Wednesday 30 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 26


                              விடை கொடுத்த சதாமின் அரண்மனை

  திக்ரிதிலிருந்து பாக்தாத் செல்வது தான் கடினம் .சாலை போக்குவரத்து பெரும் சிரமமாக இருந்தது .எனது மானேஜர் ஆலன்குக் என்னை ஹெலிகொப்டரில் அனுப்ப முயற்சிசெய்கிறேன் என்றார் .அதற்கான கட்டணம் அறுநூறு டாலரை தானே செலுத்துவதாக உறுதியளித்தார் .

  ராணுவத்திற்காக பணிபுரியும் சில கம்பனிகளின் ஹெலிகொப்டர்கள் பாக்தாத்திற்கும் மற்ற இடங்களுக்கும் செல்லும் .அதில் அவர் முயற்சித்தபோது முடியாது என்றே பதில் வந்தது.

   அமெரிக்கர்களுக்கும் ,மற்ற வெளிநாட்டவருக்கும் அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட ஒரு அடையாள அட்டையை வைத்திருந்தனர் .அந்த அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் என ஆலன் குக் என்னிடம் சொன்னார். (third nation country ) நாங்கள் துணை ஒப்பந்த நிறுவனத்துக்கு கீழ் வேலை செய்வதால் எங்களுக்கு அது வழங்கப்படவில்லை .
 
  அமெரிக்க நிறுவனத்தின் கீழ் வேலை செய்த அனைவருக்கும் அமெரிக்க அரசால் அந்த அடையாள அட்டை வழங்கபட்டிருந்தது .இருந்தாலும் அமெரிக்க நிறுவன அதிகாரி வில்லியம் என்னிடம் நான் ராணுவ தலைமை அதிகாரியுடன்  பேசிப்பார்க்கிறேன் உனது திருமணம் விரைவில் இருப்பதால் நீ கண்டிப்பாக செல்லவேண்டுமென சொல்கிறேன் என சொல்லி சென்றார் .

   ராணுவ ஹெலிகொப்டரிலும் பயணம் செய்ய அந்த அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவர் என  கமொண்டோவை சந்தித்துவிட்டு  வருத்ததுடன் என்னிடம் சொன்னார். என்னால் உனக்கு உதவ முடியவில்லை ஐயாம்  சாரி என்றார் .

  ஹெலிகொப்டரில் சென்றுவிட்டால் குறிப்பட்ட தியதியில் இந்தியா சென்றுவிடலாம் என்ற எனது  இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது .ரமலான் முடிந்து இரண்டாம் ஆண்டாக பெருநாளையும்  முகாமிலேயே கொண்டாடினோம் .

  அமெரிக்கர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான  நன்றி செலுத்தும் நாளும் (thanksgiving day) அவர்கள் வெகு சிறப்பாக ,வித,விதமான சிறப்பு உணவுகளுடன் கொண்டாடினர்.ஆவியில் வேகவைத்த முழு வான்கோழி இறைச்சி இந்த பண்டிகையின் முக்கிய உணவாக இருந்தது .

  மூத்த நண்பர் கலீல் பாய் தினமும் என்னிடம் குறிப்பிட்ட தியதியில் உனது திருமணம் நடக்கும் என்பார் .நான் எனது பிரார்த்தனைகளில் உனக்காவும் வேண்டிகொள்கிறேன் என்பார் .இப்படி அவர் சொல்வது என்னை சமாதானபடுத்தவே என நினைத்து கொள்வேன் .

   டிசம்பர் 1 ம் தியதி அன்று காலை என்னை சந்தித்த கலீல் பாய் .நீ கண்டிப்பாக ஊர் செல்வாய் நான் இன்று உனக்காக அதிகமாக பிரார்த்தனை செய்தேன்.மீண்டும் உன் குடும்பத்தினர் நிச்சயித்த நாளன்று உன் திருமணம் நடக்கும் என்றார் .நான் சிரித்துவிட்டு பணிக்கு சென்றுவிட்டேன் .
 
   அன்று மூன்று கார்கள் முகாமுக்குள் வந்தன .கவச உடையும், துப்பாக்கியும் ஏந்திய காவலர்கள் படைசூழ இருந்தனர் .யாரோ முக்கிய அதிகாரி ஒருவர் வந்ததாக தெரிந்தது .

  அன்று காலை பத்துமணிக்கு  பணியில் இருக்கும் போது அலுவலகத்தில் பணிபுரியும் பிலால் என்னை நோக்கி வேகமாக  வந்துகொண்டிருந்தான். என்னுடன் பணியிலிருந்த முருகன் பாய் பிலால் உன்னை அழைக்கிறான் என்றான் .

  அவசரமாக வந்த பிலால் .திக்ரித் ஐ சுற்றியுள்ள முகாம்களில் ஆய்வு செய்யும் பொருட்டு ஒரு அதிகாரி வந்துள்ளார் .அவர் அடுத்து செல்வது பாக்தாத் ஆகவே மானேஜர் ஆலன்குக் உனது விஷயத்தை சொல்லி உன்னை பாக்தாத்வரை அழைத்துசெல்ல வேண்டுகிறார்.பாதுகாப்பு கருதியும்,வண்டியில் இடம் இல்லை எனவும் அவர் மறுக்கிறார் .

 நீ உடனே வா நீ நேரில் அவரிடம் பேசினால் அவர்களுடன் நீ செல்ல வாய்ப்பு கிடைக்கலாம் என்றான் .பிலாலுடன் அவசரமாக அலுவலக அறைக்கு சென்றேன் .ஆலன்குக் என்னைபற்றியே அவரிடம் பேசிக்கொண்டிருந்தார் .

  நான் சென்று அலுவலக வாயிலில் நின்றேன் .பிலால் கொஞ்சம் தள்ளி நின்று உள்ளே போ என சைகை செய்தான் .அதே நேரம் என்னை கண்ட ஆலன்குக்  ஷாகுல் கம் இன் என என்னை அழைத்து  அந்த அதிகாரியிடம் என்னை அறிமுகபடுத்தினார் .

  அவர் என்னிடம் இந்தியாவில் எங்கே இருக்கிறாய் ,திருமண தியதி எப்போது என விசாரித்தார் .பின் சில நிமிடங்கள் நாங்கள் மூவரும் இருந்த அந்த அறை மௌனமாக இருந்தது .உனது பயண பைகள் எத்தனை, எவ்வளவு பெரியது என கேட்டார் .என்னிடம் ஒரு அட்டைபெட்டியும் ,ஒரு சிறிய பையும் இருப்பதாக சொன்னேன் .

  பதினைந்து நிமிடத்திற்கு மேல் நான் காத்திருக்க முடியாது .சீக்கிரமாக புறப்பட்டு வா என்றார் .அக்டோபர் 25  ம் தியதி புறப்பட தாயாரான என்னுடைய பயண பை எதையும் நான் திறக்கவே இல்லை .எல்லாம் தாயாரவே இருந்தது .

  அறையை விட்டு வெளியே வந்ததும் முருகன் என்ன என கேட்டான்.என்னை அழைத்துசெல்ல ஒப்புக்கொண்டதை சொன்னதும் என்னைவிட முருகன் தான் அதிக மகிழ்ச்சியடைந்தான் .புறப்படு பாய்,சீக்கிரம் ஆடை மாற்றிகொள் .தேவையானதை மறக்காமல் எடுத்துகொள் என என்னுடன் வந்தான் .முன்பு தீ விபத்தில் கூடாரம் எரிந்து பலரும் அனைத்தையும் இழந்திருந்ததால் .பெரும்பாலானோரின் கடவுசீட்டு உடலின் ஒரு உறுப்பு போல கழுத்தில் தொங்கிகொண்டிருக்கும் .நானும் அப்படிதான் .கடவுசீட்டு எப்போதும் கழுத்தில் தொங்கிகொண்டிருக்கும் .

  என்னுடைய பைகளை அவனே வண்டியின் அருகில் கொண்டு வைத்தான். நான் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிட்டேன் .நண்பர்கள் கலீல் பாய் ,விஜயகுமார் ,கிருஷ்ணமூர்த்தி அவசரமாக வந்து அவர்களுடைய வீட்டிற்கு அனுப்ப பணம் தந்தனர் .நான் கிருஷ்ணமூர்த்தியிடம்,திரும்பி வரமாட்டேன் உன் பணத்தை நான் எடுத்துகொண்டால் என்ன செய்வாய் என கேட்டேன் .உன் கல்யாணத்துக்கு செலவு செய்ததாக நினைத்துகொள்வேன் என்று சொல்லி சிரித்தான் .

   துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பையில் என்ன இருக்கிறது என வினவினர்.எனது துணிகள் மட்டுமே என்றேன் .துப்பாக்கி ,குண்டுகள் எதுவும் இல்லையா என்றனர் .சிரிப்பையே பதிலாக சொன்னேன் .

   என்னை வண்டியில் ஏற சொல்லிவிட்டு .சில நிமிடங்களில் துப்பாக்கியும் கவச உடையும் அணிந்த ஒருவர் என்னருகே வந்து என்னை வண்டியிலிருந்து கீழிறங்க சொன்னார் .எனக்கும் ஒரு குண்டு துளைக்காத தலை கவசமும் ,ஒரு கவச உடையும் தந்தார் .அவர் தன்னை அந்த பாதுகாப்பு குழுவின் தலைவர் என அறிமுகபடுத்திகொண்டு .நாங்கள் செல்லவிருக்கும் திக்ரித் –பாக்தாத் பயணம் பற்றி ஒரு விளக்கம் தந்தார் .

  நாம் செல்லவிருக்கும் மொத்த பயணதூரம் 228 கிலோமீட்டர் .இடையில் ஒரு முகாமுக்கு சென்று மேலும் ஒருவரை இறக்கிவிட்டு அங்கிருந்து இருவரை  அழைத்து கொண்டு பாக்தாத் சென்று சேருவோம் .அதிக பட்சம் நான்கு மணிநேரமாகலாம் .நாம் பாதுகாப்பாக பாக்தாத் போய் சேருவோம் .

  உனது வண்டியின் ஓட்டுனர் ராணுவத்துக்கு நிகரான  ஒரு அதிகாரி .நமது மூன்று வண்டிகளிலும் ,செயற்கைக்கோள் தொலைபேசியும் .ரேடியோவும் உள்ளது .நீ நடுவில் உள்ள வண்டியில் இருப்பாய் .முன்பும்,பின்பும் ஒரு வண்டி தொடர்ந்து வரும் .ஏதாவது காரணத்தால் வண்டி நின்றால் கண்டிப்பாக உனது வண்டியிலுள்ள அதிகாரியின் உத்தரவு இல்லாமல் நீ கீழே இறங்க கூடாது .

   அப்படியே இறங்கினாலும் கண்டிப்பாக ஓடக்கூடாது .நான் சொல்வதை புரிந்துகொண்டாயா என கேட்டார் .ஆம் என்றேன்.ஆலன் குக்ம் ,நண்பர்களும் ஹாவ் அ ஸேப் ஜார்னி என கையசைக்க வண்டி புறப்பட்டது.அது பஜெரோ கார் பின் இருக்கையில் இரு துப்பாக்கி ஏந்திய வீரர்கள்,நடு இருக்கையில் நானும் அந்த அதிகாரியும் ,என் அருகிலும் ஒரு காவலர் துப்பாகியுடன் .

 முகாமின் வாயிலில் மூன்றாம் முறையாக வருகிறேன் .வாயிலில் நின்ற அமெரிக்க ராணுவம் எங்களை கீழே இறங்கி சோதனைக்கு பின் ஏறும்படி சொன்னார்கள் . இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு பய உணர்வையே தந்தது எனக்கு .ஊருக்கு போனால் கல்யாணம் .போய் சேருவோமா என உறுதியில்லாத அந்த கடைசி திகில்பயணம் துவங்கியது .

  இனி ஒருமுறை சதாமின் அரண்மனைக்கு வரப்போவதில்லை என கண்ணில் இருந்து மறைவதுவரை அந்த அரண்மனை வாயிலை நோக்கியிருந்தேன் .முழு வேகத்துடன் வண்டி முன் நோக்கி செல்ல துவங்கியது .

ஷாகுல் ஹமீது

27-11-2016

2 comments:

  1. என்ன ஒரு திரில்லிங்கான அனுபவம். இப்படி கல்யாணம் பண்ணிக்கொள்வதும் ஒரு சாகசம் இல்லையா தம்பி? எத்தனை எத்தனை தடங்கள்கள்? எப்படியோ பிரார்த்தனைகளுக்கு பலன் இருக்குனு தெரியுதல்லவா? சாவின் வாசலிலிருந்து வாழ்வு நோக்கிய பயணம்!!!!!! வாழ்த்துக்கள் தம்பி. ஏதோ action திரைப்படம் பார்த்தஹு போல இருக்கிறது படிக்கையில்!!

    ReplyDelete
  2. அறையை விட்டு வெளியே வந்ததும் முருகன் என்ன என கேட்டான்.என்னை அழைத்துசெல்ல ஒப்புக்கொண்டதை சொன்னதும் என்னைவிட முருகன் தான் அதிக மகிழ்ச்சியடைந்தான் .புறப்படு பாய்,சீக்கிரம் ஆடை மாற்றிகொள்

    ReplyDelete