Sunday 23 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 17


நட்பை விலக்கி சென்ற பாயல்


       எங்கள்  முகாமில் ஆன்றனி என ஒரு கோவாவை சேர்ந்த சைக்கோ ஒருவன் இருந்தான் .கார்த்திக்கிற்கு ஒருநாள் அவனுடன் கொஞ்சம் வாய்த்தகராறு .ஆன்றனி கொஞ்சம் குடித்திருந்தான் .போர்முனையில் மது அனுமதிஇல்லை தான்.இருந்தாலும் கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கி டாங்கர் லாரி ஓட்டுனர் வாயிலில் உள்ள கடும் சோதனையை தாண்டி தினமும் சில மது பாட்டில்களை உள்ளே கொண்டு வந்துவிடுவான் .

  தகராறு நீண்டபோது  ஆன்றனி போதையில் நீங்கள் தினமும் மிலிட்டரி பொம்பளைய உள்ள வெச்சி மணிக்கணக்காக பேசிகொண்டிருக்கிறீர்கள் என்றான் .கார்த்திக் அவனை கெட்ட வார்த்தையால் திட்டினான் .ஆம் நாங்கள் பேசுகிறோம் சில நேரங்களில் நீங்களும் பலர் வந்து பேசுகீறீர்கள்.அது பொது இடம் அதில் என்ன தப்பு என தகராறு நீண்டு விட்டது .
       அவன் வெறுப்பில் ஏதோதோ திட்டினான் மற்ற கோவா அன்பர்கள் எங்களிடம் அவனுடன் பேசாதீர்கள் என சொல்லிவிட்டு அவனை அழைத்து சென்றனர் .அதன் பிறகு மீண்டும் போதை ஏற்றியவன் தன் கைகளில் கத்தியால் கிழித்து கொண்டான் .
   ஆன்றனி  இரவில் ஒரு மணிக்கு மானேஜர் டெர்ரி ஆண்டேர்சனின் அறை கதவை தட்டினான் .நள்ளிரவில் பதட்டத்துடன்  டெர்ரி ஆண்டர்சன் கதவை திறந்தவுடன் ஐ வான்ட் டு டாக் டு யு என்றான் ஆன்றனி . என்ன சொன்னான் என்றே தெரியவில்லை .கைகளில் காயத்தை பார்த்தவர் அவனை அடுமனைக்கு கொண்டு சென்று விசாரித்துவிட்டு அவனை கூடாரத்திற்கு செல்லும்படி எச்சரித்து அனுப்பினார் .
     மறுநாள் டெர்ரி ஆண்டெர்சன் என்னிடம் .நீங்கள் இனி அந்த ராணுவ வீராங்கனையை கூடாரத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றார் .உள்ளே அனைவரும் ஆண்கள்  அதனால் வெளிய சந்திக்கும் போது  பேசிக்கொள்ளுங்கள் என்றார் .

    அப்போதுதான் தெரிந்தது ஆன்றனி மட்டுமல்ல மற்ற சிலரும் பாயல் எங்களுடன் பழகியதில் ,பொறாமையும் ,எரிச்சலும் கொண்டிருந்தனர் என.மனித மனம் அப்படித்தான் இருக்கிறது .எப்படி இனிமேல் பாயலிடம் எங்கள் கூடாரத்திற்கு வராதே என சொல்வது என இருந்தபோது,  கார்த்தி என்னிடம் கேட்டான் ஷாகுல் பிரதர் எப்படி அக்காட்ட சொல்ல போறீங்க என கேட்டான்.நீயே சொல் என அவன்  என்னிடம் சொல்லாமல் சொன்னான். கார்த்தி விடுமுறையில் ஊர் செல்லும் நாளாக இருந்தது மறுநாள் .

      அடுத்த சில தினங்கள் பாயல் வராததால் மனம் கொஞ்சம் லேசாகியிருந்தது .பலமுறை சொல்ல வேண்டிய வார்த்தைகளை மனதுக்குள்ளேயே சொல்லி பார்த்துக்கொண்டேன் .இது போன்ற சூழ்நிலைகளில் கால அவகாசம் கிடைப்பதும் நன்றே .பின்பு சந்தித்த போது நடந்த ஆன்றனி,கார்த்திக் சண்டையையும் ,கூடாரத்திற்குள் நீங்கள் வரக்கூடாதென மானேஜர் சொல்லியதையும் சொன்னேன் .என் தலை கவிழ்ந்தே இருந்தது சொல்லும்போது  அவள் விழியை என்னால் சந்திக்க இயலவில்லை .
   
  பின்பு அக்கா என்றழைத்து அவள் முகத்தை பார்த்தேன் .அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை .சாதரணமாகத்தான் இருந்தாள்.அன்று அது பகல் பொழுது போய் வருகிறேன் பின்னர் சிந்திப்போம் என சொல்லிவிட்டு சென்றாள்.
   அடுத்த சில தினங்களுக்கு பிறகு வந்து மீண்டும் கூடாரத்திற்குள் வந்து அமர்ந்து பேசிகொண்டிருந்தாள் .எப்போதுமே வராத டெர்ரி ஆண்டர்சன் உள்ளே வந்தார் .எதுவும் சொல்லாமலே சென்றுவிட்டார் .அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உணவுகூடத்தில் பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீராங்கனையுடன் வந்தார் .அவள் பாயலிடம் நீங்கள் கூடாரத்திற்குள் வருவதை தவிருங்கள் என நாகரீகமாக சொன்னாள்.இங்கே அனைவரும் ஆண்கள் என.

   அதை சற்றும் எதிர்பாராத பாயல் உடனே எழுந்து சென்றுவிட்டாள் .மனம் வலித்திருக்கும் ,கவலைபட்டிருப்பாள்.எங்களுக்கும் அது சற்று கடினமாகி விட்டது .மறுநாள் இரவுஉணவின் போது சந்தித்த போது பாயலின் முகத்தில் அந்த வலியும் ,கவலையும் தெரிந்தது .இருந்தாலும் பொய்யாக சிரித்துகொண்டே பேசினாள் .ஐ யாம் ஓகே என்றாள் .

     உங்கள் மானேஜர் பெண் மட்டும் உள்ளே வரக்கூடாது என்கிறார்.ஆனால் பலர் கூடாரத்திற்குள் நீல படம் பார்க்கிறார்கள்.முகாமில் பலர் திருட்டுதனாமாக மது அருந்துவதும் ,எல்லைமீறி நடப்பதையும் ஏன் உங்கள் மானேஜர் ஒன்றும் கேட்பதில்லை என கேட்டாள்.

      தீடிரென வரக்கூடாது என்றதில் மிகுந்த வருத்தமும் ,கவலையும் இருந்தது .அதன் பின் எப்போது உணவு கூடத்திற்கு வந்தாலும் ஒரு சில நிமடங்களாவது சந்தித்து பேசிவிட்டு செல்வது வழக்கம் .
    ஒருநாள் தன்னுடன் பணிபுரியும் மூத்த அதிகாரி ,உடன் பணிபுரிந்த பெண்ணுடன் வந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை நான் அவர்களிருந்த மேஜையில் சென்று சந்தித்தேன் .அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள் .திஸ் இஸ் ஷாகுல் மை க்ளோஸ் பிரன்ட் என அவர்களிடம் சொன்னாள் .

   அதன் பின் சில தினங்களுக்கு பின் இரவு உணவுக்கு வந்த பாயல் ஷாகுல் சாப்பிட்டபின் உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும் .உணவு கூடத்திற்கு வெளியே என்னை கண்டிப்பாக சந்திக்கவும் என்றாள் .

   உணவு கூடத்திற்கு வெளியே மேசையுடன் கூடிய மர நாற்காலிகள் இருக்கும் அதில் அமர்ந்திருந்தேன்.இரவுணவு சாப்பிட்டு வந்த பாயல் என்னருகில் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.ஷாகுல் நாளை முதல் என்னை சந்திப்பதையும்,பேசுவதையும் நிறுத்திவிடு என்றாள் .எனக்கு அதிர்சியாக இருந்தது .

       எதுவும் கேட்க தோன்றவில்லை தலையசைத்து விட்டு நேராக குடியிருப்பு கூடாரத்திற்கு சென்று விட்டேன் . அங்கிருந்த ஒருவன் என்னிடம் கேட்டான் ஷாகுல் என்னாச்சி என .ஏன் என கேட்டேன் உன் முகம் மாறி இருக்கிறதே எப்போதும் நீ சிரித்த முகத்துடன் இருப்பதை தான் நான் பார்த்திருக்கிறேன் என்றான் .ஒன்றும் இல்லை என்றேன் .
   எப்படி கண்டிபிடித்து விட்டான் என தோன்றியது .முகம் மாறியிருந்தால் தாய் விரைவில் கண்டுபிடித்து விடுவாள். இப்போது சுனிதாவும் என்ன சாரே மூஞ்சி சரியில்லையே என்னாச்சி என .
  ஏன் அப்படி சொன்னாள் என யோசித்தேன் ஒரு காரணமும் புரியவில்லை.லோகேஷிடம் சொன்னேன் பாயல்  நாளைமுதல் ,பேசேவோ ,பார்க்கவோ வேண்டாம் என சொல்லி விட்டாள் என .ஏன் என கேட்டான் .தெரியாது என்றேன் .
    
  அடுத்தமுறை பாயல் வரும்போது அவளிடம் கேட்டு விடவேண்டும் என நினைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன் .மறுநாள் இரவில் பாயலை பார்த்தேன் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் நான் உங்களுடன் பேச வேண்டும் என்றேன் .

   முந்தைய நாள் இருந்த அதே மர நாற்காலியில் அமர்ந்திருந்தேன் .ஷாகுல் சொல் என்ன விஷயம் என கேட்டாள் .ஏன் இப்படி தீடிரென பார்காதே ,பேசாதே என்கிறீர்கள் என்றேன் .
  
    மழுப்பலான காரணங்களை அடுக்கினாள் எதற்காகவோ தவிர்க்கிறாள் என புரிந்து கொண்டேன்.இன்று தான் கடைசி இனிமேல்  எப்போதும் உங்கள் முன்னால் வரமாட்டேன் என சொல்லி விடைபெற்றேன் .
   கார்த்தி விடுமுறை சென்று வந்ததும் கேட்டான் அக்கா எப்படி இருக்கிறாள் என .விபரங்களை கூறினேன் .அன்று உணவு கூடத்தில் உணவு வழங்கிகொண்டிருந்த கார்த்திக்கிடம் .எப்போது வந்தாய் ,நலமா என பாயல் விசாரித்தபோது .கார்த்தி பதிலேதும் சொல்லவில்லை .
    நான் கார்த்திக்கிடம் சொன்னேன் .நீ அவளிடம் பேசு என்னிடம் தானே பேசக்கூடாது என்றாள் என்றேன் .ஷாகுல் உன்னால தான் அந்த நட்பு கிடைத்தது  உனக்கே இல்ல இப்ப .நான் மட்டும் ஏன் பேச வேண்டும் என்றான் .
 
   பாயலின் நல்ல நட்பு இப்போது ஒரு நினைவாக மட்டுமே எஞ்சி விட்டது .அதன் பின் ஈராக்கின் பணி முடிந்து அமரிக்கா செல்லும் போது கார்த்தியை சந்தித்து விடை பெற்று சென்றாள்.

  அதன் பின் நான் ஊர் வந்து என் திருமணதிற்கு முன் என் திருமண அழைப்பிதழையும்,திருமணதிற்க்குபின் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் பாயலுக்கு மின்னஞ்சல் செய்ததேன் .ஒரு வாழ்த்து கடிதம் மட்டும் அனுப்பினாள் .

  

  பாயல்  அவளாகவே வலிய வந்து பழகியவள் ,நட்பை அவளாகவே வளர்த்துகொண்டாள் .அதுபோலவே விலகியும் சென்று விட்டாள்.



ஷாகுல் ஹமீது ,
23-10-2016

6 comments:

  1. நல்ல நட்பு தேவையில்லாமல் காயப்பட்டு பின் விலகிவிட்டது . அவ்ருத்தமாக இருக்கிறது ஷக்குல். ஆர்த்தி பாவம். எத்தனை களங்கமின்றி எல்லாருடனும் இயல்பாக நல்ல புரிதலுடன் இருந்த பெண்? ஆண்டனி மட்டுமல்ல இன்னும் பலர் இப்படி இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் எல்லாரும் மனநல சிகிழ்ச்சை எடுத்துக்கொள்ள வேண்டியவர்களே. என்னவோ மிக கனமாக இருக்கிறது மனசெல்லாம் இந்த பதிவை வாசித்தபின்னர். ஆண்பெண் நட்புடன் இருப்பதையும் கூட இன்னும் நாம் சரியான புரிதலில்லாமல் பார்க்கிறோமெனில் என்ன நாம் முன்னேறி இருக்கிறோம்? வருத்தமாக இருக்கிறது ஷாகுல்.ஆர்த்தி அபப்டி மனதைக்கல்லாக்கிக்கொண்டு விலகி இருந்தாலும் இன்றும் உங்கள அனைவரையும் நினைத்துக்கொண்டேதான் இருப்ப்பாள்

    ReplyDelete
  2. நேரடியாக பேச இயலாமை ஏற்படும்போது மௌனமாக வந்தது முதலுதவி மட்டும்தான் மற்றபடி காயத்தின் காரணமறிய நீங்க முயற்சித்திருந்தால் அது அனுபவங்களை வேறு விதமாகவும் மாற்றியிருக்கலாம் சாகுல்..பெண்கள் எப்போதும் உணர்வுப்பூர்வமாக பழக கூடியவர்கள் உணர்ச்சிவசத்திற்கும் சொந்தக்காரர்கள்தான் ... பின்னால் நீங்கள் காரணமறிய முயற்சித்தீங்களா சாகுல்

    ReplyDelete
  3. முழுதும் படிச்சிட்டேன் நண்பா ,

    என்ன மிஸ்சாகுது என யோசித்தேன் , நிலக்காட்சிகள் , நுண்விவரங்கள் இல்லாமல் வெறும் சம்பவ தொகுப்பாக போய்விட்டது ,மும்பையில் ஒரு பேக்டரியில் வேலை செய்தால் என்ன அனுபவம் கிடைக்குமோ அதுதான் இந்த தொடர் வழியாக கிடைத்தது .

    பாக்தாத் மக்கள் , அமரிக்க ராணுவ மனநிலை , கிளைமேட் ,சக ஊழியர் மனோநிலை என எத்தனையோ சொல்லியிருக்கலாம் .

    அந்த மனநலம் பிறழ்ந்தவர் குறித்த பகுதி நன்றாக இருந்தது , உணவருந்த ஏன் ஷூ போட வேண்டும் என்ற நுண்தகவல் மிக மிக்கியம் அல்லவா ?

    இலக்கிய வாசகர் என்பதால் வந்த எதிர்பார்ப்பு .

    ReplyDelete
    Replies
    1. சதாமின் அரண்மனையில் எனும் பதிவில் கிளைமேட் ,பற்றி எழுதியிருந்தேன் .
      விடுபட்ட தகவல்களை தொகுக்க முயற்சிக்கிறேன் .
      நன்றி
      ஷாகுல் ஹமீது

      Delete
    2. தொடர்ந்து வாசிக்கத்தக்க சம்பவங்களால் பின்னிப்பிணைந்திருக்கிறது பதிவு. உங்களை தொடருகிறேன்.

      Delete
  4. திஸ் இஸ் ஷாகுல் மை க்ளோஸ் பிரன்ட் என அவர்களிடம் சொன்னாள் .

    ReplyDelete