Sunday 13 November 2016

ஈராக் போர் முனை அனுபவங்கள் 22

                           சதாமின் கைது

     முகாமில்   ராணுவதிற்க்கான ஒரு விற்பனை மையம் இருந்தது .அங்கு தொலைபேசி அட்டைகளும் ,உடைகளும், காமிராக்கள் போன்றவைகளும் சில அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் .பெரும்பாலனவை சீன தயாரிப்புகள்.இப்போதும் சீன பொருட்கள் தான் அதிகமாக அமெரிக்காவின் வால்மார்ட் ஐ நிறைத்திருக்கிறது . சீனாவிற்கு இன்று அமெரிக்கா ஒரு பெரிய சந்தை  .

   சில நேரங்களில் தள்ளுபடி விற்பனை நடக்கும் .குறிப்பாக நன்றி தெரிவிக்கும் நாள், (thanks giving )நவம்பர்  26 என நினைக்கிறேன் ,கிறிஸ்மஸ் பண்டிகை நாட்களில் பொருட்கள் மிக மலிவாக கிடைக்கும் .ஒருமுறை அப்படி பனியன்கள் மிக குறைந்த விலையில் விற்பனையானபோது பெரும்பாலானோர் குறைந்தது ஆளுக்கு பத்துக்குமேல் வாங்கி கொண்டனர் .

  நண்பன் கார்த்திக் ஒருநாள் இரவு பணி முடிந்து காலையில் காண்டீன் சென்றிருந்தான் .சில மாதங்களுக்கு முன்பு அவன் எழுபைத்தைந்து டாலர் விலையில் பார்த்த ஒரு ஷு பின்பு முப்பதாக குறைந்து பின்பு பதினைந்தாகி இருந்தது .
 
  அது ஒரு பிரபல முன்னணி நிறுவன தயாரிப்பு ஆச்சரியமான மலிவு விலை அது . அவன் எதுவும் யோசிக்காமல் எனக்கும் ,ஜெசிக்காவுக்கும் சேர்த்து மூன்று ஷுக்களை வாங்கி வந்துவிட்டான் .நான் யாரை கேட்டு வாங்கினாய் இதற்க்கு காசு நான் தர முடியாது என பொய் கோபம் காட்டினேன் .உன்கிட்ட யாரு  பணம் கேட்டா நண்பனுக்கு நான் வாங்கிதந்தது என்றான் .
  அப்போது புதிதாய் வந்திருந்த ஒருவன் நானூறு டலாரில் ஒரு காமிராவை வாங்கியிருந்தான் .வேறொருவன் நூறு டாலரில் ஒரு முதுகில் தொங்கவிடும் பை ஒன்றை வாங்கியிருந்தான் .நான் என்னுடன் வேலை செய்யும் பிலிப்பினோக்களை பார்த்திருக்கிறேன் .தேவையற்ற பலதையும் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் .

   வாரம்தோறும்  நாற்பத்தைந்து டாலர்கள் அனைவருக்கும் கையில் கிடைக்கும் போர்முனையில் பணி செய்வதால்.பாய் இவிங்களுக்கு  கையில் காச கண்டதும் எனத்த வாங்கதுனே தெரியாம மனம் போல செலவழிக்கானுவோ பாரு ,பைசாக்க அருமை தெரியலை என்பான் முருகன்.
  
   பணி முடிந்து தினமும் இரவு டாலரில் சீட்டாடும் ஒரு கும்பல் இருந்தது .அதை ஒரு கடமையாகவே செய்வார்கள் .இந்திய மதிப்பில் பல ஆயிரங்களை இழந்தவர்களுடன் ஒப்பிடும்போது அதிகவிலைக்கு தேவையே இல்லாத பொருட்களை வாங்கியவர்கள் பராவாயில்லை என்றே தோன்றியது.
 
    கல்கத்தாவின் அலெக்ஸ் எனும் சமையற்காரருக்கு இரண்டாயிரம் டாலர்கள் சீட்டாட்டத்தில் கிடைத்ததாக சொல்வார்கள் .அப்படியெனில் மற்றவர்கள் இழந்தது அந்த இரண்டாயிரம் என நினைத்துகொண்டேன் .
 
   பக்குபாவில் இருந்தபோது என் நெருங்கிய நண்பன் இருநூறு டாலர்களை இழந்திருந்தான் .கையில் பணம் இல்லாமல் கடன் வாங்கி சீட்டாடியது .கடன் தந்தவன் ஊர் செல்லும்போது கொடுக்க பணம் இல்லை .இனிமேல் காசு வைத்து சீட்டாடமாட்டேன் என சத்தியம் வாங்கிகொண்டு .வெங்கட்ராமன் எனும் நண்பனிடம் பணம் பெற்று கொடுத்தோம் .
 
   வெளிநாடுகளில் வேலை செய்யும் பலர் வார விடுமுறை நாட்களில் இதுபோல் பெரும்பணத்தை இழப்பதுண்டு .அது ஒரு போதை முதலில் இழந்ததை மீட்கிறேன் என தொடர்ந்து ஆடி மொத்தமாக பெரும்தொகையை இழந்து டீ குடிக்க காசில்லாமல் ஆன பின் ஒரு உறுதி இனிமேல் ஆடமாட்டேன் என .

    அடுத்தவார விடுமுறை நாளில்  உறுதி தளர்ந்து மீண்டும் பணத்தை இழப்பதும் ,மீண்டும் உறுதி கொள்வதும் தொடர்கதைகள் .

    அன்று வழக்கம் போல் வேலை செய்துகொண்டிருந்தோம் .உணவு கூடத்தில் மாலையில் வந்த ராணுவ வீரன் ஒருவன் கார்த்திக்கிற்கு நல்ல நண்பன் .கறுப்பினத்தை சேர்ந்தவன் .நீங்களும் என்னை போல கறுப்பாகவே இருக்கிறீர்கள் என சொல்லி சப்தமாக சிரிப்பான் .அதனால் தான் உங்களுடன் அன்பாக இருக்கிறேன் என சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிரிப்பு .எங்களின் கையை ,அவனது கையுடன் சேர்த்து வைத்து இரண்டும் ஒரே நிறம் நாம் சகோதரர்கள் என சொல்லி சப்தமாக சிரிப்பான் .அந்த ராணுவ வீரனை போல சப்தமாக சிரிப்பதற்கு பலரும் முயற்சிப்பார்கள் .

   கலீல் பாய் ஒருநாள் சொன்னார் .தும்ஹார மதராசி சப் லோக் பாகல் ஓஹையா.உன் ஊர்காரன் எல்லாருக்கும்  பைத்தியம் பிடித்துவிட்டதா ஏன் இப்படி கூடி நின்னு சிரிக்கானுவோ என்பார் .

     அன்று மாலை எங்களிடம் சதாமை பிடித்து விட்டோம் இங்கே அருகில் தான் பதுங்கி இருந்தான் என சாதரணமாக சொன்னான் .இன்று செய்தி வராது லெப்டினன்ட் கமான்டர் நாளைதான் இதை வெளியே சொல்வார். லெப்டினன்ட் கமாண்டர் ஐ ஒரு முறை பார்த்திருக்கிறேன் .

  எங்களுடன் பணி செய்த ஒருவனுக்கு  குண்டுவெடிப்பில் காலில் சிறு காயங்கள் அடைந்தபோது அவனை பாராட்டி ஒரு சிறு பதக்கம் (medal)கொடுத்தார்கள் .அப்போது லெப்டினன்ட் எங்கள் முகாமுக்கு வந்திருந்தார் அவர் தான் பதக்கத்தை அவனுக்கு அளித்தார் .

  அப்போது ஒரு குரல் கேட்டது .மெடல் வாங்கணும்னா குண்டடி படனும் என .

  எங்கள் முகாமின் பின் ஓடும் டைகிரிஸ் ஆற்றங்கரை ஓரமாக ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஒரு பதுங்கு குழியில் சதாமை பிடித்ததாக சொன்னார்கள் .ஆம் அது எங்களுக்கு மிக அருகில் தான் .
.
  அது சதாம் என எங்களுக்கு தெரியாது .பார்த்தாலும் தெரியவில்லை எங்களுக்கு தகவல் சொன்னவன் சொன்னதால் நம்பினோம் .பலநாட்கள் ரகசியமாக கண்காணித்து ஒருவனை மடக்கி பிடித்து விசாரித்து உறுதிசெய்தபின் ,மிக எச்சரிக்கையுடன் அந்த பதுங்கு குழியை சுற்றிவளைத்து சதாமை பிடித்தோம் என்றான் அந்த கறுத்த ராணுவ வீரன்.  
 
  மறுநாள் தொலைகாட்சியில் செய்தி வந்தது .எங்களில் பலர் அதான் எங்களுக்கு நேத்தே தெரியுமே என்ற தொனியில் பார்த்துகொண்டிருந்தனர். முதலில் சதாமை உறுதி செய்வதற்கான மருத்துவ சோதனைகள் நடந்த காட்சிகளை ஒளிபரப்பினர் .

    ஒரு நாட்டின் சர்வாதிகாரியின் இறுதி நாட்கள் மிக கொடுமையாகி போனது .சதாம் பதுங்கியிருந்த பதுங்குகுழி கற்களால் அடுக்கப்பட்டு ,மின்சாரமோ ,பிற அடிப்படை வசதிகளோ இன்றி இருந்திருக்கிறது .

   ஓராண்டுக்கும் மேலாக அதனுள் இருந்திருக்கவண்டும் .கோடையின் கடும் வெப்பத்தையும் ,குளிர் காலத்தின் குளிரையும் எப்படி தாக்குபிடித்திருப்பார்களோ ,உணவு மட்டும் வெளியே இருந்து சென்றிருக்கவேண்டும் தினமும் .பல ஆண்டுகள் தான் அதிபராக இருந்த நாட்டில்,தான் வைத்தது தான் சட்டம் என ஆட்சி புரிந்த ஒருவர் உயிருக்கு பயந்து ஓராண்டுக்கும் மேலாக பதுங்கி இருந்தது ஒரு சிறிய  புதுங்கு குழியில் .
  
  செய்தி  வந்த அன்று எங்கள் முகாமில் பணிபுரிந்த உள்ளூர் இராக்கிகள் சதாம் கைது என உரக்க கூவி ஆடி ,பாடி மகிழ்ந்தனர் .ஈராக்கின் ஷியா ,மற்றும் குர்திஷ் இனத்தவர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர் .லட்சகணக்கான குர்திஷ் மக்களை சதாம் கொன்று குவித்ததாக குற்றசாட்டு இருந்தது .

    பின்பு அமெரிக்காவின் தந்திரத்தால் ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை என தீர்பளித்து .சதாமை இசுலாமியர்களின் பண்டிகை தினமான தியாக திருநாள் அன்று தூக்கிலிட்டு கொன்றனர் .ஆனால் சதாம் ஒருமுறை நீதிமன்ற விசாரணையின்போது  நான் வீரன் என்னை தூக்கிலிட கூடாது, துப்பாக்கியால் சுட்டு கொல்லுங்கள் என கூறியிருந்தார் .
ஷாகுல் ஹமீது ,
13-11-2016.

Sha260@yahoo.co.in

5 comments:

  1. கத்தியில் நடக்கும்படியான பதிவு இது கொஞ்சம் பிசகினாலும் ஒரு தரப்பு ஆதரவு என முத்திரை பதிய வாய்ப்பிருந்திருக்கும் சாகுல்,
    சதாம் உசேன் ஒரு வரலாற்று நாயகன் (நல்லவன்) கெட்டவன் என்பது எல்லா தரப்பினருக்குமல்ல
    ஆனால் ஒரு உண்மை எந்த ஒரு நிலையும் நிலையானதல்ல என்பதற்கு சதாம் வாழ்வும் ஒரு உதாரணம்

    ReplyDelete
  2. ஆம் முத்து .சதாமுக்கு ஆதரவளர்களும் இருந்தார்கள் .வெளியில் தெரியாதபடி .
    ஷாகுல்

    ReplyDelete
  3. வழக்கம் போல நல்ல பதிவென்றாலும், இது ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க பதிவு தம்பி. முடிந்தால் சதாம் பிடிபட்ட தேதியையும் சேர்த்து விடுங்கள். இது ஒரு ஆவணமுமல்லவா? மிக பிரபலமான இப்போது மத்திம வயதிலிருக்கும் அனைவரும் அறிந்த, இனி வரும் தலைமுறையினருக்கு முற்றிலும் புதியதான ஒரு நிகழ்வென்பதால் தேதி குறிப்பிட்டு விடுங்கள். மற்றபடி அயல்வாழ்வின் பன்முகங்களைக்காட்டும் உயிரோட்டமுள்ள பதிவு உங்களுடையது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தியதியை சேர்த்து விடுகிறேன் அக்கா .
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. எங்களின் கையை ,அவனது கையுடன் சேர்த்து வைத்து இரண்டும் ஒரே நிறம் நாம் சகோதரர்கள் என சொல்லி சப்தமாக சிரிப்பான் .

    ReplyDelete