Saturday 9 July 2016

        அக்கபுல்கோ கடலில் இருவரை காப்பறினோம் 
          ==============================================

              காலை பத்து  மணிக்கு மெக்ஸிகோவின் அக்கபுல்கோ(acapulco)கரையின்  அருகாமையில்  கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார்கள் .
     அக்கபுல்கோ மிக அழகிய ஊர் ,மனதை கவரும் கடற்கரை ,சுற்றுலா பயணிகள் எப்போதும் நிறைந்தே இருக்கும் ஊர் . திருநெல்வேலியை போலவே எப்போதும் இங்கு நல்ல வெயில்.
   பலமுறை இங்கு வந்துள்ளேன் .நடக்கும் தூரதில்லேயே நகரம், கடற்கரை ,உணவு விடுதிகள் என.
     சனிக்கிழமை மாலை என்றால் இங்குள்ள மக்கள் மிதமான மதுவருந்திவிட்டு இளசுகள் முதல் வயதானவர்கள் வரை ஜோடியாக சாலையோரங்களில் இசை குழுவினரின் இசைக்கு தகுந்தவாறு நடனமாடுவதை கண்டுரசிக்கலாம் .
   அக்கபுல்கோ கப்பல் போகிறதென்றாலே மனம் கொள்ளும் உற்சாகம் வார்த்தைகளில் சொல்ல இயலாது .இரண்டு நாள்கள் இந்த துறைமுகத்தில் நிற்கும் ..
     அதே உற்சாகத்தில் வந்தபோது துறைமுகத்தில் உல்லாச பயணிகள் கப்பல்  (cruiseline )நின்று கொண்டிருப்பதால் மாலை வரை காத்திருக்கும் பொருட்டு நங்கூரம் பாய்ச்சி நின்றது எங்கள் கப்பல் ஐஜீன் (eijin) .
     2 மணியளவில்  அவசர மற்றும் ஆபத்துகால மணி ஒலி கேட்டு கப்பலினுள் வேலை செய்துகொண்டிருந்த நானும் ,சக ஊழியர்களும் ஓடி ஒன்று கூடினோம் .
     கப்பலின் 2 ம் நிலை அதிகாரி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எட்மான்ட் தான் ஒலி எழுப்பியது .
       பணியிலிருந்த அவர் தொலைநோக்கி வழியாக கடற்கரையையும் ,அருகிலுள்ள பூங்காவில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது  மெய்மறந்து இதழ்பதித்து இருந்த காதல் ஜோடிகளையும் பார்த்துகொண்டிருக்கும் போதே தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஜோடியின் மோட்டார் சைக்கிள் தண்ணீரில் மூழ்கிவிட்டதை பார்த்துவிட்டார் .
அவர்கள் இருவரும் உயிர் காப்பு கவசம்(lifejacket) அணிந்திருந்தமையால் கடலில் மூழ்காமல் தத்தளித்து கொண்டிருந்தார்கள்  .
   நாங்கள் (lifebuoy) உயிர்காப்பு  மிதவையை வீசி எறிந்தோம் .
     அதை லாவகமாக இருவரும் பிடித்துகொண்டதும் அதனுடன் இணைக்கபட்டிருந்த கயிற்றை மெதுவாக இழுத்தோம் .கப்பலின்  அருகே வந்ததும் ஏணியை இறக்கி மேலேறி வரச்சொன்னோம் . மிகவும் சோர்ந்திருந்தனர்.
   கார் ஏற்றும் கப்பல் எங்களுடையது ,காலியாக இருப்பதால் கப்பலுக்குள் ஓட்டும் காரில் அவர்களை 6 ம்(deck ) நிலையிலிருந்து 13 ம் நிலையிலிருக்கும் ஊழியர் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு வருமாறு  பங்களாதேஷை சார்ந்த காப்டன் ஜாவித் அஹ்மத் ,மும்பையை சேர்ந்த முதன்மை அதிகாரி அஸ்லின் மிஸ்கிட்டோவிடம் சொன்னார் .
     மேலே கொண்டு சென்றதும் தலைமை சமையல்காரர் கோவாவை சேர்ந்த டாயஸ் லிவிஸ்லி ஆவி  பறக்கும் காபி கோப்பையை
சமையல்காரர் டாயஸ் லிவிஸ்லி 
கொடுத்தார் .அவர்கள் அதை உறிஞ்ச துவங்கியதும், கேடட் பெரோஸ்  போர்த்திகொள்ள இரு கம்பளிகளை கொண்டு தந்தார் .
   குறைவான,  மெல்லிய ஆடைகளையே  அவர்கள் அணிந்திருந்தமையால் விரைவிலேயே ஈரம்  உலர்ந்துவிட்டது
.
    அந்த பெண்ணிடம் பேசினேன் .அவர்கள் மெக்ஸிகோசிட்டி எனும் இடத்திலிருந்து சுற்றுலா வந்ததாகவும் ,ஒருவார பயணத்தில் இதுதான் கடைசிநாள் என்றாள் .

     தன்னுடன் வந்திருப்பது அவளுடைய சகோதரியின் காதலன் என்றாள்,எனக்கு அதிர்ச்சியாக  இருந்தது .ஒன்று  வாங்கினால் ஒன்று இலவசம் போல இந்த ஊரில் இதெல்லாம் சகஜமப்பா என நினைத்துகொண்டேன் .
   கேப்டன் அவர்கள் இருவரும் இயல்புநிலைக்கு  வந்ததும் மெக்ஸிகோவின் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார் .5 மணிக்கு ஒரு படகில் வந்து அவர்களை அழைத்து சென்றனர்
.
  
நன்றி கூறி ,படகில் ஏறி கையசைத்து மகிச்சியுடன் சென்றனர் .இரு தினங்களுக்கு பிறகு மெக்ஸிகோ கடலோர காவல்படையின் முத்திரை பதித்த கடிதம் கப்பலின் அறிவிப்பு பலகையில் ஒட்டபட்டிருந்தது ,
   காப்டன் மற்றும் கப்பல் ஊழியர் அனைவருக்கும் நன்றி என .
(2008 ம்  ஆண்டு ஜூலை யில் நடந்தது .அதன் பின் இது வரையில் அக்கபுல்கோ செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை )
    ஷாகுல் ஹமீது

09 ஜூலை 2016
2 ம் இஞ்சினியர்  ஷர்துல்   கண்ணாடி அணிந்தவர் எட்மான்ட்   பிரோஸ் மற்றும் காப்டன் 

No comments:

Post a Comment