Sunday 20 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 23


                தொடர் போரினால் நலிந்த ஈராக்
 
    திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம்.ஆகவே தாக்குதல்களும் அதிகம். உச்ச கட்ட தாக்குதல் என்றே சொல்லலாம்.அன்று இரவு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான ஒரு தீ பிழம்பு, தொடர்ந்து சில வினாடிகளுக்கு பின் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது .

  தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம்.அன்றைய குண்டு வெடிப்பில் காயமின்றி தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட் ல் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது சற்று தூரத்தில் குண்டு விழும் சப்தம் கேட்டதும் போர்க்லிப்ட் ல் இருந்து குதித்து ஓடி தப்பிவிட்டான் .

  அன்று நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம்.அருகருகே வெடித்தால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது.என்றுமில்லாத பேரமைதி அன்று பங்கருக்குள் .கமல் காதை பொத்திகொண்டே  அமர்ந்திருந்தான்.காதுக்குள் அந்த பெரும்சப்தம் கேட்டுகொண்டே இருந்தது, கூடவே காது வலியும்.
  
   ராணுவ மருத்துவகுழு எங்கள் குடியிருப்புக்கு விரைந்து வந்தனர் .ஆம் அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது .ஆனால் அனைத்தும் குடியிருப்புக்கும், உணவு கூடத்திற்க்கும் சில மீட்டர்கள் தள்ளியே விழுந்ததால் யாரும் காயமின்றி தப்பினோம் .

  மருத்துவகுழு  கமலுக்கு சில மருந்துகளை கொடுத்துவிட்டு சென்றது. இருந்தாலும் என் மனதில் இருந்த விடை கிடைக்காத கேள்வி .ஈராக்கின் அனைத்து எல்லைகள்,       (குவைத்,சவூதிஅரேபியா,ஈரான்,சிரியா,ஜோர்டான்,துருக்கி) கடல்மார்க்க வழியனைத்தும்(உம்காசர் துறைமுகம் ) அமெரிக்காவின் கட்டுபாட்டுக்குள் இருந்தது. இருந்தும் பெரும் தாக்குதல் நடத்த இராக்கிகளுக்கு எப்படி அதிநவீன ஆயுதங்களும் ,வெடிகுண்டுகளும் கிடைக்கிறது என .

   நண்பர்கள் சிலர் பேசிகொள்வதுண்டு இங்கு  பிரச்னை இல்லை என்றால் அமெரிக்காவுக்கு ஈராக்கில் வேலையில்லை அதனால் அவர்களே குண்டுகளை கொடுத்து வெடிக்க செய்யலாம் .தாக்குதலுக்கான ஆயுதங்களையும் அவர்களே கொடுக்கலாம் எனவும் .ஈராக்கின் பஸ்ரா நகரிலுள்ள எண்ணை கிணறுகளிலிருந்து பெருமளவில் எண்ணையை கப்பல்கள் மூலம் அமெரிக்கா செல்வதாகவும் சொல்லிகொள்வர்.ஈராக்கின் பல எண்ணை கிணறுகளின் ,எண்ணை எடுக்கும் ஒப்பந்தத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு சதாம் ரஷ்ய நிறுவனத்திற்கு அளித்ததும் அமெரிக்காவை சதாம் மீது முன்பே கோபம் கொள்ள செய்தது .

  அப்போது நான் முன்னணி நாளிதழில் படித்த ஒரு தலையங்கம்.எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் தனது தயாரிப்பை பற்றிய ஒரு செயல் முறை விளக்கம் அளிக்கும் .

 ஒரு மோட்டார் கார் தயாரிக்கும் நிறுவனம் தனது காரின் சிறப்பு அம்சங்களை வாடிக்கையாளருக்கு விளக்கி காண்பித்ததும் அவர் அதில் ஒரு டெஸ்ட் டிரைவ் போய் வரலாம் அதன் சிறப்பம்சங்களை விளங்கிகொள்ள .அதிகளவில் வெடிகுண்டுகளையும் ,ஆயுதங்களையும் தயாரித்து விற்பனைசெய்யும் அமெரிக்கா .அந்த ஆயுதங்களின் சிறப்பை விளக்கி காண்பிக்க பயன்படுத்திய களம்தான் ஈராக் என்றது அந்த முன்னணி நாளிதழ் .

  அதை படித்தபோது எனக்கும் அப்படிதான் தோன்றியது .அப்போது ஈராக்கின் மீது அமெரிக்க கூட்டு படைகள் தாக்குவதற்கு சொன்ன காரணம் சதாம் ரசாயன ஆயுதங்களை பதுக்கிவைத்துள்ளார் என .ஆனால் ஐக்கிய நாட்டுசபையின்  குழு ஈராக்கில் சோதனை நடத்த முதலில் சதாம் ஒப்புகொள்ளவில்லை அதுவே ஈராக்கில் ரசாயன ஆயுதம் இருக்கலாம் என உலக நாடுகளை சந்தேகம் கொள்ள செய்தது .
 
  பின்பு ஈராக்கில் சோதனை நடத்திய ஐக்கிய நாட்டு சபையின் குழு அங்கு ரசாயன ஆயுதம் ஏதும் இல்லை என அறிக்கை வெளியிட்டது .அதன் பின்பும் தனது சட்டம்பி தனத்தை காண்பிக்க அமெரிக்காவின் கூட்டு படைகள் ஈராக் மீது தாக்குதல் நடத்தி சின்னாபின்னமாக்கியது .


 உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் இருந்திருக்க வேண்டிய ஒரு நாடு ஈராக்.பல அரபு நாடுகளில் எண்ணைவளம் மட்டுமே இருக்கிறது தண்ணீருக்கு கஷ்டம்தான். நல்ல எண்ணை வளமும்,தைகிரீஸ் ,யூப்ரடீஸ் என வற்றாத இரு ஜீவநதிகள் ஓடும்  நாடு ஈராக். பண்டைய மொஸபட்டோமிய தான் இப்போதைய ஈராக் .ஜோதிட சாஸ்திரத்தை உலகக்கு அளித்தவர்கள் பாபிலோனியர்கள் என்றும் சொல்லபடுகிறது .பல ஆண்டுகள் தொடர்ந்து நட்சத்திரங்களை கவனித்து எழுதினார்களாம் .
 
  சதாம் அண்டைநாடான ஈரானுடன் பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய போர், பின்பு குவைத் ஈராக்கின் ஒரு மாநிலம் என சதாம் நள்ளிரவில் தனது படைகளை அனுப்பி குவைத்தை கைபற்ற (1991)அப்போதும் அமெரிக்கா படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தி குவைத்தை மீட்டு கொடுத்தது .

  இப்போது இந்த போர். எல்லாம் சதாமின் தவறான காய் நகர்த்தல்கள் இப்போது ஈராக் வறுமையில் இருக்கிறது .தவறான ஆட்சியாளரின் கையில் கிடைத்ததால் அங்குள்ள குடிமக்கள் வறுமை,அமைதியின்மையும் என நிம்மதியற்ற வாழ்க்கையை வாழும் நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டார்கள் .
 
 தொடர் போரினால் எந்த தொழிலும் ,உற்பத்தியும் செய்யமுடியாமல் வசதியானவர்கள் கூட நடுத்தெருவுக்கு வரவேண்டியதாயிற்று உள்நாட்டில்.ஆனால் எங்கோ இந்த போரினால் ஆதாயமடைந்து கோடீஸ்வரர் ஆனவர்களும் இருந்தனர் .அண்டைநாடுகளான குவைத் மற்றும் துருக்கியின் உணவு பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்கள்,லாரிகள் மற்றும் வாகனங்களை வாடகைக்கு விடும் இன்னபிற நிறுவனங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம் .
ஷாகுல் ஹமீது,
20-11-2016.

Sha260@yahoo.co.in

5 comments:

  1. உங்களின் போர் அனுபவங்களை மட்டுமெ எழுதாமல் உங்கள் அவதானிப்புகளையும் இதில் பதிந்திருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது, சதாமின் நாட்டில் இருக்கும் 2 நதிகள் பற்றி இப்போதுதான் அறிந்தேன். எண்ணையும் நீருமாய் ஒரு பாலை என்பது ஏதோ தேவதைக்கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது.
    கமல் தப்பித்ததும் அதிபயங்கர சப்தத்தில் காது வலியும் அறிந்துகொள்ள வேதனையாக இருந்தது. குடும்பத்தை விட்டு பிரிந்து சம்பாதிக்க வந்த இளைஞர்களுக்கு அயல் நாட்டில் எத்தனை எத்தனை துயர்கள்?. ஒரு அன்னையாய் மனம் கனத்திருந்தது. நாளை என் இரு மகன்களும் இப்படி எங்கு என்ன கஷ்டப்படுவார்களோ என்று எண்ணிக்கொண்டேன்
    11 ஆண்டுகள்த் நீடித போரைக்குறித்து மட்டுமல்லாமல் அதன் பிண்ணனியில் அமெரிக்கா வல்லரசாக நீடிக்க செய்திருந்த தந்திரங்களையும், போரினால் பெருவீதியில் வந்து நின்றவர்களையும் அதே போரினால் செல்வாக்கடைந்தவர்க்ளையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
    இன்னும் எழுதுங்கள் இனி இப்படி அயல்தேசங்களில் சென்று பணி புரியும் கட்டாயமுள்ள இளைஞர்களுக்கு உங்கள் பதிவுகள் பாடமாக இருக்கும்
    அன்புடன்
    லோகமாதேவி

    ReplyDelete
  2. நன்றி சகோதரி தொடர்கிறேன்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அழகான நடை மற்றும் விவரிப்பு, தொடர்ந்து வாசித்து வருகிறேன், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஜோதிட சாஸ்திரத்தை உலகக்கு அளித்தவர்கள் பாபிலோனியர்கள் என்றும் சொல்லபடுகிறது .பல ஆண்டுகள் தொடர்ந்து நட்சத்திரங்களை கவனித்து எழுதினார்களாம்

    ReplyDelete