Sunday 20 November 2016

எக்கரையிலும் இல்லா பச்சை!!!!!(கவிதை)

தோழியும் மூத்த சகோதரியுமான லோகமாதேவி அவர்களுடைய ஒரு கவிதை அவர்களின் அனுமதியுடன் வெளியிட்டுள்ளேன் .

எக்கரையிலும் இல்லா பச்சை!!!!!

உங்களுக்கு கிடைத்திருக்கிறதா
களைத்துத் திரும்பும் மாலையில் தோட்டத்து வாயிலில் காத்திருக்கும்
ஏதோ பெயர்தெரியாப்பறவை உங்களுக்கெனெ விட்டுவிட்டுப்போன  பூஞ்சிறகொன்று?

உங்களுக்கு வாய்த்திருக்கிறதா
விசிறி வாழைகளின் கொழுத்த இலை மட்டைகளுக்குள் ஒளிந்திருக்கும் பாம்பொன்று நீட்டும் பிளவுபட்ட கருநீல நாக்கை காணும் பரவசம்?
உங்களைக்கண்டதும்  காலடியில் நுழைந்து  ஒடியிருக்கிறதா

மரவள்ளிகிழங்குகளை தோண்டித் தின்றுகொண்டிருக்கும்  சாம்பல் வண்ண  முயல்கள்?
நீங்கள் ரசித்திருக்கிறீர்களா

மழை ஓய்ந்த மறுநாள் காலையிலான கழுவித்துடைத்தாற்பொன்|ற துல்லிய நீல வானை?

பசும் இலைகளின் இடையே  பூத்திருக்கும் செம்பருத்தி மலர்களின் குருதிச்சிவப்பை?

குஞ்சுகளுடன்  தோட்டத்து ஈரமண்ணில் புழுக்களைத் கொத்தித்திண்னும் பெண்மயில்களை?

சின்னஞ்சிரு கைகளில் உதிர்ந்த முருங்கைப்பூக்களை ஏந்தியபடி கொறித்துததின்னும் அணில்களை?

     தனித்திருக்கும் முற்பகலில் கேட்டுக்கொண்டேயிருக்கும் ஏதேதோ பறவைகளின் உற்சாகக்கூக்குரல்களை?

கவனித்திருக்கிறீர்களா  தன்னந்தனிமையில்  உங்கள் காலடியில் காலம் நழுவிச்செல்வதை?

பாலெனெப்பொழியும் நிலவில் பனியில் நனைந்தபடி கடந்திருக்கிறீர்களா உறங்காத இரவுகளை?

எனினும் உங்களுக்கு இருக்குமாயிருக்கும்
இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில்  பின்னிருந்து இறுக்கிக்கொள்ள கணவனோ நண்பனோ!!

ஞாயிற்றுக்கிழமைகளின் பின் மதியத்தில் கட்டிக்கொண்டு உறங்க  ஒன்றிரண்டு குழந்தைகள்

திங்கள்கிழமைகளின் சிடுசிடுப்பை காட்டிக்கொள்ள கணவனோ மனைவியோ!!!

 தீர்ப்பு சொல்லி சமரசம் செய்து வைக்க குழந்தைகளின் சண்டைகளும்
துவைத்து  உலர்த்தி மடித்து வைக்க நிறைய துணிகளும், கண்ணீருக்கெனெ காரணங்களும்,

உங்கள் வருகைக்காய் காத்திருந்து தேனீர் தயாரிக்கும் யாரோவும்
அவரவர்க்கு அவரவர் வாழ்வு

விருப்பங்களும் விழைவுகளும்  நேர்மாறான  நிஜங்களுமாய் !!!
இனிது இனிதா ஏகாந்தம்? அல்லாமல்

இக்கரையின் இச்சைகளின் வழிதெரியும் அக்கரைப்பச்சையா எல்லாம்?-- 

லோகமாதேவி

2 comments:

  1. மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஞாயிற்றுக்கிழமைகளின் பின் மதியத்தில் கட்டிக்கொண்டு உறங்க ஒன்றிரண்டு குழந்தைகள்

    திங்கள்கிழமைகளின் சிடுசிடுப்பை காட்டிக்கொள்ள கணவனோ மனைவியோ!!!

    ReplyDelete