லும் நாளை எதிர்பார்த்து பாக்தாத் விடுதியறையில் காத்திருந்தேன் .

ஷாகுல் ஹமீது ,

04-12-2016

3 comments:

  1. ஏறக்குறைய 3 மணிநேர திகில் பயணத்தில் நாங்களும் கலந்து கொண்டு பயணித்தது போல இருந்தது விவரித்து நீங்கள் எழுதியது. இலக்கோ உத்தேசமோ நேரமோ இல்லாத ஒரு பரபரப்பான உயிர் பயம் நிறைந்த பயணம். அதில் கூட மிக அவசரம் என்று பார்த்தால் உறுதி செய்து நாள் குறித்து மிக நெருங்கிவிட்ட திருமணம் இருப்பதால் உங்களுக்கெ அது இன்றீயமையாத ஒன்று எனினும் அந்த பழுதடைந்த வண்டியை மெல்ல தள்ளி விட்டு உங்கள் வண்டி முன்னே சென்றதை அராஜகம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது உங்கள் எழுத்தில் பல இடங்களில் ஏற்கனவே வெளிப்பட்ட உங்கள் நல்ல மனதை காட்டிய இடங்களில் இன்னுமொன்று.
    வழ்வின் மிக முக்கிய தருணமொன்றின் தடங்களில் புற்ப்பட்டு செல்கையிலும் அந்த நாட்டின் உல்கட்டமைப்பை கவனித்திருக்கிறீர்கள். அதை நினைவிலும் வைத்து இப்போது எழுதீருக்கிறீர்காள். பாராட்டியே ஆகவேண்டும் இதை.
    அந்த விடுதியில் குப்பூஸ் சாப்பிட்டு விட்டு காய்வெட்டிக்கொடுத்து உணவு தயாரிக்க உதவியதும் உங்கள் stable மனநிலையை காட்டுகிறது. ஒரு crisis வரும் பொழுது இப்படி நிதானமாக இருப்பவரகளை காண்பது மிக அரிது. தொடர்ந்து வாசிக்க ஆவலாக
    லோகமாதேவி

    ReplyDelete
  2. நன்றி அக்கா ,
    தொடரும் இன்னும் .
    ஷாகுல்

    ReplyDelete
  3. இரவில் தூங்கிகொண்டிருக்கும் போது அருகில் எங்கோ குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டு அதிர்ந்து விழித்தேன்.பின்பு தூக்கமே இல்லை.அது பழகிய சப்தம்தான் ஆனால் இப்போது அது ஒரு பய உணர்வை தருகிறது .

    ReplyDelete