Sunday 4 September 2016

சவோனா (இத்தாலி )

     கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் இத்தாலியின் பழமையான நகரமான சவோனாவிற்கு வந்தேன் .
 2010 ல் ஒருமுறை வந்தபோது நல்ல குளிர் காலம் அப்போது,நானும் ,ஹைதராபாத்தை சார்ந்த ராஜு ,கேரளாவின் அனில்குமார் கூரியாட் (கேரளாவில்  எல்லோருக்கும் ஒரு வீட்டு பெயர் இருக்கும் தடத்தருகத்து வீடு, ஆற்றுமேலே வீடு ,கீழே வீடு என)மாக வெளியே சென்றோம் .
      கப்பலில் இருந்து நடந்தே வந்தோம் ஸி மேன் கிளப் ஐ தேடி .அங்கு  தொலைபேசி அழைப்பு கிடைக்கும் என்றார்கள் கொஞ்சம் மலிவான கட்டணத்தில்  .வரும் வழியில் யார்டில் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ரயில் பெட்டிகளை பார்த்தேன் எங்கள் கப்பலில் ஏற்றி மும்பையில் இறக்குவதற்காக .
   பின்பு அதே ஆண்டு அக்டோபரில் தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது நாங்கள் ஏற்றிவந்த ரயில் பெட்டியோ என்ற எண்ணம் மின்னல் போல் வந்து சென்றது .என்னுடன் பயணித்த நண்பன் ஜெகனிடமும் அதை சொன்னேன் .
    ஸி மேன் கிளப் பூட்டியிருந்தது .கதிரவனை வெளியே வரவிடாமல் மேகக்கூட்டங்கள் சூழ்ந்திருந்த காலை வேளையில் குளிருக்கு இதமான கோட்டுகளை அணிந்து சென்றிருந்தோம்.மக்கள் நடமாட்டம் குறைந்த கடை வீதி ஒரு கேரள முக சாயலை கொண்ட பெண்  வேகமாக சென்றுகொண்டிருந்தாள் காலையில் அலுவலகத்திற்கு செல்பவளாக இருக்கலாம் .நான் அனில்குமாரிடம் நின்றே நாட்டு காரியானு என்றேன் அவள் திரும்பி பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தபோது அது உறுதியானது. .
     வங்களாதேஷத்து நாட்டை சேர்ந்தவர்கள் இங்கு வியாபாரம் செய்கின்றனர் .ராஜுவும் ,அனில்குமாரும் அதிக விலைக்கு தொலைபேசி அட்டைகளை வாங்கி வீட்டிற்கு அழைத்தனர் .நேரம் குறைவாக இருந்ததால் விரைவில் கப்பலுக்கு திரும்பிவிட்டோம் .வரும் வழியில் நான் கண்ட காட்சி திகைப்படைய செய்தது .
        என் முன்னால் ஒருவர் நாயுடன் சென்றுகொண்டிருந்தார் .இங்கெல்லாம் பலருக்கு நாய்தான் துணை .சுத்தமாக கழுவிவிட்டதுபோல இருக்கும் சாலையோரத்தில் நாய் மலம் கழித்தது.அந்த நபர் தன் குளிர் கோட்டிற்குள்ளிருந்து எதையோ எடுப்பதை கண்டவுடன் நான் நின்று விட்டேன் .என்னுடன் வந்தவர்கள் முன்னால் போய்விட்டனர் .
   அவர் மெல்லிய கையுறையை அணிந்து நாயின் மலத்தை அள்ளி தான் கொண்டுவந்திருந்த வேறொரு பாலிதீன் பையில் போட்டு அதை குப்பை தொட்டியில் போடுவதை கண்டேன் .தன் ஊரையும்,சாலையையும் சுத்தமாக வைத்துகொள்வது நம் கடமை இது உணர்வுக்கு வந்தால்தான் செயலுக்கும் வரும் .அதை உணர்ந்தவர் அவர் .
    நாகர்கோயிலில் தண்ணீர் தொட்டி சாலையில் என் சகோதரி மற்றும் சுனிதாவின் அம்மாவும் குடியிருந்த கட்டடத்தின் முன் தினமும் காலையில் வீட்டில் வாசலில் நாயின் மலம் கிடக்கும் .ஒருநாள் காலையில் தான் கண்டேன் பக்கத்துக்கு வீட்டுகாரர் தன் நாயை அங்கு சங்கிலியுடன் மலம் கழிக்க பிடித்துகொண்டு நிற்பதை .
     இப்போது சவோனா வந்தபோது செப்டம்பர் மாதம் கோடைகாலம் பாதி முடிந்திருந்தது .நல்ல வெயில் .எனக்கு வேலை இல்லை வெளியே போக அனுமதிபெற்றேன்  மாலை நான்கு மணிக்கு திரும்பினால் போதும் என்பதால் சாமதானமகவே புறப்பட்டேன் .தெரிந்த இடமாதலால் தனியாக செல்லவே விரும்பினேன் .
  நீண்ட நடைக்கு பின் துறைமுக வாயில் ,வெளியே வந்ததும் கூட்டமாக மீன்பிடிபடகுகள் நிரம்பியிருக்கும் .உணவுவிடுதிகள் ,கேளிக்கைகள் எல்லாம் அருகிலேயே .ஆனால் அவை மாலைவேளை தான் துவங்குகிறது  அப்போது நேரம் 11.20 என அருகிலிருந்த மணிகூண்டு காட்டியது .
   நான் வெளியே வந்தபோது எனக்கு முன்பாகவே வெளியே வந்த என்னுடன் பணிபுரியும் சூர்யநாராயண பாரி இரு இந்தியர்களிடம் பேசிகொண்டிருந்தான் .
   ஷாகுல் தும்ஹாரா காவ் வாலா(உன் ஊர்காரர்கள்) என்றான் .அவர்களிடம் பேசினேன் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் கடந்த இருபது வருடமாக இங்கு பணி செய்வதாகவும் ,மற்றவர் கேரளாவிலிருந்து ஓராண்டுக்கு முன் வந்ததாகவும் சொன்னார் .
   நானும் பாரியும் நடந்தோம் கடைவீதி மும்பை வி.டி ரயில் நிலையம் அருகிலுள்ள டி.என் சாலையை நினைவு படுத்தியது ஆனால் அதுபோல் மக்கள் நெரிசலில்லாத கடைவீதி .முன்பு கண்ட அதே பங்களாதேஷிகள் நடத்தும் சிறு வணிக நிறுவனம் .பாரிக்கு ஊர் செல்வதற்குரிய பயண பை வாங்க வேண்டியிருந்தது துணைக்கு என்னையும் அழைத்தான் . .இரண்டு கடைகளில் தேடியபின்பு ,எனக்கு வணிக வளாகங்களில் வீணாக பொழுதை கழிப்பதில்  விருப்பமில்லாததால் நான் அவனுடன் செல்ல மறுத்தேன் .
     ஊர் சுற்றலாம் என என்னுடன் அவனும் வந்தான் .சாலைகளில் நடக்கதொடங்கினோம் .பேருந்து நிறுத்தத்தின் அருகில் ஒரு பெரிய மணியை தூக்கி செல்வது போன்ற மிக நேர்த்தியாக வடிவமைக்க சிலைகளை பார்த்தேன் .அதில் எழுதியிருந்த மொழி புரியாததால் அது என்னவென்று தெரியவில்லை .படத்தில் இருப்பதை தெரிந்தவர்கள் படித்துவிட்டு சொல்லுங்கள் .
  அடர்ந்த மரங்கள் நிறைந்த பூங்காவில் சிமென்ட் நாற்காலிகளில் சிறிது நேரம் அமர்ந்தோம் .பாரி தனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டுமென சொல்லி விடைபெற்றான் .சாலை அமைப்பும் ,கடைவீதிகளும் இந்த நகரின் பழமையை பறைசாற்றுகின்றன .அருகிலேயே புதிய நகரம் உருவாக்கியிருப்பார்கள் என தோன்றியது .சாலையின் முடிவில் கடற்கரை இருக்கலாம்.
    அடக்கமுடியாத உந்துதல் சிறுநீர் கழிக்க .அருகில் இருந்த பழக்கடையில்   நான் சாப்பிட கொஞ்சம் வாழைப்பழம் வாங்க பழக்கடைக்கு சென்றேன் புன்னகயுடன் வரவேற்றாள் இளம்பெண் .ஆங்கிலம் தெரியாததால் வாழைப்பழத்தை காட்டி வேண்டும் என்றேன் .கழிவறை இருக்கிறதா எனவும் சைகையாலே கேட்டேன் .எப்படியோ என் அவசரத்தை புரிந்துகொண்டவள் .கடையின் உள்புறம் அழைத்துசென்று கழிவறையை காட்டினாள் . தாங்க முடியாத இயற்கை துன்பத்திலிருந்து விடுதலை பெற்றேன் . முன்ஜோ க்ராசிஒஸ் என (நன்றி)கூறி வாழை பழதிற்க்கான பணம் கொடுத்தேன்.மிக சுத்தமாக பராமரிக்கப்படும் கழிவறை.நம்மூரை தவிர அனைத்து இடங்களிலும் பொது கழிவறைகள் மிக சுத்தமாக பராமரிக்கபடுகிறது .2013 ம் ஆண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்றபோது பெண்கள் கழிவறையும் சுத்தமாக இருப்பதை சுனிதா உறதிசெய்தாள் .அதிலும் குறிப்பாக சிறுவர்களுக்கு சிறுநீர் கழிக்க அவர்களது உயரத்திற்கு ஏற்ப தாழ்வான கழிவறைகள் .இது பொது இடங்களில் தான் .
    மீண்டும் சாலையில் நடக்க தொடங்கினேன் அது எங்கோ போய்முடியும் என தோன்றியதால் கடைசிவரை நடந்தேன் .வழியில் இந்திய குடும்பம் ஒன்றின் புன்னகையை ஏற்றுக்கொண்டேன் .சாலையின் இறுதியில் அழகிய கடற்கரையை கண்டுவிட்டேன் விட்டேன் .
      கடற்கரை முழுவதும் நல்ல கூட்டம் .நல்ல வசதியான குளியலறை ,நிழற்குடை ,சிறியபடுக்கை,கைபந்து ,நீர் விளையாட்டுகளுடன் அடங்கிய மையங்கள் கடற்கரையை ஒட்டி வரிசையாக உள்ளன .எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என நான் விசாரிக்கவில்லை .நாய்களுடன் வருபவர்கள் அவைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பட்டியில் விட்டுவிட்டு செல்லவேண்டும் .நாய்கள் கடற்கரையில் அனுமதிஇல்லை .
  இறுதியில் ஒன்று கட்டணமில்லா பொது மையமும் இருந்தது .தரைவிரிப்பு மற்றும் வேண்டியதை கொண்டுவந்து மக்கள் அங்கும் இருக்கிறார்கள் .குழந்தைகளும் ,கன்னியரும்,தாத்தா ,பாட்டி என  கடற்கரையின் வெட்ட வெளியில் உடைமாற்றி கீரீம்களை உடலில் தடவி சூரிய குளியல் எடுக்கிறார்கள் .அனைவரும் உள்ளாடை மட்டுமே அணிந்துள்ளனர் அதிலும் சிலருக்கு மேலாடையே  இல்லை .
  குளிர் காலத்தில் நகம் ,முடி என அனைத்தையும் மறைத்தே பழகியவர்கள் வெயில் வந்ததும் ஆடை களைந்து உடலில் வெயில்பட மகிழ்கின்றனரோ.அனேகமாக அனைவருக்கும் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது .கடலில் இறங்கி நீராடிவிட்டு வெயில் படும்படி விரிப்பில் அமர்ந்தும் ,படுத்தும் வாசிக்கிறார்கள் .
  நானும் ஆடை மாற்றி கடலில் இறங்கினேன் .கரையில் கழற்றிவைத்த கைகடிகாரம் ,பணப்பை ,ஆடைகள் காலணியை யாரும் எடுத்துவிடுவார்களோ என்ற பயமின்றி நிம்மதியாக கண்களை மூடி மிதந்து கொண்டிருந்தேன் கடல் நீர் லேசான குளிர்ச்சியுடன் இருந்தது .
     கடலின் அடிபகுதியில் கிடப்பவை தெரியுமளவுக்கு  சுத்தமாக தெளிவாக இருந்தது கடல் ,சவோன நினைவாக ஒரு சிறிய சங்கை எடுத்து கொண்டேன்.வயதான ஒரு ஜோடி கையில் சிறிய மிதவையுடன் நீரில் வெகுநேரம் மிதந்து மகிழ்ந்துகொண்டிருந்தனர்.அனுபவிக்க பிறந்தவர்கள்  இங்குள்ள மக்கள் .
  ஐநூறு மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கோபுரம் .அதிலிருப்பவர் தனது கடமையை சரியாக செய்கிறார் .தூரத்தில் ஒரு பெரிய படகும் கண்காணிப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளது .இந்த மக்கள் கூடும் பகுதி மட்டும் பெரிய அலைகள் வாராதபடி தடுப்புசுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது .குப்பைகளை எங்கும் காணமுடியவில்லை ஒரு 3 வயது குழந்தை தான் சாப்பிட்டபின் ஐஸ் கிரீம் அட்டையை பொறுப்பாக குப்பை தொட்டியில் போட்ட காட்சி இன்னும் என் கண்களில் இருந்து அகலவே இல்லை .
    தரைவிரிப்புப்புகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் நான்கைந்துபேர் கடற்கரையில் சுற்றி வருகின்றனர் .வங்காளதேசம் அல்லது  நேபாளத்தை சார்ந்தவர்களாக இருக்காலாம் ,ஹிந்தியோ ,ஆங்கிலமோ அவர்களுக்கு தெரியவில்லை .
    பின்பு நன்னீரில் குளித்து ஆடைமாற்றி திரும்பி போக மனமில்லாமலே அங்கிருந்து வெளியேறினேன் .கடற்கரையை ஒட்டிய பூங்கா வழியாக நடந்தால் ஒரு பழங்கால மியூசியம் ஒன்றுள்ளது .பசுமையான புல்வெளியும் அகழியும் அதை தாண்டினால் மியூசியம் அங்கே வாயில் காவலரோ ,கட்டண வசூலிப்பு மையமோ எதுவும் இல்லை.கண்காணிப்பு காமிரா மட்டுமே உள்ளது .பழமையான கட்டிடம் .பெரிய திரையும்,திறந்தவெளி திரைப்பட அரங்குபோல  இருக்கைகளும் இருந்தன இரவில் பொழுதுபோக்கு ஏதாவது இருக்கலாம் .
  கட்டிடத்தின் மேலே சென்றேன் .கடல் மார்க்கமாகவோ சாலை வழியாகவோ எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் பீரங்கிகள் இருந்தது 15 ம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டுகள் இருந்தது .மேலிருந்து பார்க்கையில் சவோனா நகரின் பாதி தெரிகிறது .சற்று அருகிலேயே துறைமுகமும் எனது கப்பலும் நிற்பதை கண்டேன் சாலையில் நீண்ட நடைக்குபின் கடற்கரையை அடைந்த எனக்கு வியப்பாக இருந்தது .
  ஏதிரிலிருந்த கோபுரத்தின் கடிகாரம் மூன்றரை மணி ஆகிவிட்டது என என்னை நினைவுபடுத்தியதால் கீழிறங்கி சென்றேன் .கப்பலுக்கு செல்வதற்கான குறுக்கு வழியையும் பார்த்துக்கொண்டேன் .
   வரும் வழியில் ஸ்கேட்டிங் விளையாடுவதரற்க்கான மைதானம் ஒன்று கண்டேன் மாணவர்கள் பிரேக் இல்லாத சர்கஸ் மிதிவண்டியுடன் சாகசங்கள் நிகழ்த்தி கொண்டிருந்தனர் .அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன் .அவர்களிடமிருந்த மிதி வண்டியை வாங்கி ஒரு சுற்று சுற்றி எனது மாணவ பருவத்தை மீட்தெடுத்தேன் .
  இந்த வருடம் முதல் எந்த ஊருக்கு சென்றாலும் அதன் நினைவாக ஒரு பொருள் சேகரிக்க துவங்கினேன் .ரோம் நகரை போல அமைப்புள்ள ஒன்றை வாங்கிகொண்டேன் .நண்பர் புருசோத்தமனுக்கு வேண்டிய நொறுக்கு தீனிகள் சில இந்திய பொருட்கள் கிடைக்கும் கடையில் வாங்கிகொண்டேன் .
    சரியாக நான்கு மணிக்கு கப்பலுக்கு திரும்பிவிட்டேன் .ஒரு புதிய ஊரை கண்டுகொண்ட மகிழ்ச்சி ,மனம் நிறைவான ஒரு நாள் .
ஷாகுல் ஹமீது

31-08-2016
 படங்கள் பின்னர் பதிவேற்றபடும் 

2 comments:

  1. கடற்கரையை கண்டுவிட்டேன் விட்டேன் .
    கடலில் கடற்கரை சுகமா

    ReplyDelete